Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 10 ஆகஸ்ட், 2024

May 11 - St. Philip & St. James அர்ச். பிலிப்பு, அர்ச். சின்ன யாகப்பர்

 

மே 1️1️ம் தேதி

அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளுமான அர்ச். பிலிப்பு, அர்ச். சின்ன யாகப்பர் திருநாள்

 

அர்ச். பிலிப்பு

இவர், நமதாண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீடர்களில் ஒருவர். யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்குச் செல்கிற பாதையிலே நமதாண்டவர் பிலிப்புவைக் கண்டு, “என்னைப் பின் செல்!” என்று கூறினார்; உடனே ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, பிலிப்பு அவரைப் பின்தொடர்ந்தார். ஆன்ம இரட்சணிய ஆவலினாலும், உத்தமமான பிறர்சிநேகத்தினாலும், பிலிப்பு, நத்தனயேலைக் கண்டு, “வேதப்பிரமாணத்திலே மோயீசனும், தீர்க்கதரிசிகளும் குறித்தெழுதினவரைக் கண்டுகொண்டோம்; அவர் நசரேத்தூர் சூசையப்பருடைய குமாரனாகிய சேசுநாதர் தாம்என்றார். அதற்கு நத்தனயேல், “நசரேத்தூரிலிருந்து, யாதொரு நன்மை வரக்கூடுமோ?” என்று கூற, அதற்கு, பிலிப்பு, “நீயே வந்து பார், (அரு 1:43-46),  என்று கூறி, அவரை நமதாண்டவரிடம் கூட்டி வந்தார். அர்ச். பிலிப்பு, அர்ச். இராயப்பர், அர்ச். பெலவேந்திரருடைய ஊரான பெத்சாய்தாவைச் சேர்ந்தவர். அர்ச். ஸ்நாபக அருளப்பர், நமதாண்டவரைச் சுட்டிக் காண்பித்து, இதோ உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவர்! இதோ சர்வேசுரனின் செம்மறியானவர்! என்று அறிவித்தபோது, அர்ச். பிலிப்புவும், அர்ச். ஸ்நாபக அருளப்பரைச் சூழ்ந்திருந்தவர்களில் ஒருவராயிருந்தார். நமதாண்டவர், தம்மைப் பின்தொடர்ந்து வந்த 5000 பேர்களுக்கு உணவளிப்பதைப் பற்றி, பிலிப்புவிடம், “இவர்கள் சாப்பிடும்படி எங்கேயிருந்து அப்பங்கள் வாங்குவோம்?” என்று அவரைச் சோதிக்கும்படி வினவியபோது, பிலிப்பு, ஆண்டவரிடம், இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக  எடுத்துக் கொண்டாலும், இருநூறு  பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே (அரு6:7), என்றார்.

                இராப்போஜனத்தின்போது,பிலிப்பு ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! பிதாவை எங்களுக்குக் காண்பித்தருளும். அதுவே, எங்களுக்குப் போதும்!”  என்றார். ஆண்டவர், அவருக்குத் திருவுளம்பற்றினதாவது; இவ்வளவு காலமாய் நான் உங்களுடனே கூட இருந்தும்,  நீங்கள் என்னை அறிந்துகொள்ளவில்லையோ? பிலிப்புவே, என்னைக் காண்கிறவன், என் பிதாவையும் காண்கிறான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பித்தருளும், என்று,  நீ சொல்லுவதெப்படி?..”  (அரு 14:9) என்று கூறினார்.

                அர்ச். பிலிப்பு துருக்கியில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சென்றார்; கி.பி.80ம் வருடம். ஃபிரிஜியா என்ற இடத்தில், இவர் சிலுவையில் அறையப்பட்டு, வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

                இவருடைய பரிசுத்த சரீரத்தின் அருளிக்கங்கள், உரோமாபுரிக்குக் கொண்டு வரப்பட்டு, பரிசுத்த அப்போஸ்தலர்களின் தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன!

 

அர்ச். சின்ன யாகப்பர்

இவர், அல்ஃபேயுஸின் மகன்; செபதேயுவின் மகனான (பெரிய) யாகப்பருடன் இவரைப் பற்றி குழப்பமடையாதபடிக்கு, இவரை சின்ன யாகப்பர் என்று அழைக்கிறோம். நமதாண்டவர் உத்தானத்திற்குப் பிறகு, அர்ச். சின்ன யாகப்பருக்கு விசேஷ தரிசனை அளித்தார், என்று அர்ச். சின்னப்பர், (1 கொரி 15:7) கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிரூபத்தில்  கூறுகின்றார். அப்போஸ்தலர்கள் எல்லோரும் உலகின் நான்கு திசைகளுக்கும்  சுவிசேஷத்தைப் போதிப்பதற்குப் புறப்பட்டபோது, இவர், ஜெருசலேமிலேயே தங்கி அந்நகரின் முதல் மேற்றிராணியாரானார். இவருடைய அதி உன்னதமான பரிசுத்தத் தனம், இவர் அனுசரித்த கடின சரீர ஒறுத்தல், உபவாசம்  மற்றும் இடைவிடா ஜெபம் ஆகியவற்றைக் கண்டு, யூதர்கள் இவர் மட்டில் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். இவர் 30 வருடகாலம் ஜெருசலேமின் மேற்றிராணியாராயிருந்தார்.

                ஹெகிசிப்புஸ் என்ற ஆதித்திருச்சபையின் சரித்திர ஆசிரியர்,  அர்ச். சின்ன யாகப்பருடைய சாங்கோபாங்கத்தின் அர்ச்சிஷ்டத்தனத்தைப் பற்றிய அநேக பாரம்பரிய உண்மைகளை, திருச்சபைக்கு விட்டுச் சென்றிருக்கின்றார்;  அர்ச். சின்ன யாகப்பர், பரிசுத்த கன்னிமை விரதத்துவத்தை நேர்ந்தபடி, தன் கற்பை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்திருந்தார்; இவர் திராட்சை இரசத்தை முதலாய் அருந்தியவரல்ல ; காலணி அணிந்தவருமல்ல;  இவர் எப்போதும் நீண்டநேரம் சாஷ்டாங்கமாக தரையில் கிடந்து ஜெபிப்பதில் ஈடுபட்டிருப்பார்; அதன் காரணமாக இவருடைய முழங்கால்களின் தோல், ஒட்டகத்தின் குளம்பைப் போல் தடித்துப் போயிருந்தது! யூதர்கள் இவர்மெல் கொண்டிருந்த மரியாதையினிமித்தமாக, இவருடைய உடையின் விளிம்பைத் தொடுவார்கள்!  மேலாவிலிருந்து வருகிற ஞானமோ முந்த முந்த கற்புள்ளதும், பின்னும் சமாதானமுள்ளதும், மரியாதையுள்ளதும், இணக்கமுள்ளதும், நல்லவைகளுக்கு உடந்தையுள்ளதும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும், நிறைந்ததுமாயிருக்கின்றது (யாக 3:17) என்று அவருடைய நிரூபத்தில் கூறியிருக்கிற அவருடைய வார்த்தைகளின் உயிருள்ள அத்தாட்சியாகவே உண்மையில் அவருடைய ஜிவியம் திகழ்ந்தது!

                ஜெருசலேமில் நிகழ்ந்த முதல் பொதுச்சங்கத்தின்போது, இவர் அர்ச். இராயப்பருடனும், அர்ச். சின்னப்பருடனும் கூட அமர்ந்திருந்தார். பின்னாளில், அர்ச். சின்னப்பர், சீசரிடம் மேல்முறையிடு செய்ததன் மூலம், யூதர்களின் சீற்றத்திலிருந்து தப்பித்தபோது, “நீதிமான் தவறிழைத்தார்!” என்று கூக்குரலிட்டபடி, யூதர்கள் தங்கள் பழிதீர்க்கும் கோபத்தை, அர்ச். சின்ன யாகப்பரிடம் காண்பித்தனர்.

                கி.பி.62ம் வருடம், அர்ச். யாகப்பர், ஜெருசலேம் தேவாலயத்தின் கூரை கைப்பிடிச் சுவரிலிருந்து யூதர்களால் கீழே தள்ளப்பட்டு, தடிகளால் அடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

                வேதசாட்சிய மரண நேரத்தில், இவர் தனது கொலைஞர்களுக்காக வேண்டிக்கொண்டார்; நமதாண்டவர் சிலுவையில் பாடுபட்டு மரிக்கிறவேளையில், வேண்டிக் கொண்ட அதே வார்த்தைகளை, “பரலோகப் பிதாவே! இவர்களை மன்னித்தருளும்! இவர்கள் செய்கிறதை இன்னதென்று அறியாமலிருக்கிறார்கள்!”  என்கிற அதே ஜெபத்தை, இவரும்  ஜெபித்து வேண்டிக் கொண்டார்.

                2011ம் வருடம், ஜுலை 27ம் தேதியன்று, இத்தாலிய நாட்டுப் புதைப்பொருள் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பிரான்செஸ்கோ டி ஆன்டிரியா டெனிசி என்ற துருக்கிய நகருக்கருகிலுள்ள ஹியரபோலிஸ் என்ற இடத்தில், ஏற்கனவே ஒரு தேவாலயம் பூமிக்கடியிலிருந்து அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது; அந்த இடத்திற்கருகிலேயே அர்ச். பிலிப்புவின் கல்லறைக் கண்டெடுக்கப்பட்டது.  அதன் சுவர்களிலிருந்த  எழுத்துக்கள் ஆதாரப்பூர்வமாக நமதாண்டவருடைய அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான அர்ச். பிலிப்புவின் கல்லறை என்று நிரூபிக்கின்றது, என்று இத்தாலியப் பேராசிரியர் கூறுகின்றார்.

 

அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளுமான அர்ச். பிலிப்புவே! அர்ச். சின்ன யாகப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!

May 8 - Apparition of the St. Michael - அர்ச். மிக்கேல் சம்மனசானவர் காட்சியளித்தத் திருநாள்


மே 0️8️ம் தேதி

அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர்

காட்சியளித்தத் திருநாள்

 


முதலாம் ஜெலாசியுஸ் (492-496) பாப்பரசரின் காலத்தில், இத்தாலியிலுள்ள மோந்தே கர்கானோ என்ற மலைப்பகுதியில்,  ஒரு பெரிய செல்வந்தன் தன் கால்நடை மந்தைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தான்.  அது, பிரபலமான சிபோன்டோ நகரத்திற்கு அருகிலிருந்தது. 492ம் வருடத்தில் ஒருநாள், அந்த கால் நடை மந்தை, பட்டியில் அடைபடுவதற்குத் திரும்பியபோது, ஒரு எருது மாடு மட்டும், திரும்பி வந்து  மந்தையுடன் சேரவில்லை.

                மாட்டுக்குச் சொந்தக்காரனும், மாடு மேய்ப்பவனும், அந்த எருதைத் தேடி, அந்த மலைப்பகுதி முழுவதும் தேடி அலைந்தனர். இறுதியாக, அந்த எருதை மலை உச்சியில் கண்டுபிடித்தனர் ; ஒரு குகையின்  வாசலில், அந்த எருது, படுத்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தை விட்டு வருவதற்கு , எருது மறுத்தது. எவ்வளவு கட்டாயப்படுத்தியும், எருது அங்கிருந்து அகலாமலிருக்கிறதைக் கண்ட சொந்தக்காரன், விரக்தியில், தன் வில்லை எடுத்து ஒரு அம்பை, அந்த மாட்டின் மீது குறி வைத்து எய்தான்; என்ன ஆச்சரியம்! அந்த அம்பு, அந்த மாட்டின் மேல் பாயாமல், எய்த அந்த சொந்தக்காரன் மேலேயே திரும்பி வந்து பாய்ந்து அவனைக் காயப்படுத்தியது!

                இந்நூதனமான நிகழ்வைக் கண்டு எல்லோரும் மிகவும் அச்சமடைந்தனர். பின் யாரும் அந்த இடத்திற்கு அணுகிச் செல்வதற்குத் துணியவில்லை!  அங்கிருந்த மக்கள் எல்லோரும், சிபோன்டோ நகர மேற்றிராணியாரிடம் நேராகச் சென்று, அவரிடம் நடந்ததைக் கூறினர். அந்த பரிசுத்த மேற்றிராணியார், அந்த இடத்தில், ஏதோ பரம இரகசியமான ஒரு உன்னத வஸ்து மறைந்திருக்கிறது என்று சந்தேகித்தவராக, சர்வேசுரன் தாமே, இந்த தேவ இரகசியமான காரியத்தை, வெளிப்படுத்தும்படியாக, தமது மேற்றிராசன குருக்களிடமும், மக்களிடமும், கன்னியரிடமும், துறவியரிடமும், மூன்று நாட்கள் தொடர்ந்து உபவாசம் இருந்து ஜெபிக்கும்படி கட்டளையிட்டார்.

                மூன்று நாட்களுக்குப் பிறகு, அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவர், மிகுந்த மாட்சிமை ஒளியுடன், இப்பரிசுத்த மேற்றிராணியாருக்கு காட்சியளித்து, அந்த எருது மாடு இப்போது இருக்கிற அந்த இடம் அவருடைய விசேஷ பாதுகாவலில் இருக்கிறது என்றும், அந்த இடத்தை அவருக்கும் சகல சம்மனசுகளுக்கும் தோத்திர மகிமையாக அர்ப்பணிக்கும்படியும், அந்த இடத்தில், அவருக்கும் சகல சம்மனசுகளுக்கும் தோத்திர மகிமையாக தேவாலயத்தைக் கட்டி, அங்கு சர்வேசுரனுடைய தேவ வழிபாடாகிய  திவ்யபலிபூசை நிறைவேற்றப்பட வேண்டும்! என்றும், அறிவித்தார்.

                இதைக் கேட்டு, அந்த அர்ச்சிஷ்ட மேற்றிராணியார் பெரிதும் மகிழ்ந்தவராக, அர்ச். மிக்கேல் சம்மனசானவர் காட்சியில் அறிவித்ததை, தமது குருக்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்தார்; பின் சகலருடனும் மிகப் பெரிய சுற்றுப்பிரகார பவனியாக அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி மலை மேல், மேற்றிராணியார் ஏறிச் சென்றார்.

                அங்கிருந்த குகை, ஒரு பாறையில் குடையப்பட்டு, உருவாக்கப்பட்டிருந்த ஒரு தேவாலயம் போல் இருந்தது! அதன் நுழை வாயிலின் மேலிருந்த ஒரு திறப்பின் வழியாக அந்த குகையின் உட்புறம் முழுவதையும் போதுமான அளவிற்கு ஒளிர்வித்தது! அங்கு திவ்யபலிபூசை நிறைவேற்றுவதற்கு, ஒரு பீடம் மட்டுமே தேவைப்பட்டது; அந்த பக்தியுள்ள மேற்றிராணியார் துரிதமாக ஒரு பீடத்தை அங்குக்கட்டி ஸ்தாபிக்க ஏற்பாடு செய்தார். பின்னர், மாபெரும்  ஆடம்பரமாக இந்த புதிய தேவாலயம், அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவருக்கும், சகல சம்மனசுகளுக்கும் தோத்திரமாக அர்ப்பணிக்கப்பட்டது.

                ஆதித்திருச்சபையின் காலத்தில், வேத கலாபனையின் சமயத்தில், இந்த குகையில் இரகசியமாக கிறீஸ்துவர்கள் திவ்ய பலிபூசை, மற்ற தேவாராதனை திருவழிபாட்டுச் சடங்குகள் நடத்தி வந்திருக்கின்றனர், என்ற உண்மை பின்னர் கண்டறியப்பட்டது.

                இந்த குகையில் கட்டப்பட்டிருக்கும் தேவாலயத்தின் பரிசுத்த சந்நிதானத்தின்  மேற்கூரைப் பகுதியில் பாறையின் ஒரு பிளவு இருக்கிறது. இதிலிருந்து பாறைகளிலிருந்து வருகிற தண்ணீர் சொட்டு சொட்டாக, தேவாலயத்தின் உள்ளே விழுந்து கொண்டிருக்கும். அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் விசேஷ பரிந்துரையால், அநேக நோயாளிகள், இந்த பாறையின்  ஊற்றுத் தண்ணீரைப் பருகியதும், புதுமையாகக் குணமடைந்து வருகின்றனர்.

                பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான திருயாத்ரீகர்கள், மோட்சவாசிகளின் பசிலிக்காவைச் சந்திப்பதற்காக, மோந்தே சான் ஆஞ்சலோ என்கிற இந்த மலைக்கு திருயாத்திரையாகச் சென்றனர்.  அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் இப்பரிசுத்த சந்நிதானத்திற்கு, திருயாத்திரையாக வந்த பாப்பரசர்களில், முதலாம் ஜெலாசியுஸ்,9ம் சிங்கராயர்,2ம் உர்பன்,3ம் அலெக்சாண்டர்,10ம் கிரகோரி,5ம் செலஸ்டின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அநேக அர்ச்சிஷ்டவர்கள் இங்கு வந்திருக்கின்றனர்; ஸ்வீடனின் அர்ச். பிரிஜித்தம்மாள், அர்ச். பெர்னார்டு, அர்ச். தாமஸ் அக்வீனாஸ், அர்ச். ஜெரார்டு மஜெல்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

 

அதிதூதரான அர்ச். மிக்கேலே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

May 6. St. John the Evangelist

 

மே 0️6️ம் தேதி

இலத்தீன் வாசல் என்று அழைக்கப்படும் உரோமாபுரி நகர வாசலுக்கு முன்பாக அப்போஸ்தலரான அர்ச். அருளப்பர் அனுபவித்த கொடிய வேதசாட்சிய துன்பங்களை நினைவுகூரும் திருநாள்

 

 இன்று திருச்சபை,  எல்லா அப்போஸ்தலர்களிலும் கடைசியாக நீண்ட காலம்  உயிருடனிருந்து ஆசிய திருச்சபைகளை நிர்வகித்தவரும், சுவிசேஷகரும், அப்போஸ்தலருமான அர்ச். அருளப்பர், உரோமையில் அனுபவித்த கொடிய வேதசாட்சிய துன்ப உபத்திரவங்களை அனுபவித்தத் திருநாளை அனுசரித்துக் கொண்டாடுகிறது.

                எபேசுஸ் நகரில் அர்ச். அருளப்பர் கைதுசெய்யப்பட்டு, உரோமாபுரிக்கு கி.பி.95ம் வருடம் அனுப்பி வைக்கப்பட்டார்; அங்கு, அவர் கத்தோலிக்க வேத விசுவாசத்தைப் பிரசங்கித்ததன்பேரில் உரோமை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பின் அடிக்கப்பட்டார்,,சங்கிலிகளால் கட்டப்பட்டு, அஞ்ஞான உரோமை சக்கரவர்த்தியான டொமிஷியன் முன்பாக இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டார். அஞ்ஞான உரோமை தேவதைகளுக்கு பலிசெலுத்தும்படி சக்கரவர்த்தி கூறினான், அர்ச். அருளப்பர் அதற்கு மறுத்து விட்டார். அசையாத உறுதியான விசுவாசத்தினால், அர்ச். அருளப்பர், நமதாண்டவரின் மகா பரிசுத்தத் திருநாமத்தை உச்சரித்து, ஆண்டவரைப் பற்றிய விசுவாச சத்தியத்தைப் பிரகடனம் செய்தார். உடனே, டொமிஷியன், கத்தோலிக்க வேதத்தைப் பிரசங்கித்ததற்காக. அர்ச். அருளப்பரை கொதிக்கிற எண்ணெய் கொப்பறையில் உயிருடன் போடும்படி உத்தரவிட்டான்.

                லததீன் வாசல் என்று அழைக்கப்படும் உரோமாபுரியின் நகர வாசலுக்கு முன்பாக, ஒரு பெரிய கொப்பறையில் எண்ணெயை சூடேற்றி கொதிக்க வைத்தார்கள். மிகக் கொடூரமான சாட்டையால் அடித்தபிறகு, கொலைஞர்கள் அர்ச். அருளப்பரைப் பிடித்து, கொதிக்கிற எண்ணெய் கொப்பறையினுள் போட்டார்கள்; ஆனால், அருளப்பருக்கு, அந்த கொதிக்கிற எண்ணெய் ஒரு தீங்கும் செய்யவில்லை! ஆனால், புதுமையாக, அவர் சாட்டை கசை வார்களினால் பட்ட அடிகளின் காயங்கள் எல்லாம் குணமடைந்தவிதமாக கொப்பறையிலிருந்து, அதிக புத்துணர்வுடனும், ஆரோக்கியத்துடனும் வெளியே வந்தார். இம்மகா பெரிய புதுமையினால், அங்குக் கூடியிருந்த அநேக அஞ்ஞானிகள் மனந்திரும்பி கத்தோலிக்க வேதத்தில் சேர்ந்தனர்.

                சர்வேசுரன், அர்ச். அருளப்பரின் நல்ல மனதை ஏற்றுக் கொண்டு, வேதசாட்சியத்தின் மட்டில் அவர் கொண்டிருந்த விருப்பத்தின்படி, அவருக்கு வேதசாட்சிய முடியைச் சூட்டினார்; வேதசாட்சியத்தினுடைய மகிமையையும் பேறுபலன்களையும், சர்வேசுரன், அர்ச். அருளப்பர் மேல் பொழிந்தருளினார்! பின்னர், டொமிஷியன்  பேரச்சமடைந்தவனாக, அர்ச். அருளப்பருக்கு தீங்கு செய்யத் துணியாமல், மனித சஞ்சாரமில்லாத பத்மோஸ் தீவிற்கு நாடுகடத்தினான். இந்த பத்மோஸ் தீவில் சுவிசேஷத்தின் கடைசி புத்தகமான காட்சியாகமத்தை, அர்ச்.  அருளப்பர் எழுதினார். திருச்சபையின் வருங்காலத்தைப் பற்றியும் கடைசிகாலத்தைப் பற்றியும், சர்வேசுரன் தாமே அர்ச். அருளப்பருக்கு பரலோகக் காட்சியின் மூலம் வெளிப்படுத்தியதின் சுருக்கமாக இந்த காட்சியாகமம் திகழ்கிறது!

பின்னர், முதலாம் ஜெலாசியுஸ்  (492-496) பாப்பரசரின் காலத்தில்,  அர்ச். அருளப்பர் வேதசாட்சிய துன்ப உபத்திரவத்தை அனுபவித்த இலத்தீன் வாசலுக்கு முன்பாக, எரிகிற எண்ணெய் கொப்பறையிலிருந்து புதுமையாக அர்ச். அருளப்பர் வெளியேறி நடந்து வந்த அதே இடத்தில், அப்புதுமையின் ஞாபகார்த்தமாக ஒரு பசிலிக்கா தேவாலயம் கட்டப்பட்டது!

அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான அர்ச். அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!