Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

Punithargal vaalgai varalaru லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Punithargal vaalgai varalaru லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். குழந்தை தெரேசம்மாள் ( St. Therese of Child Jeus)

சிறிய புஷ்பம்


அவள் சொல்லால் ஏற்பட்டதைக் காட்டிலும் அவளுடைய செய்கையால் ஏற்பட்டதே “சேசுவின் சிறிய புஷ்பம்.


சிறிய புஷ்பம் என்று சொன்ன மாத்திரத்தில் அது 'அர்ச். குழந்தை தெரேசம்மாள்' என்று உடனே எவரும் சொல்லக் கூடும். சேசுவின் சிறிய புஷ்பம் என்ற காரணப் பெயர் இந்த அர்ச்சியசிஷ்ட கன்னிகைக்கு உண்டாகக் காரண மென்ன என்று கேட்டால் அது அநேகருக்குத் தெரியாது. ஆயினும் இது அவளுடைய பல உருவப் படங்களில் ஒன்றையெடுத்துச் சற்று உற்று நோக்குவோருக்குக் சட்டெனத் தெளிவாகும். எப்படியெனில், ஒரு வகையான படத்தில் அர்ச்சியசிஷ்டவள் தனது கைகளில் சிலுவையில் பாடுபட்டு மரித்த சேசுநாதரின் திருச்சுரூபத்தையும், அதோடு ரோஜா மலர்களையும் ஏந்திக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அதன் அர்த்தத்தைச் சிந்தித்துப் பார்த்தவர் எத்தனை பேரோ! பாடுபட்ட அவ்வுருவமும் அப்புஷ்பங்களும் அழகுக்காக அந்த அம்மாளின் கைகளில் இருக்கின்றனவா? அநேகர் பாடுபட்ட சுரூபங்களையும், படங்களையும் மற்ற உருவங்களையும் காட்சிக்கு வைத்தி ருப்பது போல் அந்த அர்ச்சியசிஷ்ட கன்னிகையும் வெளித்தோற்றத்திற்காக அதை வைத்திருக்கின்றாளா? அல்ல, அல்ல, அவள் அவ்விதம் வைத்திருப்பதன் கருத்தும் விசேஷமும் வேறு.

அதாவது, சேசுநாதர் சுவாமி பாடுபட்ட உருவத்தைப் பார்த்த அர்ச்சிய சிஷ்டவள் அவருடைய பாடுகளின் பேரில் தியானித்து அவரைப் போல் தானும் ஆத்துமங்களுக்காகச் சாகிறதானாலும் சரி, அதற்கு சம்மதம் என்றிருந்தாள். அவர் பேரிலும் ஆத்துமங்களின் பேரிலும் வைத்த சிநேகத்தால் தன் சித்தத்தையும், சரீரத்தையும் ஒறுக்க உடன்பட்டாள். இது அவள் கூறியவைகளிலிருந்து தெரிய வருகின்றது.

அவன் கூறியவைகளாவன: “என் சுய மனதை முறித்து. நாவை அடக்கி, ஒருவரும் பார்க்கக் கூடாத அற்ப சொற்ப உதவி ஊழியங்களைப் பிறருக்குச் செய்யப் பிரயாசைப் பட்டேன். யாதொரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஏற்ற வழிவகைகளையும் தகுந்த சாதனங்களையும் தேடி உபயோகிப்பது அவசியம். சிலுவையின் வழியாக நான் ஆத்துமங்களை இரட்சிக்க வேண்டுமென்று அவர் எனக்குத் தெரிவித்திருக்கிறார்." 

"மெய்யான தேவ சிநேகமின்றி நாம் செய்யும் எந்தக் காரியமும் வீண் என்று அறிந்தேன்; மிகவும் பிரபல்யமான அதியுன்னத புண்ணிய முயற்சி முதலாய் தேவ சிநேகமில்லையானால் பிரயோஜனமற்றதே." "ஒரேயொரு காரியம் மாத்திரம் செய்ய வேண்டும். அதாவது, சிறு புண்ணியப் பலிகளாகிய பூ மலர்களை சேசுவின் சமுகத்தில் தெளித்து தன்னை முழுவதும் அவருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்துவிடுவதுதான் அர்ச்சியசிஷ்டவளாக வழி" என்று சொல்லியிருக்கிறாள். 'பிரசங்கத்தினால் செய்யும் அப்போஸ் தலத்துவத்தைப் பார்க்கிலும் ஜெபத்தின் அப்போஸ்தலத்துவம் அதிக மேன்மையானதல்லவா? ஆயிரக்கணக்கான ஆத்துமங்களை இரட்சிக்கும் சுவிசேஷ வேலையாட்களுக்காக வேண்டிக் கொள்வது நமது அலுவலா யிருக்கும் போது நாமும் அவர்களைப் போல் ஆத்தும இரட்சணியத்துக்காக உழைக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்."
"பூமலர் தெளித்தல்" என்றால் என்ன? அதாவது, சிறு காரியங்களில் தன்னைத்தானே ஒறுத்தலாம்; கிரமமற்ற பார்வை, பிறச்சிநேகத்துக்கு விரோதமான வார்த்தை முதலானவைகளை அடக்கி ஜெயித்தல், நான் செய்யும் அற்பக் கிரியை முதலாய் சிநேகத்தை முன்னிட்டுச் செய்வேன். அது இன்பமானாலும் சரி. துன்பமானாலும் சரி, சகலமும் சிநேகத்துக்காகவே அனுபவிப்பேன் என்று தீர்மானித்து நடத்தல்: இதுதான் "பூமலர் தெளித்தல்" என்று சொல்லப்படும். “என் கையில் கிடைக்கும் பூக்களையெடுத்து ஓர் இதழ் விடாமல் எல்லாவற்றையும் தெளிப்பேன்." இதைப் போல் அநேக தடவைகள் அவள் சொல்லியிருப்பதுமன்றி, எத்தனையோ அற்ப சொற்பமான காரியங்களையும் செய்திருக்கிறாள்.

அவள் ஆண்டவரை அதிகமதிகமாய் நேசிக்க, நேசிக்க ஆத்தும இரட்சணிய ஆவலும் மென்மேலும் அதிகரித்தது. இந்தக் கொள்கை அவளுக்கு மட்டுமல்ல, ஆனால் சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் உண்டு. ஏனெனில் சர்வேசுரனைச் சிநேகிக்கிறவர்கள் அவர் நேசிக்கிறவர்களை நேசிக்காமலிருக்க முடியாது. இதனாலேயே தேவசிநேகமும், பிறர் சிநேகமும் இணைபிரியாத சங்கிலி யெனச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆண்டவர் ஆத்துமங்களை நேசித்ததால் தமது உயிரையே கையளித்தார். அப்படியே அவரை நேசிக்கிற அர்ச்சியசிஷ்ட வர்களும் ஆத்துமாக்களுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாரா யிருக்கிறார்கள். ஆன்மாக்களை இரட்சிக்கும் அலுவலை விட மேலானது வேறொன்றுமில்லை. ஆகையால் அர்ச். சின்ன தெரேசாள் ஆண்டவரை நேசித்து அவருக்காக ஆத்துமங் களையும் நேசித்தாள்.

இந்த அலுவவைச் செய்ய அவள் தெரிந்துகொண்ட வழியென்ன? தான் வெளியில் போய்ப் பிரசங்கிக்க முடியாதென்றும், அரும்பெரும் காரியங் கனளச் செய்ய தான் ஆற்றல் இல்லாதவள் என்றும் அறிந்த அர்ச்சியசிஷ்டவள் குருக்களுக்காக வேண்டிக்கொள்ளுதலிலும், அதனோடு அற்ப சொற்ப ஒறுத்தல்களைச் சேர்த்தலிலும் தன் கவனத்தைச் செலுத்துவாளாயினள். இந்த ஒறுத்தல் முயற்சிகளைத்தான் சிறிய புஷ்பங்கள் என்று அவள் சொல்வது வழக்கம். இந்தப் பூக்கள் தான் பாடுபட்ட சுரூபத்தோடே ஒன்றித்திருக்கின்றன. இவைகள்தான் அவளுடைய படத்தில் காணப்படும் ரோஜா மலர்கள். அதாவது, சேசுநாதருடைய பாடுகளோடு தன்னுடைய அற்ப சொற்ப அலுவல்களாகிய ஒறுத்தல்களை ஒன்றிக்கிறாள். இதுதான் சேகநாதருக்குப் பிரியமானது. ஆத்துமங்களுக்காக உழைப்பதைவிட மேலாக அவர் மதிப்பதும், விரும்புவதும் வேறொன்றுமில்லை. மலர் மாலைகளைவிட இந்த ஒறுத்தல் மாலைதான் உத்தமமானது. மேலும் அற்பக் காரியங்களை அவமதித்து, பெருங்காரியங்களைச் செய்யலாமென்றிருந்தால், அவை சாத்தியமாகுமோ என்னவோ? அப்படிக் காரியங்கள் செய்யக்கூடிய காலம் வந்த போதிலும், அந்நேரத்தில் அவற்றைச் செய்யக் கூடுமெனச் சொல்வதற்கு இல்லை. சிறு கைங்கரியங்களைச் செய்து அனுபவ சித்தியடையாமல் திடீரெனப் பெரியதோர் காரியத்தைச் சாதிப்பது எவ்வாறு? இலவு காத்த கிளிபோல் ஏமாற வேண்டியதுதான். நாட்டில் உள்ள பத்துக் குருவிகளைவிட கையிலுள்ள ஒன்றே சாலச் சிறந்தது. அற்பக் காரியங்களை அசட்டை செய்தவர்கள் அரும்பெரும் காரியங்களை நிகழ்த்துவது அபூர்வம்; குதிரைக் கொம்பாகி விடும்.

மேலும் சேசுநாதர் சுவாமி மற்ற வழிகளையெல்லாம் விட்டு விட்டு பாடுபடும் பாதையையே பலனுள்ளதாகக் கொண்டார். (ஆத்துமங்களை இரட்சிப்பதற்கு) இதற்கு மேலான வழி வேறென்ன உண்டு? அவரே வழி. அவரைப் பின்பற்றுதலே முறை.

இவற்றையெல்லாம் அறிந்த நமது நாயகி குழந்தை தெரேசாள் தனது சிறு புண்ணிய முயற்சிகளைப் பூவெனக் கொண்டு அதை ஆண்டவரின் பாடு களோடு ஒன்றித்து, அதன் பலனை ஆத்துமாக்களுக்கு அளிப்பதே தனது அலுவல் எனக் கொண்டாள். பரலோகத்திற்குத் தான் சென்ற போதும் அங்கிருந்து பூமியிலுள்ள நமக்கு இப்பூக்களைத் தருவதாக சித்தங் கொண்டாள். வான்வீட்டில் கஷ்டங்களில்லை. ஆகையால் அங்கிருந்து அவள் அள்ளியிறைக்கும் மலர்களோ சர்வேசுரனின் வரப்பிரசாதங்களேயன்றி வேறல்ல: இந்தச் செய்கையைக் குறிக்கும் படத்தையும் காணலாம். அவள் இவ்வுலகிலிருந்த போது தனது சிறிய புஷ்பங்களைச் சேசுவின் பாடுகளோடு ஒன்றித்ததன் பலன்களை இப்போது அவள் பரலோகத்தில் அனுபவிப்பதோடு நமக்கும் தாராளமாய்த் தருகிறாள். இதனோடு அவள் மடத்தில் சேரும்போது தன்னைத்தானே சிறிய புஷ்பம் என்று அழைத்தாள். 

அதாவது கார்மெல் மடத்தை ஒரு பூந்தோட்டமாகவும், அதில் தான் பிரவேசித்ததால் அங்கு இருந்த கன்னிகா மலர்க் கூட்டத்தில் தன்னை ஒரு சிறு கன்னிகையாகப் பாவித்து, "சிறிய புஷ்பம்" எனச் சொல்லிக்கொண்டாள். அவள் சொல்லால் ஏற்பட்டதைக் காட்டிலும் அவளுடைய செய்கையால் ஏற்பட்ட தே "சேசுவின் சிறிய புஷ்பம்."

அவளுடைய கிரியைகளால், சிறு ஒறுத்தல் முயற்சிகள் ஆகிய மலர்களால் அவளுடைய சிறிய புஷ்டமானது எது என்று நன்றாய் விளங்குகிறது. இச்சிறு புஷ்பங்கள் சகலருக்கும் உண்டு, அவைகளைச் சேசுநாதருடைய திருப்பாடு களோடு ஒன்றித்து நறுமணம் கமழும் ரோஜா புஷ்பங்களாக மாற்றினாள் தமது அர்ச்சியசிஷ்டவள். நம்மில் அப்படிச் செய்கிறவர்கள் எத்தனை பேர்? நாம் ஏன் அவள் செய்தது போலச் செய்யக் கூடாது? "கேளுங்கள் கொடுக்கப் படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டடைவீர்கள்" என்று திருவாய் மலர்ந்தருளிய திருவள்ளல் எப்போதும் அருள்புரியச் சித்தமாயிருக்கிறார். 

"மனமுண்டானால் இடமுண்டு," "செவியுள்ளோர் கேட்கட்டும், கண்ணுள்ளோர் காணட்டும்" என்கிறார். நமது ஆத்துமக் காதுகளும், கண்களும் இன்னும் திறக்கப்பட வில்லையா? எவ்வளவு காலம். அவருக்குக் காது கொடாமலும், அவரை உற்று நோக்காமலுமிருப்போம்? எவ்வளவு காலம் அசமந்தமா யிருப்போம்? எவ்வளவு காலம் சோம்பேறிகளாய் ஜீவிப்போம்? நமக்குப் புத்தி வருவது எப்போது? குழந்தை தெரேசம்மாள் சிறிய புஷ்பம்தான்; ஆனால் அவள் பெரிய அர்ச்சியசிஷ்டவள். அவள் என்ன பெருங்காரியத்தைச் செய்தாள்? தன் அந்தஸ்தின் கடமைகளைச் செய்தாள். அதைப் பிரமாணிக்கமாய்ச் செய்தாள்; சேசுநாதரின் பாடுகளோடு தனது அற்ப அலுவல்களை ஒன்றித்தாள். வேறொன்றும் செய்யவில்லை. நமது கடமைகளை நாம் ஏன் பிரமாணிக்க மாய்ச் செய்ய முடியாது? அவைகளை நாம் ஏன் சேசுவின் திருப்பாடுகளோடு ஒன்றிக்க முடியாது? நாம் ஏன் ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ள முடியாது? இனிமேலாவது சுறுசுறுப்பாய் எழுந்திருப்போம்: அர்ச்சியசிஷ்ட வளைப் பின் செல்வோம்;சேசுநாதரைத் தொடர்வோம்.

ஆத்துமங்களை இரட்சிக்க நம்மால் கூடியதெல்லாம் செய்வோம். ஆண்டவர் நமக்குத் திருவருள் பாலிப்பார். அர்ச். குழந்தை தெரேசம்மாள் சகாயம் செய்வாள். சேசுவின் சிறிய புஷ்பமென்னும் பெரிய அர்ச்சியசிஷ்டவளே, எங்களுக்காக எப்போதும் வேண்டிக்கொள்ளும். உமது மூலமாய் ஆண்டவர் எனக்குப் புரிந்த சகல நன்மைகளுக்காகவும் மிகவும் நன்றியறித் திருக்கிறோம். கடமைகளைச் சரியாய்ச் செய்யாதவர்களென்று கண்டனத் திற்கு நாங்கள் உட்படாதபடி எங்கள் சிறு அலுவல்கள், ஒறுத்தல் முயற்சி களெல்லாம் சர்வேசுரன் முன்பாகப் பேறுபலனுள்ள அநேக சிறு மலர்களாய் மாறும் படிக்கு எங்களுக்கு உதவி புரியும். 

நாங்கள் செய்யும் சிற்சில ஒறுத்தல் உபவாச முயற்சிகளும், தவக் கிரியைகளும், மற்றும் அற்பப் புண்ணியச் செய்கைகளும், எங்களுக்கு வீண் பெருமை சிலாக்கியத்தை உண்டுபண்ணாமல் சகல மகிமையும் தோத்திரமும் சர்வேசுரனுக்கே சதா காலமும் உண்டாகக்கடவதென்று சமாதானமாய் ஆண்டவரில் அகமகிழ எங்களுக்கு அருள்புரிய உமது பூமாரியைப் பொழியத் தீவிரியும். கர்த்தரின் திருத்தாயான அர்ச். கன்னிமரியன்னையையும் நோக்கி வேண்டிய எங்களை அவர்களது பிள்ளைகளாக அந்த அம்மணியின் அடைக்கலத்தில் சேரும்; அப்பெருமாட்டியின் பேருபகாரத்தை எங்களுக்காகக் கோரும். கன்னிகா ரத்தினமே, கருணைக் களஞ்சியமே, சேசுவின் சிறிய புஷ்பமே, பெரிய அர்ச்சியசிஷ்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.





Virgin and Doctor of the Church

Parents:   Marie Françoise-Thérèse Martin
Born:       2 January 1873
Place:      Alençon,[1] Orne, France
Died 30 September 1897 (aged 24)
                Lisieux, Calvados, France

Beatified 29 April 1923 by Pope Pius XI
Canonized 17 May 1925 by Pope Pius XI


Feast

3 October (Pre-1969 Roman Calendar, Melkite Calendar)

Patronage Missionaries, France, Russia, those suffering with HIV/AIDS or tuberculosis, florists and gardeners, orphaned children, those who are homeless, and aviators

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - அர்ச். மாக்ஸிமிலியன் கோல்ப் (st. maximilian kolbe)

 தன்னையே பலியாக்கியவர்



"ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை " (அரு. 15:13)

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காக தன் பிராணனை கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" (அரு. 15:13) என்று நமது திவ்விய இரட்சகர் திருவாய் மலர்ந்தருளினார். தன் சிநேகிதர்களுக்காக ஒருவன் தன் உயிரைப் பலியாக்குதல் உயரிய சிநேகம் என்றால், அந்நியனான ஒருவனுக்காக, தனக்கு அறிமுகமில்லாத ஒருவனுக்காக ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வானாகில் அது மிகவும் உயரிய சிநேகமன்றோ? இத்தகைய ஒரு தியாகத்தைத்தான் சங், மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் செய்தார்.

1941-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள். பரிசுத்த கன்னிமரியம்மாள் ஆன்ம சரீரத்தோடு பரலோகத்துக்கு எழுந்த நாளுக்கு முந்தின நாள். அன்று தான் சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிகள் மரணத் தீர்வைப் பெற்றிருந்த குடும்பத் தலைவன் ஒருவனுக்குப் பதிலாக தமது உயிரைத் தியாகம் செய்து நாஸி முகாம் ஒன்றில் உயிர் துறந்தார்.

1941-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நாள் நாஸிகள் முகாமிலுள்ள 14-வது விடுதியிலுள்ளோருக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்க வில்லை. காரணம், அவர்களோடு அடைபட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி ஓடி விட்டதும், அதன் விளைவாக முகாமின் தலைவன் விடுத்த ஆணையும்  தான் காரணம். "தப்பியோடிய கைதி நாளை காலைக்குள் பிடிபடாவிட்டால் உங்களில் பத்துப்பேர் பட்டினி போட்டு சாகடிக்கும் விடுதிக்கு அனுப்பப் படுவீர்கள்” என்று சொல்லியிருந்தான் முகாம் தலைவன். இதை கேட்ட ஒரு சிறுவன் பயத்தினால் நடுநடுங்கிக்கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் பெருங் கலவரம் குடி கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரியவர் சிறுவனைத் தேற்றினார்; "பயப்படாதே தம்பி, சாவுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை". இவ்விதம் சிறுவனைத் தேற்றியவர் வேறு யாரும் இல்லை, சங். மாக்ஸிமிலியன் கோல்ப் சுவாமிதான். சிறுவனுக்கு மாத்திரமின்றி விடுதியிலுள்ள எல்லோருக்கும் சங். சுவாமிகள் ஆறுதல் கூறி எல்லோரின் உள்ளங்களையும் பரலோக நினைவால் நிரப்பி வந்தார்.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் ஆஜர் எடுத்து முடிந்ததும் 14ம் இலக்க விடுதியிலுள்ளோர் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். 14-ம் இலக்க விடுதியிலுள்ளோர் அன்று முழுவதும் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்டனர். வெயிலின் கொடூரம் தாங்க முடியாமல் அநேகர் மயங்கி கீழே சாய்ந்தனர். அவர்களை நாஸிகள் இரக்கமின்றி நையப் புடைத்தனர். சரீரங்கள் அசைவற்றவுடன் அவைகளையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாய் புளி மூட்டைகளை அடுக்குவது போல் அடுக்கினர். சங், கோல்ப் சுவாமியார் காச வியாதியுற்றவராயிருந்தும் கூட மயங்கி விழவில்லை. பயப்படவில்லை, சிலுவையடியில் நின்ற வியாகுல அன்னையைப் போல அவரும் வைரம் பாய்ந்த உள்ளத்தோடு அந்த உச்சி வெயிலில் நின்று கொண்டிருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு வெயிலில் நின்றுகொண்டிருந்த கைதிகளுக்கு சூப் அருந்துவதற்காக சிறிது ஓய்வு கொடுக்கப் பட்டது. அவர்களில் பத்து பேருக்கு அதுவே கடைசி உணவு. சூப் அருந்தி முடித்ததும் கைதிகள் எல்லோரும் மறுபடியும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். மாலைப் பொழுதும் வந்தது. முகாம் தலைவன் 14ம் இலக்க விடுதிக் கைதிகளைப் பார்வையிட வந்தான். நாஸிகளின் சித்திரவதைக்கு இலக்காகி நின்ற அந்த நடைப் பிணங்களைக் கண்டதும் கோரமாக அவன் நகைத்தான். "தப்பியோடியவன் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை. ஆகவே நான் சொன்னபடி உங்களில் பத்துப் பேர் சாக வேண்டும்; அடுத்த முறை இவ்விதம் நடந்தால் இருபது பேர் சாக வேண்டியிருக்கும்”. என்று முழங்கினான் முகாம் தலைவன்.

கைதிகளை ஒவ்வொருவராய்ப் பார்த்துக்கொண்டே சென்றான் முகாம் தலைவன். "வாயைத் திற, நாக்கை நீட்டு, பல்லைக் காட்டு" என்று ஒவ்வொரு கைதியிடமும் அவன் கூறிச் சென்றது. கசாப்புக்கு ஆடுகளை தெரிவு செய்வது போல் இருந்தது. எல்லோரையும் பார்வையிட்டப் பின்னர், அவர்களில் பத்துப் பேரை பொறுக்கியெடுத்தான் முகாம் தலைவன். அவர்களது எண்களை யெல்லாம் குறித்துக்கொண்டான் அவனது உதவியாளன்.

"ஐயோ, என் நேச மனைவி மக்களை நான் இனி என்று காண்பேன்?.... கண்மணிகளே" என்று உள்ளங் குமுறி அழுதான் அப்பத்து பேர்களில் ஒருவன். சிறுபிள்ளைப் போல் அவன் தேம்பித் தேம்பி அழுத காட்சி பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சங். கோல்ப் சுவாமிகள் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சைப் பிழியும் அவனது அழுகுரல் அவரது மென்மையான இருதயத்தைத் தொட்டது. அவரது கண்களிலும் அவரை அறியாமலே நீர் சுரந்தது.

சாவுக்கு தீர்வையிடப்பட்ட பத்துக் கைதிகளுக்கும் ஆணை பிறந்தது. "ம்... செல்லுங்கள் பட்டினி விடுதிக்கு". அடி மேல் அடியெடுத்து வைத்த அவர்கள் தங்கள் சாவை எதிர் நோக்கிச் சென்றனர்.

திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. சங். கோல்ப் சுவாமிகள் ஓடி வந்தார். முகாம் தலைவனை அணுகினார். முகாம் தலைவன் உடனே தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்தான். "உனக்கு என்ன வேண்டும் நாயே" என்று குருவானவரைப் பார்த்து கர்ஜித்தான்.

"இவர்களில் ஒருவருக்குப் பதிலாக நான் சாகத் தயாராயிருக்கிறேன்" என்று அமைதியான குரலில் பதில் அளித்தார் சங், கோல்ப் சுவாமிகள்

இதைக் கேட்ட முகாம் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். “ஏன் அவ்வாறு கூறுகிறாய்" என்று கேட்டான் அவன்.

"நான் வயோதிகன், உதவாக்கரை. நான் இனியும் இவ்வுலகில் இருப்பதனால் ஒரு பயனும் விளையப்போவது இல்லை" என்றார் குருவானவர்.

"யாருக்குப் பதிலாய் நீ சாக விரும்புகிறாய்"என்று முகாம் தலைவன் கேட்டான்.

பரிதாபமாக அழுத அந்தக் குடும்பத் தலைவனைச் சுட்டிக் காட்டினார் குரு. “இவருக்குப் பதிலாகத்தான். இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றார் கள். இவரது பராமரிப்பு அவர்களுக்குத் தேவையாயி ருக்கின்றது"

"நீ யார்?"மறுபடியும் குருவானவரைப் பார்த்துக் கேட்டான் முகாம் தலைவன்.

நான் ஒரு குரு

ஒரு கணம் அமைதி நிலவியது. பிறகு உறுதியான குரலில் “சரி நீ அவனுக்குப் பதிலாக சாகலாம், அவன் வீட்டிற்கு போகலாம்" என்றான் முகாம் தலைவன். குடும்பத் தலைவன் விடுதலையடைந்தான். குருவானவர் மற்ற ஒன்பது கைதிகளோடும் சேர்ந்து கொண்டார். அன்றிலிருந்து அந்தப் பத்துக் கைதிகளுக்கும் பசி தீர்க்க உணவு கிடையாது. தாகந் தீர்க்க தண்ணிருங் கிடையாது. ஜன்னலே இல்லாத அந்த பாழறையில் அந்த பத்துப் பேரும் அடைக்கப்பட்டனர்.

அந்த அறையில் புதிதாக வந்தவர்களோடு மொத்தம் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக அந்த அறையில் அழுகையும் கூப்பாடுமாகத்தான் இருக்கும். ஆனால் சங். கோல்ப் சுவாமிகள் அங்கு சென்றதிலிருந்து அழுகையும் கூப்பாடும் நின்று ஜெபங்களும் ஞான கீர்த்தனைகளும் கேட்க ஆரம்பித்தன.

“எங்களுக்கு உணவு தராவிட்டாலும் கொஞ்சம் தண்ணீராவது தாருங்களேன்", என்று கெஞ்சுங் குரலில் கேட்பார்கள் கைதிகள். ஆனால் அவர்களது வேண்டுகோள் நிராகரிக்கப்படும். சங். கோல்ப் சுவாமிகள் ஒன்றுமே கேட்க வில்லை. அவர் எப்பொழுதும் நின்றுகொண்டு அல்லது முழந்தாளிலிருந்து ஜெபித்த வண்ணமிருப்பார். அவரைப் பார்த்த ஒரு அதிகாரி, "இந்த மாதிரி ஒரு மனிதனை நாங்கள் என்றுமே கண்டதில்லை" என்று கூறினான்.

சித்திரவரை 15 நாட்களுக்கு மேல் நீடித்தது. ஆகஸ்டு மாதம் 14-ஆம் நாள், அன்று பட்டினி விடுதியில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர். இவர்களில் சுய அறிவோடிருந்தவர் சங். கோல்ப் சுவாமிகள் மாத்திரம்தான். திடீ ரென அறைக் சுதவுகள் திறந்தது. எஞ்சியிருந்தவர்களை தீர்த்துக்கட்டும்படி ஆணை பெற்றிருந்த ஒரு அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.

சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தார் சங். கோல்ப் சுவாமிகள்.

“கையை நீட்டு” என்றான் அதிகாரி. குருவானவர் கையை நீட்டினார். விஷத்தை ஊசி மூலம் அவரது உடம்பில் செலுத்தினான் அதிகாரி.

சங். கோல்ப் சுவாமிகளின் முகத்தில் எவ்விதமான கலவரமும் காணப்படவில்லை. ஆழ்ந்த அமைதி அதிலே பிரதிபலித்தது. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு ஒளி அவரது வதனத்தைச் சூழ்ந்திருப்பது போல் தோன்றியது.

சங், கோல்ப் சுவாமிகளின் ஆன்மா விண்ணகம் நோக்கிப் பறந்தது. அவரது உடலையோ நாஸிகள் நெருப்புக்கு இரையாக்கினர்.

இவருக்கு 1971-ல் முத்திப்பேறு பட்டமும், 1984-ல் அர்ச்சியசிஷ்டப் பட்டமும் கொடுக்கப்பட்டது


சாங்க்தா மரியா - ஜனவரி - மார்ச் 2016



Please read more about the Sacramentals here . . .

அருட்கருவிகள் (Sacramentals) பற்றி மேலும் தெரிந்து கொள்ள  in Tamil


Life History of St. Maximillian Kolbe

வியாழன், 18 ஜனவரி, 2024

அர்ச். எவுப்பிறாசியம்மாள் - Ste. EUPHRASIE

மார்ச் மாதம் 13-ந் தேதி. 

அர்ச். எவுப்பிறாசியம்மாள் திருநாள். 

 Ste. EUPHRASIE. 








 கொன்ஸ்காண்டி னொப்பொலி பட்டணத்திலே துரை மக்களான தாய் தகப்பனிடத்தில் அர்ச். எவுப்பிறாசியம்மாள் பிறந்தாள். அவர்கள் அவ்வரசின் இரா யனுக்கு நெருங்கிய உறவாயிருந்ததினால் அவர்களுக்கு வெகு மகிமையாய் இருந்தது. அவளுடைய தாயானவள் மிகப் புண்ணியவதியாயிருந்தமையால் தன்னுடைய மகள் தரும வழியிலே நடக்கப் புத்திமதி சொல்லித் தேவ பத்தியில் பழக்க வெகு பிரயாசைப்பட்டாள். பாவத்தைப் பகைத்துச் சேசுநாதரையும் அவருடைய திருத் தாயாரையுஞ் சிநேகித்திருக்க மகளுக்குத் தாயானவள் அடிக்கடி புத்தி சொன்னதினாலே  ஐந்து வயதுள்ள எவுப்பிறாசியம்மாள் அப்படி நடக்கிறதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இந்தச் சிறு பிள்ளை தாயாருடன் இராயன் அரண்மனைக்குப் போகிற போது இராயனும் இராணியும் அரண்மனையிலேயிருந்த மற்றவர்களும் இந்தம்மாளுடைய பத்தியையும் புத்தியையுங் கண்டு இவளை மிகவுங் கொண்டாடிப் போற்றுவார்கள். இந்தப் பெண் ஒரு துரைமகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்று அரசன் கட்டளையிட்டான். 

எவுப்பிறாசியம்மாளுடைய தகப்பனார் காலஞ் சென்ற பிறகு அவளுடைய தாய் அவள் பேரில் அதிக பட்சம் வைத்து வெகு நேர்த்தியாய் விசாரித்து நடத்தினாள். எவுப்பிறாசியம்மாளுக்கு ஏழு வயது நடக்கும் போது தாயும் இவளும் எஜிப்து தேசத்திற்குப் போய்க் கன்னியர் மடத்திற்குப் போனார்கள். எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்தையுங் கண்டு அவர்களுடைய தரும நடக்கையையும் அறிந்து அவர்களுடன் தானும் இருக்க ஆசைப்பட்டதினாலே தான் அங்கே யிருக்கிறதன்றி வெளியிலே போகிறதில்லை யென்று சொன்னாள். தாயுங் கூடவந்த மற்றவர்களும் அந்த மடத்தை விட்டுத் தங்கள் அரண்மனைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போக எவ்வளவு பிரயாசைப்பட்டாலும் எவுப்பிறாசியம்மாள் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாய் இதைக் கண்டு ஞான சந்தோஷப்பட்டதுமன்றி மகள் கேட்ட காரியத்திற்குஞ் சம்மதித்தாள். ஆதலால் தாய் தன்னுடைய அரண்மனைக்குப் போன போது எவுப்பிறாசியம்மாள் அந்தக் கன்னியர்கள் மடத்திலே இருந்து விட்டாள். அவளுக்கு வயது கொஞ்சமாய் இருந்ததினாலே மற்ற கன்னியர்களைப் போல அவள் ஒரு சந்தியாயிருக்கமாட்டாள், செபம் பண்ணமாட்டாள், தபசு பண்ணமாட்டாள், அதற்குத் தக்க பிராயமாகுமட்டும் பிள்ளைகளுக்குரிய விதமாய் அவளை நடத்தவேண்டி இருக்குமென்று அந்தக் கன்னியர்கள் நினைத்திருக்கிறது, அவர்கள் நினைத்ததற்கு மாறாக மற்றவர்களை விட அந்தப் புண்ணியங்களை அதிக சுறுசுறுப்போடே செய்துகொண்டு வந்தாள். 



அந்தக் கன்னியர்கள் அதைக் கண்டு ஆச்சரியப் பட்டு இவள் பேரில் விசேஷமான பட்சம் வைத்தார் கள். இவளுடைய தாய் மரணமடைந்த செய்தியை இராயன் அறிந்து தம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு எவுப்பிறாசியம்மாள் வாழ்க்கைப்பட வேண்டுமென்று இந்தம்மாளுக்குச் சொல்லி அனுப்பினான். ஆனால் எவுப்பிறாசியம்மாள் இராயனுக்கு அனுப்பின கடிதத்தில் எழுதியிருந்ததாவது: இராயரே, உம்மாலே குறிக்கப்பட்ட மாப்பிள்ளையை விட மேலானவர் சேசுநாதர். சேசுநாதருக்கு என்னுடைய கன்னிமையை ஒப்புக்கொடுத்ததினால் என்னை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். ஆகையினால் நான் சாகுமட்டும் எப்பொழுதுங் கன்னிகையாய் இருக்கிறதன்றி நான் ஒருவருக்கும் வாழ்க்கைப்பட மாட்டேன். என்னுடைய ஆஸ்தியெல்லாந் தரும காரியத்திலே செலவழிக்கத் தேவரீரை மன்றாடுகிறேனென்று எழுதினாள். 

இராயன் அந்தக் கடிதத்தை வாசித்த பிறகு ஞான சந்தோஷப்பட்டு அவள் ஆசைப்பட்டதிற்கு விக்கினம் பண்ணினதில்லை. 

அந்தம்மாள் அந்த மடத்திலே பண்ணின ஆச்சரியமான புண்ணியங்களால் அங்கேயிருந்த கன்னியர்கள் மிகவும் அவளைப் புகழ்வார்கள். இந்தப் புகழ்ச்சி அவர் களுக்குள்ளே ஒருத்திக்குப் பொருந்தாமல் பொறாமை வருவித்ததினாலே இவள் அந்தப் புண்ணியவதி பேரிலே வர்மம் வைத்து அவளுக்கு அநியாய தொந்தரவு  பண்ணத் துவக்கினாள். எவுப்பிறாசியம்மாள் மிகுந்த பொறுமை காட்டி தாழ்ச்சியி னாலே அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்பு கேட்டாள். பசாசு அவளுக்கு வருவித்த எண்ணப்படாத சோதனைகளை யெல்லாம் வேண்டுதலைக்கொண்டு நீக்கி வென்றாள்.  ஆச்சரியத்திற்குரிய அநேகம் புதுமைகளைச் செய்தாள். 

தனக்கு சாவு கிட்டியிருக்கிறதென்று ஆண்டவராலே புதுமையாய் அறிந்து மரணத்திற்கு உத்தமமான ஆயத்தம் பண்ணினாள். அவளுக்குக் காய்ச்சல் வந்த பிறகு அவள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவநற்கருணையும் அவஸ்தைப் பூசுதலும் பெற்று சேசு மரியே என்னும் திருநாமங்களைப் பத்தியோடே சொல்லி 412-ம் வருஷத்தில் நல்ல மரணத்தை அடைந்தாள். 

கிறீஸ்துவர்களே! ஒரு சிறு பிள்ளையின் ஆச்சரியமான பத்தியுஞ் சாதுரியப் பேச்சும் யாவரும் அதிசயமாய் எண்ணுவதுபோல் கொஞ்ச வயதுள்ள அர்ச். எவுப்பிறாசியம் மாளிடத்திலே உண்டான உத்தம பத்தியையும் நீங்கள் ஆச்சரியத்தோடே பார்த்துக் கண்டு பாவிக்கப் பிரயாசைப்பட வேண்டும். அந்தம்மாளுக்கு ஏழு வயது நடக்கிற போது அவள் மெத்த வயதுள்ளவளைப்போல் புண்ணியங்களைச் செய்து வந்தாளென்று கேட்டீர்களே; அவளுடைய தாய் இந்தச் சிறு பிள்ளைக்குச் சொன்ன நல்ல புத்தியானது அந்த ஆச்சரியமான பத்தி வொழுக்கத்திற்கு ஓர் காரணமா யிருந் தது. 

"தாய் தகப்பன்மார்களே! அத்தகைய நல்லொழுக்கம் உங்கள் மக்களிடத்திலே காண வேண்டுமானால் உங்களுடைய கடனின்படியே அவர்களுக்கான புத்தி சொல்ல வேண்டும். சில தாய்மார் தங்கள் மக்களுடைய சரீரத்தை அலங்கரிக்க மிகுந்த உடமைகளைச் சம்பாதித்துக் கொடுக்கப் பிரயாசைப்படுவதொழிய மக்கள் ஆத்துமத்தை அலங்கரிக்க மக்களுக்குப் புண்ணிய சற்குணம் வருவிக்கப் பிரயாசைப்படுகிறதில்லை. அதினால் தங்கள் பிள்ளைகள் சிலாக்கியம் ஆங்கார முதலிய துராசாபாசங்களினால் கெட்டுப்போவதற்குக் காரணமாகிறார்கள். இத்தகைய தாய்மார்கள் சர்வேசுரனுக்கு என்ன கணக்கு சொல்லப்போகிறார்கள்? அர்ச். எவுப்பிறாசியம்மாள் கொன்ஸ்தான்டினோப்பிள் இராயன் சொன்னபடிக்குத் தனக்கு நியமித்திருந்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டால் உலக செல்வ பாக்கியம்   அவளுக்குத் திரளாய் வந்திருக்கும். ஆனால் அவள் அந்தப் பாக்கிய மெல்லாஞ் சாகிறபோது கட்டாயமாய் விடவேண்டியிருந்ததினாலே அந்தம்மாள் அந்தப் பாக்கியத்தைத் தனக்கு வேண்டாமென்று புத்தியுள்ளவள்போல் சொன்னாள், 

ஊழியம் பண்ணுகிற ஒருவன் தன்னுடைய எசமான் தன்னை இனிமேல் தள்ளுவா னென்று நிச்சயமாய் அறிந்திருந்தால் எசமான் தன்னை அவமானத்தோடே தள்ளுவதற்கு முந்தித் தன் எசமானை விட்டுவிடுவது மேல் அல்லவோ? உலகத்திற்கு ஊழியம் பண்ணுகிறவர்கள் எத்தனை ஆஸ்தி எத்தனை மகிமை அனுபவித்தாலும் வாழ்வு நாளில் அவர்களுக்குப் பல பாவ தந்திரத்திற்குக் காரணமான அந்தப் பாக்கிய மெல்லாம் அவர்கள் சாகும்போது அவர்களை விட்டு விடும். 

இதைக் கேட்கிறவனே உலக பாக்கியம் உன்னை ஏமாற்றி விடுகிறதற்கு முந்தி நீயே அதை விட்டு விடுவது மேல். ஒரு ஆஸ்கிக்காரன் சாகிற போது தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் எட்டுவிட வேண்டுமென்பதினாலே அவனுக்கு வெகு துக்க துயரமுஞ் சலிப்பும் வரும். ஒரு பிச்சைக்காரன் சாகிற போது விடுவதற்கு ஒன்றுமில்லாததினாலே முன் சொல்லப்பட்ட துக்க துயர சலிப்பு அவனுக்கு வருவ தற்கு இடமில்லை. நீங்கள் உலக பாக்கியத்தின் பேரிலே ஆசை விருப்பம் வையாமலிருந்தால் அந்தப் பாக்கியத்தை விட்டுவிடுவதுபோல் ஆகும்.





செவ்வாய், 16 ஜனவரி, 2024

அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய பிலேத்தென்பவர் (Philete Disciple of St. James)

அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய 

பிலேத்தென்பவர் சரித்திரம்.

PHILÉTE DISCIPLE DE ST. JACQUES LE MAJEUR.

பிலேத்தென்பவன் ஒரு மாயவித்தைக்காரனிடம் மாய்கை கற்றுப் பழகினான். இப்படி இருக்கையில் அப்போஸ்தலரான அர்ச். பெரிய யாகப்பர் யூதேயா  தேசத்தில் சர்வேசுரனுடைய திவ்விய வேதத்தைப் போதிக்கிறபோது அவர் பண்ணின ஆச்சரியமான புதுமைகளை உலகத்தார் கண்டு அவரோடே தர்க்கம் பண்ணப் பிலேத்து கெட்டிக்காரனென்று எண்ணி அதற்கு அவனைத் தெரிந்து கொண்டார்கள். அப்படி யே பிலேத்து அர்ச். யாகப்பரோடு தர்க்கம் பண்ணு மிடத்தில் அவன் தோல்வியடைந்ததுமன்றி அர்ச். யாகப்பர் சொன்ன நியாயங் களைக் கண்டுபிடித்து மனந்திரும்பி அக்கியானத்தையும் மாய்கை வித்தைத் தொழிலையும் விட்டுவிட்டு ஞானஸ்நானம் பெற்றான்.

பிறகு தனக்கு மாய்கை வித்தை சாஸ்திரம் படிப்பித்தவனிடத்தில் போய் நடந்த செய்திகளை வெளிப்படுத்தி அவனுஞ் சேசுநாதருடைய வேதத்தைத் தழுவும் பொருட்டுப் புத்தி சொன்னான். எர்மொஜேனென்னும் அந்த மனிதன் இந்தச் செய்தியை அறிந்து மிகக் கஸ்திப்பட்டுத் தன்னுடைய சீஷன் கிறீஸ்துவனானதி னாலே அவன் பேரிலே மிகக் கோபம் கொண்டு பில்லி சூனியம் வைத்துப் பிலேத்தின் கை கால் வழங்காதிருக்கப் பண்ணினான். இதை அர்ச். யாகப்பர் அறிந்து தமது கையிலிருந்த ஒரு சின்ன சீலையை அவரிடம் அனுப்பினார். பிலேத்து அதை மிக வணக்கத்தோடு வாங்கின உடனே அதைக்கொண்டு அந்தப் பில்லி சூனியம் நீங்கிப்போய்க் கை கால்கள் எப்போதும்போல் நன்றாய் விழங்கி வந்தது. அவருக்குக் குணமான பிற்பாடு ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்ட ஆரோக்கியத்தை வேதம் போதிக்கச் சுற்றித் திரிந்து பிரயாசைப்படுவதிலே செலவழித்தார். இப்படி இருக்கையிலே திருச்சபையின் எதிரிகள் அவரைப் பிடித்துக் காவலிலே வைத்தார்கள். அவர் அநேக நாள் காவலிலே இருந்து கடைசியிலே வேதசாட்சியாக மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே ! அர்ச். பிலேத், உலகத்தானும் மாய்கை வித்தைக்காரனுமாய் இருந்தாலும், அர்ச். யாகப்பரோடே தர்க்கம் பண்ணுமிடத்தில் சத்தியத்தைக் கண்டுபிடித்தவுடனே, முன்னையைப்போல தீய வழியில் நடவாமல் நியாயத் தின்படியே நடக்கத் துவக்கினார். அவ்வாறே நீங்களும் நடக்கவேண்டும். இருட் டிலே நடக்கிறவனுக்குப் பள்ளம், மேடு, கிணறு, தாழ்வு, சேறு, பாம்பு இன்னவிடத்தில் இருக்கிறதென்று தெரியாதென்பது உண்மை. ஆனால் அவனுக்கு முன்னே தீ வர்த்தியின் வெளிச்சம் அவனுக்கு நல்ல வழிகாட்டிப் போகிறபோது, அதற்குப் பின் நடந்தால் அவனுக்குக் கேடுவராது. அவன் அந்தத் தீவர்த்தியின் பிறகே போகாமல் தன்மனதின்படியே நடக்கிறபோது கிணறு பள்ளங்களில் விழுவது இயற்கை, அறியாமையாகிய அந்தகாரத்திலே சத்தியமானது ஞானப்பிரகாசம்போல் இருக்கிறதன்றி ஆண்டவர் மனிதர்களுக் குக் கட்டளையிட்ட புத்தியைக்கொண்டு சத்தியத்தைக் கண்டு பிடிக்கலாம்.

அதைக் கண்டுபிடித்த பிறகு, அதின்படியே நடக்க மனிதனுக்குக் கடமை யுண்டு. இதை நன்றாய்க் கண்டுபிடிக்க இப்போது சொல்லப்போகிற உவமையை கேளுங்கள். மாடானது நல்ல பயிரைக் கண்டவுடனே அதைத் தின்கிறபோது பயிரிட்டவனுக்கு வெகு சேதமென்று நினையாமல் தன் பசி அமருமட்டும் அந்தப் பயிரைத் தின்னும். புலியானது காட்டிலே தனிமையாய்ச் சிறு குழந்தையையோ பெரிய இராசாவையோ கண்டவுடனே அவர்கள்மேல் பாய்ந்து பட்சிக்கிறபோது, அதிலே பெரும் தீங்கு இருக்கிறதென்று நினையா மல் தன் சுபாவ கொடுமையின்படியே பாயும். யானை மதமெடுத்துத் திரிகிற போது, அதன் முன்பாக வீடு வாசல் மாடு மனிதர் என்ன எதிர்பட்டாலும் அதை அழித்துத் தகர்த்துப் போடும். அது பெரிய அநியாயமாயிருந்தாலும் அதை நினையாமல் தன் ஆங்காரத்தின்படியே செய்யுமே. மிருகங்களுக்குப் புத்தி இல்லாததினாலே அவைகள் நீதி நியாயங்களைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உண்மை. மனிதரோவெனில், மெய்யான தேவனை வணங்காமல், பொய்யான தேவர்களை வணங்குகிறதும், பில்லி சூனியம் வைக்கிறதும், களவு செய்வதற்குத் துர்ப்புத்தி சொல்லுவதும், கோள் சொல்லுகிறதும், இவை முதலான பல பொல்லாங்கு செய்கிறதும் அநியாயமென்று 'அவரவருக்குச் சர்வேசுரன் கொடுத்த புத்தியைக் கொண்டு கண்டு பிடிக்கலாம்.

ஆனால் சில பேர்கள் தங்கள் இஷ்டத்தின்படியே பொல்லாத ஆசையை அநுசரிக்க மனதாயிருக்கிறதே யல்லாமல், நியாயத்தின்படியே நடக்க மனதில்லாமல் இருக்கிறார்கள். இதினாலே இத்தகையோர்களுடைய நடத் தைக்கும் மிருகங்களுடைய நடத்தைக்கும் வேற்றுமை காணோம். நீங்கள் புத்தியில்லாத வஸ்துவைப் போல நடவாதபடிக்கு நியாயத்தைக் கண்டுபிடித்த வுடனே அதற்குத் தக்கபடி நடக்கவேண்டும். பழி வாங்குகிறதும் மோக பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறதும் ஆகாதென்று கோபக்காரனும் பொல்லாத இச்சையுள்ளவனும் முதலாய் ஒத்துக்கொள்ளுவார்கள். கோப வெறியிலும் காம வெறியிலும் புத்தி மயங்கித் தங்களுக்குச் சில நியாயந் தோன்றுகிற தென்று அவர்கள் சொல்லுவார்களாக்கும். பச்சைக் கண்ணாடியை மூக்கிலே வைத்துப் பார்க்கிறவனுக்கு எல்லாம் பச்சையாய்த் தோன்றும். அதை எடுத்து விட்டுப் பார்க்கிறபோது, பச்சை நிறம் நீங்கி எல்லாம் இயற்கையாய்க் காணப்படும்.

அப்படி கோபக்காரனுக்கும் பொல்லாத இச்சை யுள்ளவனுக்கும் நியாயமில்லா திருந்தாலும் அந்தப் பாவ மயக்கம் இருக்குமட்டும் அடாத நியாயந் தோன்றும். அந்த மயக்கம் நீங்கின பிறகு, முந்தி நியாயமென்று தோன்றினது அநியாயமாகத் தோன்றும். தாகமுள்ள வியாதிக்காரன் வைத்தியன் விலக்கின தண்ணீரின் பேரிலே வெகு ஆசையாயிருக்கிறபடியினாலே தண்ணீரைக் குடிக்க வேண்டுமென்று ஆயிரம் விசை சொன்னாலும் அவன் அப்படி சாதிக்கிறது நியாயமல்ல. அவன் வைத்தியனைக் கேட்டுத் தண்ணீர் குடிக்கலாமென்று இவன் சொன்னால் அப்போது அது ஞாயந்தானென்று ஒத்துக்கொள்ளலாம். அவ்வண்ணமே ஞான வியாதிக்காரராகிய பாவிகள் தங்கள் துராசைகளை அநுசரிக்காமல் ஞான வைத்தியராகிய குருக் களையோ, பத்தியுள்ள நல்ல கிறீஸ்துவர்களையோ புத்தி கேட்டுத் தங்களுக்குத் தோன்றுகிற சந்தேகங்களைச் சொல்லி அவர்கள் சொல்லும் ஞாயத்தின்படியே நடக்கவேண்டும்.


Download Tamil Catholic Songs Click here

Read more saints lives history in tamil.






சனி, 13 ஜனவரி, 2024

அர்ச். கொந்திறான் - ST. GONTRAN.

 மார்ச் மாதம் 28-ம் தேதி.

அர்ச். கொந்திறான் இராசா


ST. GONTRAN.

கிளோத்தேமென்னும் பிரெஞ்சு இராசாவின் குமாரனாகிய அர்ச்சியசிஷ்ட கொந்திறான் மிகப் பேர்பெற்ற குளோவிஸ் இராசாவுக்கும் அர்ச்சியசிஷ்ட குளோத்தில்தம்மாளுக்கும் பேரனாய் இருந்தார். அவருடைய தகப்பனாகிய இராசா இறந்த பிறகு தன் சகோதரர்களோடு இராச்சியத்தைப் பங்கிட்டு ஒர்லெயான் பகுதிக்கும் புர்கொஞ் பகுதிக்கும் இராசாவானார். தன் சகோதரர்களால் அவர்களோடும் லொம்பாரென்னும் மக்களோடுஞ் சண்டை போடக் கட்டாயப்பட்டு வெற்றி கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்களைத் தயவோடே நடத்தித் தன் சகோதார்களுடைய மக்களை ஆதரித்துச் சமாதானத்திற்குரிய சாந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

 தமது பிரசைகளை பாக்கியவான்களாக்க மாத்திரம் ஆசைப்பட்டு நல்ல தகப்பனாரைப்போல் அவர்களை விசாரித்து நடத்துவார். அவரிடத்தில் தயை  பத்தி விசுவாசம் நிறைந்ததினால் தரித்திரர்களை மிகுந்த தயவோடு விசாரித்து அவர்களுக்கு மிகுந்த தர்ம நன்மைகளைச் செய்து கொண்டு வருவார்.

விசேஷமாய்த் தொற்று வியாதி காலத்திலும் பஞ்சத்திலும் எளியோர்கள் பேரிலும் மற்றவர்கள் பேரிலும் அவருடைய பிறசிநேகம் மிகவும் விளங்கினது. வியாதிக்காரர்களுக்கு குறைவற்ற உதவி செய்யப்படும் பொருட்டு அவர் கண்டிப்பான கட்டளை இட்டதுமல்லாமல் தமது செபங்களினாலும் ஒருசந்தி முதலான தவங்களினாலுந் தேவ கோபத்தைத் தணிக்கவும் பிரயாசைப் படுவார். அந்த ஆக்கினை தமது பாவங்களினால் வந்ததென்றெண்ணி அதை ஒழிக்கும்படி இரவும் பகலுந் தவத்தினால் தம்மைச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளெல்லாரும் இள வயதிலே மரித்திருந்தாலுந் தமது இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேறு பிள்ளை இல்லையென்று அவர் கண்டிருந்தாலும், அதினால் புத்தி மயங்காமலுஞ் சுகிர்த ஒழுக்கம் விடாமலும் பொறுமையோடே தேவசித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சர்வேசுரனுக்குப் பத்திப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

போர்ச் சேவகர்களுடைய துர் நடத்தைகளை அடக்க அவர் மிகவும் விவேக முள்ள நல்லொழுக்கக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவரிடத்தில் நீதி நியா யப் பற்றுதலிருந்தமையால் பாதகங்களைக் கண்டிப்பாய்த் தண்டிப்பார். ஆயினும் தமக்கே செய்யப்பட்ட குற்றங்களை மிகுந்த தயவோடே பொறுப்பார். பிறே தெகொந்தென்னுங் கொடிய இராக்கினி தம்மைக் கொல்ல அனுப்பின இரண்டு கொலைப்பாதகர்களில் ஒருவனை மாத்திரம் சிறையிலே போட்டு, மற்றொருவன் ஓர் கோவிலில் அடைக்கலமாய்ப் போனதைப் பற்றி அவனை விடுதலையாக்கினார். தம்மைக் கொல்ல அனுப்பியிருந்த இராக்கினிக்கும் பொறுத்தல் கொடுத்து அவளிடத்தில் பழிவாங்காமலும் அவளைப் பகையாளிகளுக்குக் கையளியாமலும் ஆதரித்துக் காப்பாற்றினார். அரசருக் குரிய பெருந்தன்மையுடன் சிறப்பான அநேகங் கோவில்களையும் மடங்களை யும் கட்டுவித்தார். மேற்றிராணிமார்களை மிகுந்த வணக்கத்தோடே சங்கித்து அவர்களைத் தகப்பன்மார்களாக எண்ணி அவர்களுடைய புத்தி யோசனைக ளைக் கேட்டு அனுசரிப்பார். சுகிர்த சற்குணமுள்ள இந்த நல்ல இராசா முப்பத்திரண்டு வருஷம் ஆட்சி செய்த பின்பு 595-ம் வருஷத்தில் அர்ச்சியசிஷ்டராக மரித்துத் தாம் கட்டுவித்திருந்த ஓர் கோவிலில் அடக்கஞ் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையில் நடந்த அநேகம் புதுமைகளை டூர்ஸ் நகரத்து மேற்றிராணியாராகிய அர்ச். கிறகோரியார் எழுதி வைத்தார்.

கிறீஸ்துவர்களே! இந்த அர்ச். இராசாவிடத்தில் எத்தனையோ புண்ணியங்கள் விளங்குகின்றன. நீதியுள்ள சண்டையில் அடைந்த வெற்றிகளால் பிற தேசங்களை அபகரிக்கத் தேடாமல், தமது பிரசைகளை மகிழ்விக்க மாத்திரம் விரும்புவார். அப்படியே பெரியோர்கள் பிறர் உடமையை அபகரிக்கத் தேடாமல், தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு தர்மங்களைச் செய்யக் கடவார்கள். விசேஷமாய் இந்த அர்ச்சியசிஷ்டவரைப்போல் கொள்ளை நோய் பஞ்சம் முதலிய பொதுத் துன்பம் வருகிறபோது, தரித்திரர்களுக்கும் வியாதிக் காரர்களுக்கும் கூடியமட்டுந் தர்மஞ் செய்ய முயற்சி பண்ணக்கடவார்கள். இராசாக்கள் தங்கள் இராச்சியத்தைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுவிடவுந் தங்கள் சந்ததி இராசாங்கத்திலே நீடித்திருக்கவும் ஆசைப்படுகிறது வழக்க மானாலும் பத்தியுள்ள இந்த இராசா தன் மக்கள் எல்லாரும் இளவயதில் சாவதைக் கண்டு பொறுமையோடே தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தாரே. நீங்களோவெனில், உங்கள் பிள்ளைகள் இறந்து போகிற சமயத்திலே தேவ சித்தத்திற்கு விரோதமாய் முறையிட்டுச் சர்வேசுரனைத் தூஷணிப்பது எவ்வளவு பாவம்!

பிள்ளையில்லாதவர்கள் தேவசித்தத்திற்கு விரோதமாய் முறைப்படுகிறதும், தங்களுக்குப் பிள்ளைகள் உண்டாகும்படிக்கு வேதத்திற்குத் துரோகமான காரியங்களைச் செய்கிறதும் அவர்கள் ஆத்துமத்திற்குத் தின்மையாகு மொழிய நன்மையாகமாட்டாது. தக்க முறையாய்ச் சர்வேசுரனிடத்திலுந் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டர்கள் மூலமாகவும் பிள்ளை வரம் கேட்ட பின்பு, அதற்குத் தேவ சித்தம் இல்லாமற் போனால் பொறுமையோடே கீழ்ப்படிந்து, ஓர் அநாதைப் பிள்ளையை தனக்குப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு வளர்ப்பது உத்தம புண்ணியமாகும். இந்த இராசா தம்மைக் கொலை செய்விக்கத் தேடினவளுக்கு முதலாய் மன்னிப்பு கொடுத்து நன்மை செய்தார். அப்படியிருக்கத் தனக்குச் சொல்லப்பட்ட சில தூஷணம் முதலான அற்ப முகாந்தரங்களைப்பற்றி, மாறாத பகை வர்மம் வைத்திருப்பவர்கள் தேவ கற்பனை மீறுவதற்கு என்ன நியாயஞ் சொல்லக்கூடும். அவர்கள் தங்கள் பாவங்களுக்குத் தேவனிடத்தில் பொறுத்தலை அடையும் படி தாங்களுந் தங்கள் பகையாளிகளுக்கு மெய்யாகவே பொறுத்தலைக் கொடுக்க வேண்டுமென்பது திண்ணம்.

வெள்ளி, 12 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Isaac

 மார்ச் மாதம் 27-ந் தேதி.

அர்ச். ஈசாக்

St. ISAAC.


அர்ச், ஈசாக் என்பவர் உலகத்தை வெறுத்து, வனாந்தரத்தில் போய் அங்கே கடின தபம் செய்து வாழ்ந்தார். அவருடைய நாளிலே கொன்ஸ்தான்டி னோப்பிள் இராயனாகிய வலேன்ஸ் என்பவன் பதிதனாக இருந்ததினாலே கத்தோலிக்கு சபையார்களுக்கு பற்பல இடைஞ்சல்களைப் பண்ணி, அவர்களுடைய கோயில்களை எல்லாம் மூடிவிடச் சொல்லித் தன் எதிரிகளின் பேரில் சண்டைக்குப் பயணப்பட்டான்.

இப்படி இருக்கையிலே சர்வேசுரன் அர்ச், ஈசாக்குக் கற்பித்ததாவது: நீ இராயனிடத்தில் போய், அவன் கருதிப்போகிற காரியம் அநுகூலமாக வேண்டு மானால், அடைபட்டிருக்கிற தேவாலயங்களைத் திறக்க வேண்டுமென்று சொல்லென்றார். அவ்வாறே அவர் இராயனிடம் போய் நடந்த சேதி சொல்லுமிடத்தில் அவர் ஓர் பைத்தியக்கார னென்று இராயன் அவரைப் புறக்கணித்தான். மறுபடி அவர் சென்று அப்படி பேசினதற்கு இராயன் இசைவது போல் தோன்றினான். ஆயினுந் தன் ஆலோசனைக்காரரிடம் யோசனை கேட்ட போது பதிதர்களாயிருந்த அவர்கள் சொன்ன துர்ப் புத்தியினாலே இராயன் மனது கலங்கிச் சம்மதிக்க மாட்டோம் என்றான்.

மூன்றாம் முறையும் ஆண்டவர் கட்டளையிட்டபடி யே அர்ச், ஈசாக்கு இராயனிடத்தில் போய்ப் பேசிய போது, இராயன் கோபித்து அவரைப் பிடிக்கவும் முட்புதரில் தள்ளிப் போடவுங் கட்டளையிட்டான். ஆயினும் அவர் மீண்டும் திரும்பி வந்து சொன்னதாவது : நான் சொன்ன காரியத்திற்கு நீர் உடன்படா திருந்தால், இப்போது நீர் தொடுக்கப் போகிற சண்டையிலே உமது இராணுவமெல்லாம் நிர்மூலமாய்ப் போவதுந் தவிர எதிரிகள் உம்மைப் பிடித்து அக்கினி யிலே சுட்டுப்போடுவார்கள் என்றார். இராயன் தபோதனர் சொன்னதை நம்பாமல், அவரைக் கோபித்து காவலிலே வைக்கக் கட்டளையிட்டு, நாம் சண்டைக்கு போய் வந்த பிறகு இந்த முனிவர் பொய்யான தீர்க்கத் தரிசனஞ் சொன்னதினாலே இவனுக்கு ஆக்கினையிடுவோம் என்று சொல்லித் தன் பயணந் தொடர்ந்து பாளையத்திற்குப் போனான். அங்கே அவன் சண்டை தொடுத்த போது, அர்ச். ஈசாக் சொன்னபடியே சத்துருக்களாலே அவன் படை யெல்லாம் நிர்மூலமான தன்றி, இராயனோ அவன் கையில் அகப்பட்டான். அவர்கள் இரக்கமில்லாமல் அவனை அக்கினியில் தள்ளி சுட்டுப் போட்டார்கள்.

இந்தச் சேதிகளெல்லாங் கொன்ஸ்தான் டினோப்பிள் என்னும் தலைநகரில் அறியப்பட்ட பிறகு, அங்கே இராயனுடைய கட்டளையின்படியே அர்ச். ஈசாக்கைக் காவலில் வைத்துக் கொண்டிருந்த பெரிய உத்தியோகஸ்தர் அவர் மெய்யான தீர்க்கதரிசியென்று விசுவசித்து, அவருக்குச் சங்கை பண்ணி, அவரைக் காவலிலே நின்று விடுதலையாக்கினதுமன்றி, அவர் இருக்க ஒரு மடமுங் கட்டுவித்தார்கள். அவர் வேறு முனிவர்களோடு அதிலிருந்து தவ முதலிய புண்ணியங்களைச் செய்துகொண்டிருக் கிறபோது, நான்காம் நூற்றாண்டில் அர்ச்சியசிஷ்ட சாக மரணம் அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். ஈசாக் தேவ ஏவுதலால் சொன்ன புத்திக்கு இராயன் உடன்படாதகினாலே அவன் தனக்குப் பெரிய தண்டனை யாகிய தோல்வியும் சாவும் வர இடங்கொடுத்தான். இக்காலத்தி லேயுஞ் சில முறை இப்படிச் சம்பவிக்கின்றது. ஆண்டவர் சம்மனசுக்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும், புண்ணியவான் கள் வழியாகவும் பாவிகளுக்குப் புத்திமதி சொல்லி வருகிறார். அவர்கள் சில பாவங்களை விட்டு விடாதிருந்தால் ஆக்கினை வருமென்று அநேகம் விசை அவர்கள் எச்சரித்து வந்தபடியே நல்ல புத்திக்கு அவர்கள் இடங்கொடாதிருக்கிறகினால் தாங்கள் தானே தங்களுக்கு ஆக்கினை வர வழிசெய்கிறார்கள். 

ஆண்டவர் நமக்கு மனச் சுதந்தரங் கட்டளையிட்டதினால், வேண்டுமானால் அந்தந்த நல்ல புத்திக்கு இடங் கொடுக்கலாம். தலையெழுத்தினாலே அந்த நல்ல புத்திக்கு நான் இடங்கொடுக்க விக்கினப்பட்டேன் என்று உலகத்தார் சொல்லுகிறது அபத்தம். தலையெ ழுத்தென்பது பிரம லிபியென்று சொல்லுகிறார்கள். தலையெழுத்து உண்டென்று உலகத்தார் சொல்லுகி றது பெரும் அபத்தமொழிய மற்றப்படியல்ல. 

அர்ச் ஈசாக் காவலிலே இருந்தபோது மிகுந்த கஸ்திப்பட் டிருந்தாலும் அந்தக் கஸ்தி கொஞ்ச நாளிலே முடிந்ததல்லாமல், அது முகாந்தரமாக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவருக்கு மிகுந்த நன்மை வந்தது. அவ்வண்ணமே நீங்கள் சர்வேசுரனைக் குறித்துக் கஸ்தி அனுபவித் தால் இவ்வுலகத்திலேயாவது மறுவுலகத்திலேயாவது அதனால் உங்களுக்குத் தப்பா மல் நன்மை வருமென்று உணரவேண்டும்.

புதன், 10 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Hyginus

சனவரி மாதம் 11-ந் தேதி 
பா. வே 
அர்ச். இஜினார் 
St. Hyginus 


அர்ச். இஜினார் அக்தேன் பட்டணத்திலே பிறந்தார். அவருடைய ஆச்சரியமான புண்ணியங்கள் முகாந்தரமாக அக்காலத்திலிருந்த அர்ச். தெலெஸ் போர் என்னும் பாப்பாண்டவர் இறந்த பிறகு அந்தப் பட்டம் அவருக்கு வந்தது. அவர் அந்தப் பட்டத்திலிருக்கிறபொது உலகத்துக்கு அநேக கடின பொல்லாப்புகள் உண்டாயின. பிற 

மதத்தார் இதைக் கண்டு  சர்வேசுரனுடைய வேதம் பரம்பி மிஞ்சினதினாலே அந்தப் பொல்லாப்பெல்லாம் வருகின்றதென்றும், கிறீஸ்துவர்கள் தங்கள் பலதேவர்களை விட்டுவிட்டதினாலே அந்தத் தேவர்கள் பூலோகத்தின் பேரிலே மகா கோபமாயிருந்து இத்தனை பொல்லாப்புகளை ஆக்கினையாகக் கட்டளையிட்டார்களென்றும், அவர்களுடைய கோபத்தை அமர்த்த இந்த வேதக்காரர் எல்லாரையும் நிர்மூலம் பண்ணவேண்டுமென்றும் அநீயாயமாய்ச் சொல்லித் திருச்சபைக்குக் கனமான கலாபனைகளை  பண்ணினார்கள். அந்தக் கலாப முகாந்தரமாகக் கிறீஸ்தவர்கள் வெகு உபத்திரியப்பட்டாலும் பாப்பாண்டவராகிய இஜினாரென்கிறவர் சொல்லிய புத்தியைக் கேட்டு  வேதத்திலே உறுதியாயிருந்தார்கள். அதல்லாமல் அவருடைய நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்களாகிய வலாந்தீனென்கிறவனும், சேர்தோனென்கிறவனும் ரோமாபுரிக்கு வந்து வேதத்துக்கு விரோதமான அநேகத் தப்பறைகளைக் கிறீஸ்துவர்களுக்குள்ளே போதித்துக் கொண்டு வந்தார்கள், தாங்கள் சொல்லுகிற விஷமுள்ள துர்ப்புத்திகளை நல்ல கிறீஸ்துவர்கள் விசுவசிக்குமாறு தங்களைக் கத்தோலிக்குத் திருச்சபையில் உட்பட்டவர்களைப்போலே கபடாய் மற்றவர்  களுக்குக் காண்பிப்பார்கள். 

அர்ச். இஜினாரென்னும் பாப்பாண்டவர் இவற்றை அறிந்து திருச்சபைக்கு நிருபங்களை அனுப்பி அப்போஸ்தலர்களான அர்ச் இராயப்பர் சின்னப்பர் படிப்பித்த சத்திய வேதத்திலே எல்லாருந் தைரியமும் நிலைமையுமாயிருந்து முன் சொல்லப்பட்ட துர்ப்புத்திகளில் அகப்படாதபடிக்கு பத்திரம்பண்ணினார். மிகுந்த எச்சரிக்கையுள்ள இடையன் ஆடுகளின்மேலே பாய்ந்து வருகிற ஒனாய்க்கு எதிராய்ப்போய் அதைத் துரத்துவதுபோல் பாப்பாண்டவர் அந்த இரண்டு பதிதருடைய பொல்லாப்புக்கு எதிராய்ப் போய் அவர்களைத் துரத்தின படியினாலே தமது ஆடுகளாகிய கிறீஸ்துவர்களுக்கு மோசம் வரவிடாமல் நன்னெறியிற் காப்பாற்றினார். 

மேலும் இந்த பாப்பு ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத் தாய் ஒரே ஞானத்தகப்பன் இருக்க வேண்டுமென்றும், திருச்சபையிலே வழங்கும் மற்ற அநேகஞ் சடங்குகளையுங் கட்டளையிட்டார். அவர் பாப்பு பட்டத்திலே நான்கு வருஷம் மூன்று மாதம் நான்கு நாளும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த நூற்றைம்பத்தெட்டாம் வருஷம் அந்தோனினுஸ் என்கிற இராயன் காலத்திலே திருச்சபைக்கு பிறமதத்தார் பண்ணின கலாபத்தில் சனவரிமாதம் பதினோராந் தேதியிலே வேதசாட்சியாகி மகிமையுள்ள மரணத்தை யடைந்தார். 

கிறீஸ்துவர்களே! இப்போது நீங்கள் கேட்ட இந்தச் சுருக்கமான சரித்திரத்திலே ஞான புஷ்பங்களை எடுக்குமாறு அதற்கடுத்த சில புத்திகளைக் கேளுங்கள். இப்போது சொல்லப்பட்ட அர்ச். பாப்பு நாளிலே உலகத்துக்கு வந்த நிற்பந்தங்களை பிறர் கண்டு அவை கிறீஸ்துவர்களுக்குத் தாங்கள் செய்த அநீத உபத்திரியங்களுக்கு ஆக்கினையாக வந்ததென்று ஒத்துக்கொள்ளாமல் சர்வேசுரனுடைய வேதம் பரம்பினதினாலே தங்கள் தேவர்கள் உலகத்துக்கு ஆக்கினையாக அந்தப் பொல்லாப்புகளை வரப்பண்ணினார்களென்று அக்காலத்திலே அவர்கள் சொன்னதுபோல் இக்காலத்திலேயுஞ் சிலர் சொல்வார்கள். அதெப்படி யென்றால் தேவர்கள் தங்களை வணங்குகிறதை அநேகர் விட்டுச் சர்வேசுரனுடைய வேதங் கேட்டதினாலே மழை பெய்ய வில்லையென்றும், பஞ்சம் படை வியாதி முதலான ஆக்கினைகளை உலகத்துக்கு வரப் பண்ணுகிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள். ஆனால் அது தப்பிதமாய் இருக்கிறதொழிய நியாமாய் இருக்க வில்லை. அதெப்படி யென்றால் அந்தத் தேவர்களைவிட்டுச் சத்திய வேதங்கேட்கிறது குற்றமானால் அந்தக் குற்றங் கட்டிக்கொண்டவர்களாகிற கிறீஸ்துவர்களை மாத்திரந் தண்டிக்கிறதே நியாயமாய் இருப்பதொழிய அந்தக் குற்றமில்லாதவர்களாகிய புறமதஸ்தர்களைத் தண்டிக்கிறது அநியாயம். பஞ்சம் படை முதலிய பொதுவான நெருக்கடிகள் வந்தால் கிறீஸ்துவர்களும் புறமதஸ்தர்களும் அவதிப்படுகிறார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆகையால் முன் சொல்லப்பட்ட காரணத்தால் அந்தத் தேவர்கள் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவது அநியாயமென்று சொல்லவேண்டும். அநியாயம் பண்ணுகிறவன் மெய்யான தேவனல்ல. அத்தகைய ஆக்கினை எந்த முகாந்தரத்தினால் வருகிற தென்று அறியவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேளுங்கள். 

மெய்யான சர்வேசுரனுடைய சொற்படி கேளாதிருக்கிற பாவமே முன் சொல்லப்பட்ட ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும். கிறீஸ்துவனானாலும் பிறனானாலும் ஏதேனும் பாவஞ் செய்தால் அவர்களுடைய பாவத்துக்கு ஆக்கினையாக நியாயத்தின்படியே ஆண்டவர் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவார். இத்தேசத்திலே கிறீஸ்துவர்கள் சிறுபான்மையோர், பிறமதத் தினர் மிகுதியாய் இருக்கிறார்கள். கொஞ்சம்பேருடைய குற்றங்களைப்பற்றிக் கடவுள் திரளான பேரைத் தண்டிப்பாரென்பதைவிடத் திரளான குற்ற வாளிகளின் ஆக்கினையில் அந்தக் குற்றமில்லாத சிலர் வேறு குற்றத்தைப் பற்றி உட்பட்டிருக்கலாமென்பது நியாயம். சனத்தொகையைப் பற்றிக் கிறீஸ்துவர்களிடத்திலே இருக்கிற பாவங்களைவிட பிறரிடத்திலே இருக்கிற பாவங்கள் அதிகம். விசேஷமாய்ப் பசாசைக் கும்பிடுகிற பாவம் அதிகமாய் இருக்கிறபடியினாலே முன் சொல்லப்பட்ட ஆக்கினைகள் வருகிறதற்கு அவர் கள் அதிககாரணமாய் இருக்கிறார்களென்னத்தகும். சத்திய வேதத்துக்கு முழுதும் உட்பட்ட கிறீஸ்துவர்களுடைய இராச்சியங்கள் பிற இராச்சியங்களை விட மிகவும் அதிக செல்வபாக்கிய வல்லமைகொண்டிருக்கிறது. யாவர்க்குந் தெரியும், அதினால் சர்வசந்தேகமுந் தீரலாம். மேலும் கிறீஸ்துவர்களிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் இத்தேசத்தில் அதிக ஆக்கினைவராத படிக்குஞ் சிலவிசை ஆக்கினை முழுதுந் தீர்ந்துபோகவுங் காரணமாய் இருக்கும். இந்த நிடாயத்தை வேறே தேசங்களில் புறமதஸ்தர்களான சில இராசாக்கள் கண்டு பிடித்துப் பரிசோதித்துப் பார்த்துத் தங்களுடைய இராச்சியங்களில் நடக்கிற சர்வேசுரனுடைய வேதத்துக்கு விக்கினம் பண்ணாமல் இந்த வேதம் பரம்பச் சம்மதித்தார்கள். 

இதன்றியே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத்தாய் ஞானத்தகப்பன் மாத்திரமிருக்க முன் சொல்லப்பட்ட அர்ச். பாப்பு கட்டளையிட்டா ரென்று சொன்னோமே நீங்கள் எவருக்கேனும் ஞானத்தாய் ஞானத்தகப்பனாய் இருந்தால் அது நல்லதென்று நீங்கள் நினைக்கக்கடவீர்கள், ஆனால் அதற்குண்டான கடனை நிங்கள் தீர்க்கவேண்டும். அதாவது: ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேறு யாறும் வேதத்தின் மந்திரங் குறிப்பிடம் படிப்பியாதிருந்தால் ஞானத்தாய் ஞானத்தகப்பன் அவற்றை அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவார்கள். மேலும் இந்த அர்ச்சியசிஷ்டர் நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்கள் நல்ல கிறீஸ்துவர்கள்போல் வெளியே காண்பித்தாலுந் தங்கள் இருதயத்தில் இருந்த விஷ நிறைந்த துர்ப்புத்தி சொல்லுவார்களே. 

அப்படியே இக்காலத்திலே சில ஊர்களிலேயுள்ள பதிதர், நாடுகளிலே வந்து தாங்கள் மெய்யான கிறீஸ்துவர்களைப்போல் காண்பிக்க கழுத்திலே செபமாலை தரித்துச் சுரூபமும் வைத்து கொண்டு செபம் பண்ணுவதுபோலே திரிகிறார்கள். பத்தியுள்ள அத்தகைய அடையாளங்களை நீங்கள் கண்டு அவர்களுக்கு இடங்கொடுத்துப் பட்சத்தை காண்பித்தபிறகு அவர்கள் சுரூப வணக்கமாகாதென்றுந் தேவமாதாவை வணங்க வேண்டாமென்று. துர்ப் புத்தியாகிய விஷத்தை வீசுவார்கள். ஓனாயானது ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஆட்டுக்கிடையிலே போகிறபோது உடனே ஆடுகளைக் கடியாதிருந்தாலும் பிற்பாடு கடித்து வெகு சேதம் வருவிக்கிறாப் போலே இந்தப் பதிதர் செய்கிறார்கள். ஆதலால் அவர்கள் வழியாக உங்கள் ஆத்துமத்துக்கு மோசம் வராதபடிக்கு முன் சொல்லப்பட்ட அர்ச். இஜினாரென்கிவரைப்போலே நீங்கள் பதிதர் மட்டில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பதுமன்றியே வேதகாரியங்களிலே ஒருக்காலும் உங்கள் காதிலே விழாத வார்த்தையாகிய நூதனபோதகம் கேள்விப்பட்டால் அதை விசுவசிக் வேண்டாமென்று அறியக்கடவீர்களாக. ஆனால் சாதாரண திருச்சபை படிப்பிக்கிற சத்தியங்களை உறுதியாக விசுவசிப்பதே கடமை.

புதன், 27 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 19 - அர்ச். பிரான்சிஸ் சவேரியார் (St. Francis Xavier)

 வாழ்க்கை வரலாறு

அர்ச். பிரான்சிஸ் சவேரியார், இந்தியா மற்றும் கீழ்த்திசை நாடுகளுக்கும் சென்று சத்திய வேதத்தைப் போதித்ததினால் அவர் சிந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் நமது ஞானத் தந்தையாகவும் இருக்கிறார். ஆனால் இந்த நவீன காலங் களில் அவர் மீதான பக்தி மறைந்து வருகிறது. ஆன்ம தாகம் நிறைந்த அவரது வாழ்வை அறிந்து, அவரைக் கண்டுபாவித்து, அவர் உதவியை நாடுவது மிகவும் நல்லது. அவர் மீது விசேஷ பிள்ளைக் குரிய பக்தி கொள்ளச் செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. (ஆர்)

இந்தியாவின் அப்போஸ்தலர்

உ லகமெங்கும் சென்று சகல ஜாதி ஜனங்களுக்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும் உன்னத அலுவல் நமது ஆண்டவரால் திருச்சபை வசம் ஒப்பு விக்கப்பட்டது. இந்த அலுவலைக் கத்தோலிக்கத் திருச்சபை, அப்போஸ்தலர் காலமுதல் இதுவரையில் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வுத்தம தொழிலுக்கு தேவ திருவுளத்தால் தெரிந்துகொள்ளப்பட்ட வேத போதகர் திருச்சபையின் அதிகாரமும், அங்கீகாரமும் பெற்று தூர தேசங்களுக்குச் சென்று கத்தோலிக்க சத்தியங்களைப் போதித்து ஆயிரக்கணக்கான அஞ்ஞானிகளைத் திருச்சபையின் செல்வ மக்களாக்கியிருக்கின்றனர். 16-ம் நூற்றாண்டில் மிகப் பிரசித்திப் பெற்ற வேதபோதகர்களுள் முதன்மையானவர் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் என்றால் மிகையாகாது. இவருக்கு அக்காலத்தில் வசித்த பரிசுத்த பாப்புவாகிய 8-ம் உர்பன் இந்தியாவின் அப்போஸ்தலர் என்னும் பட்டமளித்தார். 

பிறப்பு 

இந்தப் பெரிய அப்போஸ்தலர் பிறந்த இடம் ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த நவார் நாட்டிலுள்ள சேவியேர் மாளிகை. இவர் பிறந்தது 1506-ம் ஆண்டு. இவரது தாய் இராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். தந்தை நவார் நாட்டு இராஜாவாகிய 3-ம் ஜான் ஆல்பிரட் என்பவரின் பிரதான மந்திரிகளுள் ஒருவர்.

அர்ச். சவேரியார் பிறந்த சேவியேர் மாளிகை

பிரான்சிஸ் சவேரியாரின் குடும்பத்தில் உதித்த ஆறு மக்களுள் இவர்தான் கடைசிப்பிள்ளை. இவரது சகோதரி மதலேன் என்பவள் காந்தியா நாட்டிலுள்ள அர்ச். கிளாரா மடத்து சிரேஷ்ட தாயாராக மாட்சிமை பொருந்திய உத்தியோகத்தை வகித்து வந்தார். சகோதரரோ அக்காலத்து வழக்கம்போல் இராணுவத்தில் சேர்ந்து கீர்த்திப் பெற்று விளங்கினர். 

பாரீஸ் நகர் பல்கலைக்கழகம் 

பிரான்சிஸ் சிறுவயதிலேயே கல்வி கற்பதில் பெரும் ஆவல் கொண்டிருந்தபடியால், அவரது தாய் தந்தையர் அவரைப் பாரீஸ் நகர் பல்கலைக்கழகத்திற்குத் தமது கல்விப் பயிற்சியைத் தொடர்ந்து நடத்தும்படி அனுப்பினர். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலுள்ள உயர்தரக் கல்வி ஸ்தாபனங்களுள் அதிமிக சிறப்பும், மேன்மையும் பெற்று விளங்கியது பாரீஸ் பல்கலைக் கழகமாகும். பலதேசத்து மாணவர் வந்துகூடி படிக்குமிடமும் இதுவாகவே இருந்தது. ஐரோப்பிய ஆசிரியருள் பிரசித்திபெற்ற அறிஞர்கள் ஆசிரியர் தொழில் நடத்திவந்ததும் இந்தப் பல்கலைக்கழகத்திலேதான். சுபாவத்தில் நுட்பமான புத்தியுள்ள இளைஞனாகிய பிரான்சிஸ் வெகு கவனமாய்ப் பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இளமையிலேயே உயர்ந்த கல்விப் பட்டங்களைப் பெற்று, பெரியோரால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். இவரை அர்ச். பார்பரா கல்லூரியின் பிரதம ஆசிரியருள் ஒருவராக நியமித்தார்கள். தமது சகோதரர்கள் இராணுவத்தில் பெயரும். புகழும் பெறுவதுபோல், தாம் கல்வி துறையில் கீர்த்தியும் செல்வாக்கும் அடையவேண்டுமென்பது பிரான்சிஸ் சவேரியாரின் ஒரே ஆசையாயிருந்தது.

அர்ச். இஞ்ஞாசியார்

ஆனால் மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று செய்யும் என்னும் பழமொழிக்கேற்ப நமது நல்ல ஆண்டவர் பெருந்தன்மையும், புத்தி தீட்சண்யமுமுள்ள சவேரியாரை தமது ஊழியத்துக்கு அழைக்க சித்தமாயிருந்தார். "நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்" என்று உலக இரட்சகர் தமது அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றியிருக்கிறாரன்றோ? அவ்வாறே இப்போது தாம் சவேரியாரைத் தமது அப்போஸ்தலராகத் தெரிந்துகொண்டதாக அவருக்கு அறிவிக்கும்படி அர்ச். இஞ்ஞாசியாரை அவரிடம் அனுப்பினார். 

அர்ச். இஞ்ஞாசியார் சவேரியாரைப் போலவே ஸ்பெயின் தேசத்து பிரபுகுலத்தில் பிறந்தவர். அவரைப் போலவே தொடக்கத்தில் இவ்வுலக பெருமை, மகிமையை நாடித் திரிந்தவர். ஆனால் இஞ்ஞாசியார் தேவ திருவுளத்தால் அற்புதமாய் ஏவப்பட்டு, பூலோக சுக செல்வங்கள் அழிவுக்குரியவையென்று உணர்ந்து, உலகத்தைத் துறந்து, கடுந்தபம் புரிந்து, தன்னை அடக்கி, சேசுவின் திரு ஊ ழியத்துக்குத் தன்னை முழுவதும் கையளித்திருந்தவர். இவர் தம்மோடு சேர்ந்து தேவ பணிபுரிய ஓர் புதிய சன்னியாச சபையை ஏற்படுத்த கருத்துக் கொண்டவராய் பாரீஸ் பல்கலைக் கழகத்திற்கு வந்து, பிரான்சிஸ் சவேரியாரின் அரும்பெருங் குணாதிசயங்களைக் கண்ணுற்ற அவரைத் தமது தோழனாகத் தெரிந்துகொள்ளத் தீர்மானித்து, அவரிடம் சென்று. "பிரான்சிஸ், உலக முழுவதையும் உன்னுடையதாக்கிக் கொண்டாலும் உன் ஆத்துமத்தை இழந்துபோவாயானால் என்ன பிரயோசனம்” என்று சொல்வார். ஆனால் வின் மகிமை யென்னும் உலக மாய்கையில் சிக்குண்டு அழைக்கழிக்கப்பட் டிருந்த அவரது இருதயத்துக்கு அர்ச். இஞ்ஞாசியார் சொன்ன புத்திமதி வேப்பங்காயைப் போல கசப்பாயிருந்தது. உலக சுக செல்வத்தை ஒருங்கே மறுத்து சன்னியாசக்கோலம் பூண்டு தரித்திர திசையில் நடமாடித்திரிந்த இஞ்ஞாசியாரை ஓர் ஏழை மாணவன் என்று எண்ணியிருந்த சவேரியார் அவரை இகழ்ந்து அலட்சியம் செய்தார்.

ஆயினும் இஞ்ஞாசியார் அவதைரியப்படாமல், அர்ச்சியசிஷ்டவர் களுக்குரிய அற்புத தாழ்ச்சி, பொறுமையுடன் சவேரியாரை அணுகி, அவருடைய குலம், குணம், கல்வி, ஒழுக்கம், சாதுர்ய சாமர்த்தியம், யுக்தி, யோசனை ஆகிய சுபாவ நன்மைகளைப் புகழ்ந்துப் பேசி, இத்தகைய சுகிர்த இலட்சணங்களை ஆபரணமாகக் கொண்டு, சிறந்து விளங்கும் கத்தோலிக்க வாலிபன் இவ்வுத்தம சுபாவக் கொடைகளைத் தன் இரட்சகரின் திரு ஊழியத்தில் செலவழிப்பதே அழிவில்லாப் புகழ்பெற ஏற்ற வழி என்று அவர் உணருமாறு எடுத்துரைத்தார். சவேரியார் இஞ்ஞாசியாரோடு நெருங்கிப் பழகவே, அவரது யதார்த்த குணத்தையும் பெருந்தன்மையையும் உயர்குலப் பிறப்பையும் கண்டு, மனச்சாட்சியின் குரலுக்குச் செவிக்கொடுத்து, திவ்விய இஸ்பிரித்துசாந்துவின் பரிசுத்த ஏவுதலுக்கு இணங்கி, தம்மை இஞ்ஞாசியார் வசம் ஒப்படைத்தார். இஞ்ஞாசியாரும், அவரை உற்சாகப்படுத்தி தமது உற்ற தோழனாக ஏற்றுக் கொண்டார். பின்னாளில் அர்ச் இஞ்ஞாசியார் சேசு சபையை ஸ்தாபிக்கும்போது அச்சபையின் அஸ்திவாரக் கற்கள்போன்ற பத்துபேருள் பிரான்சிஸ் சவேரியார் ஒருவராயிருந்தார்.

இந்தியா வருகை 

1537-ம் ஆண்டு அர்ச். ஸ்நாபக அருளப்பர் திருநாள் அன்று சவேரியாருக்கு வெனிஸ் நகரில் குருப்பட்டம் அளிக்கப் பட்டது. அதன்பின் அர்ச். இஞ்ஞாசியாரும் அவர் தோழர் களும் உரோமையில் ஆத்தும இரட்சண்ய அலுவலில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக் கையில், போர்த்துக்கல் தேசத்து இராஜா இந்தப் புது குருமாரின் பக்திப் பற்றுதலையும், வேதபோதகத் திறமையையும் கேள்வியுற்று, இவர்களுள் ஆறுபேரை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென்று பரிசுத்த பாப்பரசருக்கு மனு செய்துகொண்டார். அக்காலத்தில் நமது தேசமாகிய இந்தியாவில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முன்வந்து முயற்சி செய்தவர்கள் போர்த்துக்கீசியரே. நமது பரிசுத்த பிதா இராஜாவின் மன்றாட்டுக்கிணங்கி அர்ச் இஞ்ஞாசியார் விருப்பப் பிரகாரம் பிரான்சிஸ் சவேரியார். சீமோன் ரொட்ரிகோஸ் என்னும் இரண்டு சேசுசபைக் குருமாரைப் போர்த்துக்கலுக்கு அனுப்பினார். ரொட்ரிக்கோஸ் சுவாமியார் லிஸ்பன் நகரில் இருக்க நேர்ந்ததால், பிரான்சிஸ் சவேரியார் மாத்திரம் இந்தியாவுக்குப் புறப்பட வேண்டிய தாயிற்று. சங். சவேரியார் சுவாமி தமது 35-ம் வயதில், 1541-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சுப்பலேறி, தமது சொந்த தேசம், அன்புள்ள தாய், சகோதரர், சகோதரி, உற்றார் உறவினர் சகலரையும் விட்டு அந்நியராகிய அஞ்ஞான இந்தியர்களுக்கு சத்திய வேதத்தைப் போதிக்க இந்தியாவை நோக்கிப் புறப்பட்டு 1542-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி கோவா துறைமுகத்தில் வந்திறங்கினார்.

கோவா 

அர்ச். சவேரியார் காலத்தில் இந்தியாவின் மேற்கு கடற்கரை யோரத்திலுள்ள சில துறைமுகப் பட்டணங்கள் போர்த்துக்  கீசியருக்குச் சொந்தமானவையாயிருந்தன. இவைகளுள் பிரதான மானது கோவா நகர். இந்த கோவா மாநகரில்தான் மேற்றிராணியாரும் அரச பிரதிநிதியாகிய உயர் அதிகாரிகளும் வசித்தனர். புதிதாய் வந்திறங்கின சங். சவேரியார் சுவாமியார் தினமும் அதிகாலையில் திவ்விய பலிபூசை நிறைவேற்றியபின், கோவாவிலுள்ள தர்ம மருத்துவமனைகளுக்குச் சென்று வியாதியஸ் தருக்கு ஆத்தும சரீர நன்மைகள் செய்வார். தொழுநோய் மருத்துவ மனையே அவரது விசேஷ அன்புக்குரியதாயிருந்தது. பிறகு சிறைச் சாலைகளுக்குப் போய் அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலளிப்பார். கோவாவில் வீடு வீடாய்ச் சென்று தான் சேகரித்தப் பொருட்களையும் தர்ம பணத்தையும் நோயாளிகளுக்கும் கைதிகளுக்கும் பகிர்ந்துக் கொடுப்பார். மாலை நேரத்தில் ஓர் சிறு மணியை அடித்துக்கொண்டு வீதிகள்தோறும் நடந்துபோய் சிறுவர்களையும் சிறுமிகளையும் கூட்டிச் சேர்த்துவந்து அவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக் கொடுப்பார். பிள்ளைகளின் ஆத்துமத்தைக் காப்பாற்றி அவர் களுடைய இளம் பிராயத்தில் புண்ணிய நற்பண்புகளை விதைத்தால், பிள்ளைகள் மூலமாய்ப் பெற்றோரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்குவது எளிது என்பதே அவருடைய அபிப்பிராயம். சங். சவேரியார் சுவாமியுடைய முயற்சியின் பலனாக பிள்ளைகள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்சென்று அவருடன் கோவிலுக்குள் சென்று வேத ஞான சத்தியங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொள்வார்கள். கற்றுக்கொண்டதை அநுசரித்து பக்தி விசுவாசமுள்ள சிறு சம்மனசுகளாக மாறிவிட்டதுமன்றி, வேத விசுவாசத்தில் சீர்குலைந்து திரிந்த தங்கள் தாய் தந்தையரையும் தங்களோடு ஞானோபதோத்துக்கு அழைத்துச் செல்வார்கள். கோவா நகர் கிறீஸ்தவர்களும் தங்கள் மத்தியில் ஓர் பரிசுத்த குருவானவர் எழுந்தருளி வந்திருக்கிறாரென்று நன்குணர்ந்து அவரது பிரசங் கத்தைக் கேட்க ஓடிவருவார்கள். அவரது பக்தியார்வம் நிறைந்த வார்த்தைகள் பாவிகளின் இருதயத்தில் ஆணிபோல் பதிந்து தெய்வ பயத்தை உண்டாக்கி அவர்களை நடுங்கச் செய்தன. தங்கள் பாவ வாழ்க்கையைவிட்டு உத்தம கிறீஸ்தவர்களானார்கள். 


தென்கீழ்க் கடலோரப் பகுதியில் 

பகலில் இவ்வாறு ஆத்தும இரட்சண்யத்திற்காக அயராது உழைத்த அர்ச். சவேரியார் இரவில் அதிக நேரத்தை ஜெபத் தியானத்தில் செலவிடுவார். தனது சரீர சுகத்தை ஒரு பொருட்டாய் எண்ணாது, களைப்புக்கும் தவிப்புக்கும் அஞ்சாமல், பிறர் ஆத்தும நன்மைக்காக அவர் சில மாதங்கள் உழைத்தபின், இந்தியாவின் தென்கீழ்க் கடலோரமாகிய முத்துக்குளித்துறையில், கன்னியாகுமரிக்கும் மன்னாருக்கும் நடுவிலுள்ள ஊர்களில் வசித்த பரதகுல மக்களுக்கு ஞான உதவி புரியும்பொருட்டு 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு வந்து சேர்ந்தார்.


அர்ச். சவேரியார் முத்துக்குளித்துறைக்கு வந்ததும் அங்குள்ள பரதர்களில் அநேகர் சில வருஷங்களுக்குமுன் ஞானஸ்நானம் பெற்றிருந்தும். அவர்களை வேதத்தில் ஸ்திரப் படுத்த குருமார் இல்லாத குறையால் இந்தப் புதுக் கிறீஸ்தவர்கள் தங்களைச் சுற்றியிருந்த அஞ்ஞானிகளைப் போலவே வேத ஞான அறிவில்லாத வர்களாயிருப்பதைக் கண்டார். கோவாவில் எப்படி கிறீஸ்தவர்கள் மத்தியில் உழைத்தாரோ அதே விதமாய்ப் பரதர்கள் மத்தியிலும் உழைத்து, புதுக் கிறீஸ்தவர்களை விசுவாசத்தில் திடப்படுத்தி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதிருந்த அஞ்ஞானப் பரதர்களுக்கு வேதம் போதித்து தமது கையாலேயே ஞானஸ்தானம் கொடுத்தார்.

முத்துக்குளித்துறையில் தனக்குக் கிடைத்த பாக்கியத்தையும் ஞான ஆறுதலையும் தக்கவாறு வர்ணிக்கத் தன்னால் இயலாது என்று அர்ச். சவேரியார் உரோமைக்குத் தனது சபைக் குருமாருக்கு எழுதி யிருக்கிறார். திரளான கூட்டமாய் தன்னிடம் வந்த பரதகுலத்தாருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததினால் தனது கரங்களைத் தூக்க முடியவில்லை என்றும், களைப்பினால் பேசமுதலாய் பலமில்லை யென்றும் சொல்லுகிறார். அம்மக்களின் ஆச்சரியத்துக்குரிய பக்திப் பற்றுதலையும், வேத சத்தியங்களைக் கற்றறிய அவர்களுக்கு இருந்த அணைகடந்த ஆவலையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அவர்கள் எப்போதும் என்னோடுகூட இருக்க ஆசித்து, என்னை எப்போதும் சூழ்ந்துகொண்டிருப்பதால் ஜெபிக்க நேரமின்றி, அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயாவது ஓடி ஒளிந்துகொண்டு என் கட்டளை ஜெபத்தை ஜெபித்து முடிக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர்களுக்குள் யாராவது வியாதியாய் விழுந்தால் சவேரியாருடைய ஜெபமாலை அல்லது பாடுபட்ட சுரூபத்தை வாங்கிக்கொண்டு போய் குணப்படுத்துவார்கள். 

முத்துக்குளித்துறையில் மரணத்தறுவாயிலிருந்த அஞ்ஞானக் குழந்தைகளைத் தேடிச்சென்று ஞானஸ்நானம் கொடுப்பார். இவ்வாறு இவர் கையால் ஞானஸ்நானம் பெற்று இறந்து மோட்சபாக்கியம் பெற்ற குழந்தைகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கு மேல் இருக்கு மென்று அர்ச். சவேரியார் கணக்கிட்டிருக்கிறார்.

அர்ச் சவேரியார் மணப்பாட்டு வழியாய் பலமுறை பிரயாணஞ் செய்தும் அவ்வூரிலேயே அநேக மாதம் தங்கியும் இருக்கிறார். 1542-ம் ஆண்டு மணப்பாடு அவருடைய பரிசுத்த பாதங்களினால் முதன் முதலாக அர்ச்சிக்கப்பட்டது. மறு வருடம் சுமார் நான்கு மாதம் அங்கேயே தங்கியிருந்தார். 1544 ம் வருடத்தில் மாத்திரம் மணப்பாட்டிலிருந்து 12 கடிதங்கள் எழுதினாரென்றால் எத்தனை முறை அவர் அங்கு சென்றிருக்கவேண்டுமென நாமே எளிதில் யூகித்துக் கொள்ளலாம். 1548-ம் ஆண்டில் தமது தோழர்களுக்கு தியானம் கொடுத்து அவர்களுக்கான புத்திமதிகளை எழுதிக் கொடுத்தது மணப்பாட்டில்தான். ஏழைகளின் உணவாகிய சாதமும் தண்ணீருமே அவர் அருந்திய அநுதின உணவு. வேலை முடிந்தபின் ஓர் எளிய குடிசையில் தரையில் மூன்று மணி நேரம் படுத்துறங்குவார். மீதி நேரத்தில் ஜெபத் தியானத்தில் ஆழ்த்திருப்பார். அவர் வழக்கமாய் ஜெபதபம் புரிந்துவந்த குகையை இன்றும் மணப்பாட்டில் காணலாம்.

இந்தியாவின் தென்கோடி முனையில் முத்துக்குளித் துறையெனப் பெயர்பெற்று விளங்கும் பரதர் நாடே அர்ச். சவேரியாரின் விசேஷ அன்பின் ஸ்தானமாயிருந்தது என்று மேற்கூறியவைகளைக் கொண்டு எளிதாக அறிந்துக் கொள்ளலாம். அவரது ஞான மக்களாகிய பரத குலத்தாரும் அர்ச். சவேரியார் தங்கள் முன்னோருக்குச் செய்தருளிய எண்ணிலா உபகார சகாயங்களை மறவாமல் அவரைத் தங்கள் அருமைத் தந்தையென்று போற்றிப் புகழ்ந்து ஸ்துதித்து வருகின்றனர். அர்ச். சவேரியார் வேதம் போதிக்கச் சென்ற இடங்களில் நடந்த சம்பவங்களையெல்லாம் இங்கு எடுத்துக் கூறுவது எளிதல்ல. ஆனால் அவர் இலங்கை, மலாக்கா, மொலுக்கஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் போய் இந்தியாவுக்குத் திரும்புகையில் தமது பரதருல மக்களை பாசத்தோடு சந்தித்து அன்புடன் ஆசீர்வதிக்க ஆவலுடன் முத்துக்குளித் துறைக்குப் போவார்.

சீனதேசம்


அர்ச். சவேரியார் இந்தியாவை விட்டு கடைசியாக புறப்பட்டது 1552-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி. சீனதேசம் புகுந்து அங்குள்ள அஞ்ஞான சீனருக்கு வேதம் போதிக்கவேண்டுமென்பது அவரது தீராத ஆவல், ஆனால் அந்நிய தேசத்தார் எவரும் சீனதேசத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதென்பது அத்தேசத்தின் கண்டிப்பான சட்டம். அப்படி இச்சட்டத்தை மீறி தேசத்திற்குள் பிரவேசிப்பவர்களைச் சிரச்சேதம் செய்வது வழக்கம். அர்ச். சவேரியார் இதை அறிந் திருந்தும், தேவசிநேகத்தால் பற்றியெறிந்த அவர் இருதயம் சீனர்களுக்கு வேத ஞானப்பிரகாசம் அளிக்கவேண்டுமென்று அவரை ஏவித்தூண்டிக்கொண்டேயிருந்தது. ஆதலால் தனக்கு வரவிருக்கும் உயிர்சேதத்தையும் பொருட்படுத்தாமல் துணிந்து சீனதேசத்துக்குச் செல்லத் தீர்மானித்து, 1552-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சான்ஷியன் தீவு போய்ச் சேர்ந்தார். இந்த இடம் சீன தேசத்தின் கீழ்க்கரையோரத்தில் கான்டன் நகருக்கு எதிரே இருக்கும் ஓர் சிறு தீவு, அங்கே வந்திருந்த போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் அர்ச்சியசிஷ்டவரை சந்தோஷத் துடன் வரவேற்று, அவர் திவ்விய பலிபூசை செய்ய ஓர் சிற்றாலயமும் கட்டிமுடித்தனர். சிலநாள் அத்தீவில் சிறுவர்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்துவந்தார். அங்கிருந்து சீன தேசத்திற்குப் போக ஏதாவது வர்த்தக கப்பல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு கொடிய ஜுரம் கண்டது. 

மரணம்

மரணம் அடுத்திருக்கிறது என்று தூரதிருஷ்டியால் அறிந்துகொண்ட அர்ச். சவேரியார் தமது நேச ஆண்டவரின் வருகைக்கு தன்னைத் தயார்செய்து கொண்டு ஆவலோடு காத்திருந்தார். “ஒ. மிகவும் பரிசுத்த திரித்துவமே, தாவீதின் குமாரனாகிய சேசுவே, என்மீது இரக்கமாயிரும்." "தாயே உம்மைத் தாயென்று காண்பித் தருளும்" என்னும் மனவல்ய ஜெபங்களே அவரது கடைசி சம்பாஷனையாக இருந்தது. 1552, டிசம்பர் 2-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 2 மணிக்கு தனது கரங்களில் பாடுபட்ட சுரூபத்தை இறுகப் பிடித்து அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்துகொண்டே மெதுவாய்,

"ஆண்டவரே, உம்மை நம்பினேன், ஒருபோதும் கைவிடப் படேன்” என்னும் இனிய ஜெபத்தை உச்சரித்துக்கொண்டே தனது ஆத்துமத்தைத் தன் அதிமிக அன்புக்குரிய ஆண்டவரிடம் கையளித்தார்.

பிரான்ஸ் தேசத்தின் பெயர்பெற்ற பிரசங்கியாகிய பூர்தலு என்பவர் அர்ச். சவேரியாரைப்பற்றி பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்: அப்போஸ்தலர்கள் செய்த புதுமைகளையெல்லாம் அர்ச். சவேரியாரும் செய்தார். அவர்களைப் போலவே அற்புதமாய் பல பாஷை பேசும் வரமும், தீர்க்கதரிசன வரமும், புதுமை செய்யும் வரமும் அவருக்கிருந்தது. பல தேசங்களில் திரிந்து கணக்கற்ற அஞ்ஞானிகளை மனந்திருப்பியதில் அப்போஸ்தலர்களுக்கு சம அப்போஸ்தலராயிருந்தது மாத்திரமல்ல, அவர்களில் பலருக்கு மேலானவருமாயிருந்தார். அவர் கரங்களில் ஞான தீட்சைப் பெற்றவர்கள் 12 லட்சத்திற்கு அதிகமான அஞ்ஞானிகள், சத்திய வேதத்தைக் கேட்டிராத 200-க்கு அதிகமான இராச்சியங்களில் வேதத்தைப் போதித்து ஏக திரித்துவ மெய்யங்கடவுளின் மேலான ஆராதனையை ஸ்தாபித்தார். எண்ணிறந்த அஞ்ஞான விக்கிர கங்களை உடைத்துத் தகர்த்தார். கடலிலும் தரையிலும் அவர் செய்த பிரயாணங்கள் உலக முழுவதையும் மும்முறை சுற்றி வருவதற்கு ஒப்பாகும். அவர் சென்றவிட மெல்லாம் சத்திய திருச்சபை செழித்தோங்கி வளர்ந்தது. அவருக்குமுன் குருக்கள் பாதம் படாத ஜப்பான் தேசத்தில் முதன்முதலில் சத்திய வேதத்தை நாட்டினவர் இந்த அர்ச்சியசிஷ்டவர்தான்.

சவேரியாரே எம் நல்ல தந்தையே!
தாரும் உறுதியை எங்களுக்கு
நாளும் உமது நல்ல மாதிரியை
நாங்களும் கண்டு ஒழுகிடவே

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 18 அர்ச். அருளப்பர், (St. John)

  அர்ச். அருளப்பர், 

அப்போஸ்தலர், சுவிசேஷகர் 

 

அர்ச். அருளப்பர் செபதேயுவின் மகனும், அர்ச்.  பெரிய யாகப்பர் (St. James) அவர்களின் சகோதரரும் ஆவார். ஆண்டவருடைய பொது ஊழியத்தின் முதல் ஆண்டில், நம்முடைய கர்த்தரால் அப்போஸ்தலராக அழைக்கப்பட்டார்.

📜✍🏻+ அர்ச். மார்க் (3, 17): "(மற்றவர்கள் யாரெனில்) செப்தேயுவின் குமாரனாகிய யாகப்பர், யாகப்பருடைய சகோதரனாகிய அருளப்பர்; இவ்விருவருக்கும் இடியின் மக்களென்று அர்த்தமுள்ள போவா னெர்கேஸ் என்று பெயரிட்டார்."

யாகப்பர் மற்றும் அருளப்பர் ஆகியோர் சேசுவால் "போனெர்ஜஸ்" அல்லது "இடியின் மகன்கள்" என்று அழைக்கப்பட்டனர், ஒருவேளை அர்ச். மார்க் 9:38 மற்றும்  இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரிய நகரங்களை தண்டிக்க அர்ச். லூக். 9:54 ல் "அவருடைய சீஷர்களாகிய இயாகப்பரும் அருளப்பரும் இதைக்கண்டு: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால் வானத்தினின்று அக்கினி இறங்கி இவர்களைச் சுட்டெரிக்கும்டி சொல்லுகிறோம் என்றார்கள்.. இல் காட்டப்பட்டுள்ள வைராக்கியம் போன்ற சில குணாதிசயங்களின் காரணமாக இருக்கலாம்.

அருளப்பர் எப்போதும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்ட சீடராக அழைக்கப்படுகிறார், மேலும் பன்னிரண்டு பேரில் ஒருவரே இரட்சகரை அவரது பாடுகளின் நேரத்தில் கைவிடாது தொடர்ந்து சென்றார். நம் ஆண்டவர் அவரைத் தன் தாயின் பாதுகாவலராக ஆக்கியபோது அவர் சிலுவையின் அடியின் மரியாளோடு நின்றார். 

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் 19:26-27 "சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனையும் கண்டபோது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார். பின்னும் சீஷனை நோக்கி: இதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்த சீஷன் அவளைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொண்டார். 

* 27. மெய்யான கிறீஸ்துவர்களெல்லோரும் சேசுநாதரால் சிநேகிக்கப்பட்டு அவருக்குச் சீஷர்களாயிருக்கிறார்கள். ஆகையால் அவர் தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனை நோக்கி, இதோ! உன் தாயென்று சொல்லும்போது, தம்முடைய திரு மாதாவை எல்லாக் கிறீஸ்தவர்களுக்கும் தாயாராக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்.

அருளப்பரின் பிற்கால வாழ்க்கை முக்கியமாக ஜெருசலேமிலும் எபேசஸிலும் கழிந்தது. ஆசியா மைனரில் பல தேவாலயங்களை நிறுவினார். அவர் நான்காவது சுவிசேஷத்தையும், 3 நிருபங்கள் மற்றும் காட்சியாகமம் புத்தகத்தையம் எழுதியுள்ளார். - இவை அனைத்தும் கி.பி 70 இல் ரோமானியர்களால் ஜெருசலேம் அழிக்கப்பட்ட பின்னர் இயற்றப்பட்டது.

அருளப்பர் எப்போதும் கழுகுடன் ஒப்பிடப் படுகிறார். ​​அவரது உயர்ந்த சிந்தனையின் மூலம், அர்ச். அருளப்பர், நாசரேத்தின் இயேசுவின் தெய்வீகத்தின் வேடபாரகர் ஆவார். வியக்க வைக்கும் நினைவாற்றலைக் கொண்ட அவர், கிறிஸ்துவின் பிரசங்கங்களை வாசகருக்கு புரியும் படியாகவும்,  தெளிவாகவும் எழுதினார். இதனாலே பிற்காலத்திலும் கூட மீண்டும் உருவாக்க முடிந்தது. 

அர்ச். அருளப்பர் 95ம் வருடம் ரோமை அரசர் Domitian உத்தரவால் ரோமையில் கைது செய்யப்பட்டார். அவரை கொதிக்கும் எண்ணெயில் தள்ளினர். ஆனால் அவருக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை. மாறாக அவர் முன்னிலும் அதிக ஆரோக்கியமுள்ளவராக வெளியே வந்தார்.


பேரரசர் பின்னர் அர்ச். அருளப்பரை பாத்மோஸ் தீவுக்கு வெளியேற்றினார், ஆனால் ஒரு வருடம் கழித்து விடுவிக்கப்பட்டார். அப்போஸ்தலர்களில் அருளப்பர் மட்டுமே மற்ற அப்போஸ்தலர்களை போல் வேதசாட்சி மரணம் அடையாமல் எபேசுஸ் நகரில் இயற்கையான மற்றும் அமைதியான மரணம் அடைந்தார். Saint Epiphanus கூற்றுப்படி அருளப்பருடைய மரணத்தின் பொது அவருக்கு வயது 96.

கிறிஸ்தவ சித்திரங்களில் (holy picture)(படம்) எப்போதும் ஒரு கழுகு இருக்கும். இது தீர்க்கதரிசி எசேக்கியேல் தீர்க்கதரிசனமாக சொல்லியது. (எசே. 1:10) "அவைகளின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன." 



English ::

December 27

APOSTLE ST. JOHN THE EVANGELIST

John, the son of Zebedee, and the brother of St. James the Great, was called to be an Apostle by our Lord in the first year of His public ministry.

📜✍🏻+ St. Mark (3, 17): "And James the son of Zebedee, and John the brother of James; and he named them Boanerges, which is, The sons of thunder:"

James and John were called by Jesus “Boanerges,” or “sons of thunder,” perhaps because of some character trait such as the zeal exemplified in Mark 9:38 and Luke 9:54, when John and James wanted to call down fire from heaven to punish the Samaritan towns that did not accept Jesus.

John is also called "beloved disciple" and the only one of the Twelve who did not forsake the Saviour in the hour of His Passion. He stood faithfully at the cross when our Lord made him the guardian of His Mother.

John's later life was passed chiefly in Jerusalem and at Ephesus. He founded many churches in Asia Minor. He wrote the fourth Gospel, the 3 Epistles, and the Book of Revelation, - all of which were composed after the destruction of Jerusalem by the Romans in 70 A.D.

Compared with an eagle by his flights of elevated contemplation, Saint John is the supreme Doctor of the Divinity of Jesus of Nazareth. Endowed with an astounding memory, he was able even in his later years, to reproduce the discourses of Christ in such a way as to make the reader experience their power and impact on their audiences as if present to hear them.

John was arrested and brought to Rome in 95 AD and he was by order of Emperor Domitian cast into a cauldron of boiling oil but came forth unhurt and more healthy.

The emperor then banished St. John  to the island of Pathmos, but was freed a year later. He is the only Apostle who died a natural death, surviving all his fellow apostles.

Saint John died in peace at Ephesus in the third year of the reign of emperor Trajan, that is, the hundredth of the Christian era, or the sixty-sixth from the crucifixion of our Lord, Saint John then being about ninety-four years of age, according to Saint Epiphanus.

     🍁🍁🍁🍁🍁🍁🍁


John the Evangelist is usually depicted as a young man. In Christian art, John is symbolically represented by an eagle, one of the creatures envisioned by Ezekiel (1:10)



அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17. - அர்ச். லூசியா (அர்ச். பிரகாசியம்மாள்)

 St.Lucy's Feast - Dec 13 - celebrated as festival of lights

திருநாள்: டிசம்பர் 13


Born .      கி.பி 283

இடம்         Syracuse, Roman Empire

தந்தை     பெயர் தெரியவில்லை 

தாய்          யுற்றிக்கியா

Died      304 Syracuse, Western Roman Empire


பிரகாசியம்மாள் என்று அழைக்கப்படும் வேதசாட்சியான லூசியா சிசிலி என்னும் நாட்டில் சிராக்கூஸ் என்ற நகரில் கி பி 283 இல் பிறந்தார்.இவரது பெற்றோர் கிரேக்க நாட்டு உயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . தாயின் பெயர் யுற்றிக்கியா . குழைந்தைப்பருவ முதலே கத்தோலிக்க கிறிஸ்தவராக  வளர்க்கப்பட்டு வந்தார் . இவரது சிறு வயதிலேயே இவரது தந்தை மரித்துப் போகவே , தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் .உரிய காலம் வந்த போது இவரது தாயார் இவருக்கு திருமணம் செய்விக்க எண்ணினார் . லூசியாவோ சிறு வயது முதலே தன் கன்னிமையை ஆண்டவருக்கு இரகசியமாக அர்பணித்திருந்தார் . எனவே திருமணத்திற்கு மறுத்து வந்தார் 

இந்நிலையில் இவரது தாயார் கடுமையான இரத்தப்போக்கு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் . அன்னையின் துயரைக் கண்ட லூசியா , "அம்மா . நாம் அர்ச். ஆகத்தம்மாவின் (St .Agatha ) கல்லறைக்குத் திருப்பயணம் சென்று வரலாமா ? என்று கேட்டார். அவரது தாயும் அதற்கு இசைந்து , இருவரும்  அர்ச். ஆகத்தமாவின் கல்லறை இருக்கும் நகரான கட்டோனியாவிற்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.அங்கு சென்று மிக உருக்கமாக மன்றாடினார். அன்று இரவு அர்ச். ஆகத்தம்மாவின் கோவிலில் களைப்போடு தூங்கிக் கொண்டிருந்த லூசியாவின் கனவில் அர்ச். ஆகத்தம்மாள் தோன்றி "உன் தாய்க்குத் தேவையான உடல் நலத்தைப் பெற்றுக் கொடுக்க , உன்னுடைய மன்றாட்டே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் , நீ என்னிடம் ஏன் கேட்கின்றாய்? உன் கற்பென்னும் லீலி மலரைக் கொண்டு ஆண்டவருக்கு ஏற்ற இல்லிடம் தரித்துள்ளாய். உனது விசுவாசமே உனது தாய் குணமடையப் போதுமானது "என்றார் . மேலும் "உன் தாயை சர்வேசுரன் குணமாக்குவார் . கட்டோனியாவில் எனக்கு உள்ளது போல் சிராக்கூசில் உனக்கு ஒரு இடம் கிடைக்கும் "என்றார்.

லூசியா இந்தக் கனவின் மூலம் திடன் பெற்றார் .அதன் படியே அவரது தாயார் நலமானார் .தன் தாய் பெற்ற அற்புத சுகத்தைக் கண்ட லூசியா , இனி திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றும், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார் . தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்ததை தன் தாய்க்குத் தெரிவித்தார் . தாயாரோ , ஒரு வாலிப பிரபுவுக்கு இவரை மணமுடிக்க வாக்குறுதி கொடுத்திருந்தார் .புதுமையாகச் சுகம் பெற்ற தாய் தன் நன்றிக்கடனைக் காட்ட மகளுக்குச் சம்மதம் தெரிவித்தார் . அதே வேளை "எனது இறப்பிற்குப் பின் நீ உன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள்" என்று கூறினார் . லூசியா அதில் திருப்தி அடையவில்லை . உடனடியாக நிறைவேற்ற எண்ணி , சிரக்கூசிர்க்கு வந்து தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார் .

 இதை அறிந்த வாலிப பிரபு கடுங்கோபம் கொண்டான் . அவன் பல விதங்களில் எதிர்த்த போதும் லூசியா பின் வாங்கவில்லை .இறுதி முயற்சியாய்' "இவள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள்" என்று உயர் அதிகாரியான பிரிபெக்ட் பஸ்காசியூசிடம் தெரிவிப்பேன் என்றான் . காரணம் அப்போது கொடுங்கோலாட்சி நடத்தி வந்த தியோக்கிலேசியான் பேரரசன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாய்க் கொன்று குவித்தான் . எங்கும் இரத்த ஆறு ஓடியது . "உன்னை அடித்து நொறுக்கும்போது , உனக்கு பேசுவதற்குக் கூட நா எழாது "என்றான் . "ஆண்டவருக்கு சொந்தமானவள் நான் . சரியான சொற்களை சரியான நேரத்தில் சொல்ல இஸ்பிரித்து சாந்துவானவர்  துணை நிற்பார் .ஏனெனில் பரிசுத்த வாழ்வு வாழ்வோர் யாவரும் இஸ்பிரித்து சாந்துவானவரின் ஆலயங்கள் " என்றார் . "விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள் . அப்போது இஸ்பிரித்து சாந்துவானவர் பறந்து விடுவார் "என்றான் . "எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொள்" என்றார் , லூசியா . 

இதையெல்லாம் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பஸ்காசியூஸ் , லூசியாவை விலை மகளிர் இருக்குமிடத்தில் தள்ள சொன்னான் .. அவனது உத்தரவுக்கு இணங்கி அவரைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்களால் அவரை அசைக்க முடியவில்லை . கற்பாறை போல் அவர் அசையாது நின்றார் . ஆத்திரமடைந்த அரசன் , அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றச் சொன்னான் . அது அவரை எதுவும் செய்ய முடியவில்லை .. அவரை அடித்துத் துன்புறுத்தி அவர் கண்களைப் பிடுங்கச் சொன்னான் .காவலர்கள் அவர் கண்களைப் பிடுங்கவே , ஆண்டவர் அற்புதமாய் அவரது கண்களைச் சரி செய்து மீண்டும் பார்வை தந்தார் . [எனவே தான் இன்று வரை கண் நோய்களில் இருந்து விடுதலை பெற அர்ச். லூசியாவிடம் மன்றாடுகின்றனர் . லூசியா என்னும் சொல்லுக்கு ஒளி / வெளிச்சம் என்று பொருள் . எனவே தான் அர்ச். லூசியாவை பிரகாசியம்மாள் என்றும் அழைக்கின்றனர்].இறுதியில் மன்னன் அவரை உயிருடன் தீயில் இடக் கட்டளை இட்டான் . அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடாவிட்டால் , கத்தியால் குத்திக் கொல்ல ஆணை பிறப்பித்தான் . அவர் பிழைத்தால் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவக் கூடும் என்று அஞ்சினான் . லூசியாவைச் சுற்றி தீ வளர்த்த போதும் , அவருக்கு ஏதும் நேரிடவில்லை . பின் இறுதியாக , கத்தியால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்தார் . கி பி 1204 இல் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது . 

புதன், 20 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 18 - அர்ச். மோனிக்கம்மாள் (St. Monica)

 அர்ச். மோனிக்கம்மாள்

"ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன"




பிரசித்திப்பெற்ற வேதபாரகரும் திருச்சபைத் தூண்களில் ஒருவருமாகிய அர்ச். அகுஸ்தீன் என்பவரின் தாயாகிய மோனிக்கம்மாள், ஆப்பிரிக்காவின் வடபாகத்தில் பக்தியுள்ள குடும்பத்தில் 332-ம் ஆண்டில் பிறந்தவள். மோனிக்காவின் தாய் தந்தையர் தங்கள் பிரிய குமாரத்தியைப் புண்ணியவதியான ஓர் வேலைக்காரி வசம் சிறு வயதிலேயே ஒப்படைத்திருந்தனர். இந்த வேலைக்காரி புகட்டிய நற்புத்திமதி, மோனிக்கம்மாள் தெய்வபயத்திலும் தல்லொழுக்கத்திலும் நாளடைவில் அபிவிருத்தியடைய தூண்டுகோலாயிருந்தது. திருமண பருவம் வந்தவுடன், மோனிக்கம்மாள் பத்ரீசியுஸ் என்னும் பிற மத வாலிபனை மனம்புரிய நேர்ந்தது. இவள் தனது அடக்கவொடுக்கம், கீழ்ப்படிதல், அன்பு, தயை, தாட்சண்யம் முதலிய அருங்குணங்களால் தன் கணவனின் நேசபாசத்தையும் மதிப்பையும் பெற்றுக்கொண்டாள். கணவன் அன்புடையவனாயிருந்த போதிலும் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். அவன் கோபமாயிருக்கும்போது மோனிக்கம்மாள் எதிர்த்துப் பேசாமல் பொறுமையாயிருப்பாள். கோபம் தணிந்தவுடன் மிக்க அன்புடன் அவனுக்கு தற்புத்தி புகட்டி அவனது சீர்கேடான நடத்தையைச் சீர்திருத்த முயற்சிப்பாள். கடைசியாக இப்பதி விரதையின் ஜெகுபத்தினால் பத்ரீசியுள் மனத்திரும்பி பாக்கியமான மரணம் அடைந்தான். மோனிக்கம்மாளின் அயல் வீட்டுப் பெண்கள் தங்கள் கணவரோடு சண்டையிட்டு அடி உதை பட்டு முகத்தில் காயங்களோடு வந்து அவளிடம் முறையிடுவர். "உங்கள் நாவை அடக்கினால் இத்தகைய கேடு உங்களுக்கு வராது" என்பதே மோனிக்கம்மாள் இப்பெண்களுக்கு அடிக்கடி கூறும் புத்திமதி. இந்தப் புத்திமதியை நன்குணர்ந்து இதன்படி நடந்து கொண்டவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி சமாதானம் நிலைபெறும். மற்றவர்கள் குடும்பங்களோ ஓயாத போர்க்களமாகவே இருக்கும். மோனிக்கம்மாளுக்கு ஏழை

களின் மீது அணைகடந்த இரக்கமுண்டு. தனது கையினால் அவர்களுக்கு உணவு, உடை அளிப்பது அவளுக்கு ஆனந்தம். அனுதினமும் திவ்விய பலிபூசை காணத் தவறமாட்டாள். காலை மாலை தேவாலயத்தில் நடக்கும் பொது ஜெபத்திற்கு போவது இவ்வுத்தமியின் சிறந்த வழக்கம்.

மோனிக்கம்மாளுக்கு மோட்சவாசிகள்மீது உருக்கமுள்ள பக்தி பற்றுதலுண்டு, வேதசாட்சிகளின் கல்லறைக்குச் சென்று அவர்களுடைய உதவியை அடிக்கடி இரந்து மன்றாடுவாள். வேத அனுசாரத்தைச் சார்ந்த எதையும் சிறிதாக எண்ணி அலட்சியம் செய்யமாட்டாள். சர்வேசுரனுக்கடுத்த காரியங்களில் சகலமும் பெரிதே என்று மதித்து நடந்துவந்தாள். தேவ சிநேகத்தை முன்னிட்டுச் செய்யும் அற்ப நற்கிரிகைகூட தேவ சமுகத்தில் மிக்கப் பேறுபெற்ற மகத்தான புண்ணிய முயற்சியாக மாறிவிடுமென்பது அவளின் திடமான நம்பிக்கை.

மோனிக்கம்மாள் ஜெபத்திலும் தபத்திலும் வெகுநேரம் செலவழித்த போதிலும் தனது பிள்ளைகளைத் தெய்வபக்தியில் வளர்ப்பது கிறீஸ்தவத் தாயின் கடமை என எண்ணியிருந்தான். இவளுக்கு அகுஸ்தீன், நவீஜியுஸ் என்னும் இரண்டு புத்திரர் இருந்தனர். மூத்த குமாரனாகிய அகுஸ்தீன் கல்வி கற்க கார்த் தேஜ் நகர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டிருந்தான். இவ்வாலிபன் பக்தியுள்ள தாயின் கண்காணிப்பிலிருந்து வெகு தூரம் சென்ற பின் மனிக்கேயர் என்னும் பதிதர் வலையில் சிக்கித் தனது ஞானக் கடமைகளைக் கைநெகிழ்ந்து எதேச்சையாய்த் திரிந்து தன் அன்புள்ள தாயின் இருதயத்திற்கு அளவற்றத் துயரத்தை வருவித்தான். மோனிக்கம்மாள் தனது மகனுக்கு எவ்வளவுதான் நற்புத்தி கொல்லியும் பயனற்றுப்போனதை கண்டு, அவனுக்காக அழுது கண்ணீர் சிந்தி இடைவிடாது தேவ இரக்கத்தை மன்றாடுவாள்.

அகுஸ்தீன் உலக சாஸ்திரங்களில் மிக்க தேர்ச்சிபெற்று பட்டங்களைப் பெற்ற பின்னர், தாய்க்குத் தெரியாமல் கப்பல் ஏறி அன்னியதேசம் சென்று தனது இஷ்டப்படி திரியலாம் என்றெண்ணி இத்தாலிக்குப் பயணமானான். மகன் தப்பித்து ஓடிவிட்டான் என்று அறித்த அன்புள்ள அன்னை அவனைத் தேடிப்பிடிக்கும்படி மறு கப்பலில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றாள். மிலான் பட்டணத்தில் தாயும் மகனும் ஒருவரை யொருவர் சந்தித்தனர். வேதபாரகராகிய அர்ச். அம்புரோஸ் அச்சமயம் மிலான் நகர் ஆயராயிருந்தார். இந்தப் பரிசுத்த ஆயரின் புத்திமதிகளையும், போதனைகளையும் கேட்டு அகுஸ்தீன தன் பதித அபத்தங்களை விலக்கி, கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வக் குமாரன் ஆனார். இந்த ஊதாரிப் பிள்ளை மனந்திரும்பி தந்தை வீடு சேர்ந்ததை அறிந்த பக்தியுள்ள தாய் ஆண்டவருக்குத் தாழ்மையுடன் நன்றி சமர்ப்பித்து, "ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன" என்று மன்றாடினான். 

அகுஸ்தீன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்பியதுமன்றி. குருப்பட்டம் பெற்று. தன் கல்வி, சாதுரியம், திறமை, சத்துவம் சகலத்தையும் தேவ ஊழியத்தில் செலவிடத் தீர்மானித்திருப்பதாக தனது அன்பு தாய்க்குத் தெரிவித்தார். இதைக் கேட்ட உத்தம தாய் ஆனந்தக் கண்ணீர் சொரித்து, தனது மகனை தோக்கி: “அப்பா, மகனே. என் வேலை முடித்துவிட்டது. நீ கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து சர்வேசுரனுடையப் பிள்ளையாயிருப்பதைப் பார்க்கும் பொருட்டே சிறிதுகாலம் இவ்வுலகில் வாழ ஆசைப்பட்டேன். நல்ல ஆண்டவர் நான் கேட்டதற்கு மேல் எனக்கு அளித்தருள கிருபை செய்திருக்கிறார். நீ திருச்சபையில் சேர்ந்தது மாத்திரம் போதாதென்றாற்போல் உன்னைத் தமது திவ்விய ஊழியத்திற்கும் தெரிந்துகொண்டார். எனது பாக்கியமே பாக்கியம்" என்றாள். மோனிக்கம்மாளின் அந்தரங்க ஆவல் முற்றிலும் நிறைவேறியது. இனி மரணத்திற்கு ஆயத்தம் செய்தாள். அவளுடைய குமாரர் இருவரும் தங்கள் சொந்த தேசமாகிய ஆப்பிரிக்காவுக்குத் தாயை அழைத்துச் செல்லத் தீர்மானித்தனர். ஆனால் இத்தாலியின் துறைமுகப்பட்டனமாகிய ஓஸ்தியாவில் மோனிக்கம்மாளுக்கு கடின ஜுரம் கண்டது. பிள்ளைகள் தன்னைச் சொந்த தேசத்திற்கு அழைத்துச்செல்ல ஆவலாயிருப்பதை அறிந்து மோனிக்கம்மாள் சொல்வாள்: "என் பிரிய மக்களே. தான் அன்னிய நேசத்தில் இறந்து என் சரீரம் நமது நாட்டிற்குத் தூரமான நாட்டில் புதைக்கப்பட்டாலென்ன? ஆண்டவருக்குத் தூரம், சமீபம் உண்டோ? உலக முடிவில் மாமிச உத்தான நாளில் என் சரீரம் இருக்குமிடம் ஆண்ட வருக்குக் தெரியாதோ? மற்றவர்களோடு என்னையும் எழுப்பி எனக்கு மோட்ச பாக்கியம் அளித்தருளுவாரன்றோ? உங்கள் தாயை எவ்விடத்திலென்கிலும் அடக்கம் பண்ணுங்கள். என் சரீரத்தைப்பற்றி எனக்கு யாதொரு கவலையுமில்லை. ஆனால் ஒரேயொரு மன்றாட்டு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் மரித்தபின் என்னை மறவாமல் என் ஆன்ம இளைப்பாற்றிற்காக திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுங்கள். எனக்காக அடிக்கடி வேண்டிக்கொள்ளுங்கள்." 

இவ்வாறு மோனிக்கம்மாள் தனது அருமைப் பிள்ளைகளுக்குக் கடைசி அறிவுரை கூறிய ஐந்தாம் நாள் இக்கண்ணீர் கணவாயை விட்டு கருணா கரத்து கடவுளாகிய தனது கர்த்தர் பதம் சென்றாள். அவள் மரித்தது

387-ம் வருடம். தாயை அடக்கம் பண்ணியபின் இரு சகோதரரும் தங்கள் சொந்த தேசம் திரும்பினர். மூத்தவர் தனது தீர்மானப்படி குகுப்பட்டம் பெற்றார். அவருடைய பரிசுத்த தனத்தையும் அபாரக் கல்வியறிவையும் அறிந்த பரிசுத்த பாப்பரசர் அவரை ஆயராக நியமித்தார். அருஸ்தின் தேவ ஊழியத்தில் அயராது உழைத்து அதேக அரிய நூல்களை எழுதித் திருச்சபையின் புகழ்பெற்ற வேதபாரகராக இன்றும் விளங்குகிறார்


அர்ச். மோனிக்காம்மாளுக்கு புனிதர் பட்டம் 390ம் ஆண்டு Pope . Siricius  அவர்களால் கொடுக்கப்பட்டது. 

அவளுடைய திருநாள் மே மாதம் 4ம் தேதி.


Source: Sancta Maria 2018 - April - June