Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 14 - ST. EUSEBIUS OF SAMOSATA, அர்ச்‌. யுசேபியுஸ்

 

ஆகஸ்டு 14ம் தேதி

வேதசாட்சியும் மேற்றிராணியாருமான  அர்ச்‌. யுசேபியுஸ் திருநாள்


            இவர் சிரியா நாட்டில், சமோசட்டா என்ற நகரின் மேற்றிராணியாராக ஜீவித்தார்; ஆரிய பதித சக்கரவர்த்தியான வாலென்ஸ் ஆண்டபோது, ஆரிய பதிதர்களால், கத்தோலிக்கர்கள் மிகக் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு, உபத்திரவப்படுத்தப்பட்டனர்; இக்காலத்தில், இவர் மேற்றிராணியாராக, மகா உறுதியான கத்தோலிக்க வேத விசுவாசத்துடனும், ஞானத்துடனும், தனது ஞான மந்தையை ஆரியப் பதிதத் தப்பறையிலிருந்து பாதுகாத்தார்; ஆரிய பதிதத்தப்பறைக்கு எதிராக, அதை அழித்து ஒழிக்கும்படியாக, கத்தோலிக்க தியானப் பிரசங்கங்களைப் பிரசங்கித்து வந்தார். ஒரு இராணுவ அதிகாரிபோல், மாறுவேடம் அணிந்து, சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும், ஆரியப் பதிதர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்த கத்தோலிக்கர்களைச் சந்தித்து, ஆறுதலளித்தார்; தேவசிநேகத்தை அவர்களுடைய இருதயங்களில் தூண்டவும், அவர்களை தேவ விசுவாசத்திலும், தேவ நம்பிக்கையிலும் திடப்படுத்துவதற்குத் தேவையான ஞான அறிவுரைகளை அளித்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

            மேலும், கத்தோலிக்கர்களுக்கு ஞானபோஷாக்கை அளிப்பதற்குத் தேவையான குருக்களை ஏற்படுத்தும்படியாக, அங்குக் குருமடங்களிலுள்ள தியாக்கோன்மார்களுக்குக் குருப்பட்டம் அளித்தார்; மேலும், அப்பிரதேசங்களில் ஆரிய பதிதர்களால் வெகுவாக துன்பப்பட்டுக்கொண்டிருந்த மேற்றிராணிமார்களுக்குத் தேவையான ஞான ஆலோசனையையும், மற்ற ஆத்தும சரீர நன்மைகளையும் உதவிகளையும், ஆறுதல்களையும், அவ்வப்போது, அளிப்பதில் அயராமல் ஈடுபட்டிருந்தார்.  ஆரிய பதிதர்களின் ஆதரவாளனான கான்ஸ்டன்சியுஸ் சக்கரவர்த்தி, அந்தியோக்கு நகரின் அதிமேற்றிராணியாராக கத்தோலிக்க மேற்றிராணியார் வந்.மெலெடியுஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஒரு ஆணை மடலை யுசேபியுஸ் மேற்றிராணியார், கொண்டிருப்பதைக் கேள்வியுற்றான்; அந்த கத்தோலிக்க அதிமேற்றிறாணியாரை நீக்க வேண்டும் என்று ஆரிய பதிதர்கள், சக்கரவர்த்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்;அந்த வேண்டுகோளை, நிறைவேற்ற ஆசித்த  சக்கரவர்த்தி, அந்த ஆணை மடலை, இரத்து செய்யும்படி, இவருக்குக் கட்டளையிட்டான்.

            ஆனால், சக்கரவர்த்தியின் கட்டளையை, அர்ச்‌.  யுசேபியுஸ் துணிச்சலுடன் நிறைவேற்ற மறுத்துவிட்டார்; இதைக் கேட்டு சீற்றத்துடன் வெகுண்டெழுந்த சக்கரவர்த்தி, ஆணை மடலை இரத்து செய்யவில்லையென்றால், மேற்றிராணியார் யுசேபியுஸினுடைய வலது கரம் துண்டிக்கப்படும் என்று ஒரு செய்தியை அனுப்பினான்; அந்த செய்தியை அவரிடம் கொண்டு வந்த தூதுவனிடம், அர்ச்‌. யுசேபியுஸ், தனது இரண்டு கரங்களையும் காண்பித்து, இவை இரண்டையும் வெட்டி விடுங்கள்! ஆனால், ஆரிய பதிதத்தினுடைய பாவாக்கிரமத்தையும் தீமையையும் கண்டித்துப் புறம்பாக்குகிற திருச்சபை சங்கக்தினுடைய இந்த ஆணை மடலை, நான் கைவிட முடியாது! என்று உறுதியான குரலில் கூறினார்; சக்கரவர்த்தி, அர்ச்‌. யுசேபியுஸ், கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது உறுதியான பற்றுதலுடனும், தீர்மானமான பிடிவாதத்துடனும் இருப்பதை அறிந்த சக்கரவர்த்தி ஆச்சரியப்பட்டான்; அவருக்கு தீங்கு ஒன்றும் செய்யாமல் விட்டான்.

             அர்ச்‌. யுசேபியுஸ் கத்தோலிக்க வேத சத்தியங்கள் மட்டில் கொண்டி ருந்த இந்த தளரா ஊக்கமும் ஆர்வமும் தான்,அர்ச்‌. நசியான்சென் கிரகோரியார், இவரைதிருச்சபையின் தூண்!” என்றும், “சர்வேசுரனுடைய தேவ கொடை!” என்றும், “வேத விசுவாசத்தின் விதிமுறை!” என்றும் அழைப்பதற்குக் காரணமாயிருந்தது! அந்தியோக்கு அதிமேற்றிராணியார் காரியத்தில், அர்ச்‌. யுசேபியுஸ் அடைந்த வெற்றியைக் கண்டு  பொறுக்காத ஆரியப்பதிதர்கள், அடுத்து வந்த சக்கரவர்த்தியான வாலென்ஸ் மூலமாக, , அர்ச்‌. யுசேபியுஸை திராஸ் நாட்டிற்கு நாடு கடத்தினர். 378ம் வருடம், சக்கரவர்த்தி வாலென்ஸ் இறந்தபிறகு, அர்ச்‌. யுசேபியுஸ் மறுபடியும், அவருடைய மேற்றிராசனத்திற்கு வர அனுமதிக்கப்பட்டார். அவரும் முன்பு செய்ததைப்போல, ஆரியப் பதிதத்திற்கு எதிராக அதை அழிப்பதற்கான அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்.

            சமோசட்டா நகருக்கருகிலுள்ள டோலிகா என்ற நகரில், மாரிஸ் என்ற மேற்றிராணியாருடைய அபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த அர்ச்‌. யுசேபியுஸ் மீது, ஆரியப் பதிதத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு ஓட்டை எறிந்தாள். அந்த ஓடு இவரு டைய தலையை மிக மோசமாகக் தாக்கிக் காயப்படுத்தியது; அதனால் சில நாட்கள் வேதனைமிகுதியால், துன்ப உபத்திரவப்பட்டார்; இவ்வலியைப் பொறுமையுடன் அனுபவித்தார்; ஆரிய பதிதத் தப்பறை அழிந்து, திருச்சபையிலிருந்து முற்றிலுமாக நீங்கும்படியாக, இக்கொடிய வேதனை நிறைந்த உபத்திரவத்தை, ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். சில நாட்களுக்குப் பின், 380ம் வருடம், பாக்கியமாய் மரித்தார்; இவ்விதமாக மகிமையான வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.  

மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச.யுசேபியுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

August 13, St. HIPPOLYTUS , அர்ச்‌. ஹிப்போலிடஸ்

 

ஆகஸ்டு 13ம் தேதி

வேதசாட்சியான அர்ச்‌. ஹிப்போலிடஸ் திருநாள்

            இன்று, அர்ச்‌. ஹிப்போலிடஸின் திருநாளையும் கொண்டாடுகிறோம். இவர் உரோமைக் காவல்படை வீரர். உரோமைத் தலைமைத் தியாக்கோனும், வேதசாட்சியுமான அர்ச்‌. லாரன்ஸ் கொடூரமாக சித்ரவதைச் செய்யப்பட்டபோது, இவர், அவருக்குக் காவல் வீரராக இருந்து அவரைக் கண்காணித்து, வந்தார்; அச்சமயம், அர்ச்‌. லாரன்ஸ், பெரிய இரும்பு அடுப்புக்கட்டிலில் கிடத்தப்பட்டு,  சூடேற்றப்பட்டு, உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டபோது, அர்ச்சிஷ்டவருடைய பரிசுத்தமுகத்தில் காணப்பட்ட மகிமையான பரலோக சந்தோஷ ஒளியை, இவர் கண்டார்.

            அகஷணமே, தேவபராமரிப்பினால், இவர்,மனந்திரும்புவதற்குத் தேவையான தேவ வரப்பிரசாதத்தைப் பெற்று, அர்ச்‌. லாரன்சிடம், தனக்கு ஞானஸ்நானம் வேண்டும் என்று கேட்டார்;அதன்படி,அர்ச்‌. லாரன்சிடம் ஞானஸ்நானம் பெற்று, கிறீஸ்துவரானார்; இதைக் கேள்விப் பட்ட உரோமை ஆளுநன், இவரைக் கொன்று போடக் கட்டளையிட்டான்; அதன்படி, இவருடைய கால்களைக் கயிற்றினால்கட்டி, அந்த கயிற்றை, முரட்டுக் குதிரைகளுடன் கட்டி விட்டனர். இவ்விதமாக, 260ம் ஆண்டு, அர்ச்‌.  ஹிப்போலிடஸ் , மகிமையான வேதசாட்சி முடியைப் பெற்றுக்கொண்டார்.

வேதசாட்சியான அர்ச்‌. ஹிப்போலிடஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!                                                                                                                                   

August 13, St. Casian, அர்ச்‌. காஸ்‌ஸியான்

 

ஆகஸ்டு 13ம் தேதி

ஆசிரியர்களின் பாதுகாவலரும், வேதசாட்சியுமான அர்ச்‌. காஸ்ஸியான் திருநாள்.




            இவர், ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூட ஆசிரியர்;இத்தாலியில், ராவென் னாவிலிருந்து 27 மைல் தொலைவிலுள்ள இமோலா என்ற நகரில்,200 மாணவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவரை உரோமப் படைவீரர்கள் கைது செய்து, இமோலாவின் உரோமை ஆளுநன் முன்பாக விசாரணைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர்; உரோமைச் சக்கரவர்த்தியும் கிறிஸ்துவ வேதத்தை மறுதலித்தவனுமான ஜூலியன் ஆண்டபோது, கிறீஸ்துவர்களைத் துன்புறுத்தி உபத்திரவப்படுத்திய காலத்தில்,இவர் கைது செய்யப்பட்டார்; உரோமை அஞ்ஞான விக்கிரகங்களை, வழிபடக் கட்டாயப்படுத்தப்பட்டபோது, அர்ச்‌. காஸ்ஸியான், பசாசுகளான அவ்விக்கிரகங்களை வழிபட மறுத்திருந்ததால், சக்கரவர்த்தியின் ஆணையை மீறிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

            மூர்க்கனும், காட்டுமிராண்டியுமான ஆளுநன், அர்ச்‌. காஸ்ஸியான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்பதைக் கேள்விப்பட்டவுடன், அவருடைய மாணவர்களால் குத்தப்பட்டு, அவர் கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான். அர்ச்‌.  காஸ்ஸியான், ஆடைகள் அகற்றப்பட்டு, ஒரு தூணில் கட்டப்பட்டார்; 200 மாணவர்களும், இரும்பிலான கூர்மையான எழுது கோல்களைக் கொண்டு, அவர்களுடைய ஆசிரியரான அர்ச்‌. காஸ்ஸியானைக் குத்திக் கொடூரமாகக் கொன்றனர். மெழுகினால் மூடப்பட்டிருக்கும் ஒரு மரப்பலகையின் மீது , இந்த கூர்மையான ஆணி போன்ற இந்த எழுதுகோல்களால், எழுத்துக்களை உருவாக்கி எழுதுவது, அக்காலத்தில் நடைமுறைப் பழக்கமாயிருந்தது. இங்கு கொலைஞர்கள், சிறுவர்களாயிருந்ததாலும், கொலை செய்வதற்கான கருவி எழுதுகோல் என்ற சிறிய கருவியாயிருந்ததாலும், வேதசாட்சியாகக் கொல்லப்பட்ட அர்ச்‌. காஸ்ஸியான் அனுபவித்த வேதனை அதிகக் கொடூரமானதாகவும், மிக நீண்ட நேரத்திற்கும் நீடித்தது!

            200 மாணவர்கள், மத்தியில் அகப்பட்டிருந்த அர்ச்‌. காஸ்ஸியானின் தலையின் மீதும், முகத்தின் மீதும், சில மாணவர்கள், தங்கள் நோட்டுப்பலகைகளை வீசி எறிந்தனர்; அவற்றை, அவருடைய சரீரத்தின் மீது உடைத்தனர்: மற்ற மாணவர்கள், அவர்களுடைய இரும்பு பென்சில்களால் அவரைக் குத்தித்துளைத்தனர்; அவருடைய தோலையும் , சதையையும் கிழித்தனர்; அவருடைய வயிற்றைக் குத்திக் கிழித்தனர்; சில காட்டுமிராண்டி மாணவர்கள், அவருடைய தோலின் மீது, கக்தியினால், அவர்களுடைய பெயர்களை செதுக்கி எழுதினர்.

            இவ்விதமாக, அர்ச்‌. காஸ்ஸியானின் பரிசுத்த சரீரம், அவருடைய இரத்தத்தினால் மூடப்பட்டது; சரீரத்தின் ஒவ்வொரு இடமும், காய மடைந்தது;சரீரம் முமுவதும் காயங்களால் நிறைந்தது; அர்ச்‌. காஸ்ஸியான், தன் சிறு கொலைஞர்களிடம், இன்னும் மாபெரும் பலத்துடன் தன்னை அடித்துத் தாக்கும்படி, மகிழ்வுடன் கூறினார். இக்கொடிய பாவத்தை செய்வதற்கு, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, அவர் அவ்வாறு கூறவில்லை! மாறாக, நமதாண்டவருக்காக தனது உயிரை விடுவதற்கு, தனக்கு இருந்த மாபெரும் ஆவலை அறிவிக்கும்படியாகவே, அவ்விதம் கூறினார். ஆயிரக்கணக்கான காயங்களிலிருந்து மிகுதியாக இரத்தம் வெளியேறியதாலேயே, அர்ச்‌. காஸ்ஸியான், மகிழ்ச்சியாக 368ம் வருடம், ஆகஸ்டு 13ம் தேதியன்று, இறந்து, மகிமையான வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.

            இமோலாவில், இவருடைய பரிசுத்த சரீரத்தை, கிறீஸ்துவர்கள் பூஜிதமாக அடக்கம் செய்தனர். இமோலாவிலுள்ள ஒரு கதீட்ரலில் கட்டப்பட்டிருக்கும், மிக ஆடம்பரமான ஒரு ஷேக்திரத்தில், அர்ச்‌. காஸ்ஸியானின் பரிசுத்த சரீரம் பொது வணக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது! அர்ச்‌. அம்புரோசியார் குறிப்பிடுவதுபோல், இந்த இரும்பு பென்சில் அல்லது எழுதுகோலின் ஒரு முனை கூர்மையாக, மெழுகு மரப்பலகைகளில், எழுதுவதற்கு ஏற்றதாகவும், மறுமுனை மழுங்கலாகவும், சமமானதாகவும், எழுதியதை அழிப்பதற்காகவும் இருந்தது! இவர் , 12ம் பத்திநாதர் பாப்பரசரால் 1952ம் வருடம், முத்திப்  பேறு பட்டமளிக்கப்பட்டு, இத்தாலி நாட்டின் சுருக்கெழுத்தாளர் அல்லது தட்டெழுத்தாளர்களின் பாதுகாவலராக ஏற்படுத்தப்பட்டார்.       

நல்லாசிரியர்களின் பாதுகாவலரும், வேதசாட்சியுமான அர்ச்‌. காஸ்ஸியானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!