Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 12 பிப்ரவரி, 2022

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பர்

மகிமை மிகு பிதாப்பிதாவாகிய அர்ச்.  சூசையப்பருடைய தேவவரப்பிரசாதங்களின் மேன்மை


சங்.பினே சுவாமியார்


கற்றறிந்தவனிடத்தில் வாசிக்கும்படி புத்தகத்தைக் கொடுத்தால், அவன் அதை வாசிக்க முடியாது என்று சொல்லும் காலம் வரும் என்று, இசையாஸ் திர்க்கதரிசி கூறுகின்றார். “புத்தகத்தை எழுத்து வாசனைஅறிந்தவனிடத்தில் கொடுத்து, இதை வாசியென்றால், அஃது முத்திரையிடப்பட்டிருப்பதால், என்னால்முடியாது என்பான்” (இசை.29:11). உன்னதமான தேவ இரகசியங்களடங்கிய இந்த முத்திரையிடப்பட்ட புத்தகத்தின் அர்த்தம் எதுவாக இருந்தாலும், அது, அர்ச். சூசையப்பரின் மகிமையான தோற்றத்தை நம்கண்முன் வைக்கின்றது! பிதாவாகிய சர்வேசுரன், புத்தகத்தில் எழுதுவதுபோல், அர்ச். சூசையப்பருடைய மாசற்ற இருதயத்தில், ஆண்டவருடைய திருமனிதவதாரத்தினுடையவும், மனுவுருவான தேவவார்த்தையானவருடைய மறைந்த ஜிவியத்தினுடையவும், தேவஇரகசியங்களை, முழுவதுமாக எழுதி வைத்தார்.

சர்வேசுரனால், இவ்வாறு அர்ச். சூசையப்பரின் இருதயத்தில் ஞானபுத்தகமாக எழுதப்பட்ட தேவ இரகசியங்களுடைய பிரபந்த காண்டங்கள் எல்லாம் எவ்வளவுக்கு நன்றாக முத்திரையிடப்பட்டிருந்தன என்றால், அனேக நூற்றாண்டுகள் வரைக்கும், அந்த ஞானபுத்தகம் கொண்டிருந்த தேவ வரப்பிரசாதங்களுடையவும் உன்னதமான அதிசயங்களுடையவும் மாபெரும் பரந்த உலகத்தைப் பற்றி, அதிமிக ஞானமுடைய திருச்சபையின் வேதசாஸ்திரிகளால் கூட, ஒன்றும் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. நமதாண்டவளின் பரிசுத்த பத்தாவான அர்ச். சூசையப்பருடைய இருதயத்தில் இருந்த ஞானபுத்தகத்தின் சில தேவசலுகைகளைப் பற்றி, முதன் முதலாக வாசித்த அர்ச்சிஷ்டவர்களில் ஒருவர் தான், சேசுவின் அர்ச்.தெரசம்மாள்.

இதனால், இம்மாபெரும் பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பரிடம் கொண்டிருக்க வேண்டிய உத்தமமான பக்தியை சகல விசுவாசிகளிடமும் பரப்புவதற்கான ஊக்கமுள்ள ஆவல், அர்ச். அவிலா தெரசம்மாளுடைய இருதயத்தில் ஏற்பட்டது. பக்தி சுவாலகருடைய தேவசிநேகத்தைக் கொண்டிருந்த அர்ச்சிஷ்டவரும் கார்மல் சபையை சீர்திருத்தியவருமான அர்ச்.அவிலா தெரசம்மாளுடைய திவிரமான முயற்சியாலும், உழைப்பாலும், அர்ச். சூசையப்பர் மிதான பக்தி, திருச்சபையில் ஓரளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அதுவரைக்கும், விசேஷ தேவ சலுகை பெற்றிருந்த சில அர்ச்சிஷ்டவர்கள் மட்டுமே அர்ச். சூசையப்பரை மகிமை செய்து வந்தனர்.

அர்ச். சூசையப்பர் தாமே, அவருடைய புண்ணியங்களடங்கிய அந்த ஞானபுத்தகத்தை முத்திரையிட்டிருந்தார். அவர் எவ்வளவுக்கு அடக்க ஒடுக்கமும் தாழ்ச்சியும் நிறைந்தவராக இருந்தாரென்றால், அவருடைய ஆத்துமத்தில் இருந்த ஞானபொக்கிஷங்களையும், அவருடைய செயல்களின் நேர்த்தியானதும் ஆச்சரியமிக்கதுமான உத்தமமான பூரணத்துவத்தையும், மனிதருடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டார்.சாதாரண மனிதராக ஜிவிக்கும் தோற்றத்தையே சகலருக்கும் காண்பித்தார். அவர் வெகு குறைவாகவே பேசினார். நான்கு சுவிசேஷங்களிலும், வேதாகமம் முழுவதிலும், அவர், ஒரு வார்த்தையாவது, தம்முடைய திவ்ய குமாரனிடமோ, அல்லது தேவமாதாவிடமோ, அல்லது அர்ச்.கபிரியேல் சம்மனசு விடமோ அல்லது உலகிலுள்ள வேறு எந்த மனிதனிடமோ, கூறுவதாக நாம் காணவில்லை. சர்வேசுரனுடைய மகா உன்னதமான தெய்வீக பிரசன்னத்தின் மகத்துவமிக்க மகிமைகளை மனிதருடைய பார்வையிலிருந்து மறைக்கும்படியாக திரைச்சிலையால் மூடப்பட்டிருக்கும் ஜெருசலேம் தேவாலயத்தின் பரிசுத்தத்தின் பரிசுத்த இடமான(“Holy  of  Holies”) தேவ சந்நிதானத்தைப் போல், மனிதர் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பரலோக மகிமைகளையுடைய பிதாப்பிதாவாக அர்ச். சூசையப்பர் திகழ்கின்றார். இந்தப் புத்தகத்தில், தெய்விகமான பரலோகக் காரியங்கள் முழுவதும் எழுதப்பட்டிருக்கின்றன. அர்ச். அருளப்பர் காட்சியாகமத்தின் 5ம் அதிகாரத்தில் குறிப்பிடுவதைப் போன்றதொரு புத்தகம் அர்ச். சூசையப்பருக்கு அளிக்கப்பட்டது. அவரால் அதைப் படிக்கக் கூடாமலிருந்ததால், அவர் அழுதார். அதனால், செம்மறியானவரும் சம்மனசுகளும் அவர் மேல் இரக்கம் கொண்டனர். உடனே செம்மறியானவர், அந்த பரம இரகசிய புத்தகத்தைத் திறந்து படித்தார். அதிலிருந்த தேவ இரகசியங்கள் அனைத்தையும் அர்ச். சூசையப்பருக்கு வெளிப்படுத்தினார். தம்முடைய இருதயத்தில் மறைவாகப் புதைந்து கிடக்கும் தேவ இரகசியங்கள் அனைத்தையும், நம்மேல் கொண்ட இரக்கத்தினிமித்தம், அர்ச். சூசையப்பரே நமக்கு வெளிப்படுத்தும்படியாக, நாம் எப்பொழுது அவர் மேல் போதிய அளவு பக்திபற்றுதல் கொள்ளப் போகிறோம், என்பதை சற்று சிந்திப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக