Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Our Lady லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Our Lady லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2024

“நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்.” - I am Coming from Heaven"


 “நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்.” 


1917, மே 13 அன்று நடந்த பாத்திமா மாதாவின் முதல் காட்சியில், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்ற லூசியாவின் கேள்விக்கு மாதா, "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்" என்று பதிலளித்தார்கள். உண்மையில், "நான் மோட்சத்திலிருந்து வருகிறேன்" என்று மாதா சொல்லியிருந்தாலும், அது உண்மையாகவே இருந்திருக்கும். ஆனால் ஆழ்ந்த பொருள் இருந்திருக்காது. ஆனால், "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்ற வார்த்தைகள் ஒரு வகையில், "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே!" என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன. தேவமாதா, இரக்கங்களின் பிதாவிடமிருந்து தான் பெற்ற ஒரு விசேஷ வரப்பிரசாதத்தால், முழு உண்மையோடு,"நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்என்று அறிக்கையிடத் தகுதி பெற்றிருக்கிறார்கள்

திவ்ய கன்னிகை, அர்ச். லூயிஸ் த மோன்ட்போர்ட்டின் வார்த்தைகளின் படி, "தெய்வீக" மாமரியாகவும், "கடவுளின் தகுதியுள்ள தாயாராகவும்" இருக்கிறார்கள். சேசுநாதரைப் போலவே தானும் ஆதாமின் மகளாக இவ்வுலகில் தோன்றியிருந்தாலும், மாமரி ஒரு தெய்வீகத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பிதாவின் திருக்குமா ரத்தியாகவும், சுதனின் திருத்தாயாராகவும், இஸ்பிரீத்துசாந்துவின் அமல பத்தினியாகவும், தேவாலயமாகவும் இருக்கிறார்கள். விசேஷமாக, தன் அமல உற்பவத்தின் பலனாக, திவ்ய கன்னிகை, சேசுவுக்குப் பிறகு, "பூலோகத்தை, அதாவது மனுக்குலத்தைச் சேர்ந்தவர்களாக" ஆகுமுன்னமே, அவர்கள் "மோட்சத்தைச் சேர்ந்த" முதல் சிருஷ்டியாகவும், ஒரே சிருஷ்டியாகவும் இருந்தார்கள்

திரியேக சர்வேசுரனுக்கு நேரடிச் சொந்தமானவர்கள் என்ற முறையில், ஆதியிலும், யுகங்களுக்கு முன்பும், திருச்சுதனின் மனிதாவதாரத் திட்டம் தெய்வீக மனதில் தோன்றிய அதே கணத்தில், திவ்ய கன்னிகை தேவ மனிதனுக்குப் பிறகு, அந்தத் திட்டத்தில் பங்குபெற நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆளாக இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கே மனித புத்திக் கெட்டாததும், "எல்லா நாவுகளும் மவுனமாயிருக்க வேண்டியதுமான ஒரு பரம இரகசியம் நிச்சயம் இருக்க வேண்டும். பரிசுத்த திருச்சபை தன் வழிபாடுகளில் அமல உற்பவக் கன்னிகைக் குப் பொருத்திக் கூறுகிற சர்வப்பிரசங்கி ஆகம வார்த்தைகள், விசேஷமாக, "நானே சிருஷ்டிகளுக்கெல்லாம் முந்தி சிருஷ்டிக்கப்பட்டேன்... ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப்பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன்" (24:5, 14) என்னும் வார்த்தைகள், அவர்களுடைய சிருஷ்டிக்கப்பட்ட நித்திய உற்பவத்தைப் பற்றிப் பேசுகின்றன என்று நாம் துணிந்து கூறலாம். இந்த வார்த்தைகள் நேரடிப் பொருளில் கடவுளின் ஞானத்தால் பேசப்படுகின்றன என்றாலும், அவை "சிருஷ்டிக்கப்பட்டேன்” என்ற வார்த்தையின்படி, தேவ திருச்சுதனைக் குறிப்பவையாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் "ஆதியிலும், யுகங்களுக்கு முன்னும்" சிருஷ்டிக்கப்பட்டவராயிருந்தால், ஒரு தேவ ஆளாக இருக்க முடியாது. "மேலும், தேவ ஞானம் சர்வேசுரனைப் போலவே நித்தியமானதாக இருக்கிற அவருடைய தேவ இலட்சணம் என்பதால், அது இந்த ஞானத்தையும் குறிக்க முடியாது. ஆகையால் இவ்வார்த்தைகள் திருச்சபை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிற படி, நிச்சயமாக, படைக்கப்பட்ட ஓர் ஆளாக இருந்த திவ்ய கன்னிகை யையே குறிக்கின்றன என்பது விளங்குகிறது. "சர்வேசுரனுக்குத் தாயாராக இருக்கிற மாதா, எப்போதுதான் அவருக்குத் தாயாக இல்லாமல் இருந்தார்கள்?” என்ற அர்ச். கிறீசோலோகுஸ் அருளப்பரின் வார்த்தைகளின் காரணத்தையும் இந்த அடிப்படையில் நம்மால் யூகிக்க முடிகிறது. 

இவ்வாறு, மாமரியின் வாக்குக்கெட்டாத பரம இரகசியம் முழுவதும், அவர்கள் பிதாவின் நேசத்திற்குரிய ஒரே மகளாகவும், வார்த்தையானவரின் தாயாகவும், இஸ்பிரீத்துவானவரின் தேவாலய மாகவும் இருப்பதும், "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்” என்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. ஏனெனில் மாமரி மனுக்குலத்தின் திவ்ய இரட்சகருக்குத் திருத்தாயாராகவும், ஒரு புதிய மனுக்குலத்தின் தாயாகிய புதிய ஏவாளாகவும் இருக்க நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவ்வாறு, "நான் மோட்சத்தைச் சேர்ந்தவள்என்ற வார்த்தைகளில் மாமரியின் ஆள்தன்மை பற்றிய ஒரு மிக அன்னியோன்னியமான இரகசியம் நமக்கு அவர்களாலேயே வெளிப்படுத்தப் படுகிறது. 

இவ்வாக்கியம் மசபியேல் கெபியில், "நாமே அமல உற்பவம்!" என்னும் மனித புத்திக்கெட்டாத பரம இரகசியத்தின் அதிகாரபூர்வ பிரகடனத்தையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. நான்கு ஆண்டு களுக்கு முன், அதாவது, 1854-ல், பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதரால் விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்யப்பட்ட "அமல உற்பவ சத்தியத்தின்மீது" வைக்கப்பட்ட பரலோக முத்திரையாக இதைப் பலர் காண்கிறார்கள். அது உண்மைதான் என்றாலும், அர்ச். மாக்ஸிமிலியன் கோல்பே இவ்வாக்கியத்தைத் தேவ மாதாவின் தெய்வீகத்தின் வெளிப்பாடாகக் கண்டார். மாசற்ற, நித்திய, அமல உற்பவமாகிய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய திருநாமத்தையே தேவ கன்னிகை தன் சொந்தப் பெயராகக் குறிப்பிட்டதன் மூலம், தன் தெய்வீகத் தாய்மைக்கும், மனுக்குலத் தாய்மைக்கும் முற்றிலும் அவசியமான விதத்தில், அவரோடு தான் ஒருபோதும் பிரிக்க முடியாத படி ஒன்றித்திருப்பதும், அவருடைய தெய்வீகத்தில் முழுமையாகப் பங்குபெற்றிருப்பதுமான பரம இரகசியத்தையே வெளிப்படுத்தினார்கள் என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார். 


இறுதியாக, நம் தாய் மோட்சத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், இவ்வார்த்தைகளின் மூலம், இதே அழைப்பு நமக்கும் நம் அன்னையால் விடுக்கப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். "மேலேயிருந்து வந்திருந்தவராகிய" (அரு. 8: 23) சேசுநாதரைப் போலவும், "மோட்சத்தைச் சேர்ந்தவளாகிய" அவருடைய திருமாதாவைப் போலவும் அன்றி, பாவம் செய்கிற எவனும் "இவ்வுலகத்தானாய்" இருக்கிறான். ஆனால் அவருடைய உண்மையான சீடர்களோ உலகத்தைச் சேராதவர்களாகவும் (அரு.15:19), பரலோகத்திற்கு உரியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, நம் ஆண்டவருடையவும், பாத்திமா மாதாவுடையவும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, தேவ கட்டளைகளையும், பாத்திமாவில் நமக்குத் தரப்பட்ட பரலோக வழிமுறைகளையும், விசேஷமாக மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் அனுசரித்து, மோட்சத்திற்குரியவர்களாய் ஆவோமாக, மோட்சத்தைச் சுதந்தரித்துக்கொள்வோமாக.

புதன், 17 ஜனவரி, 2024

பரிசுத்த குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம்

1979 ஆம் ஆண்டில் குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம் மிகக் கடுமையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட திருச்சபையால் அனுமதிக்கப்பட்டது.இந்த ஆய்வைச் செய்தவர் டாக்டர் பிலிப் கல்லதரன் என்பவர் ஆவார். இவர் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் உயிர் இயம்பியல் ஆய்வு வல்லுனர் ஆவார். இவர் ஓர் ஒவியரும். புகைப்பட கலைஞரும், விஞ்ஞான எழுத்தாளரும் கூட. பழைய சித்திரங்களைப் பற்றிய விமர்சன ஆய்வுக்காகப் பரிந்துரைக்கப்படும் செயல்முறைப்படி அகச்சிவப்பு ஒளியில் இவர் முதல் தடவையாக நம் மாதாவின் அற்புதச் சித்திரத்தை மிக விஸ்தாரமாகப் புகைப்படங்கள் எடுத்தார். அப்போது இந்த சித்திரத்தில் சில சிறிய செயற்கை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். அவை மாமரியைச் சுற்றியுள்ள சூரியக் கதிர்கள், அவர்களது நீல நிற மேற்போர்வையின்மீது காணப்படும் பொன்னிற நட்சத்திரங்கள், பொன்னிறத் துணிப்பின்னல் அலங்காரங்கள். இருண்ட நிலவு. அலங்கார நூற்குஞ்சங்கள், நிலவின் காணப்படும் தேவதூதரின் உருவம் போன்றவை ஆகும். இந்தச் செயற்கை அலங்காரங்களில் காணப்பட்ட வண்ணங்கள் காலத்தால் சிதைந்தும், மங்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அநேகமாக 1629-1634-ம் வருடங்களில் மெக்ஸிகோ நகரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளங்களுக்குப் பிறகு மனிதக் கைகளால் வரையப்பட்டிருக்கவோ, அல்லது சேர்க்கப்பட்டிருக்கவோ வேண்டும். இந்தப் பெருவெள்ளங்களால் இந்தப் பரிசுத்த சித்திரத்தைத் தாங்கியிருந்த டில்மா என்னும் சாக்குத் துணி போன்ற மேலாடை சிறிது பாதிக்கப்பட்டது.(மாதாவைச் சுற்றிக் காணப்படும் சூரியக் கதிர்கள் இச்சித்திரத்தின் தொடக்க கால செவ்வித்திய நகல்களில் காணப்படவில்லை என்பது இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என்பதை உறுதி செய்கின்றது.) ஆனால் மாமரியின் முகம் மற்றும் உருவம் ஆகியவை உட்பட சித்திரத்தின் எஞ்சியிருக்கும் பகுதியைப் பொறுத்த வரை, டாக்டர் சுல்லஹனின் முடிவு மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. "மேற்போர்வை ஒருவித இருண்ட பச்சை நீல நிறமுடையதாக உள்ளது. இது விளக்கப் பட முடியாதது. ஏனெனில் இத்தகைய நிறமிகள் எல்லாமே நிரந்தரமற்றவை. காலப்போக்கிலும், குறிப்பாக வெப்பமான காலநிலைகளிலும், மிக வேகமாக மங்கி விடக் கூடியவை. செவ்வித்திய மாயன் நீலநிற சுவர்ச் சித்திரங்கள் ஏற்கனவே மிக மோசமாக மங்கிப்போய் விட்டன. ஆயினும் இந்த நீல நிற மேற்போர்வை மட்டும் ஏதோ போன வாரம்தான் வரையப்பட்டது போல பிரகாசமான நிறத்துடன் காணப்படுகிறது. "மாதாவின் மேலங்கியைப் பொறுத்த வரை, எல்லாவற்றிலும் மேலாகக் குறிப்பிடத் தக்கது வியக்கத்தக்க விதத்தில் அது வீசும் ஒளியாகும். கண்ணால் காணக் கூடிய அதிகமான ஒளிப்


பிரதிபலிப்பு அதில் காணப்படுகிறது. ஆனாலும் அகச் சிவப்புக் கதிர்களில் அது ஊடுருவிக் காணக்கூடியதாக இருக்கிறது... நீல நிற மேற்போர்வையிலிருப்பது போல இளஞ்சிவப்பு ஆடையின் ஒளி-நிழல் வேறுபாடானது (Shade of colour), வர்ணப்பூச்சோடு கலந்து காணப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறமியின் கீழ் எந்த ஒரு செயற்கையான ஓளியமும் காணப்படவில்லை. "இந்த இளஞ்சிவப்பு நிறமி வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததாகத் தோன்றுகிறது.இந்த ஓவியத்தில் நிஜமாகவே விநோதமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று, அந்த டில்மா சரியான அளவுடையது அல்ல என்பதாகும். அது மட்டுமல்ல, அதன் மீது சித்திரங்களைப் பாதுகாக்கக் கூடிய வார்னிஷ் பூச்சுக்கான தடயமேயில்லை. இப்படி எந்த விதமான பாதுகாப்புக்குரிய மேற்பூச்சும் இல்லாதிருந்தும், மாதாவின் உள்ளங்கியும், மேற்போர்வையும், இப்போதுதான் நெய்யப்பட்டவை போலப் பிரகாசமாகவும், நல்ல நிறங்களுடனும் இருக்கின்றன. மேலும் நெய்யப்பட்ட இதன் இழைகள் அவ்வளவு நெருக்கமானவை அல்ல. ஆகவே அதிக இடை வெளிகள் உள்ள சாக்குத் துணி போன்ற இந்தத் துணியில் இவ்வளவு அற்புதமான நுணுக்கங்கள் நிறைந்த சித்திரத்தை வரைவது என்பதற்கு சாத்தியமேயில்லை. "குவாடலூப்பே கன்னிகையின் முகத்தோற்றம் ஒரு கலை அற்புதமாகும். வடிவழகிலும், பாவனையை வெளிப்படுத்தும் எளிமையிலும், திறங்களைப் பயன்படுத்தியுள்ள கலைநுட்பத்திலும் உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்புகளுக்கு இந்தச் சித்திரம் எந்த விதத்திலும் குறையாததாக இருக்கிறது. மேலும் இதே போன்ற முறையில் வரையப்பட்டுள்ள எந்த ஒரு சித்திரத்தையும் நான் ஒருபோதும் கண்டதில்லை."

 "இந்தச் சித்திரத்திற்குத் தத்ரூபமான தோற்றம் தருவதில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் உண்மையாகவே அற்புதமானவை. நம் வார்த்தைகளுக்கு எட்டாதவை. அவற்றில் ஒன்று, சரியான அளவுகளில் இல்லாத அந்த டில்மாவில் இயற்கையாகயே இருக்கும் மடிப்பு களை அல்லது பிசிறுகளை, அல்லது கசங்கல்களைக் கூட, அந்த ஓவியத்திற்கு ஆழமும் உயிரோட்டமும் தரும் விதத்தில் பயன்படுத்தியிருப்பது ஆகும். குறிப்பாக வாயில் இது தெளிவாகத் தெரிகிறது. அங்கு அந்தத் துணியின் ஒரு முரட்டு இழை, துணியின் மற்றப் பகுதிகளின் மட்டத்திற்குச் சற்று மேலாக எழுந்துள்ளது. இது உதட்டின் மேற்பகுதியின் விளிம்போடு மிக மிகச் சரியாகப் பொருந்துகிறது! இதே போன்ற முரட்டுத்தனமான குறைபாடுகள் இடது கன்னத்தின் நிழலூட் டப்பட்ட பகுதியிலும் வலது கண்ணின் மேற்பகுதியிலும், வலப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் இந்த ஓவியத்திற்கு ஒரு விதமான முப்பரிமாணத் தோற்றம் கிடைத்து, அதன் தத்ரூபத் தோற்றம் நுல்லியம் பெறுகிறது. இப்படி தத்ரூபத் தோற்ற விளைவைத் தரும்படி ஏற்கனவே மிகத் துல்லியமான இடங்களில் மடிப்புகளும், பிசிறுகளும் உள்ள ஒரு டில்மாவை எந்த ஒரு மனித ஓவியனும் தேர்ந்தெடுப்பது முற்றிலும் இயலாத காரியம் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.

இது தற்செயலாக நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. கண்கள், மற்றும் தலைமுடியின் கறுப்பு நிறம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இரும்பு ஆக்ஸைடோ அல்லது வேறு ஏதாவது நிறமியோ அல்ல. ஏனெனில் அவை காலப் போக்கில் உடைந்து, பழுப்பு நிறமாகவும் மாறி விடும். மற்றொரு மிக வியப்பான அம்சம் முகத்திலும், கரங்களிலும் காணப்படும் ஒளி-நிழல் வேறுபாடாகும். வர்ணக் கலவையில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் இயற்கை விளையு எப்படியிருக்குமோ, அவ்வாறே அந்த முரட்டு டில்மாவிலிருந்தும் பிரதிபலிக்கிறது!... தூரத்திலிருந்து பார்க்கும் போது, நிறமியும், துணியின் மேல்மட்ட கலைத்திறனும் ஒன்றோடொன்று கலக்கிற இடத்தில், ஒலிவ நிறமான திவ்ய கன்னிகையின் அதியற்புத அழகு ஏதோ மந்திரம் போட்டது போல் வெளிப்படுகிறது. அவர்களது முகபாவனை வணக்கத்துக்கு உரியதாகவும். அதே சமயம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் திடீர் திடீரென மாறி மாறித் தோன்றுகிறது. அவர்கள் செவ்விந்தியப் பெண்ணாகவும், அதே வேளையில் ஐரோப்பியப் பெண்ணாகவும் தோன்றுகிறார்கள். ஒலிவ நிறத் தோலுடனும், ஆனாலும் வெண்ணிறமாகவும் காணப்படுகிறார்கள்!"

"மேலும், மிகப் பெரும் அளவில் பெரிதாக்கப்பட்ட மாமரியின் வலது கண்ணின் புகைப்படங்களில் மூன்று மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவர்களில் ஒருவர் ஹுவான் டியேகோ போலத் தோன்றுகிறார். மற்றொருவர் சுமர்ராகா ஆயர். மூன்றாமவர் ஆயருக்கு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட ஹுவான் கொன்சாலஸ் போலத் தோன்றுகிறார். (பிற்பாடு இவர் குவாடலூப்பே மாதா பக்தியின் ஆர்வமிக்க ஆதரவாளராக மாறினார்.) ஹுவான் டியேகோ, ஹவான் கொன்சாலஸ் ஆகிய இருவரின் ஓவியங்களும் நம்மிடமுள்ளன. இவை, தேவ அன்னையின் கண்ணில் உள்ள இரண்டு உருவங்களோடு ஒத்துப்போகின்றன."

டாக்டர் கல்லஹன் மாதாவின் அற்புதச் சித்திரத்திலுள்ள வலது கண்ணை ஆஃப்தால் மாஸ்கோப் என்னும் கண் பரிசோதனைக் கருவியின் முன் வைத்துப் பரிசோதித்தபோது, ஆச்சரியத்தால் அதிர்ந்து போனார். அது படத்திலுள்ள கண்ணைப் போலவே அவருக்குத் தோன்றவில்லை. ஒரு உண்மையான மனிதக் கண்ணிலுள்ள விழித்திரை, லென்ஸ், கண் ரசங்கள் போன்ற அனைத்து பாகங்களையும் அவரால் துல்லியமாக அதில் காண முடிந்தது மட்டுமின்றி. ஒளி கண்ணில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் அனைத்து அம்சங்களையும் அந்தச் சித்திரக் கண்ணிலும் அவர் கண்டார். மாதாவின் கண்கள் சற்று மூடிய தோற்றமாக இருந்தன என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். எந்த அளவுக்கு டாக்டர் கல்லஹன் இந்த அதிசயத்தால் கவரப்பட்டார் என்றால், ஒரு கணம் அவர் தாம் அற்புதச் சித்திரத்தின் முன் இருப்பதையே அடியோடு மறந்தவ ராக, "கொஞ்சம் தலையை உயர்த்துங்கள் அம்மா!" என்றார்! “இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. இது மனித அறிவுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரியம் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்" என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ, அற்புதங்களின் அன்னையே! பரிசுத்த குவாடலூப்பே மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

சனி, 13 ஜனவரி, 2024

திரிகால ஜெபம் - The Angelus





(இந்த ஜெபத்தை முழங்காலிலிருந்து வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனால் சனிக்கிழமை சாயந்திரமும், ஞாயிற்றுக்கிழமையிலும் இதை நின்று கொண்டு சொல்ல வேண்டியது)

ஆண்டவருடைய சம்மனசானது மரியாயுடனே விஷேஷ் சொல்லிற்று.
 அவள் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்ப்பிணியானாள். (அருள்)

இதோ ஆண்டவருடைய அடிமையானவள் உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" (அருள்)

வார்த்தையானது மாம்சமாகி,
எங்களுடனே கூட வாசமாயிருந்தது (அருள்)

முதல்: சேசு கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

எல்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! சம்மனசு சொன்னதினாலே உமக்கு குமாரனாகிய சேசு கிறீஸ்து மனுஷனானதை அறிந் திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகி மையை அடையத் தக்கதாக, எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.



பாஸ்கு காலத்தின் திரிகால ஜெபம்

(இது பெரிய சனி மாலை முதல் அர்ச். தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் நின்றுகொண்டு சொல்லத்தக்கது )

பரலோகத்துக்கு இராக்கினியே ! மனங் களிகூறும் அல்லேலூயா அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர் - அல்லேலூயா

திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் - அல்லேலூயா
எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்- அல்லேலூயா 

எப்போதும் கன்னிகையான மரியாயே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர் - அல்லேலூயா
அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தான மானார் - அல்லேலூயா.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! உம்முடைய திருக்குமாரனுமாய், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறீஸ்துவின் உத்தானத்தினாலே உலகங்களிக்கச் சித்தமானீரே. கன்னி மரியாயாகிய அவருடைய திருத்தாயாராலே நித்திய ஜீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். இந்த 
மன்றாட்டுக்களை யெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.


The Angelus prayer in Tamil (Paschal time)

The Angelus Prayer in Tamil


சனி, 6 ஜனவரி, 2024

தேவமாதாவின் மகிமைமிகு மோட்சாரோபணம்

 "ஆதித்திருச்சபையின் மகாத்துமாவானவரும் வேதவல்லுனருமான ஓரிஜன் என்பவர் தேவமாதாவின் மோட்சாரோபணத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்: " மோட்சத்தில் மகிமையுடன் தேவமாதா பிரவேசிப்பதைக் கண்ணுற்ற பரிசுத்த ஆத்துமங்கள், "முள்ளும் உபாதனைகளும் நிறைந்த பூமியாகிய பாலைநிலத்திலிருந்து, நமது நேச ஆண்டவரே வெகுவாய் களிகூர்ந்து தம்முடன் மாபெரும் மகிமையுடன் அழைத்துவரும் பேரெழில் மிக்க இப்பெண்மணி யார்? (உன்னத சங்கீதம் 8:5)
ஆண்டவர் தமது திருத்தோள்மேல் சாய்ந்து கொண்டு வருபவர்களும் மகா பரிசுத்தமும் அதிஉன்னத புண்ணியங்களும் நிறைந்தவர்களுமான இவர்கள் யார்?" என்று ஒருமித்தகுரலில் வினவியபோது, தேவமாதாவுடன் சூழ்ந்து வந்த சம்மனசுகள், "அவர்கள், நமது தேவாதி தேவனும் ராஜாதி ராஜாவுமான சர்வேசுரனின் தாயார்' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பிரியதத்தத்தினால் பூரணமானவர்களுமான அவர்கள் நம் இராக்கினி' அர்ச்சிஷ்டவர்களுக்கெல்லாம் மேலானவர்களும் நம் சர்வேசுரனின் பிரிய நேசமான பத்தினியும் அமல உற்பவியும் பரிசுத்த புறாவுமாக விளங்குகின்றார்கள்' சகல சிருஷ்டிகளிலும் அதி உன்னத மேன்மைமிகுந்த சிருஷ்டியாக திகழ்கிறார்கள் என்று பதில் கூறினர். உடனே சகல மோட்சவாசிகளும் தேவமாதாவைப் போற்றிப் புகழ்ந்து ஆர்ப்பரித்து, "ஓ! எங்கள் ஆண்டவளே! எங்கள் இராக்கினியே! நீரே எங்கள் பரலோக நாட்டின் மகிமையும் மகிழ்ச்சியுமாகவும் எங்கள் அனைவருக்கும் மகிமையாகவும் விளங்குகின்றீர். உமது வரவு நல்வரவாகுக! நீர் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவீராக! இதோ உமது அரசு! இதோ உமது ஊழியரான நாங்கள் எப்போதும் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய காத்திருக்கிறோம்!" என்று பாடினர்.

தேவமாதாவை தங்களுடைய இராக்கினியாக வணங்கி வாழ்த்தி வரவேற்பதற்காக எல்லா அர்ச்சிஷ்டவர்களும் அங்கு ஒன்று கூடி வந்தனர். அப்போது பரிசுத்த கன்னியர்கள் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம்," ஓ மிகவும் பரிசுத்த ஆண்டவளே! நாங்களும் இப்பரலோகத்தின் அரசிகள் தான். ஆனால் நீரே எங்கள் அனைவருக்கும் இராக்கினி! ஏனென்றால், நீரே முதலில் உமது பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் அனைவருக்கும் மேன்மைமிகுந்த நன்மாதிரிகையாக திகழ்கின்றீர்! அதற்காக உம்மைப் போற்றி உமக்கு நன்றி செலுத்துகின்றோம்!" என்று கூறினர். அதன் பிறகு ஸ்துதியர்களும் வேதபாரகருமான சகல அர்ச்சிஷ்டவர்களும், தமது பரிசுத்த ஜீவித்தினால், தங்களுக்கு மிக அழகிய உன்னதமான நற்புண்ணியங்களைக் கற்பித்து அவற்றில் நடப்பித்த தங்கள் தேவ ஆண்டவளுக்கு நன்றியும் வாழ்த்துதலும் வணக்கமும் செலுத்தினர்.

பிறகு, சகல வேதசாட்சிகளும் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம் வந்தனர். தமது திவ்ய குமாரனின் பரிசுத்த பாடுகளின் மீதான வேதனைகள் மற்றும் வியாகுலங்களில் இவ்வுலக ஜீவியம் முழுவதும் நிலைத்திருந்த தேவமாதா தங்களுடைய தேவஆசிரியையாகவும் வேதசாட்சியத்தில் திவ்ய சேசுநாதர் சுவாமிக்காக தங்கள் உயிரை விடுவதற்கு தேவையான ஞானபலத்தை தமது பேறுபலன்களினால் பெற்றுத் தந்ததற்காகவும் தங்களுடைய திவ்ய இராக்கினிக்கு நன்றியும் ஸ்துதியும் தோத்திரமும் செலுத்தினர்” அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் +


எல்லா அப்போஸ்தலர்களுடைய சார்பில் அர்ச். யாகப்பர் தேவமாதாவிடம் வந்து இவ்வுலகில் இருந்தபோது தங்களுக்கு தேவமாதா செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி செலுத்தினார். அடுத்ததாக தீர்க்கதரிசிகள் வந்தனர். தேவமாதாவை அவர்கள் வணங்கி வாழ்த்தி, "எங்கள் ஆண்டவளே! எங்களுடைய எல்லா தீர்க்கதரிசனங்களும் முன்குறிக்கும் அடையாளங்களாக உம்மையே சுட்டிக் காட்டின” என்றனர். பிறகு, பிதாப்பிதாக்கள் வந்தனர். தேவமாதாவிடம் அவர்கள், "ஓ மிகவும் பரிசுத்த மரியாயே! நீரே எங்கள் நம்பிக்கையாக விளங்கினீர். உமது வரவிற்காக நாங்கள் நீண்ட காலம் வெகு பக்திபற்றுதலுடனும் பெருமூச்சுகளுடனும் காத்திருந்தோம்" என்று கூறினர். அவர்களுடன் நமது ஆதிப்பெற்றோரான ஆதாமும் ஏவாளும் வந்தனர். அவர்கள் மாதாவுக்கு மகா பிரியத்துடன் நன்றிசெலுத்திக் கொண்டே தேவமாதாவிடம், "ஆ பிரிய குமாரத்தியே! நாங்கள் மனுக்குலத்திற்கு ஏற்படுத்திய காயத்தைக் குணப்படுத்தினீர். எங்கள் அக்கிரமத்தினால் இழந்துபோன தேவஆசீரை மனுக்குலத்திற்கு நீர் பெற்றுக் கொடுத்தீர்! உம்மாலேயே நாங்கள் இரட்சணியமடைந்தோம். அதன்பொருட்டு நீர் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்படுவீராக!" என்று கூறினர். அர்ச். சிமியோன் தேவமாதாவின் திவ்ய பாதங்களை முத்தமிட்டார். அதன்பிறகு, தன் கைகளில் திவ்ய பாலனை ஏந்திய நாளைப்பற்றி மிக ஆனந்த அகமகிழ்வுடன் தேவமாதாவிடம் ஞாபகப்படுத்தினார். அர்ச். சக்கரியாஸ்,

அர்ச். எலிசபெத்தம்மாளுடன் வந்தார். மகா தாழ்ச்சியுடனும் உத்தம சிநேகத்துடனும் தங்களை சந்திக்க தங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்தமைக்காக மாதாவுக்கு நன்றி செலுத்தினர். அதனால் தாங்கள் திரளான தேவவரப்ரசாதங்களைப் பெற்றதாகக் கூறினர். அர்ச்.ஸ்நாபக அருளப்பரும் அங்கு வந்தார். மாதா, தமது திவ்ய குரலினால் தன்னை அர்ச்சித்ததற்காக அவர் மிகுந்த சிநேகத்துடன் தேவமாதாவுக்கு நன்றி செலுத்தினார். மாதாவுடைய பரிசுத்த பெற்றோர்களான அர்ச். ஜோக்கிம், அர்ச். அன்னம்மாள் மாதாவை அணுகி, ஓ ஆண்டவரே! எத்தகைய கனிவுடன் அவர்கள் தேவமாதாவை ஆசீர்வதித்தனர்! அவர்கள் மாதாவை வாழ்த்திக் கொண்டே, “ஓ நேச குமாரத்தியே! உம்மை எங்கள் குழந்தையாகப் பெற்றது எத்தகைய பெரிய பாக்கியம்! இப்பொழுது நீர் எங்களுடைய இராக்கினியாக இரும். ஏனெனில் நீர் எங்கள் சர்வேசுரனுடைய தாயார்! உம்மை வணங்கி தோத்தரித்து ஸ்துதிக்கிறோம்!" என்றனர்.

அர்ச்.சூசையப்பர் அங்கு தோன்றுகிறார். அவர் எத்தகைய உன்னதமான சிநேகத்துடன் மாதாவிடம் வருகிறார் என்று யாரால் சரிவர உணரக்கூடும்? பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், தமது திவ்ய பத்தினி மகத்தான வெற்றி வாகையுடன் பரலோக மகிமைக்குள் நுழைவதையும் அங்கு பரலோக இராக்கினியாக முடிசூட்டப்படுவதையும் காணும்போது, எத்தகைய ஆனந்த அக்களிப்பு எய்தினார் என்பதை யாரால் விவரிக்கமுடியும்? அவர் மகா கனிவுடன், "ஓ என் ஆண்டவளே! என் பிரிய பத்தினியே! நமது ஆண்டவரின் தாயாரான உம்மை எனது பத்தினியாக ஏற்படுத்தத் திருவுளமான நமது சர்வேசுரனுக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்தப்போகிறேன? நித்திய வார்த்தையானவரின் திவ்ய பாலத்துவத்தைப் போஷித்து அவருக்கு பணிவிடைசெய்தும் அவரை எனது கரங்களில் ஏந்தியும் மகிழ்ந்தேன். அதனால் வெகுவான விசேஷ தேவவரப்ரசாதங்களைப் பெற்றுக் கொள்ள தேவையான உன்னத அந்தஸ்தை உமது வழியாகவே நான் அடைந்தேன். திவ்ய சேசுவுக்கும் என் பரிசுத்த பத்தினியான உமக்கும் நான் இப்பூமியில் ஊழியம் செய்த அந்த மணித்துளிகள் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுவனவாக! இதோ நம் சேசு! பெத்லேகமில் நாம் அவரைப் பார்த்தது போல இனி அவர் மாட்டுக் கொட்டிலில் வைக்கோலின் மேல் படுத்துறங்க மாட்டார். நசரேத்தில் ஒரு தச்சுக்கூடத்தில் நம்முடன் வாழ்ந்தது போல அவர் யாவராலும் வெறுக்கப்பட்ட ஒரு தரித்திரராக இருக்க மாட்டார். உலகின் இரட்சணியத்திற்காக அந்த அவமான மரத்தில் இனி அவர் அறையப்படமாட்டார். ஆனால், அவருடைய தந்தையான பிதாவாகிய சர்வேசுரனின் வலது பாரிசத்தில் பரலோக பூலோக அரசராகவும் ஆண்டவராகவும் முடிசூட்டப்பட்டு வீற்றிருக்கிறார். மேலும், இப்பொழுது என் இராக்கினியே! இனிமையான அவருடைய திவ்ய பாதங்களைவிட்டு நாம் ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டோம்! அங்கு அவரை நாம் நித்தியத்திற்கும் ஸ்துதித்துக்கொண்டும் சிநேகித்துக் கொண்டும் இருப்போம்" என்றார்.
பிறகு, எல்லா சம்மனசுக்களும் வந்து, சம்மனசுக்களின் இராக்கினியை வணங்கினர். அவர்களைக் கண்ட தேவமாதா பூமியில் அவர்கள் தமக்களித்த அனைத்து பணிவிடைகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி செலுத்தினார்கள். விசேஷமாக மாதாவின் மகிமைகளை சுமந்து சென்றவரான அர்ச்.கபிரியேல் அதிதூதர், தம்மிடம் மகிழ்ச்சியின் துாதுவராக வந்து, தான் சர்வேசுரனின் தாயாராக சர்வேசுரனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சுபசெய்தியை அறிவிக்க வந்ததற்காக நன்றி செலுத்தினார்கள். அதன்பிறகு, தாழ்ச்சி மிகுந்த மகா பரிசுத்த கன்னிகை சர்வேசுரனின்தேவமகத்துவத்தை முழங்காலில் இருந்து ஆராதித்தார்கள். தனது ஒன்றுமில்லாமையில் மூழ்கியவர்களாக, தேவமாதா, தனக்கு சர்வேசுரனுடைய பரிசுத்த நன்மைத்தனம் அளித்த எல்லா தேவவரப்ரசாதங்களுக்காகவும் விசேஷமாக நித்திய வார்த்தையானவருக்கு தன்னை தாயாராக ஏற்படுத்தியமைக்காகவும் நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு, மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம் எத்தகைய அளவில்லா சிநேகத்துடன் மாதாவை ஆசீர்வதித்ததை யாரால் புரிந்து கொள்ளக் கூடும்? அவ்வாறு புரிந்து கொள்பவரால் மட்டுமே பரமபிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்ய குமாரத்தியையும், திவ்ய சுதனாகிய சர்வேசுரன் தமது பரிசுத்த மாதாவையும், திவ்ய இஸ்பிரீத்துசாந்துவான சர்வேசுரன் தமது பரிசுத்த பத்தினியையும் எவ்வாறு வரவேற்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிதாவாகிய சர்வேசுரன் தமது வல்லமையை அளித்து மாதாவுக்கு முடிசூட்டினார். அவ்வாறே, சுதனாகிய சர்வேசுரன் தமது ஞானத்தைக் கொண்டும் திவ்ய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தமது சிநேகத்தைக் கொண்டும் மாதாவுக்கு முடிசூட்டினார்கள். மூன்று தேவஆட்களும் சேசுநாதர்சுவாமியின் வலதுபக்கத்தில் மாதாவை அமரச் செய்தனர். அங்கு பரலோக பூலோக இராக்கினியாக தேவமாதாவுக்கு முடிசூட்டினர். மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம், சும்மனசுக்களுக்கும் எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவமாதாவை தங்கள் இராக்கினியாக ஏற்றுக் கொள்ளவும் மாதாவுக்கு ஊழியம் செய்து மாதாவுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் கட்டளையிட்டனர்.

சேசுசபையை உண்டாக்கின அர்ச்.இலொயோலா இஞ்ஞாசியார் (St. Ignatius of Loyalo)

 திருநாள் ஜூலை 31ம் தேதி.



ஸ்பெயின் நாட்டில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த உத்தம கத்தோலிக்க கிறிஸ்துவ பெற்றோர்களுக்கு மகனாக அர்ச்.இஞ்ஞாசியார் 1491ம் வருடம் பிறந்தார். இஞ்ஞாசியார் மேல் அந்நாட்டின் அரசன் மிகவும் பிரியமாயிருந்ததினால் அரண்மனையில் இருந்த அரச அலுவலர்களிடையே அவர் மிகுந்த மகிமையுடன் திகழ்ந்தார். இராணுவத்தில் சேர்ந்து வீர தீரச் செயல்கள் புரிந்து புகழ்பெற்றார். "பாம்பலோனா" என்ற கோட்டையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது இவர் கால்முறிபட்டு கடினக் காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 அப்போது அவர் அங்கு, அர்ச்சிஷ்டவர்களுடைய சரித்திரத்தை வாசிக்கிறபோது இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்டவர்களைப் அனுக்கிரகத்தினாலேயே பின்பற்றி ஜீவிப்பதற்கு தீர்மானித்தார். பிரதான அப்போஸ்தலரான அர்ச்.இராயப்பர் அவருக்குத் தோன்றி புதுமையாக அவருடைய காலைக் குணப்படுத்தினார். மேலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவும் அவருக்குத் தோன்றி, பசாசு அவரை உபாதித்து வந்த கற்புக்கு எதிரான சோதனைகளையும், பாவநாட்டங்களையும் அவரிடமிருந்து அகற்றினார்கள். தேவமாதா செய்த புதுமையினால், அன்றிலிருந்து சாகுமட்டும், அர்ச்.இஞ்ஞாசியார் அத்தகைய சோதனைகளிலிருந்து ஜீவியகாலம் முழுவதும் காப்பாற்றப்பட்டார். தன் அரண்மனை ஜீவியத்தை விட்டு விட்டு, சாங்கோபாங்கமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தைக் கடைபிடிக்கும் பொருட்டு மோன்செராத் என்ற தேவமாதாவின் தேவாலயத்திற்கு தவயாத்திரையாகச் சென்றார். பயணத்தின்போது ஒரு பிச்சைக்காரனுக்கு தன்னுடைய நல்ல உடைகளைக் கொடுத்தார். அவனுடைய தரித்திர உடையை வாங்கி அணிந்து கொண்டார். இத்தரித்திர கோலத்திலேயே தேவமாதாவின் கோவிலுக்குச் சென்றார். தன்னுடைய போர்வாளை தேவமாதாவின் சந்நிதியில் வைத்தார். பிறகு மிகுந்த மனஸ்தாபத்துடன் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்தார். தன் ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்தினார். தன் ஜீவியகாலம் முழுவதும் கற்புநிறை விரத்தனாயிருப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்தார். நித்தியத்திற்கும் தேவமாதாவின் சொந்த அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். பரிசுத்த கற்புநிறை விரதத்துவ ஜீவியம் தனக்குக் கிடைக்கும்படி ஒரு இரவு முழுவதும் தூங்காமல் தேவமாதாவின் சுரூபத்தின்முன் அழுதுகொண்டே மன்றாடிக் கொண்டிருந்தார். அந்த தயைமிகுந்த திவ்ய மோட்ச இராக்கினி அவருடைய மன்றாட்டை ஏற்றுக் கொண்டதினால் அவர் பெரிய அர்ச்சிஷ்டவரானார். அதன்பிறகு இஞ்ஞாசியார் வியாகுலமாதாவின் சுரூபத்தை தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். அநேக ஆபத்துக்களிலிருந்து வியாகுல மாதா தன்னைக் காப்பாற்றினார்கள் என்று அவரே வெளிப்படுத்தினார்.
மன்ரேசா என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளுக்கும் தரித்திரர்களுக்கும் ஊழியம் செய்து வந்தார். கடின தபசும் அனுசரித்து வந்தார். ஆனால் அவ்வூர் மக்கள், தரித்திர கோலத்தில் இருந்த போதிலும் அவர் ஒரு உயர்குடிமகன் என்று அறிந்து அவருக்கு மிகவும் சங்கை மரியாதை செய்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு உடனே, இஞ்ஞாசியார் ஊரை விட்டு வெளியேறி, அருகிலிருந்து மலைக்குகைக்குச் சென்று மறைந்து ஜீவித்தார். நேச ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை தன் கழுத்தில் அணிந்து கொண்டார். அவர் அங்கு மிகுந்த கடினமான தபசுகளை அநுசரித்து வந்தார். பிச்சையெடுத்தே உண்டு வந்தார்.

 ஞாயிற்றுக் கிழமைதவிர மற்ற நாட்களில் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே உட்கொண்டு ஒருசந்தியிருப்பார். நித்திரையை மிகவும் ஒறுத்துக் குறைப்பார். காயம் வருத்துவிக்கிற இரும்புமுள் ஒட்டியானத்தையும் மகா வேதனை வருத்துவிக்கிற சங்கிலியையும் இடுப்பிலே கட்டிக் கொள்வார். தினமும் தன் சரீரத்தை இரத்தம் புறப்படுகிறவரை அடித்துக் கொள்வார். இவ்வாறாக ஒருவருட காலம் அந்த "மன்ரேசா" குகையிலே கடின தபசு செய்தார்.

அப்படி ஒரு தபசில் ஈடுபட்டிருந்தபோது, விசேஷ தெளிவும் ஞான வெளிச்சமும் அடைந்து ஆண்டவராலே பிரகாசிக்கப்படுகிற போது வெகு ஆனந்தத்தை அவர் அனுபவித்ததுமல்லாமல் மேலான உன்னதமான உணர்ச்சிகள் அவருக்கு உண்டாயிற்று. இதைப்பற்றி குறிப்பிடுகையில் அவர், "அந்தக் குகையில் பரிசுத்த வேதாகமங்கள் இல்லாமல் போனாலும், ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தின வேதகாரியங்களைப் பற்றி மாத்திரம், வேதத்திற்காக என் உயிரைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறினார். அர்ச். பரமதிரித்துவ இரகசியத்தை அவர் தரிசனமாகக் காட்சி கண்டார். தேவமாதாவும் அநேகமுறை அவருக்கு அக்குகையில் தோன்றினார்கள்.
அப்போது அதுவரை கல்வி சாஸ்திரங்களைப் படியாமல் இருந்த இஞ்ஞாசியார், அந்தக் குகையிலே "ஞான தியான பயிற்சிகள்" என்ற ஞானதியானத்திற்குரிய ஆச்சரியமான புத்தகத்தை எழுதினார். ஞானத்துக்கு இருப்பிடமான தேவமாதாவே அப்புத்தகத்தை அவர் எழுதும்படிச் செய்தார்கள். அத்தியானங்களின் வழியாக அர்ச்.இஞ்ஞாசியார் வெகு பக்தி சுறுசுறுப்பும் அடைந்ததுமல்லாமல் எண்ணமுடியாத அநேக ஆத்துமங்கள் அப்புத்தகத்தினால் ஞான நன்மையடைந்தன. பாப்பரசர் அதனால் ஏற்படும் ஞானநன்மைகளின் பொருட்டு, உடனே அப்புத்தகத்தை அங்கீகரித்தார். ஆத்துமங்களை இரட்சிக்க கல்வி சாஸ்திரம், முக்கிய தேவை என்று தீர்மானித்த அர்ச். இஞ்ஞாசியார் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் தனது 30வது வயதில் சேர்ந்து கல்வி பயின்றார். அதற்குள்ளாக தான் உண்டாக்கின ஞான தியானங்களைக் கொண்டு அநேக பாவிகளை மனந்திருப்பினார். அதனால் காய்மகாரம் கொண்ட பசாசினாலேயும், மனந்திரும்பாத பாவிகளினாலேயும் அவருக்கு வந்த உபாதைகளுக்குக் கணக்கில்லை. அவரை மாயவித்தைக்காரன் என்று சொல்லி விலங்கிட்டு காவலிலே வைத்தார்கள். ஒருசமயம் பாவிகள் அவரைக் கொடூரமாய் அடித்ததினால் அவர் நினைவில்லாமல் கீழே விழுந்து கிடந்தார்.
ஒரு பாவியை மனந்திருப்புவதற்காக பனிஉறைந்திருக்கிற ஆற்றுத்தண்ணீரிலே வெகுநேரம் நின்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட கடின அவஸ்தையையும் சட்டைபண்ணாமல் பாவியின் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு மிகப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார். இஞ்ஞாசியார், தன் நல்ல நேச ஆண்டவரான சேசுநாதர்பேரில் கொண்டிருந்த சிநேகத்தின்பொருட்டு அளவற்ற ஜெருசலேமுக்கு திருயாத்திரையாகச் சென்றார். அங்கிருந்த திவ்ய கர்த்தர் பாடுபட்ட ஸ்தலங்களுக்கு சென்று அவற்றை, மகா உருக்கத்துடனும்அழுகையுடனும் சேவித்தார்.

இஞ்ஞாசியார் தவயாத்திரையை முடித்துக் கொண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி சாஸ்திரங்களைப் பயின்றார். அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களான இளைஞர்கள் சிலரைக் கொண்டு ஒரு துறவற சபையை உருவாக்க திட்டமிட்டார். தனது ஞானதியானங்களின் வழியாக அவர்களை ஞானஒடுக்கம் செய்ய வைத்தார். அதன்விளைவாக அவ்விளைஞர்கள் பக்தி சுறுசுறுப்புள்ளவர்களானார்கள். அர்ச். பிரான்சிஸ் சவேரியாரும் அந்த இளைஞர்களில் ஒருவர். அவர் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக பணியாற்றினார். உலக மகிமையைத் தேடி தீவிரமாக அவர் அலைந்தபோது தான் இஞ்ஞாசியார் அப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவராக சேர்ந்தார்.
 "ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆத்துமத்தை இழந்துபோனால் அதனால் அவனுக்கு என்ன பயன்" என்ற சுவிசேஷ வார்த்தைகளின் போதனையைக் கொண்டு அர்ச்.இஞ்ஞாசியார் யார் அவரை மனந்திருப்பியிருந்தார். அந்த இளைஞர் களுடன் இஞ்ஞாசியாரும் சேர்ந்து 7 பேராக வேதசாட்சிகளின் இராக்கினியான தேவமாதாவின் தேவாலயத்திற்குச் சென்று கற்பு, கீழ்படிதல், தரித்திரம் என்ற மூன்று வார்த்தைப்பாடுகள் கொடுத்து இஞ்ஞாசியார் தொடங்கவிருந்த சந்நியாச சபைக்கு அஸ்திவாரமிட்டனர்.

 இஞ்ஞாசியார், தன் படிபபை முடித்ததும், குருப்பட்டம் பெற்றார். நம் ஆண்டவர் மேல் அவர் வைத்திருந்த அளவில்லாத நேசத்தின் பொருட்டும், தாழ்ச்சியினிமித்தமும், இஞ்ஞாசியார், தனது சபைக்கு "சேசுசபை" என்று பெயரிட்டார். பிறகு, ரோமாபுரிக்குச் சென்று தனது சபைக்கு பாப்பரசரிடத்தில் அங்கீகாரம் பெற்றார். பிறகு தன் சபையார் மூலம் சத்தியவேதம் போதிக்கவும் அப்பொழுதுதான் திருச்சபையை உலகெங்கும் சீர்குலைக்கும்படியாக தோன்றியிருந்த புரோட்டஸ்டான்ட் பதிதங்களை நிர்மூலம் பண்ணவும் கிறிஸ்துவர்களை சாங்கோபாங்கத்தின் சுகிர்தநெறியில் திருப்பவும் வேண்டிய அலுவல்களில் ஈடுபடலானார். சிந்துதேசமான இந்தியாவிற்கு அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தலைமையில் சில குருக்களை அனுப்பி அங்கு சத்திய வேதத்தைப் போதிக்கச் செய்தார். தேவபராமரிப்பினால் சேசுசபை உலகெங்கும் வெகுவிரைவாக பரவி ஆங்காங்கே சத்தியவேதம் போதிக்கப்பட்டது. “எல்லாம் சர்வேசுரனுடைய அதிமகிமைக்காக" A.M.D.G (AD MAJOREM DEI GLORIAM) என்பதையே விருதுவாக்காகக் கொண்டு இஞ்ஞாசியாரால் நிறுவப்பட்ட சேசுபையால் உலகம் முழுவதிலும் இருந்த அஞ்ஞானத்துக்கும் பதிதங்களுக்கும் குறிப்பாக லுாத்தரன் என்ற பதிதத்திற்கும் பசாசின் இராஜ்யங்களுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது.
கிறிஸ்துவர்களிடையே தாழ்ந்து குளிர்ந்து போயிருந்த பக்திபற்றுதலை மறுபடியும் தூண்டி உயர்த்தும்படியாக அர்ச். இஞ்ஞாசியார் வெகுவாய் உழைத்தார். தேவாலயங்களை புதுப்பித்து வேதத்தைக் கடைபிடியாதவர்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கிறதும், ஞானபிரசங்கங்கள் கொடுப்பதும், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக ஆத்தும சுத்தம் பண்ணி திவ்ய நற்கருணை பந்திக்கு கிறிஸ்துவர்களை ஆயத்தம் செய்வதுமான பல்வேறு ஞான காரியங்களெல்லாம் அர்ச். இஞ்ஞாசியாராலே எங்கும் முக்கியமாக புண்ணிய பழக்க வழக்கங்களாக அனுசரிக்கப்படலாயின. இஞ்ஞாசியாரின் கட்டளையின்படி சேசுசபையார் அனைவரும் உலகெங்கும் பல நாடுகளில் மடங்களைக் கட்டி இளைஞர்களுக்கு இலவசமாக கல்விக் கற்பித்தனர். வேதசாஸ்திரங்களில் அவர்களைப் பயிற்றுவித்தனர்.
சேசுசபையில் உட்படும்படியாக ஏராளமான இளைஞர்கள் முன் வந்தனர். ஜெர்மனி தேசத்திலிருந்து சேசுசபையில் சேர்வதற்காக வந்த ஏராளமான அரசகுலத்தைச் சேர்ந்த ஆண்களுக்காக ரோமாபுரியில் ஒரு பெரிய குருமடத்தை நிறுவினார். அங்கு மற்ற நாடுகளினின்று வரும் இளைஞர்களுக்கும் வெவ்வேறு சிறு மடங்களையும் கட்டினார். திருமணமாகியும் இல்லறத்தில் ஈடுபடாமல் போன ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய பரிசுத்த கற்பைக் காப்பாற்றும்படியாகவும் அவர்கள் உத்தம கிறிஸ்துவ ஜீவியம் ஜீவிப்பதற்காகவும் அவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை ஏற்படுத்தினார். மேலும், அனாதை பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் ஞான உபதேசம் கற்பவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை நிறுவினார்.
 திருச்சபையிடமிருந்தும், பல்வேறு உபகாரிகளின் உதவியினாலும் இஞ்ஞாசியார், தான் நிறுவிய எல்லா மடங்களையும் போஷித்து வந்தார். பசாசுகளை ஓட்டுவதிலே இஞ்ஞாசியார் எவ்வளவுக்கு வல்லமை வாய்ந்தவரென்றால் அவருடைய உருவத்திற்கும் அவர் எழுதிய கடிதத்திற்கும் பயந்து பசாசுகள் ஓடின என்பதை அவருடைய சபைக்குருக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தேவசிநேகத்தின் சுவாலை அவருடைய இருதயத்திலே அடிக்கடி கொளுந்து விட்டு எரியும். அப்போதெல்லாம் அவர் அடைந்த ஞான சந்தோஷத்தினாலே தன் இரு கண்களும் குருடாகும் அளவிற்கு வெகுவாய் கண்ணீர் விடுவார்.

அவர் திவ்யபலிபூசை நிறைவேற்றும்போது தேவசிநேக சுவாலை அவருடைய இருதயத்தில் மிகுதியாக கிளம்பினதால், திவ்யபலிபூசை முடிந்தவுடன் நடக்கக்கூட முடியாதபடிக்கு மிகவும் பலவீனமாகி சோர்ந்து போவார். அப்போது அவரை அவருடைய அறைக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். அவர் தியானத்தில் இருக்கும்போது அநேகமுறை பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை இஞ்ஞாசியார் அவ்வாறு ஒன்றும் சாப்பிடாமலும், பேசாமலும் 8 நாட்கள் தொடர்ந்து பரவசநிலையிலேயே இருந்தார். ஒருசமயம் இஞ்ஞாசியார் ரோமாபுரிக்கு போகிறபோது நம் ஆண்டவர் சிலுவை சுமந்த பிரகாரமாக அவருக்குக் காட்சி தந்து, "நாம் உனக்கு ரோமாபுரியில் பிரசன்னமாயிருப்போம்" என்றார். அன்றிலிருந்து இஞ்ஞாசியாரின் முகத்தைச் சுற்றிலும் ஒளிக்கதிர் புதுமையாக வீசுகிறதை அர்ச். பிலிப் நேரியார் முதலிய சிலர் கண்டனர். அர்ச். சவேரியார் இஞ்ஞாசியாரை மிகவும் சங்கை செய்தவராதலால் அவருக்குக் கடிதம் எழுதும்போது முழங்காலில் இருந்து எழுதுவார். அவரை அர்ச்சிஷ்டவரென்றே அழைப்பார். வேறுபெயரினால் அழைக்கமாட்டார். அர்ச்.இஞ்ஞாசியார் எழுதிய கடிதத்தின் இறுதியில் இருந்த அவருடைய கையொப்பத்தை சவேரியார் கத்தரித்து எடுத்து அதை ஒரு அர்ச்சிஷ்ட பண்டமாக தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் சவேரியார், அவருடைய கையொப்பத்தை நம்பிக் கொண்டு பூமியிலேயும் கடலிலேயும் யாதொரு பயமுமின்றி பயணம் செய்யலாம். மேலும் நான் புண்ணியத்தில் உயர்வதற்கும் என்னுடைய வழியாக சிந்துதேசத்தாருக்கு வருகிற ஞான நன்மைகள் எல்லாவற்றிற்கும் அர்ச். இஞ்ஞாசியாருடைய புண்ணியங்கள் காரணமாயிருக்கின்றன. அவர் மகாபெரிய அர்ச்சிஷ்டவர்” என்றார்.

 அர்ச். இஞ்ஞாசியார் வாக்குக்கெட்டாத பக்திசுறுசுறுப்போடே புண்ணிய ஜீவியம் ஜீவித்தார். 65வது வயதில் அவஸ்தைபட்டு அர்ச்சிஷ்டவராக மரித்தார். அவரால் திருச்சபைக்கு விளைந்த திரளான ஞான நன்மைகளையும் அவர் செய்த எண்ணற்ற புதுமைகளையும் கண்ட 15ம் கிரகோரியார் பாப்பரசர் இஞ்ஞாசியாருக்கு 1622ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் அளித்தார். தேவமாதாவின் கட்டளையின்படியே அர்ச். இஞ்ஞாசியார் ஒருதடவை உலகிற்கு வந்து அப்போது ஜீவித்துக்கொண்டிருந்த அர்ச். பாசி மரியமதலேனம்மாளுக்கு தாழ்ச்சி என்ற புண்ணியத்தின்பேரிலே ஞான பிரசங்கம் செய்தார். சேசுசபை என்ற இந்த மாபெரும் உன்னத சந்நியாச சபையினாலே இதுவரைக்கும் உண்டான மகாத்துமாக்களான அர்ச்சிஷ்டவர்களும் வேதசாஸ்திரிகளும் எவ்வளவு பேர் என்றும் இதனால் உலகிற்கு விளைந்த ஞான நன்மைகள் எவ்வளவு என்றும் மனிதரால் சொல்லமுடியாது. சம்மனசுக்குரிய உயர்ந்த புத்தியும் வார்த்தையும் தான் அந்த ஞானநன்மைகளைப்பற்றி விவரிக்கக்கூடும். A.M.D.G.t

வெள்ளி, 29 டிசம்பர், 2023

லூர்துமாதா திருநாள் - Our Lady of Lourdes_

 லூர்துமாதா திருநாள்

பிப். 11

-சங். J.M. நிக்கொலாஸ் சுவாமி


பெர்ந்தெத் சூபிரு என்பவள் ஏழை பெற்றோரிடம் பிறந்தவன். அவளுக்கு வயது பதினான்கு. நேர்மையானவள், கீழ்ப்படிந்து நடப்பவள், தன் வாழ்நாளில் மனது பொருந்தி அற்பப் பாவமே செய்யாதவள். அவளுக்கு ஜெபம் என்றால் அதிக பிரியம். வயல் வெளிகளில் அடிக்கடி ஜெபமாலை ஜெபிப்பாள்.

1858-ம் ஆண்டு பெப்ருவரி 11-ம் நாளன்று பெர்ந்தெத். அவளுடைய சகோதரி அந்துவானெற், ஜோன் அபதி என்னும் சிநேகிதி, இம்மூவரும் ஒரு குறுகிய ஓடைப்பக்கம் நடந்துகொண்டிருந்தனர். ஓடையின் அகலம் முப்பது அல்லது நாற்பது அடி இருக்கும். அன்று வெகு குளிராயிருந்தது. அவர்கள் மூவரும் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தனர். ஓடையின் இடதுபக்கமாக அவர்கள் நடந்து சென்று மஸபியேல் கெபிக்கு எதிராக வந்தார்கள். காலணிகளையும், கால் உறைகளையும் கழற்றிவிட்டு தண்ணீரில் நடத்து ஓடையின் மறுபக்கத்தையடைந்து விறகு பொறுக்குவோம் என பெண்களில் ஒருத்தி கூறினாள். குளிர்ந்த நீரில் நடந்தால் தனக்கு இளைப்பு வியாதி வரும் என பெர்ந்தெத் அஞ்சி, ஜோனை நோக்கி, “என்னை உன் தோளில் வைத்து தூக்கிக் கொண்டு போ” என்றனள். “உனக்கு வரப்பிரியமில்லை யானால் இங்கேயே இருந்துகொள்" என அவள் சொல்லி விட்டாள். பெர்ந்தெத்தைத் தனியே விட்டுவிட்டு இருவரும் மறுபக்கம் சென்றனர்.

பெர்நதெத் தன் காலுறையைக் கழற்ற ஆரம்பிக்கையில், புயல் வீசுவதுபோல் பெரும் சத்தம் கேட்டது. பெர்நதெத் அங்கு மிங்கும் பார்த்தாள். ஒன்றையும் காணோம். சிறிது நேரம் கழித்து முன்போல் அதே சத்தம் கேட்டது. பெர்ந்தெத் பயந்து நிமிர்ந்து நின்று மஸபியேல் கெபிப்பக்கம் திரும்பினாள். குகையினுள்ளிருந்து தங்க நிறமான மேகம் ஒன்று வெளிவந்தது. அதற்குப்பின் ஒரு பெண் காணப்பட்டாள். வாலிபப் பெண், மிக அழகுடனிருந்தாள். "அவள் என்னைத் தாயன்புடன் நோக்கி, புன்சிரிப்புக் காண்பித்து, வரும்படி எனக்கு சயிக்கினை காட்டினாள். பயம் என்னை விட்டகன்றது. கண்களைக் கசக்கி மூடித் திறந்தேன். அந்தப் பெண் அதே இடத்தில் இன்னும் புன்முறுவலுடன் நின்றாள். என்னையறியாமலே ஜெபமாலை யைக் கையில் எடுத்து முழந்தாளிட்டேன். இது தனக்குப் பிரியம் எனத் தெரிவிக்குமாப்போல் அந்தப் பெண் தலையை அசைத்து, தன் வலது கையில் தொங்கிய ஜெபமாலையை எடுத்தாள். ஜெபமாலை தொடங்குமுன் சிலுவை அடையாளம் வரையவேண்டும். வலது கரத்தால் நெற்றியைத் தொட முயன்றேன். கையை உயர்த்த முடிய வில்லை. திமிர்வாதம் போல் இருந்தது. அந்தப் பெண் சிலுவை அடையாளம் வரைந்த பின்னரே. நான் என் கையை உயர்த்தக் கூடியவளானேன். நான் தனியே ஜெபமாலை செய்தேன். அவள் மணிகளை உருட்டிக்கொண்டிருந்தாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பத்துமணி ஜெபத்துக்குப்பின் என்னுடன் சேர்ந்து, “பிதாவுக்கும் சுதனுக்கும்" என்ற திரித்துவ ஆராதனையைச் சொன்னாள். ஜெபமாலை முடிந்ததும், அவள் குகையினுள் திரும்பினாள். அவளுடன் பொன் நிற மேகமும் மறைந்தது. அவளுக்கு வயது பதினாறு அல்லது பதினேழு இருக்கும்.".

பெர்நதெத் ஜெபித்துக்கொண்டிருப்பதை அந்துவானெற்றும் ஜோனும் பார்த்தனர். அங்கு ஜெபித்துக் கொண்டிருக்கும் அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். கோவிலில் அநேக ஜெபங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. அது பற்றாதா? ஜெபிப்பதைத் தவிர வேறு எதற்கும் அவள் உதவ மாட்டாள்" என ஜோன் கூறினாள்.

விறகு பொறுக்கிவிட்டு பெண்கள் இருவரும் கெபிப் பக்கமாய்த் திரும்பினர். பெர்ந்தெத் இன்னும் ஜெபித்துக் கொண்டிருந்தாள். மும்முறை அவளை அழைத்தார்கள். அவள் பதிலளிக்கவில்லை. கல் எறிந்தார்கள். ஒரு கல் அவள் தோள் மேல் அடித்தது. அதற்கும் அவள் அசையவில்லை. அவள் செத்துப்போனாளோ என அந்துவானெற் அஞ்சினாள். "செத்துப்போனாள் கீழே விழுந்திருப்பாளே" என ஜோன் சொல்லி அவளுடைய பயத்தை அகற்றினாள். அவர்கள் இவ்விதம் பேசிக்கொண்டிருக்கையில் பெர்ந்தெத் திடீரென பரவசத்தைவிட்டு விழிந்தாள்.

வீட்டுக்குப் போகும் வழியில், தான் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும், அவள் வெள்ளையும் நீலமும் கலந்த நிறத்தில் உடை தரித்திருந் தாளென்றும், ஒவ்வொரு பாதத்தின் கீழும் ஒரு மஞ்சள் ரோஜா மலர் இருந்ததென்றும், பெர்ந்தெத் அறிவித்தாள். யாருமே இதை நம்பவில்லை.

இன்னொரு நாள் பெர்நதெத் தன் சிநேகிதிகளுடனும் இன்னும் இருபது சிறுவர்களுடனும் மஸ்பியேல் கெபியருகே நிற்கையில் அந்தப் பெண் தோன்றினாள். பெர்நதெத் கெபியில் தீர்த்தத்தைத் தெளித்தாள். உடனே அந்தப் பெண் புன்முறுவல் பூத்தாள்.

அந்தப் பெண் யாராயிருக்கலாமென பலர் பலவிதமாய் பேசினார்கள். உதவி கேட்டு உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து வந்த ஆத்துமம் என சிலர் நினைத்தார்கள். இவ்விதம் நினைத்தவர்களில் ஒருவர், பெர்ந்தெத்தைப் பார்த்து "அடுத்த முறை அந்தப் பெண் வந்ததும் அவளுக்கு பேனா, மை. காகிதம் இவற்றைக் கொடுத்து, அவளுடைய விருப்பத்தை எழுதும்படி கேள். தான் வருவதன் நோக்கத்தையாவது எழுதட்டும்" என்றார். பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

அந்தப் பெண் சிரித்துக்கொண்டு "நான் சொல்ல இருக்கும் செய்தியை எழுத அவசியமில்லை. இங்கு தொடர்ந்து பதினைந்து நாட்களாக ஒவ்வொரு நாளும் வருவாயா? என்றனள். பெர்நதெத் சரி என்றதும், அந்தப் பெண் "இந்த உலகத்திலல்ல, ஆனால் மறு உலகத்தில் உன்னை நான் பாக்கியவதியாக்குவதாக வாக்களிக்கிறேன்" என்றாள்.

1858-ம் ஆண்டு தபசுகாலத்தில் முதல் ஞாயிறன்று மாதா ஆறாவது முறையாகக் காட்சியளித்தாள், பெர்ந்தெத்திடமிருந்து தன் பார்வையை அவள் அகற்றி கூட்டத்திலிருந்த ஒவ்வொருவருடைய முகத்தையும் நோக்கினாள். உடனே மாதாவின் முகத்தில் துயர் பரவியது. திரும்பவும் பெர்நதெத்தை நோக்கி "பாவிகளுக்காக ஜெபி” என முறையிடுகிறாற் போல் மொழிந்தாள்.

பெப்ருவரி 25-ம் நாள் வியாழக்கிழமை ஒன்பதாவது காட்சி. போய் ஊற்று நீரில் கழுவி அதைப் பருகும்படி, தேவதாய் பெர்நதெத்திடம் சொன்னாள். அங்கு ஊற்று ஒன்றும் கிடையாது. ஊற்று அகப்படுமா எனத்தேடிப் பார்த்தாள், ஒன்றும் அகப்படவில்லை.

ஆதலின் அவள் கெபிப் பக்கமாய்த் திரும்பி அன்னை மொழிந்த வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டான். அந்தப் பெண் பதிலளிக்கவில்லை. பெர்நதெத் கெபியின் பின்பக்கமாய் ஏறி முழந்தாளிட்டு மணல் கிடந்த ஓர் இடத்தில் தன் கைகளால் ஒரு பள்ளத்தைத் தோண்டினாள். அதுவரை அங்கு ஊற்று கிடையாது. பெர்நதெத் தோண்டியதும் சிறிது தண்ணீர் கழுவவேண்டும், குடிக்கவேண்டும் என மாதா சொல்லி இருந்ததால், மண் கலந்திருந்த அந்த நீரை எடுத்து பெர்ந்தெத் தன் முகத்தில் பூசி, ஊற்றிலிருந்து வந்த நீரை மண்ணோடு குடித்தாள். இன்னொரு விசுவாச முயற்சியையும், தாழ்ச்சி யையும் தேவதாய் கேட்டாள். அருகிலிருந்த சில இலைகளைச் சாப்பிடும்படி தேவதாய் சொன்னதும் பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

இந்த நிலையில் அவள் தன் பழைய இடத்திற்கு வருவதைக் கண்ட மக்களில், விசுவாசிகள் விசனித்தார்கள். அவிசுவாசிகள் சத்தமாய்க் கேலி செய்தார்கள். பின் பெர்நதெத் தன் முகத்தைக் கழுவிகொண்டு மாதாவை நோக்கலானாள்.

அந்த அற்புத ஊற்று சீக்கிரம் உலகப் பிரசித்தியடைந்தது. மறுநாளே அந்த ஊற்று நீர் பெருக்கெடுத்து கேவ் நதியில் போய் விழத் தொடங்கியது. லூயி பூரியெட் என்னும் கல்வெட்டும் குருடன் அந்த ஊற்று நீரில் தன் கண்களைக் கழுவினான். உடனே கண் பார்வை பெற்றான். இதுவே லூர்து நாயகியின் முதற் புதுமை வைத்தியர் களால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு குழந்தையை அதன் தாய், ஊற்று நீரில் குளிப்பாட்டினாள். குழந்தை உடனே முழுச் சுகமும் பலமும் பெற்றது. பாக்களின் அவிசுவாசம் அகன்றது.

"பாவிகளுக்காக" இன்னொரு தாழ்ச்சி முயற்சியும் தபசு முயற்சியும் செய்யும்படி தேவதாய் பெப்ருவரி 26-ம் நாளன்று. அதாவது பத்தாவது காட்சியில் அறிவித்து, “தவம்!, தவம்!, தவம்!" என்றான். "பாவிகளுக்காகத் தரையை முத்தி செய்" என அன்னை கூறியதும், பெர்நதெத் அவ்விதமே செய் தாள். ஆற்றை நோக்கி வந்த சரிவில் கெபியின் முன் முழந்தாளிட்டு அப்படியே நகர்ந்து தரையை முத்தமிட்டுக்கொண்டே உயர ஏறினாள், மக்களும் அவளைப் பின்பற்றி தரையை முத்தி செய்தார்கள். அவள் சயிக்கினை காட்டியதும் அநேகர் முழந்தாளிட்டு பாவிகளுக்காக தரையை முத்தி செய்துகொண்டே பர ஏறினார்கள். இவ்விதம் பலமுறை நடந்தது.

பதினோராவது முறையாக காட்சியளிக்கையில் அந்தப் பெண் “குருக்களிடம் போய், இங்கு எனக்கு ஒரு கோவில் கட்டச்சொல்" என்றாள்.

பெர்நதெத் போன சமயத்தில், பங்குக் குருவான பெரமால் சுவாமியார் தோட்டத்தில் கட்டளை ஜெபங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். தோட்ட வாசலைத் திறந்த சத்தம் கேட்டதும் ஏறெடுத்துப் பார்த்து, “யார்? என்ன வேண்டும்?" என்றார்.

நான் பெர்ந்தெத் சூபிரு" என அவள் கூறியதும், அவர் அவளை உச்சிமுதல் பாதம்வரை நோக்கிவிட்டு, "ஓ நீயா அந்த சிறுமி? உன்னைப்பற்றி பல அபூர்வக் கதைகளைக் கேட்டு இருக்கிறேன். உள்ளே வா" என்றார்.

தான் வந்த நோக்கத்தை பெர்நதத் அறிவித்தாள். அவளிடம் அவர் பல கேள்விகள் கேட்க, யாவற்றிற்கும் அவள் தக்க பதிலளித்தாள். விசாரணை முடிந்ததும் அவர் எழுந்து அறையில் அங்குமிங்கும் உலாவியபின், பெர்நதெத்தின் முன் நின்று, “உன்னை அனுப்பிய அந்த அழகிய பெண்ணிடம் பின்வருமாறு சொல் "தான் அறியாதவர் களுடன் ஒன்றும் வைத்துக்கொள்ள பங்கு சுவாமி விரும்புவதில்லை; எல்லாவற்றிற்கும் முன் அவள் தன் பெயரைச் சொல்லவேண்டும்; கோவில் கட்ட தனக்கு உரிமை உண்டென அவள் எண்பிக்க வேண்டும்; கோவில் கட்டப்பட அவளுக்கு உரிமை உண்டானால், நான் சொல்வதன் பொருள் அவளுக்கு விளங்கும். அவளுக்கு விளங்கா விட்டால் பங்குக் குருவுக்கு இனிமேலாக செய்தி சொல்லி  அனுப்பலாகாது என அவளிடம் சொல்" என்றார்.

மார்ச் 2-ம் நாள் பதினான்காம் முறையாக அந்தப் பெண் தோன்றினாள். கோவில் கட்டப்பட வேண்டும் என்றதுடன் சுற்றுப்பிரகாரங்கள் அங்கு வர தான் விரும்புவதாக அவள் தெரிவித்தாள்.

இன்னொரு முறை பெர்ந்தெத் பங்குக் குருவை அணுகினாள். இம்முறை அவர் கோபித்தார். "நீ பொய் சொல்கிறாய். அவளுக்காக எப்படி நாம் சுற்றுப்பிரகாரங்களை நடத்துவது? உன்னைப்போன்ற வர்களை லூர்து நகரில் வைத்திருப்பதே துன்பம். பட்டணத்தையே நீ குழப்பிவிடுகிறாய். மக்கள் உன் பின் ஓடும்படி செய்கிறாய். உனக்கு ஒரு மெழுகுதிரி தருகிறேன். நீயே சுற்றுப்பிரகாரமாயிரு. அவர்கள் உன்னைப் பின்செல்வார்கள். குருக்கள் தேவையில்லை" என்றார்.

"தான் எவரையும் என் பின் வரும்படிச் சொல்லவில்லை. அவர்கள் தாமாக வருகிறார்கள். சுற்றுப் பிரகாரங்களைப்பற்றி அந்தப் பெண் கேட்டதை நான் எவரிடமும் சொல்லவில்லை; உங்களிடம் மாத்திரமே சொல்லியிருக்கிறேன்" என பெர்நதெத்  மொழிந்ததும், அவர் பெர்நதெத் பக்கமாய்த் திரும்பி, “நீ ஒன்றையும் பார்க்கவில்லையா? குகையிலிருந்து ஒரு பெண் வர முடியாது. அவளுடைய பெயர் உனக்குத் தெரியாது. அப்படியானால் அங்கு ஒன்றும் இருக்க முடியாது" என்றார்.

பெர்நதெத் பயந்து, சுண்டெலியைப்போல் தன்னை அடக்கிக் கொண்டாள். சுவாமியாருக்கு முரட்டுச் சத்தம். அங்குமிங்கும் நடந்துகொண்டு "யாராவது இப்பேர்ப்பட்ட கதையைக் கேட்டது உண்டா? ஒரு பெண்ணாம்! அவளுக்குச் சுற்றுப் பிரகாரம் வேண்டுமாம்!" எனக் கத்தினார். பின் அவர் "கெபியில் ஒரு காட்டு ரோஜாச் செடி மேல் அவள் காட்சியளிப்பதாகச் சொல்கிறாய். அந்தச் செடி பூக்கும்படி அவள் செய்யட்டும். அப்படியானால் நீ சொல்வதை நான் நம்புகிறேன். உன்னுடன் நானும் மஸபியேல் கெபிக்கு வருவதாக வாக்களிக்கிறேன்” என்றார்.

நடந்ததைக் கேள்விப்பட்டு இருபதாயிரம் ஜனங்கள் கெபியருகே கூடிவிட்டார்கள். இராணுவ வீரர்களை அங்கு கொண்டுவர வேண்டி யிருந்தது. உருவிய வாளை ஏந்திய ஒருவன் துணையாக நின்று பெர்ந்தெத்தைப் பத்திரமாய் அழைத்துச் சென்றான்.

அந்தப் பெண் தோன்றியதும் பங்கு கவாமியாருடைய விருப்பத்தை பெர்ந்தெத் தெரிவித்தாள். பெண் சிரித்தாளேயொழிய தான் இன்னார் என்று சொல்லவில்லை.

மார்ச் 24-ம் நாளன்று பெர்ந்தெத் கெபிக்குச் சென்றாள். ஏற்கனவே அந்தப் பெண் அங்கு நின்றாள். அவளைக் காத்திருக்கப் பண்ணியதற்காக பெர்நதெக் மன்னிப்புக் கேட்டாள். மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என அந்தப் பெண் கூறியதும் பெர்நதத் தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, ஜெபமாலையை எடுத்தாள். ஜெபிக்கையில் ஒரு யோசனை வந்தது. அவள் யார் எனக் கேட்க ஆசை உண்டாயிற்று. "தான் யாரெனச் சொல்லும்படி அவளைக் கெஞ்சிக் கேட்டேன். அந்தப் பெண்ணோ இதற்குமுன் செய்தது போலவே செய்தாள்; தலை குனிந்து புன்சிரிப்புப் பூத்தாள்; பதில் அளிக்கவில்லை. எனக்கு இன்னும் சற்று துணிவு வந்தது. தயவுசெய்து உங்கள் பெயரைத் தெரிவியுங்கள் என்றேன். முன்போலவே அவள் தலைகுனிந்து புன்னகை பூத்தாளேயொழிய பதிலொன்றும் சொல்ல வில்லை. மௌனமாயிருந்தாள். நான் அவளுடைய பெயரை அறிய பாத்திரவதியல்ல என அங்கீகரித்து மூன்றாம் முறையாகக் கேட்டேன்."

அந்தப் பெண் ரோஜாச் செடிமேல் நின்றுகொண்டிருந்தாள். புதுமைச் சுரூபத்தின் மாதா நிற்கிறாப்போல் நின்றாள். நான் மூன்றாம் முறையாக என் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததும், அவளுடைய முகம் மாறியது. தாழ்ச்சியுடன் தலை குனிந்தாள். கரங்களைக் குவித்து அவற்றை மார்புவரை உயர்த்தினாள். பரலோகத்தை அண்ணார்ந்து பார்த்து, மெதுவாகக் கரங்களை விரித்து, என் பக்கமாய்ச் சிறிது சாய்த்து "அமல உற்பவம் நானே" என்று சொல்லி உடனே மறைந்தாள்.

அந்த வார்த்தைகளை மறந்து விடாதபடி பெர்ந்தெத் வீட்டுக்கு வரும் வழியில் அவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தாள். நேரே பங்கு சுவாமியாரிடம் போய்த் தெரிவித்தாள். கோவில் கட்ட பணம் இருக்கிறதா என அவர் கேட்க, பெர்நதெத் இல்லை என்றாள். "என்னிடமும் கிடையாது. அந்தப் பெண்ணைத் தரச் சொல்" என அவர் கூறினார்.

அந்தப் பெண் கேட்ட கோவில் அவளுக்குக் கிடைத்தது. பெரமால் சுவாமியே அதைக் கட்டினார். இன்று அது தற்கால உலகிலேயே மிக்க அழகுவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாய்த் திகழ்கிறது.

அந்த அழகிய பெண்ணை பெர்நதெத் கடைசி முறையாகப் பார்த்தது 1858-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் கார்மேல் மாதா திருநாளன்று. அன்றைய காட்சி பதினைந்து நிமிடம் நீடித்தது.



Short History of Our Lady of Lourdes


புதன், 27 டிசம்பர், 2023

தேவமாதா பிறந்த நாள் - Birth of Our Lady (September 8)

-சங். J.M.நிக்கொலாஸ் சுவாமி



கடவுளுக்கு அழகிய நாள். இந்த நாளில் பூமியில் பேரதிசயம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் சிருஷ்டி என்றாலும் அவள் பிதாவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள குமாரத்தி, நித்திய வார்த்தையாகிய சுதனாகிய சர்வேசுரனுக்கு மாதாவாக இருந்தவள், இஸ்பிரீத்துசாந்துவின் நேச பத்தினி. அவள் சிறு குழந்தை என்றாலும் சகல சிருஷ்டிகளையும்விட மகத்துவத்திலும் பதவியிலும் உயர்ந்தவள். இதற்கு முன் இருந்தவர்கள், இனி இருக்கப் போகிறவர்கள் அனைவரிலும் மேம்பட்டவள். ஏனெனில் ஏனைய சிருஷ்டிகள் கடவுளது ஊழியர்களே; மரியாயோ கடவுளுடைய குமாரத்தி, கடவுளுடைய மாதா, கடவுளுடைய பத்தினி, சுபாவத்திற்கு மேலான கொடைகள் அனைத்தையும் அவள் நிரம்பக் கொண்டிருந்தாள். பிதாவாகிய சர்வேசுரனது. வல்லமையின், சுதனுடைய ஞானத்தின், இஸ்பிரீத்துசாந்துவுடைய அன்பின் உயர்ந்த சிருஷ்டிப்பு அவள். பிதா சுதன் இஸ்பிரித்துசாந்து இவர்களுடன் அவள் அந்நியோன்னிய உறவுகொள்ளவேண்டியிருந்தமையால் அவள் இவ்வுன்னத நிலையில் உண்டாக்கப்பட்டாள். அவளை அவர்கள் அன்புடன் நோக்கினார்கள். கண்டு ஆனந்தம் கொண்டார்கள்; ஒருவன் தன் கைவேலையைக் கண்டு இன்புறுவதுபோல் அவர்கள் மரியாயைக் கண்டு இன்புற்றார்கள்.

ஓ மரியாயே, தொட்டிலில் இருக்கும் நீர் பூமியில் கடவுளது பரகதி, வர்ணிக்க முடியாத அழகு வாய்ந்தவள், மாசு மறுவின் நிழல் முதலாய் அணுகாதவள். நீர் இன்னும் குழந்தை யாயிருக்கும்போதே மிகவும் பரிசுத்த தமதிரித்துவம் உம்மைக் கண்டு மகிழ்ந்தது. ஓ நீர் பாக்கியவதி. கடவுளுக்குப் பிரியப் படுவது மிகப்பெரும் பாக்கியமாகும். இந்தப் பாக்கியத்தை, ஓ என் அன்னையே, நீர் பிறந்தநாளில் இருந்தே நீர் அனுபவித்திருக்கிறீர். நான் பரிசுத்த வாழ்வு நடத்துவேனானால், அனைத்தையும் கடவுளுக்காகச் செய்து வருவேனானால், இந்தப் பாக்கியத்தை நானும் ஓரளவு அனுபவிக்கலாம். ஓ என் சர்வேசுரா, உமக்குப் பிரியப்பட வேண்டுமானால், என்னிடம் நல்ல மனது இருக்க வேண்டும். உமக்கு பிரியப்பட நான்  சிரமத்தைப் பாராமல் முயல வேண்டும்.

மரியாயி பிறந்த நாள் அவளுக்கு அழகிய நாள். தன் தாயான அன்னம்மாளால் தான் அன்புடன் நேசிக்கப்படுவதையும், பரகதிக்கு பூமியானது அன்பளிப்பாகத் தரக்கூடிய மிக்க அழகிய கொடையாக அன்னம்மாளால் மிகவும் பரிசுத்த தமதிரித்துவத்திற்கு தான் ஒப்புக்கொடுக்கப்படுவதையும், மூன்று தேவ ஆட்களாலும் அன்புடன் தான் ஏற்றுக் கொள்ளப்படுவதையும் பார்ப்பது மரியாயிக்கு எத்தனையோ ஆனந்தத்தை அளித்திருக்கவேண்டும். தன் பரிசுத்த அன்னையின் பக்தி உணர்ச்சிகளுடன் தன்னையும் ஒன்றித்து, தன்னை முழுமையும் மகோன்னதரான கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதும், அவருக்காகவே வாழத் தீர்மானிப்பதும். மரியாயிக்கு எத்தனை மகிழ்ச்சி தந்தது. அவளது காணிக்கையைக் கண்ட கடவுள் அவளுக்கு உயர்ந்த கொடைகளை நிரம்பக் கொடுத்தது என்ன காட்சி! “ஓ என் நேசமே, நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதே கிடையா" என்னும் உன்னத சங்கீதாகம வசனங்களால் மிகவும் பரிசுத்த தமதிரித்துவம் தன்னை வந்திப்பதைக் கண்டு, அவள் எத்தனை மகிழ்ந்திருப்பாள்! "இவள் எவ்வளவு அழகானவள்! பூமியில் மலர இருக்கும் இம்மலர் எத்தனை அழகு பொருத்தியது!" என சம்மனசுக்கள் அனைவரும் சேர்ந்து கூறி வாழ்த்தியதை அவள் கேட்டாள். "மரியாயி அருணோதயம் போன்றவள்; சந்திரனைப் போல் அழகுள்ளவள், சூரியனைப்போல் காந்தி படைத்தவள்" (உந்.சங்.6:9) மகிழ்ச்சியடைய இத்தனை காரணங்கள் இருந்தன. மரியாயோ "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது; என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கிறது" என தன் உள்ளத்தில் உரைத்தாள்.

பரிசுத்த கன்னிகையின் மகிழ்ச்சியுடன் ஒன்றித்து கடவுளை மகிமைப்படுத்தி, மரியாயை வாழ்த்துவோமாக. நமது மகிழ்ச்சியனைத்தையும் கடவுளில் வைக்கவும், வேறெந்த மகிழ்ச்சியையுமே தேடாதிருக்கவும் அவளிடமிருந்து கற்றுக்கொள்வோமாக. கடவுளில் மாத்திரமே. உண்மையான மகிழ்ச்சி உண்டு; இதுமாத்திரமே இருதயத்தைப் பூரணமாய்த் திருப்தி செய்கிறது, பரசுதியின் முன் சுவையைத் தருகிறது. மரியாயி பிறந்த நாள் மானிட சந்ததிக்கு அழகிய நாள். அது மகிமை பொருந்திய நாள். ஆதாமின் சந்ததியில் பிறந்த ஒரு குழந்தை கடவுளின் மாதாவும், கடவுளின் பத்தினியுமாகத் தேர்த்தெடுக்கப்படுவது மனித சுபாவத்திற்குப் பெருத்த மகிமையல்லவா? இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

அது பாக்கியமான நாள். நீதியின் சூரியனானவரின் முன்னோடியான நட்சத்திரம் உதித்த நாள், தேவ நீதியின் சமுகத்தில் மானிடரின் மத்தியஸ்தியாகவும், மனிதருக்காக பரிந்து பேசுகிறவளாகவும் இருக்கவேண்டியவன் பிறந்த நாள் பாக்கியமான நாளே.

அது நம்பிக்கையின் நாள். ஏனெனில் இந்தத் திருக் குழந்தை ஒரு நாள் நம் அன்னை ஆவாள்; நம்மைப்பற்றி கடவுள் கொண்டுள்ள அன்பும் இரக்கமும் நிறை திட்டங்களை நிறைவேற்ற இவள் ஒத்துழைப்பாள்.

தொட்டிலில் இருக்கும்பொழுதே அவள் ஜெபிக்கிறாள். அவள் தன்னை அர்ச்சித்து புண்ணியங்களில் நாளுக்குநாள்  அதிகரிக்கும் வண்ணம் தனக்காக ஜெபிக்கிறாள். நமக்காக அவள் ஜெபிக்கிறாள், ஏனெனில் தனது வேலை உலகத்தைக் காப்பாற்றுவதும், மானிட இரட்சண்யத்தைப்பற்றிய கடவுளது திட்டங்களில் ஒத்துழைப்பதும் என அவள் அறிவாள்.

கடவுள் பூமியில் நமக்குக் கொடுத்திருக்கும் வேலையை இவ்விதம் நாம் நிறைவேற்றுகிறோமா? நம்மையும் பிறரையும் அர்ச்சிக்க நாம் உழைக்கிறோமா?

தேவதாய் மேல் நமக்குள்ள பக்தியைப் புதுப்பித்து, அவளுக்கு உகந்த பிள்ளையாய் வாழ நாம் உறுதி செய்வோமாக.

மரியாயைப் பூமிக்கு தந்து, அவளை நம் அன்னையாகவும் நமக்காகப் பரிந்து பேசுகிறவளாகவும், நம் மத்தியஸ்தியாகவும். நம் இரட்சகியாகவும் நியமித்ததற்காக கடவுளுக்கு நாம் நன்றி செலுத்துவோமாக

வெள்ளி, 22 டிசம்பர், 2023

அன்னையின் ஆரோபணத் திருநாள்(Assumption of Our Lady)

 

-சங் J.M. நிக்கொலாஸ் சுவாமி

சின்ன  ஆசியாவிலுள்ள கால்சிதன் என்னும் இடத்தில் கி.பி. 451 ம் ஆண்டில் திருச்சபையின் பேர்பெற்ற பொது சங்கம் ஒன்று நடைபெற்றது. திருச்சபையின் பிதாக்கள் திரளான பேர் அங்கு கூடியிருந்தனர். உரோமைச் சக்கரவர்த்தி மார்ஸியன் கூட்டத்தினுள் நுழைந்தார். பிதாக்களிடம் அவர் ஒரு காரியம் கேட்டார். "கடவுளுடைய மாதாவின் உடலை எப்படியாவது கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அத்திரு உடலுக்கென்று ஓர் அழகிய ஆலயம் அமைக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்த மாசற்ற உடலே உலகில் மிக விலையேறப்பெற்ற அர்ச்சியசிஷ்ட பண்டம். ஆதலின் ஒரு மகா தேவாலயம் அதற்குத் நேசத்திரமாக எழுப்பப்படல் நியாயமே மரியாயின் மாசற்ற உடலை நீங்கள் கண்டுபிடித்துக் கொடுப்பீர்களானால், நான் அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து முத்திரையீட்டு, விலையேறுப்பெற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் கீழ் அதை வைப்பேன். வணக்கத்துக்குரிய பிதாக்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: ஒரு காலத்தில் மாமிசமான கடவுளின் வார்த்தையானவருடைய உறைவிடமாயிருந்த அந்த சரீரத்தைக் கண்டுபிடியுங்கள்" என சக்கரவர்த்தி மன்றாடினார். கூட்டத்திலிருந்தவர்கள் திகைத்தார்கள். இராயப்பர். சின்னப்பர் இவர்களுடைய உடல்கள் எங்கிருந்தன என அவர்கள் அறிவார்கள். கொன்ஸ்தாந்தின் சக்கரவர்த்தியின் தாயான ஹெவேனா கண்டுபிடித்த கிறீஸ்துநாதருடைய சிலுவை இருந்த இடம் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்தவ மறையின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட வேதசாட்சிகள். கன்னியர் இவர்களுடைய எலும்புகள் அழகிய பெட்டிகளிலும் ஆயிரக்கணக்கான பீடங்களிலும் இருந்தன. ஆனால் எந்தப் பட்டணமாவது; எந்த மேற்றிராசனக் கோவிலாவது, திருச் சேத்திரமாவது தேவதாயின் உடல் தன்னிடம் இருந்ததாகப் பாராட்டவில்லை. 

ஜெருசலேம் நகர் மேற்றிராணியாரான (அர்ச்) யுவெனால் கூட்டத்தின் மத்தியில் எழுத்து நின்றார்.

மரியம்மாளின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்ததை, ஜெருசலேம் கிறீஸ்தவர்கள் தலைமுறை தலைமுறையாய் அறிந்து வந்ததை யுவெனால் எடுத்துரைத்தார். அந்தச் சபையிலிருந்த பிதாக்களுக்கு அந்த வரலாறு ஏற்கனவே தெரியும்: ஆனால் சக்கரவர்த்தி ஆவலுடன் வரலாற்றுக்குச் செவிசாய்த்தார்.

ஆதாமுடைய பிள்ளைகள் யாவரும் சாகவேண்டும். அந்த நேரம் தேவதாய்க்கு அணுகி வந்தது. அவர்களுடைய மகன் இறந்தார். இப்பொழுது மரியம்மாள் அந்த நேரத்தை சுஎதிர்பார்த்து படுக்கையில் இருந்தார்கள். பாவமே மனிதனை உருக்குலைத்து சீரழிப்பது. தேவதாயோ தன் வாழ்வின் இறுகிக் கட்டக்கிலும் வெகு அழகுடனிருந்தார்கள். 

வேதம் போதிப்பதற்காக உலகின் பல திசைகளுக்கும் சென்றிருந்த அப்போஸ்தலர்கள் இஸ்பிரித்துசாந்துவின் ஏவுதால் தங்கள் அரசியின் மரணப் படுக்கையண்டை வந்து சேர்ந்தனர். கிறீஸ்துநாதருடைய மரணத்திற்குப்பின் அவர்களை விடாது பின்சென்ற அப்போஸ்தலர்கள். இஸ்பிரித்துசாத்துவின் வருகைக்குப்பின், அவர்களை அருளப்பருடைய பராமரிப்பில் விட்டுப் பிரிந்தனர். ஆனால் எப்பொழுதுமே அவர்கள் அப்போஸ்தலர்களுடைய தாய், அரசி, துயரத்தில் அவர்களது திடம்.

கிறிஸ்துநாதருடைய தூதர்களான அப்போஸ்தலர்கள் கிறிஸ்துநாதருடைய மாதா தன் மகனிடம் போகுமுன் அவர்களைப் பார்க்கவேண்டுமென்று வந்தார்கள். சேசுவுக்கு எத்தனையோ செய்திகள் சொல்லி அனுப்பினார்கள்.

அமைதியாய் யாதொரு அவஸ்தையுமின்றி அன்னை உயிர் வீட்டார்கள். கிறிஸ்துநாதருடைய முப்பத்துமூன்று வருட மறைந்த வாழ்க்கையைப்பற்றி இனி அவர்கள் வாயிலிருந்து ஒன்றும் கேட்க முடியாது. உலகத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பதில் அவளிடம் ஆலோசனைக் கேட்க முடியாது. இது அவர்களுக்கு விசனத்தைக் கொடுத்தது.

கிறீஸ்துநாதரின்றி மரியன்னைக்கு உலகம் வெறுமனாகக் காணப்பட்டதென அப்போஸ்தலர்கள் அறிவார்கள். சற்பிரசாதத்தில் அவர் இருந்தபோதிலும் நேரில் பாரப்பதற்குச் சமானமாகுமா? அவர் பரலோகத்திற்கு எழுந்த பிற்பாடு, அவருடன் தான் ஒன்று சேர அவர் எப்பொழுது அழைப்பார் என அவர்கள் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். வாழ்நாள் முழுவதுமே அவர்கள் அவரது அழைப்புக்கும் விருப்பங்களுக்கும் இணங்கி வந்தவர்களல்லவா? இப்பொழுதும் அவருடைய அழைப்பை, மரணத்தை, பொறுமையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கடைசியாக அது வந்தது. அச்சத்துடன் நோக்கப்படும் வெற்றியாளனைப்போலல்ல. ஆனால் விடுதலை செய்பவனை போல் அது வந்தது. தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அப்போஸ்தலர்கள் ஒருவிதத்தில் மகிழ்த்தனர். அவர்களை அழைத்துச்செல்ல வந்த தன் மகனுடன் மாமரி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார்கள்.

அந்த நாட்டில் இறப்பவர்களது சடலங்களை நெடு நேரம் வைத்திருப்பதில்லை. அப்போஸ்தலர்கள் தங்கள் அன்னையின் சரீரத்தைத் தூக்கீச் சென்று கல்லறையில் வைத்தனர். அடக்கச் சடங்கின்போது, அவர்கள் நாங்கள் பங்கு பற்றாத இன்னொரு அடக்கத்தைப்பற்றி நினைத்தனர். கல்வாரியிலிருந்து அரிமத்தியா குசையின் கல்லறைக்குச் சென்ற அந்த சுற்றுப்பிரகாரத்தைப்பற்றி அன்னை அவர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார்கள். அந்நியரால் அவர் அடக்கம் செய்யப்படுகையில் தாங்கள் மறைந்திருந்ததைப்பற்றி அப்போஸ்தலர்கள் வெட்டு துக்கித்தனர். பெரிய வெள்ளிக் கிழமையன்று செய்த அந்த தவறுக்குப் பரிகாரமாயிருக்கும்படி. அவரது தாயாரை பரிவுடன் அடக்கம் செய்தனர்.

வழக்கம்போல் தோமையார் பிந்தி வந்தார். முக்கியமாக சம்பவங்களுக்கெல்லாம் அவர் பிந்திதான் வருவார் போலும். ஆனால் அவர் பிந்தியது நமக்கு நல்லதாயிற்று. உயிர்த்தெழுந்த கிறீஸ்துவை அப்போஸ்தலர்கள் முதன்முறை சந்தித்தபோது தோமையார் அங்கு இல்லை. கிறீஸ்துநாதர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் சந்தேகித்தார். பின் அதை நாம் உண்மை என ஏற்றுக் கொள்ளுவதற்கான நிபந்தனைகளை விதித்தனர். கடைசியாக தம் விரல்களை கிறீஸ்துநாகருடைய காயங்களிலும், கரத்தை அவரது விலாவிலும் வைத்தார். சேசு உயிர்த்தெழுத்தார் என்பதற்கு நல்ல அத்தாட்சி தந்ததற்காக நாம் தோமையாருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

மாமரி இறந்தபோதும் அவர் பிந்திப் போனார். அடக்கத்துக்கு முன் அவர் வந்திருப்பாரானால் அன்னை கல்லறையிலிருந்து மோட்சத்திற்கு எடுக்கப்பட்டதை நாம் அறியாதிருக்கலாம்.

"அன்னையின் அந்திய காலத்தில் நான் இங்கு வரமுடியவில்லை. அவர்களது திரு முகத்தையாவது நான் பார்க்க வேண்டும். எல்லோரும் என்னுடன் வாருங்கள். கல்லைப் புரட்டிப் பார்த்துவிட்டு வருவோம்" என வற்புறுத்தினார். அந்த இனிய முகத்தை இன்னொரு முறை பார்க்க அப்போஸ்தலர்களுக்கு பெரும் ஆவல். தோமையாருடன் போய். கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டினார்கள். உடலைக் காணோம். எவரும் அதைத் திருடியிருக்க மாட்டார்கள். அது நிச்சயம். தன் மகனைப் போலவே, தாயும் சரீரத்துடன் மோட்சம் சேர்ந்தார்கள் என தீர்மானித்தனர்.

கல்லறை வெறுமையாயிருத்து. அவர்களது சடலம் இருந்த இடத்தில் அழகிய மலர்கள் காணப்பட்டன. மரண நாற்றம் அங்கு இல்லை. மலர்களின் மணமும் பரலோக வாசனையுமே வீசின.

உயிர்த்த சேசு தம் மாதாவையும் தம்முடன் இருக்கும்படி எடுத்துக்கொண்டார். கிறீஸ்துநாதருடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி குறுகியது. கிறீஸ்துநாதருடைய உடலைச் சுமந்தவர்களுடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி நீடிக்க முடியாத வெற்றி மாமரி பூமியிலிருந்து பரகதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

வெறுமையாயிருந்த கல்லறையருகில் அப்போஸ்தலர்கள் முழந்தாளிட்டு, தாயையும் மகனையும் ஒருங்கே கொண்டிருந்த மோட்சத்தை நோக்கினார்கள். பின் மன மகிழ்வுடன் வீடு திரும்பினர்.

அன்றிலிருந்து கிறீஸ்தவ உலகம் மரியாயின் உடலுக்காக தேடி அலைந்ததில்லை. அது தன் தூய ஆத்துமத்துடன் ஒன்றித்து கடவுளருகில் இருந்தது என அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அர்ச். யுவெனால், சக்கரவர்த்தி மார்ஸியனுக்கும் அவரது அழகிய மனைவி புல்க்கேரியாவுக்கும் கால்ஸிதளில் கூடிய பொதுச் சங்கத்தில் இருந்த திருச்சபையின் பிதாக்களுக்கும் காடுத்துரைத்த வரலாறு இதுதான். யாவகும் முழுத் திருப்தியுடன் தலைகுனிந்து தங்கள் அங்கீகாரத்தை வெளியிட்டனர்.

மரியாயி மோட்சத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட திருநாள்

(ஆகஸ்ட் 15)

பரிசுத்த கன்னிகையின் பாக்கியமான மரணம்

மரியாயி இறந்தது நோயினாலல்ல, முதிர்பீராயத்தால் அல்ல, பாவத்தின் தண்டனையாகவுமல்ல. ஏனெனில் அவர்கள் ஒருபோதுமே பாவம் செய்தவளல்ல. நேசத்தால் அவள் உயிர்விட்டாள். அவளுடைய நேச மகன் பரலோகத்துக்கு ஆரோகணமானதிலிருந்து நேசத்தால் அவரை நோக்கியே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். நன் நேச மகன் ஒன்றிக்கும். நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றார்கள். அவரைப் பிரிந்து வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு வேதனையாயிருந்தது. அவரது ஆத்துமத்தை உடலுடன் பிணைத்திருந்த கட்டுகளை நேசமானது இறுதியாக அறுத்தது. அவர்களது தூய ஆத்துமம் பரலோகத்திற்கு பறந்து சென்றது. உலகப்பொருட்கள் மேல் பற்றின்றி வாழ்கிறவர்கள் பாக்கியவான்கள்; கடவுளைப் பார்த்து நித்தியத்திற்கும் அவரைக் கொண்டிருக்கும்படி அவர்கள் உயிர் ஆசையாயிருக்கிறார்கள்.

 பிதாப்பிதாக்களும் இவ்வித ஆசையுடன் இருந்தார்கள். அவர்களது கண்கள் எப்பொழுதும் தங்களது பரலோக வீட்டையே நோக்கி நின்றன. தாவீது அரசர் இப்பூமியில் தம்மை பரதேச வாசியாக மதித்து பரகதியை நாடினார். எனது தேகக்கட்டு அவிழ்ந்து, என் ஆத்துமம் தன் சிறையைவிட்டு வெளியேறி சேசுவுடன் ஒன்றிக்க வேண்டும் என அர்ச் சின்னப்பர் ஆசிந்தார்.  கிறீஸ்துவை அனுபவிப்பதே நமது ஏக ஆசை என் வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார் மொழிந்தார். இப்பூமியின் பிரயாணி போல் எங்காதவன் மோட்சத்தில் பிரஜைபோல் வாழ மாட்டான் என அர்ச். அகுஸ்தீன் சொல்கிறார். அசிசி அர்ச். பிரான்சிஸ் எப்பொழுதும் பரகதியையே நோக்கி நின்றார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் இரவு நேரத்தில் அழகிய வானத்தை நோக்கிக்கொண்டிருப்பார்: “பரலோகத்தை நோக்கும் பொழுது பூமி எத்தனை நிர்ப்பாக்கியமாகத் தோன்றுகிறது" என்பார். மோட்சத்தை நினைத்து ஆசைப் படாதவன் கிறீஸ்தவனல்ல.

பரிசுத்த கன்னியின் உத்தானம்.

கடவுள் மீது மரியாய் கொண்டிருந்த நேசமானது. உடலினின்று அவர்களது ஆத்துமத்தை அகற்றியது. அவர்களது தூய்மையானது. அழியாமை என்னும் அரச ஆடையால் அவர்களைப் போர்த்தியது. இத்தனை பரிசுத்தமான உடல் கல்லறையில் அழிவது தகுதியல்ல, பாவத்தின் தண்டனையே இந்த அழிவு, கன்னிமாமரி பாவம் செய்தவர்களல்ல. இவ்விதம் சேசு தம்முடைய மாதாவை நித்திய மகிமைக்கு உயர்த்தினார், கற்பு குன்றா உடல்கள் மேலும் இருதயங்கள் மேலும் கடவுளுக்குள்ள நேசத்தைக் கண்டு நாம் அதிசயிப்போமாக. இனிமேலாக நாம் நமது உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருப்போமாக. அற்ப இன்ப சுகத்திற்காக அதை நரகத்திற்கு உள்ளாக்க மாட்டோம். மோட்ச மகிமையை இழக்க மாட்டோம். ஓ பரிசுத்த கற்பே, மரியாயின் உடலை நீ எவ்வளவு அழகுபடுத்தி யிருக்கிறாய்! எங்கள் மதிப்புக்கும் நேசத்திற்கும் நீ எவ்வளவோ உரிமை பெறுகிறாய்? மிக விலையுயர்ந்த திரவியமாக உன்னை நாங்கள் மதித்துக் காப்பாற்றி வரவேண்டும்.

மரியாயி மோட்ச அரசி

பூமியில் நாம் நம்மைத் தாழ்ந்தும் அளவு பரகதியில் நாம் உயர்த்தப்படுவோம். இது கடவுளது சட்டம் (லூக் 14:17). மரியாயி தன்னை எல்லா சிருஷ்டிகளுக்கும் கீழாகத் தாழ்த்தினார்கள். சுடவுளுடைய தாய் என்ற மட்டில் அரசியான அவர்கள் தன்னை ஓர் அடிமை என்றார்கள். சம்மனசுகளைவிடக் தூய்மை வாய்ந்த அவர்கள், சுத்திகர நாளன்று தேவாலயத்தில் சாதாரண பெண்களைப்போல் போய் நின்றார்கள். அரசர்களின் குமாரத்தியான அவர்கள், சாதாரண பெண்ணைப்போல் தன்னைத் தாழ்த்தி, உழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் கீழாக அவர்கள் தன்னைத் தாழ்த்தியமையால் எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலாக அவர்கள் உயர்த்தப்பட உரிமை பெற்றார்கள். இதை அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் கடவுள் செய்தார். மகிமையுடன் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர்கள், மேகங்களுக்கு மேல் வெற்றி வீரப்பெண்போல் எழும்புகிறார்கள். சம்மனசுக்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். "வனாந்தரத்திலிருந்து எழும்பி வருகிற இவள் யாரோ?" (உத், சங். 8:8) என்று அவர்களுடைய மகிமையைப் பாடுகிறார்கள். அவர்கள் மோட்சத்தில் நுழைந்ததும் தீர்க்கதரிசிகளும் பிதாப்பிதாக்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். மோயீசன், யாக்கோபின் நட்சத்திரம் என தாம் முன்னறிவித்தவளை வரவேற்கிறார். இசையாஸ், கன்னித் தாய் என தாம் முன்னறிவித்தவளை, எசேக்கியேல், கீழ்த் திசையின் வாசல் எனத் தாம் கூறியவளை, தாவீது மன்னன். அரசரின் வலது பக்கத்தில் நிற்கும் அரசி எனத் தாம் சொன்னவளை, குதூகலத்துடன் வரவேற்கின்றனர். இந்த மகிழ்ச்சிக் கீதங்களின் மத்தியில் மரியாயி தன் தேவகீதத்தை இசைத்து, "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது" என்கிறார்கள். இது தொடக்கமே. மரியாயிக்கென தயாரிக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் கடவுள் மரியாயை வைத்து, அவளது சிரசில் அரச கிரீடத்தைச் சூட்டி, அவள் பரலோக பூலோக அரசி என சம்மனசுக்களுக்கும் மனிதருக்கும் காட்டுகிறார். ஓ என் மாதாவே. ஓ என் அரசியே. ஓ என் ஆண்டவளே, மகிமையில் வீற்றிருக்கும் உம்மை நான் வணங்குகிறேன். என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணம் செய்து, உமது சிநேக ஆட்சியின் கீழ் என்னை வைத்து விடுகிறேன். நீர் உண்மையாகவே என்னுடைய பாதுகாவலியாகவும், அன்னையாகவும் இருப்பீராக. சமாதானமும் கத்தோலிக்க மறையும், கடவுள்மீது அன்பும், திருச்சபைமீது நேசமும் உமது மன்றாட்டால் எங்கும் அரசுபுரியச் செய்யும். ஆமென்.



Source: Sancta Maria 2012 - July August