Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

St. Elizabeth, Widow., November 19-ம் தேதி

 அர்ச்.எலிசபெத்தம்மாள்,
விதவை. (கி.பி.1231)

 ஹங்கேரி தேசத்து அரசனுடைய குமாரத்தியான எலிசபெத்தம்மாள் சிறுமியாயிருக்கும்போதே ஜெபத்தியானம், ஒறுத்தல், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களின் மட்டில் ஆசை வைத்து, அவைகளை மகா கவனத்துடன் அனுசரித்து வந்தாள்.  ஏழைகளின் மட்டில் இரக்கம் வைத்து தன்னால் கூடிய உதவி சகாயமெல்லாம் அவளுக்குப் புரிந்து வந்தாள்.  ஒரு சிற்றரசனை இவள் மணமுடித்துக் கொண்டு உத்தம மனைவியாய் நடந்து வந்தாள்.  விலையுயர்ந்த வஸ்திரம், ஆபரணங்களை வெறுத்து ஆடம்பரமான கூட்டங்களையும் நாடக வேடிக்கைகளையும், சிறந்த விருந்து முதலியவைகளையும் விலக்கி மனத்தரித்திரமும் ஏகாந்த குணமுமுள்ளவளாய் விளங்கினாள்.  இரவு வேளையில் விழித்திருந்து ஜெபிப்பாள்.  நமது கர்த்தருடைய திருப்பாடுகளைத் தியானித்து கண்ணீர் சொரிவாள்.  இவளுடைய கணவன் சிலுவை போரில் மரித்த பின் எலிசபெத்தம்மாளுக்கு அநேக துன்பதுரிதங்கள் நேரிட்டன.  துஷ்டரால் இவள் தன் மூன்று பிள்ளைகளுடன் அரண்மனையிலிருந்து துரத்தப்பட்டு வறுமை சிறுமைக்குள்ளானபோது அவைகளை அவள் மகா பொறுமையுடன் சகித்து வந்தாள்.  சில காலத்திற்குப் பின் இவள் முன்பு போல அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டாள்.  இப்புண்ணியவதி அர்ச்.பிரான்சீஸ்குவின் மூன்றாஞ் சபையில் உட்பட்டு அருந் தவங்களைப் புரிந்து வந்தாள்.  இடைவிடாமல் ஜெபஞ் செய்து வியாதியஸ்தரை சந்தித்து அவர்கள் கால்களைக் கழுவி, கிடைக்கும் நேரத்தில் நூல் நூற்று, வஸ்திரங்களைத் தைத்து ஏழைகளுக்குக் கொடுப்பாள்.  இவளுடைய புண்ணியங்களைக் கண்ட அநேகர் தங்கள் கெட்ட நடத்தையை விட்டு சன்மார்க்கரானார்கள்.  எலிசபெத்தம்மாள் தன் காவலான சம்மனசின் பேரில் பக்தி வைத்து தன்னை சகல துன்பத்திலும் காத்து இரட்சிக்கும்படி வேண்டிக்கொள்வாள்.  மகா புண்ணியவதியான இவள் வியாதியாய் விழுந்து, தன் 24-ம் வயதில் இவ்வுலகை விட்டு நித்திய ஆனந்தத்திற்குள் பிரவேசித்தாள். 

யோசனை

 நாமும் நமது காவலான சம்மனசின் மேல் பக்தி வைப்போமானால் ஆத்தும சரீரத் தீமையினின்று அவர் நம்மைக் காப்பாற்றுவார்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக