Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 20 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4

  ஆல்பிஜென்சிய பதிதர்களின் அட்டூழியம்


காஸ்டிலின்
அரசனான 8ம் அல்போன்ஸ் தன் மூத்த மகனுக்கு டென்மார்க் நாட்டின் அரசனான வால்டேமாரின் மகளான இளவரசிக்கு திருமணம் ஏற்பாடு செய்வதற்காக அந்நாட்டு அரசனிடம் தன் நாட்டின் பல உயர்குல அரண்மனை அதிகாரிகள் மற்றும் குருக்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்றை அனுப்பினான். வந். டீகோ மேற்றிராணியாரையும் அவர்களுடன் செல்வதற்கு அரசன் ஏற்பாடு செய்தான். எனவே 1203ம் ஆண்டில் டென்மார்க் செல்வதற்கான பயணத்தில் தன்னுடன் தன் உற்ற நண்பரான அர்ச்.சாமிநாதரையும் மேற்றிராணியார் அழைத்துச் சென்றார். வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கை நோக்கி அரசாங்க தூதுக்குழு பயணம் செய்தபோது 300 மைல் தூரம் சென்றபோது பிரான்சின் தெற்கு பிராந்தியத்தை அடைந்தனர். அப்பகுதியிலுள்ள கத்தோலிக்கு தேவாலயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு கிராமங்களும் நகரங்களும் சு+றையாடப்பட்டிருப்பதையும் வயல்வெளிகள் எரிக்கப்பட்டு கருமையாக காட்சியளிப்பதையும் மிகவும் அதிர்ச்சியுடனும் துயரத்துடனும் பார்த்தனர். அதற்கான காரணத்தை வினவியபோது, ஆல்பி என்ற நகரில் உருவாகி பிரான்சு நாடு முழுவதையும் சீர்குலைத்து வரும் ஆல்பிஜென்சிய பதிதர்கள் கத்தோலிக்கு வேதத்தை அழிப்பதற்காக கையாண்ட வெறியாட்ட செயல்முறையே அது என்று கண்டறிந்தனர்.

அப்பதிதர்கள் கத்தோலிக்கர் வசிக்கும் ஊர்களைக் கொள்ளையடித்து சுறையாடுவது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் சிறுவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர் என்பதையும் கண்டறிந்தனர். சில வருடங்களாகவே ஆல்பிஜென்சிய பதிதர்கள் கத்தோலிக்கருக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டிருப்பது இவர்களுக்குத் தெரிய வந்தது. ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவில் டைனிப்பர், ஓல்கா ஆற்றங்கரைகளில் வசித்துவரும் டார்டார் என்ற காட்டுமிராண்டி இனத்தவர்கள் அவ்வப்போது மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகளைக் கொள்ளையடித்து பெரும் சேதத்தை விளைவித்துவருவதைக் குறித்து அக்காட்டுமிராண்டிகளிடம் சென்று வேதபோதக அலுவலை மேற்கொள்வதற்காக மேற்றிராணியார் வந்.டீகோ ஆண்டகையை பாப்பரசர் அனுமதிப்பாரேயாகில் அவருடன் அவ்வுன்னத அப்போஸ்தலிக்க அலுவலை நிறைவேற்றுவதில் என் ஜீவியத்தின் எஞ்சிய காலத்தை அகமகிழ்வுடன் கழிப்பேன். அதுவே என் பெரும் பாக்கியமாகும்என்று அர்ச்.சாமிநாதர் அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்வார். ஆல்பிஜென்சியர்களையும் டார்டார் இனத்தவரையும் மனந்திருப்புவதற்கான ஆன்ம இரட்சணிய அலுவலை உடனே துவக்குவதற்கான உன்னத தேவசிநேக நெருப்பினால் இருவருடைய இருதயங்களும் பற்றியெரிந்தன.

அரசாங்க திருமண ஏற்பாட்டிற்காக சென்று கொண்டிருந்த அரண்மனைக் குழுவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, மேற்றிராணியாரும் சாமிநாதரும், ஆல்பிஜென்சிய பதிதர்களால் நலிவடைந்திருந்த ஏழைக் குடியானவர்களுக்கு உதவிடும்வகையில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பண உதவி செய்தனர். அர்ச்.சாமிநாதர் மேற்றிராணியாரிடம், “ஆண்டவரே! அந்தப் பதிதர்களைப் பற்றி நன்கு அறியும்படியாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு நாம் உதவும் வகையில் சிறிது நேரம் நம் பயணத்தை ஒத்தி வைப்போம். நன்றாக சாப்பிட்டவுடன் நடந்ததைப்பற்றி அவர்கள் நமக்கு விளக்கமாகக் கூறமுடியும். அதனால் நம்மாலான உதவியை அவர்களுக்கு அளிக்கலாம்என்றார்

அதற்கு மேற்றிராணியாரும் சம்மதித்தார். அர்ச்.சாமிநாதர் கொடுத்த் உணவை உண்டபிறகு, புத்துணர்வை அடைந்த அந்த எளிய குடியானவர்களிடம், வந். டீகோ ஆண்டகை, “ அன்பான பிள்ளைகளே! அந்தப் பதிதர்களைப்பற்றி விரிவாகக் கூறுங்கள்என்றார். அதற்கு அவர்கள், “ ஆண்டவரே! ஆல்பிஜென்சிய பதிதர்கள் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு கடவுள் நல்லவர் என்றும் மற்றொருவர் கெட்டவர் என்றும் போதிக்கிறார்கள். நல்ல கடவுள் ஆத்துமத்தையும் கெட்ட கடவுள் சாPரத்தையும் படைத்தாரென்றும் ஆனால் கெட்ட கடவுள் படைத்த சாPரம் கெட்டதாக இருப்பதால் அதை அழிக்க வேண்டும் என்ற கொள்கையை பரப்பி அவர்கள் தற்கொலை செய்வதை நடைமுறைபடுத்தி வருகின்றனர். அவர்கள் திருமணத்தையும் மற்ற எந்த தேவதிரவிய அனுமானத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். சுவிசேஷத்தையும் திவ்யபலிபூசையையும் அவர்கள் ஏற்காமல் பகைக்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய பதித போதனைகளை ஏற்காததால் எங்களுடைய வயல்களை எரித்தனர். தேவாலயங்களையெல்லாம் அழித்துப் போட்டனர்என்றனர். இதைக் கேட்ட மேற்றிராணியாருடைய முகம் துயரத்தால் கருத்தது.

அவர்களிடம் அவர் பின்வருமாறு உரையாடினார்:

பரிசுத்த ஸ்தலங்களை கொள்ளையிட்ட பொருட்களை வைத்து அவர்கள் என்ன செய்கின்றனர்?”

ஆண்டவரே! அவற்றை அவர்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்

பரிசுத்த பண்டங்களையுமா?”

ஆமாம்

அது அவசங்கையாயிற்றே!”

ஆமாம். ஆண்டவரே

அப்பகுதியைச் சேர்ந்த தூலோஸ் மற்றும் பெசியர்ஸ் குறுநிலங்களின் பிரபுக்களும் இந்த பதிதர்களின் வஞ்சக வலையில் சிக்குண்டு பதிதர்களாக ஜீவிக்கலாயினர். அவர்கள் அந்தப் பதித மத வளர்ச்சிக்காக தங்களுடைய பதவி பெயர் கீர்த்திபணத்தைக் கொண்டு உதவிவந்தனர். தன் பேரப்பிள்ளைகளை பதிதர்கள் சிறைபிடித்துச் சென்றதால் மிகவும் வருத்தத்துடன ஒரு வயதுமுதிர்ந்த குடியானவன், மேற்றிராணியாரிடம் வந்து, “ ஆண்டவரே, இப்போது உங்களுடைய உதவி மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஆல்பிஜென்சியர் மீண்டும் இங்கு திரும்பி வருவார்கள். எங்களுக்கு என்ன நேருமோ என்று பயமாயிருக்கிறதுஎன்றார்.

மேற்றிராணியார் அவர்களை திடப்படுத்தி ஆறுதல் சொல்ல முற்பட்டபோது, அரசனுடைய தூதுக் குழுவினரை அழைத்துச் சென்ற படைவீரர்கள் இருவர் குதிரையில் வந்து மேற்றிராணியாரிடம்,“ஆண்டவரே உங்களுக்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கிறோம். என்ன நேர்ந்தது?”என்றுவினவினர்.

அதற்குமேற்றிராணியார்

நானும் சங்.தோமினிக் சுவாமியாரும் இந்த விவசாயிகள் தங்களுக்கு பதிதர்களால் நிகழ்ந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பற்றி கூறக் கேட்டுக் கொண்டிருந்தோம்என்றார்.

அதற்கு அவ்வீரர்கள், “இது போல ஆயிரக்கணக்கான மக்கள் அவதியுறுகின்றனர். ஆல்பிஜென்சிய பதிதர்களோ அதிக படைபலம் மிக்கவர்கள். நாம் ஒன்றும் செய்ய முடியாதுஎன்று கூறினர்.

ஆனால் அதைப்பற்றி நாம் சிந்தித்தால் ..”

அதற்கு நமக்கு நேரமில்லை ஆண்டவரே! நாம் நமது பயணத்தைத் தொடரவேண்டும்டென்மார்க் நாட்டைஅடைவதற்கு இன்னும் ஆயிரக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் மேற்றிராணியார் குடியானவர்களிடம், “ என் பிரியமான பிள்ளைகளே! உங்களுக்கு எங்களால் தற்போது செய்யக்கூடிய மிகச்சிறந்த உதவி ஜெபமாகும்என்று கூறிக்கொண்டே தனது வலது கரத்தை அவர்களுக்கு மேல் உயர்த்தி சிலுவை அடையாளமிட்டு ஜெபம் சொல்லி ஆசீர்வதித்தார். இதுவரை தன் ஜீவியத்தில் யாதொரு நிச்சயமான குறிக்கோளும் இல்லாமல் இருந்ததை உணர்ந்திருந்த அர்ச்.சாமிநாதர்

இப்பொழுது ஆல்பிஜென்சிய பதிதத்தை வேருடன் அழிக்கும்படியாகவும் அப்பதிதர்களை மனந்திருப்பும்படியாகவும் மாபெரும் அப்போஸ்தலிக்க அலுவலுக்காகவே தான் விசேஷமாக அழைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.

தூலோஸ் நகரிலிருந்த ஒரு இல்லத்தில் ஒரு இரவு தங்க நேரிட்ட போது, அந்த வீட்டுக்காரன் ஆல்பிஜென்சியன் என்பதை அறிந்தனர். இந்த ஒரு ஆத்துமத்தையாவது ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று அர்ச்.சாமிநாதர் மிகவும் ஆவல் கொண்டார். அன்று இரவு முழுவதும் அவன் அர்ச்.சாமிநாதரிடம் தர்க்கம் செய்வதில் ஈடுபட்டான். அர்ச்.சாமிநாதரின் தெளிந்த மகோன்னதமான ஞானஉபதேசத்தினாலும் பக்தி பற்றுதலினாலும் அடுத்த நாள் காலையில் அப்பதிதன் தன் கல்நெஞ்சு இளகியவனாக சர்வேசுரனிடம் மனந்திரும்பி திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டான்.†

அர்ச்.அமலோற்பவ மாமரியே வாழ்க! (தொடரும்)


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக