Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 21 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 15 - அர்ச். சிலுவை அருளப்பர்

 அர்ச். சிலுவை அருளப்பர்

அர்ச். சிலுவை அருளப்பர், ஏழைகளாகிய கொன்சாலோ, கேட்டலினா தம்பதியருக்கு 1542, ஜூன் 24 அன்று பிறந்தார். அவருக்கு மூன்று வயதானபோது அவரது தந்தையும், இரண்டு வருடம் கழித்து, வறுமையால் அவரது அண்ணனும் இறந்தார்கள். இதனால் அவரது தாய் வேலை தேடி அவரோடும், மற்றொரு சகோதரனான பிரான்சிஸ்கோவோடும் முதலில் ஆரவாலோ விலும், அதன்பின் மெதினா தெல்காம்போவிலும் குடியேறினாள்.

மெதினாவில் பெரும்பாலும் அநாதைக் குழந்தைகள் படித்த ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் அருளப்பர் அடிப்படையான, பெரும்பாலும் வேதம் சார்ந்த கல்வி பெற்றார். இங்கே ஓரளவு உணவும், உடையும், இருப்பிடமும் அவருக்குக் கிடைத்தன. 1563ல் அவர் கார்மெல் சபையில் சேர்ந்து அர்ச். மத்தியாஸின் அருளப்பர் என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடத்தில் கார்மெல் துறவியாக முதல் வார்த்தைப்பாடு தந்த அவர், சாலமான்கா பல்கலைக் கழகத்தில் வேதசாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் பயின்றார். இதன்பின் ஃப்ரே லூயித லியோன் என்பவரிடம் அவர் வேதாகமப் பாடம் கற்றார்.


அர்ச். அவிலா தெரேசம்மாளின் சீர்திருத்தப் பணியில் இணைதல்

1567ல் குருப்பட்டம் பெற்ற அவரைத் தனி வாழ்வுப் பிரியம், மவுன, காட்சி தியான வாழ்வு ஆகியவற்றைக் கொண்டு, அதிகக் கண்டிப்புள்ள கர்த்தூசிய சபை ஈர்த்தது. 1567 செப்டம்பரில் அவர் ஸாலமான்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்றார். அங்கே தனது இரண்டாவது புதிய மடத்தைத் தொடங்க வந்திருந்த கார்மெல் கன்னிகையான அவிலா தெரேசம்மாளை அவர் சந்தித்தார். அவள் 1432ல் பாப்பரசர் யூஜீனால் தளர்த்தப்பட்டிருந்த "சபையின் தொடக்க கால விதித் தொகுப்பை" அனுசரிக்கும் வாழ்வைப் புதுப்பிப்பதன் மூலம் கார்மெல் சபையின் பரிசுத்த தனத்தை மீண்டும் கொண்டு வர முயன்றுகொண்டிருந்தாள். இந்நிலையில் அவள் தன் திட்டங் களைப் பற்றி அருளப்பரிடம் பேசினாள்.

பண்டைய விதிகளின்படி, கார்மெல் சபையினர் ஒரு நாளின் பெருமளவு நேரத்தைப் பரிசுத்த கட்டளை ஜெபம் சொல்வதிலும், கற்பதிலும், ஞான வாசகங்களிலும், பூசை நிறைவேற்றுவதிலும் காண்பதிலும், தனி வாழ்விலும் செலவிடவும், துறவற குருக்கள் மடத்தைச் சுற்றியிருந்த மக்களுக்கு சுவிசேஷம் போதிக்கவும், இறைச்சியை முழுமையாக விலக்கவும், திருச் சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் முதல் உயிர்ப்புத் திருநாள் வரை நீண்ட கால உபவாசம் கடைப் பிடிக்கவும், நீண்ட மவுன வேளைகள், குறிப்பாக இரவு ஜெபம் முதல் காலை ஜெபம் வரை அனுசரிக்கப்படவும், எளிய, முரடான, குட்டையான அங்கிகள் பயன்படுத்தப்படவும் கால்களை மூடாத காலணிகள் பயன்படுத்தப்படவும் வேண்டியிருந்தது. இதனால் ஒரு வகையில் இந்தச் சபை காலணிகள் அணியாத சபை என்றும் அழைக்கப்பட்டது.

வால்லடோலிட் நகரத்தில் சிறிது காலம் இருந்தபின், அருளப்பர் துருவேலோ என்னுமிடத் திற்குச் சென்று, புனிதையின் கடுந்தவக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு புதிய கார்மெல் துறவற குருக்கள் சபையை 28.11.1568 அன்று ஸ்தாபித்தார். அன்றே புனிதர் தம் பெயரை சிலுவை அருளப்பர் என்று மாற்றிக்கொண்டார். இந்த மடம் சிறியதாக இருந்ததால், அது அருகிலிருந்த மென்செராத அபாயோ என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. துறவற குருக்களின் கல்விப் பயிற்சிக்காக பாஸ்ட்ரானா என்ற ஊரில் புதிய மடம் ஒன்றை ஸ்தாபித்து, புனிதர் அங்கே குடியேறினார்.

1572ல், அவிலாவுக்குச் சென்ற அவர் தெரேசாவுக்கும், அங்கிருந்த 130 கன்னியருக்கும். ஏரான மான விசுவாசிகளுக்கும் ஆன்ம குருவானார். 1574ல் தெரேசாவுடன் ஸ்ெகோவியாவுக்குச் சென்று அங்கு ஒரு புதிய மடத்தைத் தொடங்கியபின், அவிலாவுக்குத் திரும்பி வந்தார். 1577 வாக்கில், தாம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, சிலுவையில் அறையுண்ட கிறீஸ்து நாதர் அவருக்குக் காட்சி தந்தார். 1641ல் இக்காட்சியைப் புனிதர் ஒரு சித்திரமாக வரைந்தார்.

1575-77 வாக்கில் ஸ்பானிய கார்மெல் துறவற குருக்களுக்குள் தெரேசா மற்றும் அருளப்பரின் கடுந்தவ வாழ்வை அனுசரிப்பதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. 1566 முதல் காஸ்டைலுக்கு ஒருவரும், அந்தலூசியாவுக்கு ஒருவருமாக, அர்ச், சாமிநாதர் சபைத் துறவிகள் இருவர் கார்மெல் மடங்களின்மீது அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். துறவிகளை மடம் மாற்றுவது, மடத்துத் தலைவர்களையும் கூட அவர்களது பதவிகளிலிருந்து விடுவிப்பது போன்ற அதிகாரங்கள் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. காஸ்டைலுக்கு பெத்ரோ பர்னாண்டஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தலூசியாவின் அதிகாரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ வர்காஸ் என்பவர் ஆவார். இவர் மாற்றங்களை விரும்பிய துறவிகளுக்கு ஆதரவாக இருந்ததால் மீண்டும் பிரச்சினைகள் எழ, இதன் விளைவாக, இத்தாலியிலுள்ள பியாசென்ஸாவில் 1576 மே மாதத்தில் கார்மெல் சபையின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆயினும் குழப்பம் கை மீறிப் போகவே, தெரேசம்மாளின் காலணிகள் அணியாத துறவிகளின் மடங்களை அடியோடு மூடி விட உத்தரவிடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் தெரேசம்மாளின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவா யிருந்ததால், இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவில்லை. மேலும் பாப்பரசரின் திருத்தூதரும், பதுவையின் ஆயருமான நிக்கோலோ ஆர்மனேட்டோ என்பவரின் ஆதரவும் அவளுக்கு இருந்தது. இவர் தெரேசம்மாளின் வேண்டுகோளின் பேரில், வர்காஸை நீக்கி விட்டு, ஆல்கலா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குருவான எரோனிமோ க்ராஸியன் என்பவரை அந்தலூசியாவின் அதிகாரியாக்கினார். இந்த குரு தாமே தெரேசம்மாளின் சபையைச் சேர்ந்தவ ராசு இருந்தார். 1576ல் மெதினாவில் பாரம்பரிய கார்மெல் துறவிகளால் கைதுசெய்யப்பட்ட அருளப்பர், திருத்தூதரின் தலையீட்டால், விரைவில் விடுவிக்கப்பட்டார். ஆனால் 1577 ஜூன் 18

அன்று ஆர்மனேட்டோ இறந்தபோது, அருளப்பர் பாதுகாப்பின்றி விடப்பட சீர்திருத்தவாதிகளின் கை ஓங்கியது. 1577 டிசம்பர் 2 அன்று, சீர்திருத்தத்தை எதிர்த்து கார்மெல் துறவிகளின் கூட்டம் ஒன்று அவிலாவில் அருளப்பர் தங்கியிருந்த இல்லத்தில் புகுந்து அவரைச் சிறை செய்தது. ஏற்கெனவே சீர்திருத்தத்திற்கு எதிராயிருந்த சபைத் தலைவர்கள் புனிதரை அவிலாவை விட்டு வெளியேறி. தம்முடைய முதல் மடத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களை விட அதிக அதிகாரமுள்ள ஸ்பெயின் திருத்தூதர் தம் சீர்திருத்தத்தை அங்கீகரித்திருந்தார் என்ற அடிப்படையில் புனிதர் இதை ஏற்க மறுத்திருந்தார். கைது செய்யப்பட்ட அருளப்பர், அச்சமயத்தில் 40 துறவிகளோடு காஸ்டைலில் முன்னணி மடமாக இருந்த டொலேடோ கார்மெல் மடத்திற்கு அவரைக் கொண்டு சென்றார்கள்.

அருளப்பரின் வாதங்களை மீறி, அவர் சபைத் தலைவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வில்லை என்று குற்றஞ்சாட்டி, துறவிகளின் "நீதிமன்றம்" அவரைச் சிறையில் அடைத்தது. ஒரு மடத்தில் சிறை வைக்கப்பட்ட அவர் குறைந்தது வாரம் ஒரு முறை கசைகளால் அடிக்கப்படுவது போன்ற சித்திரவதைகளை அனுபவித்தார்; பத்தடிக்கு ஆறடியுள்ள ஒரு மிகச் சிறிய அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அறையில் விளக்கு ஏதும் இல்லாததால், அறைச் சுவரிலிருந்த ஒரு துளை வழியாக வந்த வெளிச்சத்தில்தான் அவரால் கட்டளை ஜெபத்தைச் சொல்ல முடிந்தது. மாற்ற உடையில்லை. தண்ணீரில்லை, அப்பமும், உப்பு மீன் துண்டுகளும் தேவைக்கும் குறைவாகவே கிடைத்தன.

இச்சமயத்தில்தான் அவர் புகழ்பெற்ற ஞான சங்கீதம் என்னும் கவிதைகளை எழுதினார். தேவையான காகிதத்தை அறைக்குக் காவலாயிருந்த துறவி இரகசியமாகக் கொண்டு வந்து தந்தார். தம் அறைக்கு அடுத்த அறையிலிருந்த ஒரு சிறு ஜன்னல் வழியாக 1578 ஆகஸ்ட் மாதத்தில், அதாவது எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர் தப்பித்துச் சென்றார்.

ஆறு வார மருத்துவ உதவி பெற்றபின் அவர் தம் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். 1578 அக்டோபரில், பாதணிகள் அணியாத கார்மெல் சபையினர் ஆல்மாடாவரில் நடத்திய கூட்டத் தில் அவர் பங்குபெற்றார். மற்ற கார்மெல் துறவியரின் எதிர்ப்பின் விளைவாக, முறைப்படி கார்மெல் சபையினரிடமிருந்து பிரிந்து வாழ தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் பாப்பரச ரிடம் விண்ணப்பித்தார்கள். இந்தக் கூட்டத்தில் அருளப்பர் எல் கல்வாரியோ என்ற மடத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்தபோது, தம் "ஞான சங்கீதத்திற்கு" உரை எழுதினார்.

1579-ல் அவர் அந்தலூஸியாவின் பாதணிகள் அணியாத துறவிகளுக்கான புனித பேசில் கல்லூரியின் அதிபராகும்படி பேஸா என்ற நகரத்திற்கு மாற்றப்பட்டார். இப்பதவியில் 1582 வரை இருந்தார். 1580ஆம் ஆண்டில், கார்மெல் சபையினரிடையே நிலவிய பிரச்சினைக்குத் தீர்வு பிறந்தது. ஜூன் 22 அன்று பாப்பரசர் 13ஆம் கிரகோரியார் புதிதாய்ச் சீர்திருத்தப்பட்ட பாதணிகள் அணியாத கார்மெல் சபையினரை அதிகாரபூர்வமாகத் தனிச் சபையாக ஆக்கினார். 1581 மார்ச் 3 அன்று ஆல்கலாவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவர் சபைத் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1581 நவம்பரில் சேசுவின் ஆனா என்னும் சகோதரி க்ரானடாவில் ஒரு மடத்தை ஸ்தாபிக்க உதவும்படி அருளப்பர் தெரேசாவால் அங்கே அனுப்பப்பட்டார். சகோதரி ஆனா 1582 ஜனவரி யில் அங்கே போய்ச் சேர்ந்து மடத்தை ஸ்தாபிக்க, ஆலாம்பிராவில் இருந்த மடத்தில் அருளப்பர் தங்கியிருந்தார். 1582-ல் அந்த மடத்தில் அதிபராகவும் ஆனார். அவர் அங்கிருந்தபோது, அந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தெரேசம்மாள் மரணமடைந்ததை அவர் அறிந்துகொண்டார்.

1585-ல் அவர் அந்தலூசியாவின் மாகாண அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் எல்லா மடங்களையும் சந்திக்கும்படி அதிகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில், இந்தப் பகுதியில் அவர் ஏழு ஆண்கள் துறவற மடங்களை நிறுவினார். இச்சமயத்தில் அவர் சுமார் 25,000 கி.மீ. தூரம் பயணம் செய்தார் என்று மதிப்பிடப்படுகிறது.

ஜூன் 1588-ல் அவர் சபை அதிபர் சுவாமி நிக்கோலஸ் டோரியா என்பவரின் மூன்றாம் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, காஸ்டைலின் ஸெகோவியாவுக்குத் திரும்பி வந்தார். ஆனால் டோரியா சபையில் ஏற்படுத்த விரும்பிய மாற்றங்களை அவர் விரும்பாததால் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, லா பெனுவேலா என்ற மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே நோயுற்று, சிகிச்சைக்காக உபேலாவிலிருந்த மடத்திற்குச் சென்றார். அங்கே உடல் நிலை மோசமாகி, 1591, டிசம்பர் 14 அன்று அக்கி என்னும் தோல் நோயால் அவர் மரணமடைந்தார்.

1675, ஜனவரி 25 அன்று பாப்பரசர் பத்தாம் கிளமெண்ட் அவருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கினார். 1726 டிசம்பர் 27 அன்று பாப்பரசர் 13-ஆம் ஆசீர்வாதப்பர் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனிதர் எழுதிய முக்கியமான புத்தகங்கள்: "ஞான சங்கீதம், ""ஆன்மாவின் இருண்ட இரவு." "கார்மெல் மலையேற்றம்"ஆகியவையாகும்.


திருநாள்: நவம்பர் 24.


Source: மாதா பரிகார மலர்-/- நவம்பர் - டிசம்பர், 2023



சனி, 18 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 14 - அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ (Margaret Clitherow)


அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ





 அன்று 1586 மார்ச் 25-ம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். 30 வயதே நிரம்பிய குடும்பத் தலைவியான மார்க்கரேட் கிளித்தேரோ என்ற பெண்மணி தண்டனை

நிறைவேற்றப்படும் இடத்திற்கு மிகவும் அமைதியாக ஆனால் மிகுந்த உற்சாகத்துடன் வந்தாள். அவளது நிர்மலமான முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிய, சற்று நின்றவள் குனிந்து தனது காலுறைகளையும், காலணிகளையும் கழற்றி வெகு தொலைவில் நின்றுகொண்டிருந்த தனது மகள் அன்னாளிடம் கொடுத்து அனுப்பினாள். அவளும் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை அவள் உள்ளத்தில் எழவே, மகளுக்கு அந்தப் பரிசு!

இரவு வெகு நேரம் விழித்திருந்து பாப்பரசருக்காகவும், கர்தினால்மார், ஆயர்கள், குருக்கள், ஏன் தன்னை சாவுக்குத் தீர்ப்பிட்ட இங்கிலாந்து அரசி எலிசபெத்திற்காகவும் மன்றாடியிருந்தவளது உள்ளம் ஜெபித்துக்கொண்டே இருந்தது. அங்கே மேடையில் இருந்த நகர அதிகாரி அவளது குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்கத் தூண்டவே, "இல்லை, இல்லை அதிகாரியவர்களே!, நான் எனது ஆண்டவர் சேசுவின் அன்பிற்காக சாகப் போகிறேன்" என்று பதிலளித்தாள்.

பின்னர் அவள் கூர்மையான கற்பாறையில் கிடத்தப்பட அவளது கரங்கள் சிலுவை அடையாளம் போல விரிக்கப்பட்டு இரு கம்பங்களில் கட்டப்பட, அவள் உடலில் ஒரு இரும்பு கதவு போடப்பட்டது. அந்த கதவு அவளது தேகத்தை மறைத்துக் கொள்ள அதன் மீது பெரும் பாரச் சுமைகள் போடப்பட்டன! அந்த பாரச் சுமையோடு இரும்பு கதவு அவளை நசுக்க அந்த இளம் பெண்ணின் மெலிந்த, மெல்லிய தேகம் துடித்தது! அவள் அனுபவிக்கும் அந்த வேதனை கைகளின் அசைவுகளில் தெரிய, எந்த விதமான அழுகையோ, அவலக் குரலோ எழவில்லை. 15 நிமிடங்கள் அந்த பாரத்தால் நசுக்கப்பட்ட அவளது கரங்கள் "சேசு! சேசு! என் மீது இரக்கம் வையும்" என்ற இறுதி மன்றாட்டோடு மெல்ல மெல்ல அசைவின்றி விரைத்துப் போயின! ஆம்! அந்த பெண்மணி மரணமடைந்து விட்டாள். உடல் நசுக்கப்பட்டு வேதசாட்சியமடைந்து விட்டாள்!

அவள் செய்த குற்றம் என்ன? கத்தோலிக்கக் குருக்களை தனது இல்லத்தில் பாதுகாத்து காப்பாற்றியது! கத்தோலிக்க பூசையைக் கண்டது!! 

யார் அந்த வேதசாட்சி? அவள் தான் அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ, "யார்க் நகரின் முத்து" என்று போற்றப்படும் மார்க்கரேட் 1556-ம் வருடம் யார்க் நகர ஷெரிப்பின் தலைவரான தாமஸ் மிடில்டோன் என்பவரின் மகளாகப் பிறந்தவர். புராட்டஸ்டாண்ட் மதத்தைச் சார்ந்த அவள் தமது 15-வது வயதில் செல்வந்தரான ஜான் கிளித்தேரோவுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டாள். இயல்பிலேயே புண்ணியவதியாகத் திகழ்ந்த அவள் திருமணமான 3 வருடங்களில் கணவனின் உத்தரவோடு சத்திய வேதத்திற்கு மனந்திரும்பினாள்.

அக்காலத்தில் 8-ம் ஹென்றியால் ஏற்படுத்தப்பட்ட புராட்டஸ்டாண்ட் பதிதம் நிலைகொண்டிருந்தது. தற்போது ஆட்சி புரிந்த முதலாம் எலிசபெத்தும் கொடூரமாக கத்தோலிக்கத் திருச்சபையை துன்புறுத்தி வந்தாள். எவ்வளவுக்கென்றால், 1585-ல் இங்கிலாந்து நாட்டில் கத்தோலிக்கக் குருக்கள் எவருக்கும் இருப்பிடமோ, வேறு எந்த உதவியும் செய்யக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தையே பிரகடனப்படுத்தினாள். ஏற்கனவே கத்தோலிக்கப் பூசையில் பங்கேற்கவோ. கத்தோலிக்கப் பிரசுரங்களைக் கொண்டிருக்கவோ கூடாது என்ற கடுமையான தடை இருப்பதால் இங்கிலாந்தில் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் துன்புற்றனர். வெளிப்படையாக திவ்விய பலிபூசை நிறைவேற்ற குருக்களும், விசுவாசிகளும் அஞ்சினர். அதற்கான பதுங்கும் இடத்தைத் தேடவேண்டி வந்தது.

கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்த மார்க்கரேட் தனது இல்லத்திலேயே பதுங்கும் அறைகளை அமைத்து அங்கே குருக்களைப் பாதுகாத்து, அவர்கள் நிறைவேற்றும் பூசையைக் கண்டுவந்தாள். அவள் எந்தவிதமான அச்சத்திற்கும் இடம் தராமல் "சர்வேசுரனின் வரப்பிரசாதத்தால் எவ்வளவு குருக்கள் வரமுடியுமோ, அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடவுளின் கத்தோலிக்க ஊழியத்துக்கு எவ்வளவு முடியுமோ அனைத்தையும் செய்வேன்" என்று அடிக்கடிக் கூறுவாள்.

அவளது கணவன் தனது மனைவியின் அனைத்து காரியங்களிலும் உறுதுணையாக இருந்தார். தங்களது பிள்ளைகளான ஹென்றி, வில்லியம், மற்றும் அன்னாளை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கவும் விரும்பினர். இதற்காக மூத்த மகன் ஹென்றியை கத்தோலிக்க பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்க அனுப்பி வைத்தாள். அதுவே அரசு அதிகாரிகள் அவள் மீது சந்தேகம் கொள்ள காரணமாயிற்று. அதனால் அவளது இல்லம் படை வீரர்களால் சோதிக்கப்படவே, பூசை புத்தகங்களும், ஆயத்தங்களும். பூசை மந்திரங்களும் இறுதியாக குருக்களின் பதுங்கு அறைகளும் கண்டுபிடிக்கப்படவே மார்க்கரேட் சிறைபிடிக்கப்பட்டாள்.

சொந்தப் பிள்ளைகள் சாட்சியாக்கப்பட்டதால் கொலை பாவம் அவர்கள் மீது விழ விரும்பாத மார்க்கரேட் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து, தான் செய்த காரியங்களுக்கு நியாயம் கற்பித்தாள். தனது கத்தோலிக்க விசுவாசத்தை வீரத்தோடு அறிக்கை யிட்டாள். அவள் விசாரணைக்கு மறுத்ததால் இங்கிலாந்து சட்டப்படி அவள் நசுக்கப்பட்டு மரணமடைய தீர்ப்பிடப்பட்டாள். அதனைக் கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்த அவள் ஓ! சர்வேசுரா உமக்கு நன்றி. இத்தகைய நல்ல மரணத்திற்கு நான் தகுதியானவள் அல்ல" என்று கூறினாள்.

மரண தண்டனை பெறும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தாலும் அவள் கொண்ட கத்தோலிக்க விசுவாசத்துக்காக நசுக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

அவள் கொல்லப்படும் போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. மரண தண்டனை நிறைவேற்றும் சமயத்தில் சற்று நேரம் ஜெபிக்க விரும்பிய அவளிடம் அருகே இருந்த புராட்டஸ்டாண்ட் போதகன் "மார்க்கரேட் நானும் உன்னோடு ஜெபிக்கிறேன்" என்று கூறினான். அதற்கு உடனே "இல்லை, இல்லை என்னோடு நீ ஜெபிக்க முடியாது. பதிதர்களோடு விசுவாசிக்குப் பங்கில்லை. நான் உமக்காக ஜெபிக்கிறேன். நமது அரசி எலிசபெத்துக்காக அவள் மனந்திரும்பி, கத்தோலிக்க மதத்திற்கு வரவும், திருச்சபைக்கு சுயாதீனம் கொடுக்கவும் ஜெபிக்கிறேன்" என்று மறுப்புத் தெரிவித்தவள். சற்று நேரம் ஜெபித்தபின் தன்னையே கொலைஞர்களிடம் கையளித்தாள். கூரியக் கற்பாறையில் கிடத்தி, உடல் மேல் கனமான இரும்புக் கதவை போட்டு அதில் அதிகமான பாரத்தை வைத்து உடல் நசுக்கப்பட்டு அவள் வேதசாட்சியத்தைத் தழுவினாள்.

அவளது குழந்தைகளான ஹென்றி, வில்லியம் ஆகியோர் கத்தோலிக்கக் குருவாகவும், ஒரே மகள் அன்னாள் பிரான்ஸ் நாட்டில் லூவேன் நகர் அர்ச், உர்சுலா கன்னியர் சபையில் சேர்ந்தாள்.

பாப்பரசர் 6-ம் சின்னப்பர் 1970, அக்டோபர் 25-ம் நாளன்று அவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் வழங்கினார்.

அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


source: Salve Regina - March 2008 issue.


To Read more about saints in Tamil - Click Here