Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 14 - ST. EUSEBIUS OF SAMOSATA, அர்ச்‌. யுசேபியுஸ்

 

ஆகஸ்டு 14ம் தேதி

வேதசாட்சியும் மேற்றிராணியாருமான  அர்ச்‌. யுசேபியுஸ் திருநாள்


            இவர் சிரியா நாட்டில், சமோசட்டா என்ற நகரின் மேற்றிராணியாராக ஜீவித்தார்; ஆரிய பதித சக்கரவர்த்தியான வாலென்ஸ் ஆண்டபோது, ஆரிய பதிதர்களால், கத்தோலிக்கர்கள் மிகக் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு, உபத்திரவப்படுத்தப்பட்டனர்; இக்காலத்தில், இவர் மேற்றிராணியாராக, மகா உறுதியான கத்தோலிக்க வேத விசுவாசத்துடனும், ஞானத்துடனும், தனது ஞான மந்தையை ஆரியப் பதிதத் தப்பறையிலிருந்து பாதுகாத்தார்; ஆரிய பதிதத்தப்பறைக்கு எதிராக, அதை அழித்து ஒழிக்கும்படியாக, கத்தோலிக்க தியானப் பிரசங்கங்களைப் பிரசங்கித்து வந்தார். ஒரு இராணுவ அதிகாரிபோல், மாறுவேடம் அணிந்து, சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும், ஆரியப் பதிதர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்த கத்தோலிக்கர்களைச் சந்தித்து, ஆறுதலளித்தார்; தேவசிநேகத்தை அவர்களுடைய இருதயங்களில் தூண்டவும், அவர்களை தேவ விசுவாசத்திலும், தேவ நம்பிக்கையிலும் திடப்படுத்துவதற்குத் தேவையான ஞான அறிவுரைகளை அளித்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

            மேலும், கத்தோலிக்கர்களுக்கு ஞானபோஷாக்கை அளிப்பதற்குத் தேவையான குருக்களை ஏற்படுத்தும்படியாக, அங்குக் குருமடங்களிலுள்ள தியாக்கோன்மார்களுக்குக் குருப்பட்டம் அளித்தார்; மேலும், அப்பிரதேசங்களில் ஆரிய பதிதர்களால் வெகுவாக துன்பப்பட்டுக்கொண்டிருந்த மேற்றிராணிமார்களுக்குத் தேவையான ஞான ஆலோசனையையும், மற்ற ஆத்தும சரீர நன்மைகளையும் உதவிகளையும், ஆறுதல்களையும், அவ்வப்போது, அளிப்பதில் அயராமல் ஈடுபட்டிருந்தார்.  ஆரிய பதிதர்களின் ஆதரவாளனான கான்ஸ்டன்சியுஸ் சக்கரவர்த்தி, அந்தியோக்கு நகரின் அதிமேற்றிராணியாராக கத்தோலிக்க மேற்றிராணியார் வந்.மெலெடியுஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஒரு ஆணை மடலை யுசேபியுஸ் மேற்றிராணியார், கொண்டிருப்பதைக் கேள்வியுற்றான்; அந்த கத்தோலிக்க அதிமேற்றிறாணியாரை நீக்க வேண்டும் என்று ஆரிய பதிதர்கள், சக்கரவர்த்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்;அந்த வேண்டுகோளை, நிறைவேற்ற ஆசித்த  சக்கரவர்த்தி, அந்த ஆணை மடலை, இரத்து செய்யும்படி, இவருக்குக் கட்டளையிட்டான்.

            ஆனால், சக்கரவர்த்தியின் கட்டளையை, அர்ச்‌.  யுசேபியுஸ் துணிச்சலுடன் நிறைவேற்ற மறுத்துவிட்டார்; இதைக் கேட்டு சீற்றத்துடன் வெகுண்டெழுந்த சக்கரவர்த்தி, ஆணை மடலை இரத்து செய்யவில்லையென்றால், மேற்றிராணியார் யுசேபியுஸினுடைய வலது கரம் துண்டிக்கப்படும் என்று ஒரு செய்தியை அனுப்பினான்; அந்த செய்தியை அவரிடம் கொண்டு வந்த தூதுவனிடம், அர்ச்‌. யுசேபியுஸ், தனது இரண்டு கரங்களையும் காண்பித்து, இவை இரண்டையும் வெட்டி விடுங்கள்! ஆனால், ஆரிய பதிதத்தினுடைய பாவாக்கிரமத்தையும் தீமையையும் கண்டித்துப் புறம்பாக்குகிற திருச்சபை சங்கக்தினுடைய இந்த ஆணை மடலை, நான் கைவிட முடியாது! என்று உறுதியான குரலில் கூறினார்; சக்கரவர்த்தி, அர்ச்‌. யுசேபியுஸ், கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது உறுதியான பற்றுதலுடனும், தீர்மானமான பிடிவாதத்துடனும் இருப்பதை அறிந்த சக்கரவர்த்தி ஆச்சரியப்பட்டான்; அவருக்கு தீங்கு ஒன்றும் செய்யாமல் விட்டான்.

             அர்ச்‌. யுசேபியுஸ் கத்தோலிக்க வேத சத்தியங்கள் மட்டில் கொண்டி ருந்த இந்த தளரா ஊக்கமும் ஆர்வமும் தான்,அர்ச்‌. நசியான்சென் கிரகோரியார், இவரைதிருச்சபையின் தூண்!” என்றும், “சர்வேசுரனுடைய தேவ கொடை!” என்றும், “வேத விசுவாசத்தின் விதிமுறை!” என்றும் அழைப்பதற்குக் காரணமாயிருந்தது! அந்தியோக்கு அதிமேற்றிராணியார் காரியத்தில், அர்ச்‌. யுசேபியுஸ் அடைந்த வெற்றியைக் கண்டு  பொறுக்காத ஆரியப்பதிதர்கள், அடுத்து வந்த சக்கரவர்த்தியான வாலென்ஸ் மூலமாக, , அர்ச்‌. யுசேபியுஸை திராஸ் நாட்டிற்கு நாடு கடத்தினர். 378ம் வருடம், சக்கரவர்த்தி வாலென்ஸ் இறந்தபிறகு, அர்ச்‌. யுசேபியுஸ் மறுபடியும், அவருடைய மேற்றிராசனத்திற்கு வர அனுமதிக்கப்பட்டார். அவரும் முன்பு செய்ததைப்போல, ஆரியப் பதிதத்திற்கு எதிராக அதை அழிப்பதற்கான அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்.

            சமோசட்டா நகருக்கருகிலுள்ள டோலிகா என்ற நகரில், மாரிஸ் என்ற மேற்றிராணியாருடைய அபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த அர்ச்‌. யுசேபியுஸ் மீது, ஆரியப் பதிதத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு ஓட்டை எறிந்தாள். அந்த ஓடு இவரு டைய தலையை மிக மோசமாகக் தாக்கிக் காயப்படுத்தியது; அதனால் சில நாட்கள் வேதனைமிகுதியால், துன்ப உபத்திரவப்பட்டார்; இவ்வலியைப் பொறுமையுடன் அனுபவித்தார்; ஆரிய பதிதத் தப்பறை அழிந்து, திருச்சபையிலிருந்து முற்றிலுமாக நீங்கும்படியாக, இக்கொடிய வேதனை நிறைந்த உபத்திரவத்தை, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். சில நாட்களுக்குப் பின், 380ம் வருடம், பாக்கியமாய் மரித்தார்; இவ்விதமாக மகிமையான வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.  

மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச.யுசேபியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக