Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 19 மார்ச், 2024

சேசுநாதரின் திருப்பாடுகளின் பரம இரகசியம் - The mystery of the Passion of Christ

 சேசுநாதரின் திருப்பாடுகளின் பரம இரகசியம் 

பிரபஞ்சத்தின் அரசரும், ஆண்டவருமான தேவ திருச்சுதன், மனிதன் தன் பாவத்தால் நித்திய மரணத் திற்குத் தகுதி பெற்று விட்டதையும், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள வல்லமை யற்றிருந்ததையும் கண்டு, அவனை மீட்டு இரட்சிக்கும் பொறுப்பைத் தம் மீது சுமந்துகொண்டார் என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் கூறுகிறார். இவ்வாறு மனிதன் சுதந்தரித்துக் கொண்ட தண்டனை யின் கடனைத் தம் மரணத்தின் மூலம் அவர் தம் பிதாவுக்குத் திருப்பிச் செலுத்தினார். அவர் பிதாவின் சித்தத்தை நிறை வேற்றவே திருப்பாடுகளுக்குத் தம்மை உட்படுத் தினார் என்றாலும், அதுவே அவரது திருச்சித்த மாகவும், ஏக்கமாகவும் இருந்தது. "நான் பெற வேண்டிய ஸ்நானம் ஒன்றுண்டு; அது நிறைவேறு மளவும் எவ்வளவோ நெருக் கிடைப்படுகிறேன்" (லூக். 12:50). பிதா ஈனப் பாவிகளாகிய நம்மை மீட்டு இரட்சிக்கும்படி தம் சொந்த மகனை மரணத் திற்குக் கையளித்தார். "தமது சொந்தக் குமாரன் மேல் முதலாய் இரக்கமில்லாமல், நம்மெல்லாருக் காகவும் அவரை ஒப்புக்கொடுத்தார்" (உரோ. 8:32). இவ்வாறு தேவ பிதாவும், அவருடைய திருச்சுதனும் அற்பப் பாவிகளாகிய நம்மீது வைத்த சிநேகத்தை நிரூபித்தார்கள். 

"சர்வேசுரன் தம் வல்லமையைக் கொண்டு நம்மைப் படைத்தார்; தம்முடைய பலவீனத்தைக் கொண்டு நம்மை மீட்டு இரட்சித்தார்!" என்ற ஆச்சரியத்திற்குரிய வார்த்தைகளை அர்ச். அகுஸ் தினார் கூறுகிறார். ஏனெனில் சர்வ வல்லபராயிருந்தும், தேவ சுபாவத்தில் மட்டும் இருந்தபோது, தேவ சுதன் வேதனைப்பட முடியாதவராயிருந்தார். ஆனால், மனித பலவீனத்திற்குத் தம்மை உட்படுத்திக்கொண்டபோது, அவர் மனிதனின் இரட்சகராகவும் தம்மை ஆக்கிக்கொண்டார். 

ஆனால் இது எப்படி அவருக்கு சாத்தியமாயிற்று? பரலோகப் பூலோகப் பேரரசர் அசுத்தத்தில் நெளியும் புழுவையும் விட அதிக அசுத்தனாகிய மனிதனைக் காப்பாற்றும்படி இந்தச் சாக்கடைக்குள் இறங்க அவரைத் தூண்டியது எது? ஆ. வாக்குக்கெட்டாத தேவசிநேகமே! ஆ மனிதனைத் தெய்வமாக்கும்படி, "புழுவாகத் தன்னையே தாழ்த்திக்கொண்ட" (சங்.21:6) உன்னத தேவ இலட்சணமே! "இதென்ன அதிசயம் ஆண்டவரே? பாவம் செய்தவன் நான்; தேவரீர் எதற்காகத் தண்டிக்கப்பட்டீர்!என்று அர்ச். அகுஸ்தினார் கேட்கிறார். 

ப்போது எப்பேர்ப்பட்ட பாரச் சுமை பரலோகத் திரு இரத்தத் தினால் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மீதும் சுமத்தப் பட்டிருக்கிறது! சர்வேசுரன் சர்வேசுரனாக மட்டுமே இருந்த போதும் கூட, தன்னைப் படைத்து, சுவாசிக்கக் காற்றும், உண்ணக் கனிகளும், நட்புள்ள மிருகங்களும், பறவைகளும், பூலோகம் முழுவதன் மீதும் ஆளும் அதிகாரமும் தந்தருளிய அவரை நேசிக்க மனிதன் கடமைப் பட்டிருந்தான். ஆனால் திருப்பாடுகளின் பரம இரகசியம் நிறைவேறி விட்ட இப்போதோ, அவருக்குப் பதில் சிநேகம் காட்டவும், தன்னை மறுத்து, இரத்தந்தோய்ந்த அவருடைய பாதச் சுவடுகளைப் பின்பற்றவும், கடவுளுக்குச் சித்தமானால், அவருடைய அன்பிற்காகத் தன் உயிரையும் பலியாக்கவும் மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். 

தேவ சுதனே, என் ஆண்டவரே, உமது இந்த அளவற்ற சிநேகம் எப்படிப்பட்டது? உம் சிந்தனையின் ஒரே ஒரு அசைவு மனுக்குலத்தை மீட்கப் போதுமாயிருந்ததே! விருத்தசேதனத்தில் நீர் வடித்த இரத்தத்தின் ஒரே ஒரு துளியும், உமது ஒவ்வொரு மூச்சுக் காற்றும் கூட ஓராயிரம் உலகங்களை இரட்சிக்க வல்லதா யிருந்ததே! அப்படியிருக்க, நீர் மனித சாயலையே இழந்து போக என்ன அவசியம் வந்தது! உம்மைக் கட்டிய கயிறுகளுக்கும், சங்கிலிகளுக்கும், சம்மனசுக்களையும் பரவசப்படுத்திய உம் திருமுகத்தில் வழிந்த அசுத்தர்களின் எச்சிலுக்கும், திருச்சதை கிழிந்து துண்டுதுண்டாகப் பிய்ந்து விழச் செய்த கொடூரக் கசையடிகளுக்கும், தெய்வீகத் திருச்சிரசை ஊடுருவிய முட்களுக் கும், பாரச் சிலுவைக்கும், ஆணிகளுக்கும், மூன்று மணி நேர வாதைக்கும், உம் தாய்ச் செம்மறியின் ஆத்துமத்தை ஊடுருவ நீர் அனுமதித்த வியாகுல வாளுக்கும், உம் பிதாவிடமிருந்து முதன் முறையாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பாவியைப் போல் அவரை உம் கடவுளாகவே கண்டு கதறியதற்கும், கல்லறையின் இருளுக்கும் நீர் உம்மை உட்படுத்த வேண்டிய தேவை என்ன

எங்களை மீட்க சகல இன்பங்களும் நிறைந்த பரலோகத்தையும், உம் பிதாவின் மடியையும் விட்டு, பாவத்தால் இறந்திருந்த இந்த அசுத்த உலகிற்கு இறங்கி வந்ததும், மூவுலகிலும் அடங்கா தவராயிருந்தும், முதலில் ஒரு கருவிலும், தம் வாழ்வு முழுவதும் ஓர் ஆறடி சரீரமாகிய சிறையிலும் உம்மை சிறைப்படுத்திக் கொண்டதும், பசி, தாகம், சோர்வு, வலி, வேதனை, ஏக்கம் என்பவை போன்ற சகல மனித பலவீனங்களுக்கும் உம்மை உட்படுத்திக் கொண்டதும் உமக்குப் போத வில்லையே! இவ்வளவு கொடூரத் துன்பங்களையும், அவமானச் சிலுவை மரணத்தையும் நீர் ஏற்றுக்கொள்ள வேண்டிய காரணம்தான் என்ன

ஓ, ஏனெனில் தேவ-மனிதன் என்ற முறையில், தேவரீர் அளவற்ற விதமாய் எங்களை நேசித்து, உம்முடைய சிநேகத்தின் கடைசித்துளி வரை எங்களுக்குத் திறந்து காட்ட ஏக்கமாயிருந்தீர்! “என் பிதாவானவர் அனுமதித்தால், ஒரே ஒரு மனிதனை மீட்டு இரட்சிக்க முதலாய் மீண்டும் சிலுவையில் அறையப்பட விரும்புகிறேன்!" என்று அர்ச். ஜெர்த்ரூத்தம்மாளுக்கு தேவரீர் கூறிய வார்த்தைகள் இதை நிரூபிக்கின்றன! இதற்கு மேல் உம்மால் நேசிக்க முடியாது என்று நாங்கள் சொல்லத் துணியும் அளவுக்குத் தேவரீர் உம்முடைய அளவற்ற சிநேகமாகிய பெருவெள்ளத்தை முழுவது மாக எங்கள் மீது பாயச் செய்திருக்கிறீர்

ஆனால் நான் என்ன செய்திருக்கிறேன்? சகல சிருஷ்டிகளிலும் அதிகக் கேடுகெட்டவனாகிய என்னை மீட்டு இரட்சிக்க உம் தெய்வீக உயிரைப் பலியாக்குமளவுக்கு என்னை நேசித்த உம் திரு ருதயத்தையும், என் அடைக்கலமாகத் தேவரீர் தந்தருளிய உம் திருத்தாயாரின் மாசற்ற இருதயத்தையும் முட்களைக் கொண்டு நிரப்பியதைத் தவிர வேறு என்ன நான் செய்திருக்கிறேன்? தேவரீர் எனக்காகச் சிந்திய திரு இரத்தத்தை வீணாக்கி, பசாசுக்கும், உலகத்திற்கும், கேடுகெட்ட என் சரீரத்திற்கும் அடிமையா யிருந்திருக்கிறேன்! ஓ, என் இரட்சணியத்திற்காக இவ்வளவையும் தேவரீர் செய்து முடித்த பிறகும், என் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமத்தோடும், என் முழு வல்லமையோடும் உம்மைச் சிநேகியாதிருப்பேனாகில் எனக்கு ஐயோ கேடு! 

ஆயினும், என் தேவனே, இனி உம்மை நேசிப்பேன் என்று வாக்களிக்கிறேன். உத்தம மனஸ்தாபத்தை எனக்குத் தந்தருளும். இனி பாவம் செய்வதில்லை என்னும் என் பிரதிக்கினையை ஆசீர்வதித்தருளும். நான் மோட்சத்தை வந்தடையும் வரை, உம் பாதச் சுவடுகளைப் பின்பற்றவும், எதையும்விட அதிகமாய் உம்மை நேசிக்கவும், என் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், என்னால் கூடுமான வரை, நன்மாதிரிகையாலும், ஜெப, தவத்தாலும், ஒறுத்தல், பரித்தியாகங்களாலும் அதிகமான ஆத்துமங்களை உம்மிடம் கொண்டு வந்து சேர்க்கவும் எனக்கு வேண்டிய வரப்பிரசாதங்களைத் தந்தருளத் தயை புரிவீராக! 


வியாகுல மரியாயே, வாழ்க! 

மாதா பரிகார மலர் - March April 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக