Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 15 - Assumption of Our Lady - தேவமாதாவின்‌ மோட்சாரோபனத் திருநாள்

 

ஆகஸ்டு 15ம் தேதி

மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத் திருநாள்


 

            இந்த திருநாள், மகா பரிசுத்த திருநாட்களிலேயே மிகப் பழமையான திருநாள்; அப்போஸ்தலர்கள் காலந்தொட்டே கொண்டாடப்பட்டு வரும் திருநாள். மோட்சாரோபனம் என்கிற அடையாள வார்த்தை,  மகா பரிசுக்த தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்குள் நுழைந்த பரமஇரகசியமான திருநிகழ்வை நிச்சயப்படுத்துகிறது! திருச்சபை, ஏன், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தைத் திருநாளாகக் கொண்டாடுகிறது?  ஏனெனில், இம்மகா ஆடம்பரமானதும், மகிமைமிக்கதுமான தேவ மாதாவின் மோட்சாரோபனத்தின் பரமஇரகசியத் திருநிகழ்வின் திரு நாள், மகா பரிசுத்த தேவமாதாவைக் கொண்டாடுவதுடன் கூட,திருச்சபையின் எதிர்காலத்தையும் சுட்டிக்காண்பிக்கிறது!

            மகா பரிசுத்த திவ்ய கன்னிமாமரி, நம் திருச்சபையினுடைய சுரூபப்படமாகவும், பரிசுத்த உருவப்படமாகவும் திகழ்கிறார்கள்! நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய திருச்சபை, மகா பரிசுத்த கன்னிமாமரியினுடைய திருச்சபையாகத் திகழ்கிறது! மகா பரிசுத்த தேவமாதா என்ன செய்தார்களோ, அவற்றையே செய்யும்படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்! மகா பரிசுத்த தேவமாதா, எங்கே சென்றார்களோ, அங்கே அவர்களைப் பின்பற்றிச் செல்வதற்கு, நாமும் அழைக் கப்பட்டிருக்கிறோம். மகா பரிசுத்த தேவமாதாவிற்கு, நமதாண்டவர் என்ன செய்தாரோ, அதை, தமது திருச்சபைக்கும் இறுதிநாளில் செய்வார். வண.ஆதிர்தா மேரி கன்னியாஸ்திரிக்கு, அளிக்கப்பட்ட பரலோக வெளிப்படுத்துதல்களுக்கேற்ப, மகா பரிசுத்த தேவமாதா, பெரிய வெள்ளிக்கிழமைக்குப் பிறகு, 21 வருடங்களும், 4 மாதங்களும்,19 நாட்களும், பூமியில் ஜீவித்தார்கள்.

            மோட்சாரோபன நாளன்று, மகா பரிசுத்த தேவமாதாவின் வயது 70 ஆவதற்கு, 24 நாட்கள் குறைவாயிருந்தன! மகா பரிசுத்த தேவமாதா 70 வயதானபோதிலும், அவர்களுடைய மகா பரிசுத்த சரீரத்தின் பரிசுத்தத்தோற்றம், 33 வயதிற்குரிய தோற்றமாகக் திகழ்ந்தது! ஏனெனில், ஜென்மப்பாவமில்லாமல் பிறந்திருந்ததால்,மகா பரிசுத்த தேவமாதா, வயதின் மூப்பிற்கு, அப்பாற்பட்டவர்களாயிருந்தார்கள். தூர்ஸ் நகரின் அர்ச்‌. ஜார்ஜியார் தான், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தைப் பற்றிப் பேசிய திருச்சபையின் முதல் ஆசிரியராகத் திகழ்கிறார். கி.பி.600ம் வருடம், மவுரிசியுஸ் சக்கரவர்த்தி, மகா பரிசுத்த தேவ மாதாவின் மோட்சாரோபனத்திருநாள், ஆகஸ்டு 15ம் தேதிகொண்டாடப்பட வேண்டும் என்று, ஒரு அரச ஆணையைப் பிரகடனம் செய்தார். உடனே, அயர்லாந்து இந்த ஆணையைப் பின்பற்றி, இம் மகா ஆடம்பரமான திருநாளை ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடத் துவக்கியது; பின்னர் உரோமாபுரியும் அனுசரிக்கத் துவக்கியது.

            8ம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளில், முதலாம் செர்ஜியுஸ் பாப்பரசரின் கீழ் இந்த திருநாள் கொண்டாடப்பட்டது. பின்னர், 4ம் சிங்கராயர் பாப்பரசர், இந்த திருநாளை அகில திருச்சபையும் கொண்டா டுவதற்கான அதிகாரபூர்வமான அங்கீகராம் அளித்தார்.  12ம் பத்திநாதர் பாப்பரசர் மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்கிறவரைக்கும் , வேதபாரகர்களிடையே, மோட்சாரோபனத்தைப் பற்றிய தர்க்கம் நிலவியது. 1950ம் வருடம், நவம்பர் 1ம் தேதியன்று, 12ம் பத்திநாதர் பாப்பரசர், மகா பரிசுத்த தேவமாதாவின் மோட்சாரோபனத்தை, ஒரு விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்தார்: “நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய அதிகாரத்தினாலும், முத், அப்போஸ்தலர்களான இராயப்பர் சின்னப்பருடையவும் அதிகாரத்தினாலும், நமது சொந்த அதிகாரத்தினாலும், சர்வேசுரனுடைய மாசில்லாத தாயார், என்றும் கன்னிகையான மகா பரிசுத்த மாமரி, இவ்வுலக ஜீவிய காலத்தை நிறைவு செய்தபோது, சரீரத்துடனும் ஆத்துமத்துடனும், பரலோக மகிமைக்குள் நுழைந்தார்கள், என்பதை தேவ வெளிப்படுத்துதலினால் அறிவிக்கப்பட்ட ஒரு விசுவாச சத்தியமாக நாம் உச்சரிக்கிறோம்; அறிவிக்கிறோம்! பொருள் வரையரை செய்கிறோம்!”

            இப்பிரகடனத்தில், பாப்பரசர், மேலும், சர்வேசுரனுடைய வாக்குத்தத்தப் பேழை, ஜெருசலேமுக்குத் திரும்பி வந்ததை நினைவுகூரும் விதமாகவும்,பின்னர் அது, காணாமல் போனதைப் பற்றி அழுது புலம்பியதைப் பற்றியும் எழுதப்பட்ட 132ம் சங்கீதத்தைக் குறிப்பிடுகின்றார்: இந்த சங்கீதம், பிற்பாதியில், இந்த பேழையின் இழப்பு மறுபடியும் புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஈடுசெய்யப்படும், என்கிற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் , ! ஆண்டவரே ! உமது பரிசுத்தம் விளங்கும் பேழையுடன், உமது தாபர ஸ்தலத்தில் எழுந்தருளும்! (சங். 132:8), என்று ஜெபிக்கிறது! இந்த பேழையை தான் திருச்சபை, புதிய ஏற்பாட்டின் பேழையாக, மகா பரிசுத்த தேவமாதாவிடம் காண்கிறது! ஆண்டவர் தாமே, தங்கி வாழுகின்ற இம்மகா பரிசுத்தப்பேழையான, மகா பரிசுத்த தேவமாதா, ஆண்டவரைப்போலவே, ஆத்துமத்துடனும், சரீரத்துடனும், பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட டார்கள், என்பதையும் திருச்சபை ஞானத்துடன் புரிந்து கொள்கிறது! அதையே, விசுவாச சத்தியமாகத் தன் விசுவாசிகளுக்குப் போதித்துக் கற்பிக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக