Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 12 அர்ச்.பீட்டர் ஆர்மங்கல்

 

அர்ச்.பீட்டர் ஆர்மங்கல் 

திருநாள் ஏப்ரல் 27ம் தேதி 


இஸ்பானியா நாட்டில், டார்ரகன் அதி மேற்றிராசனத்தில், குவார்டியா டெல்ஸ் பிராட்ஸ் என்ற ஓர் குக்கிராமத்தில், 1238ம்வருடம் பிறந்தார். ஆரகன், மற்றும் காஸ்டில் அரசர்கள், பார்சலோனா மற்றும் ஊர்கல் இளவரசர்களின் வம்சாவளியைச் சேர்ந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகுந்த கவனத்துடன் கத்தோலிக்கக் கல்வி அளிக்கப்பட்ட போதிலும், இளம் வயதில், பீட்டர், கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், தீமையில் உழன்று திரிந்தார். அரசு அதிகாரிகளால் தேடப்பட்ட ஓர் அக்கிரம் கொள்ளைக்கூட்டத்துடன், சேர்ந்துகொண்டு, மலைப்பகுதியில் தங்கியிருந்தார். விரைவிலேயே, கொள்ளைக்கூட்டத்திற்குத் தலைவனானார். அவரது தந்தை, ஆர்னால்டு ஆர்மங்கல், தன் மகனின் கெட்ட நடத்தையைக் கண்டு பொறுமை இழந்தவராக, வலேன்ஷியாவிற்கு குடிபெயர்ந்து சென்றார். வலேன்ஷியா சிற்றரசு, அப்போது தான், ஜெயிம் அரசரால், மூர் இனத்தவரிடமிருந்து, ஒரு போரில் மீட்கப்பட்டது. இந்த அரசர், ஒரு முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்சு அரசரை சந்திக்கும்படி, மோன்ட்பெல்லியருக்கு செல்ல நேரிட்டது. அரசர் தனது பயணத்தினுடைய பாதுகாப்பிற்காக, ஆர்னால்டுவை தனக்கு முன்பாக, மற்ற காவல் அதிகாரிகளுடன் செல்லும்படி பணித்தார்; ஏனெனில், ஆர்னால்டு, அரசரின் பாதுகாவல் அதிகாரியாக இருந்தார். மலைப்பகுதியில் கள்வர் கூட்டத்தினருடைய தாக்குதல்களிலிருந்து, அரசரைக் காப்பாற்றுவதற்காக, காவல் படையினரை, ஆர்னால்டு, விழிப்புடன் நடத்திச் சென்றார். பிரனீஸ் மலைப்பகுதியில் வசித்து வந்த கொள்ளையர்கள், பயணிகளை கொள்ளையடித்து, அவர்களைக் கொல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பயணத்தின்போது, ஒரு ஆபத்தான கட்டத்தில், அரசரைக் கொள்ளைக் கூட்டத்தினர் சூழ்ந்தனர். இதைக்கண்ட தலைமைப் பாதுகாவலர் ஆர்னால்டு, தனது காவல் படையினருடன் அங்கு விரைந்துச் சென்று, அதிரடியாகக் கொள்ளையரைத் தாக்கிச் சிதறடித்தார். கொள்ளையர் தலைவனுடன், நேருக்கு நேரான தாக்குதலில், ஆர்னால்டு ஈடுபட்டார். அப்போது, இருவரும் ஒருவர் ஒருவரை வாளால் தாக்கினர்; தந்தையும் மகனும் நேரடிச் சண்டையில் ஈடுபட்டனர்; யாரைத் தாக்குகிறோம் என்பதை உணர்ந்ததும், இருவரும் மன சஞ்சலத்துடன் போரிட்டனர். உச்சக் கட்ட சண்டையின் போது, மிகுந்த மனஸ்தாபத்துடன், கொள்ளையரின் தலைவனாகிய பீட்டர், தந்தையின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து அழுதபடி, தன் வாளை கீழே வைத்து, சரணடைந்தார்; தன் இருதயத்துடன் கூட, தந்தையிடம், பீட்டர் முழுமையாக சரணடைந்தார்.

குழப்பமும், வெட்கமும் நிரம்பியவராக, பீட்டர், தன் கடந்த கால பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டார்; அவற்றைப் பரிகரிப்பதற்காக, தபசு செய்தார்; சில நாட்களில், பார்சலோனாவிலிருந்த இரக்கத்தின் சந்நியாசிகளுடைய ஓர் மடத்தில் சந்நியாசியாக சேர்ந்தார். அப்போது, அவர், தன் பாவங்களால், சர்வேசுரனுக்கு ஏற்பட்ட நிந்தைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற ஓர் மாபெரும் ஆவலினால் மேற்கொள்ளப்பட்டார்; மகமதியர்களால், சிறை பிடிக்கப்பட்ட கத்தோலிக்கக் கிறீஸ்துவர்களை விடுவிப்பதற்காகவே, அர்ச்.பீட்டர் நொலாஸ் கோ ஏற்படுத்திய துறவற சபையில் ஒரு துறவியாக சேரத் தீர்மானித்தார். அவர் எவ்வித ஆவலுடன் தன் இருதய ஆவலையும், அதைத் தீர்மானிப்பதற்கான அத்தாட்சிகளையும் கூறினாரென்றால், அதைக்கேட்ட அதிபர், வண. வில்லியம் தே பாஸ் (அர்ச்.பீட்டர் நொலாஸ்கோவிற்குன் அடுத்ததாக, சபையை நிர்வகித்த அதிபர்) தடையேதுமில்லாமல், உடனே, பீட்டரைத் தனது சபையில் ஏற்றுக்கொண்டார். இதுவரை, மூர்க்கத்தனத்திற்கும், வன்முறைக்கும் தன் ஆளுமையையும் திறமையையும், தேக பலத்தையும் கையளித்திருந்த பீட்டர், தற்போது, துறவற ஜீவியத்தில், அதற்கு முற்றிலும் நேர்மாறாக, தன்னையே ஒறுத்து, உடனுக்குடன் ஞான அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவதிலும், சபை ஒழுங்கை நுட்பமாகவும், கவனமாகவும் அனுசரிப்பதிலும் ஈடுபட்டார். தன் பழைய பாவ நாட்டங்களை, சரீர ஒறுத்தல்களால், தபசுமுயற்சிகளால், இடைவிடாத ஜெபங்களால், எவ்வாறு, மேற்கொள்வது, என்பதையும், நாளடைவில், அறிந்து கொண்டார். நவசந்நியாச பயிற்சி முடிவதற்குள், தன் சரீரத்தையும் மனதையும், முழுமையாக மேற்கொண்டு, அவற்றை தேவசித்தத்திற்கும், உத்தமமான அறிவிற்கும், கீழ்ப்படியச் செய்வதில் வெற்றியடைந்தார். கிறீஸ்துவர்களை, மகமதியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கான முக்கிய அலுவலில், 8 வருடங்கள் அயராமல் உழைத்தார்.

மகமதியரின் ஆதிக்கத்திலிருந்த இஸ்பானிய பிராந்தியங்களான கிரானடா மற்றும் முர்சியா பகுதிகளுக்குச் சென்று, அங்கிருந்த கிறீஸ்துவ அடிமைகளை மீட்கும் அலுவலில் ஈடுபட்டுவந்தார்.. 


அர்ச். பீட்டர் நொலாஸ்கோ ஏற்படுத்திய உபகார மாதா சபையில், சேர்ந்த பீட்டர் ஆர்மங்கல், மகமதியர்களால் சிறைபிடிக்கப்பட்ட கிறீஸ்துவர்களை மீட்கும் அலுவலில் தீவிரமாக உழைத்து வந்தார். ஆப்ரிக்கா சென்று, மகமதியருக்கு தன்னையே அடிமையாக விற்று, அந்த மீட்புத் தொகையைக் கொண்டு, அடிமைகளாக இருக்கும் திரளான கிறீஸ்துவர்களை விடுவிக்க வேண்டுமென்பதே, அவருடைய இருதயத்தின் மாபெரும் ஆவலாக இருந்தது. அவருடைய ஆவலை நிறைவேற்றும் விதமாக விரைவிலேயே, ஒரு கப்பல் ஆப்ரிக்காக் கண்டத்திற்குப் புறப்பட்டது. அதில், சங்.வில்லியம் ஃபுளோரன்டினோ, என்ற சக துறவியுடன், அவர், பயணம் செய்தார். ஆப்ரிக்காவின் பூஜியா நகரை அடைந்தனர்.

இரு துறவியரும், உடனடியாக, அந்நகரில் அடிமையாயிருந்த 119 கிறீஸ்துவர்களை, மீட்புத்தொகையைக் கொடுத்து மீட்டனர்; எந்தத் தடையுமில்லாமல், கிறீஸ்துவர்களைத் துறைமுகத்திற்குக் கூட்டி வந்தனர்; பயணத்தைத் துவக்குவதற்கு முன், இன்னொரு சிறையில், 18 சிறுவர்கள், இருப்பதைப்பற்றி, பீட்டர் அறிந்தார்; அச்சிறுவர்கள், காட்டுமிராண்டிக ளான மகமதியரின் கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்பட்டு, கிறீஸ்துவ வேதத்தையே, மறுதலிக்கும் அபாயத்திலிருப்பதையும் அறிந்தார்; அவர்களை மீட்பதற்கான மீட்புத்தொகையாக, தன்னையே அடிமையாக ஏற்றுக்கொள்ளும்படி, பீட்டர், அக்கொடிய மகமதியரிடம் தன்னையே கையளித்தார். ஏனெனில், அவரிடம், சிறுவர்களை மீட்பதற்காக, போதிய பணம் இல்லாமலிருந்தது பீட்டரை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பதற்கான தொகையை மகமதியர், அவரிடம் அறிவித்தனர்; அக்குறிப்பிட்ட காலத்திற்குள், மீட்புத் தொகையை செலுத்தாவிட்டால், அவர் இன்னும் அதிகக் கடுமையான தண்டனைகள் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்தனர். இதைப் பற்றியறிந்த சக துறவியான வில்லியம், விடுவிக்கப்பட்ட கிறீஸ்துவர்களுடன் சொந்த நாட்டிற்குத் திரும்பினார். சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியரான பீட்டரை, அவர் மகா பரிசுத்த தேவமாதாவின் மீது கொண்டிருந்த விசேஷ பக்தியுடையவும், அவர்களின் வல்லமை மிகுந்த பாதுகாப்பின் மீது கொண்டிருந்த அசையாத நம்பிக்கையினுடையவும், அத்தாட்சியாக திகழும்படியாக, தேவபராமரிப்பு இனிவரும் ஒரு முக்கியமான நிகழ்விற்கு இட்டுச் சென்றது:

அடிமையாக இருந்தபோது, பீட்டர், அஞ்ஞான மகமதியரிடையே, வியக்கத்தக்க புதுமைகள் நிறைந்த பிறர்சிநேகக் காரியங்களில் ஈடுபட்டார். கேட்பவர் மனதில் தேவசிநேகத்தை பற்றியெரியச் செய்யும் விதமாக, அவர், ஆண்டவர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்தார்; அநேக புதுமைகள் செய்தார்; இவற்றையெல்லாம் கண்ட அநேக மகமதியர் மனந்திரும்பினர்; பீட்டரை மீட்பதற்கான காலக்கெடு முடிந்தது. மீட்புத் தொகை வந்து சேரவில்லை. மகமதியர் உடனே, அவரை சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு உணவு அளிக்கப்படவில்லை. கொடிய சித்ரவதைகளால், அவரை உபாதித்தனர்; ஆனால், சர்வேசுரன், புதுமையாக, தமது பிரமாணிக்கமுள்ள ஊழியருக்கு, சம்மனசுகள் மூலம், புதுமையாக உணவை அளித்தார். முரட்டுமூர் இன மகமதியர், இடைவிடாமல், தொடர்ந்து, அவரைக் கொடுமை செய்து, அலுத்து சோர்வடைந்தனர்; அர்ச்சிஷ்டவரோ புதுமையாக, அவ்வளவு கொடுமைகளுக்கும் மத்தியில் பொலிவுடன் திகழ்ந்தார். இதைக் கண்டதும், அவரை இரகசியமாகக் கொல்வதற்கு திட்டமிட்டனர்.

தேவதூஷணம் கூறினார் என்றும், தங்களுடைய மதத்தை ஏற்படுத்திய மகமதை அவ தூறாக பேசினார் என்றும், கிறீஸ்துவ ஐரோப்பிய அரசர்களுடைய ஒற்றனாக மகமதிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும், மகமதியர், அர்ச்சிஷ்டவர் மீது குற்றம் சுமத்தினர். மகமதிய நீதிபதி, சிறைக்கைதியான அர்ச். பீட்டர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் எல்லாம் உண்மை என்று கூறி, அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்கான தீர்ப்பை அளித்தான். இதைக் கேட்டதும், சற்றும் பயப்படாமல், அர்ச். பீட்டர், தேவமாதாவிடம் , மிகுந்த பக்தி பற்றுதலுடன், தன்னையே ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொண்டார்; தேவமாதாவிடம், தன் முழு நம்பிக்கை யையும் வைத்தார். திரளான முரட்டு மகமதியரின் கைகளில் பிடிப்பட்டிருக்கும் அர்ச். பீட்டரால் தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு, ஒன்றும் செய்யமுடியாமல் போனது. திரளான முரட்டு மகமதியக் கூட்டத்திற்கு முன், இவர் ஒன்றுமில்லாத ஒரு தூசி போல காணப்பட்டார்.

ஆனால், அதே சமயம், உண்மையில், இவர், தேவமாதாவின் பேரில் ஆழ்ந்த பக்தியுடையவும், நம்பிக்கையுடையவும், பற்றியெரியும் தீப்பந்தமாகத் திகழ்ந்தார். மகமதியரின் அநீதமான தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. அர்ச்சிஷ்டவரை தூக்கிலிட்டுக் கொன்றனர். தூக்கிலிடப்பட்டு இறந்து போயிருந்த அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, பறவைகளுக்கு இரையாகப் போட திட்டமிட்டிருந்த கொடிய மூர் இனத்தினரான மகமதியர், அதை யாரும் தொடக்கூடாது என்று எச்சரித்திருந்ததால், கிறீஸ்துவர்கள் யாரும், அர்ச்சிஷ்டவரின் சரீரத்தை, தூக்கு மரத்திலிருந்து எடுக்காமலிருந்தனர்; அர்ச்சிஷ்டவரின் சரீரமும் அப்படியே தூக்கு மரத்திலேயே, ஆறு நாட்களாக தொங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம், அர்ச்சிஷ்டவருடைய சக துறவி, சங். வில்லியம், மீட்புத் தொகையுடன் வந்து சேர்ந்தார். அர்ச்சிஷ்டவர் அநியாயமாக தூக்கிலிடப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், மிகுந்த துயரத்துடன், விடுவிக்கப்பட்ட வேறு சில கிறீஸ்துவ கைதிகளுடன், வில்லியம் தூக்கு மரத்தை நோக்கிச் சென்றார்; அர்ச்சிஷ்டவரின் சரீரம் ஆறு நாட்களுக்குப் பிறகும் கூட, சிதைந்து போகாமல், புதுப்பொலிவுடன் உயிருடன் இருப்பது போல் காட்சியளித்தது; அவருடைய சரீரத்திலிருந்து, பரலோக நறுமணம் புதுமையாக வெளியேறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

அப்போது, கூடியிருந்த சகலரும் அதிசயிக்க, அர்ச்சிஷ்டவர், தூக்குமரத்தில் தொங்கியபடியே, வாய்திறந்து புதுமையாகப் பேசினார்:"பரலோக இராக்கினியாகிய தேவமாதா தாமே, என் உயிரை, இந்த மகா பயங்கரமான கொடூரமான சூழலில், பாதுகாத்துக் காப்பாற்றி வந்தார்கள்; தாம் செய்த அதிசயமான புதுமைகளிலேயே, எப்போதும் அழியாமல் நீடித்து நிலைத்திருக்கும்படியான ஓர் மிகப் பெரிய புதுமையாக, இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்கள், என்று கூறினார். இந்தப் புதுமையைக் கண்டு, பேராச்சரியத்தில் மூழ்கிய மகமதியரில் பலர் மனந்திரும்பி, கத்தோலிக்கராயினர்.

பார்சலோனா நகர மக்கள், இப்பேரதிசயமான புதுமையைப் பற்றிய செய்தியை அறிந்து, எவராலும் வெல்லமுடியாதவரும் நமதாண்டவருடைய வேதசாட்சியுமான அர்ச்சிஷ்டவரின் வருகைக்காக, மிகுந்த ஆர்வத்துடன், காத்திருந்தனர். துறைமுகத்தைக் கப்பல் அடைந்ததும், கூடியிருந்த திரளான நகர மக்கள் எல்லோரும், விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அர்ச்சிஷ்டவரை வரவேற்றனர்; பிறகு, அவருடன் கூட, அவருடைய மடத்தை அடையும் வரை, ஊர்வலமாக, சர்வேசுரனும், தேவமாதாவும் தங்களுக்குச் செய்து வரும் பேராச்சரியமிக்க நன்மைகளுக்கு நன்றி செலுத்தியபடியேச் சென்றனர். மடத்திலிருந்த சக துறவியர், அர்ச்.பீட்டரிடம், நிகழ்ந்த புதுமையைப் பற்றிக் கூறும்படிக் கேட்டனர். அதற்கு, அவர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். இறுதியில், அதிபர் சுவாமியார், கீழ்ப்படிதலின் பேரில், நடந்ததைக் கூறும்படிக் கட்டளையிட்டார். உடனே, சர்வேசுரனுடைய பரிசுத்த ஊழியர், பின்வருமாறு பதில் கூறினார்: "சர்வேசுரனுடைய மாதாவும், நம்முடைய பரிசுத்த மாதாவுமான மகா பரிசுத்த கன்னிகையானவர்கள், தமது மகா பரிசுத்த திவ்யகுமாரனிடம், என்னுடைய உயிரைப் பாதுகாக்கும்படியான விசேஷ வரத்தைக் கேட்டார்கள். அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றதும், உன்னத பரலோக இராக்கினியானவர்கள், தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கி விடாமலிருப்பதற்காக, தம்முடைய மகா பரிசுத்தக் கரங்களினால், என் சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள்" என்று கூறினார்.

அர்ச். பீட்டர், மோட்ச இராக்கினி, தான் தொங்கிக் கொண்டிருந்தத் தூக்குக் கயிறு, தனது கழுத்தை இறுக்கி விடாமலிக்கும்படி, தனது சரீரத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்று கூறிய போது, எத்தகைய இனிமையான உணர்வைத் தன் இருதயத்தில் உணர்ந்தாரென்றால், கூடியிருந்த யாவரும் வியந்து பாராட்டும் விதமாக, ஓர் பரவசத்திற்குள் மூழ்கினார். இந்நிகழ்விலிருந்து, அர்ச். பீட்டர் கழுத்தில், தூக்குக் கயிறு இறுக்கிய அச்சு பதிந்திருந்தது; தூக்குக் கயிற்றினால் திருகப்பட்ட கழுத்தையுடையவராகவே, எஞ்சிய தன் வாழ்நாள் முழுவதும், காணப்பட்டார். அவருடைய நிறமும் வெளிறிய நிறமாக மாறியிருந்தது. இவை இரண்டும், அவருடைய வாழ்வில், தேவமாதா நிகழ்த்திய மாபெரும் புதுமையின் அதிகாரப்பூர்வமான அடையாளங்களாக திகழ்ந்தன. பரலோக இராக்கினியின் மடத்தில், அர்ச்சிஷ்டவர் தன் வாழ்வின் மீதி நாட்களை செலவழித்தார். இம்மடத்தில், இவருடைய ஜீவியம், விரத்தத்துவ புண்ணியங்களுடையவும், சம்மனசுகளின் இராக்கினியான தேவமாதாவுடன் நிகழ்த்திய உரையாடல்களுடையவும், இடைவிடாமல் நீடித்த தொடர் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. தேவமாதாவின் பேரில் மிகுந்த மேரையும், சிநேக மிக்க கனிவும், உத்தமமான பக்தியும் கொண்ட அர்ச்சிஷ்டவர்களுக்குள், இவரும் ஒரு முக்கிய அர்ச்சிஷ்டவராக விளங்கினார், என்பதை, மோட்ச இராக்கினியுடன் அவர் செய்த உரையாடல்கள், உறுதிப்படுத்துகின்றன.




தூக்குக் கயிற்றில், தேவமாதாவின் பரிசுத்தத்திருக்கரங்களினால் தாங்கப்பட்டபடி, தொங்கிய அந்த பாக்கியமான நாட்களை, அர்ச்சிஷ்டவர், வாழ்நாள் முழுவதும், எப்போதும் மகிழ்வுடன் சிந்திப்பார்; புதுமையைப் பற்றி, சக துறவியரிடம் கூற வேண்டிய சந்தர்ப்பங்களில், "என் பிரிய சகோதரர்களே! என்னை நம்புங்கள். நான் உயிருடன் இருந்தேன், என்பதை என்னால் நம்ப முடியவில்லை. துாக்கு மரத்தில், இறந்துவிட்டேன் என்று கருதப்பட்டு, நான் தொங்கிக்கொண்டி ருந்த அந்த மிகச் சில ஆனால், மகா பாக்கியமான நாட்கள் மட்டுமே, என் ஞாபகத்தில் இருக்கின்றன. அதை நான் நம்புகிறனே", என்று கூறுவார்.

ஒரு மிகக் கொடிய நோயினால், பாதிக்கப்பட்டார்; தன் மரணத்தின் நாளை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தினார். 1304ம் வருடம், ஏப்ரல் 27ம் தேதியன்று, தனது 66வது வயதில் பாக்கியமாக ஆண்டவரில் மரித்தார். அர்ச்சிஷ்டவருடைய சரீரம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, 3 ஆண்களுக்கும் 4 பெண்களுக்கும் நோயிலிருந்து புதுமையாக சுகம் கிடைத்த அற்புதத்தை, ஆண்டவர் நிகழ்த்தி, அர்ச்சிஷ்டவரை மகிமைப்படுத்தினார். 1686ம் வருடம், மார்ச் 28ம் தேதியன்று, 11ம் இன்னசென்ட் பாப்பரசர், இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் கொடுத்தார்; 18ம் நூற்றாண்டில், 14ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசர், அர்ச். பீட்டர் ஆர்மங்கலை, வேதசாட்சிகளின் பட்டியலில் சேர்த்தார். 1936ம் வருடம் வரை இவருடைய சரீரம் அழியாத சரீரமாகத் திகழ்ந்தது. 1936ல்ஸ்பெயினில் நிகழ்ந்த கலகத்தின் போது, கம்யூனிஸ்டுகள், அர்ச்சிஷ்டவருடைய அழியாத சரீரத்தை எரித்து சாம்பலாக்கினர். அங்கிருந்த சில பக்தியுள்ள கத்தோலிக்க இளைஞர்கள், இந்த சாம்பலை அருளிக்கமாக, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததும், மறுபடியும் அர்ச்சிஷ்டவருடைய இந்த அருளிக்கங்கள், வீடுகளிலிருந்து, தேவாலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொது வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. 


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 11 - அர்ச். அருளானந்தரின் வேதசாட்சியம்

 மண் சிவந்தது!! || 

(அர்ச். அருளானந்தரின் வேதசாட்சியம்)



கொலை களம் நோக்கி! 1693-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் நாள். கதிரவன் கோபாவேசத்தோடே தீக்கற்றைக் கதிர்களால் பூமியை சுட்டெரித்துக் கொண்டிருந்த மதிய நேரம். அங்கே அந்த ஆளரவமற்ற. ஓரியூர் திட்டையிலே ஒரு பலி நிகழ்ந்தது! அருளானந்தசுவாமி என்று தன்னையே விரும்பி அழைத்துக் கொண்ட சங். ஜான் டி பிரிட்டோ . சே.ச சுவாமிகள் அங்கே கொண்டு வரப்பட்டார். வெண்ணிறக் கரங்கள் பின்புறமாய் கட்டப்பட்டிருக்க காவலர்கள் அவரை இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

கடந்த சில நாட்களாக தாம் பட்ட கொடுமைகளின் பாதிப்புக்களின்றி நிர்மலமான முகமுடையவராக, மிகுந்த உற்சாகப் பெருக்குடன் கம்பீரமாக நடந்து வரும்

அவரிடம் எந்தவிதமான அயற்சியோ, கலக்கமோ இல்லை! கடந்த நாட்களிலே அவர்பட்ட துன்ப அவமானங்கள்தான் எத்தனை! 40 மைல் கல் தூரத்திற்கு கற்களும், முட்களும் அவரது மெல்லிய பாதங்களையும் உடலையும் குத்திக் காயப்படுத்த, இழுபட்டு வந்த வேதனைகள் தான் எத்துணை! ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கிணற்றில் தலைகீழாகக் கட்டி இறக்கி மூழ்கடித்து அவர்பெற்ற சித்திரவதைக் கொடுமைகள் தான் என்ன!! மன்னர் கிழவன் சேதுபதியின் வீரர்களின் கடுமையான பேச்சும், ஏச்சும் தந்த அவமானம் தான் எத்தகையது? ஆனாலும், இன்று அவரது முகத்திலே முந்தைய நாட்களின் கொடுமைகளின் அடையாளங்கள் எதுவுமே காணப்படவில்லையே! இது தான் வேதசாட்சிகளின் திடனா? அதன் இரகசியம் தான் என்ன ?!

இழுத்துக் கொண்டு வரப்பட்ட சுவாமி, ஏறிட்டு ஓரியூர் மணல் திட்டை நோக்கினார். அங்கே, அந்த மணற்குன்றின் உச்சியிலே, கூரிய முனையுடன் கழுமரம் நாட்டப்பட்டிருந்தது. அதுவே அவரது சிலுவை மரம்! அவரது பலி பீடம்!! அவரது மனம் உவகையால் நிறைந்தது. தாம் எவ்வளவு ஆவலோடு காத்திருந்த பெரும் பேறு கடைசியில் இன்று வந்து சேர்ந்ததே என்று எண்ணி மகிழ்ந்த அவரது உள்ளம் நன்றியால் சர்வேசுரனை துதித்தது. திடனுக்காக மன்றாடியது. .. சுற்றிலும் பார்த்தார். அங்கே, இப்போது மக்கள் மெல்ல மெல்லக் கூடத்துவங்கியிருந்தார்கள். அவர்களுள், தனது அன்புக்குரிய, புதுக்கிறீஸ்தவர்கள் பதைபதைக்க மிகுந்த வேதனையோடு நின்று  கொண்டிருப்பதைப்பார்த்தார். அவர்கள் வாயடைத்துப் போய் . . . எதுவும் செய்வதறியாது திகைத்துப் போய் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட நிற்பது அவருக்குப் புரிந்தது. அங்கே தான் மிகவும் நேசிக்கும் இரு மறவ கிறீஸ்தவ இளைஞர்கள் “சுவாமிக்கு பதிலாக எங்களைக் கொல்லுங்கள்!” என்று இரைந்து கத்தியவாறு ஓடிவருவதையும், முரட்டுப்படைவீரர்களால் தடுத்து அடக்கப்படுவதையும் கண்டு புன்முறுவல் பூத்தார்.

நடப்பவற்றைக் காண, வினோதப் பிரியத்தால் வேடிக்கைப் பார்க்க வந்திருந்த இந்து மக்களில் சிலர் முகத்தில் ஆச்சரியம் பொங்க “என்ன! இந்த வெள்ளைக்கார சாமி, ஏதோ விருந்துக்குப் போவது போல அல்லவா செல்கிறார்?! கொல்லப்படப் போகிறோம் என்ற அச்சமும், பயமும் எதுவும் அவரிடம் இல்லையே? இதை எங்கே போய்ச் சொல்ல. . . ?!”” என்று எண்ணியவாறு வாய்பிளந்து வியந்து நின்றிருந்தனர். அவர்களது மனமும் அவருக்காக இரங்கத்தான் செய்தது! “ஆனாலும் இது அரசன் கிழவன் சேதுபதியின் கட்டளையல்லவா? புது வேதத்தை போதித்து வந்த இந்த வெள்ளைக்கார சாமி, நல்லவர் தான். எவ்வளவு நல்லது செய்திருக்கிறார்!. அவரால் நாம் அடைந்த நன்மைகள் எத்தனை. நிகழ்ந்த புதுமைகள் தான் எத்தனை!! இருந்தாலும் இந்த தாதியத் தேவருக்கு இது வேண்டாம்! ... அவர் கிறீஸ்தவ வேதத்துக்கு மாறிவிட்டாராமே? அதனால் ஐந்து மனைவியரில் மூத்தவளை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கிவிட்டாரமே?! .. என்ன அக்கிரமம்?! அவர்களை சகோதரிகளாய் பாவிக்கப் போகிறாராமே! இது என்ன புதுசு! இதில் இளையவள் சேதுபதியின் மருமகளாயிற்றே! வந்தது விணை!! அதுதான் இதற்குக் காரணம். இந்த வெள்ளைக்கார சாமி தான் காரணம் என்று அவரை இப்படிக் கொல்ல உத்தரவிட்டுள்ளாள் சேதுபதி. . . ஆனால், இந்த பரங்கி பண்டார சாமி எவ்வளவு நல்லவர்! அவரை நமது தெய்வங்களால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லையாமே . . ?!” என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டு, இரக்கத்தோடும், ஒருவித தவிப்போடும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வேதசாட்சிய முடி!


உச்சிவெயில் மண்டையைப் பிளக்க, அருளானந்த சுவாமி கால்கள், மணலில் புதைபட நடக்கிறார். அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒரு குரல், “என்ன ! மரண தண்டனைக்குச் செல்பவர் காலில் மிதியடிகளுடன் செல்கிறாரே? இது முறையல்லவே! ” என்று கேட்க, உடனே தாம் அணிந்திருக்கும் மிதியடி குறடுகளை (மரக் காலணிகள்) கழற்றி உதறிவிட்டு, தகிக்கும் அந்த சுடுமணலில் வெறுங்கால்கள் புதைய நடந்து கழுமரம் நடப்பட்டிருந்த உச்சிக்குச் சென்று அவ்விடத்தை முத்தமிட்டார். முழங்காலிட்டு மௌனமாக செபித்த அவரது ஆன்மா தமக்கு இந்த அரிய வேதசாட்சிய பாக்கியத்தை வழங்கிய ஆண்டவருக்கு நன்றி கூறியவராக, தாம் இறுதிவரை இதில் பிரமாணிக்கமாக இருக்கும் வரத்தைக் கேட்டு மன்றாடினார். தமது புது கிறீஸ்தவர்களுக்காகவும், மறவ நாட்டின் மக்கள் விசுவாச ஒளி பெற உருக்கத்தோடு ஜெபித்தார்.

அந்த இறுதி நேரத்திலும் மிகுந்த ஆனந்த பரவசத்தில் திளைத்த சுவாமியின் முகம் பரலோக ஒளியால் பிரகாசிப்பதைக் கண்ட வேத விரோதிகளும், அஞ்ஞான மக்களும் வியந்து போயினர். புன்முறுவல் பூத்துக் குலுங்கும் அவரது முகத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. “என்ன? மரணபயம் என்பதே இவரிடம் இல்லையே?!” என்று ஆச்சர்யப்பட்டனர். ஆனால், கிறீஸ்தவர்களோ, "அய்யோ! சுவாமி!” என்று மனதினுள் அரற்றி துக்கம் கொண்டு கண்ணீர் சொரிய அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுவாமி அருளானந்தர் தன்னைக் கொல்ல ஆணைப்பிறப்பித்த இராமநாதபுரம் மன்னன் கிழவன் சேதுபதிக்காகவும், தண்டனையை நிறைவேற்ற ஓலை அனுப்பிய உதய தேவனுக்காகவும், தீட்டிய வாளுடலும் கொடிய தோற்றத்துடனும் காட்சியளித்த கொலைஞன் பெருமாளுக்காகவும் செபித்தார். “பிதாவே! இவர்களை மன்னியும்! ஏனெனில், இவர்கள் செய்வது இன்னதென்ன அறியார்கள்” என்று மன்றாடினார்.

தமது பரிவாரங்களோடு தண்டனை நிறைவேற்றத்தைப் பார்வையிட வந்த சிற்றரசன் உதயத்தேவன் காலம் தாழ்த்தப்படுவதை அறிந்தவன், தன் மகனை அனுப்பி விரைவில் தண்டனையை நிறைவேற்றப் பணித்தான். இதை உணர்ந்த சுவாமிகள் எழுந்து சற்று தள்ளி நடந்து சென்று அங்கே முழந்தாழிட்டார். பின் நிமிர்ந்து பெருமாளிடம் “நான் தயாராகி விட்டேன்! இனி, நீ உன் கடமையைச் செய்யலாம்” என்று கூறினார்.

உடனே அருகில் நின்றிருந்த போர்வீரன் ஒருவன், அவரது நீண்ட தாடியை ஒரு கயிற்றினால் கட்டி அக்கயிற்றை உடம்போடு சேர்த்துக் கட்டினான். தலையை வெட்டியதும், அது நெஞ்சின் மேல் தொங்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தான். பின்னர் அவரது நீண்ட அங்கியை, இடுப்பு வரை களைந்தான். அப்பொழுது அவரது வெண்ணிற கழுத்திலே இருந்த ஓர் அருளிக்க கயிற்றைக் கண்டான். திடுக்கிட்டவனாய், “ஆ! அது மந்திரக் கயிறு! அது அவரது கழுத்தில் இருக்கும் வரை அவரைக் கொல்ல முடியாது” என்று எண்ணியவனாக, தன் வாளால் அக்கயிற்றை அறுத்தான். வாள் அவரது கழுத்தில்பட்டு... சுர்ரென்று வலி ஏற்படுத்த ... பூமியில் முதல் சொட்டு இரத்தம் சிந்தியது! சுவாமிகள் அதனை தமது முதல் காணிக்கையாக பரமபிதாவுக்கு ஒப்புக் கொடுத்தார்.


. . . எல்லாம் தயாராகியது : முழந்தாளிட்டபடியே குனிந்து தனது கழுத்தைக் காட்டிய சுவாமியின் உள்ளம் தாம் இன்னும் சில கணத்திலே அடையவிருக்கும் பேரின்ப பாக்கியத்தை நினைத்துப் பூரித்தது. கொலைஞன் பெருமாள், மனதைக் கல்லாக்கிக் கொண்டான், அருள் சுரக்கும் சுவாமியின் முகத்தைக் கண்டு நடுங்கிய அவன், அதை மீண்டும் பார்க்க அஞ்சினான். அவனது கரிய நெடிய முரட்டு தேகம் மெல்ல நடுங்கியது! ஆஹா! “நாம் எத்தனையே குற்றவாளிகளுக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளோமே, ஆனால், இன்று மட்டும் ஏன் தமது மனம் இப்படி தயங்குகிறதே? ஐயோ! இந்த பண்டாரச் சாமியிடம் எந்தக் குற்றமும் காணவில்லையே, ஆனாலும் என்ன செய்வது? அரச ஆணையல்லவா” என்றெல்லாம் சிந்தித்தவன் சற்று கண்களை மூடியவனாக "சாமி கடவுளே, என்னை மன்னித்து விடு!”” என்று கூறியவாறு தன் கரங்களில் ஏந்தியிருந்த கூரிய நீண்ட கனமான வாளை, உயரே மேலே . . ஆகாயத்தில் தூக்கினான். பின் தன் முழுபலத்துடன் கீழே, சுவாமியின் கழுத்தில் இறக்கினான். கூரிய அந்த ஆயுதம் ஆழமாய் விழுந்து தலையைத் துண்டித்தது. செங்குறுதி பீறிட்டு அடித்து அந்த தேரி மணல் மேட்டை நனைத்து செம்மண்ணாக்கியது! சிறிது நேரத்தில் உடல் துடித்து அடங்கியது. சுவாமியின் தலை, முன்பக்கமாய் சரிந்து தொங்காமல், பின் பக்கமாய் சாய்ந்து தனது ஆன்மா சென்றதைக் சுட்டிக் காட்டும் மேரையாக விண்ணோக்கி மலர்ந்த வண்ணம் காணப்பட்டது!.

பின்னர் அவரது உடல் களையப்பட்டு (கைகால்கள் வெட்டித் துண்டிக்கப்பட்டு) 10 அடி தூரத்திலிருக்கும் கழுமரத்தில் தொங்கவிடப்பட்டது. அவரது புனித உடலிலிருந்து கடைசி சொட்டு இரத்தமும், தண்ணீரும் சொரிந்து அந்த கழுமரத்தில் வடிந்து அதனை நனைத்து அந்த பூமியை செம்மையாக்கி புனிதப்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரையிலும் அந்த ஓரியூர் திட்டையைச் சுற்றிலும் உள்ள மணல் புதுமையாக இரத்த மணலாக - செம்மணல் பூமியாக மாறிப்போனது!. அவர் சிந்திய இரத்தத்துளிகள் அப்பகுதி மக்களுக்கு இரட்சண்ய விதைகளாக மாறின. அவர் தலைகீழாக கட்டி இறக்கப்பட்டு வாதிக்கப்பபட்ட ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் கிணறு மட்டும் இன்றும், புதுமையாக அமிர்தசுவை நீர் வழங்கி அந்த ஊரையே நிறைவிக்கிறது.

... மரியாயின் நிலமாம் போர்த்துக்கல் தேசத்திலே பிறந்து, அர்ச். சவேரியாரைப் போலவே ஆன்ம தாகத்தால் பற்றியெரிந்து, இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டின் மறவர் தேசத்தில் ஓரியூரில் சத்திய வேதத்துக்காக வேதசாட்சிய முடி பெற்ற அர்ச். அருளானந்தர் வேதசாட்சியமடைந்து 329 ஆண்டுகள் கடந்தும், இன்னமும் ஆன்மாக்களை இரட்சிக்க, சத்திய கத்தோலிக்க வேதம் பரவ ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்!

 ஆதராம் : 1 

The Red Sand 2. 

ஓரியூரின் ஒளிவிளக்கு

மறவர் தேசத்து மாணிக்கமாம், வேதசாட்சியான அர்ச். அருளானந்தரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


மாதா பரிகார மலர் - ஜனவரி - பிப்ரவரி 2022 



சனி, 13 ஆகஸ்ட், 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 10 வானில் தோன்றிய வெளிச்சம்!

 வானில் தோன்றிய வெளிச்சம்! அர்ச். அல்போன்சம்மாளின் பாக்கியமான மரணம் !


அன்று 1946 ஜூலை 27-ம் நாள். பரணங்ஙானம் பங்குச்சாமியார் சகோதரி அல்போன்சம்மாளைப் பார்க்க வந்தார். கையில் ஜெபமாலையை ஏந்தியவாறு படுத்திருந்த அவளைப் பார்த்து, "சிஸ்டர், என்ன செய்தி !. எப்படி இருக்கிறீர்கள் ?'' என்று கேட்டார். அதற்கு அவள் "சுவாமி, நாளைக்கு எனக்கு ஒரு போராட்டம் நடக்கப் போகிறது. நான் அதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்" என்று பதிலளித்தாள். குருவானவர், "பலமுறை போராடிப் பழகியிருக்கிறீர்கள் தானே, போருக்கான பழைய கருவிகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.” என்று நகைச்சுவையாகக் கூறினார். அதற்கு அல்போன்சம்மாளும், "ஆமாம்! அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்'' என்று தனது ஜெபமாலையை உயர்த்திக் காட்டியவள், "எனக்காக நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்'' என்று பதிலளித்தாள். மறுநாள் - 1946 ஜூலை 28, காலையில் அல்போன்சம்மாள் வழக்கம் போல் வராந்தாவில் உட்கார்ந்தவறே ஆலயத்தில் நடக்கும் திவ்ய பலி பூசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் நோயின் தாக்குதல் அறிகுறிகள்

தோன்றின. மெல்ல எழுந்து தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். உடனே வாந்தியும், மிகக் கடுமையான வேதனையும் ஆரம்பித்தன. சத்தம் கேட்டு உதவிக்கு சகோதரிகள் வர, துன்பங்கள் தொடர்ந்தன. வழக்கமாக இப்படிப்பட்ட வேதனைத் தருணங்களில் எதுவும் பேசவோ, கண்களைத் திறக்கவோ செய்யாத அல்போன்சம்மாள் இன்று கண் திறந்து சுற்றி நின்றவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். கொடிய வேதனைகளைத் தாங்கிக் கொண்டிருந்த போதிலும் தங்களைப் பார்த்து அவள் சிரிப்பதைப் கண்ட சகோதரிகளின் கண்கள் நீரால் நிறைந்தன. வேதனை அதிகரிக்கவும் பொறுக்கமாட்டாத அல்போன்சா, "எனக்கு சகிப்பதற்குப் போதிய சக்தி இல்லை. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இது எனக்கு என் கடவுள் தந்தது தானே? நான் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் ! ஆம் ! சகிக்கத் தான் வேண்டும்'' என்று கூறியவள், வேதனையால் திக்குமுக்காடிப் போனாள்.

பின்னர், "மணி எத்தனை?”” என்று கேட்டாள். நேரம் நண்பகல் 12 ஆகிவிட்டிருந்தது. தன் உடல் மீது போர்வையை இழுத்து மூடிக்கொண்ட அல்போன்சம்மாள், திரும்பவும் வேதனை தாங்க முடியாமல் "என் மாதாவே ! என் தாயே !” என்று சத்தமாகக் கூறியவாறு சுவரில் மாட்டப் பட்டிருந்த வியாகுல மாதாவின் படத்தைத் திரும்பிப் பார்த்தாள். மாதா படத்தைப் பார்த்த அவளது முகத்தில் சாந்தமும், சமாதானமும் நிலவியது. அவளது முகத்தில் அசாதாரணமான அழகும், ஒளியும் காணப்பட சுற்றிலும் நின்றிருந்த சகோதரிகள் வியந்து போயினர்!

இதற்குள் மடத்துப் பெரிய தாயார் அங்கு வந்தார்கள். "மகளே, சமாதானமாய் இரு” என்று சொல்லி பாடுபட்ட சிலுவையை முத்தி செய்யக் கொடுத்தார்கள். சிலுவையை பக்தியோடு முத்தமிட்ட சகோதரி அல்போன்சா, " எனக்குச் சமாதானக் குறைவு எதுவும் இல்லை தாயே ” என்று கூறினாள். சிறிது நேரம் சென்றது " எனக்கு உடுப்பு உடுத்துங்கள். நான் போக வேண்டும்” என்றாள். உடுப்பு அணிந்துதானே இருக்கிறீர்கள். எதற்கு உடுப்புக் கேட்கிறீர்கள்? என்றனர் சகோதரிகள் அதற்கு அல்போன்சா, "சபை ஆடையை எனக்குத் தாருங்கள். நான் போகிறேன். என்னை அனுப்பி வையுங்கள்'' என்று வேண்டினாள். அவளது நிலையை புரிந்து ''குருவானவரை அழைத்து வரட்டுமா?'' என்று சகோதரிகள் கேட்க, அதற்கு அல்போன்சா கூறிய பதில் யாருக்கும் புரியவில்லை.

சிறது நேரம் கடந்து "சேசுமரி சூசை " என்று கூறி பெருமூச்சு விட்ட அல்போன்சா பக்கத்தில் நின்றிருந்த சகோதரி கபிரியேலைப் பார்த்து, “இதோ என் இதயத்தில் இருந்து வரும் கீதத்தை நீங்கள் கேட்கவில்லையா? அது எவ்வளவு இனிமையான பாடலாக இருக்கிறது!! '' என்று புன்னகையுடன் கூறியவள், இரு முறை பெருமூச்சு விட்டவாறு கண்களை மூடி அமைதியாக தலை சாய்த்துக் கொண்டாள்.

உடனே பங்கு குருவானவருக்கும், மருத்துவருக்கும் ஆள் அனுப்பினார்கள். இருவரும் ஒரே சமயத்தில் வந்து சேரவே, நாடியை பார்த்து மருத்துவர் சகோதரிக்கு கடைசி அவஸ்தைப்பூசுதல் கொடுக்கும்படி குருவானவரைக் கேட்டுக் கொண்டார். அதன்படி பங்கு சுவாமி அவஸ்தைப்பூசுதல் வழங்கி கடைசி ஆசீர் அளித்தார்.

வழக்கம்போல் மயக்கம் தெளிந்து அல்போன்சம்மாள் கண்களைத் திறப்பாள், தங்களோடு பேசுவாள் என்று சகோதரிகள் காத்திருக்க, அவள் கண்களைத் திறக்கவேயில்லை அவளுக்கு இனி இவ்வுலகக் காட்சிகள் தேவையில்லை. சத்தமின்றி அந்த மாடப்புறா தன் வான் வீட்டிற்குப் பறந்து

போய்விட்டிருந்தது. ஆம் ! சகோதரி அல்போன்சம்மாள் மரணமடைந்து விட்டாள் ! தான் முன்னறிவித்தது போல் பூமியில் தனக்காகக் காத்திருந்த எல்லோர் முன்னிலையிலும், சற்றும் ஓசையின்றி வானவர்களோடு சேர்ந்துவிட்டாள் சகோதரி அல்போன்சா! அவளது ஆன்மா 35 வருடங்கள், 11 மாதங்கள், 9 நாட்களில் தனது வாழ்வின் தேர்வை முடித்துவிட்டு வெற்றிமுடி சூட தன் சிலுவையை சுமந்து கொண்டு சேசு தனக்காக தயார் செய்திருந்த வான்வீட்டை நோக்கிச் சென்று விட்டது.

அப்போது பரணங்ஙானம் பெரிய கோவில் மணி மும்முறை ஒலித்து நின்றது. அது நண்பகல் திரிகாலமணி. தனது சொந்த வீட்டை அடைந்து விட்ட அல்போன்சம்மாளை வானுலகோர் வரவேற்று ஆசனத்தில் அமர்த்திய கீதம் போல் அது அமைந்தது.

வானத்தில் தோன்றிய வெளிச்சம் ! சிலமணி நேரத்துக்குப்பின் மரித்த சகோதரியின் புனித உடல் துறவற ஆடை அணிவிக்கப்பட்டு மடத்துக் கோவிலில் வைக்கப்பட்டது. சகோதரிகள் அவளது உடலைச் சுற்றி நின்றும், அமர்ந்தும், முழங்காலில் நின்றும் அழுவதும், செபிப்பதுமாய் பகலையும் இரவையும் கழித்தனர்.

அன்று இரவில் அல்போன்சம்மாளின் அறையின் மேல் பாகத்தில் வானில் ஒரு ஒளி தோன்றியது! ஒரு மணி நேரமாக நின்று நிலை பெற்றிருந்த அந்த ஒளியை சகோதரி செசிலியம்மாள் பார்த்து வியந்தாள். அவளைத் தொடர்ந்து பல சகோதரிகளும் அவ்வொளியைக் கண்டனர். பின்னர் பங்குக் குருவிடம் அச்செய்தி சொல்லப்பட, அவர் சர்வேசுரனுடைய செயல்கள் பல வழிகளில் வரும், மக்களின் நன்மைக்காக கடவுள் அதனைப் புனிதப்படுத்துவார். என்று சொன்னார். ஆம் ! சர்வேசுரன் தமது பிரமாணிக்கமுள்ள ஞானப்பத்தினியை மகிமைப்படுத்தினார். திருச்சபையில் பீட வணக்கத்திற்கு உயர்த்தினார்.

- திருநாள் : ஜுலை 28 அர்ச். அல்போன்சம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் !


மாதா பரிகார மலர் - July - August 2022


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 9 அர்ச். அலெக்சியுஸ்


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 9 அர்ச். அலெக்சியுஸ்

 அர்ச்சிஷ்டவர்களின் ஜீவிய சரிதை: 
அர்ச். அலெக்சியுஸ் 


5ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில், ரோமாபுரியில், அலெக்சியுஸ் என்ற ஒரு அர்ச்சிஷ்டவர் ஜீவித்து வந்தார். இவர் மறைந்த ஜீவியம் நடத்திவந்தார். இவர், யுஃபேமியன் என்ற உரோமாபுரியின் அரசாங்கத்தின் செனட் உறுப்பினருடைய மகன். யுஃபேமியன், திரண்ட சொத்திற்கு அதிபதியாக, இருந்தார். அலெக்சியுஸ் மிகச் சிறிய வயதிலேயே, தேவ ஏவுதலுக்குக் கீழ்ப்படிந்தவராக, தனது வீட்டை விட்டு, வெளியேறினார்; அறிமுகமில்லாத ஒரு அந்நிய நாட்டிற்குச் சென்றார். சர்வேசுரனுடைய அழைத்தலை, தன் இருதய அந்தரங்கத்தில் உணர்ந்து, அதற்குக் கீழ்ப்படிந்த இவர், தன் தந்தையின் வீட்டை விட்டு வெளியேறி, நமதாண்டவர் பிறந்த புண்ணிய பூமி இருந்த கீழைநாடுகளுக்குத் திருயாத்திரையாகச்சென்றார். 17 வருடகாலமாக, தவயாத்திரையாகச் சென்று, ஜெபதப ஜீவியத்தில் ஈடுபட்டிருந்தார். ஆத்தும் சரீர ஆபத்துக்களின் மத்தியில், அர்ச். அலெக்சியுஸ் தவயாத்திரையாக, ஆண்டவரின் திருப்பாதம் பதிந்த பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில், அலைந்து திரிந்தார்.

நமதாண்டவர் மட்டில், கொண்டிருந்த தேவசிநேகத்தை வெளிப்படையாகக் காண்பிக்கும் விதமாக, அர்ச். அலெக்சியுஸ், ஒரு ஏழைப் பிச்சைக்காரனுடைய தோற்றத்தில், சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்து, சொந்த வீட்டிலேயேதான் யாரென்பதை யாருக்கும் தெரியப்படுத்தாமல், அங்கேயே தன் இறுதிக் காலத்தைக் கழிப்பதற்கு, உறுதியான ஓர் தீர் மானத்தை எடுத்தார். அவர், அவ்வாறு உரோமை நகரத்தை அடைந்தபோது, ஒரு தெருவில், தந்தை, யுஃபேமியனை சந்தித்தார். தந்தை, மிக ஆடம்பரமாக, திரளான பணிவிடைக்காரர்கள் புடைசூழ, அநேக பரிவாரங்களுடன் வருவதைக் கண்டார். ஏனெனில், அரசாங்கத்தில், அவர் மிக உயர்ந்த பதவியை அடைந்திருந்தார். அர்ச். அலெக்சியுஸ், 17 வருட காலமாக மேற்கொண்டிருந்த கடுமையான தபசி மிகுதியினால், அவர், வெகுவாக உருமாறியிருந்தார்; மேலும், அவர் உடுத்தியிருந்த எளிய பிச்சைக்காரனுடைய கந்தலாடையும், அதன் தோற்றமும், அவரை யாரும், அலெக்சியுஸ், என்று அடையாளம் காணமுடியாதபடிச் செய்திருந்தது.

அலெக்சியுஸ், தன் தந்தையை அணுகி, பிறர்சிநேகத்திற்கடுத்த தர்ம காரியமாக, தனக்கு அவருடைய இல்லத்தின் வளாகத்திலேயே, தங்குவதற்கு, ஓரிடத்தைத் தரும்படி கேட்டார்; அவரது உண்வு மேஜையிலிருந்து கீழே விழும் உணவுத் துண்டுகளே, தன்னைப் போஷிப்பதற்குப் போதுமானது என்று கூறினார். அரசாங்கத்தின் பேரவை உறுப்பினரான, யுஃபேமியன், எளிய பிச்சைக்கார கோலத்திலிருந்த அலெக்சியுஸ் மீது மனமிரங்கினார்; தன் ஊழியர்களில் ஒருவனிடம், ஏழைப் பிச்சைக்காரரான அலெக்சியுஸைத் தங்கச் செய்வதற்கும், அவருக்கு வேண்டிய உணவளிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் படி கட்டளையிட்டார். அந்த ஊழியக்காரன், அலெக்சியுஸை, ஒரு மோசமான இருண்ட குடியிருப்புப் பகுதிக்குக் கூட்டிச் சென்றான்; அங்கிருந்த ஒரு படிக்கட்டின் அடிப்பகுதியிலிருந்த ஒரு சிற்றரையில் அவரைத் தங்க வைத்தான். இங்கு, அலெக்சியுஸ் தன் ஜீவியத்தின் கடைசி 22 வருட காலத்தை துன்பத்திலும், ஊழியர்களுடைய இகழ்ச்சிகளின் மத்தியிலும் பொறுமையாக செலவழித்தார்.

அவருடைய சொந்த வீட்டின் வேலைக்காரர்கள், அவரை, யாரென்று அறியாமலிருந்ததால், அவரை ஒரு பிச்சைக்காரன் என்று எண்ணியிருந்ததால், அடிக்கடி, அவரைப் பரிகசித்தனர்; எள்ளி நகையாடினர்; சிறுமைப்படுத்தினர்; சில கொடிய ஊழியர்கள், அவரை அடித்துத் துன்புறுத்தி மகிழ்ந்தனர். அப்போதெல்லாம், நேச ஆண்டவர் பட்ட கொடூரமான பாடுகளின் உபத்திரவங்களுக்குப் பரிகாரமாக, சொந்த வீட்டிலேயே, தனக்கு ஏற்படும் இந்த நிந்தை அவமானங்களை, அசைக்க முடியாத பொறுமையுடன் ஏற்று, அனுபவித்தார். இவ்வாறு, அவரது தந்தையின் வீட்டில் ஒரு பிச்சைக்காரராக தங்கியிருந்த போது, அவருடைய ஜீவியம், ஒறுத்தல், தபசு, உபவாசத்துடன் கூடிய நீண்டதொரு இடைவிடாத ஜெபமாகத் திகழ்ந்தது.

கடைசியில், தனக்கு சாவு சமீபத்திலிருப்பதை உணர்ந்த அலெக்சியுஸ், ஒரு ஊழியனிடம், எழுதுவதற்குத் தேவையான எழுதுகோலையும், ஒரு தாளையும் பெற்றுக்கொண்டார். அந்த தாளில், அவர் தன் ஜீவிய சரித்திரத்தை முழுவதுமாக எழுதினார். எங்கெல்லாம் தவ யாத்திரையாக அலைந்து திரிந்தார் என்கிற விவரத்தையும், வீட்டைவிட்டு வெளியே சென்றதும், என்னவெல்லாம் அவர் அனுபவிக்க நேரிட்டது, என்பதைப் பற்றியும், தான், இவ்வளவு வருடங்களாக, காணாமல் போயிருந்த அவர்கள் மகன் அலெக்சியுஸ் என்றும், அந்நிய நாடுகளிலும், சொந்த வீட்டிலும் அனுபவித்த சகல துன்பங்கள் பற்றியும் எழுதினார்; அவற்றையெல்லாம் நேச இரட்சகர் அனுபவித்த நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரம் தன் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகளின் மனந்திரும்புதலுக்காகவும், பொறுமையுடன், ஏற்று ஒப்புக் கொடுத்து வருதாகவும், எழுதினார். இந்தத் தாளை, அவர் சாகும் வரை, தன் கையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில், அவருடைய பெற்றோர் தேவாலயத்தில் திவ்விய பலிபூசை கண்டு கொண்டிருந்தபோது, அர்ச். அலெக்சியுஸ், பாக்கியமாக மரித்தார்; அவருடைய ஆத்துமம், சரீரத்தை விட்டு, பரலோகம் சென்றதைக் குறிக்கும் ஓர் மோட்ச அறிவிப்பாக, உரோமை நகரிலிருந்த எல்லா தேவாலயங்களின் மணிகளும் தானாகவே, புதுமையாக அடிக்கத் துவக்கின! அப்போது, உரோமை நகர மக்கள் எல்லோரும் கேட்கும் விதமாக, ஓர் அசரீரியான குரலொலி மோட்சத்திலிருந்து கேட்டது : யுஃபேமியனுடைய இல்லத்திற்குச் செல்லுங்கள்; இதோ அங்கே சர்வேசுரனுடைய மாபெரும் நண்பர் இறந்துவிட்டார்; அவர் உரோமாபுரிக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். அவருடைய சகல விண்ணப்பங்களும், கேட்கப்பட்டன, என்று, மிகத்தெளிவாக அக்குரலொலி மூன்று முறை ஒலித்தது. யுஃபேமியன், விரைந்து, தன் வீட்டிலுள்ள படிக்கட்டின் அடியிலிருந்த சிற்றரைக்கு நேராகச் சென்று பார்த்தார். அப்போதுதான், தன் மகன் அலெக்சியுஸ், ஏழைப் பிச்சைக்காரக் கோலத்திலிருப்பதைக் கண்டார்; ஆச்சரியமடைந்தார்.

அப்போது தான் அவர் மரித்திருப்பதைக் கண்டதும், அழுதார்; அவர் கரத்திலிருந்த தாளை எடுத்து, அழுது கொண்டே , உரத்தச் சத்தமாக வாசித்தார். தன் பரிசுத்தக்குமாரனை, வாரியெடுத்து அரவணைத்தபடியே அழுதுகொண்டிருந்தார். தந்தையால் ஒரு வார்த்தை முதலாய் பேசுவதற்குக் கூடாமல் போனது. அவரது தாயார், இன்னும் கூடுதல் வேதனையு டன், அன்பு மகனே! உன்னைக் கண்டுபிடிப்பதற்கு, எனக்கு ஏன் இவ்வளவு காலதாமத மாயிற்று? என்று அலறியபடி, அழுதார்கள். 

சங். மிக்கேல் முல்லர், CSSR : courtesy: Catholic Aug 22,2016

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

கிறீஸ்துமஸ் திருநாளுக்கான ஞான தியானப் பிரசங்கம் அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்

 கிறீஸ்துமஸ் திருநாளுக்கான ஞான தியானப் பிரசங்கம்
       அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்

 சேசுநாதர் சுவாமியுடைய பிறப்பானது, உலகளாவிய சந்தோஷத்தை, அகில உலகத்திற்கும் கொடுப்பதற்குக் காரணமாயிருந்தது. உலக இரட்சகரும் மெசியாவுமான அவரது வருகைக்காகவே அநேக வருடங்களாக உலக மக்கள் ஆவலுடன் பெருமூச்சுடன் ஏங்கிக் காத்திருந்தனர். அதன் காரணமாகவே, அவர் ஜனங்களால் ஆசிக்கப்பட்டவர் என்றும், நித்திய மலைகளின் ஆவலாக விளங்குபவர் என்றும், அழைக்கப்பட்டார்.



இதோ! நமக்காக உலகத்திற்கு இறங்கி வந்து, ஏற்கனவே, ஒரு சிறு குகையில் பிறந் திருக்கும் அவரை நோக்கிப்பாருங்கள் ! இதோ! எல்லா ஜனத்துக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதேதெனில், இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் (லூக் 2:10) என்று இடையர்களுக்கு அறிவித்த அதே மகா சந்தோஷத்தை, சம்மனசானவர் இந்த நாளில், நமக்கும் கூட அறிவிக்கின்றார் என்பதை, நாம் சிந்திப்போமாக!

ஓர் அரசனுக்கு முதல் பேறாக ஆண்குழந்தைப் பிறந்ததென்றால், அந்த நாட்டு மக்க ளிடையே எத்தகைய சந்தோஷக் கொண்டாட்டங்கள் நடைபெறும்! ஆனால், தேவகுமா ரன் பிறந்திருப்பதையும், அவர் தமது இரக்க உருக்கத்தினால், பரலோகத்திலிருந்து, பூலோகத் திற்கு இறங்கிவந்து நம்மைச் சந்தித்திருப்பதையும், நாம் பார்க்கும் போது, உலக அரச குமாரனுடைய பிறப்பிற்கான கொண்டாட்டங்களை விட மாபெரும் கூடுதலான அளவிற்கு எவ்வளவான அதிமிக திருவிழாக் கொண்டாட்டங்களை, நிச்சயமாக நாம் கொண்டாட வேண்டும்? அந்த இரக்க உருக்கத்தால், உன்னதத்தினின்று உதயமானவர், அந்தகாரத்திலும், மரண நிழலிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு ஒளிவீசவும், நமது பாதங்களை, சமாதானத் தின் பாதையில் நடத்தவும் நம்மைச் சந்தித்திருக்கிறார் (லூக் 1:78).

நாம் நித்தியக் கேட்டிற்குப் பாத்திரவாளர்களாகி, நம்மையே இழந்து போயிருந் தோம்; அந்த நித்திய கேட்டிலிருந்து நம்மை மீட்டு இரட்சிப்பதற்காக, இதோ, அவர் உல கிற்கு இறங்கி வந்திருக்கிறார். நமது இரட்சணியத்திற்காக, திவ்ய மீட்பர், மோட்சத்திலிருந்து, இறங்கி வந்தார். இதோ! தமது ஆடுகளின் உயிரைக் காப்பதற்காக, தமது உயிரையேக் கை யளிப்பதற்காக, உலகத்திற்கு இறங்கி வந்த திவ்ய மேய்ப்பர்! நானே நல்ல ஆயன்! நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காகத் தன் பிராணனைக் கொடுக்கிறான் (அரு 10:11). இதோ சர்வேசு ரனின் திவ்விய செம்மறியானவர்! சர்வேசுரனின் மக்களாவதற்குரிய தேவ கொலை நமக்குப் பெற்றுத் தருவதற்காகவும், பாவத்தின் அடிமைத்தனத்தினின்று நம்மை விடுவிப்பதற்காகவும், நமது ஜீவனாகவும், நமது ஒளியாகவும், மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் நமது ஞான போஜனமாகவும் விளங்குவதற்காகவும், தம்மையே நமக்காக பலியான சர்வேசுரனின் திவ்ய செம்மறியானவர்!

இந்த காரணத்திற்காகவே, அதாவது, அவர் மனுவருவானார் என்பதையம், அவர் தம்மைத் தாமே நமக்கு உணவாகக் கையளித்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளும் படியாக, கிறீஸ்துநாதர், மிருகங்கள் உணவருந்தும் முன்னிட்டியில், தாம் தேவபாலனாகக் கிடத்தப்படுவதற்குத் திருவுளம் கொண்டார், என்று அர்ச். மாக்சிமுஸ் கூறுகின்றார். தமது சரீரம், மனிதர்களுக்கு நித்திய ஜீவியத்தை அளிப்பதற்கான ஞான போஜனமாகும் என்ப தைக் காண்பிப்பதற்காக, நமதாண்டவர், ஆடுமாடு மிருகங்களின் உணவை வைக்கும் முன்னிட்டியில், தமது சரீரமும் கிடத்தப்படுவதற்கு அனுமதித்தார்.

இதனுடன் கூட, மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், ஒவ்வொரு நாளும், குருக்கள் உச்சரிக்கும் வசீகர வார்த்தைகளின் வழியாக, பீடத்தின் மீது இறங்கி வந்து பிறக் கின்றார். திவ்விய பலிபூசை நிறைவேற்றப்படும் பீடம், நமதாண்டவர் பிறந்த குகையாகத் திகழ்கிறது; அவருடைய திவ்ய சரீரத்தை நம் ஞான போஜனமாகப் பெற்றுக் கொள்ளும் படி, அங்குச் செல்கிறோம். சிலர், வயது முதிர்ந்த அர்ச். சிமியோனைப் போல, பரிசுத்த குழந் தையாகிய திவ்விய பாலனை ஆவலுடன், தமது கைகளில் ஏந்துவதற்குமிகுந்த ஆவல் கொள் வர். ஆனால், திவ்ய நன்மை உட்கொள்ளும் போது, பெத்லகேம் குகையின் முன்னிட்டியி லிருந்த அதே தேவ பாலனாகிய திவ்ய சேசு, நமது கரங்களில் இறங்கிவந்து தவழ்வது மட்டு மல்லாமல், நம் இருதயங்களிலும் எழுந்தருளி வருகின்றார் என்பதை, விசுவாசம் நமக்குக் கற்பிக்கின்றது. அவர் தம்மையே முழுமையாக நமக்குக் கையளிப்பதையே நோக்கமாகக் கொண்டு, பிறந்தார்.

ஒரு பாலன் நமக்குப் பிறந்தார். சுதன் நமக்கு அளிக்கப்பட்டார் (இசை 9:6). வழி தப் பிப்போன ஆட்டைப்போல நான் அலைந்து திரிந்தேன்; நான் உமது கற்பனையை மறவாத படியினாலே, உமது தாசனைத் தேடுவீராக. (சங். 118:176). ஓ! ஆண்டவரே! என் சுய இன்பங் களைத் தேடி, தாறுமாறாக ஜீவித்துப் பரிதாபத்திற்குரிய விதமாக என்னையே இழந்து போ னேன்; நானே அந்தக் காணாமல் போன ஆடு. ஆனால், தேவரீர், என் பாவப் பொறுத்தலுக் காக, உம்மையே சிலுவையின்மீது பலிப்பொருளாக ஒப்புக்கொடுப்பதற்காக, பரலோகத்தி லிருந்து, இறங்கி வந்த தேவ மேய்ப்பராகவும், திவ்விய செம்மறியாகவும் ஒருமித்து விளங் குகின்றீர்! இதோ சர்வேசுரனின் செம்மறிப்புருவையானவர்; இதோ உலகின் பாவங்களைப் போக்குகிறவர்.

ஆகையால், என் ஜீவியத்தைத் திருத்துவதற்கு ஆசிக்கிறேன். அதற்காக, ஓ! என்னை மீட்டு இரட்சிப்பதையே நோக்கமாகக் கொண்டு, உலகில் பிறந்த என் திவ்ய இரட்சகரே! தேவரீரிடத்தில், நான் ஏன் என்னை முழுவதுமாக ஒப்படைக்காமலிருக்கிறேன்? இதோ! என் ஆண்டவர் என் இரட்சகராம். அவரிடத்தில், முழு நம்பிக்கை வைப்பேன்; பயமுறேன் (இசை 12:2). ஆண்டவரே! தேவரீர் எங்கள் மட்டில் கொண்டிருக்கும் இரக்கத்திற்கு, இதை விட மேலாக வேறு எத்தகைய அத்தாட்சியை, எங்களுக்கு அளிக்கக்கூடும்? ஓ! என் அதி மிக சிநேகமுள்ள திவ்ய இரட்சகரே! உம்மிடம் நான் நம்பிக்கை வைக்கும்படி என்னை ஏவித் தூண்டுவதற்காக, தேவரீர் தாமே, உம்மையே எனக்காகக் கையளித்திருக்கின்றரே!

ஓ! என் திவ்ய குழந்தை சேசுவே! மகா சிநேகமுள்ள தேவபாலனே! உம்மை நான் நோகச் செய்தேன் என்பதைக் குறித்து, நான் எவ்வாறு அதிகமாக துக்கிக்கிறேன் ! பெத்ல கேம் குகையில், தேவரீர் அழுவதற்கு நான் காரணமாயிருந்தேன். ஆனால், தேவரீர் என்னைத் தேடி, உலகிற்கு இறங்கி வந்திருக்கிறீர் என்பதை, நான் அறிந்துகொண்டதால், இப்போது, உமது திவ்ய பாதத்தினண்டையில் நான் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறேன்; மேலும், இப்போது, இந்த குகையில், வைக்கோல் நிரம்பிய முன்னிட்டியில், மிக எளிமையாக, குளி ரினால் துன்புறும் குழந்தையாக, தேவரீர் காட்சியளித்த போதிலும், உம்மையே, என் மாட்சி மிக்க இராஜாதி இராஜன் என்றும், மகா மகிமையுள்ள உன்னதர் என்றும் ஏற்றுக்கொள்கி றேன்.

ஓ! திவ்விய பாலனே! உமது கனிவுமிக்க குழந்தையின் அழுகுரல் சத்தங்கள், தேவரீ ரை நான் நேசிக்க வேண்டும் என்பதற்காகவும், என் இருதயத்தை உமக்குத் தரவேண்டும் என்பதற்காகவும், என்னை அழைக்கும் அழுகைச்சத்தங்களாக இருக்கின்றன, என்பதை உணர் கிறேன். ஓ! என் நேச சேசுவே! என் திவ்ய இரட்சகரே! இதோ, என் இருதயத்தை, இன்று, உமது திருப் பாதத்தினண்டையில் உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன் !

ஓ! உமது பரிசுத்த தேவசிநேக நெருப்பை, மனித இருதயங்களில் பற்றி எரியும்படிச் செய்வதற்காகவே உலகிற்கு இறங்கி வந்த என் நேச ஆண்டவரே! என் இருதயத்தை மாற்றி யருளும்! அதில் தேவசிநேக நெருப்பைப் பற்றியெரியும்படிச் செய்தருளும்! ஓ! மகா தாழ்ச் சியும், சாந்தமும், கருணையும், சிநேகமும் கனிவும் நிறைந்தவரான தேவ பாலனே! பெத்ல கேம் குகையின் முன்னிட்டியிலிருந்து, தேவரீர் என்னைப் பார்த்து, உன் தேவனாகிய கர்த்த ரை, உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமத்தோடும், உன் முழு மனதோடும், சிநேகிப்பாயாக! (மத் 22:37) என்று கூறுவதை, நான் கேட்டதாக உணர்கிறேன். அப் போது, அதற்கு, பதில் மொழியாக, ஆ! என் திவ்ய இரட்சகரே! என் நேச சேசுவே! என் ஆண்டவரும், என் சர்வேசுரனுமான தேவரீரை நான் நேசியாவிடில், வேறு யாரை நான் நேசிப்பேன்? என்று, என் முழு மனதுடன் நான் கூறுவேன். தேவரீர், உம்மைத்தாமே, என் னுடையவர் என்று அழைக்கிறீர்! ஏனெனில், தேவரீர் உம்மையே முழுமையாக எனக்குக் கையளிக்கும்படியாகவே, பிறந்தீர்; அப்படியென்றால், என்னை முழுமையாக உம்முடை யவனாவதற்கு, நான் மறுக்க முடியுமா? இல்லை. என் நேச ஆண்டவரே! நான் என்னையே, முழுமையாக, உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; என் முழுஇருதயத்துடன் நான் உம்மை நேசிக் கிறேன்.ஓ! உன்னத நன்மையானவரே! என் ஆத்துமத்தின் ஏக நேசமானவரே! நான் தேவரீ ரை நேசிக்கிறேன் ! நான் தேவரீரை நேசிக்கிறேன்! நான் தேவரீரை நேசிக்கி

ஓ! மகா கனிவும் இனிமையுமான தேவபாலனே! இன்று, என்னை, தேவரீர் ஏற்றுக் கொண்டு, இனி ஒருபோதும், உம்மை நேசியாமல் இந்த உலகில் ஜீவிப்பதற்கு என்னை அனு மதியாதேயும் என்று, உமது திவ்ய திருப்பாதம் முத்தி செய்து கெஞ்சி வேண்டிக் கேட்கி றேன்.

ஓ! மகா பரிசுத்த தேவமாதாவே! என் திவ்ய இராக்கினியே! முதல் முதலாக, தேவ ரீர், குழந்தையாகப் பிறந்து உமது திவ்ய குமாரனை, நோக்கிப் பார்த்த போதும், தேவ பால னுக்கு, முதல் முத்தத்தை அளித்த போதும், நீர் அனுபவித்த ஆறுதலைக் குறித்து, என்னை, அவருடைய ஊழியக்காரனாக ஏற்றுக்கொள்ளும்படியும், அவரது பரிசுத்த சிநேகம் என்ற உன்னத கொடையினால், என்னை, நித்திய காலத்திற்குமாக, அவருடன் பிணைத்தருளும்படி யும், எனக்காக, நம் நேச ஆண்டவரிடம் கெஞ்சிக் கேட்டு வேண்டிக் கொள்ள வேண்டும் என்று, தேவரீரிடம் இரந்து வேண்டி மன்றாடுகிறேன். -


ஆகமன காலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான ஞானப் பிரசங்கம் அர்ச். பதுவை அந்தோணியார்

 


ஆகமன காலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான ஞானப் பிரசங்கம்
அர்ச். பதுவை அந்தோணியார் 

ஆண்டவரிடத்தில் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்! (பிலி 4:4).



அந்த நாளில், யூதா நாட்டில் இச்சங்கீதம் பாடப்படும்; எங்கள் வலுமையின் பட்ட ணமாகிய சீயோனின் பாதுகாவலர் ஆண்டவரே; அவரே அதின் சுவராகவும் கொத்தளமா கவும் இருப்பார். கதவைத்திறந்து விடுங்கள்; உண்மையைக்கடைபிடித்த நீதியுள்ள ஜனமா னது உட்பிரவேசிக்கட்டும் (இசை 26:1, 2) என்று இசையாஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார்.

அந்த நல்ல நாள், தேவ வரப்பிரசாதத்தினுடைய ஒளிரும் பிரகாசமாக இருக்கிறது. ஏனெனில், அந்த தேவ வரப்பிரசாதத்தினால், நாம் ஞானவிதமாக ஒளியூட்டப்படுகிறோம். அவ்விதமாக ஒளியூட்டப்படும் போது, நாம், இசையாஸ் தீர்க்கதரிசி கூறுகின்ற அந்த சங்கீதத்தை பாடுவோம். அப்போது, ஆரவார உற்சவ இரவு காலத்திய பாடற்போல சங்கீதம் பாடுவீர்கள்; உங்கள் இருதய மகிழ்ச்சியானது இஸ்ராயேலின் வல்லபரான கடவுளுடைய பர்வத ஆலயத்துக்கு, தொழுகைக்குப் போக இசைக்குழல் கோஷணையோடு , செல்பவனின் சந்தோஷத்தைப் போலிருக்கும் (இசை. 30:29).

பாவப்பொறுத்தல் கேட்டு மன்றாடும் ஒரு பாவியின் தவச்சங்கீதமானது, அந்த ஆரவார உற்சவ இரவு காலத்திய பாடற்சங்கீதத்தின் குரலொலியாகத் திகழ்கிறது. ஏனெனில், அந்த தவச் சங்கீதம், பாவியை அர்ச்சிக்கும் ஞான வழியை நோக்கி இட்டுச் செல்கிறது; பாவியின் மனந்திரும்புதல் குறித்து, மோட்சத்தில் சம்மனசுகளிடையே மாபெரும் மகிழ்வுகளும் கொண்டாட்டங்களும் நடைபெறும்; அவ்விதமே, தவஞ்செய்கிற ஒரு பாவியினிமித்தம், தேவதூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷம் உண்டாயிருக்கும் (லூக் 15:10).

இந்த ஆரவார உற்சவத்தினின்று, பாவியின் இருதயத்தில் சந்தோஷம் உதயமாகிறது. இதைக் குறித்து, இசையாஸ் தீர்க்கதரிசி , சந்தோஷத்திலுள்ளவனையும், நீதியில் வாழ்பவனையும், நீர் நேருக்கு நேராக சந்தித்தருளினீர், என கூறுகின்றார் (இசை 64:5). இசைக் குழல் என்பது, ஒருவன் தனது பாவங்களுக்காகத் தன்னையே நிந்தித்துப் பாவப்பரிகாரம் செய்வதற்காகப் பாடும் தவச்சங்கீதத்தினுடைய இசையாகத் திகழ்கின்றது; ஒருவன், தவச்சங்கீதத் தினுடைய இசைக்கருவியாகிய இந்த இசைக்குழலை, நன்கு பயன்படுத்தி, ஏற்புடைய விதமாக, இசையை எழுப்புவானேயாகில், இஸ்ராயேலின் வல்லபரான சர்வேசுரனும் நம் தாண்டவருமான சேசுகிறீஸ்துநாதரைக் காண்பதற்காக, நமதாண்டவரின் பர்வதமாகிய பரலோக ஜெருசலேமிற்குள், சந்தோஷத்துடன் உட்பிரவேசிப்பான். அப்படியெனில், இந்தப் பாடல் எங்கே பாடப்படுகிறது? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? இசையாஸ் தீர்க்கதரிசி கூறுவதுபோல், இந்தப் பாடல், மனந்திரும்பும் பாவிகளின் நாடாகிய யூதேயா நாட்டில் இப்பாடல் பாடப்படும். அக்காலையில் யூதா நாட்டின் அழிவானது, எகிப்திற்குத் திகில் கொடுக்கும் (இசை. 19:17). அதாவது, உலகத்திற்கு, அது திகில் கொடுக்கும். உலகத்தின் மக்கள், நீதிமான்கள், பரிகாரம் என்ற சிலுவையில் அறையப்படுவதைக் காணும்

கப் போது, திகிலடைவார்கள். நமதாண்டவர் அனுவித்த கொடூரமான சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும் கண்ட மக்களைப் பற்றி, சுவிசேஷகரான அர்ச்.லூக்காஸ், இந்தக் கண் ணராவியைப் பார்க்கும்படி வந்திருந்த ஜனங்களெல்லோரும், நடந்தவைகளைக் கண்டு, தங்கள் மார்பில் அறைந்து கொண்டு திரும்பிப்போனார்கள் (லூக் 23:48) என்று கூறுகின்றார்.

இசையாஸ் ஆகமத்தில், மனந்திரும்பிய பாவி, நாள் முழுவதும் சதா நின்று கொண்டு : ஆண்டவருடைய வேவுகார வேலையின் மேல் யான் இருக்கிறேன்; இரவு முழுவதும் நின்று காவல் காக்கும் வேலையில் நான் இருக்கிறேன் (இசை 21:8) என்பான். செல்வம் மனிதனை உயர்த்துகிறது; துன்பமோ, அவனை வீழ்த்துகிறது; ஆகையால், பாவியானவன், நான் ஆண்டவருடைய தேவ வரப்பிரசாதத்தினால் ஒளியூட்டப்பட்ட தபசு என்கிற வேவுக் கார கோபுரத்தின் மீது நின்று கொண்டிருக்கிறேன் என்பான். அவன் நின்று கொண்டிருந் தான் என்பது, வளமிக்க நாள் முழுவதும், தனது நோக்கத்திலிருந்து விலகாமல், அதில் உறுதியாக நிலைத்திருப்பதையே அது குறிக்கிறது; மேலும், துன்பதுயரமாகிய இரவு நேரம் முழு வதும், கண்காணிப்பாளனாக, வேவுக்கார வேலையில் அவன் ஈடுபடுவது என்பது, அவன் சகல பாவங்களிலிருந்தும், தன் மட்டில் விழிப்பாயிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்வான் என்பதைக் குறிக்கிறது. மனஸ்தாபப்படும் பாவிகள், சீயோன் நகரத்தைத் தங்களு டைய வலிமையின் பட்டணமென்று அழைப்பார்கள். ஏனெனில், சீயோன் என்பது தபசைக் குறிக்கிறது; தபசு, நம்மை பகல் பொழுது என்கிற வளமையின் போது, பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் காப்பாற்றுகின்றது. அதே தபசு, துன்பம் என்னும் இருளடர்ந்த இரவுப்பொழுதிலும், அத்துன்ப துரிதங்கள் நம்மை மேற்கொள்ளாதபடி, நம்மைப் பாதுகாத்துக் காப்பாற்றுகின்றது.

சம்மனசுகள் சேனையின் ஆண்டவராகிய சேசுநாதர், மனஸ்தாபப்படும் பாவிகளுடைய கூட்டமாகிய ஜெருசலேம் நகரத்தை, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளுக்குள் வைத்துப் பேணிக் காப்பது போல், பாதுகாக்கின்றார். தமது மனிதத்துவத்தின் நிழலினால், நம் தாண்டவர், பாவிகளின் கூட்டத்தைக் காப்பாற்றுகின்றார் என்று கூறுகிறேன். அந்த பாவிகளின் ஜனக்கூட்டத்தை, நமதாண்டவர், தமது தேவத்துவத்தின் வல்லமையினால், பாவத் தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறார். அவர்களைத் தமது கொடியசிலுவைப் பாடுகளின் போது, சிந்தியதிரு இரத்தத்தினுடைய கசப்பு நிறைந்த தபசு என்கிற செங்கடல் வழியாகக் கடந்து போகும்படிச் செய்கிறார். தேனும் பாலும் ஓடும் வாக்குதத்தத்தின் பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்து அவர்களை, முழுவதுமாக மீட்டு இரட்சிக்கின்றார். அதன்பின், ஆண் டவர், சம்மனசுகளிடம், மோட்சத்தின் கதவைத் திறந்து விடுங்கள்; சுவிசேஷத்தின் உண்மையைக் கடைபிடித்த நீதியுள்ள ஜனமாகிய மனந்திரும்பிய பாவிகள் உட்பிரவேசிக்கட் டும், என்று கூறுவார். சுவிசேஷ உண்மையின் படி, தங்களுடைய பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பிய இத்தகைய மனிதர்களிடமே, இன்றைய நிரூபத்தில், ஆண்டவரி டத்தில் எப்போதும் சந்தோஷமாயிருங்கள், என்று அப்போஸ்தலர் கூறுகின்றார். ஆரவார உற்சவ இரவு காலத்திய பாடற்போல சங்கீதம் பாடுவீர்கள்; உங்கள் இருதய மகிழ்ச்சியா னது இஸ்ராயேலின் வல்லபரான கடவுளுடைய பர்வத ஆலயத்துக்கு, தொழுகைக்குப் போக இசைக்குழல் கோஷணையோடு, செல்பவனின் சந்தோஷத்தைப் போலிருக்கும் என்று இசையாஸ் ஆகமமும், இந்த நீதியின் ஜனமாகிய மனந்திரும்பிய பாவிகளின் சந்தோஷத்தைப் பற்றியே விவரிக்கின்றது. -

அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!




உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களின் வணக்க மாதம்


 உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களின் வணக்க மாதம் 

கி.பி. 1589ம் வருடம், இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரத்தில், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள், சம்மனசுகளின் இராக்கினியான அர்ச். தேவமாதாவின் மடத்தில் ஜீவித்த போது, ஒரு நாள் மடத்தின் தேவாலயத்தில் தேவநற்கருணைப் பேழையின் முன்பாக ஆராதித்தபடி ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஒரு உருவம் தேவாலயத்தின் மையப் பகுதியில், திவ்ய நற்கருணைப் பேழையை, பக்தி பற்றுதலுடன் சாஷ்டாங்மாக விழுந்து ஆராதிக்கும் விதமாக, முழங்காலில் இருந்து ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அந்த உருவம், சமீபத்தில் மடத்தில் இறந்துபோன ஒரு கன்னியாஸ்திரி என்பதையும் உணர்ந்தாள் ; அக்கன்னியாஸ்திரி, புண்ணியத்தில் சிறந்து விளங்கியவளாக, சக கன்னியர்களால் கருதப்பட்டிருந்தாள்; பாக்கியமாக மரித்திருந்தாள்; ஆனால், இப்போது, அர்ச். பாசி மரிய மதலேனம்மாளிடம், உத்தரிக்கிற ஸ்தலத்தில், தான், மிகப் பயங்கரமாக அனுபவித்து வரும் உபாதனைகளிலிருந்து, விடுதலையடைவதில், தனக்கு உதவி செய்யும்படி கேட்பதற்காகவே, அந்த கன்னியாஸ்திரி தோன் றினாள்.

அந்த கன்னியாஸ்திரியைச் சுற்றிலும், அவளை முழுமையாக சுட்டெரிக்கும் ஓர் மேற்போர்வை போல், பயங்கரமான உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பு சுவாலைகள், சூழ்ந்திருப்ப தையும், அதே சமயம், கொடிய தீச்சுவாலைகள், முழுமையாக அவளைச் சுட்டெரித்து விடாதபடி, நெருப்பின் ஒரு பகுதியைத் தடுத்து நிறுத்தி, அவளைப் பாதுகாக்கும்படியாக, ஒரு வெள்ளை நிற அங்கி, அவளுடைய உடலைச் சுற்றி மூடியிருந்ததையும், அர்ச். மரிய மதலேனம்மாள் பார்த்தாள். இதைக் கண்டு பெரிதும் அதிசயித்த மரிய மதலேனம்மாள், இந்த காட்சியின் அர்த்தம் என்னவென்று அறிய விரும்பினாள்; அதற்குக் காரணம், இந்த கன்னியாஸ்திரி, மகா உன்னதமான பீடத்தின் மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தின் மட்டில், கொண்டிருக்க வேண்டிய சங்கை மேரை மரியாதை ஆராதனையில், கவனக்குறைவாக நடந்ததினாலேயே , உத்தரிக்கிற ஸ்தலத்தில், இவ்விதம் அவதியுற வேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டிருக்கிறாள், என்ற பதில் மரிய மதலேனம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது.



இந்த கன்னியாஸ்திரி மடத்தில் வாழ்ந்தபோது, அடிக்கடி திவ்யநன்மையை தகுந்த ஆத்தும் சரீர ஆயத்தத்துடன் உட்கொள்ள வேண்டும் என்ற சபை ஒழுங்கை சரிவர அனுசரிக்காமலிருந்தாள்; அப்படியே, திவ்ய நன்மை உட்கொள்ளும் சமயங்களில், ஆண்டவரை போதிய பக்திபற்றுதலுடனும், ஆச்சாரத்துடனும் உட்கொள்ளாமல், வேண்டாவெறுப்புடன் உட்கொண்டு வந்திருக்கிறாள், என்பதையும், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள் அறிந்தாள். அதற்காகவே, அந்த கன்னியாஸ்திரி, ஒவ்வொரு நாளும், திவ்ய நற்கருணைப் பேழையை அதற்கு செலுத்த வேண்டிய சங்கை மேரை பக்தியுடன், ஆராதிக்க வேண்டும் என்றும், சேசுகிறீஸ்துநாதரின் திருப்பாதங்களின் அடியில், உத்தரிக்கிற ஸ்தல நெருப்பின் கொடிய உபாதனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தேவ நீதி அவளுக்குத் தீர்ப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்த கன்னியாஸ்திரி, பிரமாணிக்மாக அனுசரித்த பரிசுத்த கன்னிமை விரதத்துவத்திற்கு சம்பாவனையாக, நமதாண்டவரும், அவளுடைய பரிசுத்த பத்தாவுமானவர்,

உத்தரிக்கிற ஸ்தல நெருப்பின் உபாதனையின் பெரும்பகுதியினால், அவதியுறாத விதமாக, அவளை ஓர் வெண்ணிற அங்கியினால் உடுத்திப் பாதுகாத்தார்; அந்த வெண்ணிற அங்கி, அவள் அனுசரித்த பரிசுத்த கன்னிமை விரதத்துவத்தைச் சுட்டிக் காண்பிக்கிறது. என்பதை யும், அர்ச். பாசி மரிய மதலேனம்மாள அறிந்து கொண்டாள்; உடனே அன்றிலிருந்து, அந்த கன்னியாஸ்திரியின் உத்தரிப்பின் காலத்தையும் வேதனையையும் குறைப்பதற்குத் தன்னாலான ஜெபதப ஒறுத்தல் முயற்சிகள் செய்து, ஒப்புக் கொடுத்து வந்தாள்; அநேக திவ்ய பலிபூசைகளைப் பக்தி பற்றுதலுடன் கண்டு, அந்த கன்னியாஸ்திரியின் ஆத்துமத்தை, உத்த ரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவித்தாள்; இந்த சம்பவத்தை, அர்ச். பாசி மரிய மதலேனம்மாள், தன்சபைக்கன்னியாஸ்திரிகளுக்கு அடிக்கடிக்கூறி, திவ்ய நற்கருணையின் மட்டில் மிகுந்த பக்தி பற்றுதல் கொண்டிருக்கும்படி, அறிவுறுத்தி வந்தாள். "



Download Tamil Catholic SOngs

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

அர்ச். பிலோமினா நவநாள் ஜெபம்

 அர்ச். பிலோமினா நவநாள் ஜெபம்

பிதா, சுதன்  மற்றும் இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே. ஆமென்.


மிகவும் பிரியமுள்ள அர்ச். பிலோமினாம்மாளே, நீங்கள் சர்வேசுரனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் உங்கள் ஜெபங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இங்குள்ள விசுவாசிகள் அனைவருக்கும் உங்களது குழந்தைக்கு உள்ள விசுவாசம் மற்றும் பக்தி முயற்சிகள் அனைத்தும் எங்களுக்கு ஒரு தூண்டுதல். உங்கள் பரிந்துபேசலின் விளைவாக பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. நீங்கள் சர்வேசுரனுக்கு அருகாமையில் இருப்பதால், எங்களுக்காக நாங்கள் கேட்கும் மன்றாட்டுகளை அவரிடத்தில் பெற்று தாரும்....

(உங்கள் மன்றாட்டு)

அர்ச். பிலோமினாம்மாளே, இவ்வளவு இளம் வயதில், நீங்கள் சர்வேசுரனுடைய ராஜ்யத்திற்காக  எல்லாவற்றையும் கொடுத்தீர்கள். இன்னும் அதிகமாகக் நீர் சேசுநாதருக்கு ஒப்புக்கொடுத்த கன்னிமையை காப்பதற்க்காக உமது உயிரையும் விட துணிந்து, வேதசாட்சி மரணம் அடைந்தீர்.  அதே நம்பிக்கையும், கடவுளுடைய சித்தத்தை ஏற்றுக் கொள்ளும் விருப்பமும் எங்களுக்கு இருக்க வேண்டும் என்று எங்களுக்காக மன்றாடும்.


பிதா, சுதன்  மற்றும் இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே. ஆமென்.


வெள்ளி, 29 ஜூலை, 2022

பகுதி 2.

திவ்ய சேசுநாதரின் திரு இருதயத்தினுடைய நன்கொடை அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட்-தியானப் பிரசங்கம் - பகுதி 2.

நீ சர்வேசுரனுடைய வரத்தை.. அறிந்திருந்தால்.. (அரு.4:10) 

திவ்ய சேசுநாதர், தம்மைத் தாமே, இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் நித்திய காலத்திற்குமாக நீடித்திருக்கச் செய்வதற்கு, எவ்வழி முறைகளைக்கையாளுவார்? நமதாண்டவருடைய திவ்ய மனிதவதாரத்தினுடைய பரம இரகசியத்திற்கு திவ்ய இஸ்பி ரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தாமே, ஏற்புடையகாரணகர்த்தராக விளங்குகின்றார்;கடைசி இராபோஜனத்தின் போது,திவ்ய சேசுநாதர் எல்லாவற்றையும்,தாமே நிறைவேற்றினார்; ஆனால், அதற்குப் பின் வரும் காலங்களில், அத்தகைய உன்னதமான பரம இரகசியத்தினு டைய பரிசுத்தச் சடங்கை தலைமைப்பொறுப்பேற்று நடத்துவதற்கு,யார் தகுதியுடன் இருக் கின்றார்? குருவானவர் அதை நடத்துவார்! உடனே, தேவ ஞானம் அதை எதிர்த்தது. என்ன! சாவுக்குரிய ஒரு மனிதனாகிய குருவால், தன் இரட்சகரும் சர்வேசுரனுமானவரின் மனிதவதாரத்தை புதுப்பிக்க முடியுமா? தேவ வார்த்தையானவரின் இப்புதிய மனிதவ தாரத்தை ஏற்படுத்துவதற்கு, தேவ இஸ்பிரீத்துவானவருடன் கூட மனித ஒத்துழைப்பும் தேவைப்படுமா? எல்லாகாலங்களுக்கும் அரசரும் சர்வாதிகர்த்தருமான சர்வேசுரனுக்கு, ஒரு மனிதன் கட்டளையிடவும், அதற்கு அவர் கீழ்ப்படியவும்வேண்டுமா? அதற்கு, பின் வரு மாறு,திவ்ய சேசுவின் திரு இருதயத்திடமிருந்து பதில் வந்தது: ஆம்! நான் எவ்வளவிற்கு அதிகமாக மனிதனை சிநேகிக்கிறேனென்றால், எல்லா காரியங்களிலும் ,நான் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் அளவிற்கு, என்னையே விட்டுவிடுகிறேன். ஒரு குருவின் அழைத்தலுக்கு உடனடியாகக்கீழ்ப்படிந்து, நான் மோட்சத்திலிருந்து கீழே இறங்கி வருவேன். தேவ நற் கருணைப் பேழையில் குடியிருக்கும் நான், விசுவாசிகளின் குறைந்த பட்ச விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு,அப்பேழையிலிருந்து வெளியே வருவேன்: வேதனைமிகுந்த வியாதியின் படுக்கையிலிருக்கும் என் பிள்ளைகளைச் சந்திக்கும்படியாக, நகரத்தின் தெருக்கள் வழியா கச் செல்வேன். சிநேகமானது,சிநேகிப்பதிலும்,தனக்குச் சொந்தமானதைக்கொடுப்பதிலும், தன்னைத்தானேப் பரித்தியாகம் செய்வதிலும், மகிமையடைகின்றது.

அப்பொழுது, தேவ பரிசுத்தத்தனமும் தனது எதிர்ப்பை , பின் வருமாறுவெளிப்படுத் தியது: தேவரீர், உமது மகிமைக்கு ஏற்புடைய விதமாக, குறைந்த பட்சமாக, தேவாலயத்தில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். தேவரீரின் மாட்சி மிக்க இராஜரீகத்திற்கு ஏற்புடைய குருக்களை தேவாலயத்தில் கொண்டிருப்பீர்கள். பழைய ஏற்பாட்டின் சட்டத்தைக் காட் டிலும், புதிய ஏற்பாட்டின்சட்டத்தில், சகலமும் கூடுதல் அதிக அழகு வாய்ந்ததாக இருக்க வேண்டும். அத்தும ஆயத்தம் செய்த, இருதயத்தூய்மையுள்ள நல்லகிறீஸ்துவர்கள் மட்டும், தேவரீரை திவ்ய நன்மையில் உட்கொள்ள வேண்டும். அதற்கு, சேசுவின் திரு இருதயம், பின்வருமாறு பதிலளித்தது: என் சிநேகம் எவ்வித நிபந்தனையையும் கொண்டிருக்கிறதில்லை; அது, தனக்கென்று எதையும் ஒதுக்கி வைப்பதும் கிடையாது. கல்வாரியின் மேல், சிலுவை யில் அறைந்து என்னைக் கொன்ற கொலைஞர்களுக்கு, நான் கீழ்ப்படிந்தேன். இன்னும் கூட மற்ற யூதாசுக்கள் என்னிடம் வந்தாலும், அவர்களுடைய தீமை நிறைந்த தேவதுரோகமான முத்தத்தையும் ஏற்றுக்கொள்வேன். அவர்களுக்கும் கீழ்ப்படிவேன்.

ஆனால், அப்போது, எத்தகைய காட்சி, நம் நேச ஆண்டவர் முன்பாக தோன்றியது! ஆண்டவரின் திவ்ய திரு இருதயமானது, மனிதர் மீதான தனது சிநேகத்தின் இயல்பான நாட்டங்களினுடைய பற்றுதல்களை அடக்கியாள்வதற்காகத் தன் மீதே வலுவந்தம் செய்து போராடும்படியாயிற்று! ஜெத்சமெனி ஒலிவத்தோட்டத்தில் அனுபவிக்கவிருந்த இரத்த வியர்வையின் வேதனை, ஏற்கனவே, நமதாண்டவரை உபாதிக்கத் துவக்கியிருந்தது: பாடு களின் போது,தாம் அனுபவிக்கவிருந்த கொடிய நிந்தை அவசங்கைகள் பற்றிய காட்சியை, ஜெத்சமெனித் தோட்டத்தில் கண்ட போது, நமதாண்டவர், சாவுக்கு ஏதுவான துயரத் திற்குட்பட்டார். மனுமக்களை மீட்டு இரட்சிப்பதற்காக, தாம், இத்தகைய கொடிய சிலு வைப்பாடுகளைப் பட்ட போதிலும், திரளான மனிதர்கள் இரட்சணியத்தை அடைய மாட் டார்கள் என்று நினைத்தபோது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயம் எவ்வளவிற்கு அக்கொ டிய நினைவினால் தாக்கப்பட்டு வலுவந்தம் செய்யப்பட்டதென்றால், உடனே, வியர்வை நாளங்கள் வழியாக,ஆண்டவரின் திரு இரத்தம் வியர்வையாக வெளியேறியது. மேலும், தமது சொந்த மக்களில் அநேகர், வேத விசுவாசத்தை மறுதலித்தவர்களாக, திருச்சபையி லிருந்து வெளியேறுவதைப் பற்றி எண்ணிய போது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயம், கொடூரமான வேதனையால் தாக்கப்பட்டது. கடைசி இராப் போஜனத்தின்போது, ஆண்டவரின் திவ்ய திரு இருதயத்தில் எத்த கைய போராட்டம் நிகழ்ந்தது? எத்தகைய கடுந்துயரவேதனை ஏற்பட்டது? தமக்கென்று எதையும் ஒதுக்கி வைக்காமல்,ஆண்டவர் தம்மையே, முழுமையாக, மனிதருக்காகக் கைய ளிக்கச் சித்தமானார்; ஆனால், ஆண்டவரின் இத்தகைய அபரிமிதமானதும் உன்னதமானது மான சிநேகத்தை, ஒவ்வொரு மனிதனாலும், விசுவசித்து ஏற்றுக் கொள்ள முடிந்ததா? அதை விசுவசித்து ஏற்றுக்கொண்டவர்கள் எல்லோரும்,தகுந்த நன்றியறிதலுடன், இந்த சிநேக தேவதிரவிய அனுமானத்தில், அவரை உட்கொள்கின்றனரா? அப்படியே,தங்கள் ஆத்துமங்களில் அவரை வரவேற்கும் எல்லோரும், அவருக்கு எப்போதும் பிரமாணிக்கத் துடன் ஜீவிக்கின்றனரா? இத்தகைய கொடூர நிர்ப்பந்தங்களைக் கண்ட போதிலும், திவ்ய சேசுவின் திரு இருதயம், நிச்சயமாக நிலைக்குலையவு மில்லை; தடுமாறவுமில்லை; ஆனால், கொடூ ரமாக உபாதிக்கப்பட்டது.இந்த மகா பரிசுத்த சிநேகத்தின் தேவ திரவிய அனுமானத்தில், ஒவ்வொரு நாளும் தனது கொடிய சிலுவைப் பாடுகள் மறுபடியும் புதுப்பிக்கப்படுகிறதை, திவ்ய சேசு கண்டார்; இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில்,கிறீஸ்துவ இருதயங்க ளால், தமக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருதயங்களால்,தமது பாடுகள் புதுப்பிக்கப்படுவதைக் கண்டார்;திவ்யசேசுநாதர்,அநேகர் தம்மை வேத விசுவாச மறுதலிப்பினால், காட்டிக்கொடுப் பதையும், வேறு சிலர், சுயசிநேகத்தினால், தம்மை எதிரிகளிடம் விற்கிறதையும், மற்ற பலர் தங்களுடைய துர்க்குணத்தினால், தம்மை சிலுவையில் அறைகிறதையும் கண்டார்.ஆண்ட வரை,தினமும் திவ்ய நன்மையில் உட்கொள்பவர்களுடைய இருதயங்கள், வெகு அடிக்கடி அவருக்குக் கல்வாரி மலைகளாக மாறுகின்றனர்.

ஓ! இம்மகா சிநேகமிகுந்த தேவ திரு இருதயத்திற்கு, இது எத்தகைய கொடிய சித்திரவதை! இதற்காக, தேவ இரட்சகர் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது?நேச ஆண்ட வர் தம்மையே மறுபடியும் நமக்குக் கையளிப்பார்! அதே போல் எப்போதும், இந்த மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், நேச இரட்சகர், நமக்காகத் தம்மையேத் தொடர்ந்து கையளித்துக்கொண்டிருப்பார்.

எங்கள் மீதுள்ள சிநேகத்தால் பற்றியெரியும் சேசுவின் சற்பிரசாத திரு இருதயமே! உம்மீதுள்ள சிநேகத்தால் எங்கள் இருதயங்கள் பற்றிஎரியச் செய்தருளும்!


 

திவ்ய சேசுநாதர் சுவாமியின் திரு இருதய வணக்க மாதம் 1

  திவ்ய சேசுநாதரின் திரு இருதயத்தினுடைய நன்கொடை தியானப் பிரசங்கம் - அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட்

நீ சர்வேசுரனுடைய வரத்தை .. அறிந்திருந்தால்.. (அரு.4:10)


திவ்ய சேசுநாதர், உலக ஜீவியத்தின் இறுதி முடிவை அடைந்திருந்தார்; பரலோகம், தனது அரசரை, மறுபடியும் தன்னிடத்தில் அழைத்துக்கொண்டது; ஆண்டவர், போதுமான அளவிற்குப் போராடியிருந்தார்;அது, அவர் வெற்றியடைவதற்கான நேரமாயிருந்தது;இருப்

பினும், ஆண்டவர், பசாசின் அடிமைத்தனத்திலிருந்து அப்போது தான் மீட்டு இரட்சித்த ருளிய மனுக்குலத்தை, அவரின் புதிய குடும்பத்தின் பிள்ளைகளை, அப்படியே நிராதரவாக விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் உங்களை விட்டுச் செல்கிறேன். மேலும், நான் உங்களி டம் வருவேன், என்று ஆண்டவர், அப்போஸ்தலர்களிடம் கூறினார். ஓ ஆண்டவரே! தேவ ரீர் எங்களிடம் மறுபடியும் வருகிறீர்; தேவரீர், எங்களிடம் தங்கியுமிருக்கின்றீர்; அதே சம யம், எங்களை விட்டும் செல்கின்றீர்; இவ்விரண்டு காரியங்களையும், ஒரே சமயத்தில்,ஆண் டவரே, தேவரீரின் எந்த வல்லமையினுடைய புதுமையினால், செய்கின்றீர்? இது தான், ஆண்டவருடைய திவ்ய திரு இருதயத்தின் பரம இரகசியமும் உன்னத மான அலுவலுமாகும்.திவ்ய சேசுநாதர், இரண்டு மாட்சிமிக்க பத்திராசனங்களைக்கொண்டு திகழ்கின்றார். மோட்சத்தில் மகிமையுள்ள ஒரு பத்திராசனத்தைக் கொண்டிருக்கின்றார்; தாழ்ச்சியும் சாந்தமும் நன்மைத்தனமுமான மற்றொரு பத்திராசனத்தை, நமதாண்டவர், இப்பூமியில் கொண்டிருக்கின்றார்: இரு விதமான இராஜரீகமான அரசவைகளைக் கொண் டிருக்கின்றார். வெற்றியடைந்த மகிமையினுடைய திருச்சபையினரும் சகல மோட்சவாசி களுமடங்கிய பரலோக அரசவையையும், இங்கே, கீழேயுள்ள பூமியில் இரட்சணியமடைந்த சகல புண்ணியவாளர்களுடைய அரசவையையும் கொண்டிருக்கின்றார். திவ்ய இரட்சகர், ஒருவேளை,இவ்விரண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்ற ஒரு நிலை நிச்சயமாக ஏற்படுவதாக இருந்தால், நம்மை விட்டு விட்டுப் பரலோகத்திற்குத் திரும்பிச் செல்வதை விட, நம்முடன் கூட இங்கேயே, பூமியில் தங்கியிருப்பதற்கே, ஆசிப்பார். பர லோக மகிமையை அடைவதற்காக, மோட்சத்திற்குச் செல்வதை விட, தமது விலைமதியாத திரு இரத்தத்தையே கிரயமாகக் கொடுத்து மீட்டு இரட்சித்தருளிய எளிய சிருஷ்டிகளான மனிதர்களில் சின்னஞ்சிறியவர்களுடன் கூட தங்கியிருப்பதையேத் தேர்ந்தெடுப்பார் என்பதை, நேச ஆண்டவர், அநேக அத்தாட்சிகளால், நிச்சயித்திருக்கின்றார்: மனிதர்களின் குமாரர்களுடன் இருப்பதிலேயே, ஆண்டவர் அகமகிழ்கின்றார். திவ்ய சேசுநாதர், எந்த நிலைமையில் நம்முடன் தங்கியிருக்க நேரிட்டது? க்ஷண நேரத்தில் தோன்றி மறைகிற மிகக் குறுகிய காலநேரத்தில், நிலையுறுதியற்ற விதத்தில் தங்கியிருக்க நேரிட்டதா? இல்லை .ஆண்ட வர், நிலைமையாக எப்போதும், நம்முடன், இடைவிடாமல், தொடர்ந்து தங்கியிருப்பார். ஆனால், இந்த நேரத்தில், நமதாண்டவரின் திரு ஆத்துமத்திற்குள் ஓர் ஆச்சரியமானப் போ ராட்டம் நிகழ்ந்தது: தேவ நீதி எதிர்த்தது; மனுக்குல இரட்சணிய அலுவல் நிறைவேறிவிட்டதல்லவா? திருச்சபையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டதே! தன் சொந்த உடைமையாக்கிக் கொள்ளும் படியாக, மனிதனுக்கு, தேவ வரப்பிரசாதமும், சுவிசேஷமும்,தேவ கற்பனைகளும் சட்டங்க ளும், அளிக்கப்பட்டு, அவற்றை அவன் எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதையும் கற்பிக் கப்பட்டுவிட்டதல்லவா? திவ்ய சேசுநாதரின் திருஇருதயம், தேவ நீதியின் எதிர்ப்பிற்குப் பின்வருமாறு பதில் கூறியது: மனுக்குலத்தின் இரட்சணியத்தை நிறைவேற்றுவதற்குப்போதுமாயிருந்த காரியங் கள் எல்லாம், மனுக்குலத்தின் பேரில் கொண்டிருந்த தமது அளவில்லாத சிநேகத்தைத் திருப்திப் படுத்துவதற்குப் போதுமானதாக இல்லாமல்போனது: குழந்தையைப் பெற்றெடுப் டன் திருப்தியடையாமல், ஒரு தாயானவள், அதற்கு உணவளித்துப் போஷித்து வளர்ப் பதிலும், அது செல்லுமிடங்களிலெல்லாம், அதனுடன் கூடவே இருந்து,அதைத் தொடர்ந்து கண்காணித்து வருவாள்."உலகத் தாய்மார்களிலேயே மிகச் சிறந்த தாய், தன் பிள்ளையை, நேசிப்பதைவிட மேலாக, நான் மனிதரை சிநேகிக்கிறேன். நான் அவர்களுடன் கூட தங்கி யிருப்பேன்” என்று, திவ்ய சேசுநாதரின் திரு இருதயம், நம்மைப்பார்த்துக் கூறுகின்றது. எந்த காண்டவர் நம்முடன் கூட தங்கியிருப்பார்? மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானம் என்கிற திவ்ய அப்பஉருவத்தில், திரைச்சீலைக்குள் மறைந்திருப்பார். தேவ மகத்துவம் இதை எதிர்த்தது; தேவ இரட்சகர், தமது மனிதவதாரத்தின்போது, தம்மை உட்படுத்திக்கொண்ட தாழ்மை சிறுமையை விட, இம்மகாபரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், அவருக்கு, மாபெரும் விதம் கூடுதலாக ஏற்படக்கூடிய தாழ்மை, சிறுமைக்கு, தேவ மகத்துவம்,மறுப்பைத் தெரிவித்தது. பாடுகளின்போது அனுபவித்த சிறுமை, தாழ்மை
யான நிந்தனைகளை விட, இப்போது, அதிக சுய இழிவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய சுய இழிவை, மனுக்குலத்தின் இரட்சணிய அலுவல் கேட்கவில்லை, என கூறி,தேவமகத்துவம், அதை எதிர்த்தது. அதற்கு உடனே, திவ்ய சேசுநாதரின் திரு இருதயம்,பின் வருமாறு பதிலளித்தது: பழைய ஏற்பாட்டின் காலத்தில், மோயீசனுடைய மகிமை, யூதர்கள் அவரருகில் செல்லாத படிக்குத் தடுத்ததுபோல், என் தேவசுபாவ மகிமையின் மாட்சிமை,என்னிடம், அணுகி வரும்,என் எளிய சகோதரர்களான மனிதரை,தடுத்துவிடாமலிருப்பதற்காக, நான் என்னை யும் என்மகிமையையும் திரையிட்டு மறைத்துக்கொள்ளவே ஆசிக்கிறேன்.என்உன்னதமான புண்ணியங்கள், மனிதனைத் தாழ்மைப் படுத்தாமலிருப்பதற்காகவும், அத்தகைய உத்தம மேரையான எனது நன்மாதிரிகையின் முழுமையான உத்தமதனத்தை அடைவதைக் குறித்து, அவன் ஒரு போதும், அதைரியப்படாமலிருப்பதற்காகவும், நான் என் புண்ணி யங்களின் மேல் ஒரு திரையைப் போட்டு மறைத்துக் கொள்ள ஆசிக்கிறேன். அப்போது, மிக எளிதாக, என் அருகில், மனிதன் வருவான். மேலும், ஒன்றுமில்லாமையாகிய இச்சிறுப் பேழையினுள், அடைபட்டிருக்கும்படி, கீழே குனிந்து இறங்கி, என்னையே தாழ்த்தியிருப் பதைக் கண்டு, அவனும், என்னுடன் கீழே இறங்கி வருவான். அப்போது, அவனிடம், நான் இருதயத் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ளவர் என்பதை என்னிடத்திலிருந்து கற்றுக் கொள், என்று இன்னும் கூடுதல் அதிகாரத்துடன் கூறுவதற்கான உரிமையை, நான் கொண்டிருப்பேன்.

தேவநற்கருணை

 தேவநற்கருணையில் திவ்ய கர்த்தர் மெய்யாகவே பிரசன்னமாயிருக்கின்றார்

சர்வேசுரன் அங்கே இருக்கின்றார்! - அர்ச்.பீட்டர் ஜூலியன் எய்மார்ட் மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்திலிருக்கின்றார்; நானோ, இதை அறியாமலிருந்தேன் (ஆதி.28:16).

நமதாண்டவருக்கு, ஆராதனையையும், ஸ்துதியையும் செலுத்துவதன் மூலம், நாம்

சங்கை மரியாதையைச் செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். அதுவே, நமது முழு முதல் தலையாயக்கடமை.தன்னியல்பாக,க்ஷண நேரத்தில், உடனடியாக,ஒரு அனிச்சை செயல்போல் ஏற்படும், சங்கை மரியாதையை, நாம் ஆண்டவர் மட்டில் கொண்டிருக்க வேண்டும்; இல்லாவிடில்,கடமைதவறிய குற்றத்திற்கு ஆளாவோம். க்ஷண நேரத்தில், இயல் பாக, சர்வேசுரன் மட்டில் கொண்டிருக்க வேண்டிய சங்கை மரியாதை, முன் யோசனை ஏதுமில்லாமல் நம்மிடம் ஏற்பட வேண்டும். சர்வேசுரன் மட்டில் நாம் கொள்ளும் மேரை மரியாதையானது, நமக்குள் ஓர் அச்சுப் பதிவாகப் பதியப்பட்டிருக்கும் சுபாவத்தினுள் இருக்க வேண்டும். ஆண்டவர் எங்கிருந்தாலும், நாம் அவரைக் கட்டாயமாக ஸ்துதித்து, ஆராதிக்க வேண்டும். கடவுள் மனிதன் என்ற அவருடைய மாட்சிமிக்க தேவ மகத்துவத் திற்கு, சிருஷ்டிகளாகிய நமது ஸ்துதியும்,ஆராதனையும், தேவைப்படுகின்றது; அவருடைய பரிசுத்த திருநாமத்திற்கு, பரலோகத்தினரும், பூலோகத்தினரும், பாதாளத்தினரும் முழங் காலிலிருந்து, பணிந்து தென்டனிட்டு வணங்குகின்றனர்.

மோட்சத்தில், சம்மனசுகள், தேவ மகத்துவத்திற்கு முன்பாக, நடுநடுங்கியபடி, சாஷ் டாங்கமாக விழுந்து, தெண்டனிட்டு, ஆராதிக்கின்றனர். நமது ஆண்டவரின் மகிமையின் ஸ்தலமான மோட்சமானது, உன்னதமான மேரை மரியாதையை, சர்வேசுரன் பெற்றுக்

கொள்ளும் ஸ்தலமாக, விளங்குகின்றது. பூமியிலுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும்,நமதாண்ட வருக்குக் கீழ்ப்படிந்திருந்தன: ஆழ்கடல் சமுத்திரமானது, ஆண்டவருடைய பாதத்தில், நில மாக மாறி, அவரை ஆராதித்தது; திவ்ய கர்த்தர், சிலுவையில் மரித்த போது, சூரியனும், வானமண்டலத்தின் சந்திரனும், நட்சத்திரங்களும், ஆண்டவருடைய மரணத்தைக் காண சகிக்காமல், தங்களையே மறைத்துக் கொண்டு, வருந்தின.மனிதரெல்லாரும், ஆண்டவரை தூஷித்து சபித்துக் கொண்டிருந்த போது, வானமும் பூமியும் ஆண்டவரை, ஸ்துதித்துப் போற்றின! நரகத்தில், சபிக்கப்பட்ட பாவிகள், ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்கிற வராகிய தேவ நீதிபதியின் கண்டிப்பான நீதித் தீர்ப்பினடியில், அஞ்சி நடுநடுங்கிக் கொண் டிருக்கின்றனர்!

நமதாண்டவரின் தெய்வீகப் பிரசன்னத்திற்கு, நாம் காண்பிக்க வேண்டிய மேரை மரியாதையான ஆராதனைக்கு, எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை! அரசர் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்; அது ஒரு அனிச்சை செயலாக இருக்கிறது. அரசரோ உயர் அதிகாரியோ கடந்து செல்லும்போது, ஒவ் வொருவரும் அவருக்கு, சங்கைமரியாதை செலுத்துகின்றனர். அரசர் செல்லுமிடமெல்லாம், மரியாதையும் புகழும் செலுத்தும் மக்கள் கூட்டம், உடனுக்குடன் அவரை வாழ்த்துவ தைக் காணலாம். சர்வேசுரனுக்கு ஆராதனை செலுத்தும் உணர்வு இல்லாதவனும், அல்லது, பிறரிடத்தில், சர்வேசுரனுக்கு ஆராதனை செலுத்தும் உணர்வை அழிக்கஆசிப்பவனும், மனித னே இல்லை!

நமதாண்டவரின் பிரசன்னத்தில் அனுசரிக்க வேண்டிய சங்கை மரியாதை இல்லாத கத்தோலிக்கர்கள், வெட்கப்படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. தேவ சந்நிதானத்தில் இருக்கும்போது, அந்த க்ஷண நேரத்தில் உடனுக்குடன் அனுசரிக்கப்பட வேண்டிய மரியா தையைப் பற்றி தான், கூறுகிறேன். யூதரின் ஜெபக்கூடத்திற்குள் நுழைந்து பார்! அங்கு நீ பேசினாலோ, உன் நடத்தை ஒழுங்கில்லாமல் போனாலோ,நீ வெளியேற்றப்படுவாய்! ஒரு மசூதிக்குள் நுழைவதற்கு முன், உன் பாதணியைக் கழற்ற வேண்டும். தப்பறையான இம் மதத்தினர் எல்லோரும், அவர்களுடைய கோவில்களில் உண்மையான ஒன்றையும் கொண் டிருக்கவில்லை! ஆனால், நம்மிடம் எல்லாம் இருக்கின்றது! இருப்பினும், அவர்கள் தெய்வத்

மட்டில், கொண்டிருக்கும் மரியாதை, சர்வேசுரனிடம் நாம் கொண்டிருக்கும் மரியா தையை, வெகுவாகக் கடந்து, உயர்ந்து இருக்கின்றதே! தம்மைக் காட்டிலும், பசாசுக்கே, மனிதர்கள், அதிகமாக மரியாதை செலுத்துகின்றனர், என்று கூறி, நமதாண்டவர், நம்மீது குற்றம் சுமத்தக்கூடும்!

தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளால், பகிரங்கமாக உதாசீனப்படுத்தப்படுவதற்கு சம் மதிப்பார்களா? நமக்கு மற்றவர் செய்யும் சங்கயீனத்தை மிகப் பெரிதாகக் கருதுகிறோம்; ஆனால், நாம் அதே அவசங்கைகளை,நமதாண்டவருக்கு ஏன்செய்கிறோம்? நமது அற்பமான கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்பட்டால், அது பற்றி அதிகம் வருந்துகிறோம்.ஆனால், ஆண்ட வருக்குரிய சங்கை மேரை, அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பற்றி, சற்றும் வருந் தாமல் இருக்கிறோம். நமது கண்ணியம், சர்வேசுரனிடமிருந்து, அவரது பிரதிபலிப்பாக,நம்மி டம் வருகின்றது.ஆகையால், நமதாண்டவர் மட்டில் நாம் கொள்ள வேண்டிய மரியான யை, இழப்பதற்கு அனுமதிப்போமேயாகில், நம் மட்டில், நமக்குரிய மரியாதையையும் அழித்துவிடுவோம்.ஆ! தேவசந்நிதானத்தில் அனுசரிக்க வேண்டிய சங்கை மரியாதையில்லா மலிருந்த பாவத்திற்குத் தகுந்த தண்டனையை,சர்வேசுரன் நமக்கு அளிப்பாரானால், ஐயோ! அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும்!

எனவே, நமதாண்டவருடைய தேவ பிரசன்னத்திற்குள், நாம் வந்தவுடன், அவரை ஸ்துதித்து ஆராதித்து, ஆண்டவருக்குரிய முதல் வணக்கத்தை அளிப்போமாக! திவ்ய கர்த் தருக்குரிய சங்கை மரியாதையை செலுத்துவதற்கு முன்பாக, நாம் அலட்சியப்போக்கையும், பராக்கையும் நம்மிடம் அனுமதிப்போமேயாகில், நாம் நீசப்பாவிகளாக இருப்போம். ஆம்! தேவநற்கருணைப்பேழையிலிருக்கும் ஆண்டவர் மட்டில் நாம் கொண்டிருக்கும் மரியாதைக் குறைவிலிருந்தே, விசுவாசத்திற்கு எதிரான மாபெரும் பாவங்கள் தோன்றுகின்றன

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

! +


தேவமாதா வணக்க மாதத்திற்கான தியானம்

தேவமாதாவின் மகிமைகள் - அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார்

ஞானஉபதேசம் கற்பிக்கப்பட்டகிறீஸ்துவன் என்ற தமது நூலில், பின் வரும் உண் மை நிகழ்வை , சங்.பால் செக்னரி என்ற குருவானவர், எழுதினார்: அநேக பாவகரமான தீயபழக்கவழக்கங்களுடைய ஒரு இளைஞன், உரோமாபுரியில் வாழ்ந்த சங்.நிக்கோலாஸ் சூச்சி என்ற குருவானவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கு வந்தான். அவனை, குருவானவர், அன்புடன் வரவேற்றார்;அவனுடைய நிர்ப்பாக்கிய அந்தஸ்தைக் குறித்து, வாலிபன் மீது இரங்கி, அவனிடம், நண்பனே! தேவமாதாவின் மீது, நீ பக்தி கொள்ள வேண்டும். தேவமாதா பக்தியின் வழியாக மட்டுமே,அருவருப்புக்குரிய அத்தீயப் பாவப் பழக்கத்திற்கு அடிமையாயிருக்கும் நீ, உன்னையே, அத்தீமையினின்று, விடுவித் துக் கொள்ள முடியும். ஆதலால், உன் பாவங்களுக்குப் பரிகாரமாக, நீ ஒவ்வொருநாளும் படுக்கையிலிருந்து எழும்போதும், இரவில் படுக்கப்போவதற்குமுன்பும்,தேவ மாதாவிற்குத் தோத்திரமாக, ஒரு அருள் நிறை மந்திரத்தை பக்தியுடன் ஜெபிக்கவேண்டும். இதை, நீ அடுத்த பாவசங்கீர்த்தனம் வரை கட்டாயமாகக்கடைப்பிடிக்க வேண்டும்; அதே சமயம்,நீ உன் கண்களையும்,கைகளையும், உன்சரீரம் முழுவதையும், தேவமாதாவிற்குச் சொந்த உடை மையாகக் கையளித்து, அவற்றை ஏற்றுக் கொண்டு, பரிசுத்தமாகப் பாதுகாக்க வேண்டு மென்று, தேவமாதாவிடம், நீ கெஞ்சி மன்றாட வேண்டும். அதன் அடையாளமாக, நீ சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து, மூன்று முறை தரையை முத்தமிட வேண்டும், என்று,

லிபன் கட்டிக் கொண்ட பாவங்களுக்கான அபராதத்தை, நிறைவேற்றுவதற்கான விவ ரத்தை, குருவானவர், அவனுக்கு அறிவித்தார்.

வாலிபனும், குருவானவர் விதித்த அபராதத்தை, தினந்தோறும் தவறாமல், நிறை வேற்றி அனுசரித்து வந்தான். துவக்கத்தில், அவனுடைய நடத்தையில் சிறிதளவான மாற்ற மே காணப்பட்டது. ஆனால், குருவானவர், வாலிபன் அடுத்தடுத்து செய்த பாவசங்கீர்த்தனங் களுக்கும் அதே அபராதத்தையே,அனுசரிக்கும்படி அறிவுறுத்தினார்;அந்த நல்ல பழக்கத்தை, அவன் தன் ஜீவிய காலத்தில் ஒரு போதும், கைவிடக்கூடாது, என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவன்,எப்போதும்,தேவமாதாவின் அடைக்கலப்பாதுகாவலில்,முழு நம்பிக்கையு டன் தன்னை ஒப்படைத்து, ஜீவிக்க வேண்டும்; அதை ஒரு போதும் மறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு, அந்த வாலிபன், சக நண்பர்கள் சி உரோமாபுரியை விட்டு வெளியேறி, உலகத்தின் பல நாடுகளுக்குப் பிரயாணம் சென்றான்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, அவன் உரோமாபுரிக்குத் திரும்பி வந்தான். மறுபடியும், சங்.நிக்கோலாஸ் சுவாமியாரைச் சந்தித்தான். அவன் முற்றிலும், நல்லவனாக மாறியிருப்ப தைக் கண்ட குருவானவர், மிகுந்த சந்தோஷமடைந்தார். அவன் முந்தைய சகல பாவப் பழக்கங்களிலிருந்தும் முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருப்பதைக் குறித்து, குருவானவர் அகமகிழ்ந்தார். அவர், அவனிடம், மகனே! நீ,சர்வேசுரனிடமிருந்து, எவ்வாறு, ஆச்சரியத்திற் குரிய, இந்த முழுமையான மனந்திரும்புதலை, அடைந்து கொண்டாய்? என்று கேட்டார். அதற்கு, அவன், சுவாமி! தேவமாதாவிற்குத் தோத்திரமாக அனுசரிக்க வேண்டும் என்று, நீங்கள், எனக்குக் கற்பித்த அந்த சிறிய பக்தி முயற்சியை நான் தொடர்ந்து அனுசரித்து வந்தேன். அந்த பக்தி முயற்சிக்குக் கைம்மாறாக, திவ்ய இராக்கினி,எனக்கு, இந்த தேவவரப் பிரசாதத்தைப்பெற்றுத் தந்தார்கள், என்று பதில் கூறினான். இச்சம்பவத்தில் நிகழ்ந்த அதிச யம் இத்துடன் முடியவில்லை.

குருவானவர், இந்நிகழ்வைப் பற்றி ஒரு நாள் தமது பிரசங்கத்தில் அறிவித்தார். அதைக் கேட்ட ஒரு இராணுவத் தளபதி, தானும் அந்த வழி முறையைப் பின் பற்ற ஆசித் தான். ஏனெனில், அவனும் ஒரு பாவப் பழக்கத்திற்கு அடிமைப் பட்டிருந்தான்: அநேக வருடங்களாக, ஒரு பெண்ணிடம், அவன், தகாத உறவு வைத்திருந்தான். பசாசிற்கு அடி மையாக, கட்டப்பட்டிருக்கும் அந்த கொடூரமான சங்கிலிகளான பாவப்பழக்கத்திலிருந்து, தானும் விடுவிக்கப்படும்படியாக, தேவமாதா பக்தியை அனுசரிக்கத்தீர்மானித்தான்.பாவப்

பழக்கத்திற்கு அடிமைகளான நிர்ப்பாக்கிய பாவிகள் எல்லோரும், பசாசின் அடிமைத்தனத் திலிருந்து விடுதலையடைய வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நோக்கத்துடன், தேவமாதாவின் அடைக்கலப் பாதுகாப்பிற்குள் தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது, தேவமாதா அவர்களை, பசாசின் அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார்கள்; அப்போது, அவர்கள் புண்ணிய நெறியில் ஜீவிப்பதற்கு ஏற்ற வகையில், தேவமாதா, அவர்களுக்கு உதவ முடியும். அதேபோல், அந்த இராணுவத்தளபதி, தேவமாதா பக்தியை அனுசரிக்கத் துவக்கியதும், அந்த தீயப் பாவப்பழக்கத்தை முற்றிலுமாக, கைவிட் டான்; அவனுடைய வாழ்க்கையும், தீய வழியிலிருந்து மாறி,புண்ணிய பாதையை வந்த டைந்தது.

ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவன் தன் பலத்தையே நம்பியவனாக, முட் டாள் தனமாக, அந்த கெட்டப் பெண்ணைக் காண்பதற்காக, அவளுடைய வீட்டிற்குச் சென்றான்; பாசவிகாரத்தினால், தன்னை, அந்நாள் வரைத் தீயபழக்கத்திற்கு, அடிமைப் படுத் தியிருந்த அவளும் மனந்திரும்பியிருப்பாளோ, என்பதை அறிவதற்காக, அவன், அவள் வீட்டிற்குச் சென்றான். ஆனால், அவன், மறுபடியும் அதே பாவப் பழக்கத்திற்கு அடிமையாக விழுந்து விடும் ஆபத்து வெளிப்படையாகவேக் காணப்பட, அவளுடைய வீட்டின் கதவி னருகில் வந்ததும், மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஓர் வல்லமை மிக்க கரத்தினால் உந்தி வெளியேத் தள்ளப்பட்டான்; அவன் எவ்வளவு தூரத்திற்குத் தள்ளப்பட்டானென்றால், அவன் அந்த பெண்ணின் வீட்டிலிருந்து, அந்த தெருவைத் தாண்டி,தன்னுடைய வீட்டின் கதவினருகே வருமளவிற்கு உந்தித் தள்ளப்பட்டான். இப்போது, அவன் தன் வீட்டின் கத வினருகே நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். உடனே, தேவமாதாவின் கிருபையால், தான், இவ்வாறு, நித்திய நரகக் கேட்டிலிருந்து, தான் காப்பாற்றப்பட்டிருப்பதைப் பற்றி, அறிந்துகொண்டான். இந்நிகழ்விலிருந்து, பரலோக இராக்கினி, எவ்வாறு நமக்கும் தயை நிறைந்த தாயாராக திகழ்கின்றார்கள் என்பதை அறியலாம்; பசாசின் அடிமைத்தனத்திலி ருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நம்மை, திவ்ய இராக்கினியி டம் ஒப்புக்கொடுப்போமேயாகில், நம்மேல் கருணையும், அக்கறையுமுள்ள அந்த திவ்ய தாயார், நம்மைப் பாவ அந்தஸ்திலிருந்து மீட்பது மட்டுமல்லாமல், மறுபடியும், அதேப் பாவப் பழக்கத்தில் விழக்கூடிய ஆபத்திலிருந்தும் நம்மை விடுவித்துப் பாதுகாப்பார்கள் என்பதை நாம் கண்டுணரலாம்.


தேவநற்கருணைத் திருநாள்

 பீடங்களின் மீது எழுந்தருளி வீற்றிருக்கும் திவ்ய சேசுநாதர் சுவாமி

ஞானப் பிரசங்கம்

அர்ச். அல்ஃபோன்ஸ்மரியலிகோரியார்

வருந்திச் சுமைசுமந்திருக்கிறவர்களாகிய நீங்களெல்லோரும் என்அண்டையில் வா ருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன் (மத்.11:28) திவ்யசேசுநாதர், நாம் எல்லோரும் எளிதில் அணுகும்படியாகத் தம்மையேக்கையளிக்கும் விதமாக, பீடத்தின் மீது எழுந்தருளியிருக்கின்றார்: நம் நேச இரட்சகர், இவ்வுலகில், தமது இரட்சணிய அலுவலை நிறைவேற்றிய பின், உலகத்தைவிட்டுப் பிரியும் சமயத்தில், நம்மைத் தனியாக, இக்கண்ணீர் கணவாயில் விட்டுச் செல்வதற்கு விரும்பவில்லை. நம் ஆத்துமங்களின் மட்டில், சேசு கிறீஸ்துநாதர்கொண்டிருக்கும் சிநேகத்தின் அளவில்லாத மகத்துவத்தைப் பற்றி, எந்த நாவும் விவரிக்க முடியாது, என்று அர்ச்.அல்காந்தரா இராயப்பர் வியப்பு டன் கூறுகின்றார். ஆகவே தான், அளவில்லா சிநேகமுள்ள இந்த தேவ பத்தாவானவர், நம் மிடையே இல்லாமல், பரலோகம் செல்ல நேரிட்டால், நாம் அவரை மறந்து போவதற்கான சந்தர்ப்பம் ஏற்படாதபடிக்கு, உலகை விட்டுப் பிரியும் சமயத்தில், அவர் தாமே, நம்மீது கொண்டிருக்கும் அளவில்லாத தமது சிநேகத்தினுடைய ஓர் நினைவுச் சின்னத்தை, அதா வது, இந்த மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தை நம்மிடையே விட்டுச் செல்வதற் கும், அந்த உன்னதமான தேவசிநேகத்தின் அனுமானத்திலேயே தாமும் தங்கியிருப்பதற் கும், திருவுளமானார்.

நேச ஆண்டவர், தம்மைப் பற்றிய நினைவைத் தமது ஊழியர்களிடையே உயிருள்ள தாக நீடித்து நிலைத்திருக்கச் செய்வதற்காக, தமக்கும், தமது ஊழியர்களுக்குமிடையே உள்ள வேறு எந்த பொருளையும் விட்டுச் செல்லாமல், தம்மையே, சிநேகத்தின் பிணையாக, நம்மி டையே விட்டுச் செல்வதற்குத் திருவுளம் கொண்டார்.திவ்ய சேசுநாதர்,நம் மட்டில் வெளிப் படுத்திய இவ்வுன்னதமான தேவ சிநேக முயற்சியின் மூலமாக, நாம் அவர் மீது கொள்ள வேண்டிய மாபெரும் பிரதியன்பிற்குப் பாத்திரவாளராக இருக்கின்றார்.

அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குக் கொடுத்த காட்சியின் போது, ஆண்டவர், தமது திவ்ய இருதயத்தினுடைய ஆவல்களைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்: நம்மைச் சந்திக் கும்படியாக, பீடங்களின் மீது, இரவு பகலாக மகா சிநேகமுடன் எழுந்தருளி,குடியிருக்கும், அவருடைய திவ்ய பிரசன்னத்திற்கு, பக்திமுயற்சிகள் மூலமாகவும், தேவசிநேக முயற்சி மூலமாகவும், நாம் சிறிதளவாவது,பிரதி நன்றி செலுத்துவதற்காகவும், அதன் வழியாக, சிநே கத்தின் இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்திற்கு எதிராக, நாள் தோறும், பதிதர் களாலும் கெட்ட கிறீஸ்துவர்களாலும் கட்டிக் கொள்ளப்படும் நிந்தை, அவசங்கை,அலட் சியங்களுக்கு, நாம் பரிகாரம் செலுத்தும்படியாகவும், ஆண்டவர், தமது மகா பரிசுத்த திரு இருதயத்திற்குத் தோத்திரமாக ஒரு திருநாளை ஏற்படுத்த வேண்டும், என்று கேட்டார்.

திவ்ய சேசுநாதர், இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் தம்மையே, நமக் காக விட்டுச் சென்றதற்கான முதல் காரணம் என்னவெனில், அவரை நாம் எல்லோரும் எளிதில் எந்நேரத்திலும் கண்டடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இரண் டாவதாக, நாம் அவரை,எந்நேரத்திலும்சந்தித்து உரையாடுவதற்காகவே, இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில், இரவு பகலாக வீற்றிருக்கின்றார். மூன்றாவதாக, இம்மகா பரி சுத்த தேவ திரவிய அனுமானத்தில், தம்மைச் சந்திக்க வரும் சகல மனிதர்களுக்கும் அபரிமி தமான தேவவரப்பிரசாதங்களை, அளிப்பதற்காகவே, தயவாய் எழுந்தருளிக் காத்திருக்கின்

றார்.

நம் நேச ஆண்டவர், எல்லாவற்றிற்கும் முதலாவதாக, சகல மனிதர்களும், தம்மை மிக எளிதாகக்கண்டடைந்து கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள அநேகப் பீடங்களில்,

தங்கியிருக்கின்றார்.திவ்ய இரட்சகர்,பாவிகளிடையேக் கையளிக்கப்பட்டு, பாடுபட்டுச் சிலு வையில் மரிக்கப் போகும் அந்த இரவில், தங்கள் நேச ஆண்டவரைப் பிரிவதைப் பற்றிய துயரமான நினைவினால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அப் போது, ஆண்டவர்,அவர்களிடம் பின்வருமாறு ஆறுதல் கூறினார்: என்பிள்ளைகளே! உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் சிநேகத்தை, உங்களிடம் காண்பிக்கும்படியாக, நான் உங்க ளுக்காக, மரிக்கப் போகிறேன். ஆனால், என் மரணத்தின்போது, நான் உங்களைத் தனியாக விட்டு விட மாட்டேன்: நீங்கள் இவ்வுலகத்தில் இருக்கும் வரை, நானும் உங்களுடன் கூட, இந்த மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் தங்கியிருப்பேன். உங்களுக்காக, என் சரீரத்தையும், ஆத்துமத்தையும், தேவத்துவத்தையும், இதில் விட்டுச்செல்வேன்: நான் என்னையே முழுமையாக உங்களுக்காக விட்டுச்செல்கிறேன். நீங்கள் உலகத்திலிருக்கும் வரைக்கும், உங்களிடமிருந்து நான் பிரிந்து செல்ல மாட்டேன். இதோ! நான் உலக முடி யுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேன் (மத்.28:20).

திவ்ய இரட்சகர்,தமது பத்தினியாகிய திருச்சபையைத்தனியாக, இவ்வளவு தூரத்தில், விட்டு விட மனதில்லாதவராக, சிநேகத்தின் இந்த தேவ திரவிய அனுமானத்தை நம்மிடை யே விட்டுச் சென்றார். நண்பர்களிலெல்லாம் அதிமிக சிறந்தவரும் சிநேகமுள்ளவருமான வர் தாமே, சக நண்பராக,தமது பத்தினியான திருச்சபையுடன் கூட,எந்நாளும் இருப்பதற் காகவே,சிநேகத்தின் இம்மகா தேவ திரவிய அனுமானத்தில்,எழுந்தருளி,தங்கியிருக்கின்றார், என்று,அர்ச். அல்காந்தரா இராயப்பர் பிரசங்கிக்கின்றார். சர்வேசுரனை அறியாத அஞ்ஞானி கள், வழிபடுவதற்காக அநேகக் கடவுளர்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.

ஆனால், நம்முடன்கூட எப்போதும், இவ்வளவு அருகில் தங்கியிருந்துகொண்டு, தமது அளவில்லாத சிநேகத்தினால், நமக்கு உதவி செய்து நம்மைப் பராமரித்து வரும் நம் சர்வேசு ரனை விட அதிக நேசமுள்ள கடவுளை அவர்களால், கற்பனை கூட செய்ய முடியாது. நமது தேவனாகிய கர்த்தரை நாம்மன்றாடுகிறபோதெல்லாம், அவர் நமதண்டையில்தானே இருக் கிறார். ஆ! நமது தேவனுக்கும் நமக்கும் இருக்கிற அந்நியோந்நிய நெருக்கம் மற்ற எந்த பிரபலியமான சாதியாருக்கும், அவர்களுடைய தேவர்களுக்கும் உண்டோ ,இல்லை (உபா. 4:7).உபாகமத்தில் காணப்படும் இவ்வேதாகம வாக்கியத்தை, பரிசுத்தத் திருச்சபையானது, தேவ நற்கருணைத் திரு நாளின் போது,திவ்வியபலி பூசை ஜெபத்தில் பயன் படுத்துகின்றது

அப்படியென்றால், இதோ!நம் நேச ஆண்டவர்,நமது பீடங்களில் தங்கியிருக்கின்றார்! அதுவும் இவ்வளவான சிறைகளில், ஒரு சிநேகத்தின் கைதியைப்போல், அடைபட்டவராக, தேவநற்கருணைப் பேழைகளில் வாசம் செய்கின்றார். அவருடைய குருக்கள், பீடத்தின் மீது, தேவநற்கருணை ஸ்தாபகம் செய்யும் சமயங்களிலும், திவ்ய நன்மையை விசுவாசிகளுக்குக் கொடுக்கும் சமயங்களிலும், தேவநற்கருணைப்பேழையிலிருந்து, அவரை, வெளியே எடுப் பார்கள்; பின்னர், தங்கள் நேச ஆண்டவரை, மறுபடியும் முழுவதுமாக அடைபட்டிருக்கும் படி, தேவநற்கருணைப் பேழையிலேயே வைத்து விடுவார்கள்; திவ்ய சேசுநாதரும், இரவு பகலாக அந்தப்பேழையில், அடைபட்டபடி, தங்கியிருப்பதையே ஆசிக்கின்றார்; அதிலே யே திருப்தியுடன் வசிக்கின்றார்; ஆனால், என் நேச இரட்சகரே! விசுவாசிகள் எல்லோரும், தேவாலயக்கதவுகளை பூட்டிவிட்டு, உம்மைத்தனியாக விட்டுச் சென்றபோதிலும், தேவரீர் , ஏன் இரவு நேரங்களிலும், இவ்வளவு அநேகதேவாலயங்களில், தங்கியிருக்கின்றீர்? பகலில் மட்டும், தேவரீர் தேவாலயங்களில் தங்கியிருந்தால் போதுமாயிருக்குமல்லவா? இல்லை. ஆனால், திவ்ய இரட்சகர், இரவு நேரங்களிலும், அங்கு தங்கியிருப்பதையே ஆசிக்கின்றார்: காலையில் தம்மை ஆவலுடன் சந்திக்க வரும் சகலமனிதரும்,உடனடியாகத்தம்மைக் கண்ட டைந்து கொள்ளும்படியாக, தனியாக விடப்பட்டிருந்தாலும், இரவு நேரங்களிலும், தேவ நற்கருணைப் பேழைகளில், தங்கியிருப்பதற்குத் திருவுளம் கொண்டிருக்கின்றார்.

பரிசுத்த பத்தினி தன் நேச பத்தாவைத் தேடிச் செல்வதை, உன்னத சங்கீதத்தில் வாசிக்கின்றோம்; அதில், அவள், எதிரில் வருபவரிடம், என் ஆத்துமநேசரை நீங்கள் கண் டீர்களோ? (உன்.சங்.3:3) என்று கேட்கின்றாள். அவரைக் காண முடியாமல் போனதால், அவள் தன் குரல் சத்தத்தை உயர்த்தி, என் பத்தாவே! நீர் எங்கே இருக்கிறீர் என்று என்னி டம் கூறும் .. ஆ! என் ஆத்தும நேசமே! நீர் உமது மந்தையை மேய விடுகிறது எவ்விடத்

திலே? மத்தியான வேளையில், நீர் எங்கே படுத்து இளைப்பாறுகிறீர்? (உன்.சங்.1:6). பத்தினி, தன் நேச பத்தாவைக் கண்டடையக் கூடவில்லை. ஏனெனில், அப்போது,மகா பரிசுத்த தேவ நற்கருணையை,நமதாண்டவர் ஏற்படுத்த வில்லை.ஆனால், இப்போது, ஒரு ஆத்துமம், தன் நேச பத்தாவான திவ்ய சேசுநாதரைக் கண்டடைவதற்கு ஆசித்தால், தேவநற்கருணை ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் தேவாலயத்திற்குச்சென்றாலே போதும்! அங்கே, அது, தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தன் தேவ நேசரைக் கண்டடைந்து கொள்ளும்! இந்நாட்டில், தேவ நற் கருணைப் பேழை ஸ்தாபிக்கப்பட்ட தேவாலயங்கள், எல்லா நகரங்களிலும், கன்னியர்,துற வியர் மடங்களிலும் இருக்கின்றனவே! இவ்வெல்லா இடங்களிலும், பரலோக அரசர், மரத்தினால் அல்லது ஒரு கல்லினால் செய்யப்பட்ட ஒரு பெட்டிக்குள்,அடைபட்டபடி தங் கியிருப்பதற்கு, தமது முழு மனஆவலுடனும், திருப்தியுடனும் திருவுளமானார்! அநேக இடங்களில், தமது பிரசன்னத்தை விசுவாசிகளுக்கு அறிவிக்கும்படியாக, எரிந்து கொண் டிருக்கும் அணையா விளக்குகள் இல்லாமலும், தம்மைச் சந்திப்பதற்கும், தம்முடன் கூட தங்கியிருப்பதற்கும் விசுவாசிகள் ஒருவரும் இல்லாமலிருந்தாலும் கூட, அங்கேயும், திவ்ய இரட்சகர், எழுந்தருளவும், தங்கியிருப்பதற்கும் சித்தமானார்.

இதைக் குறித்து, அர்ச்.பெர்னார்டு, ஓ! ஆண்டவரே! இவ்வாறு, உம்மையே, பீடங்க ளின் மீது யாவராலும் கைவிடப்பட்டவர்போல், தங்கியிருப்பது, தேவரீருடைய மாட்சி மிக்க தேவ மகத்துவத்திற்கு ஏற்புடையதல்லவே! என்று புலம்பினார். அதற்கு, ஆண்டவர், அவரிடம், அது பரவாயில்லை! அது, எனது தேவமகத்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லாவிடி னும்,அது, என் சிநேகத்திற்கு மிகநன்றாகப் பொருத்தமுடையதாக இருக்கிறது! என்று பதில ளித்தார்.

ஓ! திவ்ய சேசுவே! நேச இரட்சகரே! ஓ! என் ஆத்துமத்தின் சிநேகமே! எங்களுடன் இந்த தேவ திரவிய அனுமானத்தில், தங்கியருப்பதற்காக, தேவரீர் எவ்வளவு அதிக விலை கொடுக்க நேர்ந்தது? எங்கள் பீடங்கள் மீது,தங்கியிருப்பதற்காக, தேவரீர், முதலில் கொடிய துன்பம் நிறைந்த சிலுவை மரணத்தை அனுபவிக்கவேண்டியிருந்தது; அதன் பிறகு, உமது தெய்வீகப் பிரசன்னத்தினால், உதவும்படியாக, பீடங்களில் எழுந்தருளியிருக்கும் போது, அநேக மனிதரால் இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்திற்கு ஏற்படும், கொடூரமான நிந்தை, அவசங்கைகளுக்கு, தேவரீர், உம்மையேக் கையளிக்க நேர்ந்தது!

மேலும், இவை எல்லாவற்றிற்குப் பிறகு, உமது தெய்வீகப் பிரசன்னத்தில், உம்மைச் சந்திக்க வந்திருக்கும் எங்களைக் காணும்போது, அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை எங்கள் மீது பொழிந்து, ஞான செல்வந்தர்களாக எங்களை உயர்த்தும் நோக்கத்திற்காகவே, தேவரீர்,தேவநற்கருணைப் பேழைகளில் மாபெரும் ஆவலுடன், எங்களைச் சந்திப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கின்றோம்.தேவரீர் எங்கள் மட்டில் கொண் டிருக்கும் அதிசயமானதும், அதி உன்னதமானதுமான சிநேகத்துடன், இம்மகா பரிசுத்த தேவ திரவிய அனுமானத்தில் எழுந்தருளி, எங்களுக்காகக் காத்திருக்கின்றீர் என்பதைப் பற்றி, இவ்வளவு அறிந்தபோதிலும், தேவரீரை சந்திக்கும்படியாக நாங்கள் பக்தி பற்றுதலு டன், அடிக்கடி அனுசரிக்க வேண்டிய தேவநற்கருணை சந்திப்பின் மட்டில், எவ்வளவோ சோம்பலுடனும், அலட்சியத்துடனும் இருக்கிறோமே!

ஓ! நேச ஆண்டவரே! என்னை மன்னித்தருளும்! ஏனெனில், நானும் உமது அதிமிக உன்னத சிநேகத்தை மறந்த நிர்ப்பாக்கிய பாவிகளில் ஒருவனாயிருந்தேன். இன்றிலிருந்து, ஓ! என் திவ்ய சேசுவே! உம்மை அடிக்கடி, தேவ நற்கருணை சந்திப்பின் மூலம் சந்திக்கவும், தேவரீருக்கு நன்றி செலுத்துவதற்கும், உம்மை நேசிப்பதற்கும், உம்மிடம் தேவ வரப்பிரசா தங்களுக்காக மன்றாடிக்கேட்பதற்கும், உமது திருச் சமூகத்தில் எவ்வளவு அதிக நேரம் தங் கியிருக்கமுடியுமோ, அவ்வளவு நேரம் தங்கியிருக்கவும், நான் ஆசிக்கிறேன். ஏனெனில், இந்த நோக்கத்திற்காகவே, தேவரீர், எங்கள் சிநேகத்தின் கைதியாக, இப்பூமியிலுள்ள எல் லா பீடங்களின் தேவ நற்கருணைப் பேழைகளிலும் அடைபட்டபடி, தங்கியிருக்கின்றீர்! ஓ! தேவமாதாவே! இம்மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தின் மீது கொள்ளவேண்டிய மாபெரும் சிநேகத்தை எனக்குப்பெற்றுத் தாரும்! +