Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 18 டிசம்பர், 2021

தேவ பாலனின் பிறப்பு மற்றும் புத்தாண்டு ஆசீர்வாதங்கள்


 ""ஓ  ஜெருசலேமே,  மிகவும்  அக்களிப்புடன்  களிகூர்வாயாக!  ஏனெனில்  உன்னுடைய  இரட்சகர்  உன்னிடம் வருவார். அல்லேலூயா!''

இந்த வார்த்தைகள் ஆகமன காலத்தின் சிறப்புச் செய்தியைச் சுருக்கமாக நமக்குத் தெரிவிக்கின்றன. ஆகமன  காலத்தின்  நான்கு  வாரங்களும்  நம்  ஆத்துமங்களைத்  தேவ  நம்பிக்கையால்  நிரப்புவது மட்டுமல்லாமல், சேசு பாலனின் வருகையால் நமக்குக் கிடைக்கப் போகும் சிறப்பான பரலோகபாக்கியங்களை  நாம்  நினைவுகூர்ந்து  அக்களிப்பால்  அகமகிழ  வேண்டும்  என்று  நம்  தாயாகிய  பரிசுத்த திருச்சபை இந்தக் காலத்தை நமக்குத் தந்துள்ளது. பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள் பாவத் தளைகளினால்  அவதியுற்றபோது  வாக்களிக்கப்பட்ட  இரட்சகரைக்  கடவுள்  விரைவில்  அனுப்ப  வேண்டும்  என  ஆசித்து  உருக்கமாக ஜெபித்தார்கள். அவர்களின் ஜெபங்கள் கேட்கப்பட்டன.  இரட்சகர் உலகிற்கு அனுப்பப்பட்டார்.  ஒவ்வொரு  வருடமும்  இந்த  இரட்சிப்பின்  நிகழ்வானது  நம்  வாழ்விலும்  நடக்க  வேண்டும்  என்பதை  நம்  பரிசுத்த  திருச்சபை  நினைவூட்டுகிறது.  நமது  ஆன்மாக்களும்  தேவ  நம்பிக்கையால்  நிரப்பப்பட்டு,  சுத்தம் செய்யப்பட்ட  நம்  ஆத்துமங்களில்  தேவ  பாலன்  மீண்டும்  ஒரு  முறை  பிறக்க  வேண்டும்  என்பதே திருச்சபையின் தலையான விருப்பமாகவும் உள்ளது.

இந்த  பாக்கியத்தை  நாம்  பெற  வேண்டுமென்றால், தேவதாயையும்,  அர்ச்.  சூசையப்பரையும்  நாம்  கண்டுபாவிக்க வேண்டும். அவர்கள் அன்று மாட்டுத் தொழுவத்தை எவ்வாறு பரிசுத்த தமத்திரித் துவத்தின்  இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் பிறப்பதற்கு ஏற்ற இடமாக மாற்றினார்களோ, அதே போன்று  நம் ஆத்துமங்களைக் கறைப்படுத்தும் பாவங்கள் மற்றும் பாவ நாட்டங்களிலிருந்து நம் ஆத்துமங்களைச் சுத்தப்படுத்தி,  சகல  புண்ணியங்களாலும்  நிரப்பி,  அவற்றைப்  பரலோக  நறுமணம்  மிகுந்த  குடில்களாக  மாற்ற  வேண்டும்.  இந்த  அவசியமான  அலுவலைத்  தேவ  பாலனுக்குப்  பிடித்த  விதத்தில்  செய்ய  தேவதாயினுடையவும்,  அர்ச். சூசையப்பருடையவும்  உதவி  நமக்கு  மிகவும்  அவசியமாக  உள்ளது.  இது  மட்டுமே பரலோகம் விரும்புகிற உத்தம கிறீஸ்தவர்களுடைய கிறீஸ்து பிறப்பு நிகழ்வாகும். 

கடந்த  வருடம்  நம்மைப்  பலவிதமான  ஆபத்துக்கள்  மற்றும்  சோதனைகளிலிருந்து  காப்பாற்றிய  சர்வேசுரனுக்கும்,  நம்  பரிசுத்த  தேவதாய்க்கும்  நன்றி  கூறுவோம்.  சேசுவுக்கு  மிகவும்  பிடித்தமான  இந்த  நன்றியறிதல் என்ற புண்ணியம் பரலோகக் கொடைகளை மீண்டும் மீண்டும் அபரிவிதமாக நாம் பெறத் தகுதியுள்ளவர்களாக நம்மை மாற்றுகிறது. தேவபாலனின் உதவிகள் இன்றி நம்மால் உத்தமதனத்தில் ஒரு படி கூட முன்னேற்றம் அடைய இயலாது. தேவ வழிபாட்டின் புதிய வருடமும், அதனைத் தொடர்ந்து வரும்  புத்தாண்டும் கடவுளின் இரக்கத்தையும், ஆசீர்வாதங்களையும் நம் தேவதாய் வழியாக நமக்குப் பெற்றுத் தரட்டும்! சேசுவுக்குப் பிடித்தமான பரிசுத்த வாழ்வை வாழத் தீர்மானிப்போம்! இந்த இதழானது இப்படிப்பட்ட பரலோகச் சிந்தனைகளால் உங்கள் ஆத்துமங்களை நிரப்புவதாக!

நேசமிகு தேவ பாலனோடு கன்னிமாமரி நம்மை ஆசீர்வதிப்பார்களாக! வாசகர்கள் அனைவருக்கும் தேவ  பாலனின்  பிறப்பு  மற்றும்  புத்தாண்டு  ஆசீர்வாதங்களும்,  வரப்பிரசாதங்களும்  அபரிவிதமாய்க் கிடைப்பதாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக