Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 மே, 2018

*மே மாதம் 15-ம் தேதி* *Ss. Peter & Co., MM.* *அர்ச். பீற்றரும், துணைவரும்* *வேதசாட்சிகள் - (கி.பி. 250)

*மே மாதம் 15-ம் தேதி*

*Ss. Peter & Co., MM.*           
*அர்ச். பீற்றரும், துணைவரும்*
*வேதசாட்சிகள் - (கி.பி. 250).*   

வேதக் குழப்பம் நடக்கும்போது புண்ணியவாளரான பீற்றர் வேதத்திற்காகப் பிடிபட்டு அதிகாரிக்குமுன் நிறுத்தப்பட்டு வீனஸ் என்னும் தேவதைக்குப் பலியிடும்படி கட்டளையிடப்பட்டார். சத்தியக் கடவுளை வணங்குவேனேயன்றி பாவ அக்கிரமங்களைக் கட்டிக்கொண்ட ஒரு வேசியை வணங்க மாட்டேன் என்று இவர் சொல்ல, அதிகாரி கோப வெறிகொண்டு இவரைச் சக்கரத்தில் கட்டி சித்திரவதை செய்யும்படி கட்டளையிட்டான்.  அவ்வாறே வேதசாட்சியை சேவகர் உபாதிக்கும்போது, இவருடைய எலும்புகள் முறிந்து கொடிய வாதைப்பட்டார். பிறகு இவரைச் சிரச்சேதம் செய்தார்கள். வேறு அநேக கிறீஸ்தவர்கள் வேதத்தினிமித்தம் வாதைப்படும்போது, ஒருவன் பயந்து வேதத்தை மறுதலிக்க, உடனே அவன்மேல் பசாசு ஆவேஷமாக ஏறி நிர்ப்பாக்கியனாய்ச் செத்தான். 16 வயதுள்ள தெனிசாள் என்னும் பெண் பயமின்றி அதிகாரியை அணுகி, அவன் கிறீஸ்தவர்களை வாதித்துக் கொல்வதைக் குறித்து அவனைக் கண்டித்தாள். அவள் கிறீஸ்தவளென்று அறிந்த அதிபதி அவளை விபச்சாரியின் வீட்டுக்கு அனுப்பினான். அன்றிரவு ஜோதிப்பிரகாசத்துடன் ஒரு வாலன் அவ்வீட்டில் தோன்றவே அங்கிருந்த அனைவரும் அதைக் கண்டு பயந்தார்கள். அதைப் பார்த்த தெனிசாள், அங்கிருந்தவர்களை நோக்கி, பயப்படாதேயுங்கள், இவர் என் காவல் சம்மனசானவர் என்று தைரியமாய்க் கூறினாள். மறுநாள் மற்ற வேதசாட்சிகளைக் கொலைஞர் கொலைக்களத்திற்கு கூட்டிக்கொண்டு      போனபின் தெனிசாள் சிறையினின்று தப்பித்துப் போய் வேதசாட்சிகளைப் பார்த்து, நானும் உங்களுடன் மோட்சத்திற்குப் போக ஆசையாயிருக்கிறேன் என்று கூறியதை அதிபதி கேட்டு, மற்ற வேதசாட்;சிகளுடன் தெனிசாளையும் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டான்.     

*யோசனை*

வேதசாட்சிகள் உலகத்திற்குச் செத்தபடியால் வேதனைகளைப் பொறுமையுடன் அனுபவித்தார்கள். நமக்கு உலக நன்மைகள் மட்டிலுள்ள பற்றுதல்களை விட்டொழித்தாலன்றி ஞானப் பாக்கியத்தைக் கைக்கொள்ள மாட்டோம்.

*மே மாதம் 14-ம் தேதி* *St. Boniface, M.* *அர்ச். போனிபாஸ்*

*மே மாதம் 14-ம் தேதி*

*St. Boniface, M.*          
*அர்ச். போனிபாஸ்*
*வேதசாட்சி - (கி.பி. 307).* 

உரோமையில் அழகும், மிகுந்த சொத்துக்களுக்கும் சொந்தக்காரியான அக்லாயே என்னும் ஒரு பணக்காரி இருந்தாள். இவள் உரோமையிலுள்ள  பிரபுக்கள், தேசாதிபதிகள், வங்கி உரிமையாளர்கள் போன்ற பிரமுகர்களுக்கு பலமுறை சிறப்பாக விருந்து வைத்து பிரபலமடைந்திருந்தாள். இவளுடைய அரண்மனைக் காரியங்களை கவனிக்கும்படி போனிபாஸ் என்பவரை தன் அரண்மனையிலே நியமித்து, இருவரும் பாவ வழியில் வாழ்ந்து வந்தனர்.   போனிபாஸ், தன் எஜமானியுடன் பாவ வழியில் நடந்தபோதிலும் ஏழை எளியவர்கள் மட்டில் தயவு காட்டி, அவர்களை அன்புடன் விசாரித்து வந்தார்.  ஒருநாள் அக்லாயே தன் பாவ நடத்தையைப்பற்றி சிந்தித்து, மனஸ்தாபப்பட்டு, தன் நடத்தையைத் திருத்திக்கொள்ள தீர்மானித்தாள். இவள் போனிபாஸைப் பார்த்து, நாம் இப்படிப் பாவ வழியில் நடந்து இறந்தால், நரகமே நமக்கு கதியாகும். ஆகையால் இதுமுதல் நமது நடத்தையை திருத்திக்கொண்டு வேதசாட்சிகளுடைய மன்றாட்டால் நமது பாவங்களுக்கு உத்தரிப்பது உத்தம வழியாகும். ஆகையால் நீர் கீழ்த்திசைக்குச் சென்று ஒரு வேதசாட்சியின் சரீரத்தை நமது அரண்மனைக்குக் கொண்டுவாரும் என்றாள். அப்படியே ஜெபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ உதவியை மன்றாடி, வேத கலகம் மும்முரமாய் நடக்கும் சிலிசியாவுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரு ஊரில் அநேக கிறீஸ்தவர்கள் கொலைஞரால் வாதைப்பட்டு சாவதைக் கண்டு, அவர்களுக்குத் தைரியம் சொல்வதை அறிந்த அதிபதி, போனிபாஸைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடும்படிக் கட்டளையிட்டான்.  ஆனால் அவர் யாதொரு சேதமுமின்றி சுகமாயிருப்பதை அதிபதி கண்டு அவர் தலையை வெட்டும்படி கற்பித்தான். போனிபாசுடைய ஊழியர் அவருடைய சரீரத்தைக் கொண்டுபோய்த் தங்கள் எஜமானிக்கு கொடுத்தார்கள். அவள் அதை தன் அரண்மனையில் பத்திரப்படுத்தி அதற்கு முன் நாள்தோறும் வேண்டிக்கொண்டு, ஜெபத்திலும் தபத்திலும் தன் வாழ்நாட்களைக் கழித்து, புண்ணிய வழியில் மரித்தாள்.      

*யோசனை*
நாமும் நமது பாவப் பழக்க வழக்கங்களை விட்டொழிக்கும்படி அர்ச்சியசிஷ்டவர்களுடைய உதவியை மன்றாடுவோமாக.

ஞாயிறு, 13 மே, 2018

*மே மாதம் 12-ம் தேதி* *St. Domitilla, V. M.* *அர்ச். தொமிதில்லம்மாள்* *கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.*

*மே மாதம் 12-ம் தேதி*

*St. Domitilla, V. M.*         
*அர்ச். தொமிதில்லம்மாள்*
*கன்னிகை, வேதசாட்சி - (6-ம் யுகம்.* 

ப்ளாவியா தொமிதில்லா என்பவள் இராஜ வம்சத்தில் பிறந்து, சக்கரவர்த்தியான தொமிசியானுக்கு நெருங்கிய உறவினளாயிருந்தாள்.  தொமிசியான் சக்கரவர்த்தி தொமிதில்லாவையும் அவளுடைய மாமனாகிய கிளமென்ஸ் என்பவரையும் வேதத்தினிமித்தம் சிறைப்படுத்தி, கிளமென்ஸைக் கொலைசெய்து தொமிதில்லாவை நாடுகடத்தினான். தொமிதில்லா தனது அரசு அதிகாரிகளான நெறயஸ், அக்கிலேயஸ் என்பவர்களுடன் அவ்விடத்தில் புண்ணியங்களையும் தர்மச் செயல்களையும் செய்து, ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தாள். தொமிதில்லாவும் இரு அதிகாரிகளும் தனித்தனி அறைகளில் வசித்து, ஜெப தபங்களைச் செய்து வெகு கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தபடியால், அவ்விடம் அவர்களுக்கு ஒருவித வேதனைக்குரிய ஸ்தலமாயிருந்தது. தொமிசியான் இறந்தபின் திராஜான் உரோமை இராச்சியங்களுக்கு சக்கரவர்த்தியாகத் தெரிந்துகொள்ளப்பட்டான். அச்சமயத்தில், வேதத்தினிமித்தம் நாடுகடத்தப்பட்ட கிறீஸ்தவர்களை அவன் விடுவிக்கக் கட்டளையிட்டு, தொமிசியானுடைய உறவினர்களைக் கொலை செய்தான். தொமிதில்லா பொய்த் தேவர்களை வணங்காததினால் அவளை நெருப்பில் சுட்டெரிக்கும்படி அவன் கட்டளையிட்டான். தொமிதில்லா மரித்து வேதசாட்சி முடி பெற்றாள்.  

*யோசனை*

இந்த இராஜக் கன்னிகையை நாமும் கண்டுபாவித்து, சுகபோகம் முதலியவைகள் மாயையென்றும், புண்ணியமார்க்கமே நித்திய சம்பாவனைக்கு அழைத்துச் செல்லுமென்று அறிந்துகொள்வோமாக.

*மே மாதம் 13-ம் தேதி* *St. Servatius, B.* *அர்ச். செர்வாசியுஸ்* *ஆயர் - (கி.பி. 384).*

*மே மாதம் 13-ம் தேதி*

*St. Servatius, B.*           
*அர்ச். செர்வாசியுஸ்*
*ஆயர் - (கி.பி. 384).* 

உத்தம குடும்பத்தில் பிறந்தவரும், கல்வியறிவில் சிறந்தவருமான செர்வாசியுஸ் ஜெப தபத்தால் ஆண்டவருக்கு ஊழியம் செய்து புண்ணியவாளனாய் வாழ்ந்துவந்தார். இவருடைய புண்ணியங்களாலும் அருமையான தபத்தாலும் அநேகப் புதுமைகளைச் செய்துவந்தார். இவர் ஒரு மொழியில் பேசும்போது மற்ற ஜாதி ஜனங்கள் தங்கள் தங்கள் மொழியில் புரிந்துகொள்வார்கள். இவரைத் தொட்டவர்களும், இவர் கை கழுவிய நீரைக் குடித்த நோயாளிகளும் சுகமடைந்தார்கள். தேவநற்கருணையைத் தவிர வேறு உணவின்றி அநேக நாட்கள் பிழைத்திருக்கிறார். இவர் தாங்கிரெஸ் நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு, அதில் வெகு பிரயாசையுடன் சத்திய வேதத்திற்காக உழைத்துவந்தார். இவருடைய மறைமாவட்டத்தில் துஷ்டப் பதிதரான ஆரியர், மிகுந்த அக்கிரமங்களைச் செய்து அநேகரைத் தங்கள் மதத்தில் கபடமாய்ச் சேர்த்துக்கொண்டார்கள். அன்ஸ் என்னும் காட்டுமிராண்டி ஜனங்களால் தமது தேசம் கொள்ளையடிக்கப்படப் போவதாக ஒரு தரிசனையால் இவர் அறிந்து, அந்தப் பொல்லாப்பு வராதபடி உரோமைக்குத் திருயாத்திரையாகச் சென்று அர்ச். இராயப்பரை பக்தியுடன் வேண்டிக்கொண்டார். அந்தத் தேசத்தாருடைய பாவத்தினிமித்தம் ஆண்டவர் அவர்களைத் துஷ்டரால் அழிக்கச் சித்தம் கொண்டிருப்பதாகவும், ஆனால் அந்தப் பயங்கர ஆக்கினையை அவர் பார்க்கமாட்டார் என்றும், அர்ச். இராயப்பர் தந்த தரிசனையில் ஆயர் அறிந்துகொண்டார். செர்வாசியுஸ் ஆயர் அர்ச்சியசிஷ்டவராய் மரித்தபின், முன் கூறப்பட்ட துஷ்ட ஜனங்கள் அத்தேசத்தைக் கொள்ளையடித்து தாங்கிரெஸ் நகரத்தைப் பாழாக்கினார்கள்.       
 
*யோசனை*
நமக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கும்படி ஆண்டவரை மன்றாடுவதுடன் அதற்குக் காரணமான பாவங்களையும் விட்டொழிப்போமாக.

சனி, 12 மே, 2018

*மே மாதம் 9-ம் தேதி* *St. Gregory Nazianzen, Pat.* *அர்ச். நசியான்சென் கிரகோரியார்* *பிதா - (கி.பி. 390)

*மே மாதம் 9-ம் தேதி*
*St. Gregory Nazianzen, Pat.*           *அர்ச். நசியான்சென் கிரகோரியார்*
*பிதா - (கி.பி. 390).*

நசியான்சென் நாட்டில் அர்ச்சியசிஷ்டவர்களான பெற்றோரிடத்தினின்று கிரகோரியார் பிறந்தார். செசாரயே, அலெக்சாந்திரியா முதலிய              பட்டணங்களுக்கு இவர் அனுப்பப்பட்டு, கல்வியில் சிறந்து வேதசாஸ்திரி என்னும் பெயர் பெற்றார். உலகம் கொடுக்கக்கூடிய சிறந்த பெயரையும் மகிமையையும் துறந்துவிட்டு குருப்பட்டம் பெற்று சில காலத்திற்குப்பின் ஆயரானார். இவர் பக்தியிலும் அறிவிலும் சிறந்து விளங்கியமையால், ஆரியப் பதிதப் போதனையால் குழப்பத்திற்குள்ளாகி சீர்குழைந்திருந்த அலெக்சாந்திரியா நகருக்குப் பிதாப் பிதாவாக நியமிக்கப்பட்டார். இவருடைய விடா முயற்சியாலும், கஷ்டமான பயணங்களாலும், ஜெப தபத்தாலும் சிறந்த பிரசங்கத்தாலும், குழப்பங்களையும் பிரிவினைகளையும் சீர்படுத்தி, அநேக பதிதரை மனந்திருப்பி சத்திய வேதம் சிறந்து பிரகாசிக்கும்படிச் செய்தார்.  தங்கள் மதம் அழிவதைக் கண்ட பதிதர் கிரகோரியாரைப் பகைத்து தூஷணித்துக் கடைசியாய் அவரைக் கொல்லும்படி ஒரு பாதகனை அனுப்பினார்கள். அந்தப் பாவி அவரைக் கொல்லும் கருத்துடன் அவரை நெருங்கியபோது, மனம் மாறி, அவர் பாதத்தில் விழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்கவே, அவரும் அவனுக்கு மன்னிப்பளித்தார். கிரகோரியார் அலெக்சாந்திரியாவுக்கு பிதாப்பிதாவாக நியமிக்கப்பட்டது திருச்சபை சட்டத்திற்கு விரோதமென்று சிலர் காய்மகாரத்தால் முறையிட்டதை இவர் கேட்டு, அவர்களுடைய முறைப்பாடு ஒழுங்கற்றதென்று அறிந்திருந்தும், தம்மால் திருச்சபைக்குள் குழப்பம் உண்டாகாதபடிக்கு அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிலப் புண்ணியவான்களுடன் தனிமையில் வாழ்ந்து அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.   

*யோசனை*

நாமும் யாதொரு பொது நன்மையினிமித்தம் பாவமற்ற விஷயத்தில் பிடிவாதம் காட்டாமல் நமது அபிப்பிராயத்தை விட்டு விடுவது நலமாகும்.

*மே மாதம் 10-ம் தேதி* *St. Isidore, C.*          *அர்ச். இசிதோர்* *துதியர் - (கி.பி. 1130).*

*மே மாதம் 10-ம் தேதி*
*St. Isidore, C.*         
*அர்ச். இசிதோர்*
*துதியர் - (கி.பி. 1130).*

அர்ச். இசிதோர் ஸ்பெயின் தேசத்தில் ஏழையும் தெய்வபயமும் உள்ள உத்தம பெற்றோரிடமிருந்து பிறந்தார். தரித்திரத்தினிமித்தம் அவர்கள் தங்கள் குமாரனை கல்விக் கற்க அனுப்ப சாத்தியப்படாவிடினும், தெய்வ பயத்தில் அவரை வளர்த்துப் பாவத்தை வெறுத்துப் புண்ணியத்தைப் போதித்து, ஜெபம் செய்து ஆண்டவருடைய கற்பனைகளை அனுசரித்து வாழும்படி, நற்புத்தி போதித்துவந்தார்கள். இவரும் தமது பக்தியுள்ளப் பெற்றோரின் புத்திமதிக்கு இணங்கி நடந்தார். இவருக்கு வயது வந்தபின் ஒரு செல்வந்தர் வீட்டில் விவசாய வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையைத் தன் சொந்த வேலையாகப் பாவித்து சுறுசுறுப்புடன் செய்வார். ஏர் உழும் போதும், வண்டியோட்டும் போதும் மற்ற எந்த வேலையைச் செய்யும்போதும் ஆண்டவரை மனதில் தியானிப்பார்.  இவர் ஜெபம் செய்யும் நேரத்தில் சம்மனசுக்கள் இவர் செய்யவேண்டிய வேலையைச் செய்வார்கள். திருட்டு, பொய் முதலியவை இவரிடம் கிடையாது. தன் எஜமானுக்கு எப்போதும் பிரமாணிக்கமாயிருப்பார். தன் வயிற்றுக்காக வேலை செய்த போதிலும் தன் ஆத்துமத்தை மறந்தவரல்ல. அதிகாலையில் எழுந்து ஜெபங்களை முடித்துக்கொண்டு வேலையைத் துவக்குவார். ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் பூசைக் கண்டு, அன்று அற்ப வேலையையும் செய்யமாட்டார். அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்குவார். இவர் அந்த ஊருக்கு சகலத்திலும் நன்மாதிரியாய் வாழ்ந்தார். இவருடைய எஜமான் புண்ணியவானாயிருந்ததால், வேலைக்காரனால் தன் செல்வத்தை ஆண்டவர் ஆசீர்வதித்துப் பலுகச் செய்தாரென்று கூறி, இவரைத் தன் சகோதரனைப் போல நடத்திவந்தான். இசிதோர் 60 வயது வரை வேலை செய்து புண்ணியவானாக மரித்தார். இவரால் அநேகப் புதுமைகள் நடந்தன.    

*யோசனை*

இசிதோருடைய சரித்திரத்தைக் கேட்ட குடியானவர்களே! தொழிலாளிகளே! ஜெபம் செய்யவும் பாவசங்கீர்த்தனம் செய்யவும் நேரமில்லையென்று இனி சாக்குப்போக்குக் கூறாதீர்கள். சுறுசுறுப்பு, எதார்த்தம், நன்னடத்தை முதலியவைகளை இவரிடத்தில் கற்றுக்கொள்வீர்களாக.

வெள்ளி, 11 மே, 2018

*மே மாதம் 11-ம் தேதி* *St. Mammerthus, B.C.* *அர்ச். மம்மேர்துஸ்* *ஆயர், துதியர் -

*மே மாதம் 11-ம் தேதி*
*St. Mammerthus, B.C.*        
*அர்ச். மம்மேர்துஸ்*
*ஆயர், துதியர் - (கி.பி. 477).* 

இவர் வியன்னா நகருக்கு பேராயராய் இருந்தார். இவர் சாஸ்திரத்தில் தேர்ந்து மகா புண்ணியவாளராக வாழ்ந்து அநேகப் புதுமைகளைச் செய்துவந்தார். உலகத்தில் மனிதருடையப் பாவத்தினிமித்தம் பஞ்சம், படை, கொள்ளை நோய் முதலிய துன்ப துரிதங்கள் உண்டாகுகிறதென்று இந்தப் பரிசுத்த ஆயர் தமது மறைமாவட்ட ஜனங்களுக்கு அறியச் செய்வார். இவர் காலத்தில் ஒரு நாள் வியன்னா நகர் நெருப்புப் பிடித்து வெந்தபோது அவ்வூரார் அதை அணைப்பதற்கு எடுத்த முயற்சிகளெல்லாம் வீணானதால், மம்மேர்துஸ் மகா பக்தியுடன் ஆண்டவரைப் பார்த்து மன்றாட, அந்தப் பெரும் நெருப்பு சடுதியில் அணைந்ததைக் கண்ட ஜனங்கள் தங்கள் பரிசுத்த ஆயருடைய வேண்டுதலால் இந்த அரியப் புதுமை நடந்த தென்று நிச்சயித்தார்கள். இந்தப் புதுமையின் ஞாபகார்த்தமாக கர்த்தர் மோட்ச ஆரோகணமான திருநாளுக்குமுன் வரும் மூன்று நாட்களில் விசேஷ ஜெபங்களை ஜெபித்து, ஆண்டவருடைய இரக்கத்தை மன்றாடும்படி கூறினார். அதுமுதல், இந்த வழக்கம் திருச்சபையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மம்மேர்துஸ் ஆயர் அநேக வருடங்கள் தமது மறைமாவட்டத்தை பரிபாலித்து, 477-ம் வருடம் பாக்கியமான மரணமடைந்து மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.  

*யோசனை*
நமக்குத் துன்ப துரிதங்களும் வியாதி நோவுகளும் உண்டாகும்போது அவை பசாசால் உண்டாகிறதென்று தவறாய் எண்ணி பேய்க்கு வேண்டியச் சடங்குகளை நடத்தாமல் நமது பாவங்களுக்கு ஆக்கினையாக ஆண்டவர் அவைகளை அனுப்புகிறார் என்று எண்ணி, ஜெப தபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ கோபத்தைத் தணிக்க முயற்சிப்போமாக.

சனி, 5 மே, 2018

மே மாதம் 5-ம் தேதி - அர்ச். 5-ம் பத்திநாதர் (St. Pius V,)

*மே மாதம் 5-ம் தேதி*
*St. Pius V, P.*             
*அர்ச். 5-ம் பத்திநாதர்*
*பாப்பாண்டவர் - (கி.பி. 1572).*


அர்ச். தோமினிக் சபை துறவியான மிக்கேல் என்ற இவருக்கிருந்த மேலான ஞானத்தினாலும் அர்ச்சியசிஷ்டதனத்தினாலும் இவர் குருவாகி ஆயர் அபிஷேகம் பெற்றுக் கர்தினால் பட்டத்தை அடைந்து, 4-ம் பத்திநாதர் என்னும் பாப்பரசருடைய மரணத்திற்குப்பின் 5-ம் பத்திநாதர் என்னும் பெயரைக் கொண்டு
அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் ஏறினார். இவர் தமது முந்தைய வழக்கத்தை விடாமல், தபத்தையும் ஒருசந்தியையும் அனுசரித்து புண்ணிய வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இவர் குருக்களுடைய நல்லொழுக்கத்தைக் கவனித்து, தவறுகளைக் கண்டித்து வந்தார். குருக்கள் செய்யும் கட்டளை ஜெப புத்தகத்தையும், பூசைப் புத்தகத்தையும் சரிபார்த்து, தேவ பாடல்களைச் சீர்திருத்தி, திரிதெந்தின் சங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இங்கிலாந்து தேசத்தில் சத்திய வேதத்தினிமித்தம் அநேக கத்தோலிக்கக் கிறீஸ்தவர்களை குரூரமாய்க் கொன்ற எலிசபெத் என்னும் இராணிக்குத் திருச்சபை சாபமிட்டு, வேதத்தினிமித்தம் சிறைபடுத்தப்பட்ட ஸ்காட் மேரி இராணிக்கு ஆறுதலான நிருபம் அனுப்பினார். கிறீஸ்தவ வேதத்தை அழிக்கும் கருத்துடன் துலுக்கர் அநேகப் பட்டணங்களைப் பிடித்துப் பாழாக்கி, கிறீஸ்தவர்களை குரூரமாய் உபாதித்துக் கொன்று லெபாந்த்தோ என்னுமிடத்தில் ஏராளமான கப்பற்படையைச் சேர்த்து, போர் புரிகையில், கிறீஸ்தவர்களுக்கு ஜெயமுண்டாகும்படி இவர் மகா பக்தி விசுவாசத்துடன் தேவமாதாவைப் பார்த்து வேண்டிக்கொண்டார். அற்புதமாய் கிறீஸ்தவர்கள் ஜெயங்கொண்டதை இவர் தூரதிருஷ்டியால் அறிந்து, மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார். இவர் தமது               68-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ் சென்றார்.

*யோசனை*

நமது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களுடைய நடத்தையைக் கவனித்து, அவர்கள் தவறுகளைக் கண்டித்து அவர்களுக்குப் புத்தி புகட்டுவோமாக.

வெள்ளி, 4 மே, 2018

மே மாதம் 4-ம் தேதி - அர்ச். மோனிக்கம்மாள் (St. Monica, W.) *

*மே மாதம் 4-ம் தேதி*
*St. Monica, W.*             
*அர்ச். மோனிக்கம்மாள்*
*விதவை - (கி.பி. 387).*


அர்ச். அகுஸ்தீன் என்பவருடைய தாயாரான மோனிக்கம்மாள் சிறு வயதில் புண்ணிய வழியில் வாழ்ந்துவந்தாள். இவள் பிற மதத்தைச் சார்ந்த ஒருவனை மணமுடித்துக்கொண்டு, அவன் ஞானஸ்நானம் பெறும்படி ஜெபதபத்தாலும், புத்திமதியாலும் முயற்சித்து வந்தாள். அம்மனிதன் முன்கோபக்காரனானதால், தன் மனைவியை அவன் கோபித்துத் திட்டும்போது, அவள் ஒன்றும் பேசாமல் பொறுமையாயிருந்தாள். கோபம் தீர்ந்தபின் அவனுக்கு நியாயத்தை எடுத்துக் காட்
டினதினால் அவன் பிறகு சாந்த குணமுள்ளவனாகி, ஞானஸ்நானம் பெற்று நல்ல கிறீஸ்தவனாய் மரித்தான். மற்ற ஸ்திரீகள் தங்கள் கணவர்களின் தவறுகளைப்பற்றி மோனிக்கம்மாளிடம் முறையிடும்போது, உங்கள் கணவர் மட்டில் தவறில்லை, உங்கள் அடக்கமற்ற நாவின் மேல்தான் தவறென்று சொல்லி, அவர்களுக்கு நற்புத்தி சொல்வாள். இவளுடைய மூன்று பிள்ளைகளுள் அகுஸ்தீன் என்பவர் மிகவும் துடுக்கானவர். இவர் மனிக்கேயர் பதித மதத்தில் சேர்ந்து பெரும் பாவியாய் நடப்பதைக் கண்ட மோனிக்கம்மாள் இடைவிடாமல் கண்ணீர் சிந்தி, அழுகையுடன் ஜெபம் செய்து அவர் மனந்திரும்பும்படி ஆண்டவரை மன்றாடுவாள். தன் மகனுக்காக வேண்டிக்கொள்ளும்படி ஆயரையும் குருக்களையும் மன்றாடுவாள். மேலும் தன் மகன் போகும் ஊர்களுக்குப் போய் அவன் பாவ வழியை விடும்படி புத்திமதி கூறுவாள். இறுதியில் மோனிக்கம்மாளுடைய ஜெபம் வீணாகவில்லை. தனது 30-வது வயதில் அகுஸ்தீன் மனந்திரும்பினார். சில காலத்திற்குப்பின் மோனிக்கம்மாள் மரண அவஸ்தையாயிருக்கும்போது அகுஸ்தீனுக்கு நல்ல புத்திமதி கூறி, தான் இறந்தபின் தன் ஆத்துமத்திற்கு திவ்விய பலிபூசை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டாள். அவ்வாறே அவர் திவ்விய பலிபூசை நிறைவேற்றியதுடன், அவர் குருவான பின்னும் அநேக வருடகாலம் தன் தாயாரின் ஆத்துமத்திற்காக திவ்விய பலிபூசை நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தார்.   

*யோசனை*

ஸ்திரீகளே! மோனிக்கம்மாளைக் கண்டுபாவித்து உங்கள் கணவர்களால் வீட்டில் சண்டை சச்சரவு உண்டாகி, உங்களை அவர்கள் குரூரமாய் நடத்தும்போது, நாவை அடக்கி சற்றுப் பொறுமையாய் இருப்பீர்களேயாகில், சீக்கிரத்தில் சமாதானமுண்டாகும். உங்கள் பிள்ளைகளால் உங்களுக்குத் துன்பமும் பிரச்சினைகளும் உண்டாகும்போது ஜெபத்தாலும் புத்திமதியாலும் அவர்களை நல்வழிக்குத் திருப்புவீர்களாக.

வியாழன், 3 மே, 2018

மே மாதம் 3-ம் தேதி - திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட திருநாள் (Invention of the Holy Cross)

*மே மாதம் 3-ம் தேதி*
*Invention of the Holy Cross*           
*திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட*
*திருநாள் - (கி.பி. 326).*



உரோமை இராச்சியங்களை பிற மதத்தைச் சார்ந்த அரசர்கள் சில நூற்றாண்டுகளாக அரசாண்டு வந்தபோது அவர்களுக்குள் கான்ஸ்டான்டைன் என்னும் தைரியமுள்ள இராயர் திருச்சிலுவையால் அதிசயமான ஜெயங்கொண்டபின், அவர் சத்திய வேதத்தில் சேர்ந்து தமது பிரஜைகளும் அதே வேதத்தை அனுசரிக்கும்படி உத்தரவளித்தார். அவர் திருச்சிலுவையின் பேரால் ஓர் அழகிய தேவாலயத்தைக் கட்டத் தீர்மானித்தார். அவருடைய தாயாரான  அர்ச். ஹெலனம்மாள் ஜெருசலேம் நகருக்குச் சென்று திருச்சிலுவையைக் கண்டெடுக்க முயற்சித்தாள். பிற மதத்தினர் நமது கர்த்தர் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையின்மேல் கற்களையும் மண்ணையும் போட்டு, பெரிய மேடாக்கி அதன்மேல் ஒரு பொய்த் தேவதையின் கோவிலையும் கட்டியிருந்தார்கள். அர்ச்.ஹெலனம்மாள் மிகுதியான பணத்தைச் செலவுசெய்து, அக்கோயிலை இடித்து, மேட்டை வெட்டியெடுத்தபோது, மூன்று சிலுவைகளும், ஆணி, முள் முடி முதலியவைகளும் காணப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் நமது கர்த்தர் மரணமடைந்த சிலுவை எதுவென்று அறியமுடியாததால், மக்காரியுஸ் ஆயருடைய ஆலோசனைப்படி அவ்வூரில் சாகக்கிடந்த ஒரு ஸ்திரீயின்மேல் அந்த மூன்று சிலுவைகளும் ஒன்றன்பின் ஒன்றாய் வைக்கப்பட்டன. மூன்றாவது சிலுவை அவள்மேல் வைக்கப்படவே, அவள் பூரண சுகமடைந்ததால், அதுவே நமது கர்த்தர் அறையப்பட்ட சிலுவையென்று நிச்சயிக்கப்பட்டது. பிறகு அந்தப் புண்ணிய அரசியால் அவ்விடத்தில் ஒரு சிறந்த அழகான தேவாலயம் கட்டப்பட்டு, அதில் பரிசுத்த சிலுவை மிகுந்த வணக்கத்துடனும் பயபக்தியுடனும் ஸ்தாபிக்கப்பட்டது. இன்றுவரையிலும் கிறீஸ்தவர்கள் அதை வணங்கி வருவதுமட்டுமன்றி அங்கு அநேக புதுமைகளும் நடந்து வருகின்றன. 

*யோசனை*

அவமானத்திற்குரிய சிலுவை மரத்தை நமது கர்த்தர் பொறுமையுடன் அங்கீகரித்ததினால், அது மகிமைப்படுத்தப்பட்டது போல, நமது சிலுவையாகிய துன்பதுரிதம், வியாதி முதலியவைகளை நாம் பொறுமையுடன் சகிப்போமாகில் அவை நமக்கு நித்திய மகிமைக்குக் காரணமாகும்.

St. Therese Daily Thoughts 8 (in Tamil)

ஓ இந்த உலக பொருள்களோடு ஒப்பிடும் பொது என் இதயம் எவ்வளவு பெரியதாக தோன்றுகிறது.  ஏனென்றால் அவை எல்லாம் சேர்ந்தும் கூட என்னை திருப்திப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன.  ஆனால் என் இதயத்தை சேசுவோடு நான் ஒப்பிடும் பொது அது எவ்வளவு சிறியதாக தோன்றுகிறது.


Download Tamil Catholic Songs

புதன், 2 மே, 2018

மே மாதம் 2-ம் தேதி - அர்ச். அத்தனாசியுஸ் (St. Athanasius)

*மே மாதம் 2-ம் தேதி*
*St. Athanasius, Pat.*          
*அர்ச். அத்தனாசியுஸ்*
*பிதா - (கி.பி. 373).*


கீர்த்தி பெற்ற சாஸ்திரியான அத்தனாசியுஸ் கல்வி சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து குருப்பட்டம் பெற்றார். இவருடைய ஞானத்தாலும்          புண்ணியங்களாலும் அலெக்சாந்திரியா நகருக்குப் பிதாப் பிதாவாக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் ஆரியுஸ் என்பவனாலும் அவனைச் சேர்ந்த கூட்டத்தாராலும் திருச்சபைக்கும் தேசத்திற்கும் வெகு துன்பங்களும் நஷ்டங்களுமுண்டாயின. தங்கள் நோக்கத்தில் வெற்றிபெற இத்துஷ்டப் பதிதர் எத்தகைய பாவ அக்கிரமங்களுக்கும் பயப்படாமல், தங்கள் அபத்த மதத்தைத் தேசமெங்கும் பரப்ப சகல முயற்சியையும் செய்தபடியால், புண்ணியவாளரான அத்தனாசியுஸ் ஜெப தபத்தாலும், பிரசங்கத்தாலும், வேதத் தர்க்கத்தாலும் திருச்சங்கத்தாலும், அப்பதித மதத்தை அடக்கித் தடுத்து வந்தார். இதனால் அந்தப் பதிதர் கோப வெறிகொண்டு பரிசுத்த பாப்பரசரிடம் இவருக்கு விரோதமாய்க் கூறிய அவதூறு எல்லாம் வீணாகப்போனதினால், பதிதர் அத்தனாசியுஸ் மாய வித்தைக்காரன் என்றும், விபசாரியென்றும், கொலை பாதகனென்றும் இராயனிடம் முறையிடவே, இக்குற்றங்களை விசாரிக்கும்படி இராயன் உத்தரவிட்டான். அத்தனாசியுஸால் கெடுக்கப்பட்டாள் என்று கூறப்பட்ட ஸ்திரீயே, அவர் அப்படிச் செய்யவில்லை என்று சாட்சி கூறினாள். இவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டவனோ நீதிஸ்தலத்தில் தெய்வாதீனமாய் வந்து நின்றபடியால், அத்தனாசியுஸ் மாசற்றவரென்று தெரியவந்தது. ஆயினும் ஆரியப் பதிதனான இராயனுடைய அநியாய உத்தரவால், ஆரியர் அத்தனாசியுசுடைய கோவிலைக் கைப்பற்றிக்கொள்ளச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அத்தனாசியுஸ் ஜெப தபத்தாலும் ஒருசந்தியாலும் ஆண்டவரைப் பார்த்து, இந்த தேவ துரோகத்தை தடுக்கும்படி மன்றாடினார்.  குறித்த நாளில் ஆரியுஸ் தன் பெருங் கூட்டத்தாரோடு மேள தாளத்துடன் ஆரவாரமாக தேவாலயத்திற்குப் போகும்போது, திடீரென்று அவனுக்கு வியாதியுண்டாகி, வயிறு வெடித்து வழியில் மாண்டான். இதனால் கிறீஸ்தவர்களுக்குச் சந்தோஷமும் பதிதருக்கு வெட்கமும் உண்டாயிற்று. அத்தனாசியுஸ் நான்கு இராயர் கீழ் தமது மறைமாவட்டத்தை ஆண்டு ஐந்து தடவை நாடுகடத்தப்பட்டு, சகலவித கஷ்டம் துன்பங்களை அனுபவித்த போதிலும் தளராது தைரியத்துடன் சத்தியத்தைப் போதித்து, சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி, தமது முதிர்ந்த வயதில் மோட்ச முடி பெற்றார்.

*யோசனை*

நமது ஞானப் போதகருக்கு மனவருத்தம் உண்டாக்காமல் அவர்களை மதித்து, அவர்களுக்குக் கீழ்ப்படிவோமாக.

மே மாதம் 1-ம் தேதி - அர்ச். பிலிப்பும் ஜேம்சும் (SS. Philip & James)

*மே மாதம் 1-ம் தேதி*
*SS. Philip & James, Ap.*        
*அர்ச். பிலிப்பும் ஜேம்சும்*
*அப்போஸ்தலர்கள்*


நமது கர்த்தர் பெத்சாயிதா என்னும் ஊரில் பிலிப் என்பவரை தம்மைப் பின்செல்லும்படி அழைத்தார். அதற்கு அவர் நான் என் வீட்டுக்குப் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் என்றார். மரித்தவர்கள் மரித்தவர்களைப் புதைக்கட்டும், நீ நம்மைப் பின்செல் என்ற மாத்திரத்தில் பிலிப் கர்த்தரைப் பின்சென்றார். பிறகு பிலிப், நத்தானியேல் என்பவரை சேசுநாதரிடம் அழைத்துக்கொண்டு வந்தார். இவர் கர்த்தருடைய பிரசங்கங்களைக் கேட்கவும் புதுமைகளைப் பார்க்கவும் பாக்கியம் பெற்றார். இராப்போசனத்திற்குப்பின் சேசுநாதர் தமது பிதாவைப்பற்றி பிரசங்கித்தபோது, சுவாமி பிதாவை எங்களுக்குக் காட்டும். அதுவே போதுமென்று பிலிப் சொன்னதை நமது கர்த்தர் கேட்டு, பிதாவோடு நானும் என்னோடு பிதாவும் இருக்கிறாரென்று அறிவாயாக என்றார். அர்ச். பிலிப் தரிஜியா தேசத்தில் வேதம் போதித்து முதிர்ந்த வயதில் மரித்து நித்திய சம்பாவனையைப் பெற்றார்.

ஜேம்ஸ் அல்லது சின்ன இயாகப்பர் என்பவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர். கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் ஜேம்ஸ் ஜெருசலேம் நகருக்கு மேற்றிராணியாரானார். இவர் ஒருசந்தி உபவாசமிருந்து பெருந் தபசியாய் இருந்தார். இவர் இடைவிடாமல் சாஷ்டாங்கமாய் விழுந்து ஜெபம் செய்தமையால், இவருடைய இரு முழங்கால்களும் நெற்றியும் ஒட்டகத்தின் குளம்பு போல உறுதியாய் காய்த்துப் போயின. மழையின்மையால் பஞ்சமுண்டான போது, ஜேம்ஸ் தமது கைகளை விரித்து ஜெபித்த மாத்திரத்தில் பெரும் மழை பெய்தது. இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட யுதர்கூட இவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைப் பக்தியுடன் தொடுவார்கள்.  இவர் ஒரு பொது நிருபம் எழுதினார். இவருடைய ஜெபத்தையும் தபத்தையும் கண்ட யூதர் இவரை நீதிமான் என்பார்கள். அர்ச்.சின்னப்பர் யூதர் கையினின்று தப்பித்துக்கொண்ட போது, துஷ்ட யூதர் தங்கள் கோபத்தை ஜேம்ஸ் மேல் காட்டி அவரைக் கல்லாலெறிந்து கொன்றார்கள்.

*யோசனை*

யாதொருவனுக்கு தேவ அழைத்தல் உண்டாகும்போது இரத்தப் பாசத்தையும் முகத்தாட்சண்யத்தையும் பாராமல் தேவ அழைப்புக்குக் காது கொடுக்க வேண்டும்.

Daily thoughts of St. Therese 7 (in tamil)

என் இருதயம் உமக்காக பெரு மூச்சி விடுகிறது.  ஓ சேசுவே, என் ஒரே ஆசை, உம்மை சொந்தமாகக் கொண்டிருப்பதுதான் என் ஆண்டவரே.

Daily thoughts of St. Therese 6 (in tamil)

என் அன்புள்ள அன்னை மாமரியே நான் உங்களை விட அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறன்.  நான் உங்களை என் தாயாக கொண்டிருக்கிறேன்.  அனால் நீங்கள் அன்பு காட்ட எனக்கு இருப்பது போல ஆசிர்வதிக்கப்பட்ட கன்னிகை உங்களுக்கு இல்லை.