Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 14 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 29



அர்ச். சாமிநாதர் ரெஜினால்டை சந்தித்தல் 



ரோமாபுரியில் மக்களிடையே ஞான ஜீவியம் மிண்டும் புதுப்பொலிவுடன் ஸ்திரமடைந்ததைக் குறித்து மகிழ்ந்த அர்ச்.சாமிநாதர், அம்மக்கள் உத்தம கத்தோலிக்க ஜீவியத்தில் நீடித்து நிலைத்திருப்பதற்காக ஜெபமாலை சபையை நிறுவினார். ஜெபமாலைசபையில் உட்படும் ஒவ்வொருவரும் தங்களுடைய ஜீவிய காலம் முழுவதும் தினமும் தங்களையே தேவமாதாவுக்கு அர்ப்பணித்து, அவர்களுக்குத் தோத்திரமாக 150 மணி அருள்மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதை ஜெபமாலை சபைவிதியாக ஏற்படுத்தினார். பக்தி மிகுந்த ஆண்களும் பெண்களும் உடனே அச்சபையில் சேர்ந்தனர். ஜெபமாலை சபை உறுப்பினர்கள் தங்களை அர்ச்சித்துக்கொள்வதுடன் ஆன்மஈடேற்ற அலுவலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டதால், விரைவிலேயே ரோம் நகரம் முழுவதும் உத்தம கத்தோலிக்க விசுவாசிகள் நிறைந்த நகரமாக மிளிர்ந்தது.

ரோம் நகரத்தையடுத்திருந்த அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலய வளாகத்தில் கட்டப்பட்ட தமது துறவிகளுக்கான மடத்திற்கு அர்ச்.சாமிநாதர் வந்த ஒரு மாதத்திற்குள்ளாக 40 இளைஞர்கள் மடத்திற்குள் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களுடன் வந்தனர். இதற்குள்ளாக, அர்ச்.சாமிநாதரைக் காண வரும் இளைஞர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பங்களையும் நண்பர்களையும் விட்டு விட்டு அவருடைய மடத்தில் சேர்ந்து, துறவிகளாகின்றனர் என்ற பேச்சு ரோம் நகரெங்கும் நிலவியது.

அர்ச்.சாமிநாதா; சிறுவயதுமுதற்கொண்டு தம்மையே ஆன்ம ஈடேற்றத்திற்காக சர்வேசுரனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபித்து வந்தார். இப்பொழுது, அவருடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் செவிசாய்த்தார். அது தான் இப்பொழுது அவர் இந்த இளைஞர்களிடையே அடையும் வெற்றிக்குக் காரணம். சாமிநாதர், “பரலோக பிதாவே! உமது அதிமிக தோத்திரத்திற்காக, என்னையும் எனது துறவற சபையின் சகோதரர்களையும் உமக்குகந்த கருவிகளாக பயன்படுத்தியருளும்” என்று அடிக்கடி வேண்டிக்கொள்வார். அதன் விளைவாக ஆண்டவர் அவருக்கு ஒரு நல்ல சீடரை அனுப்பினார். ஆர்லியன்ஸ் நகரத்தைச் சேர்ந்தவரும் பாரீஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ரெஜினால்டு என்பவர் ஆண்டவருடைய பரிசுத்த பூமிக்கு தவயாத்திரையாக மேற்கொண்ட பயணத்தின் நடுவே ரோம் நகருக்கும் வந்தார். 

உலக செல்வத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கியபோதும் ரெஜினால்டின் மனதில் அமைதியும் சமாதானமும் இல்லை. அர்ச்.சாமிநாதர் அவரை சந்தித்து சிக்ஸ்துஸ் தேவாலய வளாகத்தில் உள்ள தமது துறவிகளின் புதியமடத்திற்கு அழைத்துச் சென்றார். துறவற ஜீவியத்தைக் கண்ட ரெஜினால்டு, அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி! உங்களுடைய துறவற ஜீவியம், என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதற்கு உங்களுக்கு, என் பாராட்டுகள். இங்கிருக்கும் உங்களைப் பின்பற்றி வந்திருக்கும் இளந்துறவிகளுடைய உயர்கல்விக்கான படிப்பு, அவர்கள் ஆற்றும் ஞான பிரசங்கங்கள், அவர்கள் பொது விசுவாசிகளிடையே ஆற்றும் ஆன்ம ஈடேற்ற அலுவல்கள் ஆகிய அனைத்தும் மிக அருமையானவையாக இருக்கின்றன” என்று கூறினார். 

அதற்கு சாமிநாதர்,“ நீங்களும் எங்களுடன் சேர விரும்புகிறிர்களா?” என்று கேட்டார். 

அதற்கு அவர், “சுவாமி! அது என்னால் முடியாது. ஏனெனில், இந்த ஜீவியத்தின் நல்ல காரியங்களை என்னால் இழக்க முடியாது” என்றார். 

அப்பொழுது, அர்ச்.சாமிநாதர், ரெஜினால்டை உற்றுப் பார்த்தார். ரெஜினால்டு 30 வயதுடைய ஒரு இளைஞர். வசிகர தோற்றமுடைய இவ்விளைஞர் உலகைச் சார்ந்தவராக, உலக கவர்ச்சிகளில் தமது மனதைப் பறிகொடுத்தவராக இருப்பதை அர்ச்.சாமிநாதர் உணர்ந்தார். அதே நேரத்தில், ரெஜினால்டு, நல்லதைப் பற்றிக்கொள்வதில் நேர்மையானவரும் தீவிரமுள்ளவருமானவர் என்பதையும் சாமிநாதர், கண்டறிந்தார். அவர் மேலும் அர்ச்.சாமிநாதரிடம்,“சுவாமி! எனது பாலஸ்தீன தவயாத்திரையால் ஏற்கனவே என் பல்கலைக்கழக அலுவல் பல மாதங்களாக தாமதமடைந்துள்ளது” என்றார். 

அதற்கு அர்ச்.சாமிநாதர்,அவரிடம், “எதற்காக நீங்கள் நம் ஆண்டவருடைய பரிசுத்தபூமிக்கு செல்கிறீர்கள்?” என்று வினவினார். 

“சுவாமி! எனக்கிருக்கும் ஒரு பிரச்னையைத் திர்ப்பதற்காக நமதாண்டவருடைய கல்லறைக்கு செல்கிறேன்” என்றார் ரெஜினால்டு.

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 28



ரோம் நகரில் பிரசங்கித்தல் 



பாப்பரசரின் அனுமதியைப் பெற்றவுடன் சற்றும் தாமதிக்காமல் அர்ச்.சாமிநாதர், ஒவ்வொரு நாளும் ரோம் நகரமெங்கும் உள்ள தேவாலயங்களில் ஞானபிரசங்கங்களை நிகழ்த்தினார். “இப்பொழுது உங்களுடைய கவனமெல்லாம் பணத்தை சேர்ப்பதிலும், நண்பர்களைக் கொண்டிருப்பதிலும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதிலும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், எல்லாரும் இன்னும் சில அல்லது பல வருடங்கள் கழித்து இறந்துபோவோம் என்பது நிச்சயமான உண்மை. அப்போது, மரணமானது, இவற்றை எல்லாம் உங்களிடமிருந்து அகற்றி விடும். சாவு, நேருக்கு நேராக, நீதித் தீர்வையிடும் சர்வேசுரன் முன்பாக உங்களை இட்டுச் செல்லும். இந்த உலக ஜீவியத்தில் சர்வேசுரன் நமக்கு அனுப்பும் தேவவரப்ரசாதங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் நம் நேச ஆண்டவரை சிநேகிக்கும் உத்தமபுண்ணிய ஜீவியத்தில் நிலைத்து இருப்பவர்கள் அந்த நேரத்தில் பாக்கியமான நிலையில் சர்வேசுரனை சிநேகத்தின் அரசராகக் காண்பர். 

அப்போது, சாங்கோபாங்கத்தின் புண்ணிய ஜீவியத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாத கெட்ட கிறிஸ்துவர்களின் பயங்கரமான கதியை நினைத்துப்பாருங்கள். அவர்கள் என்னமாய்ப் போவார்கள்! வெறுமையான கைகளை உடைய மூடர்களாக, அதிபயங்கரமான தரித்திரர்களாக, நித்தியத்திற்கும் பரலோக ஜீவியத்தை இழந்தவர்களாக மாறுவார்கள், என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆ! எத்தகைய சோகமான நிகழ்வு அது. எப்படிபட்ட மிளாத் துயரத்திற்கு நீங்கள் ஒவ்வொரும் ஆளாவீர்கள். ஆனால், என்பிரியமானவர்களே! இன்னும் நேரம் இருக்கும்போதே, ஞானத்துடன் செயல்படுங்கள். 

நித்திய மோட்ச சம்பாவனையை அடைந்து கொள்வதற்காக இப்போதே புண்ணிய ஜீவியத்தைத் தொடங்குங்கள். இந்த உலகத்தில் இருக்கும்போதே, சர்வேசுரனை அறியவும், அவரை அறிந்து சிநேகிக்கவும், சிநேகித்து அவருக்கு உகந்தவிதமாக ஊழியம்செய்யும்படியாக தேவையான தேவவரப்ரசாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக பரலோகத் தந்தையிடம் மன்றாடுங்கள். உங்கள் ஜிவியத்தின் ஒவ்வொரு மணித்துளி நேரத்திலும் உங்களுடன் இருந்து, உலகம், பசாசு, சாரீரம் என்னும் ஞான சத்ருக்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும்படியாக தேவமாதாவிடம் தினமும் மன்றாடுங்கள். தேவமாதா சர்வேசுரனின் பரிசுத்த தாய். அவர்கள் மனுக்குல மக்களாகிய நம் அனைவருக்கும் தாய். நீங்கள் தினமும் தேவமாதாவை நோக்கி மன்றாடுவீர்களேயாகில், தாய்க்குரிய கனிவுள்ள இருதயத்தையுடைய தேவமாதா, உங்களுக்கு பாவத்தை மேற்கொள்வதற்கான ஞான பலத்தைத் தந்து உங்களை பாவத்தினின்று பாதுகாப்பார்கள்.

பிள்ளைக்குரிய மாசற்ற சிநேகத்துடன் தேவமாதாவை நீங்கள் நேசியுங்கள். நமது பரலோக இராக்கினியின் மாசற்ற இருதயத்திற்கு மிகப்பிரியமான பக்திமுயற்சியான 150 மணி அருள்நிறைமந்திரத்தின் சங்கித மாலையை (ஜெபமாலையை) தினமும் ஜெபியுங்கள். அப்போது மோட்ச இராஜ்யமானது நம்மிடையே தோன்றும். தீமையும் பாவமும் நம்மிடமிருந்து அகலும். நமது சத்திய வேதவிசுவாசம் உலகெங்கும் செழித்தோங்கும். பதிதமும் அவிசுவாசமும் அழிந்தொழியும். நமது வேதத்தை அனுசரிக்கும் விசுவாசிகள் அனைவரும் உத்தமதனத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து, அர்ச்சிஷ்டவர்களாவர்” என்று ரோமாபுரி மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களெங்கும் அர்ச்.சாமிநாதர் பிரசங்கித்து வந்தார். 

அதைக்கேட்ட மக்களிடம் இரட்சணியத்தின் மிது ஆவல் ஏற்பட்டது. அதற்கு அவசியமான உத்தமமான புண்ணிய ஜீவியத்திற்கு அனைவரும் மனந்திரும்பினர். வெதுவெதுப்புள்ள கிறிஸ்துவர்கள் இந்த ஞானப்பிரசங்கங்களைக் கேட்டதும் தங்களுடைய ஞான ஜீவியத்தின் மந்தநிலையைக் கண்டுணர்ந்தனர். உடனே அதற்குப் பரிகாரம் செய்யத் துவக்கினர். கடினப்பட்ட பாவிகள் ஆங்காங்கே இருந்த தேவமாதாவின் திரு ஸ்தலங்களில் இருந்த சுரூபங்கள் முன்பாக முழங்காலில் இருந்து ஜெபித்தனர். அதன்விளைவாக, நல்ல பாவசங்கிரத்தனம் செய்து மனந்திரும்பி வாழ்ந்தனர்.

நமதாண்டவரின் திவ்யபிறப்பு திருநாளின் திருவிழிப்பிற்கான ஞானதியான பிரசங்கம்: அர்ச்.பெர்னார்ட்.

 நமதாண்டவரின் திவ்யபிறப்பு திருநாளின் திருவிழிப்பிற்கான ஞானதியான பிரசங்கம்: அர்ச்.பெர்னார்ட்.

சுபாவத்திற்கு மேற்பட்டதும் சுபாவத்திற்காகவும், தன்னிகரற்ற உமது அற்புதத்தால் சுபாவத்தைக் கடந்ததும், ஆனால் அதே நேரத்தில் சுபாவத்தை உமது தேவஇரகசியத்தால் பரிகரிப்பதற்காகவும், நிகழ்ந்த ஓ அற்புத பிறப்பே! சர்வேசுரனின் குமாரன் பிறந்துள்ளார்: மகத்தானவற்றை ஆசிப்பவன் பேருவுவகை கொள்ளட்டும். ஏனெனில் மாபெரும் நற்கொடைகளை அளிப்பவர் இதோ வருகிறார்! சகோதரரே! இதோ எல்லாவற்றிற்கும் உரிமையாளர். இவ்வாறு, அவருடைய உரிமைச்சொத்தை நாமும் பெறும்படியாக, நாம் அவரை பக்திபற்றுதலுடன் வரவேற்போம். “நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்கு தானம் பண்ணாதிருப்பதெப்படி?” (ரோமர்.8:32). யூதாவின் பெத்லகேமில் சேசுகிறிஸ்து பிறந்தார். எளிய மக்களாகிய நம்மேல் கொண்ட அவருடைய அளவற்ற இரக்கத்தைப் பாருங்கள்! ராஜநகரமான ஜெருசலேமில் அல்ல அவர் பிறந்தது. மாறாக, யூதாவிலேயே தாழ்ந்த நகரமான பெத்லகேமில் பிறந்தார். ஓ சிறிய பெத்லகமே! இப்பொழுது உன்னை ஆண்டவர் மாபெரும் நகரமாக மாற்றினார்! மிகப்பெரியவரான சர்வேசுரன் உன்னிடத்தில் மிகச்சிறியவராக வந்ததால், உன்னை மிகப்பெரியதாக மாற்றினார். பெத்லகமே! களிகூர்வாயாக! உனது எல்லா தெருக்களிலும் திருவிழாவின் அல்லேலூயா கிதம் பாடப்படட்டும். அந்த மாபெரும் விலைமதிப்பில்லாத மாட்டுத் தொழுவத்தையும் திவ்யபாலன் படுத்துறங்கிய முன்னிட்டியையும்பற்றி கேள்வியுறும் மற்றெந்த நகரம் தான் உன்னைப் பார்த்து பொறாமைப்படாமல் இருக்கும்? இதிலிருந்து நாம் அறியவேண்டியது, பெத்லகேமில் பிறப்பதற்கு திருவுளமான திவ்ய கர்த்தர் எவ்வாறு அவரை நாம் வரவேற்கிறதை விரும்புகிறார் என்பதேயாம். அரசமாளிகையில், அரசருக்கெல்லாம் அரசருக்குரிய அரண்மனை மாளிகையில் அவர் மகிமையுடன் வரவேற்கப்படுவதையா அவர் விரும்பினார்? அல்லவே. இவற்றையெல்லாம் தேடி பரலோக சிம்மாசனத்தில் இருந்து அவர் கீழே இறங்கி பூமிக்கு வரவில்லை. மோட்சத்தில், நித்தியத்திற்குமாக அவையெல்லாம், ஏராளமாக உள்ளன. ஆனால் மோட்சத்தில் “தரித்திரம்” என்ற ஒன்றுதான் காணக்கிடைக்காததாக இருக்கிறது. 

பூமியிலோ, இது அதிகமாக, மிக அதிகமாக உள்ளது. மனிதர் இதன் விலைமதிப்பை அறியாதிருக்கின்றனர். இதனை ஆசித்து, அதைத் தமக்கே உரியதாக்கிக் கொள்ளவும், நம் அனைவருக்குமாக அதை விலையுயர்ந்த தாக்கும்படியாக, சர்வேசுரனின் திவ்யகுமாரன் பூவுலகிற்கு இறங்கி வந்தார். பூமியில் இருக்கும் சகல மனுமக்களே! புழுதியில் இருக்கும் நீங்கள் கேளுங்கள். உங்களையே உலுக்கிக் கொள்ளுங்கள். ஆண்டவரைப் பற்றி புகழ்ச்சி கீதங்கள் பாடுங்கள். இதோ! நோயாளிகளைச் சந்திக்க மருத்துவர் வருகின்றார்! அடிமைகளை மிட்பதற்கு இரட்சகர் வருகின்றார். தவறுபவர்களுக்கு நேரான பாதையைக் காண்பிக்கவும், இறந்தவர்களுக்கு ஜீவியத்தை அருளும்படியாகவும், வருகிறார். ஏனெனில் நமது பாவங்களை யெல்லாம், ஆழ்கடலில் எறிவதற்காக நம்மிடம் வருகிறார். அவர் நமது நோய்களை குணப்படுத்துவார். நம்மை அவரது தோள்களிலே சுமந்து தமது மகத்துவமிக்க அரியாசணைக்கு இட்டுச் செல்வார். அது மாபெரும் வல்லமை வாய்ந்ததாக திகழும். அதைவிட ஆச்சரியமிக்க விதத்தில் நமது மேல் அவர் கொண்டிருக்கும் எல்லையில்லா இரக்கமே, நமக்குத் துணை புரியும்படி அவரை நம்மைத் தேடி வரச் செய்தது.

ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட அதிபிரகாசமான அந்த நாளிலிருந்து விரட்டப்பட்டான். இக்குறுகிய இடத்தில் அடைபட்டான். இந்த இருண்டுபோன நாளுக்குள் வந்தான்.ஏனெனில் அவனுக்குள் இருந்த சத்தியத்தின் ஒளி அணைந்துபோனது. அந்த இருளான நாளில் தான் நாம் அனைவரும் பிறந்தோம். ஆயினும் சர்வேசுரனுடைய இரக்கமே, அணையாத ஒரு சிறு ஒளித்துகளை நமக்குள் விட்டு வைத்தது. சத்தியத்தின் ஒளியை அடைய விரும்பும் அனைவரையும் நீதியின் சூரியனான சர்வேசுரனுடைய ஏக குமாரனே, மாபெரும் ஒளியுடைய மெழுகு விளக்கு போல தம்மிடம் அழைக்கின்றார். அவரை அணுகிச்செல்வோர் அனைவரும் அவருடன், விளக்கில் நெருப்பும் ஒளியும் இணைந்திருப்பதுபோல ஒன்றிணைவர். எனவே, நாம் இவ்வுலகைவிட்டுப் பிரியும்போது நித்திய இருளுக்கு செல்லாதபடி, இந்த மகத்துவமிக்கதும் பிரகாசமிக்கதுமான நட்சத்திரத்தினின்று புறப்படும் சத்தியத்தின் அறியவியலுக்கான ஒளியினால் நம்மை ஒளிர வைத்துக்கொள்வோம். சர்வேசுரன், உங்களை குணமாக்கும்படியாக அர்ச்.கன்னிமாமரி வழியாக கிறிஸ்துவை உங்களுக்கு அளித்தார். 

அதில், கடவுளும் மனிதனும் சேர்ந்த ஒரு கலவை மருந்து, அதாவது உங்களுடைய குற்றங்குறைகளைத் தீர்ப்பதற்கான மாற்றுமருந்து உள்ளது. கட்டிட வேலைக்கு உலக்கையால் கலந்து செய்யப்படும், காரைச்சாந்து போல, அர்ச்.கன்னிமாமரியின் திருவுதரத்தில், கடவுள், மனிதன் என்னும் இரு வஸ்துக்களும் திவ்ய இஸ்பிரித்துவானவரால் கலக்கப்பட்டு தேவமனிதசுபாவம் உருவானது. கிறிஸ்துவைப் பெற உங்களுக்கு தகுதியில்லையாதலால், தேவமாதா மூலமாகவே நிங்கள் மோட்சத்திலிருந்து பெற விரும்பும் அனைத்தையும் அடையும்பொருட்டு, கிறிஸ்துவானவர் அர்ச்.கன்னிமாமரியிடம் கொடுக்கப்பட்டார். மாதாவே, உங்கள் அனைவருக்காகவும் சர்வேசுரனையே திவ்ய மகனாகப் பெற்றெடுத்தார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த தாயாக விளங்கும் தேவமாதாவிடம் நமக்குத் தேவையான பாவத்திற்கான மாற்றுமருந்தைக் கண்டடைகின்றோம். நித்தியத்திற்கும் பரிசுத்த கன்னிகையாக விளங்கும் தேவமாதாவிடம் நமக்கு தேவையான சகாயங்களை அடைகின்றோம். ஏனெனில், தேவமாதாவின் பரிசுத்த கரங்களின் வழியாக மட்டுமே அனைத்தும் மனுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படியாக சர்வேசுரன் திருவுளம் கொண்டுள்ளார்.

இன்று உங்களை பரிசுத்தப்படுத்தும்படியாக உங்களை ஆயத்தப்படுத்துங்கள். அப்பொழுது, நாளைக்கு, உங்களுக்குள் சர்வேசுரனுடைய மகத்துவமிக்க வல்லமை விளங்குவதை நிங்கள் காண்பீர்கள். மனித நாவால் விவரிக்கமுடியாத தேவஇரகசியமான நமது நேச ஆண்டவரின் திவ்யபிறப்பைக் கொண்டாடும் இவ்வேளையில், அன்பார்ந்த சகோதரரே! நம்மை அதற்குத் தகுந்தபடி எல்லாவிதத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ளும்படி, நாம் மெய்யாகவே இப்பொழுது எச்சரிக்கப்படுகின்றோம். ஏனெனில் பரிசுத்தருக்கெல்லாம் பரிசுத்தர்  இங்கு இருக்கின்றார். “நாம் உங்கள் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தராகையால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” (லேவி 19:2) என்று இங்கு விற்றிருக்கும் நம் ஆண்டவர் நம்மிடம் கூறுகின்றார். ஏனென்றால், பரிசுத்தமானதை நாய்களுக்கும், முத்துக்களை பன்றிகளுக்கும் போடாதபடிக்கு, இப்பரிசுத்த ஸ்தலத்திற்கு வருமுன் முதலில், நீங்கள், உங்களுடைய பாவங்களிலிருந்தும் அநீத இன்பங்களினின்றும் நீங்கி பரிசுத்தமாக வேண்டும்.

சகோதரர்களே! நாம் இதற்காகத் தான் ஜீவிக்கின்றோம். இதற்காகத் தான் இவ்வுலகில் பிறந்தோம். இதற்காகத் தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதற்காகத் தான் நமக்காக, இந்த நாள் இப்பொழுது தோன்றியுள்ளது. இருளடைந்த இரவாகவே ஒரு காலம் இருந்தது. அப்போது, யாரும் இந்த அலுவலை செய்யக் கூடாமலிருந்தனர். சத்தியத்தின் ஒளி தோன்றிய கிறிஸ்துவின் திவ்ய பிறப்பிற்கு முன்வரைக்கும் இந்த உலகம் முழுவதும் இரவின் இருளில் நிலைத்திருந்தது. “மனந்திரும்புதல்”; என்னும் நமது “அந்தரங்க மறுபிறப்பு” ஏற்படும் வரைக்கும் நாம் ஒவ்வொருவரும் இரவின் இருளிலேயே நிலைத்திருந்தோம். எனவே, இன்று, நம்மை அர்ச்சித்துக் கொள்வோம். மெய்யாகவே, இரவின் தூக்க மயக்கத்திலிருந்து எழுந்து, தெளிவடைவதற்காக நம்மையே உலுக்கிக்கொள்வோம். ஏனெனில் நாளைக்கு அர்ச்சிப்பிற்கான ஆயத்தம் செய்வதற்காக நேரம் நமக்கு கொடுக்கப்படாது. ஏனெனில், நாளைக்கு “உங்களுக்குள் தேவமகத்துவத்தைக் காண்பீர்கள்”; என்பதற்கேற்ப, இன்று நீதி விதைக்கப்படுகின்றது. நாளைக்கு அதற்கான தீர்ப்பைப் பெறுவோம். பரிசுத்த உத்தமதனத்தை இதுவரைக்கும் வெறுத்து வந்த மனிதனால் தேவமகத்துவத்தைக் காணமுடியாது. அவனால் மகிமையின் சூரியன், தன் மேல் உதயமாவதை இன்றும் காணமுடியாது. நாளையும் காணமுடியாது. ஏனென்றால் அவன்மேல் நிதியின் சூரியனானவர் எழுந்தருள மாட்டார். இன்று நமக்கு நிதியின் பிதாவாக விளங்கும் சர்வேசுரன், நாமும் அவருடன் நித்தியமகிமையில் தோன்றும்படியாக, நாளைக்கு நமது உயிரளிக்கும் நித்திய ஜீவியமாக நம்முன் தோன்றுவார். “சேசுகிறிஸ்து, சர்வேசுரனின் திவ்யகுமாரன் யூதாவின் பெத்லகேமில் பிறந்தார்” என்ற பரிபூரணமான தேவவரப்பரசாதத்தைக் கொண்டதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான வார்த்தையைக் கேட்டோம். ஆனால், பக்தியற்றவர்களும், நன்றிகெட்டவர்களும், கெட்ட கிறிஸ்துவர்களும் இதைப்பற்றி, “இது ஒன்றும் புதிதல்ல.  வெகுகாலத்திற்கு முன்பே இதை அறிவோம். வெகு நீண்ட காலத்திற்கு முன்பே கிறிஸ்து பிறந்தார்” என்று பேசாதிருப்பார்களாக! ஏனெனில், கிறிஸ்து, “நம்முடைய இக்காலங்களுக்கெல்லாம் முன்னரே பிறந்தார்” என்பதற்கு பதிலாக “எல்லா காலத்திற்கும் முன்னதாக பிறந்தார்” என்று நான் கூறுகின்றேன். ஆனால் திவ்ய கர்த்தரின் அந்த திவ்ய பிறப்பு இருளை தனது மறைவிடமாகக் கொண்டிருந்தது. அல்லது, நம்மால் காணக்கூடாத ஒளியினுள் குடியிருந்தது. பிதாவின் இருதயத்தினுள் அது மறைந்திருந்தது. தாம் ஓரளவிற்கு அறியப்படும் படியாக அவர் உலகிற்கு வந்து பிறந்தார். காலம் நிறைவுற்றபோது, அவர் மாமிசமெடுத்து பிறந்தார். எனவே, ஆத்துமங்களை எப்பொழுதும் புதுப்பிக்கும் ஆண்டவருடைய திவ்ய பிறப்பு, எப்பொழுதும் புதியதாகவே திகழ்கிறது. அது ஒருபோதும், பலனளிக்காத, உதிர்ந்துபோன பழைமையான நிகழ்வு அல்ல. நமது நேச ஆண்டவரின் திவ்ய பிறப்பு, பரிசுத்தமாக அழியாததாக, நம்மைப் பரிசுத்தர்களாக்குவதற்காக, நித்திய காலத்திற்குமாக நிலைத்திருக்கும்.

வியாழன், 13 ஜனவரி, 2022

அர்ச். சாமிநாதர் வாழ்க்கை வரலாறு - Part 1

 

அர்ச். சாமிநாதர் வாழ்க்கை வரலாறு

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 27

 பாப்பரசர் ஹொனோரியுஸ் சந்திப்பு 



“விலையுயர்ந்த மனுக்குலத்தின் இரட்சணியத்தின் கொடையையே நமக்கு பெற்றுத் தந்த மோட்ச இராக்கினி உங்களுடைய சாமானியதேவைகளை உங்களுக்கு தரமாட்டார்களா?” என்று அர்ச்.சாமிநாதர் அந்த நான்கு இளைஞர்களையும் கேட்டவுடன், அவ்விளைஞர்கள், சிறிது நேரம் தங்களுக்குள் சிந்திக்கலாயினர். இதுவரை இவ்வளவு தெளிவாக மோட்ச காரியங்களைப் பற்றி யாரும்தங்களிடம் விளக்கிக் கூறவில்லை என்றனர். இதே போல் பரிசுத்த காரியங்களைப் பற்றிய ஆழ்ந்ததும் எளிமையானதுமான விளக்கவுரைகளின் மூலமாக பிரான்சுநாட்டின் பதிதர்களையும் மதப்பற்றின்றி, தேவ நம்பிக்கையையும் வேத விசுவாசத்தையும் இழந்திருந்த அனேக இளைஞர்களையும் தன்பால் கவர்ந்து அர்ச்.சாமிநாதர் உத்தம கத்தோலிக்க வேத சத்தியங்களை அவர்களுக்கு போதித்து அவர்களை மனந்திருப்பினார். 

மனந்திரும்பியஅவ்விளைஞர்கள் உத்தமமான ஆத்தும இரட்சணிய ஆவலுடன் மற்ற ஆத்துமங்களையும் சர்வேசுரனிடம் மாதா வழியாகக் கொண்டு வரும் படிக்கு தங்களை தேவமாதாவுக்கு அர்ப்பணிக்க பற்றியெரியும் ஆவலுடன் விளங்கினர். அதே போல இப்பொழுது இந்த இளைஞர்களில் ஒருவனான கிரகோரி அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி, நீங்கள் ரோமாபுரிக்கு செல்லும்போது நானும் உங்களுடன் வரலாமா? என்னையும் உங்களுடைய சபைத் துறவியாக ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டான். அதன்பிறகு மற்ற மூன்று இளைஞர்களும், தாங்களும் ஆத்தும இரட்சணிய அலுவலில் உழைக்கும் படியாகவும் தேவமாதாவின் மகிமைகளைப் பற்றி மென்மேலும் கற்றுக் கொள்ளும்படியாகவும் தங்களையும் சாமிநாதரிடம், அவருடைய சபையில் துறவிகளாக சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்தனர். 

அர்ச்.சாமிநாதர் இளைஞர்களை உற்றுப் பார்த்து புன்முறுவலுடன் “என் பிள்ளைகளே! நிங்களும் என்னுடன் ரோமாபுரிக்கு வரலாம்” என்று கூறினார். பின்னர் தன் இளையசகாக்களுடன் சாமிநாதர் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகள் வழியாக இத்தாலியை அடைந்தார். 1217ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியை அடைந்தார். மிலான், வெனிஸ், பொலோஞா நகரங்களில் தங்கி ஞானபோதகங்களை பிரசங்கித்தவாறு தனது ரோமைநகர பயணத்தைத் தொடர்ந்தார். 1218ம் வருடம் ஜனவரி மாதம் ரோம் நகரத்தை அடைந்தார். பாப்பரசர் ஹொனோரியுஸ் அர்ச்.சாமிநாதாரையும் அவருடன் சென்றிருந்த இளைஞர்களையும் அன்புடன் வரவேற்றார். உடனே பாப்பரசர் அர்ச்.சாமிநாதருக்கு மாபெரும் விலையுயர்ந்த நன்கொடையை அளித்தார். அதுதான் அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலயம். “ரோம் நகரிலிருந்து சிறிது தூரத்தில் இந்த தேவாலயம் உள்ளது. ஆனால் அந்த இடம் உங்களுடைய துறவற மடத்திற்கு ஏற்ற இடம். அங்கு உங்களுடைய துறவற மடத்தைக் கட்டுவதற்கு திட்டமிடுங்கள்” என்று பாப்பரசர் கூறினார். 

“ஆம். பரிசுத்த தந்தையே! அதற்காகத் தான் இங்கு வந்தேன்” என்று சாமிநாதர் பதிலளித்தார். 

அதற்கு பாப்பரசர் புன்னகையுடன், “நான் உங்களுக்கு இந்த உதவியை செய்தேன் என்றால் அதற்கு பதிலாக ஒன்றை உங்களிடமிருந்து கேட்பேன். அது என்னவென்று உங்களால் ஊகிக்க முடியுமா?” என்று வினவினார். ஒரு நாடோடியும் ஏழைப் பிரசங்கியுமான தன்னால் பூலோகத்தில் ஆண்டவரின் பிரதிநிதியாக விளங்குபவருக்கு என்ன உபகாரம் செய்ய முடியும் என்று அர்ச்.சாமிநாதர் எண்ணினார். ரோம் நகரில் ஆங்காங்கே இருந்த கன்னியாஸ்திரிகளுடைய மடங்களையெல்லாம் ஒழுங்குபடுத்த விரும்பிய பாப்பரசரோ, சாமிநாதரிடம், "சுவாமி நீங்கள் இங்கிருக்கும் கன்னியர் மடங்களெல்லாம் ஒரே சபைவிதிமுறையைப் பின்பற்றி உங்களுடைய ஞான அதிகாரத்தின் கீழ் இயக்க ஆசிக்கிறேன். புரோயிலில் நிங்கள் ஏற்படுத்தியுள்ள கன்னியர் சபையின் ஒழுங்குகளையே இங்கு பயன்படுத்தலாம். ஆனால் பல சபைகளைச் சேர்ந்த கன்னியர்களிடமிருந்தும், அவர்களுடைய பெற்றோரிடமிருந்தும் ஏராளமான எதிர்ப்புகளை நிங்கள் சந்திக்க நேரிடும்" என்றார். 

அதற்குஅர்ச்.சாமிநாதர், "பரிசுத்த தந்தையே! கன்னியர்சபை சீர்திருத்த அலுவலை எப்பொழுது ஆரம்பிக்கலாம்? நான் அதற்கு தயார்" என்றார். 

அதற்கு பாப்பரசர், "அதற்கு முன்பாக நிங்கள் உங்களுடைய சபையை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளதே. அர்ச்.சிக்ஸ்துஸ் தேவாலய வளாகத்தில் உங்களுடைய சபை மடத்தை நிறுவ வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் முதலில் செய்து முடியுங்கள். அதன்பிறகு கன்னியாஸ்திரிகள் சபைசிர்திருத்த அலுவலை மேற்கொள்ளுங்கள்" என்றார். 

அதற்கு சம்மதித்த அர்ச்.சாமிநாதர், "பரிசுத்த தந்தையே! முன்பு நான் செய்து வந்ததுபோல இந்நகரத்தில் ஞான தியான பிரசங்கங்களை பிரசங்கிக்கலாமா? அதற்கு உங்களுடைய அனுமதி தேவை" என்றார். பார்ப்பரசரும் உடனே மனமுவந்து அர்ச்.சாமிநாதருக்கு ரோம் நகரமெங்கும் போதிப்பதற்கான அனுமதியும் அதற்கான ஆசிரையும் அளித்தார்.

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்தரம் அத்தியாயம் 26

விலையுயர்ந்த பொருள்

தன் சிடர்களை பாரிஸூக்கு அனுப்பியபிறகு அர்ச்.சாமிநாதர் தன் சிடர் சகோ.ஸ்டீபனுடன் ரோமுக்கு செல்ல திட்டமிட்டார். அப்போது புரோயிலில் இருந்த அவருடைய மடத்திற்கு நான்கு புதிய துறவற சகோதரர்கள் வந்ததால் சாமிநாதர் தமது ரோமைநகர பயணத்தை சிறிது காலத்திற்கு தள்ளி போட்டார். ஆர்னால்டு, ரோமியோ, போன்சியோ, மற்றும் ரேமண்டு என்ற அந்த நான்கு சகோதரர்களும் ஆன்ம தாகம் கொண்ட நல்ல இளைஞர்கள். ஆயினும் அவர்களுக்கு துறவற ஜீவியத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. எனவே துறவற ஜீவியத்திற்கான ஞானப்பயிற்சியை அவர்களுக்கு அளிக்க வேண்டியது மிக அவசியம் என்று சாமிநாதர் உணர்ந்தார். அதன்படி அர்ச்.சாமிநாதர், அவர்களுக்கு ஞானஜிவியத்திற்கான உத்தம பயிற்சியை அளித்து நல்ல துறவிகளாக உருவாக்கினார். 1217ம் ஆண்டு அக்டோபர் மாதம் நித்திய நகரமான ரோமாபுரிக்கான பயணத்தை சாமிநாதர் தன் சீடர்களுடன் துவக்கினார். 

அப்போது, சகோ.ஸ்டீபன் அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி, ரோமாபுரிக்கு நாம் தெற்குதிசையாகப் போகிறோமா அல்லது வடக்கு திசைவழி பயணத்தை மேற்கொள்கிறோமா?” என்று கேட்டார். 

அதற்கு சாமிநாதர், “தெற்கு நகரமான மார்சேல்ஸ் வழியாக சென்று மத்தியதரைக்கடல் நகரங்களின் வழியாக சென்றால் எளிதாக ரோமாபுரியை அடையலாம். ஆனால், வடக்குதிசையாகச் சென்றால், பாரீஸ் வழியாக செல்ல வேண்டும். அப்போது அங்கு புதிதாக சென்று மடத்தை  ஏற்படுத்தியிருக்கும் நமது மற்ற சகோதரர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள் என்பதையும் காணலாம். மேலும் பிரான்சின் வடக்குப் பகுதி மக்களுக்கு ஞானப்பிரசங்கியார்கள் தேவைப்படுகிறார்கள். எனவே நாம் அதிக தூர பயணமானாலும் இந்த வடக்குதிசைவழி பயணத்தையே மேற்கொள்வோம்” என்றார். அதேபோல் அவர்கள் பாரிஸ் சென்றபோது, அங்கு சாமிநாதர், தன் சீடர்கள், பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒரு சிறு இல்லத்தை வாங்கி அதை புதிய மடமாக மாற்றியிருந்ததைக் கண்டார். அம்மடத்தை அர்ச். யாகப்பருடைய பாதுகாவலில் அர்ப்பணித்திருந்தனர். மேலும் அங்கு தன் சீடர்கள் துறவற ஒழுங்குகளை நன்றாக கடைபிடித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதையும் சாமிநாதர் கண்டார். 

அம்மடத்தின் துறவற சகோதரர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் வேத இயல் மற்றும் வேதாகமத்தைப் பற்றிய துறைகளில் சேர்ந்து கல்வி பயின்று வந்தனர். பிறகு, அங்கிருந்து சகோ ஸ்டீபன் பிறந்த நகரமான, மெட்ஸ் என்ற பெல்ஜிய நகரத்தை அடைந்ததும், சகோ.ஸ்டீபன் தங்களுடன் தங்கி விடுவதற்கு, அந்நகர மக்கள் அர்ச்.சாமிநாதரிடம் அனுமதிவேண்டினர். அந்நேரத்தில் மெட்ஸ் நகரத்திற்கு ஒரு ஞானப்பிரசங்கியார் அவசியமாகத் தேவைப்பட்டதை சாமிநாதரும் அறிவார். சகோ.ஸ்டீபன் நல்ல பிரசங்கியாராகவும் அனுபவமிக்க வேதபோதகருமாக விளங்கினார். அதனால் அவர் அங்கு தங்குவாரேயானால், ஓரிரு வருடங்களுக்குள்போதிக்கும் துறவிகளுக்கான ஒரு மடத்தை துவக்க முடியும் என்பதையும் சிந்தித்தவராக அர்ச்.சாமிநாதர் அவ்வூர் மக்களைப் பார்த்து, “ நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். சகோ.ஸ்டீபன் இங்கு தங்கினால் அவர் அனேக நன்மைகளைச் செய்யக் கூடும்” என்று கூறினார். இதுவரை தானும் தன் சபைத் தலைவருடன் ரோமாபுரிக்கு செல்வோம் என்றும் அங்கு மோட்சத்தைப் பற்றியும், சர்வேசுரனின் மகத்துவத்தைப் பற்றியும் சகல அர்ச்சிஷ்டவர்களைப் பற்றியும் அர்ச்.சாமிநாதர் ஆற்றவிருக்கும் அரிய பிரசங்கங்களைக் கேட்கப் போகிறோம் என்றும் எண்ணியிருந்த சகோ.ஸ்டீபன், தனக்கு வந்திட்ட இந்த திடீர் பொறுப்பைப் பற்றி திடுக்கிட்டார். இருப்பினும், அர்ச்.சாமிநாதர் தனக்களித்திட்ட இப்பொறுப்பு சர்வேசுரனிடமிருந்தே வந்ததாக எண்ணியவராக சகோ.ஸ்டீபன் உடனே அதற்கு சம்மதித்தார். அவர் அர்ச்.சாமிநாதரிடம், “சுவாமி, என்னால் கூடுமான அனைத்தையும் செய்து இந்நகர மக்களுக்கு உதவுவேன். ஆனால் நிங்கள் எனக்காக எப்பொழுதும் உங்கள் ஜெபத்தில் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கேட்டார். அதற்கு அர்ச்.சாமிநாதர், “நமது ஆண்டவருடைய பிடசந்நிதானத்தில் தினமும் நான் உம்மை நினைவுகூருவேன்” என்று பதிலளித்தார். பிறகு சாமிநாதர் தன் சிடரிடமிருந்தும் அந்நகரத்தாரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு தன் பயணத்தை, தெற்கு ஜெர்மானிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக ஞானப்பிரசங்கங்களை நிகழ்த்திக் கொண்டே, ரோம்நகரை நோக்கித் தொடர்ந்தார். வெண்கம்பளியினாலும் கறுப்பு அங்கியினாலுமான அவருடைய துறவற உடுப்பு எண்ணற்ற மக்களை சாமிநாதர்பால் ஈர்த்தது. அதற்குமேலாக பக்திபற்றுதலையும் தேவசிநேக நெருப்பையும் கேட்பவர் இருதயங்களில் ஏற்படுத்திய அவருடைய ஞானமிக்க பிரசங்கங்கள் மக்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. 

அவர் சென்ற இடமெல்லாம் ஏராளமான மக்கள் தங்களுடைய பாவ ஜீவியத்தை விட்டு நல்ல பாவசங்கீரத்தனம் செய்து உத்தம கத்தோலிக்க ஜீவியத்திற்கு திரும்பினர். தன்னை சந்தித்த மக்கள் சத்திய வேதத்தைப் பற்றிக் கேட்ட வினாக்களுக்கெல்லாம் தெளிவானதும் இலகுவானதுமான விடைகளை மிக இனிமையாகக் கூறினார். பல ஊர்களில் மக்களிடையே நிகழ்ந்த பற்பல சண்டை சச்சரவுகளை திர்த்து சமாதானத்தை ஏற்படுத்தினார். ஒரு நாள் சாமிநாதர் கிரகோரி, ஹென்றி, ஆல்பர்ட், ஓத்தோ என்ற நான்கு இளைஞர்களை சந்தித்தார். அவர்களுடைய கிராமத்தில், அர்ச்.சாமிநாதர் தேவமாதாவைப்பற்றி நிகழ்த்திய ஞானப்பிரசங்கமே அவர்கள் அவரைச் சந்திக்கும்படிச் செய்தது. அவ்விளைஞர்கள் சாமிநாதரிடம், “சுவாமி! நாங்கள் இதுவரை தேவமாதாவைப்பற்றி இவ்வளவு அருமையான பிரசங்கத்தைக் கேட்டதில்லை. கேட்பவர் யாவரும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில், தாங்கள் பரலோக இராக்கினியான சர்வேசுரனுடைய மாதாவைப் பற்றிக் கூறியவையெல்லாம் உண்மைதானே?” என்று வினவினர். 

அதற்கு அர்ச்.சாமிநாதர் புன்முறுவலுடன் அவ்விளைஞர்களை நோக்கி, “நான் உண்மையையே தான் எப்பொழுதும் பேசுவேன் என் அன்பார்ந்த பிள்ளைகளே!” என்றார். 

அதற்கு கிரகோரி அவரிடம், “அர்ச்.கன்னிமரியம்மாள் ஒருபோதும் நமது ஜெபத்தின் மன்றாட்டைப் புறக்கணிக்கமாட்டார்கள். நம்மைக் கைவிடமாட்டார்கள்” என்று நீங்கள் கூறினீர்கள்” என்றான். 

அதற்கு அர்ச்.சாமிநாதர், “ஆம். அவ்வாறு தான் நான் கூறினேன்” என்றார். “ஆனால், நான் அனேக முறை தேவமாதாவிடம் பல நன்மைகளுக்காக ஜெபத்திருக்கிறேன். அவர்கள் எனக்கு அவற்றை தந்ததில்லை.” என்று கிரகோரி கூறினான். 

“ ஆம். எனக்கும் தான்” என்று ஓத்தோவும் அவனுடன் சேர்ந்து கூறினான்.

 இதைக் கேட்ட அர்ச்.சாமிநாதர் சற்று நேரம் சிந்தித்துவிட்டு அவர்களிடம், “இதுவரை உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தவற்றிலேயே யார் அதிக விலையுயர்ந்த பொருளைக் கொடுத்தார்?” என்று கேட்டார்.

அதற்கு கிரகோரி, “சுவாமி! என் தந்தையார் பெரிய பணக்காரர். என்னுடைய 18வது பிறந்த நாள் பரிசாக இரத்தினங்களும் மாணிக்கங்களும் வைரங்களும் பதியப்பெற்ற ஒரு வாளைப் பரிசாகக் கொடுத்தார். அதன் விலை மிக அதிகம்” என்று கூறினான். 

பிறகு, ஓத்தோ, “சுவாமி! என் தந்தை அவ்வளவு பெரிய பணக்காரர் அல்ல. இருப்பினும் கடந்த வருடம் எனக்கு அவர் தன்னுடைய குதிரையையே பரிசாகக் கொடுத்தார். அது காற்றைப் போல வேகமாக ஓடும். அதற்காக நான் அவருக்கு நான் சரியாக நன்றிகூட கூறவில்லை” என்றான்.

பிறகு அர்ச்.சாமிநாதர் ஆல்பர்ட், ஹென்றி என்ற மற்ற இருவரையும் நோக்கி “ பிள்ளைகளே! உங்களுக்குக் கிடைத்த அதிமிகு விலையுயர்ந்த பொருள் என்ன?” என்றார். 

அவர்கள் இருவரும் மற்றவர்களைப் போல இல்லாமல் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஹென்றி தனக்குள்ள அபாரமான ஞாபக சக்தியையே தனக்குக் கிடைத்த விலைமதிப்பில்லாத கொடை என்று கூறினான். ஆல்பர்ட், ஆரோக்கியமான நோயற்ற சரீர சுகத்தையே தனக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை என்று கூறினான். இவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்.சாமிநாதர், அவ்விளைஞர் களிடம், உலகெங்குமுள்ள கிறிஸ்துவர்களெல்லாம் கொண்டிருக்கும் ஒப்பற்ற கொடை மனுக்குலத்தின் இரட்சணியமே என்று தெளிவாகக் கூறினார். அக்கொடை ஒன்றே அவர்களுக்கு இலவசமாக நித்திய பரலோக ஜிவியத்தைப் பெற்றுத் தரக்கூடியது என்றும் விளக்கினார்.

மேலும், “சர்வேசுரனுடைய நித்திய ஞானத்திட்டத்தின் பிரகாரம், அத்தகைய அற்புத கொடையான இரட்சணியத்தை சர்வேசுரனிடமிருந்து, பரிசுத்த மாதாவே நம் அனைவருக்கும் பெற்றுத் தந்தார்கள். மங்களவார்த்தையின் போது, நம்மேல் கொண்ட அளவில்லா சிநேகத்தினால், மனுக்குலத்தின் இரட்சணியத்தையே தமது “ஆகட்டும்” என்ற வார்த்தையால் சாத்தியமாக்கிய தேவமாதா நிங்கள் கேட்கும் இந்த சாமானிய உதவிகளைக் கொடுக்காமல் விட்டுவிடுவார்களா?” என்று சாமிநாதர் அவர்களிடம் வினவினார். 

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 25

வந்.ஃபல்குவஸ் ஆண்டகை சாமிநாதரை சந்தித்தபோது நிகழ்ந்த உரையாடல்


பாப்பரசர் ஹோனொரியுஸிடமிருந்து தன் சபைக்கு அங்கிகாரம் பெற்ற பிறகு ரோமாபுரியில் தங்கி பாப்பரசருடைய விருப்பத்திற்கு ஏற்ப சிறிது காலம் ஞானபிரசங்கங்களை நிகழ்த்திய பிறகு சாமிநாதர் தூலோஸிலுள்ள தன் சபை மடத்திற்கு திரும்பினார். 1216ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி தேவமாதா பரலோகத்திற்கு ஆரோபனமான திருநாளன்று புரோயிலுள்ள தேவமாதாவின் தேவாலயத்தில் சபையின் அதிபராக நின்று, தன் சபைத் துறவிகளின் நிரந்தர வார்த்தைப்பாட்டை ஏற்றுக் கொண்டார். அப்போது தன் சபையின் இளந்துறவிகளை உலகின் நான்கு திசைகளுக்கும் அனுப்புவதாகத் தெரிவித்தார். பாரிஸூக்கு சென்று அங்குள்ள பல்கலைக் கழகத்தின் அருகில் ஒரு மடத்தை ஏற்படுத்துவதற்காக சபையின் 7 சகோதரர்களும் அனுப்பப்படுவர் என்றும் 4 சகோதரர்கள் மாட்ரிட் நகருக்கும் புரோயிலிலுள்ள கன்னியரை கவனிக்கும்படியாக அங்கு 2 சகோதரர்கள் அனுப்பப்படுவர் என்றும் தூலோஸில் 2 சகோதரர்கள் தங்கும்படியாகவும் பெல்ஜியத்திலிருந்து வந்த சகோ.ஸ்டீபன் தன்னுடன் மற்றொரு ரோமாபுரி பயணத்தை மேற்கொள்ளவும் சாமிநாதர் ஏற்பாடு செய்தார். இதைப்பற்றிக் கேள்விப்பட்ட வந்.ஃபல்குவஸ் ஆண்டகை சாமிநாதரை சந்தித்தபோது இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல்:

“உங்கள் சபைத் துறவிகளை அதற்குள்ளாக பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறீர்களே, அவர்கள் இளந்துறவிகளல்லவா? அவர்கள் குருப்பட்டம் பெறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறதே, இந்நிலையில் அவர்களை மற்ற இடங்களுக்கு வேதபோதகத்திற்கும் மடங்களையும் நிறுவுவதற்கும் அனுப்புவது ஏற்புடைய காரியமா?”

“ஏனென்றால், ஆண்டவரே! ஒரு நொடிப்பொழுது நேரத்தையும் நாம் வீணடிக்கக்கூடாது”

“நேரத்தை வீணடிக்கக் கூடாதா?”

“ஆண்டவரே! புதித தப்பறை எங்கும் பரவியுள்ளது. ஐரோப்பா முழுவதற்குமாக ஞான பிரசங்கங்களை நிகழ்த்துவதற்கு போதகர்கள் தேவைப்படுகிறார்கள்”

“ஆனால், அதற்காக எவ்வாறு இந்த 18 அல்லது 20 வயதுடைய பையன்கள், அதற்கு உதவக்கூடும்?”

இதற்கு அர்ச்.சாமிநாதர் புன்னகையுடன், “ஆண்டவரே! பையன்கள் என்று நீங்கள் குறிப்பிடும் இந்த இளந்துறவிகள் சர்வேசுரனையும், அவருடைய பரிசுத்த தாயாரையும் சிநேகிக்கிறார்கள். ஆதலால், அவர்கள்மேல் நான் முழு நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். பாரீஸ் மற்றும் மாட்ரிட் நகரத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அருகில் தான் அவர்கள் மடங்களில் தங்கியிருப்பார்கள். அதனால் அவர்களுடைய மேல் படிப்பை எளிதில் தொடர முடியும். அங்கு அவர்கள் மற்ற மாணவர்களுடன் தங்கி அவர்களுடைய ஜீவிய முறையை உத்தம கிறிஸ்துவ ஒழுங்கிற்குக் உயர்த்திக் கொண்டு வரமுடியும்” என்றார்.

“அவர்கள் தங்களுடைய துறவற ஜீவியத்திலேயே பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முடியுமா?”

“ஆம். ஆண்டவரே!”

“இது வழக்கத்திற்கு முரணாக இருக்கிறதே”

“சிறிதளவு ஆழ்ந்த படிப்பு, அதிக ஜெபமும் தியானமும் இணைய வேண்டும். அப்பொழுது சர்வேசுரன் மற்றதைக் கவனித்துக் கொள்வார்”

“உங்களுடைய இந்த உதவியாளர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவராயும் மற்றவர்கள் சிறு பையன்களாகவும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களை தனியாக பாரிஸூக்கும் மாட்ரிட் நகருக்கும் நீங்கள் அனுப்புவது ஞானமான ஒரு செயல் என்று நிச்சயித்திருக்கிறிர்களா?”

“ஆண்டவரே! இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எல்லாம் நலமாக நடைபெறும். நான் அதை நிச்சயமாக அறிவேன்” என்று வழக்கம்போல பரலோக சமாதானம் மிளிரும் கண்களுடன் அர்ச்.சாமிநாதர் பதிலளித்தார்.

அர்ச்.சாமிநாதர் தன் இளந்துறவிகளுக்கு சிறு ஞானவாசகத்துடன் கூடிய தியானத்தைப் பயிற்றுவித்தார். அவர்களும் ஞானவாசகமாக சுவிசேஷத்தை சிறிது நேரம் படித்துவிட்டு பிறகு தேவாலயத்திற்கு சென்று மகா பரிசுத்த தேவநற்கருணையை ஆராதித்தபிறகு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடலாயினர். பிறகு அவர்கள் தங்கள் மனதில் எழும் வினாக்களுக்கான தெளிந்ததும் ஆழமானதுமான விளக்கங்களை தங்கள் அதிபர் சுவாமியாரான அர்ச். சாமிநாதரிடம் கற்றுத் தேர்ந்தனர். பிறகு அர்ச்.சாமிநாதர், அவர்களுடைய புதிய வேதபோதக அலுவலைப்பற்றி மிகுந்த உற்சாகத்துடனும் அவர்களுடைய இருதயத்தில் உத்வேகத்தைத் தூண்டும்படியாகவும் பிரசங்கித்தார். அர்ச். சாமிநாதர் விவரித்த இப்புதிய முறையில் சர்வேசுரனுக்காக உழைப்பது மிக விசேஷ அழைத்தலாகும் என்று அவருடைய சீடர்கள் உணரலாயினர். அப்போது சகோ.ஜான் சாமிநாதரை சந்தித்து அவரிடம் பின்வருமாறு உரையாடினார்:

“தந்தையே! எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஒருவேளை பாரீஸூக்கோ அல்லது மாட்ரிட் நகருக்கோ நாங்கள் பயணத்தை மேற்கொள்ளம்போது வழியில் எங்களில் ஒருவருக்கு நோய் வந்தால் என்ன செய்வது? எங்களிடம் ஒரு காசும் கிடையாதே? மக்கள் யாரும் எங்களுக்கு தர்மம் ஏதும் செய்யாமல் விட்டால் நாம் என்ன செய்ய முடியும்?”

“சர்வேசுரன் அப்போஸ்தலர்களைப் பராமரித்தது போல உங்களையும் பராமரித்துப் பாதுகாப்பார் என்று பலமுறை நான் உங்களிடம் கூறியிருக்கிறேனே”

“ சுவாமி! இந்த விஷயத்தில் என் விசுவாசம் மிக பலவீனமாயிருக்கிறது”

“பல முறை இவ்விஷயத்தைப் பற்றி நாம் பேசியிருக்கிறோமே. சிறிது நேரத்திற்கு முன் சபை அதிபரான எனக்கு எல்லாவற்றிலும் கிழ்ப்படிவதாக வார்த்தைப்பாடு கொடுத்தீரே. மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து பாரிஸூக்கான பயணத்தை மேற்கொள்விராக!”

“ஆம்.சுவாமி. ஆனால் இது என்னால் கூடாத காரியம். நான் ஒரு பிச்சைக்காரனாக முடியாது”

இதைக் கேட்டதும் அர்ச்.சாமிநாதர், பசாசின் தந்திர சூழ்ச்சியில் சகோ.ஜான் உழல்கிறார் என்பதை உணர்ந்தார். உடனே அதை மேற்கொள்வதற்கான வழியையும் கண்டுபிடித்தார். உடனே அதை மேற்கொள்வதற்கான வழியையும் கண்டுபிடித்தார். கீழ்ப்படியாத சகோ. ஜானை உடனே தண்டித்திருக்கலாம்.

ஆனால் அதனால் யாதொரு கோபத்திற்கும் உட்படாமல் அர்ச்.சாமிநாதர் அந்த இளந்துறவியின் தேவ அழைத்தலுக்கே கேட்டை விளைவிக்க பசாசினால் ஏவப்பட்ட இந்த சோதனையிலிருந்து ஜானைக் காப்பாற்றும்படியாக சாமிநாதர் ஜானிடம், “மகனே உமக்கு பயண செலவுக்கு பணம் தானே வேண்டும். இதோ அதற்கான ஏற்பாட்டைச் செய்கின்றேன்” என்று கூறிக் கொண்டே ஒரு பணப்பையைக் கொண்டு வந்து சகோ.ஜானிடம் கொடுத்தார். உடனே சகோ.ஜான் கண்ணிர் மல்க அர்ச்.சாமிநாதர் முன்பாக முழங்காலில் இருந்தார். 

பிறகு அர்ச்.சாமிநாதர் அந்த நான்கு சீடர்களையும் ஆசீர்வதித்தார். தேவமாதாவை நோக்கி அனைவரும் மன்றாடியபிறகு, அவர்கள் 360 மைல் கல் தொலைவிலுள்ள பாரிஸை நோக்கிப் பயணமானார்கள். அவர்கள் சென்றதும் அர்ச்.சாமிநாதர் தேவமாதாவின் தேவாலயத்திற்கு சென்று ஜெபத்தில் ஆழ்ந்தார். அவருடைய முகம் சோகமாக இருந்தது. தன் சீடர்களை மிகவும் நேசித்த சாமிநாதர் அவர்களுடைய பிரிவை தாங்கமுடியாதவராக இருந்தார். மேலும் ஜானுடைய தேவ அழைத்தலுக்காகவும் அவருடைய பலவீனமான வேதவிசுவாசம் பலமடையும்படியாகவும் தேவமாதாவிடம் மன்றாடினார். 


Please click here to Read more Saint Stories

புதன், 12 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்தரம் அத்தியாயம் 23

 அர்ச்.சாமிநாதரின் புதுமைகள்


1211ம் ஆண்டு பதிதர்களிடையே பிரசங்கிப்பதற்காக தூலோஸ் நகரத்தில் வேதபோதகர்கள் தங்கி இருந்தபோது அர்ச்.சாமிநாதர் காரோன் நதிக்கரையில் இருந்த ஒரு சிற்றாலயத்தில் வழக்கம்போல ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது காம்பொஸ்தெல்லா நகரிலுள்ள அர்ச். யாகப்பருடைய தேவாலயத்தை நோக்கி தவயாத்திரையாக இங்கிலாந்திலிருந்து 40 யாத்ரிகர்கள் அந்த ஆற்றை ஒரு படகில் கடக்க முயன்றனர். அப்போது படகு அதிக பாரத்தால் தலைகீழாக கவிழ்ந்து மூழ்கியது. உடனே அருகிலிருந்த வீரர்கள் இதைக் கண்டு அலறினர். அவர்களுடைய அலறல் சத்தம் அர்ச்.சாமிநாதரை, அவருடைய ஆழ்ந்த ஜெபத்திலிருந்து எழுப்பியது. அவர் ஆற்றங்கரைக்கு வந்தார். அப்போது ஆற்றில், படகையும் அதில் பயணம் செய்த ஒருவரையும் காணவில்லை. உடனே சாமிநாதர் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து மௌனமாக ஜெபித்து ஆண்டவரை மன்றாடினார். பிறகு அவர் உன்னதமான தேவவிசுவாசத்தில் ஒளிர்பவராக, ஆற்றில் கவிழ்ந்த படகின் திசையில், “யாதொரு சேதமுமில்லாமல் உயிருடன் கரைக்கு வந்து சேரும்படியாக, நம் ஆண்டவர், சேசு கிறிஸ்துநாதர் சுவாமியின் நாமத்தினாலே, உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று கட்டளையிட்டார். அந்நேரமே, தவயாத்திரைக்கு வந்த பயணிகள் அனைவரும் உயிருடன் ஆற்றுத் தண்ணீருக்குமேலே வந்தனர். அங்கிருந்த படை வீரர்களின் உதவியுடன் அனைவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர். தாங்கள் இவ்வாறு புதுமையாக உயிர் பிழைத்ததற்காக சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தினர். அப்புதுமை நிகழக் காரணமான அர்ச்.சாமிநாதருக்கும் நன்றி செலுத்தினர். 

வேறொரு சமயம் அர்ச்.சாமிநாதர் ஏரியஜ் ஆற்றை ஒரு பாலத்தின் வழியாகக் கடக்க நேரிட்டபோது அந்த ஆற்றில் அவர் புத்தகங்களை தவறவிட்டு விட்டார். 3 நாட்களுக்குப் பிறகு, ஒரு மீனவன் அந்த புத்தகங்களை கண்டெடுத்தான். அப்புத்தகங்கள் புதுமையாக தண்ணீர் படாமல் முழுவதும் காய்ந்திருப்பதைக் கண்டு வியந்தான். ஒரு சமயம், அதே ஆற்றை ஒரு படகில் கடந்தார். படகு ஆற்றின் மறுகரைக்குச் சென்றதும் படகோட்டி அவரிடம் படகுசவாரிக்கான கட்டணத் தொகையைக் கேட்டான். அப்போது அர்ச்.சாமிநாதர் தன்னிடம் யாதொரு பணமும் இல்லாததைக் கண்டு படகோட்டியிடம், “ நான் நமது ஆண்டவராகிய சேசுகிறிஸ்துநாதருடைய சிடன். எனவே பொன்னோ,  வெள்ளியோ என்னிடம் இல்லை. நான் எதையும் எடுத்து செல்ல மாட்டேன். என்னை நீ இங்கே கொண்டு வந்து விட்டதற்காக சர்வேசுரனே உனக்கு தேவையானதைத் தருவார்” என்று கூறினார். அதற்கு அப்படகோட்டி, சாமிநாதரிடம் அவர் அணிந்திருந்த அங்கியை அதற்கு பதிலாக தரும்படி கேட்டான்.  உடனே அர்ச்.சாமிநாதர் பரலோகத்தை நோக்கி தமது கண்களை உயர்த்தி ஜெபித்தார். பிறகு படகோட்டியிடம் தரையில் புதுமையாக தோன்றிய ஒரு வெள்ளி நாணயத்தைக் காண்பித்து, “என் பிரிய சகோதரரே! இதோ நீ  கேட்ட பணம். அதை எடுத்துக் கொள். நான் செல்கிறேன். என்னைப் போக விடு” என்று கூறினார்.

கர்தினால் ரானியரி கப்போச்சி என்பவர் அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த காலத்தில் ஜிவித்தவர். அவர் பின் வரும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றார்: ஒருதடவை அர்ச்.சாமிநாதர் வேறொரு நாட்டில் ஒரு பயணத்தில் இருந்தபோது அவருடன் வேறொரு துறவற சபையைச் சேர்ந்த துறவி ஒருவருடன் சில நாட்கள் தொடர்ந்து செல்ல நேர்ந்தது. இருவரும் வெவ்வேறு மொழி பேசியதால், அவர்களால் எதைப்பற்றியும் உரையாட இயலவில்லை. ஆயினும் அர்ச். சாமிநாதருடன் உரையாடுவது என்பது தன் ஆத்துமத்திற்கு மிகவும் பயனளிக்கும் என்று உணர்ந்த அந்தத் துறவி இரகசியமாக சர்வேசுரனிடத்தில் மன்றாடினார். அர்ச்.சாமிநாதர் பேசுவது தனக்கும், தான் பேசுவது அவருக்கும் புரிய வேண்டுமென்று ஆண்டவரிடத்தில் வேண்டினார்.

அத்துறவியின் மன்றாட்டிற்கு சர்வேசுரன் உடனே செவி சாய்த்தார். அதன்பிரகாரம் இருவரும் அவரவருடைய மொழியில் பேசியபோதும் ஒருவருக்கொருவர் புதுமையாகப் புரிந்துகொண்டு உரையாடிச் சென்றனர். இந்த வரம் அவர்களுடைய பயணம் முடிவடையும் வரையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

ஒரு சமயம் அர்ச்.சாமிநாதர் இரவு முழுவதும் பதிதர்களுடன் தர்க்கித்தபோது, சத்தியவேதத்தின் உன்னதமான சத்தியங்களை எடுத்துக் கூறி அவற்றைத் தெளிவிப்பதில் ஈடுபட்ட பிறகு, ஒரு சிஸ்டர்ஷியன் துறவியுடன் தன் வழக்கத்தின்படி அருகில் இருந்த தேவாலயத்திற்கு ஜெபிப்பதற்காக சென்ற போது அந்தக் கோவில் பூட்டப்பட்டிருக்கக் கண்டார். உடனே இருவரும் கோவிலுக்கு வெளியே முழங்காலில் இருந்து ஜெபிக்கலாயினர். உடனே அவர்கள் இருவரும் புதுமையாக, கோவிலுக்குள்ளே பிரதான பெரிய பீடத்தின் முன் இருக்கக் கண்டனர். காலையில் விடிந்தவுடன் ஏராளமான வியாதியஸ்தர்களும் பேய்பிடித்தவர்களும் அர்ச். சாமிநாதர் அருகே கொண்டுவரப்பட்டனர். திவ்யபலிபூசைக்கு அணிவது போல ஸ்டோலை (Stole) அவர் தன் தோள்களில் கட்டிக் கொண்டார். பிறகு அதை வியாதியஸ்தர்மேலும் பேய்பிடித்தவர்கள் பேரிலும் அவர்களுடைய கழுத்தின் மேல் போட்டார். போடவே அவர்களுடைய வியாதியும் பசாசும் அவர்களை விட்டு பறந்தோடின.


Please click here to Read more Saint Stories

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 5 - Life History of Martin de Porres in Tamil

 அர்ச். மார்டின் தே போரஸ் 




பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் 1579ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை ஜான் தே போரஸ், ஸ்பெயின் நாட்டின் அரச அலுவலர். இவருடைய தாய், அன்னா வெலாஸ்குவஸ், நிக்ரோ இனத்தை சேர்ந்தவர். தன் தாயைப் போலவே கறுப்பாக இருந்ததால், குழந்தைப் பருவத்தில் இவர் தன் தந்தை உட்பட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டார். குழந்தைப் பருவத்திற்கு தேவையான யாதொரு பராமரிப்பு போஷாக்கும் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். சிறுவயதில் ஒரு நல்ல இருதயம் கொண்ட மருத்துவர் இவருக்கு பலவித நோய்களைக் குணமாக்கும் மருத்துவ முறையைக் கற்றுக் கொடுத்தார். 

மிகச் சிறு வயதிலேயே இவர் தன் தாயிடமிருந்து நன்றாக பக்தியுடன் ஜெபிக்கக் கற்றுக் கொண்டார். சிறு வயது முதல் மார்டின் ஆண்டவருடைய பாடுகளின் மேல் மிகுந்த பக்தி கொண்டு விளங்கினார். நேச ஆண்டவருடைய திவ்ய இரட்சணியத்தால் மனுக்குலம் முழுவதும் அடைந்த அளவற்ற தேவ ஆசீர்வாதங்களுக்குக் கைம்மாறாக எவ்வாறு நன்றி செலுத்துவது என்று தனக்குத் தெரிவிக்கும்படியாக, இவர் தன் வாழ்நாள் முழுவதும் திவ்ய இரட்சகரிடம் மன்றாடி வந்தார். லிமா நகரில் இருந்த அர்ச்.சாமிநாதரின் “Holy Rosary” துறவறமடத்தில் ஒரு தாழ்நிலை வேலைக்காரராக சேர்வதற்காக விண்ணப்பித்தார்.

அம்மடத்துத் தலைவரும் இவரை தன் மடத்தில் சேர்;த்துக் கொண்டார். கழிவறை உட்பட அந்த மடத்தை முழுவதும் சுத்தம் செய்வது, நோயுற்றிருக்கும் துறவிகளுக்கு பணிவிடை செய்தல் மற்றும் துணிகளை சலவை செய்தல் போன்ற பல கடைநிலை அலுவல்களை, சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, சர்வேசுரனுக்காகவே செய்வதுபோல மிகுந்த மகிழ்வுடன் செய்து வந்தார். எப்பொழுதும் துடைப்பத்தை இவருடைய கையில் காணலாம். பல ஆண்டுகாலம் இவ்வாறு மடத்தில் ஊழியம் செய்து வந்த மார்டின், இறுதியில் அம்மடத்துத் துறவற அதிகாரிகளுடைய ஆணைக்குக் கிழப்படிந்து அர்ச்.சாமிநாதர் சபையின் துறவற சகோதரராக வார்த்தைப்பாடு கொடுத்து சபையின் அங்கியை அணிந்து கொண்டார். அர்ச்.மார்டின் இந்த துறவற அந்தஸ்தை தன் தகுதிக்கு மேலாக கிடைத்த மாபெரும் பேறு என்று எண்ணி அதற்காக சர்வேசுரனுக்கு இடைவிடாமல் நன்றி செலுத்திவந்தார். தன் பக்தி நிறைந்த ஜெபங்களின் உதவியாலும் தன் திறமையாலும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதிலும் திராத நோய்களை குணமாக்குவதிலும் கைதேர்ந்து விளங்கினார். அதனால் இவருடைய புகழ், பெரு நாட்டைக் கடந்து வெளி நாடுகளிலும் பரவியது. ஒரு குருவானவருடைய புரையோடிய புண்ணினால் பழுதடைந்திருந்த ஒரு காலை புதுமையாக குணப்படுத்தினார். ஒரு குருமாணவனின் துண்டிக்கப்பட்ட கைவிரலைக் குணப்படுத்தி குருத்துவத்திற்கு தகுதியுடைவராக்கினார். மேலும் அனேக ஏழை எளிய நோயாளிகளுடைய குணமாக்கமுடியாத வியாதிகளையும் அர்ச்.மார்டின், அற்புதமாக தன் ஜெபத்தினாலும் மருத்துவத்தினாலும் குணமாக்கினார்.

ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்கும் குணாதிசயத்தை, அர்ச்.பதுவை அந்தோணியாரைப் போன்ற அர்ச்சிஷ்டவர்கள் பெற்றிருந்த அரிய வரத்தை, அர்ச்.மார்டின் தே போரஸ் புதுமையாகப் பெற்றிருந்தார். இவரை மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களும் பார்த்துள்ளனர். ஆனால் அர்ச்.மார்டின் ஒருபோதும் லிமாவிலுள்ள தன் மடத்தை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. கதவு திறக்கப்படாமலே அறைகளுக்குள் புதுமையாக செல்வதும் அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான மருந்துகளையும் உணவுகளையும் ஆறுதலையும் கொடுப்பதும் அர்ச்.மார்டினுக்கு வழக்கமாயிருந்தது. நோயால் வாடிய மாடு, நாய் போன்ற விலங்குகளும் அர்ச்சிஷ்டவரைத் தேடி வந்தன. அவரும் அவைகளை நோயினின்று காப்பாற்றினார். அர்ச்.மரியம்மாளும் அர்ச்.மார்த்தம்மாளும் இந்த அர்ச்சிஷ்டவரிடத்தில் ஒருங்கே காணப்படுகிறார்கள். அதாவது நல்ல பாகத்தைத் தேர்ந்தெடுத்த அர்ச்.மரிய மதலேனம்மாளைப் போல ஆண்டவருடைய ஞானமொழிகளைக் கேட்டு தியானித்து ஜெபத்தில் ஈடுபடுவதிலும் தொடர்ந்து நிலைத்திருந்தார். அதே நேரத்தில் அர்ச்.மார்த்தம்மாளைப் போல இவருக்குக் கொடுக்கப்பட்ட துப்புரவு வேலை மற்றும் நோயாளிகளைக் கவனிப்பது போன்ற புறஅலுவல்களிலும் நுட்பமான விதத்தில் ஈடுபட்டார். இவருடைய ஒரு கரம் துடைப்பத்தைப் பிடித்து துப்புரவு செய்து கொண்டிருந்தாலும் மற்றொரு கரத்தால் தனது சட்டைப்பைக்குள் இருந்த ஜெபமாலை மணிகளைப் பிடித்தபடி, அவருடைய இருதயம் மிகவும் பரிசுத்த தேவமாதாவின் மகிமைகளை தியானித்தபடி, எப்பொழுதும் ஜெபமாலை ஜெபித்தபடி இருக்கும். அல்லது மனவல்லிய ஜெபங்களை ஜெபித்தபடி இருப்பார். இவ்வாறாக அர்ச்சிஷ்டவர், ஒரு இமைப்பொழுதையும் விணடிக்காமல், எப்பொழுதும் சர்வேசுரனுடன் ஐக்கியமானவராக, பரலோக வாசத்தில் சஞ்சாரம் செய்தார்.

பகல் நேரம் முழுவதும் எல்லா வேலைகளிலும் ஈடுபட்டிருந்தாலும் இரவு நேரம் முழுவதும் பிணியாளிகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருப்பார். இடையில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் தன் அறையிலேயே மேல் கூரையில் புதுமையாக அந்தரத்தில் இருப்பார்0 பாடுபட்ட சுருபத்தை மிகுந்த பக்தி பற்றுதலுடன் பார்த்துக் கொண்டே ஆழ்ந்த ஜெபதியானத்தில் மூழ்கியிருப்பார். அம்மடத்துக் குருமாணவர்கள் தங்களுடைய வேத இயல் மற்றும் தத்துவ இயல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கங்களை அர்ச்சிஷ்டவரிடம் கேட்டுத் தெளிவடைவர். அவரும் தன் துப்புரவு வேலையை செய்துகொண்டே, மிகுந்த ஞானத்துடன் மிக எளிய முறையில் அவர்களுக்கு அவற்றை விளக்குவார். இவ்வாறாக அர்ச்.மார்டின் தே போரஸிடம் தேவசிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் போன்ற கிறிஸ்துவ புண்ணியங்கள் அசாதாரண முறையில் விளங்கின. ஒரு சமயம் மடத்தில் எலிகளால் மிகுந்த தொல்லை ஏற்பட்டது. உடனே மடத்தின் அதிபர் அர்ச்.மார்டினிடம் எலிகளை விஷம் வைத்துக் கொல்லும்படி கூறினார். மார்டினும் உடனே அதிபருக்குக் கீழ்ப்படிந்து தோட்டத்திற்குச் சென்றார்.

எலிகளை தம்மிடம் வரும்படி கூப்பிட்டார். எலிகளும் அவரருகில் வந்தன. அவர், “நீங்கள் மடத்தின் துணிகளையும் உணவுப் பொருட்களையும் நாசப்படுத்தி ஏன் மடத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்கிறீர்கள்? இதோ அதிபர் சுவாமியார் உங்களைக் கொல்லச் சொன்னதால் இந்த விஷத்தை உங்களுக்காக இங்கு வைக்கிறேன். அதிபரை இனிமேல் இவ்வாறு நிங்கள் கோபப்படுத்தாமல் இருந்தீர்களேயானால் நான் உங்களுக்கு நிச்சயமாக இதே இடத்தில் தினமும் உணவளிப்பேன்” என்று எலிகளிடம் கூறினார். அந்த எலிகளும் அர்ச்.மார்டின் கூறிய அனைத்தையும் ஆமோதிப்பது போல் அசைவற்று நின்றன. பிறகு அவற்றை அங்கிருந்து செல்லும்படி அனுப்பி விட்டார். அவரும் வாக்களித்தபடி தன் ஜீவியகாலம் முழுவதும் எலிகளுக்குத் தேவையான உணவை தோட்டத்தில் வைத்து வந்தார். அந்நாள் முதல் கொண்டு இந்நாள்வரைக்கும் “Holy Rosary” மடத்திற்கு எலிகளால் யாதொரு தொந்தரவும் ஏற்படவில்லை. வேறொரு சமயம் நவசந்நியாசிகள் சிலருடன் அர்ச்.மார்டின் வெளியே ஓரிடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும்போது மிகவும் பிந்திவிட்டது. மாலை ஆராதனை(Vespers) நேரத்திற்குள் மடத்திற்கு திரும்ப வேண்டும் என்பது மடத்தின் ஒழுங்கு. இவர்கள் இருந்த இடம் மடத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. ஜெபத்திற்கு நிச்சயமாக தாமதமாகிவிடும் என்று உணர்ந்த அர்ச்சிஷ்டவர் நவசந்நியாசிகள் அனைவரையும் ஒருவர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் சேர்ந்து நிற்கச் சொன்னார். பிறகு கண்மூடி திறப்பதற்குள் அனைவரும் மடத்தின் வளாகத்திற்குள் புதுமையாக வந்து சேர்ந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். 

1639ம் ஆண்டு தமது 60வது வயதில் பாக்கியமாக மரித்தபோது பெரு நாடே துக்கத்தில் ஆழ்ந்தது. பெரு நாட்டின் உயர் அதிகாரிகளும் திருச்சபை அதிகாரிகளும் அர்ச்சிஷ்டவருடைய சடலத்தை மிகுந்த பக்தி வணக்கத்துடன் அடக்கம் செய்தனர். 1962ம் ஆண்டு மே 5ம் நாளன்று இவர், 23ம் அருளப்பர் பாப்பரசரால் அர்ச்சிஷ்டவராக பீடத்திற்கு உயர்த்தப்பட்டார்.


அர்ச்.மார்டின் தே போரஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!


Click here to read more Saints Stories....

செவ்வாய், 11 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்தரம் அத்தியாயம் 24

 மனம் திரும்பிய ஆல்பிஜென்சிய பதித பெண்கள் 

ஒருசமயம் தூலோஸ் நகரில் உயர்குடி பெண்கள் பலர் ஒரு விடுதியில் வசித்து வந்தனர். அங்கு அவர்களுக்கு போலியான பதித போதகங்களையும், போலியான வெளிவேட தபசையும் காண்பித்து ஆல்பிஜென்சிய பதித போதகர்கள் தங்கள் வசம் அப்பெண்களை ஈர்த்துக் கொண்டிருந்தனர். இதையறிந்ததும் அப்பெண்களை மனந்திருப்பும் திட்டத்துடனும், தபசுகால பிரசங்கங்களை நிகழ்த்துவதற்காகவும் அந்நகருக்கு வந்த அர்ச்.சாமிநாதர், தேவபராமரிப்பினால், அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே ஒரு அறையில் தன்னுடன் வந்திருந்த ஒரு சீடருடன் தங்கும்படியாயிற்று. தபசும் ஒறுத்தலும் நிறைந்த உத்தமமான துறவற ஜீவியம் என்ன என்பதை அப்போது அப்பெண்கள் நம் அர்ச்சிஷ்டவருடைய ஜீவியத்தைக் கண்டு உணர்ந்து கொண்டனர். 

அர்ச்.சாமிநாதருடைய ஜிவியமுறையானது தங்களை இதுவரை பெரிதும் கவர்ந்துவந்த ஆல்பிஜென்சிய பதிதருடைய வாழ்க்கைமுறையை விட மாபெரும் விதத்தில் உயர்ந்ததும் மேன்மையானதுமாக திகழ்வதை அந்த விடுதியில் வசித்த பெண்கள் கண்டுணர்ந்தனர். மிருதுவான படுக்கை விரிப்புகளை ஒருபோதும் பயன்படுத்தாமல் வெறும் தரையிலேயே அர்ச்.சாமிநாதரும் அவருடைய சீடரும் இரவு நேரங்களில் படுத்து உறங்கினார்கள். பாஸ்குத் திருநாள் வரை தபசுகாலம் முழுவதும் சொற்ப உணவையே உண்டனர்.  வெறும் ரொட்டியும் தண்ணீருமே ஆகாரமாயிருந்தது. இரவு நேரம் முழுவதும் தபசிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்தனர். பகல் நேரங்களில் சர்வேசுரனின் அதிமிக மகிமைக்காக உழைப்பதிலும் ஆத்தும இரட்சணிய அலுவலிலும் ஈடுபட்டனர். இப்புதியதும் உன்னதமானதுமான கத்தோலிக்க கிறிஸ்துவ துறவறஜீவியமானது பரலோக வல்லமையால் அதைக் காண்பவரின் இருதயங்களை தேவ விசுவாச சத்தியத்திற்கு திறந்துவிட்டது.

அவ்விடுதியில் வசித்த அனைவரும் அர்ச்.சாமிநாதரின் கரங்களாலேயே தங்களுடைய வேதவிசுவாசத்தைப் புதுப்பித்துக் கொண்டனர். “சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக நமது ஒளி மனிதர் முன் ஒளிரும்படியாக திகழும் இத்தகைய கடின தபசையும் ஒறுத்தலையும் கொண்ட பரிகார ஜீவியமான பரிசுத்த துறவற ஜீவியமே ஞான பிரசங்கங்களை விட பலமடங்கு ஞானபலன்களை ஏராளமாக பெறுவிக்கவல்லது” என்று அர்ச்.சாமிநாதர் தன் சிடர்களிடம் அறிவுறுத்தினார்.

தூலோஸ் நகரத்தில் திருச்சபை அதிகாரிகளால் பிடிபட்ட ஆல்பிஜென்சிய பதிதர்கள் அரசாங்கத்தின் நீதி விசாரணைக்குக் கையளிக்கப்பட்டபோது அவர்கள் பதித தப்பறையை விட்டு விடாமல் பிடிவாதமாக மனந்திரும்ப மறுத்தனர். மனந்திரும்புவதற்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நீண்டகால அவகாசத்திற்குப் பிறகு நிதிவிசாரணையாளரான அரசாங்க அதிகாரிகள் அப்பதிதர்களை நெருப்பிலே தள்ளிக் கொல்லும்படி திர்ப்பிட்டனர். அப்பதிதர்களில் ஒருவனை அங்கு வந்திருந்த அர்ச்.சாமிநாதர் பார்த்தார். அவனைப் பற்றிய வருங்கால இரகசியங்களை சர்வேசுரனே தேவ பராமரிப்பினால் அர்ச்.சாமிநாதருடைய இருதயத்தால் அறியும்படிச் செய்தார். உடனே சாமிநாதர் நீதி விசாரரணையாளரான அலுவலர் ஒருவரிடம் அந்தப் பதிதனைச் சுட்டிக் காட்டி, “அவனுக்கு யாதொரு திங்கும் நேராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார். பிறகு அந்தப் பதிதனை மிகவும் கனிவுடன் நோக்கி அர்ச்.சாமிநாதர், “என் மகனே! உனக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஏனெனில், ஒருகாலத்தில் நீ  ஒரு அர்ச்சிஷ்டவனாக மாறுவாய்”என்றார். இம்மனிதன் பிற்காலத்தில் தொடர்ந்து 20 வருடங்களாக தான் பற்றியிருந்த பதித இருளில் இருந்த போதிலும், அதன்பிறகு, சர்வேசுரனுடைய தேவவரப்ரசாதத்தால் தொடப்பட்டவனாக, தன் பதித தப்பறைகளை உணர்ந்து பதிதத்தை விட்டு விலகினார். உத்தம சாங்கோபாங்கத்தில் உயர்ந்து அர்ச்.சாமிநாதசபையில் உட்பட்டு பாக்கியமான மரணத்தை அடைந்தார்.


Please click here to Read more Saint Stories

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 22

கரடு முரடான பாதை 

ஒரு சமயம் ஆல்பிஜென்சிய பதிதர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு மேற்றிராணியார் வெகு ஆடம்பரத்துடன் வந்ததைக் கண்ட அர்ச்.சாமிநாதர், மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தார். சர்வேசுரனுடைய எளிய ஊழியரான அர்ச்.சாமிநாதர் அந்த மேற்றிராணியாரிடம், “என் தந்தையே! ஆங்காரத்தின் சந்ததியினரை நாம் இந்தக் கோலத்தில் சந்திப்பது ஏற்கமுடியாத ஒன்றாகும். சத்தியத்திற்கு எதிரிகளான இப்பதிதர்களை உன்னத நற்புண்ணியங்களான தாழ்ச்சியினாலும் பொறுமையினாலும் மட்டுமே முறியடிக்கமுடியும். மாறாக இந்த பகட்டான உலக ஆடம்பரங்களால் அல்ல. எனவே ஜெபத்தினாலும் தாழ்ச்சியினாலும் நம்மை உடுத்திக்கொள்வோமாக. பாதணிகூட இல்லாமல் இந்த கோலியாத்துகளுக்கு எதிராக செல்வோம்” என்றார். சாமிநாதரின் இந்த அறிவுரைகளுக்கு உடனே முழுவதும் பணிந்தவராக அந்த மேற்றிராணியார் தனது ஆடம்பரமான வஸ்திரங்களையும் மிதியடிகளையும் எல்லாம் களைந்து விட்டு தவசங்கிதங்களைப் பாடிக் கொண்டே அர்ச்.சாமிநாதரின் போதக துறவியருடன் பதிதர்களை சந்திக்கச் சென்றார். அப்போது அவர்களுக்கு வழிகாட்ட வந்த, பதிதர்களுடைய தூதுவன் ஒருவன் அவர்களைக் காயப்படுத்தவும் சஞ்சலப்படுத்தவும் வேண்டுமென்றே முட்புதர் நிறைந்த மோசமான பாதையின் வழியாக அவர்களைக் கூட்டி வந்தான். அதனால் அவர்களுடைய பாதங்கள் முட்களாலும் கற்களாலும் காயப்பட்டு வழியெல்லாம் இரத்தம் சிந்தின. இந்த துன்பத்தையம் வேதனையையும் சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும்படி தனது குழுவினரிடம் கூறி மிகுந்த மகிழ்வுடன் அவர்களை உற்சாகப்படுத்திக கொண்டே சென்றார். 

“ என் பிரிய சகோதரரே! சர்வேசுரனில் நம்பிக்கை கொள்ளுங்கள். நமக்கு வெற்றி நிச்சயம். ஏனெனில் நமது பாவங்களுக்காக நமது இரத்தத்தால் இப்போது பரிகாரம் செய்கிறோம். “சமாதானத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு வருபவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகானவை” என்று எழுதப்பட்டுள்ளதல்லவா?” என்று கூறினார். அதன்பிறகு, ஒரு சங்கீதத்தை மிகுந்த இனிமையான குரலில் பாடினார். அதைக் கேட்ட அவருடைய குழுவினர் அனைவரும் உற்சாகமும் மனத்திடனும் தங்கள் இருதயங்களில் நிரம்பப்பெற்றவர்களாய் அர்ச்.சாமிநாதருடன் சேர்ந்து அந்த சங்கீதத்தை மிகுந்த மகிழ்வுடன் பாடிச் சென்றனர். (தொடரும்)


உங்களுக்குத் தெரியுமா?

சைமன் டி மோன்ஃபோர்ட், அர்ச்.சாமிநாதருடன் சேர்ந்து ஆல்பிஜென்சியருக்கு எதிராக புரிந்த போரில் படைத் தளபதியாக இருந்த மாபெரும் விரர். ஒரு சமயம் 400 குதிரை விரர்களுடனும் சொற்ப தரைப்படை விரர்களுடனும் பதிதர்களுக்கு எதிராக போருக்கு சென்றபோது, மூரட் நகரத்தில் ஆரகன் நாட்டு அரசன் 40,000 படை வீரர்களுடன் வந்து சைமன் டி மோன்ஃபோர்;டை முற்றுகையிட்டான். அவர் ஒரு தேவாலயத்தில் திவ்யபலி பூசை பக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த முற்றுகையைப் பற்றி அவருக்கு அறிவித்த படையின் அலுவலர்களிடம் அவர், “திவ்யபலி பூசை முடியட்டும். பிறகு நான் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்” என்றார். திவ்யபூசை முடிந்தவுடன் அவர் தன் படைகளிடம், சர்வேசுரன் மேல் முழுநம்பிக்கை கொள்ளும் படியாக அறிவுறுத்தினார். நகரத்தின் வாசல்களைத் திறக்கக் கட்டளையிட்டார். பிறகு எதிரிகளுடைய படையை அதன் மத்தியப் பகுதியை தாக்கி, நேராக உட்புகுந்து ஆரகன் நாட்டு அரசனை விழ்த்தினார். உடனே பதிதருடைய படை சிதறி பின்வாங்கி ஓடியது. இவ்வாறு, சைமன் டி மோன்ஃபோர்ட் திவ்ய பலிபூசையின் மகத்துவமிக்க வல்லமையால் வெற்றிபெற்றார்.

திங்கள், 10 ஜனவரி, 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 21


அர்ச்.இராயப்ர், அர்ச்.சின்னப்பருடைய காட்சி



“இப்புதிய பாப்பரசர், முந்தைய பாப்பரசர், சாந்தப்பரைப் போல நம்மிடம் கனிவுடன் நம்மைப் புரிந்து கொள்பவராக இருப்பாரோ? நமது துறவற சபைக்கு உத்தரவ அளிப்பாரோ?” என்றெல்லாம் அர்ச்.சாமிநாதர் கலக்கமுற்றார். ஒரு நாள் இரவு அர்ச்.இராயப்பர் தேவாலயத்தில் தனது வழக்கப்படி, அர்ச்.சாமிநாதர் ஆழ்ந்த ஜெபத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு பரலோகக் காட்சியின் வழியாக, அவருடைய இருதயத்திற்கு சமாதானம் கொடுக்கப்பட்டது. உன்னதமான தேவவரப்பரசாதம் அவர்மேல் பொழியப்பட்டது. அர்ச்.இராயப்பரும், அர்ச்.சின்னப்பரும் அவருக்குத் தோன்றி, அவரிடம், “உலகெங்கும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய். இந்த அலுவலுக்காகவே நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்” என்று கூறினார்கள். பிறகு, அர்ச்.இராயப்பர், அவரிடம் தவயாத்திரையினர் எடுத்துச் செல்லும் ஒரு கோலை வழங்கினார். அர்ச்.சின்னப்பர் ஒரு சுவிசேஷப் புத்தகத்தைக் கொடுத்தார். இந்தக் காட்சி மறைந்தது. அதன்பிறகு, இரண்டாவது காட்சியில், தனது போதக துறவிகள் இருவர் இருவராக உலகெங்கும் சென்று வெள்ளை மனிதர், கறுப்பு மனிதர் மற்றும் மஞ்சள் நிறமனிதர் என்று சகல ஜாதி ஜனங்களுக்கும் சர்வேசுரனுடைய வார்த்தையானவரைப் பற்றி பிரசங்கிக்க செல்வதைக் கண்டார். நீண்ட நேரத்திற்குப் பிறகே, அர்ச்.சாமிநாதர், இந்தப் பரலோகக் காட்சிகளிலிருந்து விடுபட்டு சுயநினைவை அடைந்தார். அக்காட்சிகளின் அர்த்தத்தை உணர்ந்தபோது, அவருடைய சபைக்கான பாப்பரசரின் அனுமதியைப் பற்றி அவர் கொண்டிருந்த குழப்பம் மறையவே, அவருடைய இருதயத்தில் பரலோக சமாதானம் குடிகொண்டது. உடனே மிகுந்த பக்தி பற்றுதலுடன் சர்வேசுரனுக்கு நன்றியறிந்த ஜெபத்தை ஜெபிக்கலானார்.

அர்ச்.சாமிநாதரின் விசுவாசத்துக்கு பலனாக, பாப்பரசர் விரைவிலேயே ரோமாபுரிக்கு திரும்பி வந்தார். இருவரும் மிக நெருங்கிய நண்பர்களானார்கள். அர்ச்.சாமிநாதரின் பரிசுத்ததனமும் ஆன்ம இரட்சணிய ஆவலும் ஹொனோரியுஸ் பாப்பரசரை அர்ச்.சாமிநாதரிடம் வெகுவாக கவர்ந்திழுத்தது. அர்ச்.சாமிநாதருடைய சபையின் போதக அலுவல் மற்றும் அதனுடைய செயல்பாட்டுத் திட்டங்கள் மிக்க தெளிவாக விளக்கப்பட்டபோது, பாப்பரசர் தமது முழு இருதயத்துடன் உடனே அச்சபைக்கு ஒப்புதல் அளித்தார். பல அதிகராபூர்வமான ஆவணங்களைக் கொண்டு, பாப்பரசர், திருச்சபையின் அங்கிகார மடலை அர்ச்.சாமிநாதரின் சபைக்கு அளித்தார்: “உமது துறவற சபைச் சகோதரர்கள் உலகை ஒளிர்விக்கும் சத்திய ஒளியினுடையவும் விசுவாசத்தினுடையவும் தீரர்களாக விளங்குவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, தற்பொழுதும் இன்னும் வருங்காலத்திலும் இந்த துறவற சபையை அதற்குச் சொந்தமான நிலம் மற்றும் உடைமைகள் அனைத்துடனும் நிச்சயித்து அங்கிகரிக்கின்றோம். மேலும் இந்த துறவற சபையை அதன் அனைத்து உடைமைகள், சுதந்திரங்களுடன் நமது நேரடி ஆளுகை மற்றும் பாதுகாப்பின்கீழ் நாமே நிர்வகிப்போம்” என்று அந்த ஆணைமடல் எழுதப்பட்டது. இதனால் அர்ச்.சாமிநாதர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். 

தனது சபைமடத்திற்கு செல்வதற்காக பிரான்சு நாட்டிற்கு உடனே திரும்பிச் செல்லும் எண்ணத்துடன், பாப்பரசர் தனது சபையை அங்கீகரித்து அதற்கான ஆசிரளித்தமைக்காக நன்றி செலுத்துவதற்காக பாப்பரசரை சந்தித்தார். அப்போது, பாப்பரசர், அர்ச்.சாமிநாதரிடம், “என் மகனே! உங்களுடைய பிரான்சு செல்லும் பயணத்தை சிறிது காலம் தள்ளிவைத்தால் நான் மகிழ்வேன். ரோமாபுரியில் இன்னும் சில வாரங்கள் நீங்கள் தங்க முடியமா?” என்றார். அதற்கு, “இன்னும் சில வாரங்களா? பரிசுத்த தந்தையே?” என்று சாமிநாதர் வினவினார். பாப்பரசர், “ஆம். நீங்கள் உங்களுடைய சபைதுறவிகளிடம் உடனே திரும்புவதாக வாக்களித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இந்த ரோமாபுரி நகரத்து மக்களுக்கும் நல்ல ஞான பிரசங்கியார்கள் மிக அவசியமாகத் தேவைப்படுகிறார்கள். உங்களுடைய ஞான போதகங்களை இவர்கள் கேட்பதற்கு இந்நகரத்தின் மக்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கலாமல்லவா?” என்று பதிலுரைத்தார்.

இவ்வாறு தம்முடன் தங்க வைத்து ரோமாபுரியின் மக்களுக்கு ஞான பிரசங்கங்களை ஆற்றுவதற்கு தன்னை பாப்பரசர் அழைப்பது, தனக்கு மாபெரும் பெருமையான காரியம் என்று உணர்ந்த சாமிநாதர் உடனே பாப்பரசரின் வேண்டுகோளை ஏற்று அவருடன் சில வாரங்கள் தங்கினார். பாப்பரசரின் ஏற்பாட்டின்படி, ரோமாபுரியில், அர்ச்.சாமிநாதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவாலயத்தில் பிரசங்கம் செய்தார். அவர் ஒவ்வொரு நாளும் அங்கு மிக முக்கியமான மனிதர்களை சந்திக்கலானார். அர்ச். பிரான்சிஸ் அசிசியாரை அவர் அங்கு அடிக்கடி சந்தித்தார்.

அர்ச்.சாமிநாதர் இவ்வாறு ரோமாபுரியில் தினமும் தேவாலயங்களில் ஞானபிரசங்கங்களை ஆற்றத் துவக்கிய ஒருசில நாட்களுக்குள்ளேயே மக்களிடையே வெகுவாய் பிரபலமானார். அப்பொழுது ரோமில் இருந்த கர்தினால் உகோலினோ (பிற்காலத்தில் 9ம் கிரகோரியார் பாப்பரசர்) அர்ச்.சாமிநாதரைப் பற்றி, “நான் இதுவரைக் கேள்விப்பட்டதில் சங்.தோமினிக் சுவாமியார் தான் மிகச் சிறந்த பிரசங்கியாராகத் திகழ்கின்றார். அவருடைய ஞானபிரசங்கங்களைக் கேட்ட அநேக மாபெரும் பாவிகள் மனந்திரும்பியுள்ளார்கள்” என்று கூறினார். அதற்கு மற்றொரு கர்தினால், “அது மிகச்சரியே! மேலும் தாங்கள் ஒன்றை கவனித்திர்களா? இளைஞர்கள் அனைவரும் எவ்வாறு உற்சாகமாக அவருடைய பிரசங்கங்களைக் கேட்பதற்கும் அவரிடம் பேசுவதற்கும் அவரைச் சுற்றிவந்து கொண்டிருக்கிறார்களே!. இன்னும் சில காலம், சங்.தோமினிக் சுவாமியார் நம்முடன் தங்குவாரேயானால், நம்மிடம் உள்ள மிக நல்ல இளைஞர்கள் அநேகம் பேர் நிச்சயமாக அவருடைய சபையில் சேர்வதற்காக அவருடன் பிரான்சு செல்வார்கள் என்பது நிச்சயம்” என்று கூறினார். 

இதற்கிடையில் அர்ச்.சாமிநாதர் தூலோஸிலுள்ள அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்திலுள்ள தனது சபைமடத்திற்கு திரும்புவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால், அவருடைய போதகதுறவியர் ஆழ்ந்த வருத்தமுற்றுக் கவலையடைந்திருந்தனர். ஆனால் அவர்களுடைய கவலை திரும்படியாக சாமிநாதர் மே மாதம் தூலோஸ் வந்து சேர்ந்தார். பாப்பரசர் சபையை அங்கிகரித்து அளித்த ஆவணங்களையெல்லாம் தனது சபை மடத்திற்கு சாமிநாதர் கொண்டு வந்தார். மேலும் தனது சபை பற்றிய பல முக்கிய செய்திகளையும் அர்ச்.சாமிநாதர் தன் சீடர்களிடம் அறிவித்தார்.

அதாவது, இன்னும் 3 மாதங்களுக்குள் பாரிஸ் நகரிலும் மாட்ரிட் நகரத்திலும் சபைமடங்கள் கட்டப்பட உள்ளன என்றும், தமது சபை துறவிகள் இருவர் இருவராக ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும், உலகெங்கும் உள்ள நாடுகளுக்கும் ஞான பிரசங்கங்களை நிகழ்த்துவதற்காக அனுப்பப்படுவர் என்றும் அறிவித்தார். (தொடரும்)


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 4 - Life History of Rose of Lima in Tamil

 அர்ச்.லீமா ரோசம்மாள்(1585-1617):

ஜீவிய சரித்திரம்:

திருநாள்:ஆகஸ்ட் 30ம்தேதி


தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் தலைநகரமான லீமாவில் 1585ம் ஆண்டு ஸ்பானிய பெற்றோரான கஸ்பார், ஒலிவா தம்பதியருக்கு 11வது குழந்தை யாக அர்ச். ரோசம்மாள் பிறந்தாள். பிறந்த குழந்தை மிகவும் பலவீனமாக இருந்ததால், பிறந்த உடனே அதற்கு ஞானஸ்நானம் கொடுத்து இசபெல் என்று அதற்கு அதனுடைய பாட்டியினுடைய பெயரையே வைத்தனர். குழந்தையின் முகமானது ஒரு அழகிய ரோஜா மலராக தோற்றமளித்துக் கொண்டு அந்த முகத்தை தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததையும் கண்டதால் அந்நகரத்து மேற்றிராணியாரான அர்ச்.துர்பியுஸ் குழந்தைக்கு “ரோஸ்” என்று பெயர் வைத்து கதிட்ரல் தேவாலயத்தில் ஆடம்பரமாக ஞானஸ்நானம் கொடுத்தார். “லீமா ரோஸ்” என்ற இப்பெயரே இறுதி வரை நிலைத்தது. குழந்தை பருவத்திலேயே ரோசம்மாள் சர்வேசுரனுடைய விசேஷ தேவவரப்ரசாத சலுகைகளை அடையப் பெற்றிருந்தாள். தவழ்ந்து நடக்கும் குழந்தை பருவத்திலேயே அவளுடைய தாயாருடைய அறைக்குள்ளிருந்த பெரிய பாடுபட்ட சுரூபத்தையே உற்று நோக்கியவளாக ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தாள். 3 வயது குழந்தையாக இருந்தபோது, ரோஸ், அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிட்டது.

அப்போது அவள் அனுபவித்த மிக கொடிய உபாதனையை ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் தாங்கிக் கொண்டாள். அப்போது அவள், “இதைவிட மாபெரும் வேதனையை நமது திவ்ய இரட்சகர் நமக்காக அனுபவித்தாரே” என்று கூறினாள். மற்றொரு சமயம், அவளுக்குக் காது வலி வந்தது. அது வலிக்கிறதா என்று அவளிடம் வினவியபோது, அவள், “ ஆமாம். கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் தமது முள்முடியினால் நமது நல்ல நேச ஆண்டவர் எவ்வளவு அதிகமாக வேதனையுற்றார்!” என்று பதில் கூறுவாள். ரோஸூக்கு நான்கு வயதானபோது திடீரென்று ஒரு நாள் ஜெபபுத்தகத்தை சரளமாக வாசிக்கலானாள். அவள் எப்படி அதை வாசிக்கக் கற்றுக்கொண்டாள் என்று வினவியபோது, திவ்ய குழந்தை சேசுவே அவளுக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறினாள். சின்ன ரோஸ் ஆடம்பரமான ஆடையலங்காரங்கள், அழகான உடைகளையெல்லாம் அணிவதற்கு விரும்ப மாட்டாள். இப்பூவுலகத்தைவிட பரலோகத்திற்கே அதிகம் சொந்தமானவளாக திகழ்ந்த தமது குமாரத்தியைப் பற்றி கவலையுற்றவளாக ரோஸின் தாயார், ஒலிவா, ரோஸிடம் பல சமயங்களில் உலகக் காரியங்களின் பொருட்டு மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டாள். சில சமயங்களில் வீண் உலக ஆடம்பரங்களுக்காக அவளைக் கட்டாயப்படுத்துவாள். இவ்வாறு பல சமயங்களிலும் ரோஸின் பொறுமையை சோதிப்பாள்.

 சின்ன ரோஸ் ஒருபோதும் பொறுமையை இழந்துவிடாமலும் தாய்க்கும் மற்ற பெரியவர்களுக்கும் கீழ்ப்படிவதிலும் எப்போதும் பிரமாணிக்கமுடன் இருந்தாள். அவளுக்கு 12 வயதானபோது, அவளுடைய தாய், ஒலிவா, திருமணத்திற்கான ஏற்பாடு செய்யத் திட்டமிட்டபோது, ரோஸ், தான் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையில் உட்பட்டு விட்டிலேயே ஜெபதப பரிகார ஜீவியம் ஜீவிக்கப்போவதாகத் தெரிவித்தாள். அதை பலவிதத்திலும் வெகுநாட்களாக எதிர்த்தாலும் ஒலிவா, இறுதியில் அதுவே சர்வேசுரனுடைய திருவுளம் என்று அறிந்து கொண்டாள். லீமாவில் இருந்த அர்ச்.சாமிநாதரின் மடத்தில் அச்சபையின் துணைச் சகோதரராக ஜீவித்துவந்த மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.மார்டின் தே போரஸூம் அர்ச். லிமா ரோசம்மாளும் ஞான ஜீவியத்தில் இணைந்த நண்பர்களாக ஜீவித்தனர். அவர்கள் இருவரும் எல்லாம் வல்ல சர்வேசுரனுடைய மகத்துவமான இலட்சணங்களைப்பற்றியும் தேவமாதாவின் மகிமைகளைப் பற்றியும் அடிக்கடி தியானித்து மகிழ்வர். பெரு நாட்டில் அப்போது ஏற்பட்டிருந்த வறுமை பிணியைப் போக்குவதற்காக மூலிகை மருந்துகளை தயாரித்து ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கி அவர்களுடைய பிணியையும் வறுமையையும் நீக்குவர்.

அர்ச். லீமா ரோசம்மாள், அவளுடைய சகோதரர் ஃபெர்டினான்டுடன் சேர்ந்து அவர்களுடைய வீட்டுத் தோட்டத்திலேயே கட்டிய, தபோதனர்களுக்கான ஒரு குகையிலேயே வாழ்ந்து வர திர்மானித்தாள். அது மிகச் சிறியதாக இருக்கிறதே என்று எல்லாரும் எதிர்த்தனர். உடனே அதற்கு அவள், “இது நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்கும் எனக்கும் தங்குவதற்கு போதுமான இடமாக இருக்கிறது” என்று கூறினாள். இந்தக் குகையிலேயே அவள் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், இரவு பகல் முழுவதும் நேச இரட்சகருடைய திவ்ய பாடுகளைப் பற்றிய தியானத்திலும் அதற்கு காரணமான தன்னுடையவும் உலகினுடையவும் பாவங்களைப் பரிகரிப்பதற்காக, ஜெபதவ பரிகார ஜிவியத்திலும் செலவழித்தாள். அவளுக்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆயினும், அவளுடைய 4வது வயதிலிருந்தே அவள் அப்பழங்களைத் தொட மாட்டாள். அதே போல் அர்ச்.லீமா ரோசம்மாள் மாமிச உணவை ஒருபோதும் உட்கொண்டதே இல்லை. காய்ந்த உரொட்டித் துண்டுகளும் தண்ணீரும் சில கசப்பான கீரைகளுமே அவளுடைய அன்றாட உணவாக இருந்தது. தபசு காலத்தில் அந்த உரொட்டித் துண்டுகளையும் சாப்பிட மாட்டாள். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ தான் அவள் உறங்கும் நேரம். அவள் தன் தலைமாட்டில் கரடுமுரடான பாறைகளையும் படுக்கையில் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் வைத்திருப்பாள். அந்த சொற்ப நேர தூக்குமும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள். 

அங்கு ஏற்படும் கொடூரமான கோடை உஷ்ணகாலத்திலும் பல நாட்கள் தண்ணீரே உட்கொள்ளாமல் தன்னையே ஒறுத்து ஜீவித்தாள். ஒரு முள்முடியை பின்னி அதைத் தன் முடி அலங்காரத்திற்குள் வைத்து மறைத்திடுவாள். எப்பொழுதும் அவள் தலைக்குள் குத்திக் கொண்டிருக்கும் இந்த முள்முடியுடனேயும் அதனால ஏற்படும் இரத்தக் காயத்துடனும் ஜீவித்து வந்தாள். மேலும், ரோஸ், தான் உடுத்தியிருந்த உடைக்குள் தன் உடல் முழுவதையம் ஒரு முரட்டு கயிற்றால் இறுகக் கட்டிக் கொண்டவளாக, அதனால் ஏற்படும் வலியை ஒறுத்தலாக ஒப்புக் கொடுத்தும் ஜீவித்தாள். இரவு நேரங்களில் வெறுங்காலுடன் தோட்டத்தில் மிகப் பாரமான சிலுவையை சுமந்தபடி நடப்பாள். ஒரு வேலைக்காரியிடம் அதிக பளுவான விறகுக் கட்டைகளை தன் மேல் சுமத்தும்படி செய்வாள். அதுவும் அப்பாரத்தைத் தாங்கமாட்டாமல் அதனடியில் தான் விழும் வரைக்கும் அப்படிச் செய்யச் சொல்வாள்.

இவ்வாறு, தனது திவ்ய இரட்சகர் மேல் கொண்ட சிநேகத்தை முன்னிட்டு, ஒறுத்தல் செய்வதற்கான எல்லா வழிமுறைகளையும் மிக நுட்பமான விதத்தில் அர்ச்.லீமா ரோசம்மாள் கடைபிடித்துவந்தாள்.

புண்ணிய கிரியைகளிலும் சாங்கோபாங்கத்திலும் உத்தமமான விதத்தில் ஜீவித்த அர்ச்.ரோசம்மாள், தன் குடும்பத்தினருக்குத் தேவைகளை சமாளிப்பதற்காக உழைத்து வருவாள். நல்ல பூவேலைபாடுகளுடன் துணிமணிகளையும் ஆடை ஆபரணங்களையும் நூற்பதில் கை தேர்ந்தவள். இத்தொழில் மூலம் தன் குடும்பத்திற்கு போதிய வருவாய் ஈட்டி வந்தாள். இவள் தன் தோட்டத்தில் பலவித பூச்செடிகளை பராமரித்து வந்தாள். அவற்றில் மலரும் பூக்களை விற்று வருவாள். தன் தோட்டத்து மலர்களால் அர்ச்.சாமிநாதருடைய மடத்துக் கோவிலில் இருந்த தேவமாதாவின் பீடத்தை தினமும் அலங்கரிப்பது இவளுக்கு மிகப்பிடித்தமான காரியம். அர்ச்.சாமிநாதர் சபையைச் சேர்ந்த மற்ற அர்ச்சிஷ்டவர்களைப் போலவே இவளும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே உள்ளது என்று கலங்குவாள். ஏனென்றால், அதில் 10 மணி நேரம் வேலைக்குப் போய் விட்டால் மிதியான நேரம் ஜெபிப்பதற்கும் மற்ற புண்ணிய கிரியைகள் புரிவதற்கும் பற்றாமல் போகுமே என்று நினைப்பர். 

இப்பிரச்னையை இருவழிகளில் திர்த்தாள்: 

1) தூங்கும் நேரத்தை தவிர்த்தாள். 

2) மற்ற வேலை நேரம் முழுவதும் சர்வேசுரனுடன் ஐக்கியமாக ஒன்றிணைந்திருந்தாள். 

அதாவது அவள் வேலை நேரத்தில் தனது கரங்களில் நூற்கும் ஊசியைப் பிடித்திருந்தாலோ அல்லது மலர்களை பறித்துக் கொண்டிருந்தாலோ அல்லது ஜெபநேரத்தில் அவளுடைய கரங்கள் ஜெபமாலையைப் பிடித்துக் கொண்டிருந்தாலோ, 24 மணி நேரமும், எப்பொழுதும், அவள் தனது பரலோக பத்தாவுடன் நெருக்கமாக இணைந்திருந்தாள். அவள் நுட்பமாக எவ்வளவுக்கு தன்னைமுழுதும் சர்வேசுரனுடன் ஒன்றிணைத்து எப்பொழுதும் ஜீவித்தாளோ, அதே அளவிற்கு தான் செய்த அனைத்தையும் ஒறுத்தலாகவும் தபசாகவும் ஒப்புக் கொடுத்து வந்தாள். அநேக நேரங்களில் அவள் ஆழ்ந்த பரவசநிலையிலேயே தொடர்ந்து இருப்பாள்:

அவளுடைய தோட்டத்தில் அவள் வசித்து வந்த சிறு குகைக்கு தினமும் ஏராளமான மோட்சவாசிகள் வந்து அவளைப் பார்த்து செல்வர். கோவிலில் திவ்ய பலிபூசையின் போது திவ்ய நன்மை உட்கொண்டபிறகு, பல மணி நேரத்திற்கு காட்சி தியான பரவச நிலையிலேயே இருப்பாள். அவளை சுற்றிலும் மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கூட உணராதவளாக இருப்பாள். நரகிலிருந்து பசாசு கொடூரமான உருவத்துடன் அவள் முன்பாக நேரிடையாகவே தோன்றி அவளை வாதித்தது, சோதித்தது. ஞான வறட்சியில் நீண்ட நேரம் ரோசம்மாள் தனிமையில் விடப்பட்டாள். அத்தகைய தருணங்களில், அவள் ஆண்டவரிடம், “ஆண்டவரே! நீங்கள் என்னுடனிருந்திருந்தால், நான் இத்தகைய கொடூரமான சோதனைகளில் விடப்பட்டு சஞ்சலமடைந்திருக்க மாட்டேன்” என்பாள். அப்போது ஆண்டவர் அவளிடம், “ரோஸ்! நான் இங்கு இல்லாமல் இருந்திருந்தால் நீ இந்த சோதனைகளில் இவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நம்புகிறாயா?” என்று வினவினார். அர்ச். லீமா ரோசம்மாள் வேதசாட்சிய முடி பெறுவதற்காக அதிகம் ஜெபிப்பாள். வேதபோதக ஜீவியத்தின் மேலும் அதிகம் பற்றுடையவளாக இருந்தாள். அவள் வேதபோதகர்களுக்காக இடைவிடாமல் தன் வாழ்நாள் முழுவதும் ஜெபித்து வந்தாள். ஜப்பானில் நாகசாகியில் வேதசாட்சிகளாக கொல்லப்பட்ட வேதபோதக குருக்கள் அந்த உன்னத முடியைப் பெறுவதற்கு காரணமாக இருந்தவள் அர்ச்.லிமா ரோசம்மாள்.

ஏனெனில் அவள் இறந்த அதே வருடத்தில் தான் அவர்களும் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டனர். ஒரு சமயம் டச்சுக்கார பதிதர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஜார்ஜ் ஸ்ப்ரில்பெர்கன் என்ற கடற்கொள்ளைக்காரன் 6 கப்பல்களில் கொள்ளையருடன் பெரு நாட்டின் காலவோ என்ற துறமுகத்தைக் கைப்பற்றினான். லீமா நகரத்தின் ஆண்மக்கள் அனைவரும் அவனுடன் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம் முந்தின நாள் இரவு முழுவதும் சாந்தோ டோமிங்கோ என்ற தேவாலயத்தில் திவ்ய சற்பிரசாதநாதருக்கு முன்பாக அர்ச்.லீமா ரோசம்மாளும் அர்ச்.சாமிநாதரின் 3ம் தவச்சபையைச் சேர்ந்த பெண்களும் சிறுபிள்ளைகளும் தொடர்ந்து 40 மணிநேர ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். லீமா நகரத்தையும் கைப்பற்றி அதன் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் பீரங்கியால் தரை மட்டமாக்குவதற்கு திட்டமிடுகிறான் என்ற செய்தி அறிந்ததும் அர்ச்.லீமா ரோசம்மாள், தன் முழங்காலுக்குக் கீழ் தொங்கிய தன் உடுப்பினை கத்திரியால் வெட்டினாள். “நமது திவ்ய சற்பிரசாதநாதரைப் பாதுகாப்பதற்கான போருக்காக என்னைத் தயாரிக்கிறேன். இப்போரில் நம் நேச ஆண்டவருக்காக உயிரைக் கொடுக்க விரும்புவோர் எல்லோரும் என்னோடு சேர்ந்து கொள்ளலாம்” என்று மற்ற பெண்களிடம் கூறினாள். பிறகு மகா பரிசுத்த திவ்ய நற்கருணையில் விற்றிருக்கும் தன் நேச ஆண்டவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நம் திவ்ய இரட்சகர் கதிர்பாத்திரத்திற்கு மேலே தோன்றினார்.

ஆண்டவருடைய திவ்ய திருத்தலைமுடியிலும், திவ்ய நெற்றியிலும், திவ்ய திருக்கண்களிலும் முள்முடியிலும், திரு இரத்தம் ஒழுகி வடிந்துக் காய்நதிருப்பதைக் கண்டாள். ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்திலிருந்து கை கால்கள் மற்றும் மணிக்கட்டுகளிலும் திரு இரத்தம் ஓடி வழிந்து காய்ந்திருப்பதையும் கண்டாள்.

சேசுநாதர்சுவாமியின் திவ்ய திருவாய், இறுதி வாக்கியத்தை கூறியபடியே திறந்திருப்பதையும், காயப்பட்டும், விங்கியும் இருப்பதையும் கண்டாள். பிறகு அவள் தன் சிநேக ஆண்டவருடைய திவ்ய திருக்கண்கள் தன்னையே நேருக்கு நேராக உற்றுப் பார்ப்பதையும் கண்டாள். உடனே அவள் தன் நேச ஆண்டவரிடம், “ திவ்ய சற்பிரசாதத்தில் விற்றிருக்கும் என் நேச இரட்சகரே! இன்று உம்மை நான் காப்பாற்றுவேனாகில் நீர் மறுபடியும் சிலுவையிலறையப்பட மாட்டீர். நீர் எனக்காக சிலுவையில் தொங்கி மரித்தபோது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இப்பொழுது என்னால் உம்மைக் காப்பாற்ற முடியும்!” என்று கூறினாள். பிறகு அவள் தன்னைச் சுற்றி இருந்த மற்ற பெண்களிடம், “நம் நேச ஆண்டவரான திவ்ய சேசுவுக்காக உயிரைக் கொடுப்பதற்கு என்னோடு யாரெல்லாம் முன்வருவிர்கள்? அவருடைய எதிரிகளுக்கு எதிராக போர் புரிவதற்கு என்னுடன் யார் நிற்கப்போகிறிர்கள்? இதோ இங்கே, நமது சரீரங்களினால் மட்டுமே பாதுகாக்கப்படும்படியாக, நம்மேல் கொண்ட எல்லையில்லா சிநேகத்தின் பொருட்டு, நம் நேச ஆண்டவர் நம்மிடையே வீற்றிருக்கின்றார்! சகோதரிகளே உதவிக்கு வாருங்கள்! நாம் அனைவரும் நமது திவ்ய இரட்சகருக்காக ஒன்றாக இறப்போமாக! தேவநற்கருணையிலுள்ள நமது நேச ஆண்டவருடைய பரிசுத்த திவ்ய சரீரத்தை அவர்கள் அடைய வேண்டுமானால், முதலில் அவர்கள் நமது சரீரங்களை வெட்டி விழ்த்தட்டும். பிறகு வெட்டப்பட்ட நமது சரீரங்களின் வழியாக மட்டுமே அவர்கள் நம் ஆண்டவரை நெருங்க முடியும் என்பதை அந்த கடல் கொள்ளையருக்கு பறைசாற்றுவோம்!” என்று கூறினாள். 

மனித சுபாவத்திற்கு மேற்பட்ட ஒரு உன்னதமான பரலோக சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டவளாக, அர்ச்.லீமா ரோசம்மாள் இவ்வாறு கூறக் கேட்டதும், தமது உன்னதமான பலவினத்தில், அதாவது ஒரு அப்பத்தின் வடிவில் விற்றிருக்கும் தங்களுடைய திவ்ய இரட்சகரைப் பாதுகாக்கும் கேடயங்களாக தங்கள் சரீரங்களையும் தங்களுடைய உயிரையும் கையளித்தல் என்ற ஏக தேவசிநேகமுயற்சியில் அங்கிருந்த பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவருடைய ஆத்துமங்களும் அசாதாரண முறையில் ஒன்றிணைந்தன. அவர்கள் எதிர்கொள்ளப்போகும் அபாயத்திலிருந்து தங்களுக்காகவோ அல்லது தங்களுடைய குடும்பத்தினருக்காகவோ பயத்தால் ஏற்படும் யாதொரு ஒரு அசைவுமின்றி, விரைவில் அந்த தேவாலயத்தில் நிகழப்போகும் (என்று அவர்கள் எண்ணியிருந்தனர்)

அவசங்கைகளுக்கும் அநாச்சாரங்களுக்கும் எதிராக ஒரே ஆத்துமமாக ஒன்றித்து செயல்படுவதற்கு தயாராக இருந்தனர். இவ்வாறு அர்ச்.சாமிநாதர் 3ம்சபை உறுப்பினர்களான அர்ச்.ரோசம்மாளும் மற்ற பெண்களும் சாந்தோ டோமிங்கோ தேவாலயத்தில் மகா பரிசுத்த தேவநற்கருணையில் விற்றிருக்கும் தங்கள் நேச ஆண்டவரைப் பாதுகாப்பதற்காக தங்களையே அர்ப்பணித்த அதே சமயம், காலவோ என்ற இடத்தை கடற்கொள்ளையர் பீரங்கியால் இருமுறை தாக்கினர். அங்கிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்த சில வீடுகளை தரைமட்டமாக்கினர். கப்பல் தளத்தில் இருந்த தனது அறையில் கடற்கொள்ளையரின் தலைவன் ஸ்பில்பெர்கன் வெற்றிக்களிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய மேஜை மீது காலவோ மற்றும் லிமா நகரத்தின் வரைபடம் இருந்தது. அந்நகரங்களின் முக்கிய கட்டிடங்களையும் தேவாலயங்களையும் தகர்ப்பதற்காக குறித்தான். அவன் வானத்தை நோக்கி ஆணவத்துடன் சிரித்தான். ஏனெனில் அவன் தன் ஆத்துமத்தை வெகுகாலத்திற்கு முன்பாகவே பெரும்பாவங்களினால் இழந்திருந்தான். பிறகு அவன் தன்னிடமிருந்த தொலைநோக்கிக் கருவியை எடுத்து அதன் லென்ஸைத் துடைத்தான். பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே புறப்படும் சமயத்தில் அவன் ஒருவித திமிர்வாத நோயினால் பாதிக்கப்பட்டவனாக, திடீரென்று அலறிக் கீழே விழுந்தான். 

அவன் விழுந்த 15வது நிமிடத்தில் அவனுடைய 6 கப்பல்களுடன் கடற்கொள்ளையர் அனைவரும் பெரு நாட்டைவிட்டு விரைந்து ஓடி மறைந்தனர். ஏனெனில் தலைவன் இல்லாமல் அவர்களால் சண்டைபோடமுடியாது. இவ்வாறு அர்ச்.லீமா ரோசம்மாளுடைய ஜெபத்திற்கு சர்வேசுரன் தயவாய் செவிசாய்த்தார். லீமா நகரத்தை சர்வேசுரன் அர்ச்.ரோசம்மாளின் ஜெபத்தினால் இவ்வாறு காப்பாற்றியதற்காக லீமா நகர மக்கள் அர்ச்.லீமா ரோசம்மாளை நன்றிபெருக்குடன் கொண்டாடியது.

ரோசம்மாள், தன் தந்தை, கொன்சாலோவின் உதவியுடன் கோவிலிலிருந்து விட்டிற்கு சென்றாள். “நமது நேச ஆண்டவருக்காக நம் உயிரை விடுவதற்கு என்ன அருமையான சந்தர்ப்பம் இது!” என்று கூறினாள். தொடர்ந்து கடைபிடித்துவந்த கடின தபசினால், பரலோகத்தின் தேவபத்தாவுடன் அவள் அடைந்த உன்னதமான காட்சி தியான ஜீவியத்தின் உச்சநிலை ஐக்கியமானது, பல சரீர அடையாளங்களினால் அர்ச்.ரோசம்மாளிடம் வெளிப்படையாக காணப்பட்டது. அவளுடைய சரீரம் முழுவதும் வேதனையாலும், பலவினத்தாலும் காய்ச்சலாலும், தலை முழுவதும் இடைவிடாத வலியாலும் வாதிக்கப்பட்டாள். தண்ணீர் அருந்தினால் கூட இறந்துவிடுவாள் என்பதால் குடிக்க தண்ணீரின்றி கொடிய தாகத்தினால் இறக்கும் வரைக்கும் வருந்தினாள்.

1617, ஆகஸ்ட் 24ம் நாளன்று, 31வது வயதில் இறுதி அவஸ்தை பூசுதலைப்பெற்று திவ்ய நற்கருணை நாதரை தனது இருதயத்தில் வரவேற்றபடியே பாக்கியமான மரணமடைந்தாள். லீமா நகர மக்கள் அனைவரும் துக்கித்தனர். அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவள் மருத்துவம் செய்து குணமாக்கிய எண்ணற்ற நிக்ரோக்கள், செவ்விந்தியர், தேவதிரவிய அனுமானத்திற்கு அவளால் திரும்ப அழைத்து வரப்பட்ட மனந்திரும்பிய ஸ்பானியர்கள் மற்றும் எல்லா உயர்குடிமக்கள் அனைவரும் அவளுடைய பிரேதப்பெட்டிக்கு இருமருங்கிலும் முழங்காலில் இருந்து ஜெபமாலை ஜெபித்தனர். 1671 ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அர்ச்சிஷ்டவளாக பாப்பரசர் லீமா ரோசம்மாளை பீடத்திற்கு உயர்த்தினார்.†

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் - அத்தியாயம் 20

மீண்டும் ரோமாபுரி பயணம் 

சிறிது காலத்திலேயே, அர்ச்.சாமிநாதர் தூலோஸ் மடத்திலிருந்த தமது சபைதுறவிகளை புரோயிலுக்கு வரவழைத்து அவர்களையும் அங்கேயே தங்க வைத்தார். இங்கு தான் தேவமாதா அவருக்கு 10 வருடங்களுக்கு முன் தோன்றி ஒரு துறவறசபையை அவர் துவக்குவார் என்று முன்னறிவித்திருந்தார்கள். 1216ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புரோயிலில் கூடிய அவருடைய சபையின் துறவிகள்: பிரான்சு நாட்டிலிருந்து 7 பேரும் ஸ்பெயின் நாட்டிலிருந்து 6 பேரும் போர்த்துக்கல், பெல்ஜியம் மற்றும் இங்கிலிரந்திலிருந்து தலா ஒருவருமாக மொத்தம் 16 பேர் அர்ச். சாமிநாதரைப் பின்பற்றி சர்வேசுரனுக்காக தங்கள் ஜீவியத்தை முற்றும் கையளிப்பதற்காக அந்த மடத்தில் கூடினர். 

அப்பொழுது அர்ச்.சாமிநாதர் பாப்பரசரின் அறிவுரையின்படி தமது துறவற சபையின் விதிமுறைகளை ஏற்படுத்துவதற்காக அங்கு கூடியிருந்த 16 பேருடனும் ஆழ்ந்த ஜெபத்தில்  நீண்ட நேரம் ஈடுபட்டார். பின்னர் அனைவரும் ஏக மனதாக காலத்தால்  போற்றப்பட்டுவந்ததும் பண்டைய கால திருச்சபையில் துறவற மடங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்ததுமான அர்ச். அகுஸ்தினாரின் துறவறசபை விதிமுறைகளையே தங்களுடைய சபையின் விதிமுறைகளாக அங்கீகரித்தனர். ஏனெனில் இந்த துறவற சபையில் தான் எண்ணற்ற அர்ச்சிஷ்டவர்கள் தோன்றினார்கள் என்பதையும் இச்சபையின் விதிமுறைகள் சபைதுறவிகள் வேதபோதகத்தில் ஈடுபடுவதற்கும் ஞான பிரசங்கங்களில் ஈடுபடுவதற்கும் ஏற்புடையனவாக உள்ளன என்றும் அறிந்திருந்தனர். போர்த்துக்கிசியரான சகோ.சுவரோ கோமஸ் என்பவர் அர்ச்.சாமிநாதரிடம், “நாம் இப்பொழுது சர்வேசுரனுக்கு உகந்த ஊழியத்தை சரியாகச் செய்யலாம். சபைஒழுங்குகளைப்பற்றி எங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், சுவாமி! தினமும் நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார். 

அதற்கு அர்ச்.சாமிநாதர், “சகோ.பெர்ட்ராண்ட் உங்களுக்கு இதில் உதவுவார். நான் ரோமாபுரிக்கு திரும்பிச் செல்கின்றேன்” என்றார். 

அதற்கு சகோ.சுவரோ கோமஸ் சாமிநாதரிடம், “ஆனால், சுவாமி! இப்போது தானே அங்கிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக உடனே அங்கு செல்வதற்கு கூட நினைத்திருக்க மாட்டீர்கள்” என்றார். உடனே இங்கிலாந்தைச் சேர்ந்த சகோ. லாரன்ஸ் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த சகோ.ஸ்டீபன் சாமிநாதரை அணுகி, “ ரோம் 600 மைல் தொலைவில் அல்லவா உள்ளது” “சுவாமி! இப்பொழுது தான் அந்த தொலை தூர பயணத்தை இருமுறை முடித்திருக்கிறீர்கள்” “அந்த நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு உங்களுக்கு ஓய்வு அவசியமாகத் தேவைப்படும்” “ சுவாமி! எங்களை முன்னிட்டு உங்களுடைய சரீர நலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றெல்லாம் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

அதற்கு அர்ச்.சாமிநாதர் புன்னகைத்துக் கொண்டே, “இப்பொழுது, நீஙகள் எனது சரீர ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நான் நன்றாக பலமான சரீரத்துடன் இருக்கிறேன். மேலும், நமது சபை விதிமுறைகளை தேர்ந்தெடுத்த உடனே பரிசுத்த தந்தை பாப்பரசருக்கு தெரியபடுத்துவதாக அவரிடம் வாக்களித்துள்ளேன். அதை மீறச் சொல்கிறீர்களா?” என்றார். இதற்கு சபையின் 16 உறுப்பினர் சகோதரர்களும் உடன்பட்டனர். ஆனால் பாப்பரசரை சந்தித்தபிறகு ரோமாபுரியில் நிண்டகாலம் தங்காமல் உடனே தங்களிடம் திரும்பி வரும்படி அவர்கள், அர்ச்.சாமிநாதரிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு அர்ச்.சாமிநாதர், “சர்வேசுரனுக்கு சித்தமானால் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே நான் திரும்பி வருவேன்” என்று பதிலளித்தார்.

அர்ச்.சாமிநாதர் ரோமாபுரிக்கு செல்வதற்கு முன்பாக வந்.ஃபல்குவஸ் ஆண்டகை தமது தூலோஸ் நகரத்திலிருக்கும் அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்தையும் அதன் வளாகத்தையும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, அவரிடம், “ நீங்கள் துவங்க இருக்கும் புதிய துறவற சபைக்கு ஃபோஷோ மற்றும் புரோயிலை விட இந்த இடம் மிகவும் ஏற்புடையதாக இருக்கும். இங்கு உங்களுடைய மடத்தை இந்த வளாகத்தில் கட்டிக் கொள்ளுங்கள்” என்றார். அதற்கு அர்ச்.சாமிநாதர், “ அர்ச்.ரோமானுஸ் தேவாலயத்தினுடைய இந்த வளாகமே எங்களுடைய முதல் துறவற மடமாக விளங்கும். ஓ ஆண்டவரே! நமது பரிசுத்த தந்தை நீங்கள் எங்களுக்கு அளிக்கும் இந்நன்கொடையைப் பற்றி அறியவரும்போது எவ்வளவு மகிழ்ச்சியடைவார்!” என்றார். ஆனால், மடத்தை அங்குக் கட்ட துவக்கியபோது, அவர்களுக்கு பாப்பரசர் இறந்து விட்டார் என்ற துயர செய்தி ரோமாபுரியிலிருந்து வந்தது. அவர்களுடைய மடம் கட்டியபிறகும் அர்ச்.சாமிநாதர் அப்போது புதிதாக பதவியேற்ற 3ம் ஹொனோரியுஸ் பாப்பரசரை சந்திக்க ரோமாபுரிக்கு சென்றார்.

ஆனால் அவரை சந்திக்க இயலவில்லை.ஏதோ முக்கிய அலுவலுக்காக வெளிநாடு சென்றிருந்த பாப்பரசர் எப்போது ரோமாபுரிக்கு திரும்புவார் என்று யாருக்கும் தெரியாமலிருந்தது.


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 3 St. Leonard of Port Maurice Life History in Tamil

 அர்ச்.போர்ட்மோரீஸின் லியோனார்டு

(1676-1751), திருநாள் நவம்பர் 26



ஜெனோவா நகரின் அருகிலுள்ள மோரீஸ் என்னும் துறைமுக நகரத்தில் அர்ச்.லியோனார்டு, 1676ம் வருடம், தோமினிக் காசோவா என்ற கப்பல் தலைவனுடைய மகனாகப் பிறந்தார். இரு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும், இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவருக்கு 13 வயதான போது, ஒரு புகழ் பெற்ற ரோமன் கல்லூரியில் சேர்ந்தார். அது, அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியார் படித்த கல்லூரி. பக்தியிலும் ஞானத்திலும் கத்தோலிக்க ஒழுக்கத்திலும், நல்ல அலுவல்களிலும், சிறந்து விளங்கியதால், நாளடைவில், இவரும், இன்னொரு ஞானப்பிரகாசியார் என்ற பெயர்பெற்றார். இங்கு, கல்வியை முடித்தவுடன், மருத்துவத்துறையில் உயர்கல்வி கற்பதற்கு ஆசித்தார். ஆனால், ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் பிரான்சிஸ்கன் சந்நியாச மடத்தை சந்தித்த போது, பரிசுத்த குருத்துவத்திற்கான தேவஅழைத்தலைப் பெற்றார். 1697ம் ஆண்டு, அக்டோபர் 2ம் நாளன்று அச்சபையில் உட்பட்டார். விரைவிலேயே அர்ச்சிஷ்டதனத்தினால், அம்மடத்தினுடைய மகிமையாக விளங்கினார்.

சபைவிதிகளை நுட்பமாக அனுசரித்தார். ஆழ்ந்த பக்திபற்றுதலுடன் ஜெபத்தில் ஈடுபட்டார். சேசுமரியாயின் மிதான பக்தியினால் இவருடைய இருதயம் எப்பொழுதும் பற்றி எரிந்தது. கடினதபசினாலும், தாழ்ச்சியினாலும், இடைவிடாத பிறர்சிநேக அலுவல்களினாலும் இவருடைய அர்ச்சிஷ்ட ஜிவியம் பரிமளித்தது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக, சீன தேசத்திற்கு செல்வதற்கு மிகவும் திவிரமான ஆவல்கொண்டார். ஆனால், இவருடைய சரீர பலவினத்தினால், சொந்த நாட்டிலேயே பிரசங்கிப்பதற்கு இவரால் கூடாமற் போயிற்று. தபசு மிகுந்த ஜீவியத்தினால், இவருடைய தேகபலம் நாளுக்கு நாள் குறைந்து, இறந்துபோகும் அளவிற்கு மெலிந்தார்.

ஆனால், தேவமாதாவின் பராமரிப்பினால், சாகாமல், புதுமையாகக் காப்பாற்றப்பட்டார். சரீர ஆரோக்கியத்தைத் திரும்ப பெற்றார். அதற்கு நன்றியறிதலாக, மிகுந்த ஆன்ம ஈடேற்ற ஆவலுடன் பங்குகளை சந்தித்து, தியானங்களையும் பிரசங்கங்களையும் நிகழ்த்தினார். 24 வருடங்களில் இத்தாலி முழுவதும், கோர்சிகா திவு (இங்கு ஒழுக்கமற்றமக்களே வாழ்ந்து வந்தனர்)  முழுவதிலுமுள்ள சகல பங்குகளையும் விசாரித்து, மக்களை ஞானஜீவியத்தில் ஸ்திரப்படுத்தினார். தம்முடைய பாவங்களுக்காகவும், தமது நாட்டிலுள்ள சகல கிறீஸ்துவ மக்களுடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்வதற்காக, இரவு கண்விழித்து ஜெபித்தும், தன்னையே சாட்டையால் இரத்தம் வருமட்டும் அடித்துக்கொண்டும் தபசு செய்து, ஆண்டவருடைய இரக்கத்திற்காக மன்றாடி வந்தார். இத்தகைய கடுமையான தபசுடன் ஜீவித்து வந்ததால், இவருடைய ஞானதியானப் பிரசங்கங்கள் மிகுந்த ஞான பலனைக்கொடுத்தன.

 அவற்றைக் கேட்போர் இருதயங்களில், தேவவரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உத்தமமான மனஸ்தாபத்தை ஏற்படுத்தின. ஞான அறிவுரைகள் அவர்களுடைய இருதயங்களில் பதிந்தன. இவ்வாறாக, திரளான பாவிகளை மனந்திருப்பினார். ஃப்ளோரன்ஸ் நகருக்கருகில் இருந்த இன்கோர்டோ என்ற இடத்தில், போதக துறவியர்கள் ஞான தியான பிரசங்கங்களை நன்கு தயாரிப்பதற்காகவும், உலகசந்தடிகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு வேண்டிய ஏகாந்தமான சூழ்நிலையை அளிப்பதற்காகவும், தபசு அனுசரிப்பதற்காகவும் ஏற்றபடியான ஒரு தியான இல்லத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமானார். ரோமாபுரியில் பல பக்த சபைகளை ஏற்படுத்தினார். அதில், சேசுவின் திரு இருதய சபை குறிப்பிடத்தக்கது. “திவ்ய சேசுவே, என் மேல் இரக்கமாயிரும்!” என்ற மனவல்லிய ஜெபத்தை அடிக்கடி ஜெபிக்கும்படி, சென்ற இடமெல்லாம், இவர் மக்களிடம் கற்பித்து வந்தார். 

அதே போல், இத்தாலியா நாடெங்கிலும், திவ்ய நற்கருணை மேல் பக்தியை பரப்பி வந்தார். தேவாலயங்களில், மகாபரிசுத்த தேவநற்கருணைக்கு இடைவிடாத ஆராதனையை மக்கள் செய்யும்படியான வழக்கத்தையும் சென்ற இடங்களிலெல்லாம் ஏற்படுத்தினார். ஆண்டவருடைய திவ்ய பாடுகளின்மேல் பக்தியையும், சிலுவைப்பாதை செய்யும் பக்திமிகுந்த பழக்கத்தையும் பரப்பினார். மேலும் தன்னுடைய ஜீவியத்தில் தேவமாதாவிடமிருந்து பெற்ற சகல நன்மைகளுக்கு நன்றியறிந்த தோத்திரமாக, தேவமாதாவின் அமலோற்பவத்தின் மேல் கொள்ள வேண்டிய பக்தியையும் பரப்பி வந்தார்.

பொலோஞாவில் போதக பிரசங்கங்களை முடித்துக்கொண்டு, ரோமாபுரியிலுள்ள அர்ச்.பொனவெந்தூரின் மடத்திற்கு திரும்பிய அர்ச். லியோனார்டு, 1751ம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் நாள் பாக்கியமாக மரித்தார். இவருடைய ஜீவியநாட்களிலேயே புதுமைகள் நிகழ்ந்திருந்தபோதிலும், இவர் இறந்தபிறகு, அனேக புதுமைகளால் இவரை மகிமைப்படுத்த சர்வேசுரன் சித்தமானார். உலகில் வாழ்ந்தபோதே, இவரை நன்கறிந்த ஆறாம் பத்திநாதர் பாப்பரசர், இவருக்கு, 1796ம்வருடம் முத்திப்பேறு பட்டமளித்தார். 9ம் பத்திநாதர் பாப்பரசர் 1867ம் ஆண்டு, ஜூன் 29ம் நாள், இவருக்கு அர்ச்சிஷ்ட பட்டமளித்தார். 11ம் பத்திநாதர் இவரை வேதபோதகதுறவியரின் பாதுகாவலராகப் பிரகடனப்படுத்தினார். 

இவருடைய திருநாள் நவம்பர் மாதம் 26ம் நாள். †