Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

life history of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
life history of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 30 - அர்ச். அந்தோனினுஸ் (St. Anthonius of Florence)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 1️⃣0️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். அந்தோனினுஸ் திருநாள்.🌹



🌹அந்தோனியோ பியரோசி என்பது இவருடைய இயற்பெயர்; இவர் 1389ம் வருடம்  மார்ச் 1ம் தேதியன்று, சுதந்திர குடியரசு நாடான இத்தாலியின் தலைநகரான ஃபுளாரன்ஸில் பிறந்தார்.   இவருடைய 16வது வயதில், 1405ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகத் துறவற சபையில் சேர்ந்தார். வேத கல்வியும் தத்துவ இயலும் கற்று குருப்பட்டம் பெற்றார்; விரைவிலேயே, அர்ச்.சாமிநாத சபை மடங்களின் நிர்வாக அதிகாரியாக பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டார்; கொர்தோனோ, உரோமாபுரி, நேப்பிள்ஸ் ,ஃபுளாரன்ஸ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டார். வேத இயலில் இவர் சிறந்த அறிவுத் திறனைப் பெற்றிருந்ததால், வேத இயல் வல்லுனராக புகழடைந்திருந்தார்; கி.பி.1439ம் வருடம், ஃபுளாரன்ஸ் நகரில் நடைபெற்ற திருச்சபைச் சங்கத்தில்,  பாப்பரசரின் வேத இயல்  ஆலோசகராகவும் இவர் செயல்பட்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர்: நல்லொழுக்கத்தின் வேத இயல் பற்றிய அநேக நூல்களை எழுதியுள்ளார்;திருச்சபைச் சட்டத்தைப் பற்றிய புத்தகம், பாவசங்கீர்த்தனத்தினுடைய ஆன்ம குருக்களுக்கான வழிகாட்டி, உலக சரித்திரத்தினுடைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நூல், ஆகியவற்றை எழுதியுள்ளார். எல்லோருக்கும் நல்ல ஆலோசகராக இவர் மிகவும் பிரபலமடைந்தார்; எல்லோராலும், “நல்ல ஆலோசனைகளின் சம்மனசானவர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பதவியை ஏற்கவில்லையென்றால் திருச்சபை விலக்கம் செய்யப்படுவீர் என்று எச்சரிக்கப்பட்டபிறகு, 4ம் யூஜின் பாப்பரசரின் வற்புறுத்தலின் பேரில்,இவர் ஃபுளாரன்ஸ் நகர மேற்றிராணியாராக ,மார்ச் 13ம் தேதி, 1446ம் வருடம், ஃபியசோல் என்ற நகரிலிருந்த அர்ச்.சாமிநாத சபை மடத்தில், அபிஷேகம் செய்யப்பட்டார்.

இவர் தனது மேற்றிராசனத்தில் சகலராலும் அதிகமாக மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டார்; குறிப்பாக, ஜெபிப்பதில் எல்லோருக்கும் நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்; ஜெபிக்கும் மனிதராக , ஜெபத்தினுடைய மனிதராக, எப்போதும், ஜெபிப்பதில் ஆழ்ந்திருக்கும் ஒரு அர்ச்சிஷ்ட மேற்றிராணியாராக அர்ச்.அந்தோனினுஸ் திகழ்ந்தார். 1448  மற்றும் 1453ம் வருடங்களில், முறையே கொள்ளை நோயும், பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டபோது, இரவு பகலாக இவர் தனது மந்தையிலிருக்கும் மக்களுக்கு உணவு உடை இல்லிடம் கொடுத்து உதவுவதில், இரவு பகலாக ஈடுபட்டார்; உணவு உடைகளை, ஒரு கழுதையின் மேல் சுமத்தி, அல்லலுற்ற மக்களைத் தேடிக் கொடுத்து வந்தார்; இம் மாபெரும் பிறர்சிநேக அலுவலில், தனக்கு உதவும்படியாக , இவர் , உதவியாளர்களின் ஒரு குழுவைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.

அர்ச்.அந்தோனினுஸ் 1459ம் வருடம், மே 2ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார்; இவருடைய அடக்கச் சடங்கை 2ம் பத்திநாதர் பாப்பரசர், தானே முன்னின்று நடத்தினார்: மேலும், அர்ச்.அந்தோனினுஸ் மீது கொள்கிற  பக்திமுயற்சிக்கு, இப்பாப்பரசர் விசேஷ ஞான பலன்களை அளித்தார்.

அர்ச்.அந்தோனினுஸ், ஒரு தராசை கையில் பிடித்தபடி, சித்தரிக்கப்பட்டிருக்கிற படம் மிகவும் பிரபலம். இதற்கான பின்னணி நிகழ்வு: ஒரு சமயம், ஃபுளாரன்ஸ் நகரவாசி  ஒருவன், புதுவருட பரிசாக அந்நகரின் அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுசுக்கு ஒரு அழகிய பழக்கூடையை கொண்டு வந்து கொடுத்து, புதுவருட வாழ்த்து கூறி அதிமேற்றிராணியாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றான்.  அதிமேற்றிராணியார் பதிலுக்கு தனக்கு மிகப் பெரிய வெகுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்தான்; ஆனால்,  “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று கூறி, அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுஸ், அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.  இதைக்குறித்து அவன் அதிருப்தியடைந்தவனாக வீடு திரும்பினான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்.அந்தோனினுஸ், அவனை வரவழைத்து, அவனிடம் அவனுடைய பழக்கூடையை தராசின் ஒரு தட்டிலும், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கச் சொன்னார்; அவனும் அப்படியேச் செய்தான்; என்ன ஆச்சரியம்! “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்டிருந்த அந்த காகிதம் தான், பழங்கள் நிறைந்த அந்த கூடையை விட அதிகக் கனமுள்ளதாயிருந்ததைக் கண்டு, அவன் ஆச்சரியப்பட்டான்! அவன் நிலையில்லாத உலகத்தனமான வெகுமதியின் பேரில் ஆசை வைத்ததைக் குறித்து வெட்கப்பட்டு, அதிமேற்றிராணியாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டான். மேலும், அர்ச்சிஷ்ட மேற்றிராணியாரிடமிருந்து “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் எவ்வளவு அதிக பாக்கிய நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது! என்ற உண்மையையும் அறிந்து கொண்டான்.🌹✝


🌹”சர்வேசுரனுக்கு ஊழியம் புரிவது என்பது, ஆட்சி செலுத்துவதாகும்” 🌹 ✍+அர்ச்.அந்தோனினுஸ்


🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச்.அந்தோனினுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹



🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வியாழன், 2 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 25 - அர்ச். அத்தனாசியார் (St. Anthanasius, May 2)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 2ம் தேதி

🌹பாரம்பரிய கத்தோலிக்க வேத விசுவாசத்தின் பாதுகாவலரும், ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான  

அர்ச். அத்தனாசியாரின் திருநாள்🌹




🌹மாபெரும் வேதபாரகரும் கத்தோலிக்க வேதவிசுவாசத்தின் அஞ்சா நெஞ்சரும், பாதுகாவலருமான அர்ச். அத்தனாசியார், எகிப்தின் தலைநகரான அலெக்சாண்டிரியாவில், கி.பி.294ம் வருடம் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் தேவபயமும் பக்தியும் உடையவர்கள். இவருடைய இளமைக் காலத்தில் மாபெரும் திறமைகளை சர்வேசுரன் இவருக்கு அருளினார்.

அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரால் கல்விகற்பிக்கப்பட்டார்;  பின், எகிப்திலுள்ள பாலைவனத்திற்குச் சென்று, அர்ச்.வனத்து அந்தோணியாருடன் அத்தனாசியார் சிறிது காலம் தங்கியிருந்தார்; கி.பி. 319ம் வருடம் அத்தனாசியார் தியோக்கோன் பட்டம் பெற்றார்.

கி.பி.323ம் வருடம், ஆரியுஸ் என்பவன், நமதாண்டவர் நித்திய பிதாவாகிய சர்வேசுரனுடன் ஒரே வஸ்துவானவரல்லர்! ஆதலால், ஆண்டவரை சர்வேசுரனுடைய திவ்ய குமாரன் என்று கூறக்கூடாது!  என்கிற பதிதத் தப்பறையைப் போதித்தான்; இப்பதிதத் தப்பறை இவனுடைய பெயராலேயே ஆரியப் பதிதம் என்று அழைக்கப்படுகிறது; அலெக்சாண்டிரியா மேற்றிராணியார், ஆரியுஸின் போதனையை, பதிதத்தப்பறை என்ற கூறி, ஆரியுஸ் என்ற பதித குருவையும், அவனுடைய கூட்டாளிகளான 11 பதிதக் குருக்களையும் தியோக்கோன்களையும் அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டர் பதவி நீக்கம் செய்தார்! 

பின், ஆரியுஸ், செசரையாவிற்குச் சென்று, நிகோமேதியாவின் மேற்றிராணியாரான யுசேபியுஸின் ஆதரவையும், மற்ற அநேக சிரியா நாட்டின் மேற்றிராணிமார்களுடைய ஆதரவையும் திரட்டினான்; ஆரிய பதிதத் தப்பறைக் கருத்துகள் பாடல்களாக இயற்றப்பட்டு, பிரபலமடைந்திருந்த இசை மெட்டுகளில் கப்பல் மாலுமிகளால் பாடப்பட்டு வந்தன; ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகம் கப்பல் செல்கிற வரை இப்பதிதப் பாடல்கள் பாடப்பட்டு, மக்களின் இருதயங்களை ஆரியப் பதிதத் தப்பறையால் ஆக்கிரமித்தனர்; ஆரிய பதிதத் தப்பறையின் மீது தீர்வு காண்பதற்காக, 325ம் வருடம் நீசேயா சங்கம்  கூட்டப்பட்டது; இச்சங்கத்தில், ஆரிய பதிதத்தைக் கைவிடும்படியாக, ஆரியுஸிற்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்பட்டது; நீசே விசுவாசப் பிரமாணம் பிரகடனம் செய்யப்பட்டது; இச்சங்கம், அர்ச்.அத்தனாசியாரின் ஜீவியத்தை மிகவும் பாதித்தது; இதன் பின் இவருடைய எஞ்சியிருந்த ஜீவிய காலம், நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்திற்கான சாட்சியமாகத் திகழ்ந்தது! ஆண்டவருடைய தேவத்துவம் மற்றும், மகா பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய விசுவாச சத்தியத்திற்கு  எதிரானதுமான  ஆரிய பதித்திற்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடினார்; அதற்கு எதிரான கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார்;

நிசேயா சங்கத்தில், அலெக்சாண்டிரியா மேற்றிராணியாரான அர்ச்.அலெக்சாண்டருடன் அவருக்கு உதவியாளராக அர்ச்.அத்தனாசியார் இருந்தார்;  5 மாத காலத்திற்குப் பின், அர்ச்.அலெக்சாண்டர் இறந்தார்; இறப்பதற்கு முன், அர்ச்.அலெக்சாண்டர், அத்தனாசியாரை, தனக்குப் பின் அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக நியமிக்க ஆசித்திருந்தார்; அதன்படி, அர்ச்.அத்தனாசியார், 30வது வயதில், 326ம் வருடம்,அலெக்சாண்டிரியாவின் பிதாப்பிதாவாக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் ஆரிய பதிதத்தப்பறையை எதிர்த்து நின்றதால், அநேக கொடிய உபத்திரவங்களையும், துன்பங்களையும், தன் ஜீவிய காலத்தில் சந்திக்க நேர்ந்தது; இவர்  அதிமேற்றிராணியாராக இருந்த 46 வருட காலத்தில், 17 வருடங்களை நாடுகடத்தப்பட்ட பரதேச ஜீவியத்தில் கழித்தார்;  புண்ணியங்களுடையவும், சக்கரவர்த்திகளாலும், திருச்சபை அதிகாரிகளாலும் (ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணிமார்கள்) கொடூரமாக அநியாயமாக, நீ்ண்ட காலம் அளிக்கப்பட்ட உபத்திரவத் துன்பங்களுடையவும் ஜீவியம் ஜீவித்த பிறகு, கத்தோலிக்க வேத விசுவாசத்தை அஞ்சா நெஞ்சத்துடன் ஆரிய பதிதர்களிடமிருந்து காப்பாற்றிய திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும்,  பாதுகாவலருமான அர்ச்.அத்தனாசியார், அலெக்சாண்டிரியாவில், மே 2ம் தேதி 373ம் வருடம்   பாக்கியமாய் மரித்தார்; இவருடைய பரிசுத்த சரீரம் இரண்டு முறை, இடமாற்றம் செய்யப்பட்டது: முதலில், கான்ஸ்டான்டிநோபிளுக்கும், பின்னர் வெனிஸ் நகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது! இவர் வாழ்ந்த காலம் திருச்சபையின் சரித்திரத்தில் மிக முக்கியமான காலமாகும்.🌹✝

“பாரம்பரியத்திற்கு விசுவாசமாயிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள், எண்ணிக்கையில் குறைந்து, ஒரு கையளவாக மட்டுமே இருந்தாலும், அவர்கள் தான், நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து நாதரின் உண்மையான திருச்சபை!”-அர்ச்.அத்தனாசியார்.🌹✝

🌹அர்ச். அத்தனாசியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



Tags:

Feast of St. Anthanasius, 

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 22 - அர்ச். சியன்னா கத்தரீனம்மாள் (St. Catherine of Sienna, April 30)

 ஏப்ரல் 30ம் தேதி


🌹வேதபாரகரான அர்ச். சியன்னா கத்தரீனம்மாள் திருநாள்🌹




இவள் இத்தாலியிலுள்ள சியன்னா நகரில் 1347ம் வருடம் மார்ச் 25ம் தேதியன்று 24 பிள்ளைகள் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தாள். இவளுடைய தந்தை ஜியாகோமோ டி பெனின்காசா என்பவர் கம்பளியில் சாயம் பூசும் வேலை செய்தார். இவளுக்கு ஆறு வயதானபோது, நமதாண்டவர் தாமே, பாப்பரசருடைய உடையையும் தொப்பியையும் அணிந்தவராகக் காட்சியளித்தார். ஆண்டவருடைய இரண்டு பக்கங்களிலும், அர்ச். இராயப்பரும் அர்ச். சின்னப்பரும் இருந்தனர். ஆண்டவர், தமது திவ்ய பார்வையை கத்தரீன் மீது பதித்திருந்தார்.

ஆண்டவர் கத்தரீனுக்கு, தமது சிலுவை அடையாளத்தினால் விசேஷ ஆசீர்வாதத்தை அளித்தார். பிற்காலத்தில் அர்ச். கத்தரீனம்மாள், பாப்பரசரை, பிரான்சிலுள்ள அவிஞோனிலிருந்து, உரோமைக்கு மறுபடியும் கொண்டு வந்து சேர்ப்பதில், முக்கிய பங்கு வகிக்கப் போவதைப் பற்றிய முன்னறிவிப்பாக இக்காட்சி திகழ்ந்தது!

இவளுக்கு ஏழு வயதானபோது, தன் கன்னிமையை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்தாள்; 16வது வயதில், அர்ச். சாமிநாதர் துறவற சபையின் மூன்றாம் சபையில் சேர்ந்தாள்.

1370ம் வருடம், கோடை காலத்தில், இவளுடைய 23ம் வயதில், தேவ இரகசியங்களின் விசேஷ வெளிப்படுத்தல்களுக்கான பரலோகக் காட்சிகளை தொடர்ச்சியாகக் காணும் பாக்கியம் பெற்றாள்; இக்காட்சிகளில், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம் ஆகியவற்றைக் கண்டாள். 

பீசா நகரத்திலிருந்தபோது, 1375ம் வருடம் தபசுகாலத்தின் நான்காம் ஞாயிற்றுக் கிழமையன்று, இவள் ஐந்து காய வரத்தைப் பெற்றாள்; இவள் உருக்கமாக ஜெபித்து வேண்டிக்கொண்டதினிமித்தமாக, இவள் தனது சரீரத்தில் பெற்ற ஐந்து காயங்கள், இவள் உயிருடன் வாழும் வரை வெளியரங்கமாகக் காணப்படவில்லை! இவள் இறந்தபிறகே வெளியரங்கமாக இவளுடைய சரீரத்தில் காணப்பட்டன!  இவள் ஆண்டவருடன் எப்போதும் உள்ளரங்கமாக ஞான விதத்தில் உரையாடிக் கொண்டிருப்பாள்; இவள் பக்தியிலும் கிறீஸ்துவ உத்தமதனத்திலும் நாளுக்கு நாள் உயர உயர, வீட்டில் இவளுக்குத் துன்பங்களும், தொல்லைகளும் அதிகரித்தன; வீட்டு வேலைகள் மிகக் கடினமாக நாள் முழுவதும் இருந்தன; அவற்றையெல்லாம் சளைக்காமல் முடித்து விட்டு, எஞ்சிய நேரத்தில், தன் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு குடிசையில் ஆண்டவருடன் தனிமையாக, ஏகாந்தத்தில் தேவசிநேக முயற்சி களில் ஈடுபட்டிருப்பாள்; மற்ற சமயங்களில், இவள் எப்போதும், புற அலுவல்கள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை ஆண்டவருக்காக  மிகுந்த பிரமாணிக்கத்துடனும்,  ஆர்வத்துடனும், மிக நேர்ததியாகவும் நிறைவேற்றிய படியே, தன் இருதயத்தில் ஞான விதமாக அமைத்திருந்த சிற்றறையில் தன் நேச சேசுவுடன் தேவ சிநேக உரையாடல்களில் ஈடுபட்டிருப்பாள்; 

இவளிடம் பாப்பரசர்களும், கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும் ஞான காரியங்களில் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர்; இவள், 1377ம் வருடம், 11ம் கிரகோரியார் பாப்பரசரை, வற்புறுத்தி, அவிஞோனிலிருந்து, உரோமைக்குத் திரும்பும்படிச் செய்தாள். இவள் இறந்தபிறகு, திருச்சபையை பெரிதும் பாதித்திருந்த மேற்கத்திய பிரிவினையை நிவர்த்திசெய்து அதை முற்றிலும்  அகற்றுவதற்காக இவள் மோட்சத்திலிருந்தபடி மாபெரும் முயற்சி செய்ததை எல்லோராலும் உணர முடிந்தது! 

1380ம் வருடம், ஏப்ரல் 29ம் தேதி, இவள் தனது 33ம் வயதில் பாக்கியமாய்  மரித்தாள்; இவளுடைய பரிசுத்த சரீரம் புதுமையாக அழியாத சரீரமாக இருப்பதை 1430ம் வருடம் கண்டறிந்தனர்! “அர்ச்.சியன்னா கத்தரீனம்மாளின் உரையாடல்கள்” என்ற பெயரில்  அவள் எழுதிய கடிதங்கள் எல்லாம் ஒரு கிரந்த நூலாக அச்சிடப்பட்டது! கத்தோலிக்க திருச்சபை சரித்திரத்தில், இது, மகா திறமையுடன் எழுதப்பட்ட ஞான நூல்களில் ஒன்றாகத் திகழ்கிறது!🌹✝


அவிஞோன் பாப்புத்துவம் அல்லது மேற்கத்திய பிரிவினை என்றால் என்ன?

அவிஞோன் பாப்புத்துவம் என்பது,  கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரத்தில் 1309ம் வருடம் துவக்கி 1378ம் வருடம் வரையிலான காலத்தைக் குறிக்கிறது; இக்காலத்தில் பாப்பரசருடைய  பத்திராசனம் உரோமையிலிருந்து, பிரான்சி லுள்ள அவிஞோன் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது! இத்தாலியில் நிலவிய அரசியல் குழப்பத்தின் நெருக்கடி காரணமாக, பிரான்சில் ஆட்சி செய்த 4ம் பிலிப் அரசரால் வலுவந்தமாக, உரோமையிலிருந்து, 5ம் கிளமென்ட் பாப்பரசர் பிரான்சிலுள்ள அவிஞோன் நகரத்திற்கு வரவழைக்கப்பட்டார்; அங்கேயே பாப்பரசருடைய பத்திராசனத்தை ஸ்தாபித்தார்.


அவிஞோனில் தங்கியிருந்த ஏழு பாப்பரசர்கள் 

5ம் கிளமென்ட்     1305-1314

22ம் அருளப்பர்     1316-1334

12ம் ஆசீர்வாதப்பர் 1334-1342

4ம் கிளமென்ட்     1342-1352

4ம் இன்னசென்ட்   1352-1362

5ம் உர்பன்     1362-1370

11ம் கிரகோரி       1370-1378 இப்பாப்பரசர் உரோமாபுரிக்கு பாப்பரசருடைய பத்திராசனத்தை மறுபடியும் கொண்டு வந்தார்.

இந்த ஏழு பாப்பரசர்களும் பிரெஞ்சு பாப்பரசர்களாயிருந்தனர்; இச்சமயம், இருந்த 134 கர்தினால்மார்களில் 111 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். இவ்விதமாக 11ம் கிரகோரி பாப்பரசர் பாப்புத்துவத்தை உரோமாபுரியில் ஸ்தாபித்தபிறகும் கூட, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கர்தினால்கள், ஒரு எதிர்போப்புவைத் தேர்ந்தெடுத்து, அவிஞோன் நகரில்  காலியாயிருந்த பாப்பரசரின் பத்திராசனத்தில் இந்த எதிர்போப்புவை அமர்ததினர். இதன் பின்னர், ஒருவருக்குப் பின் ஒருவராக எதிர்போப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருச்சபையின் ஒரு பகுதி  ஆளப்பட்டது! இவ்விதமாக மேற்கத்திய பிரிவினை திருச்சபையில் ஏற்பட்டது. 1414ம் வருடம் கான்ஸ்டன்ஸ் நகரில் கூட்டப்பட்ட திருச்சபை சங்கத்தின்போது, திருச்சபையில் நிலவிய இம்மாபெரும் முரண்பாடு முற்றிலுமாக தீர்க்கப்பட்டு நீக்கப்பட்டது; இக்காரியம் சமாதானமாக நிறைவேறுவதற்கு, அர்ச்.சியன்னா கத்தரீனம்மமாள் மோட்சத்திலிருந்து  உதவினாள். அவிஞோனிலிருந்து, பாப்புத்துவத்தினுடைய இறுதி அடையாளச் சின்னங்கள் எல்லாம் முழுமையாக அகற்றப்பட்டன! இவ்விதமாக 1417ம் வருடம்  மேற்கத்திய பிரிவினை முற்றிலுமாக முடிவடைந்தது! 🌹✝


🌹அர்ச்.சியன்னா கத்தரீனம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



Life History of St. Catherine of Sienna in Tamil. 

Born in 25 March 1347

Died on 29 April 1380

 In 1461 Pope Pius II proclaimed her saint 

In 1866 Pius IX included her as one of the patron saints of Rome. 

In 1939, along with St Francis of Assisi, St Catherine of Siena was proclaimed patron saint of Italy by Pope Pius XII.

In 1970 Paul VI conferred the title of Doctor of the Universal Church.

Feast day on April 30th.



Tags: St. Catherine of Sienna, Saint Catherine, Saint Catherine of Sienna, Life History of Saints in Tamil, Saints History, Tamil books


புதன், 10 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Hyginus

சனவரி மாதம் 11-ந் தேதி 
பா. வே 
அர்ச். இஜினார் 
St. Hyginus 


அர்ச். இஜினார் அக்தேன் பட்டணத்திலே பிறந்தார். அவருடைய ஆச்சரியமான புண்ணியங்கள் முகாந்தரமாக அக்காலத்திலிருந்த அர்ச். தெலெஸ் போர் என்னும் பாப்பாண்டவர் இறந்த பிறகு அந்தப் பட்டம் அவருக்கு வந்தது. அவர் அந்தப் பட்டத்திலிருக்கிறபொது உலகத்துக்கு அநேக கடின பொல்லாப்புகள் உண்டாயின. பிற 

மதத்தார் இதைக் கண்டு  சர்வேசுரனுடைய வேதம் பரம்பி மிஞ்சினதினாலே அந்தப் பொல்லாப்பெல்லாம் வருகின்றதென்றும், கிறீஸ்துவர்கள் தங்கள் பலதேவர்களை விட்டுவிட்டதினாலே அந்தத் தேவர்கள் பூலோகத்தின் பேரிலே மகா கோபமாயிருந்து இத்தனை பொல்லாப்புகளை ஆக்கினையாகக் கட்டளையிட்டார்களென்றும், அவர்களுடைய கோபத்தை அமர்த்த இந்த வேதக்காரர் எல்லாரையும் நிர்மூலம் பண்ணவேண்டுமென்றும் அநீயாயமாய்ச் சொல்லித் திருச்சபைக்குக் கனமான கலாபனைகளை  பண்ணினார்கள். அந்தக் கலாப முகாந்தரமாகக் கிறீஸ்தவர்கள் வெகு உபத்திரியப்பட்டாலும் பாப்பாண்டவராகிய இஜினாரென்கிறவர் சொல்லிய புத்தியைக் கேட்டு  வேதத்திலே உறுதியாயிருந்தார்கள். அதல்லாமல் அவருடைய நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்களாகிய வலாந்தீனென்கிறவனும், சேர்தோனென்கிறவனும் ரோமாபுரிக்கு வந்து வேதத்துக்கு விரோதமான அநேகத் தப்பறைகளைக் கிறீஸ்துவர்களுக்குள்ளே போதித்துக் கொண்டு வந்தார்கள், தாங்கள் சொல்லுகிற விஷமுள்ள துர்ப்புத்திகளை நல்ல கிறீஸ்துவர்கள் விசுவசிக்குமாறு தங்களைக் கத்தோலிக்குத் திருச்சபையில் உட்பட்டவர்களைப்போலே கபடாய் மற்றவர்  களுக்குக் காண்பிப்பார்கள். 

அர்ச். இஜினாரென்னும் பாப்பாண்டவர் இவற்றை அறிந்து திருச்சபைக்கு நிருபங்களை அனுப்பி அப்போஸ்தலர்களான அர்ச் இராயப்பர் சின்னப்பர் படிப்பித்த சத்திய வேதத்திலே எல்லாருந் தைரியமும் நிலைமையுமாயிருந்து முன் சொல்லப்பட்ட துர்ப்புத்திகளில் அகப்படாதபடிக்கு பத்திரம்பண்ணினார். மிகுந்த எச்சரிக்கையுள்ள இடையன் ஆடுகளின்மேலே பாய்ந்து வருகிற ஒனாய்க்கு எதிராய்ப்போய் அதைத் துரத்துவதுபோல் பாப்பாண்டவர் அந்த இரண்டு பதிதருடைய பொல்லாப்புக்கு எதிராய்ப் போய் அவர்களைத் துரத்தின படியினாலே தமது ஆடுகளாகிய கிறீஸ்துவர்களுக்கு மோசம் வரவிடாமல் நன்னெறியிற் காப்பாற்றினார். 

மேலும் இந்த பாப்பு ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத் தாய் ஒரே ஞானத்தகப்பன் இருக்க வேண்டுமென்றும், திருச்சபையிலே வழங்கும் மற்ற அநேகஞ் சடங்குகளையுங் கட்டளையிட்டார். அவர் பாப்பு பட்டத்திலே நான்கு வருஷம் மூன்று மாதம் நான்கு நாளும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த நூற்றைம்பத்தெட்டாம் வருஷம் அந்தோனினுஸ் என்கிற இராயன் காலத்திலே திருச்சபைக்கு பிறமதத்தார் பண்ணின கலாபத்தில் சனவரிமாதம் பதினோராந் தேதியிலே வேதசாட்சியாகி மகிமையுள்ள மரணத்தை யடைந்தார். 

கிறீஸ்துவர்களே! இப்போது நீங்கள் கேட்ட இந்தச் சுருக்கமான சரித்திரத்திலே ஞான புஷ்பங்களை எடுக்குமாறு அதற்கடுத்த சில புத்திகளைக் கேளுங்கள். இப்போது சொல்லப்பட்ட அர்ச். பாப்பு நாளிலே உலகத்துக்கு வந்த நிற்பந்தங்களை பிறர் கண்டு அவை கிறீஸ்துவர்களுக்குத் தாங்கள் செய்த அநீத உபத்திரியங்களுக்கு ஆக்கினையாக வந்ததென்று ஒத்துக்கொள்ளாமல் சர்வேசுரனுடைய வேதம் பரம்பினதினாலே தங்கள் தேவர்கள் உலகத்துக்கு ஆக்கினையாக அந்தப் பொல்லாப்புகளை வரப்பண்ணினார்களென்று அக்காலத்திலே அவர்கள் சொன்னதுபோல் இக்காலத்திலேயுஞ் சிலர் சொல்வார்கள். அதெப்படி யென்றால் தேவர்கள் தங்களை வணங்குகிறதை அநேகர் விட்டுச் சர்வேசுரனுடைய வேதங் கேட்டதினாலே மழை பெய்ய வில்லையென்றும், பஞ்சம் படை வியாதி முதலான ஆக்கினைகளை உலகத்துக்கு வரப் பண்ணுகிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள். ஆனால் அது தப்பிதமாய் இருக்கிறதொழிய நியாமாய் இருக்க வில்லை. அதெப்படி யென்றால் அந்தத் தேவர்களைவிட்டுச் சத்திய வேதங்கேட்கிறது குற்றமானால் அந்தக் குற்றங் கட்டிக்கொண்டவர்களாகிற கிறீஸ்துவர்களை மாத்திரந் தண்டிக்கிறதே நியாயமாய் இருப்பதொழிய அந்தக் குற்றமில்லாதவர்களாகிய புறமதஸ்தர்களைத் தண்டிக்கிறது அநியாயம். பஞ்சம் படை முதலிய பொதுவான நெருக்கடிகள் வந்தால் கிறீஸ்துவர்களும் புறமதஸ்தர்களும் அவதிப்படுகிறார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆகையால் முன் சொல்லப்பட்ட காரணத்தால் அந்தத் தேவர்கள் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவது அநியாயமென்று சொல்லவேண்டும். அநியாயம் பண்ணுகிறவன் மெய்யான தேவனல்ல. அத்தகைய ஆக்கினை எந்த முகாந்தரத்தினால் வருகிற தென்று அறியவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேளுங்கள். 

மெய்யான சர்வேசுரனுடைய சொற்படி கேளாதிருக்கிற பாவமே முன் சொல்லப்பட்ட ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும். கிறீஸ்துவனானாலும் பிறனானாலும் ஏதேனும் பாவஞ் செய்தால் அவர்களுடைய பாவத்துக்கு ஆக்கினையாக நியாயத்தின்படியே ஆண்டவர் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவார். இத்தேசத்திலே கிறீஸ்துவர்கள் சிறுபான்மையோர், பிறமதத் தினர் மிகுதியாய் இருக்கிறார்கள். கொஞ்சம்பேருடைய குற்றங்களைப்பற்றிக் கடவுள் திரளான பேரைத் தண்டிப்பாரென்பதைவிடத் திரளான குற்ற வாளிகளின் ஆக்கினையில் அந்தக் குற்றமில்லாத சிலர் வேறு குற்றத்தைப் பற்றி உட்பட்டிருக்கலாமென்பது நியாயம். சனத்தொகையைப் பற்றிக் கிறீஸ்துவர்களிடத்திலே இருக்கிற பாவங்களைவிட பிறரிடத்திலே இருக்கிற பாவங்கள் அதிகம். விசேஷமாய்ப் பசாசைக் கும்பிடுகிற பாவம் அதிகமாய் இருக்கிறபடியினாலே முன் சொல்லப்பட்ட ஆக்கினைகள் வருகிறதற்கு அவர் கள் அதிககாரணமாய் இருக்கிறார்களென்னத்தகும். சத்திய வேதத்துக்கு முழுதும் உட்பட்ட கிறீஸ்துவர்களுடைய இராச்சியங்கள் பிற இராச்சியங்களை விட மிகவும் அதிக செல்வபாக்கிய வல்லமைகொண்டிருக்கிறது. யாவர்க்குந் தெரியும், அதினால் சர்வசந்தேகமுந் தீரலாம். மேலும் கிறீஸ்துவர்களிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் இத்தேசத்தில் அதிக ஆக்கினைவராத படிக்குஞ் சிலவிசை ஆக்கினை முழுதுந் தீர்ந்துபோகவுங் காரணமாய் இருக்கும். இந்த நிடாயத்தை வேறே தேசங்களில் புறமதஸ்தர்களான சில இராசாக்கள் கண்டு பிடித்துப் பரிசோதித்துப் பார்த்துத் தங்களுடைய இராச்சியங்களில் நடக்கிற சர்வேசுரனுடைய வேதத்துக்கு விக்கினம் பண்ணாமல் இந்த வேதம் பரம்பச் சம்மதித்தார்கள். 

இதன்றியே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத்தாய் ஞானத்தகப்பன் மாத்திரமிருக்க முன் சொல்லப்பட்ட அர்ச். பாப்பு கட்டளையிட்டா ரென்று சொன்னோமே நீங்கள் எவருக்கேனும் ஞானத்தாய் ஞானத்தகப்பனாய் இருந்தால் அது நல்லதென்று நீங்கள் நினைக்கக்கடவீர்கள், ஆனால் அதற்குண்டான கடனை நிங்கள் தீர்க்கவேண்டும். அதாவது: ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேறு யாறும் வேதத்தின் மந்திரங் குறிப்பிடம் படிப்பியாதிருந்தால் ஞானத்தாய் ஞானத்தகப்பன் அவற்றை அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவார்கள். மேலும் இந்த அர்ச்சியசிஷ்டர் நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்கள் நல்ல கிறீஸ்துவர்கள்போல் வெளியே காண்பித்தாலுந் தங்கள் இருதயத்தில் இருந்த விஷ நிறைந்த துர்ப்புத்தி சொல்லுவார்களே. 

அப்படியே இக்காலத்திலே சில ஊர்களிலேயுள்ள பதிதர், நாடுகளிலே வந்து தாங்கள் மெய்யான கிறீஸ்துவர்களைப்போல் காண்பிக்க கழுத்திலே செபமாலை தரித்துச் சுரூபமும் வைத்து கொண்டு செபம் பண்ணுவதுபோலே திரிகிறார்கள். பத்தியுள்ள அத்தகைய அடையாளங்களை நீங்கள் கண்டு அவர்களுக்கு இடங்கொடுத்துப் பட்சத்தை காண்பித்தபிறகு அவர்கள் சுரூப வணக்கமாகாதென்றுந் தேவமாதாவை வணங்க வேண்டாமென்று. துர்ப் புத்தியாகிய விஷத்தை வீசுவார்கள். ஓனாயானது ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஆட்டுக்கிடையிலே போகிறபோது உடனே ஆடுகளைக் கடியாதிருந்தாலும் பிற்பாடு கடித்து வெகு சேதம் வருவிக்கிறாப் போலே இந்தப் பதிதர் செய்கிறார்கள். ஆதலால் அவர்கள் வழியாக உங்கள் ஆத்துமத்துக்கு மோசம் வராதபடிக்கு முன் சொல்லப்பட்ட அர்ச். இஜினாரென்கிவரைப்போலே நீங்கள் பதிதர் மட்டில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பதுமன்றியே வேதகாரியங்களிலே ஒருக்காலும் உங்கள் காதிலே விழாத வார்த்தையாகிய நூதனபோதகம் கேள்விப்பட்டால் அதை விசுவசிக் வேண்டாமென்று அறியக்கடவீர்களாக. ஆனால் சாதாரண திருச்சபை படிப்பிக்கிற சத்தியங்களை உறுதியாக விசுவசிப்பதே கடமை.

புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 19 - அர்ச். பிரான்சிஸ் சவேரியார் (St. Francis Xavier)

 வாழ்க்கை வரலாறு

அர்ச். பிரான்சிஸ் சவேரியார், இந்தியா மற்றும் கீழ்த்திசை நாடுகளுக்கும் சென்று சத்திய வேதத்தைப் போதித்ததினால் அவர் சிந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் நமது ஞானத் தந்தையாகவும் இருக்கிறார். ஆனால் இந்த நவீன காலங் களில் அவர் மீதான பக்தி மறைந்து வருகிறது. ஆன்ம தாகம் நிறைந்த அவரது வாழ்வை அறிந்து, அவரைக் கண்டுபாவித்து, அவர் உதவியை நாடுவது மிகவும் நல்லது. அவர் மீது விசேஷ பிள்ளைக் குரிய பக்தி கொள்ளச் செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. (ஆர்)

இந்தியாவின் அப்போஸ்தலர்

உ லகமெங்கும் சென்று சகல ஜாதி ஜனங்களுக்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும் உன்னத அலுவல் நமது ஆண்டவரால் திருச்சபை வசம் ஒப்பு விக்கப்பட்டது. இந்த அலுவலைக் கத்தோலிக்கத் திருச்சபை, அப்போஸ்தலர் காலமுதல் இதுவரையில் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வுத்தம தொழிலுக்கு தேவ திருவுளத்தால் தெரிந்துகொள்ளப்பட்ட வேத போதகர் திருச்சபையின் அதிகாரமும், அங்கீகாரமும் பெற்று தூர தேசங்களுக்குச் சென்று கத்தோலிக்க சத்தியங்களைப் போதித்து ஆயிரக்கணக்கான அஞ்ஞானிகளைத் திருச்சபையின் செல்வ மக்களாக்கியிருக்கின்றனர். 16-ம் நூற்றாண்டில் மிகப் பிரசித்திப் பெற்ற வேதபோதகர்களுள் முதன்மையானவர் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் என்றால் மிகையாகாது. இவருக்கு அக்காலத்தில் வசித்த பரிசுத்த பாப்புவாகிய 8-ம் உர்பன் இந்தியாவின் அப்போஸ்தலர் என்னும் பட்டமளித்தார். 

பிறப்பு 

இந்தப் பெரிய அப்போஸ்தலர் பிறந்த இடம் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த நவார் நாட்டிலுள்ள சேவியேர் மாளிகை. இவர் பிறந்தது 1506-ம் ஆண்டு. இவரது தாய் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். தந்தை நவார் நாட்டு இராஜாவாகிய 3-ம் ஜான் ஆல்பிரட் என்பவரின் பிரதான மந்திரிகளுள் ஒருவர்.

அர்ச். சவேரியார் பிறந்த சேவியேர் மாளிகை

பிரான்சிஸ் சவேரியாரின் குடும்பத்தில் உதித்த ஆறு மக்களுள் இவர்தான் கடைசிப்பிள்ளை. இவரது சகோதரி மதலேன் என்பவள் காந்தியா நாட்டிலுள்ள அர்ச். கிளாரா மடத்து சிரேஷ்ட தாயாராக மாட்சிமை பொருந்திய உத்தியோகத்தை வகித்து வந்தார். சகோதரரோ அக்காலத்து வழக்கம்போல் இராணுவத்தில் சேர்ந்து கீர்த்திப் பெற்று விளங்கினர். 

பாரீஸ் நகர் பல்கலைக்கழகம் 

பிரான்சிஸ் சிறுவயதிலேயே கல்வி கற்பதில் பெரும் ஆவல் கொண்டிருந்தபடியால், அவரது தாய் தந்தையர் அவரைப் பாரீஸ் நகர் பல்கலைக்கழகத்திற்குத் தமது கல்விப் பயிற்சியைத் தொடர்ந்து நடத்தும்படி அனுப்பினர். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலுள்ள உயர்தரக் கல்வி ஸ்தாபனங்களுள் அதிமிக சிறப்பும், மேன்மையும் பெற்று விளங்கியது பாரீஸ் பல்கலைக் கழகமாகும். பலதேசத்து மாணவர் வந்துகூடி படிக்குமிடமும் இதுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஆசிரியருள் பிரசித்திபெற்ற அறிஞர்கள் ஆசிரியர் தொழில் நடத்திவந்ததும் இந்தப் பல்கலைக்கழகத்திலேதான். சுபாவத்தில் நுட்பமான புத்தியுள்ள இளைஞனாகிய பிரான்சிஸ் வெகு கவனமாய்ப் பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இளமையிலேயே உயர்ந்த கல்விப் பட்டங்களைப் பெற்று, பெரியோரால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். இவரை அர்ச். பார்பரா கல்லூரியின் பிரதம ஆசிரியருள் ஒருவராக நியமித்தார்கள். தமது சகோதரர்கள் இராணுவத்தில் பெயரும். புகழும் பெறுவதுபோல், தாம் கல்வி துறையில் கீர்த்தியும் செல்வாக்கும் அடையவேண்டுமென்பது பிரான்சிஸ் சவேரியாரின் ஒரே ஆசையாயிருந்தது.

அர்ச். இஞ்ஞாசியார்

ஆனால் மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று செய்யும் என்னும் பழமொழிக்கேற்ப நமது நல்ல ஆண்டவர் பெருந்தன்மையும், புத்தி தீட்சண்யமுமுள்ள சவேரியாரை தமது ஊழியத்துக்கு அழைக்க சித்தமாயிருந்தார். "நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்" என்று உலக இரட்சகர் தமது அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றியிருக்கிறாரன்றோ? அவ்வாறே இப்போது தாம் சவேரியாரைத் தமது அப்போஸ்தலராகத் தெரிந்துகொண்டதாக அவருக்கு அறிவிக்கும்படி அர்ச். இஞ்ஞாசியாரை அவரிடம் அனுப்பினார். 

அர்ச். இஞ்ஞாசியார் சவேரியாரைப் போலவே ஸ்பெயின் தேசத்து பிரபுகுலத்தில் பிறந்தவர். அவரைப் போலவே தொடக்கத்தில் இவ்வுலக பெருமை, மகிமையை நாடித் திரிந்தவர். ஆனால் இஞ்ஞாசியார் தேவ திருவுளத்தால் அற்புதமாய் ஏவப்பட்டு, பூலோக சுக செல்வங்கள் அழிவுக்குரியவையென்று உணர்ந்து, உலகத்தைத் துறந்து, கடுந்தபம் புரிந்து, தன்னை அடக்கி, சேசுவின் திரு ஊ ழியத்துக்குத் தன்னை முழுவதும் கையளித்திருந்தவர். இவர் தம்மோடு சேர்ந்து தேவ பணிபுரிய ஓர் புதிய சன்னியாச சபையை ஏற்படுத்த கருத்துக் கொண்டவராய் பாரீஸ் பல்கலைக் கழகத்திற்கு வந்து, பிரான்சிஸ் சவேரியாரின் அரும்பெருங் குணாதிசயங்களைக் கண்ணுற்ற அவரைத் தமது தோழனாகத் தெரிந்துகொள்ளத் தீர்மானித்து, அவரிடம் சென்று. "பிரான்சிஸ், உலக முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொண்டாலும் உன் ஆத்துமத்தை இழந்துபோவாயானால் என்ன பிரயோசனம்” என்று சொல்வார். ஆனால் வின் மகிமை யென்னும் உலக மாய்கையில் சிக்குண்டு அழைக்கழிக்கப்பட் டிருந்த அவரது இருதயத்துக்கு அர்ச். இஞ்ஞாசியார் சொன்ன புத்திமதி வேப்பங்காயைப் போல கசப்பாயிருந்தது. உலக சுக செல்வத்தை ஒருங்கே மறுத்து சன்னியாசக்கோலம் பூண்டு தரித்திர திசையில் நடமாடித்திரிந்த இஞ்ஞாசியாரை ஓர் ஏழை மாணவன் என்று எண்ணியிருந்த சவேரியார் அவரை இகழ்ந்து அலட்சியம் செய்தார்.

ஆயினும் இஞ்ஞாசியார் அவதைரியப்படாமல், அர்ச்சியசிஷ்டவர் களுக்குரிய அற்புத தாழ்ச்சி, பொறுமையுடன் சவேரியாரை அணுகி, அவருடைய குலம், குணம், கல்வி, ஒழுக்கம், சாதுர்ய சாமர்த்தியம், யுக்தி, யோசனை ஆகிய சுபாவ நன்மைகளைப் புகழ்ந்துப் பேசி, இத்தகைய சுகிர்த இலட்சணங்களை ஆபரணமாகக் கொண்டு, சிறந்து விளங்கும் கத்தோலிக்க வாலிபன் இவ்வுத்தம சுபாவக் கொடைகளைத் தன் இரட்சகரின் திரு ஊழியத்தில் செலவழிப்பதே அழிவில்லாப் புகழ்பெற ஏற்ற வழி என்று அவர் உணருமாறு எடுத்துரைத்தார். சவேரியார் இஞ்ஞாசியாரோடு நெருங்கிப் பழகவே, அவரது யதார்த்த குணத்தையும் பெருந்தன்மையையும் உயர்குலப் பிறப்பையும் கண்டு, மனச்சாட்சியின் குரலுக்குச் செவிக்கொடுத்து, திவ்விய இஸ்பிரித்துசாந்துவின் பரிசுத்த ஏவுதலுக்கு இணங்கி, தம்மை இஞ்ஞாசியார் வசம் ஒப்படைத்தார். இஞ்ஞாசியாரும், அவரை உற்சாகப்படுத்தி தமது உற்ற தோழனாக ஏற்றுக் கொண்டார். பின்னாளில் அர்ச் இஞ்ஞாசியார் சேசு சபையை ஸ்தாபிக்கும்போது அச்சபையின் அஸ்திவாரக் கற்கள்போன்ற பத்துபேருள் பிரான்சிஸ் சவேரியார் ஒருவராயிருந்தார்.

இந்தியா வருகை 

1537-ம் ஆண்டு அர்ச். ஸ்நாபக அருளப்பர் திருநாள் அன்று சவேரியாருக்கு வெனிஸ் நகரில் குருப்பட்டம் அளிக்கப் பட்டது. அதன்பின் அர்ச். இஞ்ஞாசியாரும் அவர் தோழர் களும் உரோமையில் ஆத்தும இரட்சண்ய அலுவலில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக் கையில், போர்த்துக்கல் தேசத்து இராஜா இந்தப் புது குருமாரின் பக்திப் பற்றுதலையும், வேதபோதகத் திறமையையும் கேள்வியுற்று, இவர்களுள் ஆறுபேரை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென்று பரிசுத்த பாப்பரசருக்கு மனு செய்துகொண்டார். அக்காலத்தில் நமது தேசமாகிய இந்தியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முன்வந்து முயற்சி செய்தவர்கள் போர்த்துக்கீசியரே. நமது பரிசுத்த பிதா இராஜாவின் மன்றாட்டுக்கிணங்கி அர்ச் இஞ்ஞாசியார் விருப்பப் பிரகாரம் பிரான்சிஸ் சவேரியார். சீமோன் ரொட்ரிகோஸ் என்னும் இரண்டு சேசுசபைக் குருமாரைப் போர்த்துக்கலுக்கு அனுப்பினார். ரொட்ரிக்கோஸ் சுவாமியார் லிஸ்பன் நகரில் இருக்க நேர்ந்ததால், பிரான்சிஸ் சவேரியார் மாத்திரம் இந்தியாவுக்குப் புறப்பட வேண்டிய தாயிற்று. சங். சவேரியார் சுவாமி தமது 35-ம் வயதில், 1541-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சுப்பலேறி, தமது சொந்த தேசம், அன்புள்ள தாய், சகோதரர், சகோதரி, உற்றார் உறவினர் சகலரையும் விட்டு அந்நியராகிய அஞ்ஞான இந்தியர்களுக்கு சத்திய வேதத்தைப் போதிக்க இந்தியாவை நோக்கிப் புறப்பட்டு 1542-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி கோவா துறைமுகத்தில் வந்திறங்கினார்.

கோவா 

அர்ச். சவேரியார் காலத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரை யோரத்திலுள்ள சில துறைமுகப் பட்டணங்கள் போர்த்துக்  கீசியருக்குச் சொந்தமானவையாயிருந்தன. இவைகளுள் பிரதான மானது கோவா நகர். இந்த கோவா மாநகரில்தான் மேற்றிராணியாரும் அரச பிரதிநிதியாகிய உயர் அதிகாரிகளும் வசித்தனர். புதிதாய் வந்திறங்கின சங். சவேரியார் சுவாமியார் தினமும் அதிகாலையில் திவ்விய பலிபூசை நிறைவேற்றியபின், கோவாவிலுள்ள தர்ம மருத்துவமனைகளுக்குச் சென்று வியாதியஸ் தருக்கு ஆத்தும சரீர நன்மைகள் செய்வார். தொழுநோய் மருத்துவ மனையே அவரது விசேஷ அன்புக்குரியதாயிருந்தது. பிறகு சிறைச் சாலைகளுக்குப் போய் அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலளிப்பார். கோவாவில் வீடு வீடாய்ச் சென்று தான் சேகரித்தப் பொருட்களையும் தர்ம பணத்தையும் நோயாளிகளுக்கும் கைதிகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பார். மாலை நேரத்தில் ஓர் சிறு மணியை அடித்துக்கொண்டு வீதிகள்தோறும் நடந்துபோய் சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட்டிச் சேர்த்துவந்து அவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக் கொடுப்பார். பிள்ளைகளின் ஆத்துமத்தைக் காப்பாற்றி அவர் களுடைய இளம் பிராயத்தில் புண்ணிய நற்பண்புகளை விதைத்தால், பிள்ளைகள் மூலமாய்ப் பெற்றோரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்குவது எளிது என்பதே அவருடைய அபிப்பிராயம். சங். சவேரியார் சுவாமியுடைய முயற்சியின் பலனாக பிள்ளைகள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்சென்று அவருடன் கோவிலுக்குள் சென்று வேத ஞான சத்தியங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொள்வார்கள். கற்றுக்கொண்டதை அநுசரித்து பக்தி விசுவாசமுள்ள சிறு சம்மனசுகளாக மாறிவிட்டதுமன்றி, வேத விசுவாசத்தில் சீர்குலைந்து திரிந்த தங்கள் தாய் தந்தையரையும் தங்களோடு ஞானோபதோத்துக்கு அழைத்துச் செல்வார்கள். கோவா நகர் கிறீஸ்தவர்களும் தங்கள் மத்தியில் ஓர் பரிசுத்த குருவானவர் எழுந்தருளி வந்திருக்கிறாரென்று நன்குணர்ந்து அவரது பிரசங் கத்தைக் கேட்க ஓடிவருவார்கள். அவரது பக்தியார்வம் நிறைந்த வார்த்தைகள் பாவிகளின் இருதயத்தில் ஆணிபோல் பதிந்து தெய்வ பயத்தை உண்டாக்கி அவர்களை நடுங்கச் செய்தன. தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு உத்தம கிறீஸ்தவர்களானார்கள். 


தென்கீழ்க் கடலோரப் பகுதியில் 

பகலில் இவ்வாறு ஆத்தும இரட்சண்யத்திற்காக அயராது உழைத்த அர்ச். சவேரியார் இரவில் அதிக நேரத்தை ஜெபத் தியானத்தில் செலவிடுவார். தனது சரீர சுகத்தை ஒரு பொருட்டாய் எண்ணாது, களைப்புக்கும் தவிப்புக்கும் அஞ்சாமல், பிறர் ஆத்தும நன்மைக்காக அவர் சில மாதங்கள் உழைத்தபின், இந்தியாவின் தென்கீழ்க் கடலோரமாகிய முத்துக்குளித்துறையில், கன்னியாகுமரிக்கும் மன்னாருக்கும் நடுவிலுள்ள ஊர்களில் வசித்த பரதகுல மக்களுக்கு ஞான உதவி புரியும்பொருட்டு 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு வந்து சேர்ந்தார்.


அர்ச். சவேரியார் முத்துக்குளித்துறைக்கு வந்ததும் அங்குள்ள பரதர்களில் அநேகர் சில வருஷங்களுக்குமுன் ஞானஸ்நானம் பெற்றிருந்தும். அவர்களை வேதத்தில் ஸ்திரப் படுத்த குருமார் இல்லாத குறையால் இந்தப் புதுக் கிறீஸ்தவர்கள் தங்களைச் சுற்றியிருந்த அஞ்ஞானிகளைப் போலவே வேத ஞான அறிவில்லாத வர்களாயிருப்பதைக் கண்டார். கோவாவில் எப்படி கிறீஸ்தவர்கள் மத்தியில் உழைத்தாரோ அதே விதமாய்ப் பரதர்கள் மத்தியிலும் உழைத்து, புதுக் கிறீஸ்தவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதிருந்த அஞ்ஞானப் பரதர்களுக்கு வேதம் போதித்து தமது கையாலேயே ஞானஸ்தானம் கொடுத்தார்.

முத்துக்குளித்துறையில் தனக்குக் கிடைத்த பாக்கியத்தையும் ஞான ஆறுதலையும் தக்கவாறு வர்ணிக்கத் தன்னால் இயலாது என்று அர்ச். சவேரியார் உரோமைக்குத் தனது சபைக் குருமாருக்கு எழுதி யிருக்கிறார். திரளான கூட்டமாய் தன்னிடம் வந்த பரதகுலத்தாருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததினால் தனது கரங்களைத் தூக்க முடியவில்லை என்றும், களைப்பினால் பேசமுதலாய் பலமில்லை யென்றும் சொல்லுகிறார். அம்மக்களின் ஆச்சரியத்துக்குரிய பக்திப் பற்றுதலையும், வேத சத்தியங்களைக் கற்றறிய அவர்களுக்கு இருந்த அணைகடந்த ஆவலையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அவர்கள் எப்போதும் என்னோடுகூட இருக்க ஆசித்து, என்னை எப்போதும் சூழ்ந்துகொண்டிருப்பதால் ஜெபிக்க நேரமின்றி, அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயாவது ஓடி ஒளிந்துகொண்டு என் கட்டளை ஜெபத்தை ஜெபித்து முடிக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர்களுக்குள் யாராவது வியாதியாய் விழுந்தால் சவேரியாருடைய ஜெபமாலை அல்லது பாடுபட்ட சுரூபத்தை வாங்கிக்கொண்டு போய் குணப்படுத்துவார்கள். 

முத்துக்குளித்துறையில் மரணத்தறுவாயிலிருந்த அஞ்ஞானக் குழந்தைகளைத் தேடிச்சென்று ஞானஸ்நானம் கொடுப்பார். இவ்வாறு இவர் கையால் ஞானஸ்நானம் பெற்று இறந்து மோட்சபாக்கியம் பெற்ற குழந்தைகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கு மேல் இருக்கு மென்று அர்ச். சவேரியார் கணக்கிட்டிருக்கிறார்.

அர்ச் சவேரியார் மணப்பாட்டு வழியாய் பலமுறை பிரயாணஞ் செய்தும் அவ்வூரிலேயே அநேக மாதம் தங்கியும் இருக்கிறார். 1542-ம் ஆண்டு மணப்பாடு அவருடைய பரிசுத்த பாதங்களினால் முதன் முதலாக அர்ச்சிக்கப்பட்டது. மறு வருடம் சுமார் நான்கு மாதம் அங்கேயே தங்கியிருந்தார். 1544 ம் வருடத்தில் மாத்திரம் மணப்பாட்டிலிருந்து 12 கடிதங்கள் எழுதினாரென்றால் எத்தனை முறை அவர் அங்கு சென்றிருக்கவேண்டுமென நாமே எளிதில் யூகித்துக் கொள்ளலாம். 1548-ம் ஆண்டில் தமது தோழர்களுக்கு தியானம் கொடுத்து அவர்களுக்கான புத்திமதிகளை எழுதிக் கொடுத்தது மணப்பாட்டில்தான். ஏழைகளின் உணவாகிய சாதமும் தண்ணீருமே அவர் அருந்திய அநுதின உணவு. வேலை முடிந்தபின் ஓர் எளிய குடிசையில் தரையில் மூன்று மணி நேரம் படுத்துறங்குவார். மீதி நேரத்தில் ஜெபத் தியானத்தில் ஆழ்த்திருப்பார். அவர் வழக்கமாய் ஜெபதபம் புரிந்துவந்த குகையை இன்றும் மணப்பாட்டில் காணலாம்.

இந்தியாவின் தென்கோடி முனையில் முத்துக்குளித் துறையெனப் பெயர்பெற்று விளங்கும் பரதர் நாடே அர்ச். சவேரியாரின் விசேஷ அன்பின் ஸ்தானமாயிருந்தது என்று மேற்கூறியவைகளைக் கொண்டு எளிதாக அறிந்துக் கொள்ளலாம். அவரது ஞான மக்களாகிய பரத குலத்தாரும் அர்ச். சவேரியார் தங்கள் முன்னோருக்குச் செய்தருளிய எண்ணிலா உபகார சகாயங்களை மறவாமல் அவரைத் தங்கள் அருமைத் தந்தையென்று போற்றிப் புகழ்ந்து ஸ்துதித்து வருகின்றனர். அர்ச். சவேரியார் வேதம் போதிக்கச் சென்ற இடங்களில் நடந்த சம்பவங்களையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவது எளிதல்ல. ஆனால் அவர் இலங்கை, மலாக்கா, மொலுக்கஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் போய் இந்தியாவுக்குத் திரும்புகையில் தமது பரதருல மக்களை பாசத்தோடு சந்தித்து அன்புடன் ஆசீர்வதிக்க ஆவலுடன் முத்துக்குளித் துறைக்குப் போவார்.

சீனதேசம்


அர்ச். சவேரியார் இந்தியாவை விட்டு கடைசியாக புறப்பட்டது 1552-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி. சீனதேசம் புகுந்து அங்குள்ள அஞ்ஞான சீனருக்கு வேதம் போதிக்கவேண்டுமென்பது அவரது தீராத ஆவல், ஆனால் அந்நிய தேசத்தார் எவரும் சீனதேசத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்பது அத்தேசத்தின் கண்டிப்பான சட்டம். அப்படி இச்சட்டத்தை மீறி தேசத்திற்குள் பிரவேசிப்பவர்களைச் சிரச்சேதம் செய்வது வழக்கம். அர்ச். சவேரியார் இதை அறிந் திருந்தும், தேவசிநேகத்தால் பற்றியெறிந்த அவர் இருதயம் சீனர்களுக்கு வேத ஞானப்பிரகாசம் அளிக்கவேண்டுமென்று அவரை ஏவித்தூண்டிக்கொண்டேயிருந்தது. ஆதலால் தனக்கு வரவிருக்கும் உயிர்சேதத்தையும் பொருட்படுத்தாமல் துணிந்து சீனதேசத்துக்குச் செல்லத் தீர்மானித்து, 1552-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான்ஷியன் தீவு போய்ச் சேர்ந்தார். இந்த இடம் சீன தேசத்தின் கீழ்க்கரையோரத்தில் கான்டன் நகருக்கு எதிரே இருக்கும் ஓர் சிறு தீவு, அங்கே வந்திருந்த போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் அர்ச்சியசிஷ்டவரை சந்தோஷத் துடன் வரவேற்று, அவர் திவ்விய பலிபூசை செய்ய ஓர் சிற்றாலயமும் கட்டிமுடித்தனர். சிலநாள் அத்தீவில் சிறுவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்துவந்தார். அங்கிருந்து சீன தேசத்திற்குப் போக ஏதாவது வர்த்தக கப்பல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு கொடிய ஜுரம் கண்டது. 

மரணம்

மரணம் அடுத்திருக்கிறது என்று தூரதிருஷ்டியால் அறிந்துகொண்ட அர்ச். சவேரியார் தமது நேச ஆண்டவரின் வருகைக்கு தன்னைத் தயார்செய்து கொண்டு ஆவலோடு காத்திருந்தார். “ஒ. மிகவும் பரிசுத்த திரித்துவமே, தாவீதின் குமாரனாகிய சேசுவே, என்மீது இரக்கமாயிரும்." "தாயே உம்மைத் தாயென்று காண்பித் தருளும்" என்னும் மனவல்ய ஜெபங்களே அவரது கடைசி சம்பாஷனையாக இருந்தது. 1552, டிசம்பர் 2-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு தனது கரங்களில் பாடுபட்ட சுரூபத்தை இறுகப் பிடித்து அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்துகொண்டே மெதுவாய்,

"ஆண்டவரே, உம்மை நம்பினேன், ஒருபோதும் கைவிடப் படேன்” என்னும் இனிய ஜெபத்தை உச்சரித்துக்கொண்டே தனது ஆத்துமத்தைத் தன் அதிமிக அன்புக்குரிய ஆண்டவரிடம் கையளித்தார்.

பிரான்ஸ் தேசத்தின் பெயர்பெற்ற பிரசங்கியாகிய பூர்தலு என்பவர் அர்ச். சவேரியாரைப்பற்றி பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்: அப்போஸ்தலர்கள் செய்த புதுமைகளையெல்லாம் அர்ச். சவேரியாரும் செய்தார். அவர்களைப் போலவே அற்புதமாய் பல பாஷை பேசும் வரமும், தீர்க்கதரிசன வரமும், புதுமை செய்யும் வரமும் அவருக்கிருந்தது. பல தேசங்களில் திரிந்து கணக்கற்ற அஞ்ஞானிகளை மனந்திருப்பியதில் அப்போஸ்தலர்களுக்கு சம அப்போஸ்தலராயிருந்தது மாத்திரமல்ல, அவர்களில் பலருக்கு மேலானவருமாயிருந்தார். அவர் கரங்களில் ஞான தீட்சைப் பெற்றவர்கள் 12 லட்சத்திற்கு அதிகமான அஞ்ஞானிகள், சத்திய வேதத்தைக் கேட்டிராத 200-க்கு அதிகமான இராச்சியங்களில் வேதத்தைப் போதித்து ஏக திரித்துவ மெய்யங்கடவுளின் மேலான ஆராதனையை ஸ்தாபித்தார். எண்ணிறந்த அஞ்ஞான விக்கிர கங்களை உடைத்துத் தகர்த்தார். கடலிலும் தரையிலும் அவர் செய்த பிரயாணங்கள் உலக முழுவதையும் மும்முறை சுற்றி வருவதற்கு ஒப்பாகும். அவர் சென்றவிட மெல்லாம் சத்திய திருச்சபை செழித்தோங்கி வளர்ந்தது. அவருக்குமுன் குருக்கள் பாதம் படாத ஜப்பான் தேசத்தில் முதன்முதலில் சத்திய வேதத்தை நாட்டினவர் இந்த அர்ச்சியசிஷ்டவர்தான்.

சவேரியாரே எம் நல்ல தந்தையே!
தாரும் உறுதியை எங்களுக்கு
நாளும் உமது நல்ல மாதிரியை
நாங்களும் கண்டு ஒழுகிடவே

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 18 அர்ச். அருளப்பர், (St. John)

  அர்ச். அருளப்பர், 

அப்போஸ்தலர், சுவிசேஷகர் 

 

அர்ச். அருளப்பர் செபதேயுவின் மகனும், அர்ச்.  பெரிய யாகப்பர் (St. James) அவர்களின் சகோதரரும் ஆவார். ஆண்டவருடைய பொது ஊழியத்தின் முதல் ஆண்டில், நம்முடைய கர்த்தரால் அப்போஸ்தலராக அழைக்கப்பட்டார்.

📜✍🏻+ அர்ச். மார்க் (3, 17): "(மற்றவர்கள் யாரெனில்) செப்தேயுவின் குமாரனாகிய யாகப்பர், யாகப்பருடைய சகோதரனாகிய அருளப்பர்; இவ்விருவருக்கும் இடியின் மக்களென்று அர்த்தமுள்ள போவா னெர்கேஸ் என்று பெயரிட்டார்."

யாகப்பர் மற்றும் அருளப்பர் ஆகியோர் சேசுவால் "போனெர்ஜஸ்" அல்லது "இடியின் மகன்கள்" என்று அழைக்கப்பட்டனர், ஒருவேளை அர்ச். மார்க் 9:38 மற்றும்  இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகரங்களை தண்டிக்க அர்ச். லூக். 9:54 ல் "அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும் இதைக்கண்டு: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்டி சொல்லுகிறோம் என்றார்கள்.. இல் காட்டப்பட்டுள்ள வைராக்கியம் போன்ற சில குணாதிசயங்களின் காரணமாக இருக்கலாம்.

அருளப்பர் எப்போதும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்ட சீடராக அழைக்கப்படுகிறார், மேலும் பன்னிரண்டு பேரில் ஒருவரே இரட்சகரை அவரது பாடுகளின் நேரத்தில் கைவிடாது தொடர்ந்து சென்றார். நம் ஆண்டவர் அவரைத் தன் தாயின் பாதுகாவலராக ஆக்கியபோது அவர் சிலுவையின் அடியின் மரியாளோடு நின்றார். 

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 19:26-27 "சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனையும் கண்டபோது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார். பின்னும் சீஷனை நோக்கி: இதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்த சீஷன் அவளைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொண்டார். 

* 27. மெய்யான கிறீஸ்துவர்களெல்லோரும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்டு அவருக்குச் சீஷர்களாயிருக்கிறார்கள். ஆகையால் அவர் தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனை நோக்கி, இதோ! உன் தாயென்று சொல்லும்போது, தம்முடைய திரு மாதாவை எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் தாயாராக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்.

அருளப்பரின் பிற்கால வாழ்க்கை முக்கியமாக ஜெருசலேமிலும் எபேசஸிலும் கழிந்தது. ஆசியா மைனரில் பல தேவாலயங்களை நிறுவினார். அவர் நான்காவது சுவிசேஷத்தையும், 3 நிருபங்கள் மற்றும் காட்சியாகமம் புத்தகத்தையம் எழுதியுள்ளார். - இவை அனைத்தும் கி.பி 70 இல் ரோமானியர்களால் ஜெருசலேம் அழிக்கப்பட்ட பின்னர் இயற்றப்பட்டது.

அருளப்பர் எப்போதும் கழுகுடன் ஒப்பிடப் படுகிறார். ​​அவரது உயர்ந்த சிந்தனையின் மூலம், அர்ச். அருளப்பர், நாசரேத்தின் இயேசுவின் தெய்வீகத்தின் வேடபாரகர் ஆவார். வியக்க வைக்கும் நினைவாற்றலைக் கொண்ட அவர், கிறிஸ்துவின் பிரசங்கங்களை வாசகருக்கு புரியும் படியாகவும்,  தெளிவாகவும் எழுதினார். இதனாலே பிற்காலத்திலும் கூட மீண்டும் உருவாக்க முடிந்தது. 

அர்ச். அருளப்பர் 95ம் வருடம் ரோமை அரசர் Domitian உத்தரவால் ரோமையில் கைது செய்யப்பட்டார். அவரை கொதிக்கும் எண்ணெயில் தள்ளினர். ஆனால் அவருக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை. மாறாக அவர் முன்னிலும் அதிக ஆரோக்கியமுள்ளவராக வெளியே வந்தார்.


பேரரசர் பின்னர் அர்ச். அருளப்பரை பாத்மோஸ் தீவுக்கு வெளியேற்றினார், ஆனால் ஒரு வருடம் கழித்து விடுவிக்கப்பட்டார். அப்போஸ்தலர்களில் அருளப்பர் மட்டுமே மற்ற அப்போஸ்தலர்களை போல் வேதசாட்சி மரணம் அடையாமல் எபேசுஸ் நகரில் இயற்கையான மற்றும் அமைதியான மரணம் அடைந்தார். Saint Epiphanus கூற்றுப்படி அருளப்பருடைய மரணத்தின் பொது அவருக்கு வயது 96.

கிறிஸ்தவ சித்திரங்களில் (holy picture)(படம்) எப்போதும் ஒரு கழுகு இருக்கும். இது தீர்க்கதரிசி எசேக்கியேல் தீர்க்கதரிசனமாக சொல்லியது. (எசே. 1:10) "அவைகளின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன." 



English ::

December 27

APOSTLE ST. JOHN THE EVANGELIST

John, the son of Zebedee, and the brother of St. James the Great, was called to be an Apostle by our Lord in the first year of His public ministry.

📜✍🏻+ St. Mark (3, 17): "And James the son of Zebedee, and John the brother of James; and he named them Boanerges, which is, The sons of thunder:"

James and John were called by Jesus “Boanerges,” or “sons of thunder,” perhaps because of some character trait such as the zeal exemplified in Mark 9:38 and Luke 9:54, when John and James wanted to call down fire from heaven to punish the Samaritan towns that did not accept Jesus.

John is also called "beloved disciple" and the only one of the Twelve who did not forsake the Saviour in the hour of His Passion. He stood faithfully at the cross when our Lord made him the guardian of His Mother.

John's later life was passed chiefly in Jerusalem and at Ephesus. He founded many churches in Asia Minor. He wrote the fourth Gospel, the 3 Epistles, and the Book of Revelation, - all of which were composed after the destruction of Jerusalem by the Romans in 70 A.D.

Compared with an eagle by his flights of elevated contemplation, Saint John is the supreme Doctor of the Divinity of Jesus of Nazareth. Endowed with an astounding memory, he was able even in his later years, to reproduce the discourses of Christ in such a way as to make the reader experience their power and impact on their audiences as if present to hear them.

John was arrested and brought to Rome in 95 AD and he was by order of Emperor Domitian cast into a cauldron of boiling oil but came forth unhurt and more healthy.

The emperor then banished St. John  to the island of Pathmos, but was freed a year later. He is the only Apostle who died a natural death, surviving all his fellow apostles.

Saint John died in peace at Ephesus in the third year of the reign of emperor Trajan, that is, the hundredth of the Christian era, or the sixty-sixth from the crucifixion of our Lord, Saint John then being about ninety-four years of age, according to Saint Epiphanus.

     🍁🍁🍁🍁🍁🍁🍁


John the Evangelist is usually depicted as a young man. In Christian art, John is symbolically represented by an eagle, one of the creatures envisioned by Ezekiel (1:10)



சனி, 16 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17 - அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)

 கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிதத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது)

அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)


அது. 1566 ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் இறுதிநாட்கள். அன்று இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வண்ண, வண்ண அலங்கார வளைவுகள், தோரணங்கள், ஒளியை உமிழும் பல வண்ண விளக்குகள் என எங்கும் ஆடம்பரம்! துணைவேந்தர். பேராசிரியர், அறிஞர்கள். மாணவர்கள், ஊழியர் என பலதரப்பினரும் ஒருவித பதட்டத்தோடு காத்திருந்தனர். வளாகத்தில் மேடைகளும், அறிவார்ந்த சொற்பொழிவு விவாத அரங்கங்களும் தயாராயிருந்தன. அவற்றில் அமைக்கப்பட்டு பங்கேற்று தங்கள் அறிவுத்திறனை எண்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தயாராக நின்றிருந்தனர்.

யாருக்கு இந்த வரவேற்பு? ஆம்! இங்கிலாந்து தேசத்தை ஆளும் தன்னிகரற்ற அரசி முதலாம் எலிசபெத் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்ய வருகிறாள். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து தன்னை விளக்கிக் கொண்டு இங்கிலாத்தின் திருச்சபைக்கு தானே தலைவன் என்று அறிவித்து எதிர்ப்பு மதத்தை உருவாக்கிய 8ம் ஹென்றியின் மகள். அவனுக்கும் அவன் தேவதுரோகமாக மணந்து கொண்ட ஆன்போலினுக்கும் பிறந்த வாரிசுதான் இந்த அரசி! தந்தையைப் போலவே பாப்பரசரின் வேதத்தை மறுதலித்து தன்னையே இங்கிலாந்தின் ஆங்கிளிக்கன் சபையின் தலைவியாக அறிவித்து, அவள் பட்டத்திற்கும் வரும்போது வயது 25தான்! ஆனாலும் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும் என்ற கதையாக கத்தோலிக்க எதிர்ப்பைக் கடைபிடித்துவந்தாள். கத்தோலிக்க வேதமே இங்கிலாந்தில் இல்லாமல் செய்ய சூளுரைத்தாள்! திவ்விய பலிபூசை, குருக்கள், கத்தோலிக்க மத அனுசாரணம் யாவும் தடைசெய்யப்பட்டது. அப்படி மீறி இங்கிலாந்தில் குருக்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தலை உருளும், அவர்களுக்கு உதவி செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்கள். ஒப்புக்கான விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்கள். இங்கிலாந்து திருச்சபையின் தலைவி அரசியே என்று சத்திய பிரமாணம் செய்து பாப்பரசரை மறுதலிக்காதவர்கள் தேவ துரோகக் குற்றம் சூட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு வயிறு கிழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறாக கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த அவள் படித்த அறிஞர்கள், அறிவுடையோர் கல்வியாளர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்த்தவராக இப்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு வருகைதந்து, தனது கொள்கைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற ஆசித்தாள், அதன் பதிரொலியாகத்தான் இன்றைய "ஆக்ஸ் போர்ட் விஜயம்!"

தமது அரசவை உறுப்பினர்கள் புடை சூழ மகா கம்பீரமாக வந்த அரசி தமது ஆசனத்தில் அமரவும் அவளை வரவேற்கும் படலம் ஆரம்பமாயிற்று.

அங்கே முதல் வரிசையிலே, அறிவுஜீவி, அறிஞர், சிறந்த பேச்சாளர், பேராசிரியர் என்றெல்லாம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன். அரசியை வரவேற்று சொற்பொழிவாற்றும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கன்னியமாக உடையணிந்திருந்த காம்பியன் மிடுக்கான தடையில், அரசியை வணங்கிவிட்டு சொற்பொழிவு மேடையேறி தமது அறிவார்ந்த நடையில் கணீர்குரலால் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசியை வாழ்த்தி பேச அவர் கையாண்ட நாவன்மையைக் கண்டு அவையோர் ஆர்ப்பரித்து மகிழ அரசியின் முன்னோர்கள், அவனது ஆட்சி. அவளோடு வந்திருந்த அமைச்சர் பெருமக்கள் என அனைவரையும் பாராட்டி பேசிய காம்பியனின் குரல் அந்த அசங்கத்தின் கையொலியால் கரைந்துபோனது. அவரது பேச்சு திறமையில் உள்ளம் நெகிழ்ந்து மகிழ்ந்த அரசியின் முகம் பிரகாசமடைந்தது. வரவேற்புரையை நிகழ்த்தி முடித்து தலைகுனிந்து அரசியை வணங்கிய காம்பியனுக்கு வயது 26! தமது அறிவுத் திறமையால் "இங்கிலாத்தின் இரத்தினம்" என்று பட்டம் சூட்டப்பட்ட எட்மண்ட பேரொலியால் எழுந்த கரவொலியால் பெருமை பொங்க மேடையை விட்டு இறங்கினார்.

ஆனால், அதே எட்மண்ட் காம்பியன் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அரசியால் "தேசதுரோகி" என்ற பட்டம் சூட்டப்பட்டு கொடூரமாய் தூக்கிலிடப்பட்டு வேதசாட்சியடைந்தார்! ஆம். அதுவே தேவ திருவுளம்! சத்திய வேதமாம், கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசத்திற்காக அவர் இரத்தம் சிந்தினார்.

மனந்திரும்பிய காம்பியன்!

1540 -ம் லண்டன் மாநகரில் பிறந்த எட்மண்ட் காம்பியனின் தந்தை ஒரு புத்தகவியாபாரி. அதனால் தானோ என்னவோ படிப்பில் சிறந்து விளங்கினார். தமது 17வயது வயதில் அர்ச். ஜான் கல்லூரியில் ஃபெல்லோஷிப் பட்டம் பெற்றார். அவர் எவ்வளவுக்கு அறிவுத்திறமையும், நாவன்மையும் கொண்டிருந்தாரானால், அவரைச் சுற்றி எப்போதும் மாணவக் கூட்டம் இருக்கும். அவரது பேச்சை, அதில் மினிரும் அறிவுத்திறமையை சாதூரியத்தை, பழக்க வழக்கங்களை கண்டு பாவிக்கவும், அன்றைய மாணவர்களிடையே ஒருவித ஆவல் இருந்தது. அதனாலேயே அவரோடு சுற்றித் திரிந்தவர்களை "காம்பியன் கூட்டத்தார்" என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியலில், தத்துவ சாஸ்திரத்தில், லத்தீன் மொழியில் புலமை பெற்று "அசாதாரணமான மாணவன்" என்ற பெயர் பெற்றர். ஏழ்மையில் இருந்ததால் அவரது படிப்புச் செலவிற்காக சலுகையும் உதவித்தொகையும் பெற்றார்.


ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகக் கல்லூரியில் தத்துவ சாஸ்திரம் ஏற்றுக் கொண்டிருக்கும் போதுதான அங்கே அரசி எலிசபெத்தின் வருகை நிகழ்ந்தது. அவளை வரவேற்பளிக்கத் தெரிவு செய்யப்பட்ட காம்பியனும், தமது அறிவார்ந்த உரையால் அரசியின் பெருமதிப்புக்குள்ளானார். அரசவை கூட்டங்களில் உரையாற்ற அழைக்கப்பட்ட அவர் "இங்கிலாந்தின் இரத்தினம் " என்று கௌரவப்பட்டம் பெற்றார். அரசாங்க ஆதரவு அவருக்கு இருந்ததால் பிற்காலத்தில் உயர்பதவிகள் காத்திருந்தன.

எலிசபெத் அரசி ஆட்சி பொறுப்பேற்கும் வரை கத்தோலிக்கராயிருந்த இவரது குடும்பம், பாப்பரசரின் அதிகாரத்துக்கு விரோதமாக சட்டம் இயற்றப்பட்டபோது, அதை ஆதரித்து ஆங்கிலிக்கன் சபையில் சேர்ந்தது. தமது கல்வி, எதிர்காலம் கருதிய எட்மண்ட் அரசியே இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற சத்திய பிரமாணத்தை செய்தார். புராட்டஸ்டாண்ட் ஆங்கிளிக்கன் சபையில் சேர்ந்திருந்தாலும் அவரது மனதில் ஒரு கலக்கம் தோன்றியது. ஏனெனில் தத்துவ சாஸ்திரம் கற்கும்போது திருச்சபையின் பிதாபிதாக்கள் எழுதிய நூல்களையும் கற்க நேரிட்டது. அவர்களது கத்தோலிக்க விசுவாச உறுதியையும், அதுவே சத்திய வேதம் என்பதை சுட்டிக்காட்ட அவர்கள் தந்த ஆதாரங்களையும் கண்டு உள்ளம் தாக்குண்டவரானார். இந்நிலையில் தான் ஆங்கிலிக்கன் சபையில் தியோக்கன் பட்டம் பெற்றார்.

பலருடைய மதிப்பையும், நட்பையும் பெற்று உயரிய பதவியடைய வாய்ப்பிருந்த போதிலும் தான் ஆங்கிலிக்கன் சபையில் பட்டம் பெற்றது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவரது ஆன்மா சத்தியத்தை நாடி தேட அம்முயற்சியில் இறங்கிய காம்பியன் திருச்சபையின் வரலாற்றை படிக்கலானார். பல பிதாப்பிதாக்களின் நூல்களை கற்று உணரலானார்.

இப்போது அவரது மனம் தவிக்கலாயிற்று. இங்கிலாந்து நாட்டின் அர்ச். அகஸ்டின் காண்டபூரி, அர்ச். எட்வர்ட் அரசன் மற்றும் வேதசாட்சியாக மரித்த அர்ச். தாமஸ் பெக்கட் போன்றோர் சார்ந்திருந்த கத்தோலிக்க சபை உண்மையானதா? எலிசபெத் அரசியை தலைமையாகக் கொண்ட ஆங்கிளிக்கன் சபை சத்தியமான வேதமா? என்று அங்கலாய்த்த அவரது உள்ளம், அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து உண்மையான வேதம் கத்.திருச்சபைதான். தாம் இருக்கும் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் ஒரு பதிதம்! அங்கு சேசுகிறீஸ்து இல்லை! அவரது உண்மையான போதனைகளும் இல்லை. அங்கு ஆன்ம இரட்சிப்பு இல்லை. ஆம்! இரட்சிக்கப்பட சேசுகிறீஸ்துவால் ஸ்தாபிக்கப்பட்ட சத்திய வேதமான பாப்பரசரை தலைவராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையே என்பதை அறிந்து உணர்ந்து கொண்டார். கத்தோலிக்கரானார்.

தேவ அழைத்தல்

அக்காலத்தில் இங்கிலாந்து தேசத்திலிருந்து சுத்தோலிக்க வேதம் அழிக்கப்பட்டு விட்டதால், அதனை மீண்டும் ஏற்படுத்த ஆங்கில கத்தோலிக்கர்கள் விரும்பினார்கள். கத். விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருந்த எண்ணற்ற ஆங்கில நாட்டு மக்களுக்கு தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தவும் குருக்களை உருவாக்க முயற்சி நடந்தது. அதனால் பாப்பரசரின் ஆதரவில் பிரான்ஸ் நாட்டில் துவே (Douay) என்ற இடத்தில் குருமடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு சிறந்த ஆங்கில நாட்டு இளைஞர்களை குருப்பட்டத்திற்கு தயாரித்து குருக்களாக்கி இரகசியமாக இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தனர் ஆனால் அப்படி இரகசியமாக இங்கிலாந்து நாட்டுக்குள் வரும் குருக்களை இனங்கண்டு கைது செய்ய அரசியின் ஒற்றர்கள் கடற்கரையோரம் நிலை கொண்டிருந்தது வேறு விஷயம்!

அப்படிப்பட்ட குருமடத்தில் குருத்துவ பயிற்சி பெற காம்பியனின் உற்ற தோழரான கிரகோரி மார்டின் என்பவர் பிரான்ஸ் நாடு சென்றார். குருமடம் சென்ற அவர் நல்ல உள்ளம் கொண்ட காம்பியனையும் அங்கே அழைத்தார். அதுபோலவே, மற்றொருவர் அர்ச். துர்தி பார்ட் மாயின் என்பவரும் நாடு கடந்து சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து, பிடிபட்டு வேதசாட்சியம் அடைந்தார் என்பது வேறு வரலாறு. இவற்றால் உள்ளம் கவரப்பட்டு உறுதியடைத்த காம்பியன் பாப்பரசருக்கு விரோதமாக தாம் கொடுத்த சத்திய பிரமாணத்திற்கு மிகவும் மனஸ்தாபப்பட்டு வருந்த தன்னை முழுவதும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்க விரும்பினார்.

அச்சமயத்தில்தான் தம்மை ஆங்கிலிக்கன் சபையில் தீயாக்கோன் பட்டம் பெறத் தூண்டிய ரிச்சர்டு ஷென்னே (Richard Cheney) என்ற ஆயருக்கு நீண்ட கடிதம் எழுதினார். கத்தோலிக்க மணப்பான்மை கொண்ட அந்த ஆயர், ஆங்கிலிக்கன் சபையில் பிஷப்பாக இருந்தார். கத்தோலிக்கரான எட்மண்ட் காம்பியன் அவரது தவறான கொள்கையைச் சுட்டிக்காட்டி கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் "60 வயதாகிவிட்ட தாங்கள், நிலையில்லாத உடல் ஆரோக்கியத்தையும், தப்பறையின் மீது வெறுப்பையும் கத்தோலிக்கர்கள் மீது இரக்கமும் கொண்டவர். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஆயர் என்று அழைக்கப்பட்டீர்கள். உமது மௌனத்தால், நீங்கள் விரும்பாத, சாபத்துக்குரிய புராட்டஸ்டாண்ட் பிரிவினையையும் வளர்த்தீர்களே. அதனால் கிறீஸ்துவின் வரப்பிரசாதங்களை பெற முடியாது இருக்கிறீர்கள். தாங்கள் எல்லா ஜெபங்களுடையவும், பலிபூசைகளுடையவும், தேவ திரவிய அனுமானங்களுடையவும் நன்மைகளையும், பலன்களையும் இழந்து போய் இருக்கிறீர்களே! பதீதமதத்தில் என்னநான் எதிர்ப்பார்க்கிறீர்கள்? உமது வாழ்வுதான் என்ன? எதில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறீர்கள்....." என்றெல்லாம் எழுதி அவரை தப்பறையிலிருந்து மீட்டு சத்திய வேதமான கத்தோலிக்க திருச்சபைக்கு வரத் தூண்டினார். ஆனால் அந்தோ! ஆயர் ஷென்னே எந்த முடிவையும் எடுக்காமல் மரணமடைந்தார்!

கத்தோலிக்கத் திருச்சபையில் உட்பட்ட எட்மண்ட காம்பியனின் வாழ்வு தலைகீழாக மாறிப் போனது!

எட்மண்ட் காம்பியன் கத்தோலிக்கராக மனத்திரும்பியதும் தாம்பெரிதும் நேசிந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். அயர்லாந்துக்குச் சென்று அங்கே இரண்டு வருடம் தமது சுத்தோலிக்க நண்பரது குடும்பத்தினரோடு வாழ்ந்தார். அந்த நாட்களில் உத்தம கத்தோலிக்க ஜீவியத்தில் திளைத்து புண்ணியத்தில் உயர்ந்தார். அக்குடும்பத்தின் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவந்த எட்மண்ட், டப்ளின் நகரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு கத்தோலிக்க நாடான அயர்லாந்தின் வரலாறு ஒன்றையும் எழுதி அதற்குப் புகழ் சேர்த்தார்.

பின்னர் தமது அழைத்தல் குருவாவதே என்பதை உணர்ந்தவராக துவேக்குச் (Douay) சென்று அங்கே குரு மடத்தில் சேர்ந்தார். "உப தியாக்கோன் பட்டம்" பெற்ற பின் உரோமைக்குச் சென்று அங்கே சேசு சபையில் சேர்ந்தார். பிராக் நகருக்கு நவசந்தியாச வாழ்வுக்காக அனுப்பப்பட்ட எட்மண்ட் காம்பியன் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 1578 செப்டம்பர் மாதத்தில் குருப்பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில் ஜெர்மன் நாட்டில் புராட்டஸ்டாண்டாரிடையே சேசு சபையினர் ஆற்றிய அரிய காரியங்களையும், அதனால் விளைந்த நன்மைகளையும் அறிந்த பாப்பரசர் 13-ம் கிரகோரியார் சேசு சபையினரை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக முடிவு செய்தார். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் எட்மண்ட் காம்பியனும் ஒருவராக இருந்தார்.

இங்கிலாந்துக்கான பயணத்தை துவக்கும் முந்தின நாள் இரவில் அவர் தங்கியிருந்த அறையின் சுவரில் “எட்மண்ட் காம்பியன் வேதசாட்சி" என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். தேவ ஏவுதலால் ஒரு குருவானவர் அப்படி எழுதியிருந்த அந்த வாக்கு நம் புனிதரின் வாழ்வில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது!

1580-ம் ஆண்டு ரோமையிலிருத்து ஜெனிவா நகர் வழியாக இங்கிலாந்து வந்த அவர்கள், திருச்சபையின் எதிரிகளால் அடையாளம் காணமுடியாத வகையில் மாறுவேடம் பூண்டு சென்றனர். அங்கே, இங்கிலாந்தில் கத்தோலிக்க விசுவாசம் நசிந்துபோய் அழித்துகொண்டிகுந்தது! கிறீஸ்தவர்கள் கலாபனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்கள். "குருக்களே இங்கிலாந்து நாட்டில் இல்லை!” என்ற நிலை ஏற்பட தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்ற முடியாத அவலம் ஏற்பட்டது. சில குருக்கள் மாறுவேடம் பூண்டு விசுவாசிகளின் வீடுகளில் தங்கி, அரசாங்க வீரர்கள் தேடிவந்தபோது பிடிபடாமல் தப்பிக்க பதுங்கு குழிகளில் தங்கினர். இதற்காக ஒவ்வொரு கத் இல்லத்திலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. குருக்கள் அவற்றில் மறைந்து வாழ்த்து குறிப்பிட்ட நாட்களில் அங்கே கூடும் விசுவாசிகளுக்கு திவ்விய பலிபூசை, பிரசங்கம் போன்றவற்றை நிகழ்த்தி ஞான வாழ்வில் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை பிடிக்கவென்று ஒற்றர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் "குரு வேட்டையாளர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் அர்ச். எட்மண்ட் காம்பியன் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே தமது நோக்கத்தை குறிப்பிட்டு கத்தோலிக்க சத்தியங்களை ஆதரித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "எனது அருமை நாட்டு மக்களின் ஞான ஆபத்துக்களையும், தீமைகளையும் மற்றும் அவர்களது ஆங்கார அறியாமையையும் அகற்றி அவர்களைக் காப்பதுவே தமது நோக்கம்" என்று தெரிவித்திருந்தார். காம்பியனும் அவரது சக குருவானவரும் இங்கிலாந்துக்குள் ஊடுருவி விட்டனர் என்ற தகவல் எப்படியோ சுங்கத்துறையினருக்குத் தெரியவர, துறைமுகம் எங்கும் ஒற்றர்களின் செயல்பாடு அதிகரித்திருந்தது. ஆனாலும் அவர்களது கண்களுக்குத் தப்பி பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்து மக்களுக்கு விசுவாச சத்தியங்களைப் போதித்து, கத்தோலிக்க விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வந்தனர். அநேகர் மனத்திரும்பினார்கள். இதைப்பற்றி சேசுசபை தலைவருக்கு காம்பியன் எழுதிய கடிதத்தில் "...நான் நாள்தோறும் அங்குமிங்கும் போய் பணியாற்றி வருகிறேன். அறுவடை உண்மையாகவே தாராளமாயிருக்கிறது. திருச்சபையின் எதிரிகள் கையில் அகப்பட வெகுநாள் பிடிக்காது. தான் என்னை மறைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் உடை எனக்கே சிரிப்பூட்டுகிறது. பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது..." என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இங்கிலாத்தில் மறைவாக அப்போஸ்தல அலுவவில் ஈடுபட்டுவந்த எட்மண்ட் காம்பியன் புராட்டஸ்டாண்ட் பதிதத்தைக் தாக்கி, கண்டித்து “பத்துக் காரணங்கள்" என்ற அரிய நூலை லத்தீன் மொழியில் எழுதினார். அது. எதிரிகளால் பிடிபடும் கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தைப் பற்றி விசாரிக்கும்போது கூற வேண்டிய பதில்கள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. சத்திய வேதத்தை ஆதரித்து ஆங்கிளிக்கள் புராட்டஸ்டாண்ட் பதிதத்தை கண்டிப்பானவராகவும் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூல் 1587 ஜூன் 27-ம் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆலய இருக்கைகளில் 400 பிரதிகள் வைக்கப்பட்டன. அதோடு ஐரோப்பிய நாடுகளிலும்கூட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 48 பதிப்புகளில் வெளியிடப்பட்டது. இது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே, அந்த நூலை எழுதிய எட்மண்ட் காம்பியனை பிடிப்பதற்கு ஒற்றர்களையும், குரு வேட்டைக்காரர்களையும் முழுவீச்சுடன் இறக்கிவிட்டது.

நூல் வெளியிடப்பட்டதும் வேறு எங்காவது மறைவாக சிலகாலம் போய்விடுவது நலம் பயக்கும் என்று எண்ணிய காம்பியனும் அவரது சகக்குருவானவரும் நார்ஃபக் (Norfolk) நகருக்குப் பயணமானார்கள். வழியில் Lyford Grange என்ற ஊர் வரவே அங்கே சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். ஏனெனில் அவ்வூர் செல்வந்தரான திரு.யாட் (Yate) என்பவர் தமது சுத். விசுவாசத்திற்காக லண்டனில் சிறை தண்டனை அனுபவித்தவர். அவரது வயது முதிர்ந்த தாய் தன் வீட்டில் நிரந்தரமாக 2 குருக்களையும் சில சுன்னியர்களையும் தங்கவைத்து பராமரித்து வந்தாள். எனவே அங்கே தங்கி அவரை பாராட்டி விசுவாசிகளை உற்சாகப்படுத்திவிட்டுச் செல்ல முடிவெடுத்தார். புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன் சுவாமி மாறுவேடத்தில் இரகசியமாக வந்தாலும் அவரது வருகை சுற்றுவட்டாரத்திலுள்ள கத். விசுவாசிகளிடையே பரவியது. அரசின் ஒற்றர்களுக்கும் இச்செய்தி எட்டவே அக்குடும்பத்தின் முன்னான் வேலையாளான ஜார்ஜ் எலியாட் என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.

காம்பியன் பட்ட வாதனை!

பிடிபட்ட சங், எட்மண்ட் காம்பியன் சுவாமி லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு அதன் வீதிகளில் பகிரங்கமாக இழுத்துச் செல்லப்பட்டார். முன்னொரு காலத்தில் இதே விதிகளில் சிறந்த கல்வியாளர், இங்கிலாந்தின் இரத்தினம் என்றெல்லாம் புகழப்பட்ட அவர் இன்று தாம் கொண்ட சத்திய விசுவாசத்திற்காக கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டு லண்டன் டவர் சிறையில் ஒரு சிறு இருட்டு அறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தேம்ஸ் நதிக்கரைக்கு அப்பால் உள்ள லெய்செஸ்டர் மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எலிசபெத் ராணி வருகை தந்தபோது தாம் நிகழ்த்திய வரவேற்புரையை பாராட்டி தமக்கு ஆதரவாளராக மாறிப்போன அமைச்சர் வெய்செஸ்டர் பிரபுவின் (Earl of Leicester) இல்லம் தான் அது! அங்கே தன் முன்னால் நிற்கும் நபரைக் கண்டு வியந்துபோன எட்மண்ட் காம்பியன் தன் கண்ணை தான் நம்பாது திகைத்தார். ஆம்! அவர் முன்பு நாட்டையாளும் எலிசபெத் அரசியே நின்றிருந்தான். ஒரு காலத்தில் தம்மால் “இங்கிலாந்தின் இரத்தினம்" என்று அழைக்கப்பட்டவர் இன்று தனக்கு எதிராக, தமது வேதத்திற்காக கைதியாக நிற்பதைக் கண்டு முகம் சுளித்தாள் அரசி. ஆனாலும் மிகவும் நயமாக அவரைப் பாராட்டியவள், பிடிவாதத்தை விடுத்து அரசியான தன்னை திருச்சபையின் தலைவியாக ஏற்றுக்கொள்ளும்படியாகவும், அபத்த கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக மறுத்துவிடும்படியாக கேட்டாள். அப்படி அவர் செய்தால், ஆங்கிலிக்கன் சபையில் மிக உயர்ந்த அந்தஸ்து அவருக்காகக் காத்திருக்கிறது என்ற ஆசை வார்த்தைகள் கூறினாள். ஆனால் அரசியின் எந்த வார்த்தைகளுக்கும் பணியாமல் தமது விசுவாசத்தில் உறுதியாக நின்ற காம்பியனைக் கண்டு வியந்தவனாக அவரைவிட்டு அகன்றாள்.

ஐந்து நாட்களிலும் அவர் தமது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை 3 தடவைகள் வாதைக் கருளியால் துன்புறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி இரும்பு சட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக இழுத்துக் கொடுமைப்படுத்தப்பட்டார். கை கால்களின் மூட்டுகளும் எலும்புகளும் பிய்ந்து நெட்டுருகிப்போய் கொடூர வேதனையளித்தது. அத்தனையையும் தாங்கிக் கொண்ட எட்மண்ட் காம்பியன் தேவ உதவிக்காக மன்றாடினார் தமது அனைத்து வேதனைகளையும் இங்கிலாந்து தேசம் மீண்டும் சத்திய வேதத்திற்கு வர ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்தார்.

இத்தகைய வாதை நடந்துகொண்டிருக்கும் போதே நான்கு தடவைகள் வேத தர்க்க விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டார். தான் இருந்த நிலையிலும் அவர்களுக்கு தக்கப் பதில் தந்து முறியடித்தார். தம்மைத் துன்புறுத்தியவர்களிடமும் வெகு சாந்தத்தோடு அவர் நடந்துகொண்ட முறையைக் கண்டு வியந்துபோன பிலிப்பு ஹோவர்ட் (Philip Howard) மற்றும்  (Earl of Arundal) மனந்திரும்பினார்கள்.

மீண்டும் வாதைக் கருவியின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காம்பியன் சுவாமி மீது குற்றப்படுத்த ஒன்றும் கிடைக்காததால் அவர் இங்கிலாந்தில் புரட்சி ஒன்றை உண்டாக்கும் கருத்தோடு நாட்டிற்குள் வந்ததாக கதைக் கட்டினார்கள். ஆனால் அதனை தமது வாதத்தால் தூளாக்கிய காம்பியன் "நாங்கள் எலிசபெத் அரசிக்கு விரோதமாக எக்குற்றமும் செய்ததில்லை. உங்களுக்கு குற்றமாகத் தெரிவது நாங்கள் எங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பது மட்டுமே!” என்று எடுத்துக் கூறினார்.

தமக்கு மரண தண்டனை விதிக்கப்படும் முன்பாக அங்கிருந்த நீதிபதிகளை நோக்கி, "எங்களை இப்போது கண்டனத்துக்கு உள்ளாக்கும் நீங்கள், உங்கள் முன்னோர்கள் அனைவரையுமே கண்டனத்துக்குள்ளாக்குகிறீர்கள். அந்த முன்னோர்களின் தகுதியற்ற வாரிசுகளாக இப்போதுள்ள உங்களால் நாங்கள் கண்டனத்துக்குள்ளாவது எங்களுக்கு மகிழ்ச்சியும் மகிமையுமேயாகும். சர்வேசுரன் எப்போதும் இருக்கிறார். உங்கள் வாரிசுகளும் இப்போது நீங்கள் செய்வதைப் பார்ப்பார்கள். உங்கள் மீது அவர்களும் சர்வேசுரனும் தரும் தீர்ப்பு ஒருநாளும் தவறாது உண்மையாகவேயிருக்கும்" என்று கூறினார். காம்பியன் பிறரைப் போல் அல்லாமல் அரசியின் தனிப்பட்ட அரச அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு மரண தீர்ப்பு வழங்கப்பட்டார். அப்போது அங்கே வந்த, தன்னைக் காட்டிக்கொடுத்த எலியட் மற்றும் ஹாப்டன் என்பவர்கள் புனிதரின் அவலநிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர். அவர்களை மன்னித்து விட்டதாக புனிதர் அறிவித்தார்.

கொலையாளி தன் வேலையைச் செய்வதற்கு முன்பாக, எட்மண்ட் காம்பியன் சுற்றியிருந்த மக்களைப் பார்த்து, "உங்கள் அரசியும், என் அரசியுமான அம்மையாருக்காக வேண்டுகிறேன். நீடித்த ஆயுளும், எல்லா நலனும் அவர்களுக்கு உண்டாவதாக" என்று ஜெபித்தார். அவரும் அவரோடு தீர்ப்பிடப்பட்ட குருக்களும் வழக்கம்போல் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டார்கள். முதலில் தூக்கிலிடப்பட்டு, உடல் கீழே விழத்தாட்டப் பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு, உடல் துண்டுதுண்டாக பிரிக்கப்பட்டார்கள்.

St. Henry Walpole
அப்போது வெட்டப்பட்ட புனித எட்மண்ட காம்பியனின் இரத்தத்துளி ஒன்று அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்றி வால்ப்போல் என்ற இளைஞன் மீது சிதறி விழுந்தது. அதன் பலனாய் அவரும் பின்னாளில் சேசு சபையில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் வேதசாட்சிய வரம் பெற்றார்! 

வேதசாட்சியான எட்மண்ட் காம்பியனுக்கு 1970-ம் ஆண்டில் அர்ச்சியசிஷ்டப் பட்டம் வழங்கப்பட்டது!

அர்ச். எட்மண்ட் காம்பியனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!



Download Tamil Christmas songs


திங்கள், 15 ஆகஸ்ட், 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 12 அர்ச்.பீட்டர் ஆர்மங்கல்

 

அர்ச்.பீட்டர் ஆர்மங்கல் 

திருநாள் ஏப்ரல் 27ம் தேதி 


இஸ்பானியா நாட்டில், டார்ரகன் அதி மேற்றிராசனத்தில், குவார்டியா டெல்ஸ் பிராட்ஸ் என்ற ஓர் குக்கிராமத்தில், 1238ம்வருடம் பிறந்தார். ஆரகன், மற்றும் காஸ்டில் அரசர்கள், பார்சலோனா மற்றும் ஊர்கல் இளவரசர்களின் வம்சாவளியைச் சேர்ந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகுந்த கவனத்துடன் கத்தோலிக்கக் கல்வி அளிக்கப்பட்ட போதிலும், இளம் வயதில், பீட்டர், கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், தீமையில் உழன்று திரிந்தார். அரசு அதிகாரிகளால் தேடப்பட்ட ஓர் அக்கிரம் கொள்ளைக்கூட்டத்துடன், சேர்ந்துகொண்டு, மலைப்பகுதியில் தங்கியிருந்தார். விரைவிலேயே, கொள்ளைக்கூட்டத்திற்குத் தலைவனானார். அவரது தந்தை, ஆர்னால்டு ஆர்மங்கல், தன் மகனின் கெட்ட நடத்தையைக் கண்டு பொறுமை இழந்தவராக, வலேன்ஷியாவிற்கு குடிபெயர்ந்து சென்றார். வலேன்ஷியா சிற்றரசு, அப்போது தான், ஜெயிம் அரசரால், மூர் இனத்தவரிடமிருந்து, ஒரு போரில் மீட்கப்பட்டது. இந்த அரசர், ஒரு முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்சு அரசரை சந்திக்கும்படி, மோன்ட்பெல்லியருக்கு செல்ல நேரிட்டது. அரசர் தனது பயணத்தினுடைய பாதுகாப்பிற்காக, ஆர்னால்டுவை தனக்கு முன்பாக, மற்ற காவல் அதிகாரிகளுடன் செல்லும்படி பணித்தார்; ஏனெனில், ஆர்னால்டு, அரசரின் பாதுகாவல் அதிகாரியாக இருந்தார். மலைப்பகுதியில் கள்வர் கூட்டத்தினருடைய தாக்குதல்களிலிருந்து, அரசரைக் காப்பாற்றுவதற்காக, காவல் படையினரை, ஆர்னால்டு, விழிப்புடன் நடத்திச் சென்றார். பிரனீஸ் மலைப்பகுதியில் வசித்து வந்த கொள்ளையர்கள், பயணிகளை கொள்ளையடித்து, அவர்களைக் கொல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பயணத்தின்போது, ஒரு ஆபத்தான கட்டத்தில், அரசரைக் கொள்ளைக் கூட்டத்தினர் சூழ்ந்தனர். இதைக்கண்ட தலைமைப் பாதுகாவலர் ஆர்னால்டு, தனது காவல் படையினருடன் அங்கு விரைந்துச் சென்று, அதிரடியாகக் கொள்ளையரைத் தாக்கிச் சிதறடித்தார். கொள்ளையர் தலைவனுடன், நேருக்கு நேரான தாக்குதலில், ஆர்னால்டு ஈடுபட்டார். அப்போது, இருவரும் ஒருவர் ஒருவரை வாளால் தாக்கினர்; தந்தையும் மகனும் நேரடிச் சண்டையில் ஈடுபட்டனர்; யாரைத் தாக்குகிறோம் என்பதை உணர்ந்ததும், இருவரும் மன சஞ்சலத்துடன் போரிட்டனர். உச்சக் கட்ட சண்டையின் போது, மிகுந்த மனஸ்தாபத்துடன், கொள்ளையரின் தலைவனாகிய பீட்டர், தந்தையின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து அழுதபடி, தன் வாளை கீழே வைத்து, சரணடைந்தார்; தன் இருதயத்துடன் கூட, தந்தையிடம், பீட்டர் முழுமையாக சரணடைந்தார்.

குழப்பமும், வெட்கமும் நிரம்பியவராக, பீட்டர், தன் கடந்த கால பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டார்; அவற்றைப் பரிகரிப்பதற்காக, தபசு செய்தார்; சில நாட்களில், பார்சலோனாவிலிருந்த இரக்கத்தின் சந்நியாசிகளுடைய ஓர் மடத்தில் சந்நியாசியாக சேர்ந்தார். அப்போது, அவர், தன் பாவங்களால், சர்வேசுரனுக்கு ஏற்பட்ட நிந்தைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற ஓர் மாபெரும் ஆவலினால் மேற்கொள்ளப்பட்டார்; மகமதியர்களால், சிறை பிடிக்கப்பட்ட கத்தோலிக்கக் கிறீஸ்துவர்களை விடுவிப்பதற்காகவே, அர்ச்.பீட்டர் நொலாஸ் கோ ஏற்படுத்திய துறவற சபையில் ஒரு துறவியாக சேரத் தீர்மானித்தார். அவர் எவ்வித ஆவலுடன் தன் இருதய ஆவலையும், அதைத் தீர்மானிப்பதற்கான அத்தாட்சிகளையும் கூறினாரென்றால், அதைக்கேட்ட அதிபர், வண. வில்லியம் தே பாஸ் (அர்ச்.பீட்டர் நொலாஸ்கோவிற்குன் அடுத்ததாக, சபையை நிர்வகித்த அதிபர்) தடையேதுமில்லாமல், உடனே, பீட்டரைத் தனது சபையில் ஏற்றுக்கொண்டார். இதுவரை, மூர்க்கத்தனத்திற்கும், வன்முறைக்கும் தன் ஆளுமையையும் திறமையையும், தேக பலத்தையும் கையளித்திருந்த பீட்டர், தற்போது, துறவற ஜீவியத்தில், அதற்கு முற்றிலும் நேர்மாறாக, தன்னையே ஒறுத்து, உடனுக்குடன் ஞான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவதிலும், சபை ஒழுங்கை நுட்பமாகவும், கவனமாகவும் அனுசரிப்பதிலும் ஈடுபட்டார். தன் பழைய பாவ நாட்டங்களை, சரீர ஒறுத்தல்களால், தபசுமுயற்சிகளால், இடைவிடாத ஜெபங்களால், எவ்வாறு, மேற்கொள்வது, என்பதையும், நாளடைவில், அறிந்து கொண்டார். நவசந்நியாச பயிற்சி முடிவதற்குள், தன் சரீரத்தையும் மனதையும், முழுமையாக மேற்கொண்டு, அவற்றை தேவசித்தத்திற்கும், உத்தமமான அறிவிற்கும், கீழ்ப்படியச் செய்வதில் வெற்றியடைந்தார். கிறீஸ்துவர்களை, மகமதியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான முக்கிய அலுவலில், 8 வருடங்கள் அயராமல் உழைத்தார்.

மகமதியரின் ஆதிக்கத்திலிருந்த இஸ்பானிய பிராந்தியங்களான கிரானடா மற்றும் முர்சியா பகுதிகளுக்குச் சென்று, அங்கிருந்த கிறீஸ்துவ அடிமைகளை மீட்கும் அலுவலில் ஈடுபட்டுவந்தார்.. 


அர்ச். பீட்டர் நொலாஸ்கோ ஏற்படுத்திய உபகார மாதா சபையில், சேர்ந்த பீட்டர் ஆர்மங்கல், மகமதியர்களால் சிறைபிடிக்கப்பட்ட கிறீஸ்துவர்களை மீட்கும் அலுவலில் தீவிரமாக உழைத்து வந்தார். ஆப்ரிக்கா சென்று, மகமதியருக்கு தன்னையே அடிமையாக விற்று, அந்த மீட்புத் தொகையைக் கொண்டு, அடிமைகளாக இருக்கும் திரளான கிறீஸ்துவர்களை விடுவிக்க வேண்டுமென்பதே, அவருடைய இருதயத்தின் மாபெரும் ஆவலாக இருந்தது. அவருடைய ஆவலை நிறைவேற்றும் விதமாக விரைவிலேயே, ஒரு கப்பல் ஆப்ரிக்காக் கண்டத்திற்குப் புறப்பட்டது. அதில், சங்.வில்லியம் ஃபுளோரன்டினோ, என்ற சக துறவியுடன், அவர், பயணம் செய்தார். ஆப்ரிக்காவின் பூஜியா நகரை அடைந்தனர்.

இரு துறவியரும், உடனடியாக, அந்நகரில் அடிமையாயிருந்த 119 கிறீஸ்துவர்களை, மீட்புத்தொகையைக் கொடுத்து மீட்டனர்; எந்தத் தடையுமில்லாமல், கிறீஸ்துவர்களைத் துறைமுகத்திற்குக் கூட்டி வந்தனர்; பயணத்தைத் துவக்குவதற்கு முன், இன்னொரு சிறையில், 18 சிறுவர்கள், இருப்பதைப்பற்றி, பீட்டர் அறிந்தார்; அச்சிறுவர்கள், காட்டுமிராண்டிக ளான மகமதியரின் கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்பட்டு, கிறீஸ்துவ வேதத்தையே, மறுதலிக்கும் அபாயத்திலிருப்பதையும் அறிந்தார்; அவர்களை மீட்பதற்கான மீட்புத்தொகையாக, தன்னையே அடிமையாக ஏற்றுக்கொள்ளும்படி, பீட்டர், அக்கொடிய மகமதியரிடம் தன்னையே கையளித்தார். ஏனெனில், அவரிடம், சிறுவர்களை மீட்பதற்காக, போதிய பணம் இல்லாமலிருந்தது பீட்டரை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பதற்கான தொகையை மகமதியர், அவரிடம் அறிவித்தனர்; அக்குறிப்பிட்ட காலத்திற்குள், மீட்புத் தொகையை செலுத்தாவிட்டால், அவர் இன்னும் அதிகக் கடுமையான தண்டனைகள் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இதைப் பற்றியறிந்த சக துறவியான வில்லியம், விடுவிக்கப்பட்ட கிறீஸ்துவர்களுடன் சொந்த நாட்டிற்குத் திரும்பினார். சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியரான பீட்டரை, அவர் மகா பரிசுத்த தேவமாதாவின் மீது கொண்டிருந்த விசேஷ பக்தியுடையவும், அவர்களின் வல்லமை மிகுந்த பாதுகாப்பின் மீது கொண்டிருந்த அசையாத நம்பிக்கையினுடையவும், அத்தாட்சியாக திகழும்படியாக, தேவபராமரிப்பு இனிவரும் ஒரு முக்கியமான நிகழ்விற்கு இட்டுச் சென்றது:

அடிமையாக இருந்தபோது, பீட்டர், அஞ்ஞான மகமதியரிடையே, வியக்கத்தக்க புதுமைகள் நிறைந்த பிறர்சிநேகக் காரியங்களில் ஈடுபட்டார். கேட்பவர் மனதில் தேவசிநேகத்தை பற்றியெரியச் செய்யும் விதமாக, அவர், ஆண்டவர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்; அநேக புதுமைகள் செய்தார்; இவற்றையெல்லாம் கண்ட அநேக மகமதியர் மனந்திரும்பினர்; பீட்டரை மீட்பதற்கான காலக்கெடு முடிந்தது. மீட்புத் தொகை வந்து சேரவில்லை. மகமதியர் உடனே, அவரை சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு உணவு அளிக்கப்படவில்லை. கொடிய சித்ரவதைகளால், அவரை உபாதித்தனர்; ஆனால், சர்வேசுரன், புதுமையாக, தமது பிரமாணிக்கமுள்ள ஊழியருக்கு, சம்மனசுகள் மூலம், புதுமையாக உணவை அளித்தார். முரட்டுமூர் இன மகமதியர், இடைவிடாமல், தொடர்ந்து, அவரைக் கொடுமை செய்து, அலுத்து சோர்வடைந்தனர்; அர்ச்சிஷ்டவரோ புதுமையாக, அவ்வளவு கொடுமைகளுக்கும் மத்தியில் பொலிவுடன் திகழ்ந்தார். இதைக் கண்டதும், அவரை இரகசியமாகக் கொல்வதற்கு திட்டமிட்டனர்.

தேவதூஷணம் கூறினார் என்றும், தங்களுடைய மதத்தை ஏற்படுத்திய மகமதை அவ தூறாக பேசினார் என்றும், கிறீஸ்துவ ஐரோப்பிய அரசர்களுடைய ஒற்றனாக மகமதிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும், மகமதியர், அர்ச்சிஷ்டவர் மீது குற்றம் சுமத்தினர். மகமதிய நீதிபதி, சிறைக்கைதியான அர்ச். பீட்டர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் எல்லாம் உண்மை என்று கூறி, அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்கான தீர்ப்பை அளித்தான். இதைக் கேட்டதும், சற்றும் பயப்படாமல், அர்ச். பீட்டர், தேவமாதாவிடம் , மிகுந்த பக்தி பற்றுதலுடன், தன்னையே ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொண்டார்; தேவமாதாவிடம், தன் முழு நம்பிக்கை யையும் வைத்தார். திரளான முரட்டு மகமதியரின் கைகளில் பிடிப்பட்டிருக்கும் அர்ச். பீட்டரால் தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு, ஒன்றும் செய்யமுடியாமல் போனது. திரளான முரட்டு மகமதியக் கூட்டத்திற்கு முன், இவர் ஒன்றுமில்லாத ஒரு தூசி போல காணப்பட்டார்.

ஆனால், அதே சமயம், உண்மையில், இவர், தேவமாதாவின் பேரில் ஆழ்ந்த பக்தியுடையவும், நம்பிக்கையுடையவும், பற்றியெரியும் தீப்பந்தமாகத் திகழ்ந்தார். மகமதியரின் அநீதமான தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. அர்ச்சிஷ்டவரை தூக்கிலிட்டுக் கொன்றனர். தூக்கிலிடப்பட்டு இறந்து போயிருந்த அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, பறவைகளுக்கு இரையாகப் போட திட்டமிட்டிருந்த கொடிய மூர் இனத்தினரான மகமதியர், அதை யாரும் தொடக்கூடாது என்று எச்சரித்திருந்ததால், கிறீஸ்துவர்கள் யாரும், அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, தூக்கு மரத்திலிருந்து எடுக்காமலிருந்தனர்; அர்ச்சிஷ்டவரின் சரீரமும் அப்படியே தூக்கு மரத்திலேயே, ஆறு நாட்களாக தொங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம், அர்ச்சிஷ்டவருடைய சக துறவி, சங். வில்லியம், மீட்புத் தொகையுடன் வந்து சேர்ந்தார். அர்ச்சிஷ்டவர் அநியாயமாக தூக்கிலிடப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், மிகுந்த துயரத்துடன், விடுவிக்கப்பட்ட வேறு சில கிறீஸ்துவ கைதிகளுடன், வில்லியம் தூக்கு மரத்தை நோக்கிச் சென்றார்; அர்ச்சிஷ்டவரின் சரீரம் ஆறு நாட்களுக்குப் பிறகும் கூட, சிதைந்து போகாமல், புதுப்பொலிவுடன் உயிருடன் இருப்பது போல் காட்சியளித்தது; அவருடைய சரீரத்திலிருந்து, பரலோக நறுமணம் புதுமையாக வெளியேறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

அப்போது, கூடியிருந்த சகலரும் அதிசயிக்க, அர்ச்சிஷ்டவர், தூக்குமரத்தில் தொங்கியபடியே, வாய்திறந்து புதுமையாகப் பேசினார்:"பரலோக இராக்கினியாகிய தேவமாதா தாமே, என் உயிரை, இந்த மகா பயங்கரமான கொடூரமான சூழலில், பாதுகாத்துக் காப்பாற்றி வந்தார்கள்; தாம் செய்த அதிசயமான புதுமைகளிலேயே, எப்போதும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கும்படியான ஓர் மிகப் பெரிய புதுமையாக, இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்கள், என்று கூறினார். இந்தப் புதுமையைக் கண்டு, பேராச்சரியத்தில் மூழ்கிய மகமதியரில் பலர் மனந்திரும்பி, கத்தோலிக்கராயினர்.

பார்சலோனா நகர மக்கள், இப்பேரதிசயமான புதுமையைப் பற்றிய செய்தியை அறிந்து, எவராலும் வெல்லமுடியாதவரும் நமதாண்டவருடைய வேதசாட்சியுமான அர்ச்சிஷ்டவரின் வருகைக்காக, மிகுந்த ஆர்வத்துடன், காத்திருந்தனர். துறைமுகத்தைக் கப்பல் அடைந்ததும், கூடியிருந்த திரளான நகர மக்கள் எல்லோரும், விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அர்ச்சிஷ்டவரை வரவேற்றனர்; பிறகு, அவருடன் கூட, அவருடைய மடத்தை அடையும் வரை, ஊர்வலமாக, சர்வேசுரனும், தேவமாதாவும் தங்களுக்குச் செய்து வரும் பேராச்சரியமிக்க நன்மைகளுக்கு நன்றி செலுத்தியபடியேச் சென்றனர். மடத்திலிருந்த சக துறவியர், அர்ச்.பீட்டரிடம், நிகழ்ந்த புதுமையைப் பற்றிக் கூறும்படிக் கேட்டனர். அதற்கு, அவர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். இறுதியில், அதிபர் சுவாமியார், கீழ்ப்படிதலின் பேரில், நடந்ததைக் கூறும்படிக் கட்டளையிட்டார். உடனே, சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியர், பின்வருமாறு பதில் கூறினார்: "சர்வேசுரனுடைய மாதாவும், நம்முடைய பரிசுத்த மாதாவுமான மகா பரிசுத்த கன்னிகையானவர்கள், தமது மகா பரிசுத்த திவ்யகுமாரனிடம், என்னுடைய உயிரைப் பாதுகாக்கும்படியான விசேஷ வரத்தைக் கேட்டார்கள். அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றதும், உன்னத பரலோக இராக்கினியானவர்கள், தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கி விடாமலிருப்பதற்காக, தம்முடைய மகா பரிசுத்தக் கரங்களினால், என் சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள்" என்று கூறினார்.

அர்ச். பீட்டர், மோட்ச இராக்கினி, தான் தொங்கிக் கொண்டிருந்தத் தூக்குக் கயிறு, தனது கழுத்தை இறுக்கி விடாமலிக்கும்படி, தனது சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்று கூறிய போது, எத்தகைய இனிமையான உணர்வைத் தன் இருதயத்தில் உணர்ந்தாரென்றால், கூடியிருந்த யாவரும் வியந்து பாராட்டும் விதமாக, ஓர் பரவசத்திற்குள் மூழ்கினார். இந்நிகழ்விலிருந்து, அர்ச். பீட்டர் கழுத்தில், தூக்குக் கயிறு இறுக்கிய அச்சு பதிந்திருந்தது; தூக்குக் கயிற்றினால் திருகப்பட்ட கழுத்தையுடையவராகவே, எஞ்சிய தன் வாழ்நாள் முழுவதும், காணப்பட்டார். அவருடைய நிறமும் வெளிறிய நிறமாக மாறியிருந்தது. இவை இரண்டும், அவருடைய வாழ்வில், தேவமாதா நிகழ்த்திய மாபெரும் புதுமையின் அதிகாரப்பூர்வமான அடையாளங்களாக திகழ்ந்தன. பரலோக இராக்கினியின் மடத்தில், அர்ச்சிஷ்டவர் தன் வாழ்வின் மீதி நாட்களை செலவழித்தார். இம்மடத்தில், இவருடைய ஜீவியம், விரத்தத்துவ புண்ணியங்களுடையவும், சம்மனசுகளின் இராக்கினியான தேவமாதாவுடன் நிகழ்த்திய உரையாடல்களுடையவும், இடைவிடாமல் நீடித்த தொடர் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. தேவமாதாவின் பேரில் மிகுந்த மேரையும், சிநேக மிக்க கனிவும், உத்தமமான பக்தியும் கொண்ட அர்ச்சிஷ்டவர்களுக்குள், இவரும் ஒரு முக்கிய அர்ச்சிஷ்டவராக விளங்கினார், என்பதை, மோட்ச இராக்கினியுடன் அவர் செய்த உரையாடல்கள், உறுதிப்படுத்துகின்றன.




தூக்குக் கயிற்றில், தேவமாதாவின் பரிசுத்தத்திருக்கரங்களினால் தாங்கப்பட்டபடி, தொங்கிய அந்த பாக்கியமான நாட்களை, அர்ச்சிஷ்டவர், வாழ்நாள் முழுவதும், எப்போதும் மகிழ்வுடன் சிந்திப்பார்; புதுமையைப் பற்றி, சக துறவியரிடம் கூற வேண்டிய சந்தர்ப்பங்களில், "என் பிரிய சகோதரர்களே! என்னை நம்புங்கள். நான் உயிருடன் இருந்தேன், என்பதை என்னால் நம்ப முடியவில்லை. துாக்கு மரத்தில், இறந்துவிட்டேன் என்று கருதப்பட்டு, நான் தொங்கிக்கொண்டி ருந்த அந்த மிகச் சில ஆனால், மகா பாக்கியமான நாட்கள் மட்டுமே, என் ஞாபகத்தில் இருக்கின்றன. அதை நான் நம்புகிறனே", என்று கூறுவார்.

ஒரு மிகக் கொடிய நோயினால், பாதிக்கப்பட்டார்; தன் மரணத்தின் நாளை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தினார். 1304ம் வருடம், ஏப்ரல் 27ம் தேதியன்று, தனது 66வது வயதில் பாக்கியமாக ஆண்டவரில் மரித்தார். அர்ச்சிஷ்டவருடைய சரீரம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, 3 ஆண்களுக்கும் 4 பெண்களுக்கும் நோயிலிருந்து புதுமையாக சுகம் கிடைத்த அற்புதத்தை, ஆண்டவர் நிகழ்த்தி, அர்ச்சிஷ்டவரை மகிமைப்படுத்தினார். 1686ம் வருடம், மார்ச் 28ம் தேதியன்று, 11ம் இன்னசென்ட் பாப்பரசர், இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுத்தார்; 18ம் நூற்றாண்டில், 14ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர், அர்ச். பீட்டர் ஆர்மங்கலை, வேதசாட்சிகளின் பட்டியலில் சேர்த்தார். 1936ம் வருடம் வரை இவருடைய சரீரம் அழியாத சரீரமாகத் திகழ்ந்தது. 1936ல்ஸ்பெயினில் நிகழ்ந்த கலகத்தின் போது, கம்யூனிஸ்டுகள், அர்ச்சிஷ்டவருடைய அழியாத சரீரத்தை எரித்து சாம்பலாக்கினர். அங்கிருந்த சில பக்தியுள்ள கத்தோலிக்க இளைஞர்கள், இந்த சாம்பலை அருளிக்கமாக, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததும், மறுபடியும் அர்ச்சிஷ்டவருடைய இந்த அருளிக்கங்கள், வீடுகளிலிருந்து, தேவாலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொது வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. 


புதன், 8 ஜூன், 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37


சகோ. ரெஜினால்டுவைப் பற்றி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் வேறு என்னவெல்லாமோ கேள்விப்பட்டிருந்தார்கள். பாரீஸ் பல்கலைக்கழகம் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்பதால், அதன் பேராசிரியாக பொறுப்பேற்றிருந்த ரெஜினால்டு, இசை, இலக்கியம், கவிதை, சிற்பம், கலையில் சிறந்த ஞானத்தைப் பெற்றிருந்த மற்ற இளைஞர்களையும் தமது இல்லத்திலேயே கூட்டி, வருங்கால உலகிற்கான சீரிய திட்டங்களை தீட்டுவார். "அவ்வாறு உலகின் உயரிய அந்தஸ்தில் தம்மை நிறுத்தி வைத்திருந்த பேராசியரியர் ரெஜினால்டு, இப்பொழுது, ஜெபத்தையும் தவத்தையும் கடைபிடிக்கும் ஒரு துறவற சந்நியாசியாக எதற்காக மாறவேண்டும்?" என்று தங்களையே வினவிக்கொண்டிருந்த அந்த மாணவக் கூட்டத்தினரை பிரசங்கத் தொட்டியில் இருந்து கொண்டு பார்த்தார், சகோ. ரெஜினால்டு. அவர்களைக் கண்டதும், அவர்களுடைய மனக்குழப்பத்தையும் உணர்ந்தார். உடனே அவர்களை நோக்கி, "சகோதரரே! நான் இம்மடத்தில் சேர்ந்ததற்கான ஒரே காரணம் : நான் இங்கு சிநேகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் நான் அர்ச்.சாமிநாத சபைத் துறவியானேன்" என்று கூறினார். 

1219ம் வருடம் ஜனவரி மாதம். சகோ.ரெஜினால்டு வந்து இரண்டே மாதங்களில், பொலோஞா அர்ச். சாமிநாதருடைய துறவறமடத்தில் சேர்வதற்காக, தினமும் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் கூட்டம் வந்து, மடத்தை, முற்றுகையிட்டது. துறவிகளின் ஞானதியான பிரசங்கங்களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கோவில் பற்றாத அளவிற்கு, அதிகரிக்கலாயிற்று. மக்கள் கூட்டத்திற்கேற்றபடி தேவாலயத்தை விஸ்தாரப்படுத்துவதும், மடத்தில் சேரும் நவசந்நியாசிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியால், மடத்தைப் பெரிதாகக் கட்டுவதும், அதற்கு தேவைான அதிகப்படியான நிலத்தை வாங்குவதும், துறவற மடத்தின் நிர்வாகத்தின் அத்தியாவசிய அலுவலாயிற்று. சகோ. ரெஜினால்டு பிரசங்கத்தொட்டியில் ஒருமுறை மோட்சகாரியங்களைப் பற்றிப் போதிக்கக் கேட்கும் ஒரு வெதுவெதுப்பான ஆத்துமம், எவ்வளவுக்கு தேவசிநேகத்தினால் பற்றியெரியும் என்றால், அந்த ஆத்துமம் தனது ஜீவிய முறையில் திருப்தியடையாமல், ஆண்டவருடைய எல்லையில்லா சிநேகத்திற்காக ஏதாவது ஊழியம் செய்ய ஆசிக்கும் ' அதுவும் உடனே செய்ய வேண்டும் என்று தன்னை நிர்ப்பந்திக்கும். அதன்படி பொலோஞா நகரத்திற்கு சகோ. ரெஜினால்டு வந்த சில தினங்களில், அந்நகர பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாங்களும் கறுப்பு வெற்ளை துறவற அங்கியை அணியும் தவச்சபையாராக தான், தங்களுடைய ஜீவியத்தின் இறுதி நாட்களை செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்தனர். இவ்வாறாக, சகோ. ரெஜினால்டு, பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும், பேராசிரியர்களையும், தம்பால் ஈர்க்கும் காந்தம் போல, திகழ்ந்தார். 

டயானா என்ற 17 வயது சிறுமி , சகோ. ரெஜினால்டுவின் ஞான தியான பிரசங்கங்களைக் கேட்க வந்தாள். அவள் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண். ஆயினும், சகோ. ரெஜினால்டுவின் ஞானமிக்க பிரசங்கங்களினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவளாக, சகோதரரைப் பின்தொடரலானாள். அவளும் தேவசிநேகத்தினால் உந்தப்பட்டவளாக, தேவ அழைத்தலைப் பெற்றவளாக, தானும் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசித்தாள். அர்ச். சாமிநாதருடைய துறவற சபையில் உட்படும்படி, பெரிதும் விரும்பினாள். "நான் அந்த உன்னத கன்னியாஸ்திரிகளுடைய சபையில் உட்படுவதற்கு முற்றிலும் தகுதியற்றவள்" என்று முதன் முதலாக சகோ. ரெஜினால்டுவை சந்தித்தபோது கூறினாள். அப்போது அப்பெண்ணின் கண்களை அவர் உற்று நோக்கினார். பிறகு அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் : "உன் ஆன்ம குருவானவானவர் யார்?'' "யாருமில்லை. சகோ. ரெஜினால்டு. எனக்கு இதுவரை ஞானகாரியங்களில் ஒருபோதும் யாதொரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால், உங்களுடைய தியானபிரசங்கங்களைக் கேட்டதிலிருந்து, என்னிலே மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன '' "இப்பொழுது, மரணத்தைப் பற்றிய சிந்தனை உன் இருதயத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது தானே?" "ஆம். சகோ. ரெஜினால்டு. விரைவாக ஓடி மறைந்து விடும் இவ்வுலக ஜீவியத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். அதற்கு ஏற்ற உத்தம கத்தோலிக்க ஜீவியத்தைக் கைப்பற்றவும் விரும்புகிறேன். ஆனாலும் என்ன செய்வதென அறியாமலிருக்கிறேன்". 

இதைக் கேட்ட ரெஜினால்டு, புன்னகையுடன் அவளிடம், "நீ ஒவ்வொரு வாரமும் இவ்வாறு என்னை இங்கு சந்திக்க வா. இதைப்பற்றி நான் உனக்கு விளக்குவேன். யாருக்குத் தெரியும்? ஒருவேளை ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர், நல்ல சக ஊழியராக ஜீவிக்கக் கூடும்!'' என்றார். தனது ஜீவியத்தில் மிகுந்த அக்கறையுடனும் நேசத்துடனும் இருக்கும் சகோ. ரெஜினால்டுவினால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டவளாக டயானா , அர்ச். சாமிநாத சபைத் துறவிகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தமது தாத்தாவான பீட்டர் டி லவல்லோ என்பவரிடம் கூறினாள். அவரும் தமது குடும்பத்துக்குச் சொந்தமான அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தையும், அதை ஒட்டி இருந்த ஒரு சிறு நிலத்தையும், சாமிநாதருடைய மடத்திற்கு சொந்தமாக்கினார். இந்த தேவாலயம், பொலோஞா நகரத்துக்கு வெளியே உள்ள, திராட்சைத் தோட்டத்துக்கு அருகில் இருந்தது. மிகத்தனிமையான இவ்விடம் சபைத் துறவிகளின் தியானத்திற்கு, ஏற்ற இடமாக திகழ்ந்தது. அங்கிருந்து பொலோஞா மடத்தின் அலுவல்களை, சபைத் துறவிகள் எளிதாக நிறைவேற்ற ஏதுவான இடமாக , இருந்தது. சகோ. ரெஜினால்டு வந்தபிறகு அதிகரித்த , நவசந்நியாசிகளுக்குத் தேவையான பெரிய மடத்தைக் கட்டுவதற்கான திட்டமிடும் அலுவல்களுக்கும் ஏற்ற இடமாக இருந்தது.

புதிய மடத்திற்கு, துறவிகள் சென்ற 3ம் மாதத்தில், 1219ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபையின் அதிபர் அர்ச்.சாமிநாதர், தமது பிரான்சு ஸ்பெயின் நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பொலோஞா நகருக்கு வந்தார். மடத்திற்கு வந்தவுடன், சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். தமது தலைமையில் இதுவரை பொலோஞா நகரில் இந்தக் குறுகிய காலத்தில், வெகு திறமையாகவும், ஞானமுடனும், அநேக ஆத்துமங்களை சிநேகிக்கும்படியாக, ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்திட்ட சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அர்ச். யாகப்பர் மடத்திற்குக் கூட்டிச் செல்லப்போவதாக, சபையின் அதிபர் சுவாமியார் கூறினார். இதை அறிய வந்த சிறுமி டயானா , தமது ஆன்ம வழிகாட்டியான சகோ. ரெஜினால்டுவை இவ்வளவு சீக்கிரமாக இழக்க நேரிடுகிறதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்தாள். உடனே அதிபர் சுவாமியாரிடம் இதைப் பற்றி முறையிட சென்றாள்.