Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 16 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 17 - அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)

 கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிதத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது)

அர்ச். எட்மண்ட் காம்பியன் (1540-1581)


அது. 1566 ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் இறுதிநாட்கள். அன்று இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வண்ண, வண்ண அலங்கார வளைவுகள், தோரணங்கள், ஒளியை உமிழும் பல வண்ண விளக்குகள் என எங்கும் ஆடம்பரம்! துணைவேந்தர். பேராசிரியர், அறிஞர்கள். மாணவர்கள், ஊழியர் என பலதரப்பினரும் ஒருவித பதட்டத்தோடு காத்திருந்தனர். வளாகத்தில் மேடைகளும், அறிவார்ந்த சொற்பொழிவு விவாத அரங்கங்களும் தயாராயிருந்தன. அவற்றில் அமைக்கப்பட்டு பங்கேற்று தங்கள் அறிவுத்திறனை எண்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தயாராக நின்றிருந்தனர்.

யாருக்கு இந்த வரவேற்பு? ஆம்! இங்கிலாந்து தேசத்தை ஆளும் தன்னிகரற்ற அரசி முதலாம் எலிசபெத் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கு விஜயம் செய்ய வருகிறாள். கத்தோலிக்க திருச்சபையிலிருந்து தன்னை விளக்கிக் கொண்டு இங்கிலாத்தின் திருச்சபைக்கு தானே தலைவன் என்று அறிவித்து எதிர்ப்பு மதத்தை உருவாக்கிய 8ம் ஹென்றியின் மகள். அவனுக்கும் அவன் தேவதுரோகமாக மணந்து கொண்ட ஆன்போலினுக்கும் பிறந்த வாரிசுதான் இந்த அரசி! தந்தையைப் போலவே பாப்பரசரின் வேதத்தை மறுதலித்து தன்னையே இங்கிலாந்தின் ஆங்கிளிக்கன் சபையின் தலைவியாக அறிவித்து, அவள் பட்டத்திற்கும் வரும்போது வயது 25தான்! ஆனாலும் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடிபாயும் என்ற கதையாக கத்தோலிக்க எதிர்ப்பைக் கடைபிடித்துவந்தாள். கத்தோலிக்க வேதமே இங்கிலாந்தில் இல்லாமல் செய்ய சூளுரைத்தாள்! திவ்விய பலிபூசை, குருக்கள், கத்தோலிக்க மத அனுசாரணம் யாவும் தடைசெய்யப்பட்டது. அப்படி மீறி இங்கிலாந்தில் குருக்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தலை உருளும், அவர்களுக்கு உதவி செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார்கள். ஒப்புக்கான விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்கள். இங்கிலாந்து திருச்சபையின் தலைவி அரசியே என்று சத்திய பிரமாணம் செய்து பாப்பரசரை மறுதலிக்காதவர்கள் தேவ துரோகக் குற்றம் சூட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டு வயிறு கிழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறாக கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த அவள் படித்த அறிஞர்கள், அறிவுடையோர் கல்வியாளர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்த்தவராக இப்படி பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு வருகைதந்து, தனது கொள்கைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற ஆசித்தாள், அதன் பதிரொலியாகத்தான் இன்றைய "ஆக்ஸ் போர்ட் விஜயம்!"

தமது அரசவை உறுப்பினர்கள் புடை சூழ மகா கம்பீரமாக வந்த அரசி தமது ஆசனத்தில் அமரவும் அவளை வரவேற்கும் படலம் ஆரம்பமாயிற்று.

அங்கே முதல் வரிசையிலே, அறிவுஜீவி, அறிஞர், சிறந்த பேச்சாளர், பேராசிரியர் என்றெல்லாம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன். அரசியை வரவேற்று சொற்பொழிவாற்றும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கன்னியமாக உடையணிந்திருந்த காம்பியன் மிடுக்கான தடையில், அரசியை வணங்கிவிட்டு சொற்பொழிவு மேடையேறி தமது அறிவார்ந்த நடையில் கணீர்குரலால் வரவேற்புரை நிகழ்த்தினார். அரசியை வாழ்த்தி பேச அவர் கையாண்ட நாவன்மையைக் கண்டு அவையோர் ஆர்ப்பரித்து மகிழ அரசியின் முன்னோர்கள், அவனது ஆட்சி. அவளோடு வந்திருந்த அமைச்சர் பெருமக்கள் என அனைவரையும் பாராட்டி பேசிய காம்பியனின் குரல் அந்த அசங்கத்தின் கையொலியால் கரைந்துபோனது. அவரது பேச்சு திறமையில் உள்ளம் நெகிழ்ந்து மகிழ்ந்த அரசியின் முகம் பிரகாசமடைந்தது. வரவேற்புரையை நிகழ்த்தி முடித்து தலைகுனிந்து அரசியை வணங்கிய காம்பியனுக்கு வயது 26! தமது அறிவுத் திறமையால் "இங்கிலாத்தின் இரத்தினம்" என்று பட்டம் சூட்டப்பட்ட எட்மண்ட பேரொலியால் எழுந்த கரவொலியால் பெருமை பொங்க மேடையை விட்டு இறங்கினார்.

ஆனால், அதே எட்மண்ட் காம்பியன் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அரசியால் "தேசதுரோகி" என்ற பட்டம் சூட்டப்பட்டு கொடூரமாய் தூக்கிலிடப்பட்டு வேதசாட்சியடைந்தார்! ஆம். அதுவே தேவ திருவுளம்! சத்திய வேதமாம், கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசத்திற்காக அவர் இரத்தம் சிந்தினார்.

மனந்திரும்பிய காம்பியன்!

1540 -ம் லண்டன் மாநகரில் பிறந்த எட்மண்ட் காம்பியனின் தந்தை ஒரு புத்தகவியாபாரி. அதனால் தானோ என்னவோ படிப்பில் சிறந்து விளங்கினார். தமது 17வயது வயதில் அர்ச். ஜான் கல்லூரியில் ஃபெல்லோஷிப் பட்டம் பெற்றார். அவர் எவ்வளவுக்கு அறிவுத்திறமையும், நாவன்மையும் கொண்டிருந்தாரானால், அவரைச் சுற்றி எப்போதும் மாணவக் கூட்டம் இருக்கும். அவரது பேச்சை, அதில் மினிரும் அறிவுத்திறமையை சாதூரியத்தை, பழக்க வழக்கங்களை கண்டு பாவிக்கவும், அன்றைய மாணவர்களிடையே ஒருவித ஆவல் இருந்தது. அதனாலேயே அவரோடு சுற்றித் திரிந்தவர்களை "காம்பியன் கூட்டத்தார்" என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியலில், தத்துவ சாஸ்திரத்தில், லத்தீன் மொழியில் புலமை பெற்று "அசாதாரணமான மாணவன்" என்ற பெயர் பெற்றர். ஏழ்மையில் இருந்ததால் அவரது படிப்புச் செலவிற்காக சலுகையும் உதவித்தொகையும் பெற்றார்.


ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகக் கல்லூரியில் தத்துவ சாஸ்திரம் ஏற்றுக் கொண்டிருக்கும் போதுதான அங்கே அரசி எலிசபெத்தின் வருகை நிகழ்ந்தது. அவளை வரவேற்பளிக்கத் தெரிவு செய்யப்பட்ட காம்பியனும், தமது அறிவார்ந்த உரையால் அரசியின் பெருமதிப்புக்குள்ளானார். அரசவை கூட்டங்களில் உரையாற்ற அழைக்கப்பட்ட அவர் "இங்கிலாந்தின் இரத்தினம் " என்று கௌரவப்பட்டம் பெற்றார். அரசாங்க ஆதரவு அவருக்கு இருந்ததால் பிற்காலத்தில் உயர்பதவிகள் காத்திருந்தன.

எலிசபெத் அரசி ஆட்சி பொறுப்பேற்கும் வரை கத்தோலிக்கராயிருந்த இவரது குடும்பம், பாப்பரசரின் அதிகாரத்துக்கு விரோதமாக சட்டம் இயற்றப்பட்டபோது, அதை ஆதரித்து ஆங்கிலிக்கன் சபையில் சேர்ந்தது. தமது கல்வி, எதிர்காலம் கருதிய எட்மண்ட் அரசியே இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற சத்திய பிரமாணத்தை செய்தார். புராட்டஸ்டாண்ட் ஆங்கிளிக்கன் சபையில் சேர்ந்திருந்தாலும் அவரது மனதில் ஒரு கலக்கம் தோன்றியது. ஏனெனில் தத்துவ சாஸ்திரம் கற்கும்போது திருச்சபையின் பிதாபிதாக்கள் எழுதிய நூல்களையும் கற்க நேரிட்டது. அவர்களது கத்தோலிக்க விசுவாச உறுதியையும், அதுவே சத்திய வேதம் என்பதை சுட்டிக்காட்ட அவர்கள் தந்த ஆதாரங்களையும் கண்டு உள்ளம் தாக்குண்டவரானார். இந்நிலையில் தான் ஆங்கிலிக்கன் சபையில் தியோக்கன் பட்டம் பெற்றார்.

பலருடைய மதிப்பையும், நட்பையும் பெற்று உயரிய பதவியடைய வாய்ப்பிருந்த போதிலும் தான் ஆங்கிலிக்கன் சபையில் பட்டம் பெற்றது அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவரது ஆன்மா சத்தியத்தை நாடி தேட அம்முயற்சியில் இறங்கிய காம்பியன் திருச்சபையின் வரலாற்றை படிக்கலானார். பல பிதாப்பிதாக்களின் நூல்களை கற்று உணரலானார்.

இப்போது அவரது மனம் தவிக்கலாயிற்று. இங்கிலாந்து நாட்டின் அர்ச். அகஸ்டின் காண்டபூரி, அர்ச். எட்வர்ட் அரசன் மற்றும் வேதசாட்சியாக மரித்த அர்ச். தாமஸ் பெக்கட் போன்றோர் சார்ந்திருந்த கத்தோலிக்க சபை உண்மையானதா? எலிசபெத் அரசியை தலைமையாகக் கொண்ட ஆங்கிளிக்கன் சபை சத்தியமான வேதமா? என்று அங்கலாய்த்த அவரது உள்ளம், அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்து உண்மையான வேதம் கத்.திருச்சபைதான். தாம் இருக்கும் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் ஒரு பதிதம்! அங்கு சேசுகிறீஸ்து இல்லை! அவரது உண்மையான போதனைகளும் இல்லை. அங்கு ஆன்ம இரட்சிப்பு இல்லை. ஆம்! இரட்சிக்கப்பட சேசுகிறீஸ்துவால் ஸ்தாபிக்கப்பட்ட சத்திய வேதமான பாப்பரசரை தலைவராகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையே என்பதை அறிந்து உணர்ந்து கொண்டார். கத்தோலிக்கரானார்.

தேவ அழைத்தல்

அக்காலத்தில் இங்கிலாந்து தேசத்திலிருந்து சுத்தோலிக்க வேதம் அழிக்கப்பட்டு விட்டதால், அதனை மீண்டும் ஏற்படுத்த ஆங்கில கத்தோலிக்கர்கள் விரும்பினார்கள். கத். விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருந்த எண்ணற்ற ஆங்கில நாட்டு மக்களுக்கு தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தவும் குருக்களை உருவாக்க முயற்சி நடந்தது. அதனால் பாப்பரசரின் ஆதரவில் பிரான்ஸ் நாட்டில் துவே (Douay) என்ற இடத்தில் குருமடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு சிறந்த ஆங்கில நாட்டு இளைஞர்களை குருப்பட்டத்திற்கு தயாரித்து குருக்களாக்கி இரகசியமாக இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தனர் ஆனால் அப்படி இரகசியமாக இங்கிலாந்து நாட்டுக்குள் வரும் குருக்களை இனங்கண்டு கைது செய்ய அரசியின் ஒற்றர்கள் கடற்கரையோரம் நிலை கொண்டிருந்தது வேறு விஷயம்!

அப்படிப்பட்ட குருமடத்தில் குருத்துவ பயிற்சி பெற காம்பியனின் உற்ற தோழரான கிரகோரி மார்டின் என்பவர் பிரான்ஸ் நாடு சென்றார். குருமடம் சென்ற அவர் நல்ல உள்ளம் கொண்ட காம்பியனையும் அங்கே அழைத்தார். அதுபோலவே, மற்றொருவர் அர்ச். துர்தி பார்ட் மாயின் என்பவரும் நாடு கடந்து சென்று குருப்பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து, பிடிபட்டு வேதசாட்சியம் அடைந்தார் என்பது வேறு வரலாறு. இவற்றால் உள்ளம் கவரப்பட்டு உறுதியடைத்த காம்பியன் பாப்பரசருக்கு விரோதமாக தாம் கொடுத்த சத்திய பிரமாணத்திற்கு மிகவும் மனஸ்தாபப்பட்டு வருந்த தன்னை முழுவதும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்க விரும்பினார்.

அச்சமயத்தில்தான் தம்மை ஆங்கிலிக்கன் சபையில் தீயாக்கோன் பட்டம் பெறத் தூண்டிய ரிச்சர்டு ஷென்னே (Richard Cheney) என்ற ஆயருக்கு நீண்ட கடிதம் எழுதினார். கத்தோலிக்க மணப்பான்மை கொண்ட அந்த ஆயர், ஆங்கிலிக்கன் சபையில் பிஷப்பாக இருந்தார். கத்தோலிக்கரான எட்மண்ட் காம்பியன் அவரது தவறான கொள்கையைச் சுட்டிக்காட்டி கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் "60 வயதாகிவிட்ட தாங்கள், நிலையில்லாத உடல் ஆரோக்கியத்தையும், தப்பறையின் மீது வெறுப்பையும் கத்தோலிக்கர்கள் மீது இரக்கமும் கொண்டவர். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக ஆயர் என்று அழைக்கப்பட்டீர்கள். உமது மௌனத்தால், நீங்கள் விரும்பாத, சாபத்துக்குரிய புராட்டஸ்டாண்ட் பிரிவினையையும் வளர்த்தீர்களே. அதனால் கிறீஸ்துவின் வரப்பிரசாதங்களை பெற முடியாது இருக்கிறீர்கள். தாங்கள் எல்லா ஜெபங்களுடையவும், பலிபூசைகளுடையவும், தேவ திரவிய அனுமானங்களுடையவும் நன்மைகளையும், பலன்களையும் இழந்து போய் இருக்கிறீர்களே! பதீதமதத்தில் என்னநான் எதிர்ப்பார்க்கிறீர்கள்? உமது வாழ்வுதான் என்ன? எதில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறீர்கள்....." என்றெல்லாம் எழுதி அவரை தப்பறையிலிருந்து மீட்டு சத்திய வேதமான கத்தோலிக்க திருச்சபைக்கு வரத் தூண்டினார். ஆனால் அந்தோ! ஆயர் ஷென்னே எந்த முடிவையும் எடுக்காமல் மரணமடைந்தார்!

கத்தோலிக்கத் திருச்சபையில் உட்பட்ட எட்மண்ட காம்பியனின் வாழ்வு தலைகீழாக மாறிப் போனது!

எட்மண்ட் காம்பியன் கத்தோலிக்கராக மனத்திரும்பியதும் தாம்பெரிதும் நேசிந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். அயர்லாந்துக்குச் சென்று அங்கே இரண்டு வருடம் தமது சுத்தோலிக்க நண்பரது குடும்பத்தினரோடு வாழ்ந்தார். அந்த நாட்களில் உத்தம கத்தோலிக்க ஜீவியத்தில் திளைத்து புண்ணியத்தில் உயர்ந்தார். அக்குடும்பத்தின் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவந்த எட்மண்ட், டப்ளின் நகரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு கத்தோலிக்க நாடான அயர்லாந்தின் வரலாறு ஒன்றையும் எழுதி அதற்குப் புகழ் சேர்த்தார்.

பின்னர் தமது அழைத்தல் குருவாவதே என்பதை உணர்ந்தவராக துவேக்குச் (Douay) சென்று அங்கே குரு மடத்தில் சேர்ந்தார். "உப தியாக்கோன் பட்டம்" பெற்ற பின் உரோமைக்குச் சென்று அங்கே சேசு சபையில் சேர்ந்தார். பிராக் நகருக்கு நவசந்தியாச வாழ்வுக்காக அனுப்பப்பட்ட எட்மண்ட் காம்பியன் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 1578 செப்டம்பர் மாதத்தில் குருப்பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில் ஜெர்மன் நாட்டில் புராட்டஸ்டாண்டாரிடையே சேசு சபையினர் ஆற்றிய அரிய காரியங்களையும், அதனால் விளைந்த நன்மைகளையும் அறிந்த பாப்பரசர் 13-ம் கிரகோரியார் சேசு சபையினரை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக முடிவு செய்தார். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் எட்மண்ட் காம்பியனும் ஒருவராக இருந்தார்.

இங்கிலாந்துக்கான பயணத்தை துவக்கும் முந்தின நாள் இரவில் அவர் தங்கியிருந்த அறையின் சுவரில் “எட்மண்ட் காம்பியன் வேதசாட்சி" என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர். தேவ ஏவுதலால் ஒரு குருவானவர் அப்படி எழுதியிருந்த அந்த வாக்கு நம் புனிதரின் வாழ்வில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது!

1580-ம் ஆண்டு ரோமையிலிருத்து ஜெனிவா நகர் வழியாக இங்கிலாந்து வந்த அவர்கள், திருச்சபையின் எதிரிகளால் அடையாளம் காணமுடியாத வகையில் மாறுவேடம் பூண்டு சென்றனர். அங்கே, இங்கிலாந்தில் கத்தோலிக்க விசுவாசம் நசிந்துபோய் அழித்துகொண்டிகுந்தது! கிறீஸ்தவர்கள் கலாபனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்கள். "குருக்களே இங்கிலாந்து நாட்டில் இல்லை!” என்ற நிலை ஏற்பட தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்ற முடியாத அவலம் ஏற்பட்டது. சில குருக்கள் மாறுவேடம் பூண்டு விசுவாசிகளின் வீடுகளில் தங்கி, அரசாங்க வீரர்கள் தேடிவந்தபோது பிடிபடாமல் தப்பிக்க பதுங்கு குழிகளில் தங்கினர். இதற்காக ஒவ்வொரு கத் இல்லத்திலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. குருக்கள் அவற்றில் மறைந்து வாழ்த்து குறிப்பிட்ட நாட்களில் அங்கே கூடும் விசுவாசிகளுக்கு திவ்விய பலிபூசை, பிரசங்கம் போன்றவற்றை நிகழ்த்தி ஞான வாழ்வில் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை பிடிக்கவென்று ஒற்றர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் "குரு வேட்டையாளர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் அர்ச். எட்மண்ட் காம்பியன் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே தமது நோக்கத்தை குறிப்பிட்டு கத்தோலிக்க சத்தியங்களை ஆதரித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "எனது அருமை நாட்டு மக்களின் ஞான ஆபத்துக்களையும், தீமைகளையும் மற்றும் அவர்களது ஆங்கார அறியாமையையும் அகற்றி அவர்களைக் காப்பதுவே தமது நோக்கம்" என்று தெரிவித்திருந்தார். காம்பியனும் அவரது சக குருவானவரும் இங்கிலாந்துக்குள் ஊடுருவி விட்டனர் என்ற தகவல் எப்படியோ சுங்கத்துறையினருக்குத் தெரியவர, துறைமுகம் எங்கும் ஒற்றர்களின் செயல்பாடு அதிகரித்திருந்தது. ஆனாலும் அவர்களது கண்களுக்குத் தப்பி பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்து மக்களுக்கு விசுவாச சத்தியங்களைப் போதித்து, கத்தோலிக்க விசுவாசத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வந்தனர். அநேகர் மனத்திரும்பினார்கள். இதைப்பற்றி சேசுசபை தலைவருக்கு காம்பியன் எழுதிய கடிதத்தில் "...நான் நாள்தோறும் அங்குமிங்கும் போய் பணியாற்றி வருகிறேன். அறுவடை உண்மையாகவே தாராளமாயிருக்கிறது. திருச்சபையின் எதிரிகள் கையில் அகப்பட வெகுநாள் பிடிக்காது. தான் என்னை மறைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் உடை எனக்கே சிரிப்பூட்டுகிறது. பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது..." என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இங்கிலாத்தில் மறைவாக அப்போஸ்தல அலுவவில் ஈடுபட்டுவந்த எட்மண்ட் காம்பியன் புராட்டஸ்டாண்ட் பதிதத்தைக் தாக்கி, கண்டித்து “பத்துக் காரணங்கள்" என்ற அரிய நூலை லத்தீன் மொழியில் எழுதினார். அது. எதிரிகளால் பிடிபடும் கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தைப் பற்றி விசாரிக்கும்போது கூற வேண்டிய பதில்கள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. சத்திய வேதத்தை ஆதரித்து ஆங்கிளிக்கள் புராட்டஸ்டாண்ட் பதிதத்தை கண்டிப்பானவராகவும் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூல் 1587 ஜூன் 27-ம் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆலய இருக்கைகளில் 400 பிரதிகள் வைக்கப்பட்டன. அதோடு ஐரோப்பிய நாடுகளிலும்கூட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 48 பதிப்புகளில் வெளியிடப்பட்டது. இது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே, அந்த நூலை எழுதிய எட்மண்ட் காம்பியனை பிடிப்பதற்கு ஒற்றர்களையும், குரு வேட்டைக்காரர்களையும் முழுவீச்சுடன் இறக்கிவிட்டது.

நூல் வெளியிடப்பட்டதும் வேறு எங்காவது மறைவாக சிலகாலம் போய்விடுவது நலம் பயக்கும் என்று எண்ணிய காம்பியனும் அவரது சகக்குருவானவரும் நார்ஃபக் (Norfolk) நகருக்குப் பயணமானார்கள். வழியில் Lyford Grange என்ற ஊர் வரவே அங்கே சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். ஏனெனில் அவ்வூர் செல்வந்தரான திரு.யாட் (Yate) என்பவர் தமது சுத். விசுவாசத்திற்காக லண்டனில் சிறை தண்டனை அனுபவித்தவர். அவரது வயது முதிர்ந்த தாய் தன் வீட்டில் நிரந்தரமாக 2 குருக்களையும் சில சுன்னியர்களையும் தங்கவைத்து பராமரித்து வந்தாள். எனவே அங்கே தங்கி அவரை பாராட்டி விசுவாசிகளை உற்சாகப்படுத்திவிட்டுச் செல்ல முடிவெடுத்தார். புகழ்பெற்ற எட்மண்ட் காம்பியன் சுவாமி மாறுவேடத்தில் இரகசியமாக வந்தாலும் அவரது வருகை சுற்றுவட்டாரத்திலுள்ள கத். விசுவாசிகளிடையே பரவியது. அரசின் ஒற்றர்களுக்கும் இச்செய்தி எட்டவே அக்குடும்பத்தின் முன்னான் வேலையாளான ஜார்ஜ் எலியாட் என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.

காம்பியன் பட்ட வாதனை!

பிடிபட்ட சங், எட்மண்ட் காம்பியன் சுவாமி லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு அதன் வீதிகளில் பகிரங்கமாக இழுத்துச் செல்லப்பட்டார். முன்னொரு காலத்தில் இதே விதிகளில் சிறந்த கல்வியாளர், இங்கிலாந்தின் இரத்தினம் என்றெல்லாம் புகழப்பட்ட அவர் இன்று தாம் கொண்ட சத்திய விசுவாசத்திற்காக கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டு லண்டன் டவர் சிறையில் ஒரு சிறு இருட்டு அறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு தேம்ஸ் நதிக்கரைக்கு அப்பால் உள்ள லெய்செஸ்டர் மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எலிசபெத் ராணி வருகை தந்தபோது தாம் நிகழ்த்திய வரவேற்புரையை பாராட்டி தமக்கு ஆதரவாளராக மாறிப்போன அமைச்சர் வெய்செஸ்டர் பிரபுவின் (Earl of Leicester) இல்லம் தான் அது! அங்கே தன் முன்னால் நிற்கும் நபரைக் கண்டு வியந்துபோன எட்மண்ட் காம்பியன் தன் கண்ணை தான் நம்பாது திகைத்தார். ஆம்! அவர் முன்பு நாட்டையாளும் எலிசபெத் அரசியே நின்றிருந்தான். ஒரு காலத்தில் தம்மால் “இங்கிலாந்தின் இரத்தினம்" என்று அழைக்கப்பட்டவர் இன்று தனக்கு எதிராக, தமது வேதத்திற்காக கைதியாக நிற்பதைக் கண்டு முகம் சுளித்தாள் அரசி. ஆனாலும் மிகவும் நயமாக அவரைப் பாராட்டியவள், பிடிவாதத்தை விடுத்து அரசியான தன்னை திருச்சபையின் தலைவியாக ஏற்றுக்கொள்ளும்படியாகவும், அபத்த கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக மறுத்துவிடும்படியாக கேட்டாள். அப்படி அவர் செய்தால், ஆங்கிலிக்கன் சபையில் மிக உயர்ந்த அந்தஸ்து அவருக்காகக் காத்திருக்கிறது என்ற ஆசை வார்த்தைகள் கூறினாள். ஆனால் அரசியின் எந்த வார்த்தைகளுக்கும் பணியாமல் தமது விசுவாசத்தில் உறுதியாக நின்ற காம்பியனைக் கண்டு வியந்தவனாக அவரைவிட்டு அகன்றாள்.

ஐந்து நாட்களிலும் அவர் தமது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை 3 தடவைகள் வாதைக் கருளியால் துன்புறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி இரும்பு சட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக இழுத்துக் கொடுமைப்படுத்தப்பட்டார். கை கால்களின் மூட்டுகளும் எலும்புகளும் பிய்ந்து நெட்டுருகிப்போய் கொடூர வேதனையளித்தது. அத்தனையையும் தாங்கிக் கொண்ட எட்மண்ட் காம்பியன் தேவ உதவிக்காக மன்றாடினார் தமது அனைத்து வேதனைகளையும் இங்கிலாந்து தேசம் மீண்டும் சத்திய வேதத்திற்கு வர ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்தார்.

இத்தகைய வாதை நடந்துகொண்டிருக்கும் போதே நான்கு தடவைகள் வேத தர்க்க விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டார். தான் இருந்த நிலையிலும் அவர்களுக்கு தக்கப் பதில் தந்து முறியடித்தார். தம்மைத் துன்புறுத்தியவர்களிடமும் வெகு சாந்தத்தோடு அவர் நடந்துகொண்ட முறையைக் கண்டு வியந்துபோன பிலிப்பு ஹோவர்ட் (Philip Howard) மற்றும்  (Earl of Arundal) மனந்திரும்பினார்கள்.

மீண்டும் வாதைக் கருவியின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காம்பியன் சுவாமி மீது குற்றப்படுத்த ஒன்றும் கிடைக்காததால் அவர் இங்கிலாந்தில் புரட்சி ஒன்றை உண்டாக்கும் கருத்தோடு நாட்டிற்குள் வந்ததாக கதைக் கட்டினார்கள். ஆனால் அதனை தமது வாதத்தால் தூளாக்கிய காம்பியன் "நாங்கள் எலிசபெத் அரசிக்கு விரோதமாக எக்குற்றமும் செய்ததில்லை. உங்களுக்கு குற்றமாகத் தெரிவது நாங்கள் எங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பது மட்டுமே!” என்று எடுத்துக் கூறினார்.

தமக்கு மரண தண்டனை விதிக்கப்படும் முன்பாக அங்கிருந்த நீதிபதிகளை நோக்கி, "எங்களை இப்போது கண்டனத்துக்கு உள்ளாக்கும் நீங்கள், உங்கள் முன்னோர்கள் அனைவரையுமே கண்டனத்துக்குள்ளாக்குகிறீர்கள். அந்த முன்னோர்களின் தகுதியற்ற வாரிசுகளாக இப்போதுள்ள உங்களால் நாங்கள் கண்டனத்துக்குள்ளாவது எங்களுக்கு மகிழ்ச்சியும் மகிமையுமேயாகும். சர்வேசுரன் எப்போதும் இருக்கிறார். உங்கள் வாரிசுகளும் இப்போது நீங்கள் செய்வதைப் பார்ப்பார்கள். உங்கள் மீது அவர்களும் சர்வேசுரனும் தரும் தீர்ப்பு ஒருநாளும் தவறாது உண்மையாகவேயிருக்கும்" என்று கூறினார். காம்பியன் பிறரைப் போல் அல்லாமல் அரசியின் தனிப்பட்ட அரச அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு மரண தீர்ப்பு வழங்கப்பட்டார். அப்போது அங்கே வந்த, தன்னைக் காட்டிக்கொடுத்த எலியட் மற்றும் ஹாப்டன் என்பவர்கள் புனிதரின் அவலநிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர். அவர்களை மன்னித்து விட்டதாக புனிதர் அறிவித்தார்.

கொலையாளி தன் வேலையைச் செய்வதற்கு முன்பாக, எட்மண்ட் காம்பியன் சுற்றியிருந்த மக்களைப் பார்த்து, "உங்கள் அரசியும், என் அரசியுமான அம்மையாருக்காக வேண்டுகிறேன். நீடித்த ஆயுளும், எல்லா நலனும் அவர்களுக்கு உண்டாவதாக" என்று ஜெபித்தார். அவரும் அவரோடு தீர்ப்பிடப்பட்ட குருக்களும் வழக்கம்போல் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டார்கள். முதலில் தூக்கிலிடப்பட்டு, உடல் கீழே விழத்தாட்டப் பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு, உடல் துண்டுதுண்டாக பிரிக்கப்பட்டார்கள்.

St. Henry Walpole
அப்போது வெட்டப்பட்ட புனித எட்மண்ட காம்பியனின் இரத்தத்துளி ஒன்று அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்றி வால்ப்போல் என்ற இளைஞன் மீது சிதறி விழுந்தது. அதன் பலனாய் அவரும் பின்னாளில் சேசு சபையில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் வேதசாட்சிய வரம் பெற்றார்! 

வேதசாட்சியான எட்மண்ட் காம்பியனுக்கு 1970-ம் ஆண்டில் அர்ச்சியசிஷ்டப் பட்டம் வழங்கப்பட்டது!

அர்ச். எட்மண்ட் காம்பியனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!



Download Tamil Christmas songs


வியாழன், 14 டிசம்பர், 2023

கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

 Christus natus est nobis; adoremus
கிறிஸ்து நமக்காக பிறந்துள்ளார் - ஆராதிப்போம்

(உரோமை கட்டளை ஜெபம்)



கிறிஸ்துமஸ் இரவிலே, திருச்சபை சகல விசுவாசிகளுக்கும் இத்தகைய அழைப்பை விடுக்கிறது. அதற்கு உடனே செவி சாய்ப்பாயாக. ஓ எனது ஆன்மாவே, நினைவின் வழியாக பெத்லேகம் சென்று, நமது மீட்பரின் தோற்றத்தைத் தியானி, விவரிக்க முடியாத நேசத்தை நமது கண்கள் காண்கின்றன! உலகை சிருஷ்டித்து. சர்வேசுரன் ஒரு சிறு சிசுவாக குழந்தையாக அவரது தெய்வீக மகிமைகள் அனைத்தும் களையப்பட்டு இருக்கிறார். ஆதலால் நமது அச்சங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து நீக்கி, அனைத்து உள்ளங்களையும் அவரிடம் ஈர்த்துக்கொள்ளும் வடிவமாக இருக்கிறார். நமக்காக தன்னையே அழித்துக் கொள்ளும், அவரது நேசம்தான் எத்தகையது! நம்மீது அவர் எவ்வளவு அன்பு கொண்டுள்ளார்! பாருங்கள், எப்படி அவர் தமது சின்னஞ் சிறு கரங்களை உன்னை நோக்கி விரிப்பதையும், அவர் பின்னாளில் சொல்லவிருக்கும் சுமை சுமந்து சோர்ந்திருக்கும் அனைவரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் நான் தீர்ப்பிடுவதற்காக உலகிற்கு வரவில்லை. ஆனால் உலகை மீட்கவே வந்தேன் என்ற வார்த்தைகள் அவரது இதயத்துடிப்பாக வெளிவருவதை உணருங்கள்.

இந்த தேவக் குழந்தையின் அன்பை யார்தான் தியானிக்க முடியும்! நம்மீது கொண்ட அளவற்ற அன்பே அவரை மோட்சத்திலிருந்து, கீழே இந்த எளிய மாட்டைக் குடிலிலே கொண்டு வந்தது. எதற்காக? நம்மை மோட்சத்திற்கு கொண்டு செல்லவே! அப்படிப்பட்டவரை எப்படி நேசிக்கப் போகிறோம்? அவருக்கு எவ்வாறு பதில் அன்பு காட்டப் போகிறோம்?

நாம் எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும், நமது கடந்த கால பிரமாணிக்கமின்மை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அவரது அன்பான, பரிவிரக்கமுள்ள இதயத்தின் மொழி நம்மை இனிமையாலும் நம்பிக்கை உணர்வாலும் நிரப்புகிறது. இப்படி இரக்கத்தையும், பரிவையும் அன்பையும் வெளிப்படுத்தும் சேச பாலனை வாருங்கள் ஆராதிப்போம்!


source - Salve Regina - December 2007


Download Tamil Christmas Songs MP3

சனி, 9 டிசம்பர், 2023

அமலோற்பவ கன்னிமரி - December 8 - Our Lady of Immaculate Conception

 அமலோற்பவ கன்னிமரி


அன்றியும் வானத்திலே ஒரு பெரிய அடையாளம் காணப்பட்டது; அதாவது: ஒரு ஸ்திரீ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள். அவளுடைய பாதங்களின்கீழ் சந்திரனும், அவளுடைய சிரசின்மேல் பன்னிரு நட்சத்திரங்களுள்ள ஓர் கிரீடமும் இருந்தது. (அரு. காட்சி. 12:1) 




1854 டிசம்பர் 8-ம் நாளன்று பாப்பரசர் முத். போன 9-ம் பத்திநாதர் "Ineffabilis Deus" என்ற பிரகடனத்தில் "...மிக ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிமரி, மனுக்குலத்தைக் காப்பாற்றுகிறவரான சேசு கிறீஸ்துவின் பேறு பலன்களை முன்னிட்டு, எல்லாம் வல்ல சர்வேசுவரனுடைய தனி வரப்பிரசாதத்தாலும், சலுகையாலும் தான் உற்பவித்த முதல்கணத்தில், ஜென்மப்பாவக்கறை எதுவும் அணுகாமல் காப்பாற்றப்பட்டார்கள், இந்த சத்தியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது. ஆதலால் இது உறுதியுடனும் இடைவிடாமலும் விசுவாசிகள் அனைவராலும் விசுவசிக்கப்பட வேண்டும்..."என்று மாதாவின் அமலோற்பவத்தை விசுவாச சத்தியமாக அறிவித்தார்.

இந்த உண்மை பரிசுத்த வேதாகமத்திலும், திருச்சபையின் போதனைகளிலும் காணப்படும் ஒன்று கத்தோலிக்க வேதசாஸ்திரத்தை ஒத்திருக்கும் இந்த சத்தியம் பரிசுத்த கன்னிமரியாயின் மிகப்பெரிய மகிமைப் பாக்கியமாக உள்ளது. இது பல புதுமைகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வேசுவரன் ஆதாமையும் ஏவாளையும் தேவ இஷ்டப் பிரசாதத்தில் மிக உன்னதமான நிலையில் சிருஷ்டித்திருந்தார். ஆனால் விலக்கப்பட்டசு கனியினைத் தின்று, பாவம் கட்டிக்கொண்டு தேவ கோபாக்கினையைத் தண்டனையாக தங்கள் மீது தேடிக் கொண்டனர். சர்வேசுவரன் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள் மிகவும் ஆழ்ந்த பொருள் உள்ளவை: "உனக்கும் ஸ்திரீக்கும். உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள், நீயோ அவள் குதிகாலைத் தீண்டப் பிரயத்தனம் பண்ணுவாய்" (ஆதி. 3:15) இதனை சற்று ஆராய்வோம்: ஆதியாகமத்தில் இந்த வார்த்தைகளை சர்வேசுவரன் எக்காலங்களுக்கென்று மனிதர்களுக்காக கூறியது.

அவருடைய வாக்கு மகிமையாகவும், உண்மையிலும், கம்பீர மாகவும் ஒலித்தது. அவர் முன்பாக, பாவத்தால் நிலை குலைந்து போன ஆதாம், வீழ்ச்சியின் துயரத்தோடு ஏவாள், சோதிப்பவனான சாத்தான் ஆகியோர் நிற்கின்றனர். ஆதாம் ஏவாள் விலக்கப்பட்டக் கனியை உண்ணக்கூடாதென்று கடவுளால் கூறப்பட்டாலும், அவர்கள் அவருடைய பேறுபெற்றப் பிள்ளைகளாகத் திகழ்ந்தனர். ஆனாலும் தீமை நடைபெற்றுவிட்டது. சர்வேசுவரன் தயாளமுள்ள தந்தையாதலால் அவர்களுக்கு ஒரேயொரு நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கினார். அவர் பாம்பை நோக்கி, "கீழ்த்தரமான சாப்பமே, உனக்கும் பெண்ணுக்கும் அழிவுக்குரிய உடன்பாடு நீ சோதித்தாய். அவள் உடன்பட்டாள். இப்போது உனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் முழுமையான பிரிவினையையும், பகையையும் ஏற்படுத்துவோம். அது என்னால் ஏற்படுத்தப்பட்ட பகை" என்று கூறுகிறார்.

அவளது மாசுபட்ட இரத்தத்திலிருந்து, குழந்தைகளையேப் பெறுவாள். ஆனால் நான் அவளது இந்த தலை முறையினரை நிறுத்தி, உனது (பசாசின்) ஆதிக்கமில்லாத ஒரு தலைமுறையைக் கொண்டு வருவேன். நான் ஒரு பெண்ணை உனது எதிரியாகவும், பகையாளியாகவும் ஏற்படுத்துவேன். அவளிடமிருந்து பிறப்பவர் பரிசுத்தராக இருப்பார். அவள் மட்டுமல்ல, அவளது வித்தும் உனது எதிரியாக இருப்பார். நீ அவளால நசுக்கப்படுவாய். நீ அவளைத் தீண்ட முயல்வாய். ஆனால் அவளது ஆன்மாவையோ அல்லது உள்ளத்தை யோ தொடமுடியாது. நீ வீணாக அவளது குதிகாலைத் தீண்ட முயற்சிப்பாய். இப்படியாக மரியாயில், சர்வேசுவரன் தாமே பசாசோடு பகையை மூட்டியுள்ளார். அவளை அணுக முயலும் போதெல்லாம் சாத்தான் தோல்வியே அடையும். ஆனால் அவள் அதன் தலையை நசுக்குவாள். மாதா தாம் உற்பவமான அந்த கணத்திலிருந்து அமலோற்பவியாக இருக்கிறார்கள். சாத்தானால் ஒரு கண நேரத்திலும் கூட மாதாவை வெற்றிகொள்ள முடியவில்லை.

பரிசுத்த கன்னிமரியம்மாள் சம்மனசானவரால் “அருள் நிறைந்தவள்" என அழைக்கப்பட்டார்கள். அருள் நிறைவு என்பது மாதா தனது வாழ்நாளெல்லாம் கடவுளோடு முழுமையாக ஒன்றித்திருந்தார்கள் என்பதைக் குறிக்கும். அவர்கள் எந்த நேரத்திலும் பாவத்தால் கறைபடுத்தப்படவில்லை. கடவுளின் நிறைவான படைப்பாக உருவாக்கப்பட்டார்கள். அமலோற்பவியாக பரிசுத்தவதியாக

அதிதூதரான கபிரியேல் "கர்த்தர் உம்முடனே” (லூக், 1:28) என்றுரைத்து மரியாயோடு சர்வேசுவரன் இருப்பதைக் கூறுகிறார். "சர்வேசுவரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்” (லூக், 1:30) ஆதாம் இந்த வரப்பிரசாதத்தை இழந்ததால் சர்வேசுவரன் அவரை சிங்காரத்தோப்பிலிருந்து வெளியேற்றினார். அவரோடு கடவுள் இருக்கவில்லை. ஆதாம் இழந்தவைகள் அனைத்தையும் மாதா கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் ஆதாமின் பாவத்திலிருந்து விலகியிருந்தது மட்டுமல்லாமல், அவருடைய பாக்கியங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பட்டு விலை மதிப்பில்லாத ஒவ்வொரு வரங்களாலும் அணிவிக்கப்பட்டு படைப்புகளிலேயே மிகவும் உன்னதமான சிருஷ்டியாக உயர்த்தப் பட்டார்கள்.

அர்ச். எலிசபெத்தம்மாள் மாதாவை "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்பட்டதாமே” (லுாக். 1:42) என்று வாழ்த்தினாள். இந்த வாழ்த்து எதற்கு? ஏனென்றால் மரியாயின் வயிற்றின் கனியானவர் வாக்களிக்கப்பட்ட மீட்பரான அவர்களது தெய்விக மகன்! சிங்காரத் தோப்பில் சர்வேசுவரனால் ஏவாளின் பாவங்களுக்காக முன்னறிவிக்கப்பட்ட ஸ்திரியானவள் மரியாயே! மாதா அவரது அன்னையாக ஏற்படுத்தப்பட்டார்கள். ஆகையால் ஒரு சிறு பாவம் கூட அணுகாமல் பாதுகாக்கப்பட்டார்கள். பாவத்தால் பீடிக்கப்பட்ட தாயிடமிருந்து மனுவுரு எடுக்கவோ, சாத்தானால் கவரப்பட்ட பாவக் கறைபட்ட பேழையிலோ அவர் தங்குவதில்லை.

திருவழிபாடுகளிலும், பாரம்பரியத்திலும், தொன்மை கலைச்சித்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட மாதாவின் அமலோற்பவம், விசுவாச சத்தியமாக்கப்பட்ட போது. திருச்சபையின் பாப்பரசரும் வேதபாரகர்களும் இந்த உண்மையை வலியுறுத்தி அநேக நூல்களையும், பிரபந்தங்களையும் எழுதினார்கள்,

கன்னிமாமரி அறியாமையிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருந் தார்கள், ஏனெனில் அவர்களே ஞானத்திற்கு இருப்பிடம்: தீமையிலிருந்து காக்கப்பட்டார்கள். இதனால் நன்மைதனத்திலும் நிறைவிலும் எப்போதும் நிலைத்திருந்தார்கள். ஆகையால் தான் திருச்சபை "ஓ மரியாயே நீர் எத்துணை அழகானவள்; ஜென்மப்பாவத்தின் மாசு உம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை" என்று பாடுகிறது. மரியாயின் சரீரத்தைப் பொறுத்தவரையில் வளர்ச்சி என்ற மனித இயல்பின் பரிணாமத்திற்கு உட்பட்டாலும் ஜென்மப்பாவத்தின் தாக்கம் இல்லாமையால் முழுமையான சௌந்தர்யமுள்ளதாக விளங்கியது. அவர்கள் சுகவீனத்திலிருந்துதடுக்கப்பட்டிருந்தாலும் பசி, தாகம், மனவேதனை ஆகிய உணர்வுகளுக்கு உட்பட்டிருந்தார்கள். அவர்கள் இந்த உலகை விட்டு கடந்து மறுமைக்குச் சென்றதும்கூட சுகவீனமோ. நோய்வாய்ப்பட்டதாலோ அல்ல. மாறாக வல்லமை வாய்ந்த தேவசிநேகமே அவர்களது சரீரத்தை நிலைகுலையச் செய்தது.

மாதாவின் அமலோற்பவத் திருநாளின் கட்டளை ஜெபம், திவ்விய பலிபூசையிலும் கூட மாதாவின் உற்பவத்தின் போது அவர்களது சரீரத்தோடு இணைக்கப்பட்ட, அசாதாரணமான ஆன்ம அழகு பெரிதும் போற்றப்படுகின்றது. கபிரியேல் தூதனால் "அருள் நிறைந்தவளே வாழ்க!" (லுாக். 1:28) என்று கடவுளின் மாதாவை வாழ்த்துவதைப் பற்றிய திருச்சபையின் விளக்கங்கள் மிகவும் அற்புதமானனை. மரியாயைப் போதிய அளவுக்கு வாழ்ந்த வேண்டுமானால் நாமும் கபிரியேல் தாதுவரின் மனப்பான்மையை கொண்டிருப்பது அவசியம். அவைகளின் உயர்வை, உன்னதத்தினை யோசிப்பது அவ்வளவு சிரமமில்லை. விசுவாசத்தோடு சம்மனசானவர் தெய்வீக நன்மைத்தனங்களோடு விளங்கிய மரியாயை ஆராதித்த போது, இந்த தாழ்ச்சியானக் கன்னிகை அந்த மகா உன்னத மகிமை உயர்வுக்கு உயர்த்தப்பட்டதைக் கண்டு வியப்படைந்தாள் மீட்பினுடையவும். மனிதாவதாரத்தினுடையவும் பரமரகசியங்களை முன்னறிவிப்பவராக தாம் ஏற்படுத்தப்பட்ட மரியாதையினால் சம்மனசானவர் மகிழ்ச்சி யடைந்தார்.

அமலோற்பவ மாதாவின் மகோன்னதமான உயர்வு பெருமைகளையெல்லாம் திருச்சபையின் ஜெபங்களிலும், திருவழிப்பாடுகளிலும் வெளிப்படுகின்றன. மரியாயின் நாமம். எல்லா அழகோடும், தூய்மையோடும், ஒளிபொருந்திய சூரிய பிரகாசத்தோடும், அவர்களது வரப்பிரசாத சுகந்தங்களோடும் அகில உலகெங்கும் மகிழ்ந்து கொண்டாடப்படுகிறது. அவர்கள் ஜெருசலேமின் மகிமை உயர்வு. மக்களின் பெருமை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தெய்விக வல்லபத்தின் உருவம் உயர்ந்த பரிசுத்த பர்வதங்களின் உச்சியில் கட்டப்பட்ட கடவுளின் திருநகர்!

ஒ. அனைத்தும் பரிசுத்த பிரகாசமான மாசில்லாத கன்னிகையே, உலகமுண்டாகும் முன்பே நீர் தேர்ந்துகொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டீர்! குற்றங்களின் பாரத்தால் நசுக்கப்பட்டு மீட்பு பற்றிய நிச்சயமில்லாமல் துன்பத்தில் அமிழ்ந்திருக்கும் மனிதன் உம்மை நோக்கி ஏறெடுத்துப் பார்க்கிறான். நீரே எங்களது நம்பிக்கை, உம்மில் உம் வழியாகவே குற்றவாளிகள் வரப் பிரசாதத்தைக் கண்டடைகிறார்கள். நொறுக்கப்பட்டவன் ஆறுதலையும், கைவிடப்பட்டவன் அடைக்கலத்தையும், அறிவிலி ஞானத்தையும்; பாவியானவன் மன்னிப்பையும்; நீதிமான் நிலைமை வரத்தையும் கண்டடைகிறான். தாயே நீரே எங்களது ஏக அடைக்கலம்!



Source: சால்வே ரெஜினா- டிசம்பர் 2006

Christmas - உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்

 உன்னதங்களிலே சர்வேசுரனுக்கு மகிமையும், நல்மனத்தோர்க்கு சமாதானமுமான திவ்ய பாலன்






உலகம் இன்று போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. இறுதிக் காலங்களின் ஓர் அடையாளமாக "தேசம் தேசத்தின் மேலும், இராச்சியம் இராச்சியத்தின் மேலும் விரோதமாய் எழும்பும்" (மத் 24:7) என்று நம் ஆண்டவர்தாமே முன்னுரைத்த தீர்க்கதரிசனம் நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா- யுக்ரேன், இஸ்ரேல்-ஹமாஸ் போன்ற எந்த ஒரு போரும் எந்த நிமிடத்திலும் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் உலகப் போராக மாறக்கூடிய ஆபத்து நம் தலைக்கு மேல் வாளைப் போலத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பிற நாடுகளை ஏமாற்றிக் கைவசப்படுத்து வதற்கென்றே உருவானவை போன்ற நாடுகள் "பேச்சு வார்த்தை" மூலம் சமாதானத்தை நிலை தாட்டப் போவதாகப் பாசாங்கு செய்கின்றன. அவை முதுகுக்குப் பின்னால் இடது கையில் கத்தியை மறைத்துக்கொண்டு வலது கையால் "பாசத்தோடு" கைகுலுக்குகின்றன. வேறு வழியின்றி அவற்றை நம்பும் ஏழை நாடுகள் பல வகைகளிலும் தங்களையே அவற்றிடம் அடகு வைக்கின்றன. உலகத்தில் சமாதானமில்லை. ஏனெனில் இப்போது அது "கடவுளற்றதாக" மாறிக் கொண்டிருக்கிறது. அது சமாதானம் (கடவுள்) இல்லாத இடங்களில் அதைத் தேடுகிறது. உலக செல்வங்களிலும், வெற்று வாக்குறுதிகளிலும், பேராசையிலும் அதைத் தேடுகிறது.

தனி மனிதர்களோ கடவுளை அடியோடு மறந்துவிட்டு, உலக செல்வங்களிலும், உலகக் கேளிக்கைகளிலும், மதுவிலும், சரீர இச்சையிலும் தங்கள் இன்பத்தையும், அதில் சமாதானத் தையும் தேடுகிறார்கள். நல்லொழுக்க விதிகளை மீறுவதில் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள். ஊடகங்கள் சகல அகத்தங்களையும் கொண்டு மனிதனை நிரப்பி, அந்திக் கிறிஸ்துவுக்கான பாதையை மிக எளிதாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கின்றன. மனிதர்கள் ஒளியைத் தேடுவதாக நினைத்துக்கொண்டு. மேலும் மேலும் அதிகக் கடுமையான, "தொட்டுணரக் கூடிய இருளுக் குள் தொடர்ந்து மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களிடம் சமாதானமில்லை.

இன்றைய (சங்கத்) திருச்சபையோ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரட்சணியப் பணியை அடியோடு மறந்துவிட்டு, உலகத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே உலக மதத் திற்கான விதையை அதுவே பூமியில் ஊன்றி, அது வளரத் தேவையான எல்லாவற்றையும் ஆர்வத்தோடு செய்துகொண்டிருக்கிறது. அது தன் திவ்ய எஜமானராகிய உலக இரட்சகரைத் "தெய்வங்களில்" ஒருவராகப் பார்க்கிறது. அல்லது இன்னும் மோசமாக, சமூகப் புரட்சி செய்ய வந்த ஒரு "மிகச் சிறந்த மனிதராகப்" பார்க்கிறது. சங்கச் சபை சுவிசேஷ போதனைகளை ஏளனம் செய்கிறது; சரீர இச்சை, ஓரின உறவு, குருந்துவ அழிவு, துறவற அழுகல், தேவத் திரவிய அனுமானங்களின் முழுச் சிதைவு, விசுவாசமற்ற "இறை மக்களின்" வெறுமையான "மனித நேய" ஒன்றிப்பு ஆகியவற்றைக் கொண்டு, தானே ஒரு முழுமையான விசுவாச மறுதலிப்பை முழுமை யாக்கி விட உழைத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய "திருச்சபையிலும் சமாதானமில்லை!

இந்நிலையில் இதோ! கீழ்த்திசையினின்று ஓர் ஒளி உதிக்கிறது/ பெத்லகேமில் உண்மை யான "சமாதானத்தின் அரசர்" (இசை.9:6) தோன்றுகிறார்? ஆச்சரியத்திற்குரிய முறையில், இன்று உலகம் தேடும் எதுவும் அவரிடமில்லை! பரலோக, பூலோக, பாதாள லோகங்களாகிய திரிலோகங்களையும் ஒரே வார்த்தையால் படைத்த அந்த நித்திய செல்வந்தர், இதோ, மனிதர் களின் இருதயங்களிலும், சத்திரத்திலும் கூட, தமக்கென ஓர் இடமின்றி, மாடும், கழுதையும் அடையும் கொட்டிலில், மூடத் துணியுமின்றி, படுக்கக் கட்டிலுமின்றி, உலசு வசதி ஏதுமின்றி. தீவனத் தொட்டியில் பரப்பிய வைக்கோலின்மீது கிடத்தப்பட்டிருக்கிறார்! யாருக்கு முன்பாக வானத்து நட்சத்திரங்களும் கூட வெறுமையாகவும். ஒரு மூச்சுக் காற்றைப் போலவும் இருக்கின் றனவோ, யாருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறதோ, யாருக்கு முன்பாக மலை களும், குன்றுகளும் துள்ளிக் குதிக்கின்றனவோ, அந்த உன்னத சர்வேசுரன் இங்கே, ஏதும் செய்ய இயலாத எல்லாவற்றிற்கும் தம்முடைய மாசற்ற திவ்ய கன்னிகையாகிய திருத்தாயாரையும், பிதாவால் தமக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட பரிசுத்த விரத்தராகிய நீதிமானையும் சார்ந்திருக்கிறார்! நித்திய பிதாவோடு ஒரே பொருளானவர். கீழ்ப்படிதலின் நிமித்தம் இந்தக் கேடுகெட்ட மனிதனை மீட்பதற்காக, சகல அசுத்தங்களும் நிறைந்த உலகிற்கு இறங்கி வந்திருக் கிறார்! நல்ல வேளையாக, பூலோக மோட்சமாகிய அமல உற்பவ நித்தியக் கன்னிமையின் மாசற்ற இருதயம் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது!

ஆம்! கிறீஸ்துநாதரின் பிறப்பு தரும் போதனை உலகத்திற்கு எதிரானது! அது தேவ விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம், தரித்திரம், கற்பு, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் போதனை! கிறீஸ்து பாலன் உலக இன்பங்களுக்கான, உலகில் சுகமாக மனிதன் வாழ்வதற்கான வழியை அல்ல, மாறாக, நித்திய மோட்சத்தின் வழியை, நித்திய இரட்சணியத்தின் வழியைத் திறந்து வைக்கவே வந்திருக்கிறார்! அவரே கூறுவது போல, அந்த வழி ஒடுக்கமானது! கல்லும், முள்ளும் நிரம்பியது! அதில் நுழைபவன் எவனும் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு, இரத்தம் தோய்ந்த தன் திவ்ய எஜமானரின் பாதச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டியவனாயிருக்கிறான்!

ஆயினும் இது நமக்கு அச்சம் தரத் தேவையில்லை. ஏனெனில் இந்த ஒடுங்கிய வழிக்குள் ஒருவன் நுழைந்த மாத்திரத்திலேயே, உலகம் தர முடியாத, நிரந்தரமான, நல்ல மனத்தவர்களுக்குரிய சமாதானம் அவனை நிரப்பி விடுகிறது. உலகத் துன்பங்களால் கெடுக்கப்படவோ, அழிக்கப்பட்டவோ முடியாத சமாதானம் அது! இன்னும் சொல்லப் போனால், உலகத் துன்பங்களை ஏக்கத்தோடு தேடச் செய்கிற உத்தமமான சமாதானம் அது!

அர்ச்சியசிஷ்டவர்கள் இந்த சமாதானத்தில் வாழ்ந்தார்கள்! பல சமயங்களில் அது தருகிற மோட்சத்தின் முன்சுவையாகிய இந்த நித்திய சமாதானத்தையும், பேரின்பத்தின் சில துளிகளையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகக் கூட அவர்கள் இருந்தார்கள்! நம்முடைய ஞானத் தகப்பனான அர்ச். சவேரியாரின் "இந்திய" வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்! பிரபுத்துவப் பிறப்பு! ஆடம்பரமான இளமை வாழ்வு! மிகச் சிறந்த கல்வி! புகழ்பெற்ற பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி! ஆனால் இதிலெல்லாம் தம்மால் காண முடியாத உண்மையான சமாதானத்தையும், உண்மையான இன்பத்தையும் அவர் தரித்திர வாழ்வைத் தேர்ந்துகொண்ட போது, மட்டற்ற விதமாக அனுபவித்தாரி! இரவெல்லாம் ஜெபத்தில் கழித்து, பகலெல்லாம் கால்நடையாக அல்லது படருகளில் பல ஊர்களுக்குச் சென்று பூசை வைத்து, ஞான உபதேசம் கற்பித்து, ஆலயங்கள் கட்டி, அஞ்ஞானத்தை எதிர்த்துப் போராடிக் கழித்த பின், இரவில், அந்த மணப்பாட்டுக் குகையில் முழந்தாளிட்டபடி தம்முடைய பரவச நிலையில், "போதும்! போதும் என் ஆண்டவரே! தேவரீர் என்மீது பொழிகிற இந்தப் பேரின்பத்தை என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது!" என்று கூக்குரலிடுவதைக் கற்பனை செய்து பாருங்கள்!

இந்தச் சமாதானத்தின் வேர்கள் எதில் ஊன்றியிருக்கின்றன? அவை தேவசிநேகத்தில் ஊன்றியிருக்கின்றன. இந்த தேவசிநேகமோ தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் அடங்கி யிருக்கிறது. அவை தேவ நம்பிக்கையில் ஊன்றியிருக்கின்றன. பெத்லகேமின் திவ்ய பாவனைப் போல, வாழ்வின் அடிப்படை வசதிகள் கூட இல்லாத தரித்திர நிலையிலும், சர்வேசுரனைத் தன் சொந்தமாகக் கொண்டிருப்பவனை விடப் பெரிய செல்வந்தன் எவனும் இல்லை. அந்த வேர்கள் அசைவுறாத தேவ விசுவாசத்தில் ஊன்றியுள்ளன. இன்றைய விசுவாச மறுதலிப்புக்கு மத்தியிலும், புயலடித்தபோதும், வெள்ளம் வந்து மோதிய போதும். திடமான விசுவாசமென்னும் பாறையின் மீது எவனுடைய வாழ்வு கட்டப்பட்டிருக்கிறதோ. அவன் பாக்கியவான். ஆயினும், தன்னுடைய பரிசுத்த வாழ்வின் மூலம், இந்த விசுவாசமாகிய தேவ கொடை என்றென்றும் தன் சொந்தமா யிருப்பதையும், அது நித்திய ஜீவியத்திற்குரிய கனிகளைத் தன்னில் பிறப்பித்து, அவற்றை விளை வித்துக் கனியச் செய்வதையும் அவன் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், "மலை களைப் பெயர்த்தகற்றும்" வல்லமையுள்ளதாக இருந்தாலும் கூட கடவுளுக்கு முன்பாக எந்த மதிப்பும் அற்றதாக இருக்கிற ஒரு விசுவாசம் உண்டு! அது பரிசுத்த வாழ்வில் ஊன்றியிராத. வெறும் போலி விசுவாசம்!

மேலும் அது கடவுளுக்குச் சித்தமானால் பரிசுத்த கன்னிமையில், அல்லது ஜீவிய அந்தஸ்துக்குரிய கற்பில் ஊன்றியிருக்கிறது! கடவுளுக்குச் சித்தமானால், அவரைப் போலவும். அவருடைய திருத்தாயாரைப் போலவும், பரிசுத்த நீதிமானைப் போலவும், பரிபூரண தரித்திரத் தையும் ஏற்றுக்கொள்வதில் அது அடங்கியிருக்கிறது! மரண மட்டுக்கும். அதுவும் சிலுவை மரண மட்டுக்கும் தம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தவரைக் கண்டுபாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருப் பதிலும், அவரால் நமக்கு மேலாக நியமிக்கப்படுபவர்களுக்குப் பாவம் தவிர மற்றெல்லாக் காரியங்களிலும் பணிந்திருப்பதிலும் அடங்கியிருக்கிறது!

இவை இல்லாத கிறீஸ்துமஸ் திருநாட்கள் திவ்ய பாலனின் பார்வையில் "அருவருப்புக் குரியவையாக" இருக்கின்றன என்பதை மறவாதீர்கள், குடில்கள், வீட்டு அலங்காரங்கள், புத்தாடைகள், பரிசுகள், விருந்துகள் இவையெல்லாம் நல்லவைதான். ஆனால் இவற்றில் மட்டுமே இன்று மனிதன் கிறீஸ்து பிறப்பைக் கொண்டாடுவதுதான் இன்றைய பெரும் தீமையாக இருக்கிறது. தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் கிறீஸ்து பிறப்பிற்காகத் தன் ஆத்துமத்தை ஆயத்தம் செய்து வைத்துக் காத்திருப்பதை அவன் நினைப்பது கூட இல்லை. இவைகளைத்தான் செய்திருக்க வேண்டும்; அவைகளையும் விட்டு விடலாகாது (மத்.23:23).மேலும் உங்க ளிடையே வாழும் ஏழைகளையும் மறந்து விடலாகாது! எனவே, அன்புச் சகோதரரே! கிறீஸ்துநாதர் உண்மையாகவே நம் ஆத்துமங்களிலும்,

இல்லத்திலும் வந்து பிறப்பதை உறுதி செய்துகொள்வோம். அப்போது, நல்மனத்தோருக்குரிய சமாதானம் நம்முடையதாகும்; அதுவே உன்னத ஸ்தலங்களில் சர்வேசுரனுக்கு மகிமையாக இருக்கும்.




Source: Matha Malar - நவம்பர் - டிசம்பர், 2023


மரியாயே வாழ்க!

வெள்ளி, 8 டிசம்பர், 2023

அன்னையின் அமலோற்பவத் திருநாள் - Feast of Our Lady of Immaculate Conception

அன்னையின் அமலோற்பவத் திருநாள்

(டிசம்பர்-8)

-சங். J.M.நிக்கொலாஸ் சுவாமி

கன்னிமரியம்மாள் கடவுளின் அன்னை ஆக வேண்டியவள் என்னும் ஒரு காரணமே அவள் ஜென்மப் பாவ மின்றி உற்பவித்திருக்கவேண்டும் என்பதற்குப் போதும். 



ஒரு கன்னியின் வயிற்றில் கடவுள் மனிதனாக உற்பவிக்கத் திருவுளமிரங்குகிறார். இது மகத்தான ஒரு காரியம். இதை நிறைவேற்ற, நன் இருக்கையின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றிருந்த ஒருவரைத் தவிர, வேறு யாரையும் கடவுள் தேர்ந்தெடுக்க முடியாது. கடவுளது நரம்புகளில் ஓட இருந்த இரத்தம் அதன் ஊற்றிலே கறைப்பட்டிருக்கலாமா? நித்திய வார்த்தையானவர் மரியம்மாளின் உதரத்தை தன் இருப்பிடமாக்கத் தீர்மானித்தார். அந்தப் பரிசுத்த ஸ்தலத்தைப் பசாசு முதலில் தனது வாசஸ்தலமாக்க அவர் சம்மதிப்பாரா? பசாசாகிய சர்ப்பத்தின் தலையை நகக்க வேண்டிய அவன், அவள் ஒரு வினாடி முதலாய் மாசின் அதிகாரத்தில் இருப்பது நியாயமா? கடவுளுடையத் தாயாக வேண்டிய அவள் உற்பவித்த வினாடியிலிருந்தே தன் உயர்பதவிக்கு ஏற்புத் தூய்மையுள்ளவளாயிருந்தாள்; பரிசுத்தவதியாயிருந்தாள்.

அவள் கடவுளுடைய மாதாவாக வேண்டியவள். அதே கடவுளுடைய பிதா. பரலோக பிதாவே. தம்முடைய சுதனுக்கு மாதாவாக வேண்டியவளை, அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே, சம்மனசுக்களைவிட அதிகத் தூய்மையும், பரிசுத்தமுமுள்ளவளாக்கினார். நித்திய வார்த்தையானவர். தம் தாயாகும்படி ஒரு பெண்ணை நித்தியத்திலிருந்தே தேர்ந்தெடுத்தார். அவள் எப்பொழுதும் முற்றிலும் தூய்மையுள்ளவளாயிருக்கும்படிச் செய்தார். அவர் தம் தாய்க்குத் தம்மால் இயன்ற அளவு நன்மை செய்ய விரும்பினார். தம்முடன் அவள் ஒன்றித்துப் பசாசை முறியடித்து, இரட்சண்ய வேலையைச் செய்து முடிக்கவேண்டும். எனவே அவளது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே அவளை அலங்கரித்தார், அவளிடம் பாவக்கறை படாதபடி பார்த்துக்கொண்டார். மரியாயிடமாய் மனித கடவுளை உருவாக்க வேண்டியவர் இஸ்பிரித்துசாந்து: இவ்விதம் மரியாயை அவர் தம் நேசபத்தினி என்னும் புதவிக்கு உயர்த்த இருந்தார். எனவே அவள் முற்றிலும் பரிசுத்தவதியாகவும். ஒரு சிருஷ்டி கொண்டிருக்க வேண்டிய புண்ணியங்கள் அனைத்தையும் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். ஆதலின் மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே பாவமின்றி இருக்கவேண்டும் என்றும். சகல வரப்பிரசாதங்களையும் நிரம்ப கொண்டிருக்க வேண்டும் என்றும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும், சம்மனசுக்களையும் விட அவள் அதிக பரிசுத்தவதியாயிருக்க வேண்டும் என்றும் கடவுள் நித்தியத்திளிருந்தே தீர்மானித்தார். இவ்விதம் மாதாவாக வேண்டிய அவளுக்கு அமலோற்பவம் என்னும் மகிமை வழங்கப்பட்டது. அகில உலக கத்தோலிக்கரும் அக மகிழ்ந்து ஆர்ப்பரிக்க, 9-ம் பத்திநாதர் பாப்பரசர். கன்னிமரி ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள் என்பது வேத சத்தியம் எனப் பிரகடனம் செய்தது முற்றிலும் நியாயமே. மரியாயின் கிரீடத்தை அலங்கரிக்கும் இப்புதிய இரத்தினத்தை முன்னிட்டு மரியாயை நாம் வாழ்ந்துவோமாக; திருச்சபை யுடன் சேர்ந்து, "என் நேசமுள்ளவளே, நீர் முற்றிலும் அழகு வாய்ந்தவள், ஜென்மப் பாவத்தின் தோஷம் உம்மிடத்தில் இருந்ததில்லை" என்போம்.

மரியாயின் புண்ணியங்கள் அனைத்திற்கும் ஆதித்தொடக்கம் அவளது அமல உற்பவமே மரியாயி தனது உற்பவத்தின் முதல் வினாடியிலிருந்தே மிகப் பரிசுத்தவதி என்றாலும், அவள் மென்மேலும் தன்னை உயர்த்திக்கொண்டு வந்தாள். புண்ணியத்தில் அதிகரித்து வந்தாள். உதிக்கும்பொழுதே மிக்க பிரகாசத்துடன் இருந்த இந்த நட்சத்திரமானது விடாமல் எழும்பிக்கொண்டு வந்ததுடன், பரிசுத்ததனம் என்னும் கதிர்களை தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் வீசிவந்தது. சாதாரண மக்களின் ஆத்துமங்களில் இருக்கும் வரப்பிரசாதத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; நன்மை செய்ய ஆசிக்கும்போது எதிர்ப்பு உண்டாகிறது. தீமையை நோக்கி நாட்டம் இருக்கிறது. நாம் பிறந்ததிலிருந்தே இவ்விரண்டும் நம்மிடம் உண்டு. ஆனால் மாசின்றி உற்பவித்த மரியாயிடம், வரப்பிரசாதமானது எதிர்ப்பை காணவில்லை: ஆத்துமத்தின் சகல வாய்க்கால்களும் வரப்பிரசாதத்தை ஏற்க தயாராயிருந்தன. அவளது ஆத்துமத்தில் வரப்பிரசாதமானது தன்னைத் தடையின்றி பரப்புகிறது, வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சகல புண்ணியங்களும் அங்கு வளரச் செய்கிறது. ஆகவே, உள்ளும் புறமும் அழகுடன் இருந்த மரியம்மாள் மோட்சத்தின்முன், கண்ணைப்பறிக்கும் வெண்மையான அழகிய லீலி மலர்போல் காணப்பட்டாள். எளிய குடிசை என்றாலும் அரசர்களும் அதை மதிக்கச் செய்யும் தாழ்ச்சி அவளிடம் இருந்தது: வேதனையாலும் முறியடிக்க முடியாத பொறுமையை அவள் கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த இனிமையானது எந்த எதிர்ப்பாலும் பாதிக்கப்படவில்லை. ஆபத்து நேரத்திலும் அவள் மன அமைதியுடன் இருந்தாள். மலைகளை அசைக்கும் விசுவாசம் மாத்திரமல்ல, ஆனால் நித்திய வார்த்தையானவரை பரலோகத்திலிருந்து இறங்கச் செய்யும் விசுவாசம் அவளிடம் இருந்தது; அபிரகாமிடம் இருந்த நம்பிக்கையை விட அதிக வீரத்தனம் வாய்ந்த நம்பிக்கை மரியாயிடம் இருந்தது; அவளது சிநேகம், எரியும் சுவாலைக்குச் சமம். மரியாயின் பரிசுத்ததனம் எல்லா உள்ளங்களையும் பரவசப்படுத்தக்கூடியது. "பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள். நீயோ சகலரையும் மேற்கடந்தாய்” (1. 31:29), "மகா உன்னதமானவர் தமது வாசஸ்தலத்தை அர்ச்சித்தா?" (சங். 45:3). எனவே மரியாயின் உள்ளத்தை மிக மகிழ் விப்பது, அவள் பரலோக இராக்கினி கான்பதல்ல; பூலோக அரசி என்பதல்ல; ஆனால் அவளது அமல உற்பவமே. அதனாலேயே லூர்து கெபியில் அன்னையின் பெயரை பெர்நதெத் வினவியபோது. "அமலோற்பவம் நாமே" என அவள் பதிலளித்தாள்.

அன்னையைப் பின்பற்றி புண்ணிய பாதையில் நாம் எப்பொழுதும் முன்னேறிக்கொண்டிருக்கவேண்டும். முன்னேறியது போதுமென ஒருபோதும் சொல்லலாகாது. கடவுளுக்குப் பிரியப்படுவதே அனைத்திலும் நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.

பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே, உம்மைத் தேடிவருகிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமலோற்பவமானது வரப்பிரசாதங்களின் களஞ்சியம்

 இயற்கையானது தாய்மாரின் உள்ளங்களில் ஒருவித பவவீனத்தை வைத்திருக்கிறது; அதனாலேயே, பிள்ளைகள் நாங்கள் கேட்பதற்கு அதிகமாகவே தாய்மாரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதேபோல் மரியாயை அமலோற்பவி என வாழ்த்துகிறவர்களின் மீது ஓர் அன்புணர்ச்சி மரியாயின் உள்ளத்தில் இருக்கிறது. பாவச் சோதனையால் துன்புறுத்தப்பட்ட ஆத்துமங்கள் பாவமில்லாத மரியாயைக் கூவியழைத்திருக்கிறார்கள். அவர்கள் சோதனையில் வெற்றிபெற்றார்கள்; துன்புற்ற ஆத்துமங்கள் ஆறுதலடைந்தன; கலங்கியிருந்த உள்ளங்கள் அமைதியடைந்தன; தைரியமற்றிருந்தோர் திடன் பெற்றார்கள். முற்றுகையிடப்பட்ட பட்டணங்களின் வீடுகளின் கதவுகளில் "மரியாயி பாவமின்றி உற்பவித்தவள்” என எழுதியமையால் நாசத்தினின்று அவை காப்பாற்றப்பட்டன. நெருப்புக்கு இரையாக இருந்த கட்டிடங்கள் ஆயிரம் ஆபத்துக்களால் சூழப்பட்டிருந்த தனி நபர்கள் இந்த வார்த்தைகளை எழுதியதால் அல்லது அவற்றை உச்சரித்ததால் அழிவினின்று தப்பித்தார்கள். பாவமில்லாமல் உற்பவித்த மரியாயின் உருவத்தைத் தாங்கிய சுரூபங்கள் உலகத்தை அதிசயங்களால் நிரப்பியிருக்கின்றன. அந்தச் சுரூபமானது துன்பங்களை விரட்டி யடித்திருக்கிறது. வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. பாவிகளை மனந்திருப்பியிருக்கிறது. இதனால் அது புதுமை சுரூபம் என எங்கும் அழைக்கப்படுகிறது. பாரீஸ் நகரின் மத்தியில் இருக்கும் ஜெய இராக்கினி மாதாக்கோவில் ஒரு காலத்தில் முற்றிலும் கைவிடப்பட்டதாயிருந்தது; அதை மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு அர்ப்பணம் செய்ததும், உலகிலேயே மிகப் பிரசித்திபெற்ற ஆலயமாயிற்று அது. மக்கள் அந்த ஆலயத்தை விரும்பி சந்திக் கிறார்கள். அநேக புதுமைகள் அங்கு நடக்கின்றன. 9-ம் பத்திநாதர் பாப்பானவர் எதிரிகளின் தாக்குதல்களின் மத்தியில் தம்மை, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயிக்கு ஒப்புக் கொடுத்தார். இதன் விளைவாக, பேரதிசயம் நடந்தது. கொடிய சத்துருக்களால் சூழப்பட்டிருந்த உரோமை நகரில் ஒரு பொதுச் சங்கத்தை நடத்தக்கூடியவரானார். என்னென்ன துன்பம் வந்தாலும், திருச்சபை அதையெல்லாம் மேற்கொள்ளும்; மாசற்ற மரியாயி வழியாக திருச்சபை வெற்றிப் பெற்றுவரும். நமக்குத் துன்பங்களும், சோதனைகளும் வரும்போது அமல உற்பவ அன்னையிடம் நம்பிக்கையுடன் செல்வோமாக.

அமல உற்பவம் நமக்குப் படிப்பினைகளைத் தருகிறது

அமல உற்பவ அன்னையைப் போல் நாம் தூய உள்ள முள்ளவர்களாய் இருக்கவேண்டும். திவ்விய நன்மை உட்கொள்ள இந்தத் தூய்மை அவசியம். மாமிசமான வார்த்தையானவரை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள மரியாயி இத்தனை தூய்மையாயிருப்பது தேவையாயிருந்தால், அதே கடவுளை திவ்விய நற்கருணை வழியாக உட்கொள்ளும் நாம், மாசு மறுவற்றவர்களாய் இருக்க வேண்டு மல்லவா? மங்கள வார்த்தை நாளன்று மரியாயி தேவசுதனை தன் உதரத்தில் ஏற்றாள். நாமோ நம் வாழ்நாளில் பலமுறை அவரை ஏற்றுவருகிறோம்.

நாம் நம் மீது, நமது சிந்தனையின் மீது, நமது புத்தியின் மீது, நமது இருதயங்கள் மீது, விழிப்பாயிருக்க வேண்டுமென்று அன்னையின் அமல உற்பவம் படிப்பிக்கின்றது. முற்றிலும் தூய்மையுள்ளவளான, நேர்மையுள்ளவளான, மாசுமருவற்ற, மரியாயி தன் மீது மிக விழிப்புடனிருந்திருக்க, மிக்கபலவீனரும். தீமை மீது அதிக நாட்டம் கொண்டவர்களும், எளிதில் தவறுகிறவர்களுமான நாம் இன்னும் அதிக கவனத்துடன் நம் மீது விழிப்பாயிருக்க வேண்டும்.

உத்தமதனத்தின் பாதையில் நாம் விடாது முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும் அமல உற்பவ அன்னை கற்பிக்கிறாள். சகல புண்ணியங்களையும் நிரம்பக் கொண்டிருந்த மரியாயி, தன் வாழ்நாளெல்லாம் புண்ணியங்களில் வளர்ந்து வந்தாள். வரப்பிரசாதத்துடன் ஒத்துழைத்து, அதிக பரிசுத்தவதியாகும் வண்ணம் உழைத்தாள். குறைகள் நிறையப்பெற்றுள்ள நாம் சோம்பேறிகளாய் முன்னேறாமல், பழைய நிலையிலேயே திருப்தியடையலாகாது. முன்னேறாதிருப்பது பின்வாங்குவதாகும். நாம் ஒவ்வொரு நாளும் அதேக வரப்பிரசாதங்களைக் கடவுளிடமிருந்து பெற்றுவருகிறோம். அவற்றுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். நமது இவ்வுலகப் பற்றுதல்களை அகற்றி, கடவுள் அழைக்கும் பரிசுத்த நிலையை நோக்கி முன்னேறிச்செல்ல வேண்டும்.

"என் அன்பே, நீ பூரண ரூபவதி, உன்னில் பழுதே கிடையா!"(உந்நத சங்கீதம். 4:7



Source: Sancta Maria (Magazine) Nov. - Dec. 2012

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 16 - அர்ச். ஹென்றி வால்போல் சே.ச - St. Henry Walpole. S.J

 'Sanguis Martyrum Semen Christianorum'

(வேதசாட்சிகளின் இரத்தம் கிறீஸ்துவர்களை விளைவிக்கும் வித்து!)


கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத் விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிகத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது.)



அது 1581 டிசம்பர் முதல்நாள் அன்று அதிகாலையிலிருந்தே மழை · ஒரே அடை மழை! விடாது பெய்யும் அந்த மழையையும் அலட்சியம் செய்து பெரும் கூட்டம் லண்டன் டைபர்ன் (Tyburn)சிறைச்சாலையின் முகப்பிலே நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக அங்கே மரண தண்டனை விதிக்கப்படும். மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றப்படும். தண்டனைக் காட்சியைக் காண மக்கள் வருவர். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியுள்ளனரே? என்ன காரணம், யார் தண்டனை பெறப் போகிறார்கள்? ஆம்! இன்று லண்டன் மாநகரின் புகழ்பெற்ற பேச்சாளரும் எழுத்தாளரும் சேசு சபை குருவுமான எட்மண்ட் காம்பியன் மரண தண்டனை பெறவிருக்கிறார்.

அங்கே கூடியிருந்த மக்கள் மனதில் “ஐயோ! இப்படி கொடூர தண்டனை பெறுவதற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன? அரசி ஏற்படுத்தியுள்ள புராட்டஸ்டான்ட் பதிதத்தை ஏற்கவில்லை பாப்பரசரை மறுத்து அரசியே திருச்சபையின் தலைவி என்பதை ஏற்க மறுத்தது இங்கிலாந்து நாட்டில் பாப்புவின் வேதமான கத்.திருச்சபையை அரசுக்கு விரோதமாக போதித்தது இவைகளே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள். இதற்காகத் தானே இங்கே தினமும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது" என்றெல்லாம் எண்ண அலைகள் ஓடச் செய்வதறியாது திகைத்தனர். தங்களது பொக்கிஷமான கத். விசுவாசம் தங்கள் நாட்டில் அழிக்கப்பட்டு விட்டதே என்ற பரிதாப ஆதங்கம் உள்ளத்தில் எழுந்தாலும் கொடூர தண்டனையைக் குறித்து வாயடைத்தும் போனார்கள்.

இதற்குள் அங்கே ஆரவாரம் எழ, எட்மண்ட் காம்பியன் குரூரமாக இழுத்து வரப்பட்டார். ஒளி வீசிப் பிரகாசமாக ஜொலிக்கும் அவரது முகத்தில் எந்தவிதமான மரண பயமோ வேதனையோ நடுக்கமோ இல்லாததைக் கண்டு மக்கள் கூட்டம் திகைத்தது. அவர் மக்களை ஆசிர்வதிப்பதும், ஏதோ கூறி ஜெபிப்பதும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்திற்கு பரபரப்பை ஊட்டியது. அவர் தூக்குமரத்தின் அருகே நின்று பேசுகிறார். அதனை கேட்க மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். சப்தம் சரியாக கேட்கவில்லை. "...நான் சத்திய வேதத்திற்காக மரணமடைகிறேன். இங்கிலாந்து அரசிக்காக ஜெபிக்கிறேன்... என் நாடே - இங்கிலாந்து தேசமே... உன் செல்வமான கத்தோலிக்க விசுவாசத்தை பெற்றுக் கொள்..." என்ற அவரது கடைசி பிரசங்கக் குரல் சன்னமாக பலவீனமாக ஒலிக்கிறது

அங்கே கூட்டத்தை விலக்கியவாறு முண்டி அடித்துக்கொண்டு ஒரு இளைஞன் முன்னேறினான். ஐயோ! தமது மனங்கவர்ந்த "காம்பியன் சுவாமி" மரண தண்டனை அடையவிருக்கிறாரே. நாம் சற்று பிந்தி போய் விட்டோமே, அவரது முகத்தை கடைசியாக ஒரு தடவையாவது பார்க்கவேண்டும் என்ற அவனது மனம் பரபரக்க கூட்டத்தை முரட்டுத்தனமாக விலக்கி முன்னேறினான். எரிச்சலடைந்த மக்கள் விலகி வழிவிட "அப்பா! இப்போது முதல் வரிசையைப் பிடித்தாகிவிட்டது. ஐயோ! அங்கே காம்பியன் தூக்கிலிடப்பட்டு விட்டாரே. இதோ அவரது உடல் தூக்குக் கயிறிலிருந்து வெட்டப்பட்டு கீழே விழத்தாட்டப்படுகின்றனவே... ஐயகோ! ஆ! அவரது உடல் கொடுமையாக கை கால்கள் வெட்டப்படுகின்றனவே. ஆ! இதென்னக் கொடூரம்!" அந்த இளைஞனின் உள்ளம் திருதிருவென எரிந்தது. கழிவிரக்கத்தால் துவண்டது. "ஆ! ஏன் இந்த கொடுமை. விசுவாசத்திற்கு பிரமாணிக்கம் காத்ததல்லவா! அப்படியானால் விசுவாசம் எத்துணை மேலானது, உயர்ந்தது, உன்னதமானது. மரணத்தைவிட சிறந்தது... விசுவாசம்". அவனது மனம் விசுவாச உறுதியால் நிரம்பியது. அச்சமயம் "ஆவென்ற" அலறல் அழுகைக் குரல் மக்களிடமிருந்து பெருக்கெடுக்க சலசலப்பு தோன்றியது.

அப்போது சற்று தூரத்தில் உடல் வெட்டப்படும் வேதசாட்சியின் இரத்தத் துளிகள் பீறிட்டு பாய்ந்து நாலா திசையிலும் சிதறி பூமியை நனைத்தது. அதன் ஒரு துளி முன் வரிசையில் மனவேதனையோடும் அச்சத்தோடும் நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் தெறித்து விழுந்தது. வேதசாட்சியின் புனிதமான இரத்தம் தம் மீது தெறித்ததைக் கண்ட அந்த 23 வயதே நிரம்பிய இளைஞன் பதட்டமடைந்தாலும் மிகுந்த பக்தியோடு தமது கைக்குட்டையால் அதனை மெல்ல துடைத்தான். பொக்கிஷமென அதனை பக்தியோடு தம்மிடம் வைத்துக்கொண்டான். அந்த கணத்திலேயே அவனது உள்ளம் உருகத் துவங்கியது. விசுவாச உறுதியடையத் துவங்கியது.... ஆம்! அவன் மாறினான். உலக வாழ்வில் திளைக்க விரும்பிய அவன் இன்று முழு மனமாற்றம் அடைந்தான். அவன் வாழ்வு தலைகீழாகிப் போனது. ஆம்! அவனும் இன்னும் 10 ஆண்டுகளில் தன்னையே சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து குருவாகி, அங்கே கொல்லப்பட்ட காம்பியன் சுவாமியைப் போலவே சுத். விசுவாசத்திற்காக இதே இடத்தில் இதே சித்திரவதையைப் பெற்று மரணமடையவிருக்கிறான். அந்த இளைஞன் யார்? அவன்தான் ஹென்றி வால்போல் ஆம். வேதசாட்சியான அர்ச். ஹென்றி வால்போல் சே.ச.

இளமைப் பருவம்

ஹென்றி வால்போல் லண்டனை அடுத்த நார் ஃபோல்க் (Norfolk) நகரைச் சேர்ந்த கிறீஸ்டோபர் வால்போல் என்பவரின் மகனாக 1558 அக்டோபர் திங்களில் பிறந்தார். தந்தை பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், ஹென்றியின் மாமன் ஜான் வால்போல் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தார். 1720-ல் இங்கிலாந்தின் முதல் பிரதம மந்திரியான சர் இராபர்ட் என்பவரின் கொள்ளுத் தாத்தாவான கால்பட் வால்போல் என்பவர் ஹென்றியின் நெருங்கிய உறவினர். புகழ்பெற்ற குடும்பத்தில் வந்த ஹென்றி பிறந்தபோது அரசி மேரி ஆட்சியில் இருந்தாள் எனவே சுத்தோலிக்கர்கள் பயமின்றி வாழ்ந்தனர். 8வது வயதில் நார்விச் இலக்கண பள்ளிக்கு அனுப்பப்பட்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஹென்றி லத்தீன், கிரேக்கம், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இயல்பாகவே பாடல்கள் எழுதுவதில் திறம் பெற்றிருந்தார்.

அவன் பள்ளியில் படிக்கும் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான அலைகள் எழுத் துவங்கின. பாப்பரசருக்கெதிரான செயல்கள் மீண்டும் அரங்கேறத் துவங்கின. தனது 17வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அர்ச். பீட்டர் சுல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்கலானார். அச்சமயத்தில் ஆட்சி பொறுப்பில் வந்த எலிசபெத் அரசி கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான செயல்பாடுகளால் புராட்டஸ்டாண்ட் பதிதம் மீண்டும் தலைதூக்கியது. தங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அரசியான எலிசபெத் தனது தந்தை 8-ம் ஹென்றியையே மிஞ்சும் அளவில் கலாபனையைத் தூண்டி விட்டாள். இங்கிலாந்தில் திருச்சபையின் தலைவர் அரசியே என்ற சட்டத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு உறுதி மொழி வழங்கவேண்டும். அப்படி உறுதிமொழி வழங்கிய மாணவர்கள் மட்டுமே தங்கள் கல்லூரி பட்டப்படிப்பில் தகுதியானவர்களாக உயர்த்தப்பட்டார்கள். இதனை சற்றும் விரும்பாத ஹென்றி அப்படி தேவதுரோகமான சட்டத்தை ஏற்றுப் பட்டம் பெறுவதைவிட, பட்டமே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். எனவே கல்லூரியி விருந்து வெளியேறி 1579-ல் தமது 21-வது வயதில் Grays Inn என்ற விடுதியில் பணியாளராக சேர்ந்தார். அந்த ஆண்டில் தான் காம்பியன் குருப்பட்டம் பெற்று, இங்கிலாந்தில் கத். விசுவாசத்தை மக்களிடையே போதிப்பதற்கு இரகசியமாக இங்கிலாந்தில் நுழைந்தார்.

Grays Inn என்ற அந்த விடுதி கத்தோலிக்க இளைஞர்கள் ஒன்று சேரும் இடமாகத் திகழ்ந்தது. அங்கே பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் ஒரு இயக்கமாகச் சேர்ந்து Douai மற்றும் உரோமையிலுள்ள ஆங்கில கல்லூரியில் பயிலும் குருமாணவர்களுக்கு உதவி செய்து வந்தனர். அந்த வகையில் காம்பியன் சுவாமியின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் ஆங்கிலிக்கன் பதிதத்தை எதிர்த்து கத். விசுவாசத்தை பாதுகாக்க 10 காரணங்கள் என்ற தனது புகழ்பெற்ற நூலினை வெளியிட அச்சகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் அர்ச். காம்பியனைக் கண்டு அவரது ஆற்றல்மிக்க விசுவாசம் நிறைந்த பிரசங்கங் களையும், வீர உரைகளையும் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார் ஹென்றி வால்போல். அதனால் தமது விசுவாச வாழ்வில் உறுதியடைந்தவர் காம்பியன் சுவாமி பிடிபட்டு விசாரணைக் கைதியாக்கப்பட்ட செய்தியால் வேதனை அடைந்தார். பின்னர் 1581 டிசம்பர் முதல் நாள் அன்று அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும் போது அவரை கடைசி தடவையாக பார்க்கச் சென்றார். அப்போதுதான் காம்பியன் சுவாமியின் இரத்தத் துளிகள் முன் வரிசையில் பதைபதைப்புடன் நின்றிருந்த ஹென்றியின் மீது தெளித்தது. அதுவே அவரது வாழ்வை மாற்றக் காரணமாயிற்று.

தேவ அழைத்தல்

தமது அன்புக்குரிய சங். காம்பியன் சுவாமியின் வேதசாட்சியத்தைப் பார்த்ததிலிருந்து ஹென்றியின் உள்ளம் மாறிப்போனது. அவரைப் போலவே தாமும் விசுவாசத்தைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழத் துவங்கியது.

காம்பியனின் வாழ்வு, அவரது மரணம் பற்றிய நினைவுகள் மனதில் எழ அவைகளை கவிதையாக எழுதினார். "மிகவும் புகழ்பெற்ற புண்ணியம் நிறைந்த குருவான எட்மண்ட் காம்பியனின் வாழ்வும் மரணமும் பற்றிய கல்லறை வாசகம்" என்ற தலைப்பில் 30 பத்தி களைக் கொண்ட கவிதைத் தொகுப்பாக அது உருவெடுத்தது. அதன் இரு பத்திகள் கீழேத் தரப்பட்டுள்ளன: 

"....அவர் வார்த்தைப்பாட்டால் வந்தார் பாவத்தை வென்றிடவே: அவரது ஆயுதம் ஜெபமே, வார்த்தைகளோ காக்கும் கேடயமே; மோட்சமே அவரது ஆறுதல், ஆனமாக்களை வெல்வதே அவரது ஆவல்; பசாசே அவரது எதிரி, பாவ உலகமே அவரது படைக்களம்; மகிழ்ச்சியே அவரது வெற்றி, நித்திய இன்பமே அவரது கூலி; கிறீஸ்துவே அவரது தலைவர், முடிவில்லா காலமுமாகவே அவருக்கு வரப்பிரசாதங்களை அருளிய சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக; தமது வேதசாட்சிகளை வாழ்த்திய கிறீஸ்துவுக்கு நன்றி என்றுமே எஜமானரின் திருமுகதரிசனமே அவரது மகிழ்ச்சி; அவரை எதிரியாகப் பாவித்தவர்களுக்குச் சாபமே. இத்தகைய மனிதரை தோற்றுவித்த கிறீஸ்துவின் நாமமே, எந்நாளும் வாழ்த்தப்பட நமக்குக் கடனே...!"

அவரது இந்த கவிதை தொகுப்பை ஹென்றி வாலேன்கர் (Henry Vallenger) என்ற செல்வந்தர் வெளியிட முன்வரவே அது அச்சிட்டு கத்தோலிக்க மக்களிடையே விநியோகிக்கப்பட்டது. அதன் ஒரு நகல் அரசின் கைகளில் சிக்கவே வந்தது ஆபத்து. உடனே அனைத்து பிரதி களையும் கைப்பற்றி அழிக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட, அச்சிட உதவிய ஹென்றி வாவேன்கர் பிடிபட்டார்.

கொடிய வாதனைகளிலும் எழுதியவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட (அர்ச். ஹென்றி வால்போல்) அவருக்கு 100 பவுண்ட் பணம் அபராதம் விதிக்கப்பட்டு அவரது இரு காது மடல்களும் வெட்டப்பட்டன! கவிதை பிரதிகளை வைத்திருந்ததற்காக பல கத்தோலிக்க இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே விடுதியில் பணியாற்றி வந்த ஹென்றி வால்போல் தமது சக தோழர்களிடையே காம்பியன் சுவாமியின் வீர வைராக்கிய மரணத்தைப்பற்றி எப்போதும் எடுத்துக்கூறவே, அவர்களில் அநேகர் கத். விசுவாசத்தில் உறுதிப்பெற்றனர். அதனாலேயே அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை ஹென்றியின் மீது விழத் துவங்கியது. கவிதை எழுதியது அவர்தான் என்ற சான்று அரசுக்கு எழவே, கைதா வதிலிருந்து தப்பிக்க விடுதியிலிருந்து வெளியேறி தமது சொந்த Norfolk வீட்டிற்குச் சென்றார். இதற்கிடையில் அரசின் தேடுதல் வேட்டைத் துவங்கவே, சிலநாட்கள் பதுங்கு குழியில் பதுங்கி வாழ்ந்து வந்த அவரது உள்ளத்தில் காம்பியன் சுவாமியைப் போல குருவாக வேண்டும், அவரைப் போலவே தமது நாட்டில் கத். விசுவாசத்தை மீண்டும் மலரச் செய்ய உழைக்கவேண்டும் என்ற எண்ணம் உறுதியடையத் துவங்கவே, இரவுபகலாக காடுகளில் மறைந்து நடந்தே New Castle என்ற இடத்திற்கு வந்துசேர்ந்து பிரான்ஸ் நாட்டுக் கப்பலில் பயனித்து Rheins நகருக்கு 1582 ஜூலை 7-ம் நாள் வந்து சேர்ந்தார். 

பின்னர் Douai நகர் வந்து அங்குள்ள ஆங்கில கல்லூரியில் சேர்ந்து குருத்துவக் கல்வியை பெறலானார். கர்தினால் ஆலன் ஆண்டகையின் ஆதரவைப் பெற்று Rheins நகரில் 8 மாதங்கள் வேதசாஸ்திரம் கற்ற அவர் 1584 பிப்ரவரி 2-ம் நாளன்று தமது 26-வது வயதில் சேசுசபையில் உட்பட்டார். அங்கே ஆயத்தநிலை தயாரிப்பில் இரு வருடங்கள் செலவிட்டபின், குருத்துவக் கல்வியில் தொடர்ந்து, தமது 30-வது வயதில் 1588 டிசம்பர் 17-ல் பாரீசில் குருப்பட்டம் பெற்றார். Brussels அனுப்பப்பட்ட அவர், வேதம் போதிக்கும் ஆவலால் அதற்கான பயிற்சியைப் பெற்று, சேசுசபை உயர் தலைவரின் அனுமதியோடு இங்கிலாந்துக்கு வேதம் போதிக்க அனுமதிக்கப்பட்டார். அதற்காக 1593, 4-ம்நாள் மாட்ரீட் நகர் வந்து காத்திருந்தார். அப்போது லண்டனில் பிளேக் நோய் பரவியிருந்ததால், சுப்பல் பயணம் நிறுத்தப்பட்டி ருந்தது. ஆனாலும் வேதபோதக ஆவலால் நிறைத்திருந்த ஹென்றி வால்போல் சுவாமி எப்படியாவது விரைவில் இங்கிலாந்துக்கு சென்றுவிட வேண்டும் என்று துடித்தார். குருக்கள் இங்கிலாந்திற்குள் வர தடை செய்யப்பட்டிருந்ததால் இரகசியமாகவே அங்கு செல்ல வேண்டும் என்பதால் "போர்கால கப்பல்கள் Vessels of War" என்றழைக்கப்பட்ட கப்பலில் பயணத்தைத் துவக்கினார். வேலை வாய்ப்பைத் தேடி இங்கிலாந்து செல்லும் இரு இளைஞர்களும் உடன் சென்றார்கள். அவர்களில் ஹென்றி சுவாமியின் சொந்த சகோதரனான தாமஸ் வால்போலும் ஒருவர்.

கைதுசெய்யப்படல்!

பயணத்தின் போது கடுமையான புயல் விசியநால் இங்கிலாந்தின் Norfolk பகுதியில் Bridlington என்ற ஊரில் கரைசேர்ந்தனர். அவர்களோடு மேலும் இரு கப்பல்களும் அங்கே சேர்த்து கரை ஒதுங்க, வந்தது. ஆபத்து! ஆம்! அந்தக் கப்பல்களில் ஒன்றில் அரசாங்க ஒற்றனும் இருந்தான், அவன் அவர்களுக்கு முன்பாகவே துறைமுகத்தினுள் இறங்கி யார்க் நகர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினான்.

நடந்ததை அறியாத மூன்று இளைஞர்களும் கரை இறங்கி இரவு வரை பதுங்கியிருந்து இரவு முழுவதும் நடந்தே பயணமாகி Kilham என்ற நகரை அணுகினார்கள். அதற்கு முன்பாக தங்களிடமிருந்த கடிதங்கள் ஆவனங்களை யெல்லாம் பத்திரமாக ஒரு பாறைக் கடியில் புதைத்து வைத்திருந்தனர். அவர்கள் கடுமையாகப் பெய்த மழையையும் பொருட்படுத்தாது ஒரு கிராமத்தினுள் நுழைந்தனர். பசியோடு விடுதியைத் தேடிய அவர்களைப் பற்றிய செய்தி கிராம அதிகாரிகளுக்குப் பரவ, அவர்கள் குருக்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தோடு காவலர்களால் கைது செய்யப்பட்டனர். வடக்குப் பகுதி கவுன்சிலின் காவலனான Earl of Huntingdon என்ற அதிகாரியின் முன்பாகக் கொண்டுவரப்பட்டனர். இங்கிலாந்தினுள் இரகசியமாக நுழையும் குருக்களைப் பிடிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவனான அவன் மிகக் கடுமையாக விசாரித்தான். விசாரணை யில் ஹென்றி தாம் ஒரு குரு. அதுவும் சேசுசபை குரு என்பதை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அக்காலத்தில் சேசுசபை குருக்களே இங்கிலாந்தில் சுத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் கொண்டுவர மிகவும் முனைந்திருந்தனர். அதனாலேயே பதித ஆட்சியாளர்கள் அக்குருக்களை வேட்டையாடி வந்தனர். தாம் எங்கு செல்கிறோம். யாரால் அனுப்பப்பட்டோம். யாரிடம் செல்கிறோம், உதவியவர்கள் யார். யார் என்ற விபரங்களையெல்லாம் வெளியிட மறுத்த சங். வால்போல் எத்தகைய கொடுமையையும் எதிர்கொள்ள ஆயத்த மானார். ஆனால் அவரோடு பயணித்து வந்த இரு இளைஞர்கள் பயந்துபோய் தாங்கள் ஒழித்து வைத்திருந்த ஆவணங்களைப் பற்றியும் வெளிப்படுத்திவிட அவர்கள் விடுவிக்கப்பட்டு வால்போல் சுவாமி கைது செய்யப்பட்டார்.

சேசுசபை குரு பிடிபட்டார் என்ற செய்தி எங்கும் பரவ, விசாரிப்பதற்காக குருக்களை வேட்டையாடவென்று ஏற்படுத்தப் பட்ட Topcliffe என்ற அதிகாரி லண்டனிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் விசாரித்தும் எந்தவிதமான பதிலையும் வால்போல் சுவாமி யிடமிருந்து பெறமுடியவில்லை. எனவே அவர் York சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே கிடைத்த அவகாசத்தில் சங். வால்போல் தாம் பிடிபட்டது. விசாரிக்கப்பட்டது போன்ற விபரங்களை கடிதங்களில் குறிப்பிட்டு, Yorkshire-ல் இருக்கும் சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹால்ட்பை (Richard Holtby) என்பவருக்கு அனுப்பி வைத்தார். அதில்: "டாப்கிளிஃப் என்னை லண்டன் டவர் சிறைக்கோ, Bridewell சிறைக்கோ கொண்டுசென்று வதைத்து உண்மையைக் கறந்துவிடுவதாகப் பயமுறுத்தினான். நான் அவனிடம் நமதாண்டவர் என்னை எந்த கொடுமையிலும் வேதனையிலும் பயத்தாலும், அவரது தெய்விக மகத்துவத்திற்கு விரோதமாகவோ அல்லது எனது மனசாட்சிக்கு விரோதமாகவோ எதுவும் செய்ய அனுமதிக்கமாட்டார். அவருக்கு விரோதமாக என்னைப் பேசவிடமாட்டார் என்று ...." (Yepes Historia particular, 1599) πάτη குறிப்பிட்டார்.

எனது விசுவாசத்தின் காரணமென்ன. திருச்சபைக்கு விரோதமான புராட்டஸ்டாண்டாரின் கொள்கை பற்றிய எனது கருத்து என்ன, திவ்விய நற்கருணை. பாப்பரசர் பற்றிய எனது சுருத்து என்னவென்பதையெல்லாம் எழுதி தரும்படி கட்டளையிட்டுள்ளனர். எனவே இக்கடிதத்தை இப்போது சுருக்கமாக எழுதுகிறேன். பிறகு விரிவாக எழுதுகிறேன்" )Yepes. Hist partic, P. 685) is on. York சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடியாததால் கோபமடைந்த விசாரணை அதிகாரி அவரை கடுமையாக வதைக்க லண்டன் டவர் சிறைச்சாலைக்கு மாற்றும்படி உத்தரவிட்டான். அங்கே வால்போல் சுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது!

எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும் சங். ஹென்றி வால்போல் சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடிய வில்லை. இதனால் 1594 பிப்ரவரி 24-ம் நாள் லண்டன் /வர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சால்ட் டவச் (Salt Tower) என்ற கட்டிடத்தில் முதல் தன அறையில் இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே போதிய உணவும். மூட துணியும் வழங்கப்படாது துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் எப்போதும் தேவ சித்தத்தையுடையவராகவே இருந்து அனைத்தையும் இங்கிலாந்து மனத்திரும்ப ஒப்புக்கொடுத்தார்.

தமது கட்டளை ஜெபத்திலுள்ள சங்கீதங்களை வாய்விட்டு பாடிக்கொண்டும், தமது மன ஓட்டங்களை அங்குள்ள மரச்சட்டங்கள். கதவுகளில், கையில் கிடைத்த கற்களால் கீறி, வரைந்து வெளிப்படுத்திக் கொண்டும் வந்தார். அவைகளில் தனது பெயரையும், சேசு சபையின் சின்னமான "IHS" என்ற ஆண்டவரின் திருநாகத்தையும், "பரியே" என்ற வார்த்தைகளையும், கிறீஸ்துவின் காயங்களோடான கைகள், பாதங்கள் ஊடுருவப்பட்ட கிறீஸ்துவின் இருதயம் போன்றவற்றை செதுக்கினார். அவை அவரது விசுவாசத்தின் வெளிப்பாடாகத் திகழ்ந்தன. அவற்றில் மனதிறைவு கொண்டர். (அவர் செதுக்கிய இந்த எழுத் துக்களையும். படங்களையும் இன்னமும் அங்கே. லண்டன் டவர் சிறையின் சால்ட் டவர் சிறைகூடத்தின் முதல் தளத்தில் அவர் தங்கிமரித்த அறையில் காணவாம்.) மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. வேதம் போதிக்க இங்கிலாந்திற்கு வந்த குருக்கள், அவர்கள் பெயர்கள் அவருக்கு உதவும் சுத்தோலிக்க  மக்கள் யார்,யார் என்றெல்லாம் கேட்டு விசாரித்தனர். அனைத்திற்கும் பதில் தர மறுத்த சுவாமி மேலும் சித்திரவதைக்கு உள்ளானார். இடுப்பில் முரட்டுக் கயிற்றால் சுட்டி தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார்.
(அர்ச். ஹென்றி வால்போல் சிறைச் சுவரில் செதுக்கிய எழுத்துக்கள்)
ரங். வால்போல் சுவாமி அனுபவித்த கொடூர சித்திரவதைகளைப் பற்றி இங்கிலாந்தின் ரோ அதிபரான சங் ஹென்றி கார்நெட் சுவாமி 1595 அக்டோபர் 23-ல் எழுதிய கடிதத்தில்: “முத் வால்போல் சுவாமி லண்டன் சிறைச்சாலையில் கொடிய துன்புத்கையும் வறுமை யையும் அனுபவித்தார். படுக்க படுக்கையில்லாமல், உடுத்த உடை இல்லாமல் கடுங்குளிரில் விடப்பட்டார். அவர் மீது இரக்கப்பட்ட சிறை காவலாளிதான், சிறிது வைக்கோல்களைக் கொடுத்துப் படுத்துக் கொள்ள  உதவினான். பொது விசாரணையின் போது தந்தையவர்கள், நான் 14 தடவைகள் கொடூரமாய் வாதிக்கப்பட்டதாகவும், 6 தடவைகள் தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும். கூரிய இரும்பு கொக்கிகளால் இரத்தம் வர தசை கிழிய விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டார். சிறிதும் தூங்கவிடாது உபாதிக்கப்பட்டார். அங்கே நீதிபதிகளுக்காக பலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததால் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

அரசி எலிசபெத்தை கொலை செய்ய முயன்றார் என்ற பழி சுமத்தப்பட்டது. இதனை கடுமையாக மறுத்த சங், வால்போல் சுவாமிக்கு மரண தண்டனை விதிக்க பிரபுக்கள் சபை முடிவெடுத்தது. 3 நீதிபதிகள் முன்பு விசாரிக்கப்படும் போது தன்னிலை விளக்கம் கொடுத்தார்

வெளியிலிருந்த சங், ஹென்றி வால்போலின் நண்பர்கள் அவரை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும். அதற்கு அவரை இணங்கச் செய்யவேண்டும் என்று முனைந்தனர். தாம் காம்பியன் சுவாமியைப் போல வேதசாட்சி முடியைப் பெற ஆசித்த அவர், அவர்களது இந்த முயற்சிக்கு மறுப்பு தெரிவித்தார். அவர்களது நெருக்கிடை அதிகமாகவே சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹாலட்பை சுவாமிக்கு தமது நிலையையும் நண்பர்களின் முயற்சிகளையும் கூறி தமக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டு அனுப்பினார். அதற்கு அவர், வால்போல் சுவாமி சிறையிலிருந்து தப்பிப்பதானது ஏற்கனவே York Castle சிறையில் அடைபட்டிருக்கும் கத்தோலிக்கர்களுக்கு பெரும் கேடாக அமையும் என்று எச்சரித்தார். இதையறிந்து தப்பிக்க வைக்கும் தமது நண்பர்களின் முயற்சிகளுக்கு இணங்க மறுத்து விட்டார். 

இதுபற்றி சங். ஹாலட்பை சுவாமிக்கு எழுதிய கடிதத்தில் "தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். தங்களது ஆலோசனை மகிழ்ச்சியைத் தருகிறது. அது நமது ஆண்டவரின் கரத்திலிருந்து வந்ததாக ஏற்றுக்கொள்ளுகிறேன். (தப்பிக்கும் திட்டம்) மற்றவர்களின் திருப்திக்காக மட்டுமே. ஆதலால் உங்களுக்கு வெளிப்படுத்தி ஆலோசனையைக் கேட்டேன். மற்றபடி எனது விருப்பம் அதுவல்ல... அர்ச். இராயப்பரை, தமது சம்மனசானவரை அனுப்பி சிறையிலிருந்து ஆண்டவர் விடுவித்தாரென்றால், அது எதற்காக? அவர் பரிசுத்த திருச்சபையின் பொதுத் தந்தையாகவும், மேய்ப்பனாகவும் விளங்குவதற்கும் அந்த நமது அப்போஸ்தலிக்க தலைமை இடத்தை உரோமையில் நிறுவுவதற்காகவுமே. ஆனால் எனக்கு அப்படியல்ல, எனக்கு நான் இருக்கும் சிறைகூடமே உரோமை. இதைவிட சிறப்பான முறையில்  ஆண்டவருக்கு ஊழியம் செய்ய என்னால் முடியுமென்று எனக்குத் தெரியவில்லை... இங்கேயிருந்தே எனது விசுவாசத்தை அறிக்கையிட முடியும். என்னை தவறாது காத்துவருவதற்காக நமதாண்டவர் சேசு கிறீஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு விசாரணை கவுன்சில் தலைவரால் ஐந்து தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எனது நோக்கமென்ன? 

"எனது அன்புக்குரிய பிரபுக்களே, தான் மூன்று காரியங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டதாக அறிகிறேன். 

1-வது, நான் ரோமை பரிசுத்த ஸ்தானத்தின் (Holy see) அதிகாரத்தால் பட்டம் பெற்ற குருவானவர். 

2-வது. நான் சேசு சபையினன். 

3-வது, குருவானவரும். சேசு சபையினரான எனது அழைத்தளின் ஊழியமான ஆன்மாக்களை சர்வேசுரனுக்கு பெற்றுத் தருவதற்காக எனது நாட்டிற்கு வந்தது. 

இந்த மூன்றில் எதுவும் தேசத் துரோகமான காரியங்கள் அல்ல குருக்கள் கிறீஸ்துவின் அழைத்தலின்படி உலகிற்கு போதித்து மக்களை மனந்திருப்ப அழைக்கபட்டவர்கள். இங்கிலாத்து தேசந்திற்கு முதன் முதலில் சுவிசேஷ ஒளியைக் கொண்டு வந்தவர்களும் குருக்கலே. ஆகையால் குழுக்கள் ஒரு துரோகியாக இருக்க முடியாது" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி Ewenn என்பவர், “அப்படியானால் மத விஷயத்தில் அரசியின் சட்டத்திற்கு கீழ்படித்து, அரசியே திருச்சபையின் தலைவர், பாப்பு அல்ல என்பனத ஏற்றுக்கொள்கிறாயா?" என்று கேட்டார். அதற்கு சங். வால்போல் சுவாமி மறுமொழியாக, நாம் வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்ததால் இங்கிலாந்தில் என்ன சட்டத்தைக் கொண்டு வத்துள்ளனர் யன்பதை அறியவில்லை. ஆகையால் அதற்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும் என்ற கேள்வி எழவில்லை என்று கூறியவர், ஆனால் எந்த ஒரு சட்டமும் சர்வேசுரனுடைய சட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லாதே போனால் அது உடன்பாடற்றதுதான். உலக அரசர்களுக்கு எப்போதும் கீழ்ப்படிவது, பரலோக பூலோக உன்னத அரசரான சர்வேசுரனுக்கு நாம் கீழ்ப்படியும் கடமையைவிட மேலான நல்ல சர்வேசுரனுக்கு கீழ்ப்படிவதே மேலானது" என்று பதிலளித்தார்.

பின்னர் தொடர்ந்து, "அரசிக்காக நான் ஆண்டவராகிய கடவுளிடம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறேன். அவரே அவளை தமது இஸ்பிரித்துசாத்துவால் ஆசீர்வதிப்பாராக... சர்வேசுரனே எனது சாட்சி இங்கே கூடியிருக்கும் எனது மரணத்தை விரும்பும் மேன்மை மிக்கவர்களின் முன்னிலையில் கூறுகிறேன். நான் உங்களது ஆண்ம இரட்சணியத்தையே விரும்புகிறேன். இதற்கு, நித்திய மகிழ்ச்சிக்கு ஒரே மார்க்கமாகத் திகழும் மெய்யான கத் விசுவாசத்தில் வாழ்வீர்களாக..." என்று கூறினார்.

நீதிபதிகளில் ஒருவரான சர். ஜான் சவிலா (Sir John Savila) என்பவன்  வால்போல் சுவாமியை துரோகி என்று குற்றம் சாட்டி அதற்கு ஆதாரமாக ஸ்பெயின் நாட்டு அரசரோடும், சேசு சபை குருக்களான சங். பெர்சன்ஸ் (Persons) சுவாமி மற்றும் சங். ஹோல்ட் (Holtby) சுவாமியிடமும் அவர் சில காலம் தங்கியிருந்து நட்புறவு கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தினான். பின்னர் நீதிபதிகள் சங், வால்போல் சுவாமி மேன்மை மிக்க அரசியின் குடிமக்களை ஈட்டத்தால் நிறுவப்பட்ட மதத்திலிருந்து மனம் மாற்றுவதற்காகவும், குழப்புவதற்காகவும் ரோமை ஸ்தானத்தோடு அவர்களை ஒப்புர வாக்குவதற்காகவும் அவர் திரும்பி வந்துள்ளார் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பதில்மொழியாக சங், வால்போல் சுவாமி, “விசாரணை அதிகாரிகளான பிரபுக்களே! இதோ! நானே விரும்பி இவைகளை ஏற்று அறிக்கையிடுகிறேன்: ஆம்! நான் ஒரு குருவானவர் சேசு சபையின் உறுப்பினர். எனது தேசத்தை சுத்தோலிக்க சத்திய விசுவாசத்திற்கு மனந்திருப்பவும். பாவிகளை மனஸ்தாபத்திற்கு அழைக்கவும்தான் வந்தேன். ஆம்! இவைகளை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன். மறுக்கவில்லை. இவை எனது அழைகத்தலின் கடமை. எனது இந்த அழைத்தலுக்கு வேறுபட்டு எதுவும் இருப்பின் எனக்குச் சொல்லுங்கள். அதே சமயம் உங்கள் மனசாட்சியின்படியும் நீங்கள் ஒருநாள் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

அவரது பதிலில் தொனித்த யதார்த்தத்தையும். உண்மையையும் உணர்ந்து உள்ளம் கலங்கினாலும், நீதிபதிகள் "இவன் குற்றவாவி தேசத்துரோகி" என்று தங்களது தீர்ப்பைக் கூறினார்கள். அதன் பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சங், வால்போஸ் சுவாமி, சங். ஹோல்ட்பி (Holtby) சுவாமி என்பவருக்கு கடைசியாக எழுதியக் கடிதத்தில் "... நாளை மறுநாள் நான் தூக்கிலிடப் படவுள்ளேன். நமது தந்தையர்கள், சகோதரர்களின் மேலான ஜெபங்களைக் கேட்கிறேன். உண்மையான கத்தோலிக்க இதயங்கள் அனைவரோடும் நான் மகிமையோடு இணைந்து, நமது சர்வேசுரனும் சிருஷ்டிகரும், மீட்பரும், அர்ச்சியசிஷ்டவர்களிடமும் ஜெபிக்கிறேன் என்பதை இஸ்பிரீத்துசாந்துவானவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை... லண்டன் டவர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த நாட்களைப் பற்றி உங்களிடம் எதுவும் கூறவில்லை. அதனை மோட் சத்தில் நாம் மீண்டும் சந்திக்கும்போது அறிந்து கொள்வீர்கள்" என்று குறிப்பிட்டார்.

1595 ஏப்ரல 7 ல் சங். ஹென்றி வால்போல் சுவாமி Douai குருவான ச. அலெக்ஸாண ராவ்லின்ஸ் சுவாமியுடன் York Castleலில் இருந்து இழுத்துவரப்பட்டார். ஒரே கயிற்றால் தலைவிலிருந்து கால் வரைக் கட்டப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ளும் ஆறுதலைப் பெற்றனர். கைகிகள் இருவரும் Knavesmire என்ற கொலைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டனர். முதலில் ராவ்லின்ஸ் சுவாமி தூக்கிலிடப்பட்டு உடல் வெட்டப்பட்டு வேதசாட்சியமடைந்தார். அதனைக் கண்டாவது, மனம் மாறுவார் என்று நினைக்கப்பட்ட வால்போல் சுவாமி மிகுந்த துணிவோடும் உற்சாகத்தோடும் தூக்குமேடையில் ஏறினார். அருகி லிருந்த அதிகாரிகள் அரசியின் புராட்டஸ்டாண்ட் ஆங்கிலிக்கன் சபையை ஏற்றுக்கொண்டால் உயிர் பிழைக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறினார்கள். அப்போது "அரசியே திருச்சபையின் தலைவர்" என்பதை பற்றிய அவரது கருத்தைக் கேட்டனர். அதற்கு, “அவள் தானே உயர்ந்தவள் என்று கூறிக் கொள்கிறாள். ஆனால் நான் அதனை ஏற்கமாட்டேன். கடுமையாக மறுக்கிறேன்" என்று திடமாகக் கூறினார். அதனைக் கேட்ட அதிகாரிகள் "ஆஹா! இது தேசத் துரோகம்” என்று கூறினர்.

... ஆனால் சங். வால்போல் சுவாமி அமைதியாக தமது சாவுக்குக் காரணமானவர்களுக்காக ஜெபித்தார். பின்னர் சற்று உரத்தக் குரலில் "பரலோக மந்திரத்தை" ஜெபித்தார். பிறகு "அருள்நிறை" மந்திரத்தை தொடங்கி ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே அவர் நின்றிருந்த ஏணி அகற்றப் பட முட்டு சுருக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. அவரது புனித உடல் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் விரைத்தவாறு தொங்கியது. இறக்கும்வரை அவர் உடல் தொங்கவிடப்பட்டு, பின்னர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. அன்று 1595 ஏப்ரல் 7-ம் நாள். ஆம்! அவரது மனங்கவர்ந்த சங். எட்மண்ட் சுவாமியின் வேதசாட்சியத்தின் போது சிதறிய இரத்தத் துளிகள் தம்மீது பட்டு சரியாக 14 ஆண்டுகள் 97 நாட்களுக்குப் பிறகு வேதரா'சியமடைத்தார் ஹென்றி வால்போல்!

அர்ச். ஹென்றி வால்போலே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!





அமலோற்பவ மரியாயே!!! - Our Lady of Immaculate Conception

 அமலோற்பவ மரியாயே வாழ்க!

(இக்கட்டுரை அதிமேற்றிராணியார் மிக. வந் மார்செல் லெஃபவர் ஆண்டகை 1972-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாளன்று நிகழ்த்திய பிரசங்கத்திலிருந்த எடுக்கப்பட்டது - ஆசிரியர்)


நித்திய அமலோற்பவம்


மாதாவின் அமலோற்பவ திருநாளின் முழு வழிபாடு அனைத்தும். எல்லாம் வல்ல சர்வேசுரன் தமது அளவில்லாத ஞானத்தால் ஆதியிலிருந்தே, மிகவும் பரிசுத்த கன்னிமரியாயை நமக்காக தயார் செய்தார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. சர்வேசுரன், மரியாய் இவ்வுலகில் உற்பவித்த அந்த கணத்திலிருந்து மாத்திரம் அவர்களை அனைத்துப் பாவமாசுகளிலிருந்தும் விடுவித்து அமலோற்பவமாக ஏற்படுத்தவில்லை. மாறாக, நித்தியத்திலிருந்தே உலகம் உண்டாகும் முன்னமே அவர்களை அவ்வாறு தீர்மானித்திருந்தார்.

நித்திய வார்த்தையானவரின் வார்த்தை களை இத்திருநாளின் நிருப வாசகம் மாதாவிற்கு பொருத்தி இவ்வுண்மையை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. பரிசுத்த கன்னிகை ஏற்கனவே சர்வேசுரனின் சித்தத்தில் இருந்தார்கள். "- iiam concepta erami நான் ஏற்கனவே கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தேன்" (பழ. 8:24). ஆம்! சர்வேசுரனுடைய மனதில் கன்னிமாமரி கர்பந்தரிக்கப்பட்டிருந்தார்கள். இப்படியாக தமது தெய்வீக மீட்புத் திட்டத்தில் சர்வேசுரன் கன்னிமரியாயை நினைத்திருந்தார். ஆகையால், அவர்களை தமது வரப்பிரசாதங்களால் நிரப்பவும், அவர்களை அனைத்து பாவக்கறைகளிலிருந்து காப்பாற்றி அமலோற்பவம் என்ற அசாதாரண சலுகையை வழங்கச் சித்தமானார். "i Tota pulchra es, Maria, et macula originalis non est in teî - மரியாயே! நீர் முழுவதும் அழகுள்ளவள். ஜென்மப் பாவத்தின் மாசு ஒருபோதும் இருந்ததில்லை!"

ஆக உலகம் தோன்றும் முன்னமே, சர்வேசுரன். இந்த ஆச்சரியத்துக்குரிய படைப்பை நமதாண்டவர் சேசு கிறீஸ்து நாதருக்கு அடுத்தபடியான. தமது படைப்புகளின் மேலானவர்களாயிருக்கிற மாதாவை நினைத்தார். தேவதாயின் பிறப்பிற்கு முந்திய மனித சமுதாயத்தின் வரலாற்று காலங்கள் அனைத்திலும், எந்நேரமும் இந்த பரிசுத்த கன்னிகை சர்வேசுரனுடைய சிந்தையில் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டு வரலாறு முழுவதிலும் இதனை நாம் காணலாம். அதிலும் குறிப்பாக, ஆதாம்-ஏவாள் பாவம் கட்டிக் கொண்ட உடனேயே சர்வேசுரன் சாத்தானாகிய சர்ப்பத்திடம் "...உனக்கும், ஸ்திரீக்கும் பகையை மூட்டு வோம்... அவள் உன் தலையை நசுக்குவாள்" (ஆதி. 3:15) என்று கூறினார். ஆகையால், பரிசுத்த கன்னிமாமரி, சர்வேசுரனுடைய ஆவியால் முன் குறிக்கப்பட்டார்கள். மாதாவினுடைய அமலோற்பவம் அவரால் தயாரிக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் மாதாவின் உருவகம்! 

பரிசுத்த கன்னிமாமரியின் உருவங்கள் பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் காணக் கிடக்கின்றன. அவர்களில் மாதா முன் அடையாளமாகக் காட்டப்படுகிறார்கள். தோபியாசின் மனைவியான சாராவைக் கவனித்தால், அவளை குறித்தே சம்மனசானவர் சாத்தானைக் கட்டி, பாலைவனத்தில் வீசுகிறார் (தோபி. 8:3), சாரா பரிசுத்த கன்னிமரியாயின் முன் அடையாளமாதக் திகழ்கிறாள். அவளுக்கு முன்பாக பசாசு ஓடும், அவளைக் கண்டு சாத்தான் அஞ்சும்? பரிசுத்த கன்னி மரியாய் சாத்தானின் அரசில் ஒரு சிறு கண மேனும் கூட உட்படவில்லை. ஏனெனில் அவர்கள் அமலோற்பவமாக ஏற்படுத்தப்பட்டுள்ளார்கள். 

யூதித்தின் வரலாற்றைப் பார்த்தோமாகில், பரிசுத்த கன்னிமரியாயின் பங்கை மீட்புத் திட்டத்தில் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அவள் தமது இஸ்ராயேல் மக்களை ஒலாப்பேர்னெசிடமிருந்து காப்பாற்றினார். அவனது தலையை யூதித் வெட்டி இஸ்ராயேல் ஜனங்களை மீட்டது போலவே பரிசுத்த கன்னிமரியாயும் சாத்தானின் தலையை வெட்டி (நசுக்கி) சர்வேசுரனுடைய மக்களைக் காத்தார்கள். அதாவது. சேசு கிறிஸ்துநாதரோடு சிலுவைப்பலி வரை உடனிருந்து பங்கேற்று சாத்தானின் அரசை முறியடித்து மீட்பைப் பெற்றுத் தந்தார்கள்.

இது தவிர பழைய ஏற்பாட்டில் இன்னும் அதிகமான பரிசுத்த பெண்மணிகள் மூலமாக மாதா உருவகமாக வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள், அவர்கள் எப்பொழுதும் சர்வேசுரனின் நினைவில் -தேவ திட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கின்றன.


அருள் நிறைந்த மரியாய்!


பரிசுத்த கன்னிமரியாய் தமது தாயின் உதரத்தில் உற்பவமான அந்தக் கணத்திலேயே இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டார்கள். ஆகையால், ஜென்மப்பாவம் அவர்களை மாசுப்படுத்தாமல் விலக்கப்பட்டது. இஸ்பிரித்து சாந்துவானவர் இருக்குமிடத்தில் எப்படி பசாசானது நுழைய முடியும்? எனவே, மகா பரிசுத்தவதியான கன்னிமாமரி ஜென்மப் பாவமில்லாமல் உற்பவமானார்கள். ஆதலால், அவர்களது உற்பவந்தொட்டே - பிறப்பிலிருந்தே இஸ்பிரித்து சாந்துவானவரை முழுமையாகப் பெற்றிருந்தார்கள். அதனால் தான் கபிரியேல் சம்மனசானவர், "பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே; ஸ்திரிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே!" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். ஆகையால் தான் அவர்கள் சுதனாகிய சர்வேசுரனுக்கு உகந்த இல்லிடமாவதற்காக பாவ மாசின்றி, அமலோற்பவியாக சிருஷ்டிக்கப்பட்டார்கள். இதனையே தான் திருச்சபையும் மாதாவின் அமலோற்பவத் திருநாள் பூசையின் சபை ஜெபத்தில் "சர்வேசுரா, தேவரீர் கன்னிகையின் மாசில்லா உற்பவத்தினால் உம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடத்தை தயாரித்தருளினீரே..." என்று குறிப்பிட்டு மன்றாடுகிறது.


மாதாவின் அமலோற்பவம் நமக்கு கற்பிக்கும் பாடம்!


நமதன்னையின் அமலோற்பவ மகிமையும், அவர்களது வாழ்வும் நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது. அவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறெனில், பரிசுத்த கன்னி மரியம்மாள் அவர்களது உற்பவத்திலிருந்தே பாவ மாசில்லாமல் இருப்பது எதற்கென்றால் "அவர்கள் நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் தாயாகும் பொருட்டே!" அவர்கள் தேவ குமாரனை தம்மில் தாங்குவதற்காகவே! உலகிற்கு மீட்பரை வழங்கும் பொறுப்பாளராக இருப்பதற்காகவே! சேசுவோடு அவரது தாயாக, இணை மீட்பராக மீட்புத் திட்டத்தில் உடன் உழைக்க வேண்டும் என்பதற்காகவே!

கிறீஸ்தவர்களாகிய நாம் திவ்விய நற்கருணையை உட்கொள்ளும் போது சேசு கிறிஸ்துநாதர் சுவாமியையே பெற்றுக் கொள்கிறோம். அமலோற்பவ மரியாயிடமிருந்து உற்பத்தியான அதே சரீரமாதலால் நாம் அவரை உட்கொள்ள மிகவும் பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும். எப்படி சேசுவை மகவாகப் பெற மாதா பாவமின்றி ஏற்படுத்தப்பட்டிருந்தார்களோ, அதுபோல நாமும் நமது ஆத்துமத்தின் கறைகளெல்லாம் நீக்கப்பட்டு பரிசுத்த அந்தஸ்தில் இருக்க வேண்டும். தேவதாயைப் போல நாம் இல்லாவிட்டாலும், நம் ஜெபதபங்களாலும், நமது புண்ணிய வாழ்வாலும், சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தின் உதவியோடு நமது ஆத்துமங்களை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இது நம்மால் முடியுமா? ஆம். முடியும்! நம்மால் பாவமில்லாமல் வாழ முடியும். நமது ஆத்துமங்களில் சிறு பாவத்தின் சளனம் தோன்றினாலும் கூட நாம் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். அது எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்றால். சர்வேசுரன் நம் ஒவ்வொருவருடைய ஆத்துமத்தையும் நோக்கி: "i Tota pulchra est, et macula non est in eaî - முற்றிலும் அழகுள்ளது. இதனிடம் மாசேதுமில்லை" என்று சொல்லப்படும்படியாக நமது ஆத்துமம் தூய்மையாய்த் திகழ வேண்டும்.

தேவதாய் பாவத்தை அழிப்பதற்காகவே சர்வேசுரனால் உருவாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆகையால், அவர்களைத் தவிர வேறு எந்த சிருஷ்டியும் பாவத்திலிருந்து விடுபட்டதில்லை. அவர்களே சாத்தானின் தலையை நசுக்கினார்கள். ஆதலால், அவர்களிடம் பசாசோடு எந்தவிதமான உடன்பாடுமில்லை. பாவத்தோடு, தீமையோடு எவ்விதமான ஒட்டுறவுமில்லை. அவர்கள் முழுவதும் பரிசுத்தமானவர்கள். எனவே அவர்களிடம் ஜெபிப்போம். நாமும் அவர்களைப் போலவே. சாத்தானோடு பாவத்தோடு - தீமைகளோடு எந்தவிதமான உடன்பாடோ, ஒட்டுறவோ இல்லாமல் காக்கும்படியாக கேட்போம். நம்மையும் அவர்களைப் போல அமல - தூயவர்களாக்கும்படியாக நம்மை அவர்களது அமலோற்பவ மேலாடையால் போர்த்திக் காக்கும்படி இறைஞ்சி மன்றாடுவோமாக!

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


source: Salve Regina (Magazine) - Dec. 2007 

செவ்வாய், 21 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 15 - அர்ச். சிலுவை அருளப்பர்

 அர்ச். சிலுவை அருளப்பர்

அர்ச். சிலுவை அருளப்பர், ஏழைகளாகிய கொன்சாலோ, கேட்டலினா தம்பதியருக்கு 1542, ஜூன் 24 அன்று பிறந்தார். அவருக்கு மூன்று வயதானபோது அவரது தந்தையும், இரண்டு வருடம் கழித்து, வறுமையால் அவரது அண்ணனும் இறந்தார்கள். இதனால் அவரது தாய் வேலை தேடி அவரோடும், மற்றொரு சகோதரனான பிரான்சிஸ்கோவோடும் முதலில் ஆரவாலோ விலும், அதன்பின் மெதினா தெல்காம்போவிலும் குடியேறினாள்.

மெதினாவில் பெரும்பாலும் அநாதைக் குழந்தைகள் படித்த ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் அருளப்பர் அடிப்படையான, பெரும்பாலும் வேதம் சார்ந்த கல்வி பெற்றார். இங்கே ஓரளவு உணவும், உடையும், இருப்பிடமும் அவருக்குக் கிடைத்தன. 1563ல் அவர் கார்மெல் சபையில் சேர்ந்து அர்ச். மத்தியாஸின் அருளப்பர் என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடத்தில் கார்மெல் துறவியாக முதல் வார்த்தைப்பாடு தந்த அவர், சாலமான்கா பல்கலைக் கழகத்தில் வேதசாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் பயின்றார். இதன்பின் ஃப்ரே லூயித லியோன் என்பவரிடம் அவர் வேதாகமப் பாடம் கற்றார்.


அர்ச். அவிலா தெரேசம்மாளின் சீர்திருத்தப் பணியில் இணைதல்

1567ல் குருப்பட்டம் பெற்ற அவரைத் தனி வாழ்வுப் பிரியம், மவுன, காட்சி தியான வாழ்வு ஆகியவற்றைக் கொண்டு, அதிகக் கண்டிப்புள்ள கர்த்தூசிய சபை ஈர்த்தது. 1567 செப்டம்பரில் அவர் ஸாலமான்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்றார். அங்கே தனது இரண்டாவது புதிய மடத்தைத் தொடங்க வந்திருந்த கார்மெல் கன்னிகையான அவிலா தெரேசம்மாளை அவர் சந்தித்தார். அவள் 1432ல் பாப்பரசர் யூஜீனால் தளர்த்தப்பட்டிருந்த "சபையின் தொடக்க கால விதித் தொகுப்பை" அனுசரிக்கும் வாழ்வைப் புதுப்பிப்பதன் மூலம் கார்மெல் சபையின் பரிசுத்த தனத்தை மீண்டும் கொண்டு வர முயன்றுகொண்டிருந்தாள். இந்நிலையில் அவள் தன் திட்டங் களைப் பற்றி அருளப்பரிடம் பேசினாள்.

பண்டைய விதிகளின்படி, கார்மெல் சபையினர் ஒரு நாளின் பெருமளவு நேரத்தைப் பரிசுத்த கட்டளை ஜெபம் சொல்வதிலும், கற்பதிலும், ஞான வாசகங்களிலும், பூசை நிறைவேற்றுவதிலும் காண்பதிலும், தனி வாழ்விலும் செலவிடவும், துறவற குருக்கள் மடத்தைச் சுற்றியிருந்த மக்களுக்கு சுவிசேஷம் போதிக்கவும், இறைச்சியை முழுமையாக விலக்கவும், திருச் சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் முதல் உயிர்ப்புத் திருநாள் வரை நீண்ட கால உபவாசம் கடைப் பிடிக்கவும், நீண்ட மவுன வேளைகள், குறிப்பாக இரவு ஜெபம் முதல் காலை ஜெபம் வரை அனுசரிக்கப்படவும், எளிய, முரடான, குட்டையான அங்கிகள் பயன்படுத்தப்படவும் கால்களை மூடாத காலணிகள் பயன்படுத்தப்படவும் வேண்டியிருந்தது. இதனால் ஒரு வகையில் இந்தச் சபை காலணிகள் அணியாத சபை என்றும் அழைக்கப்பட்டது.

வால்லடோலிட் நகரத்தில் சிறிது காலம் இருந்தபின், அருளப்பர் துருவேலோ என்னுமிடத் திற்குச் சென்று, புனிதையின் கடுந்தவக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு புதிய கார்மெல் துறவற குருக்கள் சபையை 28.11.1568 அன்று ஸ்தாபித்தார். அன்றே புனிதர் தம் பெயரை சிலுவை அருளப்பர் என்று மாற்றிக்கொண்டார். இந்த மடம் சிறியதாக இருந்ததால், அது அருகிலிருந்த மென்செராத அபாயோ என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. துறவற குருக்களின் கல்விப் பயிற்சிக்காக பாஸ்ட்ரானா என்ற ஊரில் புதிய மடம் ஒன்றை ஸ்தாபித்து, புனிதர் அங்கே குடியேறினார்.

1572ல், அவிலாவுக்குச் சென்ற அவர் தெரேசாவுக்கும், அங்கிருந்த 130 கன்னியருக்கும். ஏரான மான விசுவாசிகளுக்கும் ஆன்ம குருவானார். 1574ல் தெரேசாவுடன் ஸ்ெகோவியாவுக்குச் சென்று அங்கு ஒரு புதிய மடத்தைத் தொடங்கியபின், அவிலாவுக்குத் திரும்பி வந்தார். 1577 வாக்கில், தாம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, சிலுவையில் அறையுண்ட கிறீஸ்து நாதர் அவருக்குக் காட்சி தந்தார். 1641ல் இக்காட்சியைப் புனிதர் ஒரு சித்திரமாக வரைந்தார்.

1575-77 வாக்கில் ஸ்பானிய கார்மெல் துறவற குருக்களுக்குள் தெரேசா மற்றும் அருளப்பரின் கடுந்தவ வாழ்வை அனுசரிப்பதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. 1566 முதல் காஸ்டைலுக்கு ஒருவரும், அந்தலூசியாவுக்கு ஒருவருமாக, அர்ச், சாமிநாதர் சபைத் துறவிகள் இருவர் கார்மெல் மடங்களின்மீது அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். துறவிகளை மடம் மாற்றுவது, மடத்துத் தலைவர்களையும் கூட அவர்களது பதவிகளிலிருந்து விடுவிப்பது போன்ற அதிகாரங்கள் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. காஸ்டைலுக்கு பெத்ரோ பர்னாண்டஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தலூசியாவின் அதிகாரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ வர்காஸ் என்பவர் ஆவார். இவர் மாற்றங்களை விரும்பிய துறவிகளுக்கு ஆதரவாக இருந்ததால் மீண்டும் பிரச்சினைகள் எழ, இதன் விளைவாக, இத்தாலியிலுள்ள பியாசென்ஸாவில் 1576 மே மாதத்தில் கார்மெல் சபையின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆயினும் குழப்பம் கை மீறிப் போகவே, தெரேசம்மாளின் காலணிகள் அணியாத துறவிகளின் மடங்களை அடியோடு மூடி விட உத்தரவிடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் தெரேசம்மாளின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவா யிருந்ததால், இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவில்லை. மேலும் பாப்பரசரின் திருத்தூதரும், பதுவையின் ஆயருமான நிக்கோலோ ஆர்மனேட்டோ என்பவரின் ஆதரவும் அவளுக்கு இருந்தது. இவர் தெரேசம்மாளின் வேண்டுகோளின் பேரில், வர்காஸை நீக்கி விட்டு, ஆல்கலா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குருவான எரோனிமோ க்ராஸியன் என்பவரை அந்தலூசியாவின் அதிகாரியாக்கினார். இந்த குரு தாமே தெரேசம்மாளின் சபையைச் சேர்ந்தவ ராசு இருந்தார். 1576ல் மெதினாவில் பாரம்பரிய கார்மெல் துறவிகளால் கைதுசெய்யப்பட்ட அருளப்பர், திருத்தூதரின் தலையீட்டால், விரைவில் விடுவிக்கப்பட்டார். ஆனால் 1577 ஜூன் 18

அன்று ஆர்மனேட்டோ இறந்தபோது, அருளப்பர் பாதுகாப்பின்றி விடப்பட சீர்திருத்தவாதிகளின் கை ஓங்கியது. 1577 டிசம்பர் 2 அன்று, சீர்திருத்தத்தை எதிர்த்து கார்மெல் துறவிகளின் கூட்டம் ஒன்று அவிலாவில் அருளப்பர் தங்கியிருந்த இல்லத்தில் புகுந்து அவரைச் சிறை செய்தது. ஏற்கெனவே சீர்திருத்தத்திற்கு எதிராயிருந்த சபைத் தலைவர்கள் புனிதரை அவிலாவை விட்டு வெளியேறி. தம்முடைய முதல் மடத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களை விட அதிக அதிகாரமுள்ள ஸ்பெயின் திருத்தூதர் தம் சீர்திருத்தத்தை அங்கீகரித்திருந்தார் என்ற அடிப்படையில் புனிதர் இதை ஏற்க மறுத்திருந்தார். கைது செய்யப்பட்ட அருளப்பர், அச்சமயத்தில் 40 துறவிகளோடு காஸ்டைலில் முன்னணி மடமாக இருந்த டொலேடோ கார்மெல் மடத்திற்கு அவரைக் கொண்டு சென்றார்கள்.

அருளப்பரின் வாதங்களை மீறி, அவர் சபைத் தலைவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வில்லை என்று குற்றஞ்சாட்டி, துறவிகளின் "நீதிமன்றம்" அவரைச் சிறையில் அடைத்தது. ஒரு மடத்தில் சிறை வைக்கப்பட்ட அவர் குறைந்தது வாரம் ஒரு முறை கசைகளால் அடிக்கப்படுவது போன்ற சித்திரவதைகளை அனுபவித்தார்; பத்தடிக்கு ஆறடியுள்ள ஒரு மிகச் சிறிய அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அறையில் விளக்கு ஏதும் இல்லாததால், அறைச் சுவரிலிருந்த ஒரு துளை வழியாக வந்த வெளிச்சத்தில்தான் அவரால் கட்டளை ஜெபத்தைச் சொல்ல முடிந்தது. மாற்ற உடையில்லை. தண்ணீரில்லை, அப்பமும், உப்பு மீன் துண்டுகளும் தேவைக்கும் குறைவாகவே கிடைத்தன.

இச்சமயத்தில்தான் அவர் புகழ்பெற்ற ஞான சங்கீதம் என்னும் கவிதைகளை எழுதினார். தேவையான காகிதத்தை அறைக்குக் காவலாயிருந்த துறவி இரகசியமாகக் கொண்டு வந்து தந்தார். தம் அறைக்கு அடுத்த அறையிலிருந்த ஒரு சிறு ஜன்னல் வழியாக 1578 ஆகஸ்ட் மாதத்தில், அதாவது எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர் தப்பித்துச் சென்றார்.

ஆறு வார மருத்துவ உதவி பெற்றபின் அவர் தம் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். 1578 அக்டோபரில், பாதணிகள் அணியாத கார்மெல் சபையினர் ஆல்மாடாவரில் நடத்திய கூட்டத் தில் அவர் பங்குபெற்றார். மற்ற கார்மெல் துறவியரின் எதிர்ப்பின் விளைவாக, முறைப்படி கார்மெல் சபையினரிடமிருந்து பிரிந்து வாழ தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் பாப்பரச ரிடம் விண்ணப்பித்தார்கள். இந்தக் கூட்டத்தில் அருளப்பர் எல் கல்வாரியோ என்ற மடத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்தபோது, தம் "ஞான சங்கீதத்திற்கு" உரை எழுதினார்.

1579-ல் அவர் அந்தலூஸியாவின் பாதணிகள் அணியாத துறவிகளுக்கான புனித பேசில் கல்லூரியின் அதிபராகும்படி பேஸா என்ற நகரத்திற்கு மாற்றப்பட்டார். இப்பதவியில் 1582 வரை இருந்தார். 1580ஆம் ஆண்டில், கார்மெல் சபையினரிடையே நிலவிய பிரச்சினைக்குத் தீர்வு பிறந்தது. ஜூன் 22 அன்று பாப்பரசர் 13ஆம் கிரகோரியார் புதிதாய்ச் சீர்திருத்தப்பட்ட பாதணிகள் அணியாத கார்மெல் சபையினரை அதிகாரபூர்வமாகத் தனிச் சபையாக ஆக்கினார். 1581 மார்ச் 3 அன்று ஆல்கலாவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவர் சபைத் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1581 நவம்பரில் சேசுவின் ஆனா என்னும் சகோதரி க்ரானடாவில் ஒரு மடத்தை ஸ்தாபிக்க உதவும்படி அருளப்பர் தெரேசாவால் அங்கே அனுப்பப்பட்டார். சகோதரி ஆனா 1582 ஜனவரி யில் அங்கே போய்ச் சேர்ந்து மடத்தை ஸ்தாபிக்க, ஆலாம்பிராவில் இருந்த மடத்தில் அருளப்பர் தங்கியிருந்தார். 1582-ல் அந்த மடத்தில் அதிபராகவும் ஆனார். அவர் அங்கிருந்தபோது, அந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தெரேசம்மாள் மரணமடைந்ததை அவர் அறிந்துகொண்டார்.

1585-ல் அவர் அந்தலூசியாவின் மாகாண அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் எல்லா மடங்களையும் சந்திக்கும்படி அதிகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில், இந்தப் பகுதியில் அவர் ஏழு ஆண்கள் துறவற மடங்களை நிறுவினார். இச்சமயத்தில் அவர் சுமார் 25,000 கி.மீ. தூரம் பயணம் செய்தார் என்று மதிப்பிடப்படுகிறது.

ஜூன் 1588-ல் அவர் சபை அதிபர் சுவாமி நிக்கோலஸ் டோரியா என்பவரின் மூன்றாம் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, காஸ்டைலின் ஸெகோவியாவுக்குத் திரும்பி வந்தார். ஆனால் டோரியா சபையில் ஏற்படுத்த விரும்பிய மாற்றங்களை அவர் விரும்பாததால் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, லா பெனுவேலா என்ற மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே நோயுற்று, சிகிச்சைக்காக உபேலாவிலிருந்த மடத்திற்குச் சென்றார். அங்கே உடல் நிலை மோசமாகி, 1591, டிசம்பர் 14 அன்று அக்கி என்னும் தோல் நோயால் அவர் மரணமடைந்தார்.

1675, ஜனவரி 25 அன்று பாப்பரசர் பத்தாம் கிளமெண்ட் அவருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கினார். 1726 டிசம்பர் 27 அன்று பாப்பரசர் 13-ஆம் ஆசீர்வாதப்பர் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனிதர் எழுதிய முக்கியமான புத்தகங்கள்: "ஞான சங்கீதம், ""ஆன்மாவின் இருண்ட இரவு." "கார்மெல் மலையேற்றம்"ஆகியவையாகும்.


திருநாள்: நவம்பர் 24.


Source: மாதா பரிகார மலர்-/- நவம்பர் - டிசம்பர், 2023



சனி, 18 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 14 - அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ (Margaret Clitherow)


அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ





 அன்று 1586 மார்ச் 25-ம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். 30 வயதே நிரம்பிய குடும்பத் தலைவியான மார்க்கரேட் கிளித்தேரோ என்ற பெண்மணி தண்டனை

நிறைவேற்றப்படும் இடத்திற்கு மிகவும் அமைதியாக ஆனால் மிகுந்த உற்சாகத்துடன் வந்தாள். அவளது நிர்மலமான முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிய, சற்று நின்றவள் குனிந்து தனது காலுறைகளையும், காலணிகளையும் கழற்றி வெகு தொலைவில் நின்றுகொண்டிருந்த தனது மகள் அன்னாளிடம் கொடுத்து அனுப்பினாள். அவளும் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை அவள் உள்ளத்தில் எழவே, மகளுக்கு அந்தப் பரிசு!

இரவு வெகு நேரம் விழித்திருந்து பாப்பரசருக்காகவும், கர்தினால்மார், ஆயர்கள், குருக்கள், ஏன் தன்னை சாவுக்குத் தீர்ப்பிட்ட இங்கிலாந்து அரசி எலிசபெத்திற்காகவும் மன்றாடியிருந்தவளது உள்ளம் ஜெபித்துக்கொண்டே இருந்தது. அங்கே மேடையில் இருந்த நகர அதிகாரி அவளது குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்கத் தூண்டவே, "இல்லை, இல்லை அதிகாரியவர்களே!, நான் எனது ஆண்டவர் சேசுவின் அன்பிற்காக சாகப் போகிறேன்" என்று பதிலளித்தாள்.

பின்னர் அவள் கூர்மையான கற்பாறையில் கிடத்தப்பட அவளது கரங்கள் சிலுவை அடையாளம் போல விரிக்கப்பட்டு இரு கம்பங்களில் கட்டப்பட, அவள் உடலில் ஒரு இரும்பு கதவு போடப்பட்டது. அந்த கதவு அவளது தேகத்தை மறைத்துக் கொள்ள அதன் மீது பெரும் பாரச் சுமைகள் போடப்பட்டன! அந்த பாரச் சுமையோடு இரும்பு கதவு அவளை நசுக்க அந்த இளம் பெண்ணின் மெலிந்த, மெல்லிய தேகம் துடித்தது! அவள் அனுபவிக்கும் அந்த வேதனை கைகளின் அசைவுகளில் தெரிய, எந்த விதமான அழுகையோ, அவலக் குரலோ எழவில்லை. 15 நிமிடங்கள் அந்த பாரத்தால் நசுக்கப்பட்ட அவளது கரங்கள் "சேசு! சேசு! என் மீது இரக்கம் வையும்" என்ற இறுதி மன்றாட்டோடு மெல்ல மெல்ல அசைவின்றி விரைத்துப் போயின! ஆம்! அந்த பெண்மணி மரணமடைந்து விட்டாள். உடல் நசுக்கப்பட்டு வேதசாட்சியமடைந்து விட்டாள்!

அவள் செய்த குற்றம் என்ன? கத்தோலிக்கக் குருக்களை தனது இல்லத்தில் பாதுகாத்து காப்பாற்றியது! கத்தோலிக்க பூசையைக் கண்டது!! 

யார் அந்த வேதசாட்சி? அவள் தான் அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ, "யார்க் நகரின் முத்து" என்று போற்றப்படும் மார்க்கரேட் 1556-ம் வருடம் யார்க் நகர ஷெரிப்பின் தலைவரான தாமஸ் மிடில்டோன் என்பவரின் மகளாகப் பிறந்தவர். புராட்டஸ்டாண்ட் மதத்தைச் சார்ந்த அவள் தமது 15-வது வயதில் செல்வந்தரான ஜான் கிளித்தேரோவுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டாள். இயல்பிலேயே புண்ணியவதியாகத் திகழ்ந்த அவள் திருமணமான 3 வருடங்களில் கணவனின் உத்தரவோடு சத்திய வேதத்திற்கு மனந்திரும்பினாள்.

அக்காலத்தில் 8-ம் ஹென்றியால் ஏற்படுத்தப்பட்ட புராட்டஸ்டாண்ட் பதிதம் நிலைகொண்டிருந்தது. தற்போது ஆட்சி புரிந்த முதலாம் எலிசபெத்தும் கொடூரமாக கத்தோலிக்கத் திருச்சபையை துன்புறுத்தி வந்தாள். எவ்வளவுக்கென்றால், 1585-ல் இங்கிலாந்து நாட்டில் கத்தோலிக்கக் குருக்கள் எவருக்கும் இருப்பிடமோ, வேறு எந்த உதவியும் செய்யக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தையே பிரகடனப்படுத்தினாள். ஏற்கனவே கத்தோலிக்கப் பூசையில் பங்கேற்கவோ. கத்தோலிக்கப் பிரசுரங்களைக் கொண்டிருக்கவோ கூடாது என்ற கடுமையான தடை இருப்பதால் இங்கிலாந்தில் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் துன்புற்றனர். வெளிப்படையாக திவ்விய பலிபூசை நிறைவேற்ற குருக்களும், விசுவாசிகளும் அஞ்சினர். அதற்கான பதுங்கும் இடத்தைத் தேடவேண்டி வந்தது.

கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்த மார்க்கரேட் தனது இல்லத்திலேயே பதுங்கும் அறைகளை அமைத்து அங்கே குருக்களைப் பாதுகாத்து, அவர்கள் நிறைவேற்றும் பூசையைக் கண்டுவந்தாள். அவள் எந்தவிதமான அச்சத்திற்கும் இடம் தராமல் "சர்வேசுரனின் வரப்பிரசாதத்தால் எவ்வளவு குருக்கள் வரமுடியுமோ, அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடவுளின் கத்தோலிக்க ஊழியத்துக்கு எவ்வளவு முடியுமோ அனைத்தையும் செய்வேன்" என்று அடிக்கடிக் கூறுவாள்.

அவளது கணவன் தனது மனைவியின் அனைத்து காரியங்களிலும் உறுதுணையாக இருந்தார். தங்களது பிள்ளைகளான ஹென்றி, வில்லியம், மற்றும் அன்னாளை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கவும் விரும்பினர். இதற்காக மூத்த மகன் ஹென்றியை கத்தோலிக்க பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்க அனுப்பி வைத்தாள். அதுவே அரசு அதிகாரிகள் அவள் மீது சந்தேகம் கொள்ள காரணமாயிற்று. அதனால் அவளது இல்லம் படை வீரர்களால் சோதிக்கப்படவே, பூசை புத்தகங்களும், ஆயத்தங்களும். பூசை மந்திரங்களும் இறுதியாக குருக்களின் பதுங்கு அறைகளும் கண்டுபிடிக்கப்படவே மார்க்கரேட் சிறைபிடிக்கப்பட்டாள்.

சொந்தப் பிள்ளைகள் சாட்சியாக்கப்பட்டதால் கொலை பாவம் அவர்கள் மீது விழ விரும்பாத மார்க்கரேட் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து, தான் செய்த காரியங்களுக்கு நியாயம் கற்பித்தாள். தனது கத்தோலிக்க விசுவாசத்தை வீரத்தோடு அறிக்கை யிட்டாள். அவள் விசாரணைக்கு மறுத்ததால் இங்கிலாந்து சட்டப்படி அவள் நசுக்கப்பட்டு மரணமடைய தீர்ப்பிடப்பட்டாள். அதனைக் கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்த அவள் ஓ! சர்வேசுரா உமக்கு நன்றி. இத்தகைய நல்ல மரணத்திற்கு நான் தகுதியானவள் அல்ல" என்று கூறினாள்.

மரண தண்டனை பெறும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தாலும் அவள் கொண்ட கத்தோலிக்க விசுவாசத்துக்காக நசுக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

அவள் கொல்லப்படும் போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. மரண தண்டனை நிறைவேற்றும் சமயத்தில் சற்று நேரம் ஜெபிக்க விரும்பிய அவளிடம் அருகே இருந்த புராட்டஸ்டாண்ட் போதகன் "மார்க்கரேட் நானும் உன்னோடு ஜெபிக்கிறேன்" என்று கூறினான். அதற்கு உடனே "இல்லை, இல்லை என்னோடு நீ ஜெபிக்க முடியாது. பதிதர்களோடு விசுவாசிக்குப் பங்கில்லை. நான் உமக்காக ஜெபிக்கிறேன். நமது அரசி எலிசபெத்துக்காக அவள் மனந்திரும்பி, கத்தோலிக்க மதத்திற்கு வரவும், திருச்சபைக்கு சுயாதீனம் கொடுக்கவும் ஜெபிக்கிறேன்" என்று மறுப்புத் தெரிவித்தவள். சற்று நேரம் ஜெபித்தபின் தன்னையே கொலைஞர்களிடம் கையளித்தாள். கூரியக் கற்பாறையில் கிடத்தி, உடல் மேல் கனமான இரும்புக் கதவை போட்டு அதில் அதிகமான பாரத்தை வைத்து உடல் நசுக்கப்பட்டு அவள் வேதசாட்சியத்தைத் தழுவினாள்.

அவளது குழந்தைகளான ஹென்றி, வில்லியம் ஆகியோர் கத்தோலிக்கக் குருவாகவும், ஒரே மகள் அன்னாள் பிரான்ஸ் நாட்டில் லூவேன் நகர் அர்ச், உர்சுலா கன்னியர் சபையில் சேர்ந்தாள்.

பாப்பரசர் 6-ம் சின்னப்பர் 1970, அக்டோபர் 25-ம் நாளன்று அவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் வழங்கினார்.

அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


source: Salve Regina - March 2008 issue.


To Read more about saints in Tamil - Click Here


திங்கள், 23 அக்டோபர், 2023

ஜெபமாலை மீது பக்தியுள்ளவர்களுக்கு தேவமாதா அளித்த வாக்குறுதிகள்

 ஜெபமாலை மீது பக்தியுள்ளவர்களுக்கு அனுகூலமாக பரிசுத்த தேவமாதா அர்ச். சாமிநாதருக்கு அளித்த வாக்குறுதிகள்


1. என் ஜெபமாலையை அன்போடு சொல்லி வருகிறவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பையும் வரப்பிரசாதங்களையும் கொடுப்பேன். 2. ஜெபமாலையை விடாமல் தொடர்ந்து செபிக்கிறவர்கள் சில விசேஷ வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். 3. நரகத்திற்கெதிரான வலிமையுள்ள கேடயமாக இருக்கும் என் ஜெபமாலை. தீய பழக்கங்களை அழிக்கும். பாவத்திலிருந்து விடுவிக்கும், தப்பறைகளை ஒழிக்கும். 4. ஜெபமாலை, புண்ணியங்களையும் நற்கிரியைகளையும் வளர்க்கும். ஆன்மாக்களுக்கு மிக ஏராளமான தேவ இரக்கத்தைப் பெற்றுத்தரும். உலகப் பற்றுள்ள ஆன்மாக்கள் கடவுளை நேசிக்கும்படி செய்யும். ஆன்மாக்கள் பரலோக நித்திய நன்மைகளை விரும்பும்படி அவர்களை உயர்த்தும். ஜெபமாலையால் ஆன்மாக்கள் தங்களை அர்ச்சித்துக் கொள்ள மிகவும் விரும்புகிறேன். 5. ஜெமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள். 6. தேவ இரகசியங்களை பக்தியுடன் தியானித்தபடியே ஜெபமாலை சொல்லுகிறவர்களை எந்தத் துர்ப்பாக்கியமும் மேற்கொள்ள மாட்டாது. அவர்களுக்குத் துர் மரணம் நேரிடாது. பாவத்திலிருப்பவர்கள் மனந்திரும்புவார்கள். நல்லவர்கள் தேவ இஷ்டப்பிரசாதத்தில் வளர்ந்து நித்திய வாழ்வுக்கு தகுதியுள்ளவர்களாவார்கள். 7. உண்மையான அன்பு கொண்டு ஜெமாலையைச் செய்து வருகிறவர்கள் திருச்சபையின் கடைசி ஆறுதல்கள் இன்றியாவது தேவ இஷ்டப்பிரசாதமில்லாமலாவது மரண மடைய மாட்டார்கள். 8. என்னுடைய ஜெமாலையைச் செபித்து வருகிறவர்கள் தங்கள் வாழ்நாளிலும், மரண நேரத்திலும் கடவுளின் வெளிச்சத்தைக் காண்பார்கள். அவருடைய வரப்பிரசாத முழுமையைக் கண்டுகொள்வார்கள். புனிதர்களுடைய பேறு பலன்களில் பங்கடைவார்கள். 9. என் ஜெபமாலை மீது அன்புள்ள ஆன்மாக்களை வெகு துரிதமாக உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டுக்கொள்வேன். 10. என் ஜெமாலையின் உண்மைப் புதல்வர்களாயிருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமையடைவார்கள். 11. ஜெபமாலையின் வழியாக நீங்கள் கேட்பவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். 12. என் ஜெபமாலைப் பக்தியைப் பரப்புகிறவர்கள் என் மூலமாக தங்கள் எல்லா அவசரங்களிலும் உதவி பெறுவார்கள். 13. ஜெபமாலையைக் கைக்கொண்டுள்ள யாவரும், வாழ்விலும் மரணத்திலும், பரலோக அர்ச்சிஷ்டவர்களை தங்கள் சகோதரர்களாக அடைந்து கொள்ளும்படியான வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து வாங்கியுள்ளேன். 14. திளமும் தவறாமல் என் ஜெபமாலையைச் செபித்து வருகிறவர்கள் என் அன்புக் குழந்தைகளாயும் சேசுவின் சகோதரரும் சகோதரிகளுமாயிருப்பார்கள். 15. என் ஜெபமாலைமேல் பக்திகொண்டிருப்பது மோட்சம் செல்வதற்கு ஓர் பெரிய உறுதிப்பாடாகும்.