Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

St. Joseph லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
St. Joseph லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 மே, 2024

சேசுவின் பாலத்துவத்தின் அர்ச்சியசிஷ்டவர் அர்ச்.சூசையப்பர்

 சேசுவின் பாலத்துவத்தின் அர்ச்சியசிஷ்டவர் அர்ச்.சூசையப்பர்.

 பரலோகப் பிதாவினால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டவரும். நமது மனுஷீகத்தைப் பூண்டு கொண்டவருமான தேவசுதனை நம் கண்முன் ரூபிகரித்து ஆராதிப்போம். இவர் மனுஷாவதாரம் பண்ணினாரே, இப்பரம இரகசியத்துக்கும் அர்ச். சூசையப்பருக்கும் உள்ள சம்மந்தத்தைக் கண்டுபிடிக்க பிரயாசைப் படுவோம். இதற்கு இரண்டு காரியங்களை நாம் கண்டுணர வேண்டும். முதலாவது இப்பரம இரகசியம் நிறைவேறுவதற்கு அவர் செய்த உதவி என்ன? இரண்டாவது: அவ்வுதவியை அவர் எப்படிச் செய்தார்? 



 மனிதாவதாரம் நிறைவேற அர்ச். சூசையப்பர் செய்த உதவி : 

 மூன்று விதமாய் உதவினார். முதலாவது மனிதாரத்தின் பரம இரகசியத்தில் சூசையப்பருக்கு ஓர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சேசுவின் வளர்ப்புத் தந்தையாக மாத்திரம் இருந்தபடியால் அதில் அவர் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. மாமரி மாத்திரமே அதில் நேரடியாகச் சம்பந்தப் பட்டவர்கள். ஏனெனில் தேவதூதனிடம் அவர்கள் தாம் கடவுளின் தாயாவதற்கு சம்மதித்தபடியால், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவர் மாமரியின் உதரத்தைக் கொண்டு சேசுவின் பரிசுத்த மனுஷீகத்தை உருவாக்கினார். 

 இந்த பரம இரகசியம் நிறைவேற ஓர் நிபந்தனை நிறைவேற வேண்டியிருந்தது. அதற்கு அர்ச். சூசையப்பரின் உதவி தேவையா யிருந்தது. அதெப்படியெனில், இரட்சகரின் உற்பவமும் பிறப்பும் கற்புள்ளதாகவும், மரியாயின் கன்னிமை பழுதுபடாததாகவும் காப்பாற்றப் படவும் வேண்டியிருந்தது. இதற்காகத்தான் சூசையப்பர் மரியாயின் கள்ளிமையின் காவலனானார். இந்த தமது பதவியை அவர் மிகுந்த உத்தம விதமாய் நிறைவேற்றினார். விவாகத்துக்கு முன்னரும், பின்பும் மாமரியின் கன்னிமையை நிலைநாட்டபட்ட அந்தஸ்தாக மதித்து அதனைக் காக்கும் காவலனாகத் துலங்கினார். 

 பரிசுத்த மரியம்மாளை மணம் புரியும் போது, மனுஷாவதாரத்தின் பரம இரகசியம் நிறைவேறுவதற்கு இசைவான மனமும் குணமும் உடையவராய் இருந்தார். உண்மையாகவே அவருடைய கற்புள்ள விவாகம், இரட்சகர் இவ்வுலகிற்கு வருவதற்கு இறுதி ஆயத்தமாக இருந்தது. அர்ச் சூசையப்பரும் அதற்கு இசைவாகவே நடந்து கொண்டார். அவரது விரதத்துவம் மனுஷாவதாரத்துக்குத் தேவையான நிபந்தனையாக நித்திய காலமாய் சர்வேசுரனால் திட்டம் செய்யப்பட்டிருந்தது. அர்ச். சூசையப்பரின் கன்னிமை விவாகம் மாமரியாயின் கன்னிமைக்கும், அவர்களிடமிருந்து பிறக்கவேண்டிய திவ்விய சேசுவின் பரிசுத்தத்துக்கும் அவசியமான அனுசரனையாகக் குறிக்கப்பட்டிருந்தது. அர்ச்.அகுஸ்தீனார் கூறுவது போல், சூசையப்பர் தமது கன்னிமையினாலேயே சேசுவுக்குத் தந்தையானார். 

 இரண்டாவது : இரட்சகரின் மனுஷீகத்தை பராமரிப்பதற்கடுத்த பதவி அர்ச்.சூசையப்பருக்கு தரப்பட்டிருந்தது. இரட்சகரைக் காக்கவும், வளர்க்கவும், போஷிக்கவும் வேண்டிய கடமை அது திவ்ய பாலனுக்கு அளவற்ற ஞானமும், வல்லபமும் திரவியங்களுடைய பிதா பரலோத்தில் இருந்தார். அப்பிதா தமது ஞானத்தையும், தமது திருக்குமாரன் மட்டில் தனக்குள்ள சிநேகத்தையும் காண்பிப்பதற்காக இவ்வுலகில் அவரைப் போஷித்து ஆதரிக்க தமக்குப் பதிலாய் தந்தையாக சூசையப்பரை நியமித்தார். அர்ச் சூசையப்பரும் தமது கைவேலையால் தம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட மானிட தேவனை பராமரித்து காப்பற்றினார். ஏரோதனிடமிருந்து பாலனின் உயிரைக் காப்பாற்றி பாதுகாத்தார். சேசுமீது அயராத அன்பு நேசம் கொண்டு நாசரேத்தூருக்கு திரும்ப அழைத்துச் சென்று கரிசனையோடும் மிகுந்த பிரயாசையோடும் வளர்த்து காத்தார். இவ்விதமாய் வளர்க்கப் பட்டதால் நமது இரட்சகர் அர்ச். சூசையப்பருக்குக் கடனாளியாகி விட்டார் என்றே கூறலாம்.

மூன்றாவது: சேசுவின் மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தின் மூலமாய் மனுமக்களுக்கு சர்வேசுரன் பொழிந்தருளும் உன்னத வரங்கள் விஷயமாகவும் அர்ச். சூசையப்பர் வகிக்கும் பதவி : என்னவெனில், சேசுவின் ஞான சரீரமாகிய திருச்சபையின் மட்டில் உறுப்பினர்களாகிய நமது பேரில் அர்ச், சூசையப்பருக்கு விசேஷ கவலை உண்டு. சேசுவை மிகுந்த கவனத்தோடும், கவலையோடும் அன்போடும் பாதுகத்து வளர்த்ததில் உள்ளார்ந்த காரணம் உள்ளது. அது, நமது இரட்சண்யம் ஒன்றுதான். நமது இரட்சண்யத்துக்குத் தேவையான வரங்களுக்கெல்லாம் ஊற்றாக இருப்பது சேசுவின் மனிதாவதாரம் தான். இந்த சத்தியம் தேவ தூதருடைய வார்த்தை களில் நன்கு விளங்குகிறது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர், ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார்" (மத் 1:21). ஆகையால், இரட்சகர் நிமித்தம் சூசையப்பருக்கு நியமிக்கப்பட்டி ருந்த ஸ்தானாதிபதி பதவி முடியவில்லை. இன்னமும் நடந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் சேசுவின் ஞான சரீரமாகிய (திருச்சபையின் மக்கள்) நமக்கு இரட்சண்யத்துக்கு அவசியமான வரங்களெல்லாம் அவர்தான் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

எனவே, நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் பாலத்துவத்தை தியானித்து ஒவ்வொரு நாளும் மகிழ்ந்து கொண்டாடும் நாம் அதனோடு இணைந்து நமது இரட்சண்யத்துக்கு உதவிய, இன்றும் உதவிக் கொண்டிருக்கும் நமது நேச தந்தை அர்ச், சூசையப்பரை நன்றியோடு சங்கித்து நம்மை அவரது அடைக்கலத்தில் வைப்போமாக!

சனி, 12 பிப்ரவரி, 2022

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர்

 பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பருடைய மகிமைகள்


சங்.பினே சுவாமி


“சேசுநாதர்சுவாமியின் தந்தை” என்ற உன்னதமான பட்டமே, அர்ச். சூசையப்பருடைய பரிசுத்ததனத்தினுடையவும், தேவவரப்பிரசாதங் களினுடையவும் முதல்அளவுகோலாக திகழ்கின்றது. மனிதவதாரம் எடுத்த தேவ வார்த்தையானவருடைய தேவ ஆளுக்கு, ஊழியம் செய்யும் அலுவலைப் பெற்ற மனிதர், மாபெரும் பாக்கியம் பெற்றவர். அவர், அவ்வுன்னதமான அலுவலைத் தகுதியுடன் பெற்று, மாபெரும் கீர்த்தியுடன் விளங்குவார் என்று, புகழ்பெற்ற வேதஇயல் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். தேவமாதாவுக்கு அடுத்தபடியாக, அர்ச். சூசையப்பரைத் தவிர வேறு எந்த மனிதனும் இவ்வளவு நெருக்கமாக, நமது ஆண்டவரின் அருகில், அவருக்கு ஊழியம் செய்யும்படியாக, அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், அர்ச். சூசையப்பர், நித்திய பிதாவினுடைய தேவ வரப்பிரசாதங்களில் அடையப்பெற்ற பெரும்பான்மையான பங்கை, வேறு எவரும், அடைந்து கொள்ளமுடியவில்லை. நம் திவ்ய இரட்சகருடைய தேவத்துவத்துடன், தேவ மனித ஐக்கியத்தின் மூலம், ஒன்றிணைந்த ஆண்டவருடைய பரிசுத்தமனிதத்துவம், அளவில்லாத தேவ வரப்பிரசாதங்களைக் கொண்ட ஒரு முழு உலகத்தையேப் பெற்றுக்கொண்டது.

ஆண்டவரைத் தமது திருக்கன்னிவுதரத்தில் ஒன்பது மாதமளவாக சுமந்தவர்களும், அவரை ஆயிரம் தடவையாவது, தமது கரங்களில் ஏந்தினவர்களுமான, அவருடைய மிகவும் பரிசுத்த தாயாரான, தேவமாதா, நம் நேச ஆண்டவருக்கு மிக நெருங்கிய விதத்தில் ஊழியம் செய்யத் தகுதி பெற்றிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு, ஆண்டவருடைய ஆராதனைக்குரிய ஆளுமைக்குப் பாதுகாவலரும், வளர்ப்புத் தந்தையுமான அர்ச். சூசையப்பர், நம் திவ்ய இரட்சகருக்கு நெருங்கிய விதமாக ஊழியம் செய்யும்படி, அவரிடம் வருகின்றார். மாமிசமான தேவ வார்த்தையானவருக்கு,இவ்வளவு நெருங்கிய முறையில்,ஊழியம் செய்வதற்கு,வேறு எந்த அர்ச்சிஷ்டவரும் அழைக்கப்படவில்லை.இந்த அலுவலின் உன்னதமான மாண்பிற்கு ஏற்றாற்போல், அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை, வேறு யாரும் பெற்றுக்கொள்ளவில்லை. அப்போஸ்தலர்களுடைய அலுவலே, திருச்சபையில் அதிமிக உயர்வானது என்று அர்ச். அன்செல்ம் குறிப்பிடுகின்றார். ஆனால், அர்ச். சுவாரெஸூடன் சேர்ந்து, “அர்ச். சூசையப்பருடைய அலுவல், அதை விட அதிக மாட்சிமையும் உத்தமமுமானது. தேவமாதாவினுடையவும் அர்ச். சூசையப்பருடையவும் அலுவல், சர்வேசுரனுடைய திருச்சபையின் சகல அர்ச்சிஷ்டவர்களுடைய அந்தஸ்தையும் விட பல மடங்கு உயரியநிலைமையைப் பெற்றது” என்று நாமும் கூறலாம்.

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர்

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச்.  சூசையப்பருடைய தேவவரப்பிரசாதங்களின் மேன்மை


சங்.பினே சுவாமியார்


கற்றறிந்தவனிடத்தில் வாசிக்கும்படி புத்தகத்தைக் கொடுத்தால், அவன் அதை வாசிக்க முடியாது என்று சொல்லும் காலம் வரும் என்று, இசையாஸ் திர்க்கதரிசி கூறுகின்றார். “புத்தகத்தை எழுத்து வாசனைஅறிந்தவனிடத்தில் கொடுத்து, இதை வாசியென்றால், அஃது முத்திரையிடப்பட்டிருப்பதால், என்னால்முடியாது என்பான்” (இசை.29:11). உன்னதமான தேவ இரகசியங்களடங்கிய இந்த முத்திரையிடப்பட்ட புத்தகத்தின் அர்த்தம் எதுவாக இருந்தாலும், அது, அர்ச். சூசையப்பரின் மகிமையான தோற்றத்தை நம்கண்முன் வைக்கின்றது! பிதாவாகிய சர்வேசுரன், புத்தகத்தில் எழுதுவதுபோல், அர்ச். சூசையப்பருடைய மாசற்ற இருதயத்தில், ஆண்டவருடைய திருமனிதவதாரத்தினுடையவும், மனுவுருவான தேவவார்த்தையானவருடைய மறைந்த ஜிவியத்தினுடையவும், தேவஇரகசியங்களை, முழுவதுமாக எழுதி வைத்தார்.

சர்வேசுரனால், இவ்வாறு அர்ச். சூசையப்பரின் இருதயத்தில் ஞானபுத்தகமாக எழுதப்பட்ட தேவ இரகசியங்களுடைய பிரபந்த காண்டங்கள் எல்லாம் எவ்வளவுக்கு நன்றாக முத்திரையிடப்பட்டிருந்தன என்றால், அனேக நூற்றாண்டுகள் வரைக்கும், அந்த ஞானபுத்தகம் கொண்டிருந்த தேவ வரப்பிரசாதங்களுடையவும் உன்னதமான அதிசயங்களுடையவும் மாபெரும் பரந்த உலகத்தைப் பற்றி, அதிமிக ஞானமுடைய திருச்சபையின் வேதசாஸ்திரிகளால் கூட, ஒன்றும் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. நமதாண்டவளின் பரிசுத்த பத்தாவான அர்ச். சூசையப்பருடைய இருதயத்தில் இருந்த ஞானபுத்தகத்தின் சில தேவசலுகைகளைப் பற்றி, முதன் முதலாக வாசித்த அர்ச்சிஷ்டவர்களில் ஒருவர் தான், சேசுவின் அர்ச்.தெரசம்மாள்.

இதனால், இம்மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரிடம் கொண்டிருக்க வேண்டிய உத்தமமான பக்தியை சகல விசுவாசிகளிடமும் பரப்புவதற்கான ஊக்கமுள்ள ஆவல், அர்ச். அவிலா தெரசம்மாளுடைய இருதயத்தில் ஏற்பட்டது. பக்தி சுவாலகருடைய தேவசிநேகத்தைக் கொண்டிருந்த அர்ச்சிஷ்டவரும் கார்மல் சபையை சீர்திருத்தியவருமான அர்ச்.அவிலா தெரசம்மாளுடைய திவிரமான முயற்சியாலும், உழைப்பாலும், அர்ச். சூசையப்பர் மிதான பக்தி, திருச்சபையில் ஓரளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அதுவரைக்கும், விசேஷ தேவ சலுகை பெற்றிருந்த சில அர்ச்சிஷ்டவர்கள் மட்டுமே அர்ச். சூசையப்பரை மகிமை செய்து வந்தனர்.

அர்ச். சூசையப்பர் தாமே, அவருடைய புண்ணியங்களடங்கிய அந்த ஞானபுத்தகத்தை முத்திரையிட்டிருந்தார். அவர் எவ்வளவுக்கு அடக்க ஒடுக்கமும் தாழ்ச்சியும் நிறைந்தவராக இருந்தாரென்றால், அவருடைய ஆத்துமத்தில் இருந்த ஞானபொக்கிஷங்களையும், அவருடைய செயல்களின் நேர்த்தியானதும் ஆச்சரியமிக்கதுமான உத்தமமான பூரணத்துவத்தையும், மனிதருடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டார்.சாதாரண மனிதராக ஜிவிக்கும் தோற்றத்தையே சகலருக்கும் காண்பித்தார். அவர் வெகு குறைவாகவே பேசினார். நான்கு சுவிசேஷங்களிலும், வேதாகமம் முழுவதிலும், அவர், ஒரு வார்த்தையாவது, தம்முடைய திவ்ய குமாரனிடமோ, அல்லது தேவமாதாவிடமோ, அல்லது அர்ச்.கபிரியேல் சம்மனசு விடமோ அல்லது உலகிலுள்ள வேறு எந்த மனிதனிடமோ, கூறுவதாக நாம் காணவில்லை. சர்வேசுரனுடைய மகா உன்னதமான தெய்வீக பிரசன்னத்தின் மகத்துவமிக்க மகிமைகளை மனிதருடைய பார்வையிலிருந்து மறைக்கும்படியாக திரைச்சிலையால் மூடப்பட்டிருக்கும் ஜெருசலேம் தேவாலயத்தின் பரிசுத்தத்தின் பரிசுத்த இடமான(“Holy  of  Holies”) தேவ சந்நிதானத்தைப் போல், மனிதர் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பரலோக மகிமைகளையுடைய பிதாப்பிதாவாக அர்ச். சூசையப்பர் திகழ்கின்றார். இந்தப் புத்தகத்தில், தெய்விகமான பரலோகக் காரியங்கள் முழுவதும் எழுதப்பட்டிருக்கின்றன. அர்ச். அருளப்பர் காட்சியாகமத்தின் 5ம் அதிகாரத்தில் குறிப்பிடுவதைப் போன்றதொரு புத்தகம் அர்ச். சூசையப்பருக்கு அளிக்கப்பட்டது. அவரால் அதைப் படிக்கக் கூடாமலிருந்ததால், அவர் அழுதார். அதனால், செம்மறியானவரும் சம்மனசுகளும் அவர் மேல் இரக்கம் கொண்டனர். உடனே செம்மறியானவர், அந்த பரம இரகசிய புத்தகத்தைத் திறந்து படித்தார். அதிலிருந்த தேவ இரகசியங்கள் அனைத்தையும் அர்ச். சூசையப்பருக்கு வெளிப்படுத்தினார். தம்முடைய இருதயத்தில் மறைவாகப் புதைந்து கிடக்கும் தேவ இரகசியங்கள் அனைத்தையும், நம்மேல் கொண்ட இரக்கத்தினிமித்தம், அர்ச். சூசையப்பரே நமக்கு வெளிப்படுத்தும்படியாக, நாம் எப்பொழுது அவர் மேல் போதிய அளவு பக்திபற்றுதல் கொள்ளப் போகிறோம், என்பதை சற்று சிந்திப்போம்!