Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 17 ஜனவரி, 2024

தேவமாதா நம் தாயானால்.....

 


சங், அந்தோனி சேவியர் சுவாமி




புது வருடச் சிந்தனைக்கு:


தேவமாதா நம் தாயானால், அதை நாம் ஏற்பது மெய்யானால், நாம் இப்போது இருப்பது போல் இருப்போமா? இப்படி அவர்களைப் பற்றி உணர்வற்றிருக்க முடியுமா? மாதா மட்டில் இப்படி அசிரத்தையா யிருப்பது சரியாகுமா?

மாதா அப்போஸ்தலர்கள் எனப்படுகிறவர்களும், மாதாவின் பிள்ளைகள் எனப்படு கிறவர்களும், எவ்வகையிலேனும் தங்களை மாதாவுடையவர்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் ஏன் தான் இப்படி இருக்கிறோம்? உணர்வற்ற மரக்கட்டைகளாக, அலட்சியமாக, தாயை மறந்தவர்களாக, மக்குப் பிடித்து, அன்னைக்கு நேரிடும் துயரங்களாலும், நிந்தைகளாலும் பாதிக்கப்படாதவர்களாக நம்மால் எப்படி இருக்க முடிகிறது?

"நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களால் என்ன செய்ய முடியும்? இயன்ற அளவு செய்யத் தான் செய்கிறோம்" என்று நீங்கள் சொல்லலாம். உங்களால் பின்வருவன வற்றைச் செய்யமுடியும்:

நீங்கள் மாதாவை நேசிக்க முடியும். நேசிக்கிறீர்களா? எந்த அளவுக்கு? இப்போது நேசிப்பதை விட அதிகமாக நேசிக்க முடியாதா?

மாதாவுக்கு ஆறுதலளிக்கும் பரிகார பக்தி முயற்சிகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? அதிலே மூழ்கிப் போகிறீர்களா? இவ்வளவு பரிகாரம்தான் உங்களால் செய்ய முடியுமா?

பரிகார பக்தியின் அவசியத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்லலாம். சொல்லி வருகிறீர்களா?

நம்மில் அநேகருக்குப் பரிகார பக்தி என்றால் என்னவென்றே சரியாகப் புரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அது என்ன?

  • மாதா பகைக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் உள்ளத்தோடு நேசிப்பது பரிகாரமாகும்.
  • மாதா தூஷணிக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை இடைவிடாமல் இருதயத்தில் வாழ்த்துவது பரிகாரமாகும்.
  • மாதா மறுக்கப்படுவதற்கு ஈடாக அவர்களை நம் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது பரிகாரமாகும்.
  • மாதாவுடன், மாதாவுக்காக நம் வாழ்வை இரவும், பகலும் வாழ்வது பரிகார மாகும். இதையெல்லாம் செய்கிறீர்களா?
  • எந்தத் துன்பத்தையும், நோயையும், கவலையையும், அவமானத்தையும் மாதாவுக்கு ஆறுதலாக, பாவிகள் மனந்திரும்பும்படி ஒப்புக்கொடுக்கிறீர்களா?
  • உங்களையும், உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் மாதாவுக்கென அர்ப்பணம் செய் திருக்கிறீர்களா?
  • மாதாவின் துயரங்களை ஒவ்வொன்றாய் நினைத்து அனுதாபப்பட்டு அவற்றால் பாவிகளை இரட்சிக்க மன்றாடுகிறீர்களா?
  • மரியாயின் பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியை அனுசரிக்கிறீர்களா? அது மாதத்துக்கொரு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், பரிகார உணர்விலேயே மாதம் முழுவதும் உங்களை இருக்கச்செய்கிறதா?
  • மாதாவுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று ஒரு நாளில் எத்தனை தடவை நினைப்பீர்கள்?
  • ஒரு நாளில் மாதாவுக்கென எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? மாதா ஊழியமாக என்ன செய்கிறீர்கள்?
இவற்றைச் சிந்தித்து. இதுவரை நீங்கள் செய்ததை விட, இனி சற்றுக் கூடுதலாகச் செய்யுங்கள். "இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும்" என்று தூண்டப்படுகிறீர்களா? இல்லையென்றால், மாதாமட்டில் அசமந்தம் உங்களில் தொடங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
    மாதாவுக்கு நாம் இடைவிடாமல் நிந்தைப் பரிகாரம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு கிறீஸ்தவனின் வாழ்வே கடவுளுக்கும், அவரது அன்னைக்கும் பரிகார வாழ்வாகத்தான் இருக்க வேண்டும். காரணம்: கடவுளுக்கும், மாதாவுக்கும் எதிராக இடைவிடாமல் நிந்தைகளும், அலட்சியங்களும், துரோகங்களும் நடக்கின்றன. பல தடவைகளில் அவை திட்டமிடப்பட்டே செய்யப்படுகின்றன.
      மிகச் சிறந்த வரப்பிரசாத சலுகைகளால் மாதாவை நமக்கெனவே சர்வேசுரன் மகிமைப் படுத்தியிருக்க, மனிதர்கள் அவற்றை மறுப்பதும், பழிப்பதும் அன்றாட நடைமுறையாகி விட்டது.
      • மாதா சாதாரணப் பெண்தான் என்கிறார்கள் ஆங்காரிகள்.
      • மாதா நமக்கு அவசியமில்லை என்கிறார்கள் பதிதர்கள்.
      • மாதாவுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறார்கள் மார்ட்டின் லூத்தரின் சீடர்கள்.
      • மாதாவுக்கு மேலான வணக்கம் ஒன்றும் வேண்டாம். "மரியாளை" வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள் அதிகம் படித்த மேதாவிகள்.
      • ஜெபமாலை தேவையா என்று கேலியாகக் கேட்கிறார்கள் மாதாவை உள்ளூரப் பிடிக்காதவர்கள்.
      • உத்தரியம் மூட பக்தி என்கிறார்கள் அதன் உண்மையைப் புரிய முடியாத அறிவாளிகள்.
      • மாதாவை நேசிக்கக் கூடாது. சங்கிக்கக் கூடாது, அதெல்லாம் விக்கிரக ஆராதனை என்கிறார்கள் அக்கிரமிகள்.
      இதையெல்லாம் நீங்கள் கேள்விப்படவில்லையா?  இவற்றிற்கு மாற்றாக என்ன செய்கிறீர்கள்? உங்கள் இருதயம் துடிக்கவில்லையா? இரத்தம் கொதிக்கவில்லையா? விசேஷமாக மாதாவின் தெய்வீகத் தாய்மையையும், நித்தியக் கன்னிமையையும், அவர்களின் அமல உற்பவத்தையும் அவமானப்படுத்தும் பதிதர்களின் பேச்சுக்களை யும், பிரசுரங்களையும் பார்க்கும்போது உங்கள் உள்ளம் பற்றியெரிந்து மூண்டு எழ வில்லையா? ஆயினும் வெறும் உணர்ச்சிவசப்படுதல் அல்ல.

      நிந்தைப் பரிகாரமே சிறந்த வழி என்று உறுதிபூண்டு, அதைச் செய்யத் தீவிரம் கொண்டிருக்கிறீர்களா? மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்வது ஒன்றே இன்று திருச்சபையையும்,உலகத்தையும் காப்பாற்றும், மற்ற எந்த முயற்சியும் வீணாகச் செய்யப்படுகிறது.

      மாதா உண்மையானால், அவர்கள் தம் தாயானால், நம் வாழ்க்கை முழுவதும் பரிகார வாழ்வாக மாற வேண்டும். இவ்வன்புத் தாயாரைக் கண்கலங்க நாம் விடலாமா? நம்மையே அவர்கள் நம்பியிருக்கும்போது, நாம் அவர்களைக் கைவிடலாமா? ஆண்டவரும், மாதாவும் உலகில் வாழ்ந்தபோது, அவர்களுக்கு என்ன ஆறுதல் இருந்தது? 33 ஆண்டுகளின் கண்ணீரைத் தவிர? தாங்கள் பட இருந்த பாடுகளின் நினைவு அவர்களிடம் எப்போது இல்லாதிருந்தது? இந்த அன்பின் இருதயங்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரால் ஆறுதல் வரும்? மாதாவுக்கு நித்தைப் பரிகாரம் செய்வதே சேசுவுக்கும் ஆறுதலாயிருக்கிறது. ஏனெனில் தம் துயரத்தை விட. தாயின் துயரமே அவரை அதிகமாகப் பாதித்தது.

      ஆகவே, மாதாவுக்குப் பரிகார பக்தி என்பது ஏதோ ஒரு காலத்தில் வந்து போகும் பக்தி முயற்சி அல்ல. அது நிரந்தரமானது. ஏனென்றால் மாதாவுக்குச் செய்யப்படும் பரிகாரமே கடவுளுக்குச் செய்யப்படும் பரிகாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாம் செய்யும் சகலமுமே மாதாவுக்குப் பரிகார முயற்சிகளாக மாற வேண்டும். அந்தக் கருத்துடனே அனைத்தையும் இந்தப் புது வருடத்திலிருந்து ஊக்கத்துடன் செய்யத் தொடங்குவோமாக! 
      மரியாயே வாழ்க!



      மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி, 2024



      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக