Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 21 ஜூன், 2024

அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியார்

ஜுன் 2️1ம் தேதி

ஸ்துதியரும், இளைஞர்களின் பாதுகாவலருமான
அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியார் திருநாள்

 

அலோஷியஸ் (ஞானப் பிரகாசியார்), காஸ்டிகிலியோனின் பிரபுவான ஃபெர்டினான்டு கொன்சாகாவிற்கு, 1568ம் வருடம்  மார்ச் 9ம் தேதி, மூத்த மகனாகப் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோது, திவ்ய சேசுநாதருடையவும் மகா பரிசுத்த தேவமாதாவுடையவும் மகா பரிசுத்தத் திருநாமங்களையே, முதன் முதலில் உச்சரித்த வார்த்தைகளாகும். இவருக்கு 9 வயதானபோது, பரிசுத்த கன்னிமை விரத்தத்துவத்தின் நித்திய வார்த்தைப் பாட்டைக் கொடுத்தார். ஒரு விசேஷ தேவ கொடையால்,  பரிசுத்த கற்பிற்கு எதிரான சோதனைகளிலிருந்து,  பாதுகாக்கப்பட்டிருந்தார். இவர் அர்ச்சார்லஸ் பொரோமேயோவின் கரங்களிலிருந்து, புதுநன்மை வாங்கினார். இவர் மிகச் சிறிய வயதிலேயே உலகத்தைத் துறந்து சர்வேசுரனுக்காக துறவற சபையில் சேர்ந்து சந்நியாசியாக உறுதிபூண்டார். மகா பரிசுத்த தேவமாதா இவருக்குக் காட்சியளித்து, சேசு சபையில் சேரும்படி அறிவுறுத்தினார்கள். இதைக் கேட்டு அலோஷியஸின் தாயார் வெகுவாக சந்தோஷமடைந்தார்கள். ஆனால், இவருடைய தந்தை, மூன்று வருட காலம், இவர் சேசு சபையில் சேர்வதற்கு, அனுமதிக்காமலிருந்தார். இறுதியில், அலோஷியஸ் என்ற ஞானப் பிரகாசியார், தந்தையிடம் அனுமதி பெற்று, சேசுசபையில், 1585ம் வருடம் நவம்பர்.25ம் தேதி நவசந்நியாசியாக சேர்ந்தார்.

                இவர் மடத்தில் சேர்ந்து 2 வருடங்களுக்குப் பிறகு,  சேசு சபை துறவற வார்த்தைப் பாடு கொடுத்தார்.தத்துவ இயலும் வேத இயலும் கற்றார். “நம் சரீரம்,துன்புறுத்தலுக்கான  உபத்திரவப்பட்டு, சுத்திகரமாக்குவதற்காக தண்டிக்கப்பட்டு இருந்தாலொழிய, நம் மனித சுபாவம் , நாளடைவில் மெல்ல மெல்ல, அநேக வருட உழைப்பின் பலனாக துன்பப்படுகிற பழக்கத்தை இழந்து,  தன் பழைய  மோசமான நிலைமைக்குத் திரும்பி விடும் என்பதால், தபசு இல்லையென்றால், தேவ வரப்பிரசாதம் நம் சுபாவத்துடன்  போராட வேண்டியிருக்கும் என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறதுஎன்று இவர் கூறுவதை வழக்கமாக் கொண்டிருந்தார். “நான் ஒரு வளைந்து உருக்குலைந்த ஒரு இரும்பத் துண்டு; சரீர ஓறுத்தல், தபசு என்கிற சுத்தியலால் நேராக்கப்படும்படியாக, இந்த துறவற சபைக்கு வந்திருக்கிறேன்என்று இந்த சரீரமெடுத்த சம்மனசான அர்ச்.ஞானப்பிரகாசியார் கூறுவார். மகா பரிசுத்த தேவநற்கருணையின் மீதும், மகா பரிசுத்த தேவமாதாவின் மீதும் அலோஷியஸ் மிக ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.

                இவர் வேத இயல் கடைசி ஆண்டு படிப்பு படிக்கும்போது, உரோமாபுரியில் விஷக்காய்ச்சல் நோய்,  கொள்ளை நோயாகப் பரவியது!இந்நோயில் விழுந்த மக்களைக் காப்பாற்றுவதற்கான பிறர்சிநேக அலுவலில் ஞானப்பிரகாசியார் ஈடுபட்டார். 1591ம் வருடம் குருமாணவர்கள் அநேகருக்கு இக்காய்ச்சல் வந்தது: இவருக்கும் காய்ச்சல் வந்தது. ஏறக்குறைய மரண விளிம்புவரை சென்றார்.சில நாட்களில் குணமடைந்தார்; ஆனால் இலேசான காய்ச்சல், மூன்று  மாத காலம் தொடர்ந்து நீடித்தது. ஆண்டவருடையவும் மகா பரிசுத்த தேவமாதாவினுடையவும், மகா பரிசுத்த திருநாமங்களை பக்திபற்றுதலுடன் உச்சரித்தபடி, 1591ம் வருடம்,  மகா பரிசுத்த தேவநற்கருணை திருநாளுடைய எட்டாம் நாளன்று,ஜுன் 20ம் தேதி நள்ளிரவில், 21ம் தேதி துவங்கிய சிறிது நேரத்தில், தனது 23வது வயதில், பாக்கியமாய் மரித்தார்.

1726ம் வருடம், டிசம்பர் 31ம் தேதி 13ம் பெனடிக்ட் பாப்பரசர் இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.இவருடைய பரிசுத்த அருளிக்கங்கள்  உரோமாபுரியிலுள்ள அர்ச்.இஞ்ஞாசியார் தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன!

           அர்ச்.கொன்சாகா ஞானப்பிரகாசியார் ஒருபோதும் எந்த ஒரு சாவான பாவத்தினாலும் சர்வேசுரனை மனநோகச் செய்யவில்லை, என்று, இவருடைய ஆன்மகுருவான அர்ச்இராபர்ட் பெல்லார்மின், இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த விசாரணைக் குழுவினர் முன்பாக சாட்சியளித்தார். இருப்பினும் அரச்.ஞானப்பிரகாசியார் தனது சரீரத்தை மிகக்கடுமையாகத் தண்டித்து ஒறுத்து வந்தார். இரவு சமயங்களில் எழுந்து ஜெபிப்பார்; தன் பாவங்களுக்காக திரளாகக் கண்ணிர் சொறிந்து அழுவார்.

அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியாரின் மாசற்றதனத்தைப் பின்பற்ற இயலாவிடினும், இவர் மேற்கொண்ட சரீர ஒறுத்தல்களையும் தபசு முயற்சிகளையும் நாம் பின்பற்றி அனுசரிப்போமாக!

இவ்வளவு குறுகிய காலம் ஜீவித்தபோதிலும், அர்ச்.கொன்சாகா ஞானப்பிரகாசியார் கிறீஸ்துவிற்காக மிக பிரகாசத்துடன் தேவ சிநேகத்தினால், பற்றி எரிந்திருக்கிறார்; எனவே தான், 13ம் பெனடிக்ட் பாப்பரசர் இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தபோது, இவரை இளைஞர்களின் பாதுகாவலர் என்று அழைத்தார்.🌹

நம் உயர்குடிப் பிறப்பைப் பற்றி,பெருமை கொள்வதற்கான உரிமையை நமக்கு அளிப்பதற்கு , நம்மிடம் ஒன்றுமில்லை. மகா பெரிய உயர்குடி மக்களும், மிக தாழ்ந்த  வறிய மனிதர்களைப்போலவே இறந்தபிறகு, மண்ணும் தூசியுமாகவே போகின்றனர்;  இதில் எதாவது சிறப்பாகக் கூறவேண்டுமெனில்,  இளவரசர்களின் சாம்பல் அதிக துர்நாற்றம் வீசும் என்பதைத் தான் கூற வேண்டும்- அர்ச். கொன்சாகா ஞானப்பிரகாசியார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக