Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

life of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
life of saints in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Hyginus

சனவரி மாதம் 11-ந் தேதி 
பா. வே 
அர்ச். இஜினார் 
St. Hyginus 


அர்ச். இஜினார் அக்தேன் பட்டணத்திலே பிறந்தார். அவருடைய ஆச்சரியமான புண்ணியங்கள் முகாந்தரமாக அக்காலத்திலிருந்த அர்ச். தெலெஸ் போர் என்னும் பாப்பாண்டவர் இறந்த பிறகு அந்தப் பட்டம் அவருக்கு வந்தது. அவர் அந்தப் பட்டத்திலிருக்கிறபொது உலகத்துக்கு அநேக கடின பொல்லாப்புகள் உண்டாயின. பிற 

மதத்தார் இதைக் கண்டு  சர்வேசுரனுடைய வேதம் பரம்பி மிஞ்சினதினாலே அந்தப் பொல்லாப்பெல்லாம் வருகின்றதென்றும், கிறீஸ்துவர்கள் தங்கள் பலதேவர்களை விட்டுவிட்டதினாலே அந்தத் தேவர்கள் பூலோகத்தின் பேரிலே மகா கோபமாயிருந்து இத்தனை பொல்லாப்புகளை ஆக்கினையாகக் கட்டளையிட்டார்களென்றும், அவர்களுடைய கோபத்தை அமர்த்த இந்த வேதக்காரர் எல்லாரையும் நிர்மூலம் பண்ணவேண்டுமென்றும் அநீயாயமாய்ச் சொல்லித் திருச்சபைக்குக் கனமான கலாபனைகளை  பண்ணினார்கள். அந்தக் கலாப முகாந்தரமாகக் கிறீஸ்தவர்கள் வெகு உபத்திரியப்பட்டாலும் பாப்பாண்டவராகிய இஜினாரென்கிறவர் சொல்லிய புத்தியைக் கேட்டு  வேதத்திலே உறுதியாயிருந்தார்கள். அதல்லாமல் அவருடைய நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்களாகிய வலாந்தீனென்கிறவனும், சேர்தோனென்கிறவனும் ரோமாபுரிக்கு வந்து வேதத்துக்கு விரோதமான அநேகத் தப்பறைகளைக் கிறீஸ்துவர்களுக்குள்ளே போதித்துக் கொண்டு வந்தார்கள், தாங்கள் சொல்லுகிற விஷமுள்ள துர்ப்புத்திகளை நல்ல கிறீஸ்துவர்கள் விசுவசிக்குமாறு தங்களைக் கத்தோலிக்குத் திருச்சபையில் உட்பட்டவர்களைப்போலே கபடாய் மற்றவர்  களுக்குக் காண்பிப்பார்கள். 

அர்ச். இஜினாரென்னும் பாப்பாண்டவர் இவற்றை அறிந்து திருச்சபைக்கு நிருபங்களை அனுப்பி அப்போஸ்தலர்களான அர்ச் இராயப்பர் சின்னப்பர் படிப்பித்த சத்திய வேதத்திலே எல்லாருந் தைரியமும் நிலைமையுமாயிருந்து முன் சொல்லப்பட்ட துர்ப்புத்திகளில் அகப்படாதபடிக்கு பத்திரம்பண்ணினார். மிகுந்த எச்சரிக்கையுள்ள இடையன் ஆடுகளின்மேலே பாய்ந்து வருகிற ஒனாய்க்கு எதிராய்ப்போய் அதைத் துரத்துவதுபோல் பாப்பாண்டவர் அந்த இரண்டு பதிதருடைய பொல்லாப்புக்கு எதிராய்ப் போய் அவர்களைத் துரத்தின படியினாலே தமது ஆடுகளாகிய கிறீஸ்துவர்களுக்கு மோசம் வரவிடாமல் நன்னெறியிற் காப்பாற்றினார். 

மேலும் இந்த பாப்பு ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத் தாய் ஒரே ஞானத்தகப்பன் இருக்க வேண்டுமென்றும், திருச்சபையிலே வழங்கும் மற்ற அநேகஞ் சடங்குகளையுங் கட்டளையிட்டார். அவர் பாப்பு பட்டத்திலே நான்கு வருஷம் மூன்று மாதம் நான்கு நாளும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த நூற்றைம்பத்தெட்டாம் வருஷம் அந்தோனினுஸ் என்கிற இராயன் காலத்திலே திருச்சபைக்கு பிறமதத்தார் பண்ணின கலாபத்தில் சனவரிமாதம் பதினோராந் தேதியிலே வேதசாட்சியாகி மகிமையுள்ள மரணத்தை யடைந்தார். 

கிறீஸ்துவர்களே! இப்போது நீங்கள் கேட்ட இந்தச் சுருக்கமான சரித்திரத்திலே ஞான புஷ்பங்களை எடுக்குமாறு அதற்கடுத்த சில புத்திகளைக் கேளுங்கள். இப்போது சொல்லப்பட்ட அர்ச். பாப்பு நாளிலே உலகத்துக்கு வந்த நிற்பந்தங்களை பிறர் கண்டு அவை கிறீஸ்துவர்களுக்குத் தாங்கள் செய்த அநீத உபத்திரியங்களுக்கு ஆக்கினையாக வந்ததென்று ஒத்துக்கொள்ளாமல் சர்வேசுரனுடைய வேதம் பரம்பினதினாலே தங்கள் தேவர்கள் உலகத்துக்கு ஆக்கினையாக அந்தப் பொல்லாப்புகளை வரப்பண்ணினார்களென்று அக்காலத்திலே அவர்கள் சொன்னதுபோல் இக்காலத்திலேயுஞ் சிலர் சொல்வார்கள். அதெப்படி யென்றால் தேவர்கள் தங்களை வணங்குகிறதை அநேகர் விட்டுச் சர்வேசுரனுடைய வேதங் கேட்டதினாலே மழை பெய்ய வில்லையென்றும், பஞ்சம் படை வியாதி முதலான ஆக்கினைகளை உலகத்துக்கு வரப் பண்ணுகிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள். ஆனால் அது தப்பிதமாய் இருக்கிறதொழிய நியாமாய் இருக்க வில்லை. அதெப்படி யென்றால் அந்தத் தேவர்களைவிட்டுச் சத்திய வேதங்கேட்கிறது குற்றமானால் அந்தக் குற்றங் கட்டிக்கொண்டவர்களாகிற கிறீஸ்துவர்களை மாத்திரந் தண்டிக்கிறதே நியாயமாய் இருப்பதொழிய அந்தக் குற்றமில்லாதவர்களாகிய புறமதஸ்தர்களைத் தண்டிக்கிறது அநியாயம். பஞ்சம் படை முதலிய பொதுவான நெருக்கடிகள் வந்தால் கிறீஸ்துவர்களும் புறமதஸ்தர்களும் அவதிப்படுகிறார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆகையால் முன் சொல்லப்பட்ட காரணத்தால் அந்தத் தேவர்கள் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவது அநியாயமென்று சொல்லவேண்டும். அநியாயம் பண்ணுகிறவன் மெய்யான தேவனல்ல. அத்தகைய ஆக்கினை எந்த முகாந்தரத்தினால் வருகிற தென்று அறியவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேளுங்கள். 

மெய்யான சர்வேசுரனுடைய சொற்படி கேளாதிருக்கிற பாவமே முன் சொல்லப்பட்ட ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும். கிறீஸ்துவனானாலும் பிறனானாலும் ஏதேனும் பாவஞ் செய்தால் அவர்களுடைய பாவத்துக்கு ஆக்கினையாக நியாயத்தின்படியே ஆண்டவர் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவார். இத்தேசத்திலே கிறீஸ்துவர்கள் சிறுபான்மையோர், பிறமதத் தினர் மிகுதியாய் இருக்கிறார்கள். கொஞ்சம்பேருடைய குற்றங்களைப்பற்றிக் கடவுள் திரளான பேரைத் தண்டிப்பாரென்பதைவிடத் திரளான குற்ற வாளிகளின் ஆக்கினையில் அந்தக் குற்றமில்லாத சிலர் வேறு குற்றத்தைப் பற்றி உட்பட்டிருக்கலாமென்பது நியாயம். சனத்தொகையைப் பற்றிக் கிறீஸ்துவர்களிடத்திலே இருக்கிற பாவங்களைவிட பிறரிடத்திலே இருக்கிற பாவங்கள் அதிகம். விசேஷமாய்ப் பசாசைக் கும்பிடுகிற பாவம் அதிகமாய் இருக்கிறபடியினாலே முன் சொல்லப்பட்ட ஆக்கினைகள் வருகிறதற்கு அவர் கள் அதிககாரணமாய் இருக்கிறார்களென்னத்தகும். சத்திய வேதத்துக்கு முழுதும் உட்பட்ட கிறீஸ்துவர்களுடைய இராச்சியங்கள் பிற இராச்சியங்களை விட மிகவும் அதிக செல்வபாக்கிய வல்லமைகொண்டிருக்கிறது. யாவர்க்குந் தெரியும், அதினால் சர்வசந்தேகமுந் தீரலாம். மேலும் கிறீஸ்துவர்களிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் இத்தேசத்தில் அதிக ஆக்கினைவராத படிக்குஞ் சிலவிசை ஆக்கினை முழுதுந் தீர்ந்துபோகவுங் காரணமாய் இருக்கும். இந்த நிடாயத்தை வேறே தேசங்களில் புறமதஸ்தர்களான சில இராசாக்கள் கண்டு பிடித்துப் பரிசோதித்துப் பார்த்துத் தங்களுடைய இராச்சியங்களில் நடக்கிற சர்வேசுரனுடைய வேதத்துக்கு விக்கினம் பண்ணாமல் இந்த வேதம் பரம்பச் சம்மதித்தார்கள். 

இதன்றியே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத்தாய் ஞானத்தகப்பன் மாத்திரமிருக்க முன் சொல்லப்பட்ட அர்ச். பாப்பு கட்டளையிட்டா ரென்று சொன்னோமே நீங்கள் எவருக்கேனும் ஞானத்தாய் ஞானத்தகப்பனாய் இருந்தால் அது நல்லதென்று நீங்கள் நினைக்கக்கடவீர்கள், ஆனால் அதற்குண்டான கடனை நிங்கள் தீர்க்கவேண்டும். அதாவது: ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேறு யாறும் வேதத்தின் மந்திரங் குறிப்பிடம் படிப்பியாதிருந்தால் ஞானத்தாய் ஞானத்தகப்பன் அவற்றை அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவார்கள். மேலும் இந்த அர்ச்சியசிஷ்டர் நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்கள் நல்ல கிறீஸ்துவர்கள்போல் வெளியே காண்பித்தாலுந் தங்கள் இருதயத்தில் இருந்த விஷ நிறைந்த துர்ப்புத்தி சொல்லுவார்களே. 

அப்படியே இக்காலத்திலே சில ஊர்களிலேயுள்ள பதிதர், நாடுகளிலே வந்து தாங்கள் மெய்யான கிறீஸ்துவர்களைப்போல் காண்பிக்க கழுத்திலே செபமாலை தரித்துச் சுரூபமும் வைத்து கொண்டு செபம் பண்ணுவதுபோலே திரிகிறார்கள். பத்தியுள்ள அத்தகைய அடையாளங்களை நீங்கள் கண்டு அவர்களுக்கு இடங்கொடுத்துப் பட்சத்தை காண்பித்தபிறகு அவர்கள் சுரூப வணக்கமாகாதென்றுந் தேவமாதாவை வணங்க வேண்டாமென்று. துர்ப் புத்தியாகிய விஷத்தை வீசுவார்கள். ஓனாயானது ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஆட்டுக்கிடையிலே போகிறபோது உடனே ஆடுகளைக் கடியாதிருந்தாலும் பிற்பாடு கடித்து வெகு சேதம் வருவிக்கிறாப் போலே இந்தப் பதிதர் செய்கிறார்கள். ஆதலால் அவர்கள் வழியாக உங்கள் ஆத்துமத்துக்கு மோசம் வராதபடிக்கு முன் சொல்லப்பட்ட அர்ச். இஜினாரென்கிவரைப்போலே நீங்கள் பதிதர் மட்டில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பதுமன்றியே வேதகாரியங்களிலே ஒருக்காலும் உங்கள் காதிலே விழாத வார்த்தையாகிய நூதனபோதகம் கேள்விப்பட்டால் அதை விசுவசிக் வேண்டாமென்று அறியக்கடவீர்களாக. ஆனால் சாதாரண திருச்சபை படிப்பிக்கிற சத்தியங்களை உறுதியாக விசுவசிப்பதே கடமை.

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களின் வணக்க மாதம்


 உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களின் வணக்க மாதம் 

கி.பி. 1589ம் வருடம், இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரத்தில், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள், சம்மனசுகளின் இராக்கினியான அர்ச். தேவமாதாவின் மடத்தில் ஜீவித்த போது, ஒரு நாள் மடத்தின் தேவாலயத்தில் தேவநற்கருணைப் பேழையின் முன்பாக ஆராதித்தபடி ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஒரு உருவம் தேவாலயத்தின் மையப் பகுதியில், திவ்ய நற்கருணைப் பேழையை, பக்தி பற்றுதலுடன் சாஷ்டாங்மாக விழுந்து ஆராதிக்கும் விதமாக, முழங்காலில் இருந்து ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அந்த உருவம், சமீபத்தில் மடத்தில் இறந்துபோன ஒரு கன்னியாஸ்திரி என்பதையும் உணர்ந்தாள் ; அக்கன்னியாஸ்திரி, புண்ணியத்தில் சிறந்து விளங்கியவளாக, சக கன்னியர்களால் கருதப்பட்டிருந்தாள்; பாக்கியமாக மரித்திருந்தாள்; ஆனால், இப்போது, அர்ச். பாசி மரிய மதலேனம்மாளிடம், உத்தரிக்கிற ஸ்தலத்தில், தான், மிகப் பயங்கரமாக அனுபவித்து வரும் உபாதனைகளிலிருந்து, விடுதலையடைவதில், தனக்கு உதவி செய்யும்படி கேட்பதற்காகவே, அந்த கன்னியாஸ்திரி தோன் றினாள்.

அந்த கன்னியாஸ்திரியைச் சுற்றிலும், அவளை முழுமையாக சுட்டெரிக்கும் ஓர் மேற்போர்வை போல், பயங்கரமான உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு சுவாலைகள், சூழ்ந்திருப்ப தையும், அதே சமயம், கொடிய தீச்சுவாலைகள், முழுமையாக அவளைச் சுட்டெரித்து விடாதபடி, நெருப்பின் ஒரு பகுதியைத் தடுத்து நிறுத்தி, அவளைப் பாதுகாக்கும்படியாக, ஒரு வெள்ளை நிற அங்கி, அவளுடைய உடலைச் சுற்றி மூடியிருந்ததையும், அர்ச். மரிய மதலேனம்மாள் பார்த்தாள். இதைக் கண்டு பெரிதும் அதிசயித்த மரிய மதலேனம்மாள், இந்த காட்சியின் அர்த்தம் என்னவென்று அறிய விரும்பினாள்; அதற்குக் காரணம், இந்த கன்னியாஸ்திரி, மகா உன்னதமான பீடத்தின் மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தின் மட்டில், கொண்டிருக்க வேண்டிய சங்கை மேரை மரியாதை ஆராதனையில், கவனக்குறைவாக நடந்ததினாலேயே , உத்தரிக்கிற ஸ்தலத்தில், இவ்விதம் அவதியுற வேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டிருக்கிறாள், என்ற பதில் மரிய மதலேனம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது.



இந்த கன்னியாஸ்திரி மடத்தில் வாழ்ந்தபோது, அடிக்கடி திவ்யநன்மையை தகுந்த ஆத்தும் சரீர ஆயத்தத்துடன் உட்கொள்ள வேண்டும் என்ற சபை ஒழுங்கை சரிவர அனுசரிக்காமலிருந்தாள்; அப்படியே, திவ்ய நன்மை உட்கொள்ளும் சமயங்களில், ஆண்டவரை போதிய பக்திபற்றுதலுடனும், ஆச்சாரத்துடனும் உட்கொள்ளாமல், வேண்டாவெறுப்புடன் உட்கொண்டு வந்திருக்கிறாள், என்பதையும், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள் அறிந்தாள். அதற்காகவே, அந்த கன்னியாஸ்திரி, ஒவ்வொரு நாளும், திவ்ய நற்கருணைப் பேழையை அதற்கு செலுத்த வேண்டிய சங்கை மேரை பக்தியுடன், ஆராதிக்க வேண்டும் என்றும், சேசுகிறீஸ்துநாதரின் திருப்பாதங்களின் அடியில், உத்தரிக்கிற ஸ்தல நெருப்பின் கொடிய உபாதனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தேவ நீதி அவளுக்குத் தீர்ப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்த கன்னியாஸ்திரி, பிரமாணிக்மாக அனுசரித்த பரிசுத்த கன்னிமை விரதத்துவத்திற்கு சம்பாவனையாக, நமதாண்டவரும், அவளுடைய பரிசுத்த பத்தாவுமானவர்,

உத்தரிக்கிற ஸ்தல நெருப்பின் உபாதனையின் பெரும்பகுதியினால், அவதியுறாத விதமாக, அவளை ஓர் வெண்ணிற அங்கியினால் உடுத்திப் பாதுகாத்தார்; அந்த வெண்ணிற அங்கி, அவள் அனுசரித்த பரிசுத்த கன்னிமை விரதத்துவத்தைச் சுட்டிக் காண்பிக்கிறது. என்பதை யும், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள அறிந்து கொண்டாள்; உடனே அன்றிலிருந்து, அந்த கன்னியாஸ்திரியின் உத்தரிப்பின் காலத்தையும் வேதனையையும் குறைப்பதற்குத் தன்னாலான ஜெபதப ஒறுத்தல் முயற்சிகள் செய்து, ஒப்புக் கொடுத்து வந்தாள்; அநேக திவ்ய பலிபூசைகளைப் பக்தி பற்றுதலுடன் கண்டு, அந்த கன்னியாஸ்திரியின் ஆத்துமத்தை, உத்த ரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவித்தாள்; இந்த சம்பவத்தை, அர்ச். பாசி மரிய மதலேனம்மாள், தன்சபைக்கன்னியாஸ்திரிகளுக்கு அடிக்கடிக்கூறி, திவ்ய நற்கருணையின் மட்டில் மிகுந்த பக்தி பற்றுதல் கொண்டிருக்கும்படி, அறிவுறுத்தி வந்தாள். "



Download Tamil Catholic SOngs

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 38 


அர்ச். சாமிநாதரை சந்தித்த டயானா , அவரிடம், தான் சகோ. ரெஜினால்டுவின்ஞானதியானபிரசங்கங்களினால் சர்வேசுரன்பால் கவர்ந்திழுக்கப்பட்டதைப் பற்றி தெரிவித்தாள். மேலும் இதற்கு, தனது குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தாள். உத்தம கத்தோலிக்க ஜீவியத்தை முன்னிட்டு, தான் அவருடைய கன்னியர் சபையில் சேர விரும்புவதாகவும், அதற்கு அவர் உதவ வேண்டுமென்றும், அர்ச். சாமிநாதரிடம் விண்ணப்பித்தாள். சாமிநாதர் அவளிடம், "குழந்தையே! நீவிசேஷ விதமாக சர்வேசுரனை சேவிக்க விரும்பவதை, உன் வீட்டில் இருந்து கொண்டே செய்ய முடியும். இது, உனக்கு விளங்கும் என்று நம்புகிறேன்" என்றார். "ஆம் சுவாமி. என் இருதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் என்றுதான் நானும் ஆசிக்கிறேன். 

ஆனால், அது மட்டும் பற்றாது. நான் எனது நேசத்தை மட்டுமல்லாமல், என்னிடமுள்ள அனைத்தையும், இதுவரைக்கும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இனி எனக்கு சொந்தமாகப்போகும் யாவற்றையும் நம் நேச ஆண்டவருக்குக் காணிக்கையாக்க விரும்புகிறேன். நீங்கள் செய்வது போல, துறவற ஜீவிய அந்தஸ்துடன் சர்வேசுரனுக்கு ஊழியம் புரிய ஆசிக்கிறேன்" என்று டயானா கூறினாள். சாமிநாதர், அவளிடம், "மகளே! ஞான காரியங்களில் எப்பொழுதும் நிதானமாகவே முடிவு எடுக்க வேண்டும். தற்பொழுது, உன் இருதயத்தை அர்ப்பணிப்பதையே, ஆண்டவர் விரும்புவார். உத்தமமான துறவற அந்தஸ்திற்கு ஏற்ற காணிக்கைகளை நம் ஆண்டவருக்கு, நீ பிறகு அர்ப்பணிக்கலாம்'' என்றார். அதற்கு டயானாவும் சம்மதித்தாள். அதன்படி, அர்ச்.சாமிநாதர் தேர்ந்தெடுத்த ஒரு நாளில் அர்ச். நிக்ககோலாஸ் தேவாலயத்திற்கு டயானா வந்து பெரிய பீடத்திற்கு முன் முழந்தாளிட்டாள். அங்கு சகோ.ரெஜினால்டுவும், சகோ.குவாலா, சகோ.ருடால்ஃப் முன்னிலையில், டயானா , தன் நேச ஆண்டவருக்கு தன்னை முழுவதும் நித்தியத்திற்குமாக அர்ப்பணிக்கும் ஜெபத்தை ஜெபித்து துறவற வார்த்தைப்பாடு கொடுத்தாள். அர்ச். சாமிநாதருடைய இருதயம் அகமகிழ்வால், திடீரென்று மேலே வெகு தூரம் தாவியது. அவருடைய புதுமைமிகு தேவவரப்ரசாத சலுகையினால், தனக்கு முன்னால், முழங்காலில் இருக்கும் இச்சிறுபெண்ணிற்கு நிகழவிருக்கும், எதிர்கால நிகழ்வுகளைக் கண்டார். அவை அதிர்ச்சிக்குரியவை களாகவும், அதேநேரத்தில் ஆறுதலளிப்பவையாகவும் இருந்தன. அதன்பிரகாரம், டயானா , வார்த்தைப்பாடு கொடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாக மிகுந்த வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தாள். பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய கன்னியர்மடம் நிறுவப்படும் என்று காத்திருக்கும் வேளையில் தன் வீட்டாருக்கு தெரியாமல், பொலோஞாநகரின் எல்லைப்புறத்திலிருக்கும் ரொன்சானோ என்ற ஊரிலுள்ள அர்ச். அகுஸ்தினாருடைய கன்னியர் சபைமடத்தில் சேர்ந்தாள்.

ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவளுடைய தந்தையும் சகோதரரும் அவளை வீட்டிற்கு இழுத்துவந்தனர். வீட்டிற்கு எதிரான அவளுடைய போராட்டத்தை நிரந்தரமாக முடமாக்கிவிட்டனர். இருப்பினும், அவள் தனது வார்த்தைப்பாட்டின்படி, இவ்வுலக சிருஷ்டிகளிடமிருந்து விலகி, தன் இருதயத்தை தம் சிநேக தேவனான திவ்ய இரட்சகரிடமே நிலைத்திருப்பதில் பிரமாணிக்கமாக இருந்தாள். இறுதியில் தனது குடும்பத்தினருடைய உதவியினாலேயே பொலோஞா நகரத்தில் சாமிநாதருடைய முதல் கன்னியர்மடத்தை நிறுவுவதில் டயானா வெற்றி பெற்றாள். விரைவில், சகோ.டயானா உத்தம சாங்கோபாங்கத்தில் வெகுவாய் உயர்ந்து, அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தாள். அதன்படி, அர்ச்சிஷ்டவளாக மரித்தபிறகு, அர்ச்.சாமிநாத சபைகுருக்கள், கன்னியர், மூன்றாம் சபையினர் அனைவரும், "முத்தி பேறுபெற்ற டயானாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்" என்று மகிழ்ச்சியுடன் அவளிடம் ஜெபிக்கும்படியாக, விரைவிலேயே, அவள் பீடத்திற்கு உயர்த்தப்பட்டாள்.


திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 4 - Life History of Rose of Lima in Tamil

 அர்ச்.லீமா ரோசம்மாள்(1585-1617):

ஜீவிய சரித்திரம்:

திருநாள்:ஆகஸ்ட் 30ம்தேதி


தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் 1585ம் ஆண்டு ஸ்பானிய பெற்றோரான கஸ்பார், ஒலிவா தம்பதியருக்கு 11வது குழந்தை யாக அர்ச். ரோசம்மாள் பிறந்தாள். பிறந்த குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால், பிறந்த உடனே அதற்கு ஞானஸ்நானம் கொடுத்து இசபெல் என்று அதற்கு அதனுடைய பாட்டியினுடைய பெயரையே வைத்தனர். குழந்தையின் முகமானது ஒரு அழகிய ரோஜா மலராக தோற்றமளித்துக் கொண்டு அந்த முகத்தை தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததையும் கண்டதால் அந்நகரத்து மேற்றிராணியாரான அர்ச்.துர்பியுஸ் குழந்தைக்கு “ரோஸ்” என்று பெயர் வைத்து கதிட்ரல் தேவாலயத்தில் ஆடம்பரமாக ஞானஸ்நானம் கொடுத்தார். “லீமா ரோஸ்” என்ற இப்பெயரே இறுதி வரை நிலைத்தது. குழந்தை பருவத்திலேயே ரோசம்மாள் சர்வேசுரனுடைய விசேஷ தேவவரப்ரசாத சலுகைகளை அடையப் பெற்றிருந்தாள். தவழ்ந்து நடக்கும் குழந்தை பருவத்திலேயே அவளுடைய தாயாருடைய அறைக்குள்ளிருந்த பெரிய பாடுபட்ட சுரூபத்தையே உற்று நோக்கியவளாக ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தாள். 3 வயது குழந்தையாக இருந்தபோது, ரோஸ், அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிட்டது.

அப்போது அவள் அனுபவித்த மிக கொடிய உபாதனையை ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் தாங்கிக் கொண்டாள். அப்போது அவள், “இதைவிட மாபெரும் வேதனையை நமது திவ்ய இரட்சகர் நமக்காக அனுபவித்தாரே” என்று கூறினாள். மற்றொரு சமயம், அவளுக்குக் காது வலி வந்தது. அது வலிக்கிறதா என்று அவளிடம் வினவியபோது, அவள், “ ஆமாம். கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் தமது முள்முடியினால் நமது நல்ல நேச ஆண்டவர் எவ்வளவு அதிகமாக வேதனையுற்றார்!” என்று பதில் கூறுவாள். ரோஸூக்கு நான்கு வயதானபோது திடீரென்று ஒரு நாள் ஜெபபுத்தகத்தை சரளமாக வாசிக்கலானாள். அவள் எப்படி அதை வாசிக்கக் கற்றுக்கொண்டாள் என்று வினவியபோது, திவ்ய குழந்தை சேசுவே அவளுக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறினாள். சின்ன ரோஸ் ஆடம்பரமான ஆடையலங்காரங்கள், அழகான உடைகளையெல்லாம் அணிவதற்கு விரும்ப மாட்டாள். இப்பூவுலகத்தைவிட பரலோகத்திற்கே அதிகம் சொந்தமானவளாக திகழ்ந்த தமது குமாரத்தியைப் பற்றி கவலையுற்றவளாக ரோஸின் தாயார், ஒலிவா, ரோஸிடம் பல சமயங்களில் உலகக் காரியங்களின் பொருட்டு மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டாள். சில சமயங்களில் வீண் உலக ஆடம்பரங்களுக்காக அவளைக் கட்டாயப்படுத்துவாள். இவ்வாறு பல சமயங்களிலும் ரோஸின் பொறுமையை சோதிப்பாள்.

 சின்ன ரோஸ் ஒருபோதும் பொறுமையை இழந்துவிடாமலும் தாய்க்கும் மற்ற பெரியவர்களுக்கும் கீழ்ப்படிவதிலும் எப்போதும் பிரமாணிக்கமுடன் இருந்தாள். அவளுக்கு 12 வயதானபோது, அவளுடைய தாய், ஒலிவா, திருமணத்திற்கான ஏற்பாடு செய்யத் திட்டமிட்டபோது, ரோஸ், தான் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையில் உட்பட்டு விட்டிலேயே ஜெபதப பரிகார ஜீவியம் ஜீவிக்கப்போவதாகத் தெரிவித்தாள். அதை பலவிதத்திலும் வெகுநாட்களாக எதிர்த்தாலும் ஒலிவா, இறுதியில் அதுவே சர்வேசுரனுடைய திருவுளம் என்று அறிந்து கொண்டாள். லீமாவில் இருந்த அர்ச்.சாமிநாதரின் மடத்தில் அச்சபையின் துணைச் சகோதரராக ஜீவித்துவந்த மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.மார்டின் தே போரஸூம் அர்ச். லிமா ரோசம்மாளும் ஞான ஜீவியத்தில் இணைந்த நண்பர்களாக ஜீவித்தனர். அவர்கள் இருவரும் எல்லாம் வல்ல சர்வேசுரனுடைய மகத்துவமான இலட்சணங்களைப்பற்றியும் தேவமாதாவின் மகிமைகளைப் பற்றியும் அடிக்கடி தியானித்து மகிழ்வர். பெரு நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த வறுமை பிணியைப் போக்குவதற்காக மூலிகை மருந்துகளை தயாரித்து ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கி அவர்களுடைய பிணியையும் வறுமையையும் நீக்குவர்.

அர்ச். லீமா ரோசம்மாள், அவளுடைய சகோதரர் ஃபெர்டினான்டுடன் சேர்ந்து அவர்களுடைய வீட்டுத் தோட்டத்திலேயே கட்டிய, தபோதனர்களுக்கான ஒரு குகையிலேயே வாழ்ந்து வர திர்மானித்தாள். அது மிகச் சிறியதாக இருக்கிறதே என்று எல்லாரும் எதிர்த்தனர். உடனே அதற்கு அவள், “இது நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்கும் எனக்கும் தங்குவதற்கு போதுமான இடமாக இருக்கிறது” என்று கூறினாள். இந்தக் குகையிலேயே அவள் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், இரவு பகல் முழுவதும் நேச இரட்சகருடைய திவ்ய பாடுகளைப் பற்றிய தியானத்திலும் அதற்கு காரணமான தன்னுடையவும் உலகினுடையவும் பாவங்களைப் பரிகரிப்பதற்காக, ஜெபதவ பரிகார ஜிவியத்திலும் செலவழித்தாள். அவளுக்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆயினும், அவளுடைய 4வது வயதிலிருந்தே அவள் அப்பழங்களைத் தொட மாட்டாள். அதே போல் அர்ச்.லீமா ரோசம்மாள் மாமிச உணவை ஒருபோதும் உட்கொண்டதே இல்லை. காய்ந்த உரொட்டித் துண்டுகளும் தண்ணீரும் சில கசப்பான கீரைகளுமே அவளுடைய அன்றாட உணவாக இருந்தது. தபசு காலத்தில் அந்த உரொட்டித் துண்டுகளையும் சாப்பிட மாட்டாள். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ தான் அவள் உறங்கும் நேரம். அவள் தன் தலைமாட்டில் கரடுமுரடான பாறைகளையும் படுக்கையில் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் வைத்திருப்பாள். அந்த சொற்ப நேர தூக்குமும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். 

அங்கு ஏற்படும் கொடூரமான கோடை உஷ்ணகாலத்திலும் பல நாட்கள் தண்ணீரே உட்கொள்ளாமல் தன்னையே ஒறுத்து ஜீவித்தாள். ஒரு முள்முடியை பின்னி அதைத் தன் முடி அலங்காரத்திற்குள் வைத்து மறைத்திடுவாள். எப்பொழுதும் அவள் தலைக்குள் குத்திக் கொண்டிருக்கும் இந்த முள்முடியுடனேயும் அதனால ஏற்படும் இரத்தக் காயத்துடனும் ஜீவித்து வந்தாள். மேலும், ரோஸ், தான் உடுத்தியிருந்த உடைக்குள் தன் உடல் முழுவதையம் ஒரு முரட்டு கயிற்றால் இறுகக் கட்டிக் கொண்டவளாக, அதனால் ஏற்படும் வலியை ஒறுத்தலாக ஒப்புக் கொடுத்தும் ஜீவித்தாள். இரவு நேரங்களில் வெறுங்காலுடன் தோட்டத்தில் மிகப் பாரமான சிலுவையை சுமந்தபடி நடப்பாள். ஒரு வேலைக்காரியிடம் அதிக பளுவான விறகுக் கட்டைகளை தன் மேல் சுமத்தும்படி செய்வாள். அதுவும் அப்பாரத்தைத் தாங்கமாட்டாமல் அதனடியில் தான் விழும் வரைக்கும் அப்படிச் செய்யச் சொல்வாள்.

இவ்வாறு, தனது திவ்ய இரட்சகர் மேல் கொண்ட சிநேகத்தை முன்னிட்டு, ஒறுத்தல் செய்வதற்கான எல்லா வழிமுறைகளையும் மிக நுட்பமான விதத்தில் அர்ச்.லீமா ரோசம்மாள் கடைபிடித்துவந்தாள்.

புண்ணிய கிரியைகளிலும் சாங்கோபாங்கத்திலும் உத்தமமான விதத்தில் ஜீவித்த அர்ச்.ரோசம்மாள், தன் குடும்பத்தினருக்குத் தேவைகளை சமாளிப்பதற்காக உழைத்து வருவாள். நல்ல பூவேலைபாடுகளுடன் துணிமணிகளையும் ஆடை ஆபரணங்களையும் நூற்பதில் கை தேர்ந்தவள். இத்தொழில் மூலம் தன் குடும்பத்திற்கு போதிய வருவாய் ஈட்டி வந்தாள். இவள் தன் தோட்டத்தில் பலவித பூச்செடிகளை பராமரித்து வந்தாள். அவற்றில் மலரும் பூக்களை விற்று வருவாள். தன் தோட்டத்து மலர்களால் அர்ச்.சாமிநாதருடைய மடத்துக் கோவிலில் இருந்த தேவமாதாவின் பீடத்தை தினமும் அலங்கரிப்பது இவளுக்கு மிகப்பிடித்தமான காரியம். அர்ச்.சாமிநாதர் சபையைச் சேர்ந்த மற்ற அர்ச்சிஷ்டவர்களைப் போலவே இவளும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே உள்ளது என்று கலங்குவாள். ஏனென்றால், அதில் 10 மணி நேரம் வேலைக்குப் போய் விட்டால் மிதியான நேரம் ஜெபிப்பதற்கும் மற்ற புண்ணிய கிரியைகள் புரிவதற்கும் பற்றாமல் போகுமே என்று நினைப்பர். 

இப்பிரச்னையை இருவழிகளில் திர்த்தாள்: 

1) தூங்கும் நேரத்தை தவிர்த்தாள். 

2) மற்ற வேலை நேரம் முழுவதும் சர்வேசுரனுடன் ஐக்கியமாக ஒன்றிணைந்திருந்தாள். 

அதாவது அவள் வேலை நேரத்தில் தனது கரங்களில் நூற்கும் ஊசியைப் பிடித்திருந்தாலோ அல்லது மலர்களை பறித்துக் கொண்டிருந்தாலோ அல்லது ஜெபநேரத்தில் அவளுடைய கரங்கள் ஜெபமாலையைப் பிடித்துக் கொண்டிருந்தாலோ, 24 மணி நேரமும், எப்பொழுதும், அவள் தனது பரலோக பத்தாவுடன் நெருக்கமாக இணைந்திருந்தாள். அவள் நுட்பமாக எவ்வளவுக்கு தன்னைமுழுதும் சர்வேசுரனுடன் ஒன்றிணைத்து எப்பொழுதும் ஜீவித்தாளோ, அதே அளவிற்கு தான் செய்த அனைத்தையும் ஒறுத்தலாகவும் தபசாகவும் ஒப்புக் கொடுத்து வந்தாள். அநேக நேரங்களில் அவள் ஆழ்ந்த பரவசநிலையிலேயே தொடர்ந்து இருப்பாள்:

அவளுடைய தோட்டத்தில் அவள் வசித்து வந்த சிறு குகைக்கு தினமும் ஏராளமான மோட்சவாசிகள் வந்து அவளைப் பார்த்து செல்வர். கோவிலில் திவ்ய பலிபூசையின் போது திவ்ய நன்மை உட்கொண்டபிறகு, பல மணி நேரத்திற்கு காட்சி தியான பரவச நிலையிலேயே இருப்பாள். அவளை சுற்றிலும் மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கூட உணராதவளாக இருப்பாள். நரகிலிருந்து பசாசு கொடூரமான உருவத்துடன் அவள் முன்பாக நேரிடையாகவே தோன்றி அவளை வாதித்தது, சோதித்தது. ஞான வறட்சியில் நீண்ட நேரம் ரோசம்மாள் தனிமையில் விடப்பட்டாள். அத்தகைய தருணங்களில், அவள் ஆண்டவரிடம், “ஆண்டவரே! நீங்கள் என்னுடனிருந்திருந்தால், நான் இத்தகைய கொடூரமான சோதனைகளில் விடப்பட்டு சஞ்சலமடைந்திருக்க மாட்டேன்” என்பாள். அப்போது ஆண்டவர் அவளிடம், “ரோஸ்! நான் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் நீ இந்த சோதனைகளில் இவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நம்புகிறாயா?” என்று வினவினார். அர்ச். லீமா ரோசம்மாள் வேதசாட்சிய முடி பெறுவதற்காக அதிகம் ஜெபிப்பாள். வேதபோதக ஜீவியத்தின் மேலும் அதிகம் பற்றுடையவளாக இருந்தாள். அவள் வேதபோதகர்களுக்காக இடைவிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் ஜெபித்து வந்தாள். ஜப்பானில் நாகசாகியில் வேதசாட்சிகளாக கொல்லப்பட்ட வேதபோதக குருக்கள் அந்த உன்னத முடியைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவள் அர்ச்.லிமா ரோசம்மாள்.

ஏனெனில் அவள் இறந்த அதே வருடத்தில் தான் அவர்களும் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டனர். ஒரு சமயம் டச்சுக்கார பதிதர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஜார்ஜ் ஸ்ப்ரில்பெர்கன் என்ற கடற்கொள்ளைக்காரன் 6 கப்பல்களில் கொள்ளையருடன் பெரு நாட்டின் காலவோ என்ற துறமுகத்தைக் கைப்பற்றினான். லீமா நகரத்தின் ஆண்மக்கள் அனைவரும் அவனுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம் முந்தின நாள் இரவு முழுவதும் சாந்தோ டோமிங்கோ என்ற தேவாலயத்தில் திவ்ய சற்பிரசாதநாதருக்கு முன்பாக அர்ச்.லீமா ரோசம்மாளும் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையைச் சேர்ந்த பெண்களும் சிறுபிள்ளைகளும் தொடர்ந்து 40 மணிநேர ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். லீமா நகரத்தையும் கைப்பற்றி அதன் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் பீரங்கியால் தரை மட்டமாக்குவதற்கு திட்டமிடுகிறான் என்ற செய்தி அறிந்ததும் அர்ச்.லீமா ரோசம்மாள், தன் முழங்காலுக்குக் கீழ் தொங்கிய தன் உடுப்பினை கத்திரியால் வெட்டினாள். “நமது திவ்ய சற்பிரசாதநாதரைப் பாதுகாப்பதற்கான போருக்காக என்னைத் தயாரிக்கிறேன். இப்போரில் நம் நேச ஆண்டவருக்காக உயிரைக் கொடுக்க விரும்புவோர் எல்லோரும் என்னோடு சேர்ந்து கொள்ளலாம்” என்று மற்ற பெண்களிடம் கூறினாள். பிறகு மகா பரிசுத்த திவ்ய நற்கருணையில் விற்றிருக்கும் தன் நேச ஆண்டவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நம் திவ்ய இரட்சகர் கதிர்பாத்திரத்திற்கு மேலே தோன்றினார்.

ஆண்டவருடைய திவ்ய திருத்தலைமுடியிலும், திவ்ய நெற்றியிலும், திவ்ய திருக்கண்களிலும் முள்முடியிலும், திரு இரத்தம் ஒழுகி வடிந்துக் காய்நதிருப்பதைக் கண்டாள். ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்திலிருந்து கை கால்கள் மற்றும் மணிக்கட்டுகளிலும் திரு இரத்தம் ஓடி வழிந்து காய்ந்திருப்பதையும் கண்டாள்.

சேசுநாதர்சுவாமியின் திவ்ய திருவாய், இறுதி வாக்கியத்தை கூறியபடியே திறந்திருப்பதையும், காயப்பட்டும், விங்கியும் இருப்பதையும் கண்டாள். பிறகு அவள் தன் சிநேக ஆண்டவருடைய திவ்ய திருக்கண்கள் தன்னையே நேருக்கு நேராக உற்றுப் பார்ப்பதையும் கண்டாள். உடனே அவள் தன் நேச ஆண்டவரிடம், “ திவ்ய சற்பிரசாதத்தில் விற்றிருக்கும் என் நேச இரட்சகரே! இன்று உம்மை நான் காப்பாற்றுவேனாகில் நீர் மறுபடியும் சிலுவையிலறையப்பட மாட்டீர். நீர் எனக்காக சிலுவையில் தொங்கி மரித்தபோது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இப்பொழுது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியும்!” என்று கூறினாள். பிறகு அவள் தன்னைச் சுற்றி இருந்த மற்ற பெண்களிடம், “நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்காக உயிரைக் கொடுப்பதற்கு என்னோடு யாரெல்லாம் முன்வருவிர்கள்? அவருடைய எதிரிகளுக்கு எதிராக போர் புரிவதற்கு என்னுடன் யார் நிற்கப்போகிறிர்கள்? இதோ இங்கே, நமது சரீரங்களினால் மட்டுமே பாதுகாக்கப்படும்படியாக, நம்மேல் கொண்ட எல்லையில்லா சிநேகத்தின் பொருட்டு, நம் நேச ஆண்டவர் நம்மிடையே வீற்றிருக்கின்றார்! சகோதரிகளே உதவிக்கு வாருங்கள்! நாம் அனைவரும் நமது திவ்ய இரட்சகருக்காக ஒன்றாக இறப்போமாக! தேவநற்கருணையிலுள்ள நமது நேச ஆண்டவருடைய பரிசுத்த திவ்ய சரீரத்தை அவர்கள் அடைய வேண்டுமானால், முதலில் அவர்கள் நமது சரீரங்களை வெட்டி விழ்த்தட்டும். பிறகு வெட்டப்பட்ட நமது சரீரங்களின் வழியாக மட்டுமே அவர்கள் நம் ஆண்டவரை நெருங்க முடியும் என்பதை அந்த கடல் கொள்ளையருக்கு பறைசாற்றுவோம்!” என்று கூறினாள். 

மனித சுபாவத்திற்கு மேற்பட்ட ஒரு உன்னதமான பரலோக சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டவளாக, அர்ச்.லீமா ரோசம்மாள் இவ்வாறு கூறக் கேட்டதும், தமது உன்னதமான பலவினத்தில், அதாவது ஒரு அப்பத்தின் வடிவில் விற்றிருக்கும் தங்களுடைய திவ்ய இரட்சகரைப் பாதுகாக்கும் கேடயங்களாக தங்கள் சரீரங்களையும் தங்களுடைய உயிரையும் கையளித்தல் என்ற ஏக தேவசிநேகமுயற்சியில் அங்கிருந்த பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவருடைய ஆத்துமங்களும் அசாதாரண முறையில் ஒன்றிணைந்தன. அவர்கள் எதிர்கொள்ளப்போகும் அபாயத்திலிருந்து தங்களுக்காகவோ அல்லது தங்களுடைய குடும்பத்தினருக்காகவோ பயத்தால் ஏற்படும் யாதொரு ஒரு அசைவுமின்றி, விரைவில் அந்த தேவாலயத்தில் நிகழப்போகும் (என்று அவர்கள் எண்ணியிருந்தனர்)

அவசங்கைகளுக்கும் அநாச்சாரங்களுக்கும் எதிராக ஒரே ஆத்துமமாக ஒன்றித்து செயல்படுவதற்கு தயாராக இருந்தனர். இவ்வாறு அர்ச்.சாமிநாதர் 3ம்சபை உறுப்பினர்களான அர்ச்.ரோசம்மாளும் மற்ற பெண்களும் சாந்தோ டோமிங்கோ தேவாலயத்தில் மகா பரிசுத்த தேவநற்கருணையில் விற்றிருக்கும் தங்கள் நேச ஆண்டவரைப் பாதுகாப்பதற்காக தங்களையே அர்ப்பணித்த அதே சமயம், காலவோ என்ற இடத்தை கடற்கொள்ளையர் பீரங்கியால் இருமுறை தாக்கினர். அங்கிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்த சில வீடுகளை தரைமட்டமாக்கினர். கப்பல் தளத்தில் இருந்த தனது அறையில் கடற்கொள்ளையரின் தலைவன் ஸ்பில்பெர்கன் வெற்றிக்களிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய மேஜை மீது காலவோ மற்றும் லிமா நகரத்தின் வரைபடம் இருந்தது. அந்நகரங்களின் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் தகர்ப்பதற்காக குறித்தான். அவன் வானத்தை நோக்கி ஆணவத்துடன் சிரித்தான். ஏனெனில் அவன் தன் ஆத்துமத்தை வெகுகாலத்திற்கு முன்பாகவே பெரும்பாவங்களினால் இழந்திருந்தான். பிறகு அவன் தன்னிடமிருந்த தொலைநோக்கிக் கருவியை எடுத்து அதன் லென்ஸைத் துடைத்தான். பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே புறப்படும் சமயத்தில் அவன் ஒருவித திமிர்வாத நோயினால் பாதிக்கப்பட்டவனாக, திடீரென்று அலறிக் கீழே விழுந்தான். 

அவன் விழுந்த 15வது நிமிடத்தில் அவனுடைய 6 கப்பல்களுடன் கடற்கொள்ளையர் அனைவரும் பெரு நாட்டைவிட்டு விரைந்து ஓடி மறைந்தனர். ஏனெனில் தலைவன் இல்லாமல் அவர்களால் சண்டைபோடமுடியாது. இவ்வாறு அர்ச்.லீமா ரோசம்மாளுடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் தயவாய் செவிசாய்த்தார். லீமா நகரத்தை சர்வேசுரன் அர்ச்.ரோசம்மாளின் ஜெபத்தினால் இவ்வாறு காப்பாற்றியதற்காக லீமா நகர மக்கள் அர்ச்.லீமா ரோசம்மாளை நன்றிபெருக்குடன் கொண்டாடியது.

ரோசம்மாள், தன் தந்தை, கொன்சாலோவின் உதவியுடன் கோவிலிலிருந்து விட்டிற்கு சென்றாள். “நமது நேச ஆண்டவருக்காக நம் உயிரை விடுவதற்கு என்ன அருமையான சந்தர்ப்பம் இது!” என்று கூறினாள். தொடர்ந்து கடைபிடித்துவந்த கடின தபசினால், பரலோகத்தின் தேவபத்தாவுடன் அவள் அடைந்த உன்னதமான காட்சி தியான ஜீவியத்தின் உச்சநிலை ஐக்கியமானது, பல சரீர அடையாளங்களினால் அர்ச்.ரோசம்மாளிடம் வெளிப்படையாக காணப்பட்டது. அவளுடைய சரீரம் முழுவதும் வேதனையாலும், பலவினத்தாலும் காய்ச்சலாலும், தலை முழுவதும் இடைவிடாத வலியாலும் வாதிக்கப்பட்டாள். தண்ணீர் அருந்தினால் கூட இறந்துவிடுவாள் என்பதால் குடிக்க தண்ணீரின்றி கொடிய தாகத்தினால் இறக்கும் வரைக்கும் வருந்தினாள்.

1617, ஆகஸ்ட் 24ம் நாளன்று, 31வது வயதில் இறுதி அவஸ்தை பூசுதலைப்பெற்று திவ்ய நற்கருணை நாதரை தனது இருதயத்தில் வரவேற்றபடியே பாக்கியமான மரணமடைந்தாள். லீமா நகர மக்கள் அனைவரும் துக்கித்தனர். அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவள் மருத்துவம் செய்து குணமாக்கிய எண்ணற்ற நிக்ரோக்கள், செவ்விந்தியர், தேவதிரவிய அனுமானத்திற்கு அவளால் திரும்ப அழைத்து வரப்பட்ட மனந்திரும்பிய ஸ்பானியர்கள் மற்றும் எல்லா உயர்குடிமக்கள் அனைவரும் அவளுடைய பிரேதப்பெட்டிக்கு இருமருங்கிலும் முழங்காலில் இருந்து ஜெபமாலை ஜெபித்தனர். 1671 ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அர்ச்சிஷ்டவளாக பாப்பரசர் லீமா ரோசம்மாளை பீடத்திற்கு உயர்த்தினார்.†

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 3 St. Leonard of Port Maurice Life History in Tamil

 அர்ச்.போர்ட்மோரீஸின் லியோனார்டு

(1676-1751), திருநாள் நவம்பர் 26



ஜெனோவா நகரின் அருகிலுள்ள மோரீஸ் என்னும் துறைமுக நகரத்தில் அர்ச்.லியோனார்டு, 1676ம் வருடம், தோமினிக் காசோவா என்ற கப்பல் தலைவனுடைய மகனாகப் பிறந்தார். இரு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும், இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவருக்கு 13 வயதான போது, ஒரு புகழ் பெற்ற ரோமன் கல்லூரியில் சேர்ந்தார். அது, அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியார் படித்த கல்லூரி. பக்தியிலும் ஞானத்திலும் கத்தோலிக்க ஒழுக்கத்திலும், நல்ல அலுவல்களிலும், சிறந்து விளங்கியதால், நாளடைவில், இவரும், இன்னொரு ஞானப்பிரகாசியார் என்ற பெயர்பெற்றார். இங்கு, கல்வியை முடித்தவுடன், மருத்துவத்துறையில் உயர்கல்வி கற்பதற்கு ஆசித்தார். ஆனால், ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் பிரான்சிஸ்கன் சந்நியாச மடத்தை சந்தித்த போது, பரிசுத்த குருத்துவத்திற்கான தேவஅழைத்தலைப் பெற்றார். 1697ம் ஆண்டு, அக்டோபர் 2ம் நாளன்று அச்சபையில் உட்பட்டார். விரைவிலேயே அர்ச்சிஷ்டதனத்தினால், அம்மடத்தினுடைய மகிமையாக விளங்கினார்.

சபைவிதிகளை நுட்பமாக அனுசரித்தார். ஆழ்ந்த பக்திபற்றுதலுடன் ஜெபத்தில் ஈடுபட்டார். சேசுமரியாயின் மிதான பக்தியினால் இவருடைய இருதயம் எப்பொழுதும் பற்றி எரிந்தது. கடினதபசினாலும், தாழ்ச்சியினாலும், இடைவிடாத பிறர்சிநேக அலுவல்களினாலும் இவருடைய அர்ச்சிஷ்ட ஜிவியம் பரிமளித்தது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக, சீன தேசத்திற்கு செல்வதற்கு மிகவும் திவிரமான ஆவல்கொண்டார். ஆனால், இவருடைய சரீர பலவினத்தினால், சொந்த நாட்டிலேயே பிரசங்கிப்பதற்கு இவரால் கூடாமற் போயிற்று. தபசு மிகுந்த ஜீவியத்தினால், இவருடைய தேகபலம் நாளுக்கு நாள் குறைந்து, இறந்துபோகும் அளவிற்கு மெலிந்தார்.

ஆனால், தேவமாதாவின் பராமரிப்பினால், சாகாமல், புதுமையாகக் காப்பாற்றப்பட்டார். சரீர ஆரோக்கியத்தைத் திரும்ப பெற்றார். அதற்கு நன்றியறிதலாக, மிகுந்த ஆன்ம ஈடேற்ற ஆவலுடன் பங்குகளை சந்தித்து, தியானங்களையும் பிரசங்கங்களையும் நிகழ்த்தினார். 24 வருடங்களில் இத்தாலி முழுவதும், கோர்சிகா திவு (இங்கு ஒழுக்கமற்றமக்களே வாழ்ந்து வந்தனர்)  முழுவதிலுமுள்ள சகல பங்குகளையும் விசாரித்து, மக்களை ஞானஜீவியத்தில் ஸ்திரப்படுத்தினார். தம்முடைய பாவங்களுக்காகவும், தமது நாட்டிலுள்ள சகல கிறீஸ்துவ மக்களுடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்வதற்காக, இரவு கண்விழித்து ஜெபித்தும், தன்னையே சாட்டையால் இரத்தம் வருமட்டும் அடித்துக்கொண்டும் தபசு செய்து, ஆண்டவருடைய இரக்கத்திற்காக மன்றாடி வந்தார். இத்தகைய கடுமையான தபசுடன் ஜீவித்து வந்ததால், இவருடைய ஞானதியானப் பிரசங்கங்கள் மிகுந்த ஞான பலனைக்கொடுத்தன.

 அவற்றைக் கேட்போர் இருதயங்களில், தேவவரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உத்தமமான மனஸ்தாபத்தை ஏற்படுத்தின. ஞான அறிவுரைகள் அவர்களுடைய இருதயங்களில் பதிந்தன. இவ்வாறாக, திரளான பாவிகளை மனந்திருப்பினார். ஃப்ளோரன்ஸ் நகருக்கருகில் இருந்த இன்கோர்டோ என்ற இடத்தில், போதக துறவியர்கள் ஞான தியான பிரசங்கங்களை நன்கு தயாரிப்பதற்காகவும், உலகசந்தடிகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு வேண்டிய ஏகாந்தமான சூழ்நிலையை அளிப்பதற்காகவும், தபசு அனுசரிப்பதற்காகவும் ஏற்றபடியான ஒரு தியான இல்லத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமானார். ரோமாபுரியில் பல பக்த சபைகளை ஏற்படுத்தினார். அதில், சேசுவின் திரு இருதய சபை குறிப்பிடத்தக்கது. “திவ்ய சேசுவே, என் மேல் இரக்கமாயிரும்!” என்ற மனவல்லிய ஜெபத்தை அடிக்கடி ஜெபிக்கும்படி, சென்ற இடமெல்லாம், இவர் மக்களிடம் கற்பித்து வந்தார். 

அதே போல், இத்தாலியா நாடெங்கிலும், திவ்ய நற்கருணை மேல் பக்தியை பரப்பி வந்தார். தேவாலயங்களில், மகாபரிசுத்த தேவநற்கருணைக்கு இடைவிடாத ஆராதனையை மக்கள் செய்யும்படியான வழக்கத்தையும் சென்ற இடங்களிலெல்லாம் ஏற்படுத்தினார். ஆண்டவருடைய திவ்ய பாடுகளின்மேல் பக்தியையும், சிலுவைப்பாதை செய்யும் பக்திமிகுந்த பழக்கத்தையும் பரப்பினார். மேலும் தன்னுடைய ஜீவியத்தில் தேவமாதாவிடமிருந்து பெற்ற சகல நன்மைகளுக்கு நன்றியறிந்த தோத்திரமாக, தேவமாதாவின் அமலோற்பவத்தின் மேல் கொள்ள வேண்டிய பக்தியையும் பரப்பி வந்தார்.

பொலோஞாவில் போதக பிரசங்கங்களை முடித்துக்கொண்டு, ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் மடத்திற்கு திரும்பிய அர்ச். லியோனார்டு, 1751ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் நாள் பாக்கியமாக மரித்தார். இவருடைய ஜீவியநாட்களிலேயே புதுமைகள் நிகழ்ந்திருந்தபோதிலும், இவர் இறந்தபிறகு, அனேக புதுமைகளால் இவரை மகிமைப்படுத்த சர்வேசுரன் சித்தமானார். உலகில் வாழ்ந்தபோதே, இவரை நன்கறிந்த ஆறாம் பத்திநாதர் பாப்பரசர், இவருக்கு, 1796ம்வருடம் முத்திப்பேறு பட்டமளித்தார். 9ம் பத்திநாதர் பாப்பரசர் 1867ம் ஆண்டு, ஜூன் 29ம் நாள், இவருக்கு அர்ச்சிஷ்ட பட்டமளித்தார். 11ம் பத்திநாதர் இவரை வேதபோதகதுறவியரின் பாதுகாவலராகப் பிரகடனப்படுத்தினார். 

இவருடைய திருநாள் நவம்பர் மாதம் 26ம் நாள். †

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 1-ம் தேதி* *The Circumcision of Our Lord*. *விருத்தசேதனத் திருநாள்

*LIVES OF SAINTS*
*அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்*

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த  அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே.  நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

*ஜனவரி மாதம் 1-ம் தேதி*
*The Circumcision of Our Lord*
*விருத்தசேதனத் திருநாள்*
  
*திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு*
*நிறைவேற்றப்படுகிறது.*

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு.  மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது.  இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள்.  இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும்.  நமது திவ்விய
கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக.  மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

*யோசனை*

நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.