Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 5 செப்டம்பர், 2013

விசுவாச ஆண்டா? நம்பிக்கை ஆண்டா?

விசுவாச ஆண்டா? நம்பிக்கை ஆண்டா?


கேள்வி: வணக்கம். தங்களது நவம்பர் – டிசம்பர் 2011 இதழில் உங்கள் தலையங்கத்தை வாசித்தேன். அதில் ‘உண்மையில் விசுவாசம் வேறு, நம்பிக்கை வேறு. இரண்டும் வௌ;வேறு பொருள் கொண்டது” என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இதைத் தயவு செய்து இன்னும் அதிகமாக விளக்க முடியுமா?

பதில்: ஒரு செயல் அதன் பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. (Habits are determined by its object) எந்த ஒரு வழக்கத்தையும் சார்ந்த பொருள்களின் வகையானது, அந்த பொருளின் ஒழுங்கு சார்ந்த தன்மையைப் பொறுத்ததாக இருக்கிறது. (Cardinal Billot, De Virtutibus Infusis, ed, 1905 Rome, pg.84) பார்க்கப்படும் பொருள்கள் பார்வையைத் தீர்மானிக்கின்றன. பார்ப்பதற்கு எதுவுமில்லை என்றால் பார்வை இல்லை என்று அர்த்தம். மரம் நடுதல் என்ற செயலில் மரக்கன்றுகள் இல்லை என்றால் அங்கே மரம்; நடுதல் என்ற செயல் இருக்க முடியாது. இது மிகச் சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனாலும் மிகச் சாதாரணமான இவ்விஷயங்களில் நாம் தவறுவதால்தான் பெரிய தவறுகளைச் செய்கிறோம். எல்லாத் தப்பறைகளுமே தொடக்கத்தில் சத்தியத்திலிருந்து சிறிதே விலகி இருப்பினும் கடைசியில் அதன் நிலை?
அதே போன்றுதான் புண்ணியங்களும். புண்ணியங்கள் என்பவை நற்பழக்கங்களைக் குறிக்கும். (good habits) ஒவ்வொரு புண்ணியத்திற்கும் தனி ஒரு பொருள் (Object) உண்டு. அப்படி இருப்பதால்தான் அது தனிப் புண்ணியமாக இருக்கிறது. இப்புண்ணியங்கள் இரு வகைப்படும்.
  1. சுபாவத்திற்கு மேலான புண்ணியங்கள்
  2. சுபாவமான புண்ணியங்கள்
மற்ற தலையான புண்ணியங்களுக்கும் தேவ சம்பந்தமான புண்ணியங்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. தேவ சம்பந்தமான புண்ணியங்கள் நேரடியாகத் தங்களுடைய நோக்கமாகக் கடவுளை கொண்டிருப்பதால், இவை கடவுள் சம்பந்தமான (Theos-logos) புண்ணியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளின் எண்ணிக்கை மூன்று ஆகும்.
‘ இப்போது விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் இம்மூன்றும் நிலை கொண்டிருக்கின்றன” என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். (1கொரி.13:13) இந்த வாக்கியத்தில் அவர் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், வேறுப்படுத்திக் காட்டுகிறார். ஏன்? ஏனென்றால் இவை ஒவ்வொன்றும் தனித்தனி பொருள்களைக் கொண்டுள்ளன.
நம்பிக்கை என்பது கடவுள் நம்முடைய கதியை அடைய நமக்கு வேண்டியவற்றைத் தந்தருள்வார் என்று நம் சித்தத்தை உறுதிப்படுத்தும் ஒரு தேவ சம்பந்தமான புண்ணியமாகும். இது விசுவாசத்திலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்டது.
விசுவாசம் என்பது கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொள்வது. இதனை மேலும் தெளிவுப்படுத்த வேண்டுமானால், இவற்றை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும். முதலில் விசுவாசம் என்றால் என்ன?
சர்வேசுரனுடைய தெய்வீக அதிகாரத்தின் காரணமாக, அவரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள எல்லாவற்றையும் உறுதியாக சம்மதித்து ஏற்றுக் கொள்ளும்படி மனதை ஆயத்தப்படுத்துகிற ஒரு சுபாவத்துக்கு மேலானதும், தேவ சம்பந்தமானதுமாகிய புண்ணியமே விசுவாசம் ஆகும். இது இரு வகைப்படும்.
1. உயிருள்ள விசுவாசம்: தேவ சிநேகத்தினால் நமக்குள்ள விசுவாசம். இவ்விசுவாசம்தான் நமது இரட்சண்யத்திற்கு ஏதுவாய் இருக்கிறது. தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருப்பவர்களிடம் இந்த வகை விசுவாசம் இருக்கிறது. நாம் சாவான பாவம் கட்டிக் கொள்ளும்போது இதை இழந்து போகிறோம். அதாவது, தேவ சிநேகம் இழக்கப்படும்போதுää உயிருள்ள விசுவாசமும் இழக்கப்படுகிறது.
2. உயிரற்ற விசுவாசம்: பாவிகளிடம் இருப்பது. தேவ சிநேகம் இல்லாமலும் விசுவாசம் ஒருவனிடம் நிலைத்திருப்பது சாத்தியமே. ‘மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையும் உடையவனாயிருந்தாலும், என்னிலே தேவ சிநேகம் இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1கொரி.13:2) தேவ சிநேகம் இல்லாத இந்த விசுவாசம் பயனற்றது.
விசுவாசம் என்பது கடவுள் வெளிப்படுத்தினவைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வது. இந்தப் புண்ணியத்தைக் கொண்டு விசுவாசப் பிரமாணத்தில் உள்ளவற்றை, திருச்சபை போதிப்பவற்றை (தேவரீர் தாமே திருச்சபைக்கு அறிவித்திருக்கிற படியினால்) நாம் உறுதியாக விசுவசிக்கிறோம்.
இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதுவே அவர்களுடைய விசுவாச இழப்புக்குக் காரணமாகவும் இருக்கிறது. உதாரணமாக:
லூத்தர்: விசுவாசம் என்பது தேவ இரக்கத்தில் நம்பிக்கை கொள்வதாகும். (இதை இப்போது கத்தோலிக்கர்களும் ஏற்றுக்கொள்வது வருத்தத்திற்குரியது.)
பகுத்தறிவாளர்கள்: விசுவாசம் என்பது நம் சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளக்கூடிய காரியங்களாகும்.
நவீனர்கள்: விசுவாசம் என்பது கடவுளின் அவசியத்தைப் பற்றிய ஒருவிதமான உள்ளார்ந்த ஏக்கம் ஆகும்.
எனவே விசுவாசம் வேறு, நம்பிக்கை வேறு. சுவிசேஷத்தில் சில சமயங்களில் நமதாண்டவர் கூறும் விசுவாசம் என்பது நாம் விசுவாசத்தோடு செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆகவே, அன்புள்ள வாசகர்களே, நம் விசுவாசப் பிரமாணத்தில் எடுத்துரைக்கப்படும் விதத்திலும், நம் ஞானோபதேசங்களில் விளக்கப்படுகிறபடியும், நாம் நம் விசுவாசத்தைக் கற்றுக்கொள்வோமாக. ஏனெனில், பரிசுத்த வேதாகமம் சொல்வது போல, விசுவாசம் இல்லாமல் கடவுளைப் பிரியப்படுத்த நம்மால் இயலாது. எனவே இந்த விசுவாச ஆண்டில் மெய்யான விசுவாசம் நம்மிலும் மற்றவர்களிடத்திலும் வளர தேவ தாயை மன்றாடுவோமாக.

Benedicamus Domino
சங். திரேஷியன் பாபு
அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை
Reference: Summa Theologica, IIa, IIae, q, 1-9
Garriogou Lagarrange OP, De Fide, edition Paris, 1948
Tanquerey, Synopsis Theologicae, Volume 1, De Objecto Fidei, cap 1. Pg.14-67 (edition Rome)

புதன், 4 செப்டம்பர், 2013

இருவகையான வியாக்கியானங்கள்

இருவகையான வியாக்கியானங்கள்

(சங். திரேஷியன் பாபு – அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை)

வருகிற அக்டோபர் 11-ம் தேதி இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பித்த 50- ஆண்டு விழாவை பகிரங்கமாக கொண்டாட வத்திக்கானில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொன் விழா நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் இந்த ஆண்டை “விசுவாச ஆண்டாக” பாப்பரசர் அறிவித்துள்ளார். ஆனால் இச்சங்கம் குறித்தான விவாதங்கள் இன்னும் முடிந்தபாடில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! விவாதங்கள் என்றவுடனே பாரம்பரியத்திற்கும், நவீனத்திற்கும் இடையிலான கருத்து பரிமாற்றம் என்று நினைக்கத் தோன்றும் அல்லது பாரம்பரியத்தை பற்றி நிற்பவர்கள் நவீனர்களின் நவீனத்தை எதிர்த்து நிற்பது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் இங்கே குறிப்பிடப்படுகின்ற விவாதங்கள் நவீன திருச்சபைக்குள்ளே இரண்டு விதமான கருத்துக்களின் ஒன்றோடொன்றான மோதல்களின் வெளிப்பாடுகள் ஆகும். ஆம்! நவீன திருச்சபைக்குள்ளே இரண்டு குழுக்களாகப் பிரிந்து தங்களுடைய வழிமுறையே சரி என்று வாதாடும் வேடிக்கைகள் தான் இங்கே குறிப்பிடப்படுகின்றன. இந்த ‘வார்த்தை வாக்குவாதங்கள் புத்தகமாய், கட்டுரைகளாய், பேட்டிகளாய், இணைய தளங்களாய் வெளிவந்து கொண்டே இருக்கின்றன! தனக்குள் பிரிந்து போன அரசு நிலைத்திருக்க முடியுமா? அது போலத்தான் திருச்சபையின் நவீனமும்!
2-ம் வத்திக்கான் சங்கத்தின் சிறப்பே அதன் முரண்பாடுதான்!! நவீன மனிதனுக்குப் புரியும் மொழியில் பேச போவதாய் இயற்றப்பட்ட ஏடுகள் அவனுக்கு தௌவாய் விளங்கவில்லை. வெளியிடப்பட்ட சங்க ஏடுகளோ குழப்பங்களின் மூட்டை! அவற்றை எப்படி விளக்க வேண்டும் என்பதே இன்றைக்கும் பல ஆய்வுகளின் பொருளாயிருந்து வருகிறது. வத்திக்கானிலிருந்து வரும் செய்திகளில “இரு வகை வியாக்கியான முறை” பற்றிய தலைப்பு அடிக்கடி இடம் பெறுகிறது. அவை என்ன? அவற்றின் சாரம் என்ன? என்பது பற்றி சுருக்கமாகக் காண்போம்.
I. முறிவு வியாக்கியான முறை (Hermenteutic of Rupture)
II. தொடர்ச்சி வியாக்கியான முறை (Hermenteutic of Continuity)


I. முறிவு வியாக்கியான முறை
இது சங்க ஏடுகளை எப்படி விளக்க வேண்டும் என்பதில் கையாளப்படும் முதல் முறை (இம்முறையே பல இடங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.)
இத்தாலியில், போலோஞா நகரில் வாழ்ந்த டான் ஜோசப் டோசெட்டி (Don Giussepe Dosseti) என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் அவருடைய சீடரான Alberigo Gisussepe என்பவரால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வியாக்கியான முறை கொண்டு அவர் எழுதிய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வரலாறு என்ற 5 பாகங்களைக் கொண்ட மிகப் பெரிய படைப்பு, நவீனர்களின் வெற்றிக்கு மிகவும் உதவியாய் இருந்து வருகிறது. இது தன்னிலே புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டது.
2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் இருக்கும் சங்க சபைக்கும், அதற்கு முன்பாக இருந்து வந்த திருச்சபைக்கும் (?)உள்ள உறவு முறிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தான் சங்கத்தை மொழிபெயர்க்க வேண்டும் அல்லது வியாக்கியானம் செய்ய வேண்டும் என்ற முற்போக்கு எண்ணம் கொண்டது.
இவர்களது சித்தாந்தத்தின்படி 2-ம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் நடந்த “ஒரு புதிய பெந்தேகோஸ்து” ஆகும். (பாப்பு 6-ம் சின்னப்பரின் கூற்று). எனவே திருச்சபை இச்சங்கத்திற்கு முற்றிலும் இசைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழையனவைகளைத் தள்ளி, புதியனவைகளை எழுப்பும் நவீன திறன் இது!
இத்தகையோர்களின் (நவீனர்கள்) செய்கைளால் திருச்சபையில் நடந்தேறி முடிந்த விளைவுகளில் சில :
- பாரம்பரியத் திருச்சபையின்படி குருக்கள் வேறு, விசுவாசிகள் வேறு. அவர்களின் அந்தஸ்தும் கடமைகளும் வௌ;வேறானவை. ஆனால், புதிய திருச்சபையிலோ விசுவாசிகள் குருக்களின் பணிகளையும், சாதாரண விசுவாசிகளாக தங்களை மாற்றிக் கொண்ட குருக்களாக எல்லாம் கலந்த அந்தஸ்து உருவாக்கப்பட்டு வருகிறது.
- திவ்விய பலிபூசை நமதாண்டவரின் கல்வாரி பலி என்ற பாரம்பரிய விசுவாசம் மாற்றப்பட்டு, இப்போது நவீனத்தில் திருப்பலி வெறும் பகிர்ந்துகொள்ளும் இறைமக்களின் கூட்டமாய் மாறிப்போனது. குருவானவர் இக்கூட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்துபவராகிப் போனார்!
- பாரம்பரிய திருச்சபை, ஆன்ம இரட்சண்யமே மனிதனின் இலக்கு என்கிறது@ நவீனத்தில் இந்நிலை மாறி ஆன்ம இரட்சண்யம் என்ற கருத்து மறைந்து எங்கும் மனிதம், உலகில் நீதியும், அமைதியும்தான் மனித இலக்காகிவிட்டது!
- பாரம்பரிய திருச்சபை நமதாண்டவர் சேசுக்கிறீஸ்துநாதரை மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் என்று போதிக்கிறது. ஆனால் 2-ம் வத்திக்கான் சங்கத்துக்குப்பின் இருக்கும், “சங்கச்சபையோ” நமதாண்டவர் சமுதாய சீர்திருத்தவாதி, புரட்சி வீரர் என்று புது வடிவம் கொடுத்து வருகிறது இவர்களைப் பொறுத்த மட்டில் திருச்சபையில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் தங்கள் வெற்றியின் அடையாளம். பழையன களையப்படும் (முறிக்கப்படும்) போது ஏற்படும் வலிதான் நாம் இன்று உணர்கிற நெருக்கடி என்றும், இது முடியும் பட்சத்தில் புதிய திருச்சபை எவ்வித பழையனவைகள் இல்லாமல் காட்சியளிக்கும் (முற்றிலும் புதிய நவீன திருச்சபை!) என்பதே இவர்களுடைய கருத்து (கர்தினால் மர்தினியின் கருத்து – மிலான் முந்தைய அதிமேற்றிராசன அதிமேற்றிராணியார்). மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை, அதை திருச்சபையிலும் காண வேண்டும் என்கின்றனர் இத்தகையோர். ஆனால் மாறாத சத்தியங்களை – திருச்சபையை எப்படி மாற்ற முடியும்?! சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்கள் மாற்றி அமைத்ததன் விளைவுகளே இன்று நாம் காணும் சீர்கேடுகள்.
II. தொடர்ச்சி வியாக்கியான முறை
2-ம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்பு இருந்த திருச்சபை போதனைகளுக்கும், அதன் பின் வந்த போதனைகளுக்கும், இடையில் எவ்வித பிளவோ – உடன்பாடின்மையோ இல்லை என்பது இக்கோட்பாடு.
2-ம் வத்திக்கான் சங்கம் – இரண்டாயிரம் ஆண்டு கால திருச்சபையின் ஒருமித்த வளர்ச்சி என்றும், சங்கத்திற்கு முன் இருந்த அதே உண்மைகளை மீண்டும் இக்கால மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நவீனப்படுத்தி, வியாக்கியானம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் இக்குழுவினர். எனவேதான், சங்கத்தினை கலாச்சார விழிப்புணர்வுடன் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், சங்கத்திற்குப் பிறகு வாழும் திருச்சபை புது திருச்சபையல்ல – அது புதுப்பிக்கப்பட்ட ஒன்று என்பது இவர்களது வாதம்.
பாப்பரசர் 2-ம் அருள் சின்னப்பரின் காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த இக்கோட்பாட்டினர், தற்போதைய பாப்புவின் ஆதரவுடன் மீண்டும் தழைத்தோங்க தொடங்கி உள்ளனர். தான் ஆட்சிப் பீடத்தில் ஏறியவுடன் தன்னுடைய கர்தினால்களுக்கு அளித்த உரையில் தன்னுடைய திட்டங்களை வெளிப்படுத்தினார். (cf Discourse of Pope Benedict XVI, Dec22, 2005, www.vatican.va) இது மிகவும் முக்கியமான உரை. தன்னுடைய எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று முன்னரே அறிவித்த முன்னுரை இது!! இவ்வுரையில் வத்திக்கான் சங்கத்திற்கு ஒரேயொரு விளக்கமுறைதான் உண்டு என்றும், அது ‘தொடர்ச்சிமுறை’ தான் என்றும், தெளிவாகக் கூறினார். இவ்வியாக்கியான முறையை நடைமுறைப்படுத்துவதுதான் தன்னுடைய முதற்பணியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது சரிதானா? என்று சற்று சிந்தித்துப் பார்த்தால் – உண்மை புரியும். தவறுகள் புலப்படும். இவ்வழியும் ஆபத்தானது என்பது தெரியும். “சரியான வழியில் சிந்திக்காததால் விளையும் விளைவு நம் விசுவாசத்திற்கு எதிரானது” – இவர்கள் கூறுவது போல் தவறுகளை சத்தியத்தின் தொடர்ச்சி என்று எப்படி கொள்ள முடியும்? இதனை ஒரு எடுத்துக்காட்டினால் விளக்குவோம். இதுவரை சமய ஒன்றிப்பு போக்கினை கண்டித்து வந்த (பாரம்பரிய) திருச்சபையின் போதனைகளும், அவற்றை ஆதரிக்கும் இப்போதை (நவீன) போதனைகளும் சத்தியத்தின் தொடர்ச்சியான மலர்ச்சியா? “கத்.கிறீஸ்தவ வேதம் மட்டும்தான் இரட்சண்யப்பாதை” என்ற பாரம்பரிய விசுவாசக் கொள்கையின் தொடர்ச்சியா – எல்லா மதத்திலும் இரட்சண்யம் உண்டு என்ற புதிய படிப்பினை? இல்லை. இருக்கவே முடியாது.
இவ்வாறு கண்முன் நிகழும் முரண்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பது குற்றம் என்ற சொல்லால் என்னவென்று கூறுவது? “புதுப்பிக்கப்பட்ட திருச்சபை” என்ற விளக்கம் அளிக்கும் இவர்கள், இத்திருச்சபையில் நிலவும் குழப்பத்திற்கு பதில் அளிக்க மறுப்பதேன்? கசப்பான உண்மை என்னவென்றால், திருச்சபையில் நிகழும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் முறையற்ற சுதந்திரவாத நவீன கொள்கையினால் ஊறிப்போயிருக்கும் 2-ம் வத்திக்கான் சங்கமே. சங்கத்திற்குப் பின் நடந்தவைகள் – சங்கத்திற்கு முன் கடைபிடிக்கப்பட்டு வந்தவைகளின் தொடர்ச்சி அல்ல என்பது தான் மறுக்கமுடியாத உண்மை!
முடிவுரை :
நாம் வாழும் இந்நெருக்கடி நிலை, இவ்விரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதின் மூலம் முற்றுப்பெறப்போவதில்லை. மாறாக தவறுகளை – பதிதங்களைக் கண்டித்து உண்மை போதகத்தை மீண்டும் போதிப்பதால் மட்டுமே தான் தீர்வு காண முடியும். தவறாவரம் என்பது ஏதோ சில நிறுவனங்களுக்கோ, குருக்களுக்கோ அளிக்கப்பட்ட கொடையல்ல. ஆனால் கிறீஸ்துநாதரின் பிரதிநிதியான பாப்பரசருக்கு மட்டுமே, தரப்பட்ட தனி வரப்பிரசாதம். அதை அவர் பயன்படுத்தி சத்தியம் என்னும் தீபத்தை பிறர் காணும் வகையில் கலங்கரை விளக்கத்தில் ஏற்றும்போதுதான் தப்பறைகள் என்னும் கடலில் வழி தவறிய ஆன்மாக்கள் மீண்டும் சத்தியமெனும் கரை வந்து சேர முடியும்! அந்நாள் விரைவில் நம் கண்களுக்குப் புலப்படும் என்று விசுவாசம் கொள்வோம்.
இரு வியாக்கியான முறையில் எது சிறந்தது என்ற விவாதமுறையை தள்ளி வைத்து, அழியா கத்தோலிக்க விசுவாசம் எது? அதை மட்டும் விசுவாசிகளுக்கு தரவேண்டும் என்ற முயற்சியில் இவர்கள் இயங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

மங்கள வார்த்தை

மங்கள வார்த்தை

(சுருக்கமான வியாக்கியானம்)
            சர்வேசுரன் அனைத்தையும் சிறப்புற செய்வார் – என்றும் இவை அனைத்தும் நமது படிப்பினைக்காக தரப்பட்டது என்றும் நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அதே போன்றுதான் மங்களவார்த்தை நிகழ்ச்சியின்போதும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு வார்த்தைகளும், சிறப்புற கோர்க்கப்பட்டுள்ளது. அதனை அர்ச். லூக்காஸ் எழுதிய சுவிஷேத்தின் 1-ம் அதிகாரத்திலிருந்து காண்போம்.

இங்கே மூன்று காரியங்கள் அடங்கியுள்ளன.

1. மாதாவின் கவனத்தை தன்னிடம் திருப்ப தேவதூதன் கூறியது.
1.1. வித்தியாசமான முறையில் வாழ்த்தியது  பிரியதத்ததினாலே பூரணமானவளே
1.2. அதன் அர்த்தம்  கடவுள் உம்முடனே
1.3. அதன் விளைவு  ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
2. மனிதாவதார இரகசியத்தை வெளிப்படுத்தியது.

2.1. நடக்கப்போவதை முன்னறிவித்தல்  இதோ, உமது உதிரத்தல் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்…(லூக்.1:31)
2.2. அவர் யார்  அவர் பெரியவராயிருப்பார் … அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது என்றார். (லூக்.1:32,33)

3. இது கடவுளின் செயல் என்பதை நிரூபித்தல்
3.1. எலிசபெத்தின் உதாரணம்  உமக்குப் பந்துவாகிய எலிசபெத்… மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
3.2. உதாரணம் எடுத்துரைக்கும் உண்மை ..ஏனெனில் சர்வேசுரனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.

பதிதங்களை வென்ற அர்ச். சூசையப்பர்

பதிதங்களை வென்ற அர்ச். சூசையப்பர் 


        அமெரிக்காவில் நியூயார்க் நகரப் பகுதியில் வெஸ்ட்மௌண்ட் என்ற ஊரில் ஒரு விசுவாசமுள்ள கிறிஸ்தவ குடும்பம் இருந்தது. ந்த தம்பதினருக்கு  இரண்டு மகன்கள் இருந்தனர். மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் நாளடைவில் விசுவாச தளர்ச்சி ஏற்பட்டது. மனைவியும் முதல் மகனும் புராட்டஸ்டாண்டு  பதித மார்க்கத்தில் சேர்ந்து விசுவாசத்தை மறுதலித்தனர். குடும்ப தலைவனோ பெந்தேகோஸ் சபையில் சேர்ந்தான். ஆனால் இளைய மகன் மட்டும் தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்து தனது குடும்பம் மீண்டும் மனம் திரும்பி கத்தோலிக்க விசுவாசத்திற்கு வர வேண்டும் என்று அர்ச் சூசையப்பரை மன்றாடி வந்தான். 

      ஒரு சமயம் குடும்ப தலைவன் வேலசெய்த இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயம் ஏற்பட்டு  அது நாளடைவில் பெரிதாகி நடக்க முடியாத நிலைக்கு வந்து விட்டான் . மனைவியோ தனது கணவன் குணமாக புராட்டஸ்டாண்டு   போதகர்களை வைத்து செபித்து வந்தால். கணவனோ தான் சார்ந்து இருந்த பெந்தேகோஸ் பதித ஆட்களை செபிக்க அழைத்தான். அவர்கள் செபித்து எந்த மாற்றமும் இல்லை. 

ஆனால்  அவனது இளைய மகனோ தன் குடும்பத்தை பதித மார்க்கத்திலிருந்தும் தன் தந்தை குணம் அடைய வேண்டும் என்றும் அர்ச்  சூசையப்பரை மன்றாடினான். ஆயினும் நோய் முற்றி காலை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்து விட்டனர்.விசுவாசமுள்ள இளைய மகனோ கடைசியாக ஒரு முறை எல்லோரும் சேர்ந்து அர்ச் சூசையப்பர் வழியாக நமதாண்டவரை மன்றடலாம்  அவர்களிடம் கூறி அவர்களை இணங்க வைத்தான்.

அவர்களும் எதோ ஒரு உந்துதலில் அவனுடன் சேர்ந்து விசுவாச நம்பிக்கையோடு சூசையப்பரிடம் நவநாள் செபம் செய்து வந்தனர். ஒரு சில நாட்களில் அவரது நோயின் வேகம் குறைந்து, அந்த புண் குணமாகி வருவதை கண்டனர். ஒரு மாதத்திற்குள் நன்கு குணமாகி நடமாட முடிகிற அளவுக்கு வந்து விட்டார். 

குடும்பத்தில் எல்லோரும் சத்திய விசுவாசத்தை மறுதலித்தர்காக  மனம் வருந்தி தங்களை பதிததிலிருந்து  காப்பற்றிய தந்தை அர்ச்  சூசையப்பருக்கு நன்றி செலுத்தி உத்தம கத்தோலிக்கர்களாக வாழ்ந்தனர்.

சனி, 6 ஜூலை, 2013

நவீனத்தின் நிறம்

1907-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உரோமையில் பாப்பரசரின் ஆட்சிமன்றம் (Roman Curia) மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. விரைவில் வந்துவிடும் என்று எதிர்பார்த்த “நவீனர்களுக்கு எதிரான சுற்றுமடல்” பற்றிய வதந்தியே அதற்குக் காரணம்! அதில் யார் யார் குறிப்பிடப்படுவார்களோ? அதனால் வரப்போகும் விளைவுகள் எவையோ? என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றனவோ? என்ற கேள்விகளால் ஆட்சி மன்ற தந்தையர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பு தோன்றியது! ஏனெனில் சில மாதங்களுக்கு முன்புதான், அதாவது 1907, ஜுலை 3-ம் தேதி “Lamentabili Sane Exitu” வெளிவந்த – தப்பறைகளின் தொகுப்பு” என்ற பாப்பரசரின் தன்னிச்சை மடலின் சாரம் அப்படிப்பட்டது. ஆம்! அதில் திருச்சபையில் தவறாகப் போதிக்கப்பட்டு வந்த தப்பறைகள் கண்டிக்கப்பட்டிருந்தன. (அம்மடலில் 64 கண்டிக்கப்பட்ட போதனைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. 1-24 வரை வேதாகமத்தைக் குறித்தவை: 25-26 விசுவாசத்தின் தன்மை குறித்தவை: 27-38 நமதாண்டவர் சம்பந்தமானவை: 39-52 தேவதிரவிய அநுமானத்தைக் குறித்தவை: 52-64 வரையிலான போதனைகள் திருச்சபையின் செயல்பாடு மற்றும் அமைப்புக் குறித்தவை.
இந்த தன்னிச்சை மடலின் தாக்கம் பெரியதாக இருந்தது. அதன் விளக்கவுரையான பாப்புவின் சுற்றுமடல் வரவிருக்கிறது என்ற எண்ணமே நவீனர்களை கலக்கியது. ஏனெனில் அப்போதைய பாப்பரசரின் குணம் அப்படிப்பட்டது! நவீனத்திற்கு எதிரான தீர்க்கமான எண்ணம் கொண்டவர். அதே சமயம் அர்ச்சிஷ்டவர் என்ற மனப்பான்மை திருச்சபையின் அதிகாரிகளின் மத்தியில் நிலவி வந்திருந்தது. யார் அந்த பாப்பானவர்? அவரே அர்ச். பத்தாம் பத்திநாதர்! “நவீனத்திற்கு சம்மட்டி” என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட அவர் தாம் அறிவித்தது போலவே 1907, செப்டம்பர் 8-ம் நாளன்று “Pascendi Dominic Gregis” என்ற சுற்றுமடலை வெளியிட்டார். உரோமை பாப்புவின் ஆட்சிமன்றத்தினரின் எதிர்ப்பார்ப்பைப் போலவே அது நவீனர்களுக்கு பேரிடியாக வந்து இறங்கியது! திருச்சபையின் அன்பர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக விளங்கியது!
பாப்பரசர் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க அந்த சுற்றுமடல் அக்காலக்கட்டத்தில் மிக நீளமானதாகக் கருதப்பட்டது. (2-ம் அருள் சின்னப்பரின் குருத்துவத்தைப் பற்றிய Pastores Dabo Vobis – இதனைவிட இரண்டரை மடங்கு நீளமானதாகவும், நெடுந்தொடர்களைக் கொண்டதாகவும் உள்ளது. ஆர்.)
பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் எதிரிகளின் கைகளிலிருந்து திருச்சபையைக் காப்பாற்ற இந்த சுற்று மடலை எழுதினார். இதனை எழுத அவருக்கு கர்தினால் Billot. அதிமேற்றிராணியார் Umberto Benigni மற்றும் சங். Lemius என்ற தலைசிறந்த வேத அறிஞர்கள் உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இம்மடல் திருச்சபையை அழிப்பதற்காக உருவான “நவீனம்” என்ற தப்பறையை எதிர்த்துப் போராடவும், விசுவாசிகளுக்கு அதன் உண்மையான நிறத்தை உரித்துக்காட்ட வேண்டும் என்ற நோக்குடன் இயற்றப்பட்ட இவ்வருமையான ‘இலக்கியம்’ உண்மையில் ஒரு இமாலய சாதனையாகும். எங்கும் பரந்து வியாபித்துக் கிடந்த நவீனர்களின் கருத்துச் சிதறல்களை ஒன்றுக்கூட்டி, அதன் கொடூரத்தை இனம் காட்டிய இப்பெரும் முயற்சியினைக் கண்டு வியந்தவர்களில் நவீனர்களும் உண்டு. தங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைக்கும் இந்த நிருபத்தை இவர்கள் வெறுத்தாலும்… தங்களது (நவீனர்களின்) குற்றங்களை வெகு நேர்த்தியாய் கண்டுபிடித்த பாப்பரசரின் சாதுரியத்தைக் கண்டு வியந்தனர்!

சுற்றுமடலின் நேர்த்தி
பாப்பரசர் அர்ச். 10-ம் பத்திநாதருடைய இந்த மடலின் அழகை, அதன் நேர்த்தியை, நவீனத்தை அது சாடி தோலுரிக்கும் சாமர்த்தியத்தை சில எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் காண்போம்.
பாப்பரசர் தன்னுடைய மேய்ப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்ட நமதாண்டவரின் ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய விசேஷக் கடமையால், அவற்றின் (எதிரிகளின்) தந்திரங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார். இத்தகையோர்களைப் பற்றிக் கூறும் போது, “..தங்களை திருச்சபையின் சீர்திருத்தவாதிகள் என்று எவ்விதமான தன்னடக்கமுமின்றி பறைசாற்றுபவர்கள் உண்மையிலே திருச்சபையின் அழிவுக்கு வழிவகுப்பவர்களே..” என்று சாடுகிறார். நவீனத்தை, “இது புதுவித தப்பறை – நவீனர்களின் இயக்கம்” என்றெல்லாம் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறார்.
நவீனம் மற்ற தப்பறைகளைப் போலன்று: மற்ற தப்பறைகள் வாசித்ததும் கண்களுக்குப் புலப்படக்கூடியவை. ஆனால் நவீனம் அப்படியல்ல… முதல் பார்வைக்கு கத்தோலிக்க நிறம் காட்டி, அதையே கூர்ந்து ஆய்வு செய்தால் மற்றொரு நிறம் (பொருள் தரும்) காட்டும் வித்தியாசமான தன்மை கொண்டது. அதனுடைய நச்சுத்தன்மையைக் குறித்து பாப்பரசர்: “…இதைவிட திறமையான முறையை யாரும் கையாள முடியாது. இவர்களை விட தந்திரசாலிகள் யாரும் இருக்க முடியாது, ஆயிரக்கணக்கான தந்திர வேலைகளைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். ஏனெனில் ஒரே சமயத்தில் இவர்கள் கத்தோலிக்கர்களாகவும், பகுத்தறிவாளர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள். இப்படித்தான் சற்று கவனமில்லாத ஆன்மாக்களை தப்பறைக்கு இழுத்துச் செல்கிறார்கள்…” (எண்.3) என்று குறிப்பிட்டு நவீனர்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறார்.
நவீனம் ஒரு புதுவித தப்பறை
பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் தமது மடலில் நவீனத்தை இதுவரை இல்லாத புதுவித தப்பறை (New Heresy) என்று அழைக்கிறார். அதன் செயல்பாட்டை விளக்க இரண்டு ஒப்புவமைகளை (Analogies) தருகிறார். இவைகளின் மூலம் நவீனர்களின் தந்திரமான செயல்பாட்டை விவரிக்கிறார்.
முதல் ஒப்புவமை – பாதாள சாக்கடை :
அது நம் கண்களுக்குப் புலப்படாது. பூமிக்கு அடியிலே சென்று கொண்டிருக்கும். அதன் போக்கு, அதன் தரம் சாதாரண மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவை, அதில் இறங்கி வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியதாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல், அது மற்ற எல்லா கழிவு நீரும் வந்து கலக்கும் இடமாகவும் இருக்கிறது. அதுபோல நவீனம் எல்லா தப்பறைகளையும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. இதற்காகத்தான் அர்ச். பாப்பானவர் அதனை (நவீனத்தை) “எல்லா தப்பறைகளின் தொகுப்பு” (Synthesis of all heresies) என்று அழைக்கிறார்.


புதன், 3 ஜூலை, 2013

வியாகுலப் பிரசங்கங்கள்

(வாசகர்களே! தபசுகாலம்… அதிலும் அதன் பரிசுத்த வாரம் என்றாலே தமிழக கத்தோலிக்கர்களாகிய நமக்கு நினைவுக்கு வருவது “வியாகுலப் பிரசங்கங்களே”கத்தோலிக்க மக்கள் பக்தியார்வத்தோடு ஆலயங்களிலும், அதன் முற்றங்களிலும், தெரு சந்திப்புகளிலும் ஒருவர் உருக்கமாக வாசிக்க மற்றவர்கள் அதை கேட்டு நமதாண்டவரின் கொடிய பாடுகளில் ஒன்றித்து, கண்ணீர் சொரிந்த காட்சிகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்;. 2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு திருச்சபையில் காணாமல் போய்விட்ட அல்லது கைவிடப்பட்ட அநேகப் பொக்கிஷங்களில் வியாகுலப் பிரசங்கங்களும் ஒன்று! அண்மையில் அதனைப் பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம் – ஆ.ர்.)

ஜெரோம் கொன்சாலஸ் சுவாமியார் 1676-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவாவில் பிறந்தார். அவருடைய குடும்பம் இரண்டு அல்லது மூன்று தலைமுறையாகக் கத்தோலிக்கர்களாய் இருந்ததால் நல்லதோர் கத்தோலிக்க சூழ்நிலையில் வளர்ந்தார். வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் சிறுவயதிலே இசை ஞானமும், பாடற் திறனும் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரியில் பயிலும்போது அக்கல்லூரியின் பாடகர் குழுவில் ஆர்கனிஸ்ட்டாக (ழுசபயnளைவ)இருந்தார். அங்கு தன்னுடைய திறமையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். அச்சமயம் அவர் தற்செயலாய் வாசித்த ஒரு கத்தோலிக்க இதழில், இலங்கையில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க செயல்பாடுகளைப் பற்றி அறிந்தார். பின்னர் அச்செயலுக்காக தன்னையும் அர்ப்பணிக்க எண்ணி குருமடத்தில் சேர்ந்தார். 1700-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ம் நாள் குருப்பட்டம் பெற்றார். ஆனால் இவருடைய பாதை சுமுகமாய் இல்லை. பெற்றோருடைய எதிர்ப்பை மீறி சர்வேசுரனுடைய பணிக்கு தன்னை பலியாக்கினார். பின்னர் சில ஆண்டுகள் மடத்திலே தங்கி மேற்படிப்பை மேற்கொண்டார். மெய்யியலில் இவருடைய திறனையும், ஆர்வத்தையும் கண்டு இவரை அம்மடத்திலே பேராசிரியராய் நியமித்தனர்.
ஒருநாள் குருமடத்திற்கு ஒரு சிறப்பு விருந்தினர் இலங்கையிலிருந்து வருகை தந்தார். அவரே பின்னாளில் முத்திப்பேறு பட்டம் பெற்ற சங். ஜோசப் வாஸ் என்ற குருவானவர். அவர் ஆற்றிய உரையினால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவர் நம் ஜெரோம் கொன்சலஸ் சுவாமியார்.
பின்னர் சில மாதங்களில் இவர் இலங்கைக்கு பயணமானார். கரையேறியதும் அவர் உடனே அந்நாட்டு மொழியை கற்கத் தொடங்கினார். முதலில் தமிழும், பின்னர் சிங்களமும் வெகு விரைவில் கற்றுக்கொண்டார். கண்டி மாகாணத்திற்கு பொறுப்பாயிருந்த அவர், பல வகையில் கத்தோலிக்க மதம் பரவ காரணமாயிருந்தார். தன்னுடைய ஜெபத்தினாலும், தவத்தினாலும், பலருடைய மதமாற்றத்திற்கு காரணமாயிருந்தார். பதிதர்களுடனான வாக்குவாதத்தில் கத்தோலிக்க சத்தியத்தை தெளிவாகக் காண்பித்த அவர், பலருடைய மனதை வென்றார். மிகப்பெரிய மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்மேல் சுமத்தபட்டிருந்தாலும் அதனை மிக நேர்த்தியாக செய்தார்.
இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும் பல நூல்களை அவர் இயற்ற தவறவில்லை. சிங்கள மொழியில் 22 புத்தகங்களையும், தமிழில் 15 புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டார். அவைகள் வேதசாஸ்திரம், தேவ அன்னை, தேவ நற்கருணை, திருச்சபை கட்டளைகள் என பல்வேறு தலைப்புகளோடு பிரசுரமாயின. இவை அனைத்திலும் தலைசிறந்ததாய் புகழப்படுவது வியாகுல பிரசங்கங்கள். தன்னுடைய விசுவாசிகளுக்கு மட்டும் எழுதிய இப்படைப்பின் புகழ் தமிழ் உலகம் முழுவதும் பரவியது. அவருடைய நண்பர்கள் உதவியாய் 300 கையெழுத்து பிரதிகள் தயாரிக்கப்பட்டன. பின்பு 1844-ம் ஆண்டு கொழும்பில் மீண்டும் இப்புத்தகங்கள் அச்சிடப்பட்டது. பின்னர் 1871-ல் சென்னையிலும் அதற்குப்பின் யாழ்பாணத்திலும் பலமுறை அச்சிடப்பட்டது.
வியாகுல பிரசங்கங்கள் அமைப்பு:
தான் குருமாணவராக இருந்த காலத்தில் பெரிய வாரத்தில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பாடப்படும் “வுநநெடிசயந” இவரை மிகவும் ஈர்த்தது. இன்றும் இத்தகைய பாடல்கள் பாரம்பரிய குருமடங்களில் பாடப்பட்டு வருகிறது. குருக்களின் கட்டளை ஜெபத்தில் முதல் இரண்டு பாகங்களான ‘ஆயவiளெ ரூ டுயரனநள’ என்னும் ஜெபங்கள் பரிசுத்த வாரத்தில் அதற்குரிய சிறப்பு இராகத்துடன் பாடும்போது கேட்போர் இதயங்களை உருக்கிவிடும்.
பின்னர் தன்னுடைய பங்கில் லத்தீன் வாசிக்கத் தெரியாத மக்களுக்காக இவர் அந்த பாணியில் இயற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயற்றப்பட்டதே “வியாகுலப் பிரசங்கங்கள்”. இதில் கீழ்க்கண்ட 9 பிரசங்கங்கள் அடங்கும் :
1. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து அவதிப்பட்டது.
2. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் கைது செய்யப்பட்டது.
3. சேசுநாதர் கல்தூணில் கட்டுண்டு அடிப்பட்டது.
4. சேசுநாதர் திருசிரசில் முள்முடி சூட்டப்பட்டது.
5. “இதோ மனிதன்!” என்று பிலாத்துவினால் அறிவிக்கப்பட்டது.
6. சேசுநாதர் சிலுவை சுமந்துகொண்டு சென்றது.
7. சேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது.
8. சேசுநாதர் சிலுவையில் மரித்தது.
9. சேசுநாதர் அவரது தாயார்மடியில் வளர்த்தப்பட்டது.
ஒவ்வொரு பிரசங்கத்தைப் பற்றியும் எழுதுவதாயின் பக்கங்கள் போதாது. ஆயினும் இந்த அழகிய பிரசங்கங்களின் சுவையை வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக ஒரேயொரு பிரசங்கத்தை, அதுவும் கடைசிப் பிரசங்கத்தை பற்றி மட்டுமே எழுதுகிறேன். காரணம், மாமரி பட்ட வியாகுலங்களையும் இப்பிரசங்கம் அழகாக விவரிக்கிறது.
9-ம் பிரசங்கம் : சேசுநாதர் அவரது தாயார் மடியில் வளர்த்தப்பட்டது.
இந்தப் பிரசங்கத்தின் தொடக்கப் பகுதியில் சேசுநாதரின் திருவிலா குத்தித் திறக்கப்படுவதும், அதைக் குத்தித் திறந்த போர்வீரனின் குருட்டுத்தன்மைகுணமானதுமாகிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. திறக்கப்பட்ட திருவிலாவிலிருந்து சிந்திய திரு இரத்தம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை விசேஷமாகக் குறிப்பிடுவதில் இந்தப் பிரசங்கத்தின் ஆசிரியர் விசேஷ கவனம் எடுத்துக் கொள்கிறார். இந்தத் திரவத்தின் ஒரு துளி அந்த வீரனைக் குணப்படுத்தப் போதுமானதாயிருந்தது. இந்தக் குணப்படுத்துதல், சேசுநாதரின் திருமரணத்திற்குப் பிறகும் தொடர்ந்த அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடாக அடையாளம் காணப்படுகிறது. இந்த இரக்கம் சரீரமும், ஆத்துமமுமான முழு மனிதனுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இந்தக் குத்தி ஊடுருவப்பட்ட செயலை நன்மைத்தனத்தின் ஆதாரத்தையே திறக்கும் சந்தர்ப்பமாக அவர் காண்கிறார்.
ஆசிரியர் தேவமாதாவின் நெகிழ்ச்சியூட்டுகிற வியாகுலப் புலம்பலை வெளிக் கொணருகிறார். அவர்கள் சர்வேசுரனை நோக்கித் திரும்பி, தனது கைவிடப்பட்ட நிலையையும், முழுமையான தனிமையையும் பற்றி தைரியமாக மனந்திறந்து பேசுகிறார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த திருச்சுதனை அடக்கம் செய்யக்கூட தனக்கு எந்த வழியும் இல்லாதிருக்கும் பரிதாப நிலையை எடுத்துரைக்கிறார்கள்.
அன்பினால் அவர்கள் திருச்சிலுவையிடம் தொடர்ந்து பேசுகிறார்கள். அந்தச் சிலுவைதன்னை நோக்கிக் குனிந்து, தன் ஒளியும், தன் பொக்கிஷமும், தன் உடைமையும், தன் சகலமுமாக இருந்த தன் திருவுதரத்தின் கனியைத் தனக்குத் திருப்பித் தரும்படி கேட்கிறார்கள்.
தன் திருக்குமாரனிடம் பேசுகிற அவர்கள், அவருடைய பிறப்பின்போது, குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்கும்படி குறைந்தது ஒரு சில கந்தைகளாவது தன்னிடம் இருந்த நிலையோடு, இப்பொழுது சிலுவையின் மீது உயிரற்றவராக அவர் இருக்கையில், அவருடைய திருச்சரீரத்தை மூட தன்னிடம் எதுவுமில்லாத தன்னுடைய இயலாத நிர்ப்பாக்கிய நிலையை ஒப்பிட்டுப் பார்த்துப் புலம்பியழுகிறார்கள்.
பரலோகமோ, அல்லது பூலோகமோ, அல்லது பரலோகத்தில் வாசம் செய்யும் யாருமோ தனக்கு ஆறுதல் தரும்படி வர மாட்டார்களா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவர்கள் தொடர்ந்து புலம்பும்போது, சற்று தூரத்திலிருந்து சிலுவையை நோக்கி வருகிற ஒரு கூட்டத்தைக் காண்கிறார்கள். இதைக் கண்டு, ஏற்கெனவே, இறந்துவிட்ட தன் மகனை இன்னும் அதிகமாக வாதிக்கும்படி வருகிற மனிதர்களாக அவர்கள் இருக்கக்கூடுமோ என்ற தேவமாதா வியக்கிறார்கள்.
இந்த இடத்தில், அவர்களோடு இருக்கிற அருளப்பர், அந்தக் கூட்டம் தங்களுக்கு உதவி செய்ய வந்து கொண்டிருப்பதைக் கண்டுகொள்கிறார். அந்தக்கூட்டத்தினிடையே, இரகசியமாக என்றாலும் சேசுநாதரில் விசுவாசம் கொண்டிருந்த சூசையையும், நிக்கோதேமுஸையும் அவர் அடையாளம் காண்கிறார். அவர்கள் சேசுநாதரின் திருச்சரீரத்தைச் சிலுவையில் இருந்து இறக்கி, ஒரு கல்லறையில் அடக்கம் செய்வதற்கு ஆயத்தமாக, ஏணிகள், வாசனைத் திரவியங்கள், அடக்கச் சடங்குகளுக்குரிய துணிகள் ஆகியவை போன்ற பொருட்களோடு வருகிறார்கள்.
அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அவர்கள் வியாகுலமாதாவிடம் அனுமதி கேட்டபோது, அவர்கள் நிம்மதிப்பெருமூச்செறிந்து, தன்னை இரக்கத்தோடு கண்ணோக்கிய சர்வேசுரனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
சூசையும், நிக்கோதேமுஸம் ஏணிகளைப் பயன்படுத்தி திருச்சரீரத்தை இறக்கி, அதை வியாகுல மாமரியின் திருமடிமீது அதை வளர்த்துகிறார்கள். தன் திருக்குமாரனை அனைவரிலும் அதிகப் பிரியத்தோடு நேசித்த மாதாவின் திரு இருதயத்திலிருந்து வெடித்துக் கிளம்புகிற பெரும் வியாகுலமுள்ள கதறலை ஆசிரியர் விவரிக்கிறார். அதன்பின் அவர்கள் அவருடைய ஜீவனற்ற திருச்சரீரத்தை முத்தமிட்டு, அவர் மீது விழுந்து புலம்புகிற விதத்தின் விவரங்களை அவர் தருகிறார். மற்ற காரியங்களுக்கு மத்தியில், சேசுவின் ஜீவிய காலத்தின்போது, அவரால் உதவி பெற்ற எண்ணிலடங்காத மனிதர்களின் நன்மைக்காக பயன்படுத்தப்பட்டு இப்போது உயிரற்றுப் போயிருக்கிற அவருடைய திருக்கரங்களையும், பாதங்களையும், உதடுகளையும் பற்றி அவர்கள் நினைக்கிறார்கள்.
தன் நேச மகனின் மரணத்தால் உண்டான இத்தகைய தாங்க முடியாத நிர்ப்பாக்கியத்தை எதிர்கொள்ளும்படி தான் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி அவர்கள் வியக்கிறார்கள். அதன் பிறகு, திருச்சரீரத்தை அடக்கத்திற்காக சூசையிடமும், நிக்கோதேமுஸிடமும் தான் தர வேண்டிய நேரம் வரும்போது, தன் மகனோடு தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவர்கள் விரும்புவதை ஆசிரியர் காண்கிறார்.
அடக்கத்திற்கான தயாரிப்பை விவரிக்கும்போது, வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி திருச்சரீரம் ஆயத்தம் செய்யப்படுவதையும், புது அடக்கத் துணிகளில் திருச்சரீரம் சுற்றப்படுவதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அந்த அடக்கத் துகிலில் சேசுநாதரின் திருச்சரீரத்தின் பதிவு அழிக்கப்பட முடியாத விதத்தில் அதன்மீது பதிக்கப்பட்ட புதுமையை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். அவர் தொடர்ந்து, இந்தப்பரிசுத்த அடக்கத் துகில் இன்று வரை இத்தாலியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அறிவிக்கிறார்.
அடக்கப் பவனியை விவரிக்கும்போது, சிலுவையில் அறையுண்ட திருச்சரீரத்திலிருந்து அகற்றப்பட்ட ஆணிகள், முண்முடி போன்ற பரிசுத்த பண்டங்களைச் சுமந்து கொண்டிருந்தவர்களை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். பூலோகத்தை சிருஷ்டித்தவராகிய ஆண்டவர், அதே பூலோகத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்ற வார்த்தைகளோடு அவர் இந்த விவரணத்தை முடிக்கிறார். இந்தக் கடைசி தியானத்தில், சேசுநாதரின் மரணத்தினால் ஆகாயவெளியின் வௌ; ;வேறு ஐம்பூதங்கள் அனுபவித்ததும் வெளிப்படுத்தியதுமான பெரும் துயரத்தை கிறீஸ்தவர்களாகிய வாசகர்களுக்கு ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். இப்பொழுது, சேசுநாதரின் அடக்கத்தின்போது ஆசிரியர் சகல கிறீஸ்தவர்களின் கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் துக்கப்படுவதற்கு அவர்களுக்கு முழுமையான காரணம் இருக்கிறது என்று கூறுகிறார். நம்முடைய துக்கம் நம் வாழ்வுகளிலிருந்து பாவத்தின் எல்லாச் சுவடுகளையும் அழித்து விடும் அளவுக்கு நாம் மனஸ்தாபப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
சுருங்கச் சொல்வதனால், இந்த ஒன்பது பிரசங்கங்களும், சேசுநாதரின் கடைசி நாட்களின் காட்சியை மிக உயிரோட்டமாகவும், மிகக் கவனமாக உருவகிக்கப்பட்ட முறையிலும், நமக்குத் தருகின்றன என்று சொல்லலாம். ஆசிரியர் கிழக்கிந்திய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் குடும்ப உறவுகளைப் பிரதிப்பலிக்கிற தம் சொந்த சிந்தனைகளின் அநேக அம்சங்களைத் தம் விருப்பப்படி சுதந்திரமாக எடுத்துப் பயன்படுத்துகிறார். இவற்றில் தரப்படுகிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உயிரோட்டம் தரும் வகையிலான ஓர் எழுத்து நடை அவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரசங்கங்களை ஒருவன் கவனிக்கும்போது, இவற்றில் எழுத்து நடையும், சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்களும் அவனுடைய நினைவில் நீடித்து நிலைத்திருக்கும்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

இரண்டாம் வத்திக்கான் சங்கம் ~ ஓர் ஆய்வு

திருச்சபையில் நெருக்கடி என்றவுடனே நம்மில் சிலர் தங்களது பங்கு அளவிலோ அல்லது மேற்றிராசன அளவிலோ நிகழும் ஒரு கசப்பான நிகழ்வு என்றும், மற்றபடி திருச்சபை நலமாகவும், குணமாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய இந்த விசுவாசமும், நம்பிக்கையும் பாராட்டத்தக்கது என்றாலும், அது உண்மையான – எதார்த்த நிலைக்கு வெகு தொலைவில் இருப்பதாகும். எப்படி மின்சாரம் இன்றி ஒரு நகரமே ஸ்தம்பித்துப் போய்விடுமோ அப்படியே சத்தியங்கள் போதிக்கப்படாததால் திருச்சபை முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சில திருச்சபை அதிகாரிகளின் அறிக்கைகள், நவீன வேதசாஸ்திர அறிஞர்களின் கருத்துக்கள் நம்மை திகைக்க வைக்கின்றன! இத்தகைய கருத்துக்களைக் கொண்ட இவர்கள், உண்மையில் கத்தோலிக்கர்களா? என்ற கேள்வி எழுகிறது. எடுத்துக்காட்டாக. Hans Von Balthasar என்பவர் நவீன திருச்சபையில் வேத அறிஞராக கருதப்பட்டவர், அவர் தனது புத்தகம் ஒன்றில் நரகம் என்பது உண்மையல்ல!! அப்படியே அது இருந்தாலும் அது காலியாகதான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். நரகத்திற்கு செல்லும் வழி விசாலம் என்றும், அதில் செல்பவர்கள் அநேகர் என்றும் நமதாண்டவர் போதித்ததை இவர் மறந்துவிட்டாரா? இல்லை மறுதலித்துவிட்டாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், இவருக்கு கர்தினால் பட்டம் தயாராக இருந்தது. ஆனால் அதை பெற வேண்டிய தினத்திற்கு முந்தின நாள் மரணமடைந்தார்!
இதையெல்லாம் பார்த்து நாம் நமது தாயாம் திருச்சபையின் மீது நம்பிக்கை இழந்துவிட கூடாது. “நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது” (மத்.16:18) என்று நமதாண்டவரே வாக்கு அளித்துள்ளார். எவ்வளவுதான் புயல் விசினாலும் அலைகள் எழுந்தாலும் சேசுநாதர் நம்முடன் இருக்கிறார். அவர் துங்குவது போல் தோன்றுவது நம் விசுவாசத்தை சோதிக்கும் அடையாளமே தவிர நம்மை மறந்து உறங்குகிறார் என்று அர்த்தமில்லை… திருச்சபையில் இப்பொழுது இருக்கும் நெருக்கடிக்கு அடிப்படை கொள்கைகளில் முறையற்ற போக்கு சுதந்திரவாதம், நவீனம் காரணமாய் இருந்தாலும் 2-ம் வத்திக்கான் சங்க போதனைகளும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அவற்றை விளக்கி நிரூபிக்கும் முயற்சியே இந்த ஆய்வு, நமது இந்த முயற்சியானது ‘ஒரு சமுத்திரத்தை சிற்பிக்குள் அடக்கிவிட செய்வதாகும்’ வத்திக்கான் சங்கத்தின் விளைவுகளை ஓரிரு பக்கங்களுக்குள் விளக்க முடியாது எனினும், விசுவாசிகள் இதனைக் கண்டுணர வேண்டும், ஜெபிக்க வேண்டும் என்ற கருத்துடன் இவ்வாய்வு கட்டுரை வெளியிடப்படுகிறது.
முன்னுரை :
திருச்சபையில் குழப்பநிலை நிலவுகிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருச்சபையில் நெருக்கடி இல்லை என்றும், தெளிவுடன் இயங்கி வருவதாய் எண்ணி வாதாடி வந்தனர் திருச்சபை அதிகாரிகள். இது திருச்சபையின் “வசந்தகாலம்” என்றும் “புதிய வசந்தம் பிறந்ததே இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில்தான்” என்றும் நம்பிக்கையுடன் கொண்டாடி வந்தனர்.
“தவறுகள் சத்தியத்தை முந்த முடியுமே தவிர வெல்ல முடியாது” சமீப நிகழ்வுகள் இவர்களது கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து நிகழ்ந்த பூகம்பங்கள் போன்ற சம்பவங்கள், இவர்களின் கனவுக்கோட்டையைத் தகர்த்து வருகின்றன. இவற்றிற்குப் பல காரணங்கள் இருப்பினும், மிக முக்கியமாக, ஆயர்களின் துர்மாதிரிகையான நடவடிக்கைகள், பாப்பரசருக்கும் திருச்சபைக்கும் எதிரான வெளிப்படையான எதிர்ப்புகள், திருச்சபையை விட்டு வெளியேறும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, திருச்சபை அதிகாரிகளை பதற வைத்துள்ளன.
“ஏன் திருச்சபை இப்போது வித்தியாசமாய் தெரிகிறது?” என்று முதன் முதலாய் உணர தொடங்கியுள்ளனர். காரணம் என்னவென்று தேட தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் பலர் 2-ம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மாபெரும் ஆக்கப்பூர்வ செயலை நிகழ்த்தியுள்ளது என்று கருதி வந்தனர். உண்மையில் 2-ம் வத்திக்கான் சங்கம் ஆக்கப்பூர்வமானதா? அது திருச்சபையை செதுக்கியதா? அல்லது சிதைத்ததா? என்பதை இக்கட்டுரையில் காண்போம். இதில் மிகப்பெரிய சிக்கல் நிறைந்த விஷயம் என்னவென்றால், 2-ம் வத்திக்கான் சங்க ஏடுகளை எப்படி விளக்குவது என்பதுதான். ஏனெனில், ஒரு வார்த்தைக்கு பல பொருள்படும்படியாய் இருக்கும் தெளிவின்மையே இதற்கு காரணம். தொடக்கத்திலிருந்தே தெளிவில்லாமல் அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகள் சங்க ஏடுகளில் நிறைந்துள்ளன. இதில் சிறந்த விளக்கம் என்ன என்பதற்கு அதை செயல்படுத்திய நடைமுறைகளே விடையளிக்கின்றன. விசுவாசத்திற்கு புறம்பான கொள்கைகளோடு இவை இயற்றப்பட்டதால்தான், இங்கே குழப்பங்களும் விசுவாச இழப்புகளும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.
தயாரிப்பும் தொடக்கமும்
பொதுச்சங்கம் ஒன்றைக் கூட்ட வேண்டும் என்ற ஆவலை 12ம் பத்திநாதர் பாப்பரசர் கொண்டிருந்தார். பாதியில் நிறுத்தப்பட்ட முதலாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டவும், அவர் காலத்தில் வேகமாய் பரவி வந்த தப்பறைகளைக் கண்டிக்கவும் இது ஓர் நல்ல வாய்ப்பாய் அமையும் என்று அவர் எண்ணினார். ஆனால் அவரது திடீர் மரணம் அவரின் கனவுகளை நனவாக்காமல் செய்துவிட்டது. அவருக்குப்பின் பாப்பரசரான 23-ம் அருளப்பர், தான் பதவியேற்ற 3 மாதங்கள் கழித்து பொதுச்சங்கம் ஒன்றை கூட்டவிரும்புவதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அனைத்து இலாக்காக்களிலும் அதற்கான தயாரிப்பு பணி முழு வீச்சில் நடந்தன. 18 மாதங்களுக்குப் பின் 73 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்படி தயாரிப்பு குழுவின் கடுமையான உழைப்பால் உருவாகிய திட்டங்களில் பல “பழமைவாத வாடையடிப்பதாக” கூறி நவீனர்களால் நிராகரிக்கப்பட்டது.
1962-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் நாளன்று வரிசைக்கு 6 பேராய் சுமார் 2400 சங்க தந்தையர்கள் (ஆயர்கள்) ஆடம்பர பவனியுடன் அர்ச். இராயப்பர் பேராலயத்தினுள் நுழைந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அன்றைய தினத்தின் நிரலுடன், தொடக்க ஜெபங்கள் அடங்கிய சிறிய புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கடைசியாய் கர்தினால்மார்களுடன் வந்த பாப்பரசர், திவ்விய பீடத்தை அடைந்ததும், “Veni Creator Spiritus” என்ற இஸ்பிரீத்துசாந்து பாடலை தொடங்கி வைக்க, கூடியிருந்த அனைவரும் அதை தொடர்ந்து பாடினார்கள். இவ்வாறு திருச்சபை வரலாற்றின் மிகப்பெரிய பொதுச்சங்கம் தொடங்கியது.
திசை திரும்பிய சங்கம்
கடந்த பொதுச்சங்கங்கள் போல் இல்லாமல், 2-ம் வத்திக்கான் சங்கம் ஒருவிதத்தில் தனித்து தோன்றியது. முன்பு நடந்த 20 பொதுச்சங்கங்களுமே உறுதியுடனும் கண்டிப்புடனும் உண்மையான சத்திய போதகத்தை வெளிப்படுத்துவதிலும், தப்பறைகளை கண்டிப்பதிலும் கவனம் செலுத்தின. சத்தியத்தை அறிக்கையிடுவதும், தப்பறையை கண்டிப்பதுமான இவ்விரண்டும் மிக முக்கியமானவை. ஒன்றைவிட்டு மற்றொன்றை நம்மால் செயலாக்க முடியாது. ஒளி வருவதால் இருள் அகலத்தான் செய்யும். ஆனால் 2-ம் வத்திக்கான் சங்கமோ தொடங்கியதிலிருந்தே உண்மையை மட்டுமே போதிப்பதாகவும் – தப்பறைகளை கண்டிப்பதில் – தனக்கு ஆர்வம் இல்லையென்றும் உணர்த்தியது.
தொடக்கத்தில் பல நல்ல கனவுகளுடன் மலர்ந்த சங்கம் மிக விரைவில் தன் சுய நிறத்தைக்காட்டியது. தேவதாய், “வரப்பிரசாதத்தின் மத்தியஸ்தி” என்ற உண்மை விசுவாச சத்தியமாய் பிரகடனப்படுத்தப்படும் என்று பல ஆயர்கள் நம்பியிருந்தார்கள். மேலும், பாப்பரசர் 12-ம் பத்திநாதர் தொடங்கிய சீர்திருத்தத்திற்கு முழுவடிவம் கொடுக்கப்படும் என்றும், தப்பறைகள் பல கண்டிக்கப்படும் என்றும், முக்கியமாய் “சம உடமை கம்யூனிசம்” வெளிப்படையாய் கண்டனம் செய்யப்படும் என்று சிலர் நம்பியிருந்தனர்.
ஆனால் அவர்களின் கனவு பாப்பானவர் 23-ம் அருளப்பரின் தொடக்கவுரையிலே தகர்ந்துபோனது. “இச்சங்கம் கூட்டப்பெற்றதன் நோக்கம் உலகினை கண்டிப்பதற்கல்ல – பாராட்டுவதற்கே!” என்று கூறி தொடங்கி வைத்தார். ஒரு புதிய பாதை!!
இப்புதிய பாதை திடீரென்று அமைக்கப்பட்டதல்ல; வெகு நேர்த்தியாக, சிறப்பாக முன்பே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். தயாரிப்பு குழுவின் திட்டங்களை நிராகரித்த சபை குழுவினர், புதிதாய் ஒரு குழுவினை நியமித்தனர். அக்குழுவில் இடம் பெற்ற வேதசாஸ்திரிகளின் பெயர்கள், சங்க தந்தையர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை எழுப்பியது. ஏனெனில் அவர்கள் அனைவரும் நவீனர்கள்.
ஆம்! ஏற்கனவே திருச்சபையால் கண்டனம் பெற்று போதிக்கவோ, புதிதாய் புத்தகம் எழுதவோ கூடாது என்று நிலைமையில் உள்ள திருச்சபை விரோதிகளின் பெயர்களே அங்கு இடம் பெற்றிருந்தன. அவை தந்தையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. நவீனர்களால் காரல்ஃரான்னரர், ஹென்றி தெ லுபாக் ஆகியோரின் பெயர்கள் சிறப்பு அந்தஸ்துடன் குறிக்கப்பட்டிருந்தது. எங்கே செல்கிறது இச்சங்கம்? என்று வினவினர் திருச்சபை மேல் அக்கறைக் கொண்டிருந்தோர்.
குழப்பங்களுக்கு அங்கீகாரம்
இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் பல தவறுகளையும், குழப்பங்களையும் தரும் வார்த்தைகளையும் ஏராளமான தப்பறைகளையும் கொண்டுள்ளன என்று ஆதாரத்தோடு சுட்டிக்காட்ட முடியும்.
உதாரணமாக, 1962, அக்டோபர் 20ம் நாள் அன்று வழங்கப்பட்ட 4 பக்கங்கள் அடங்கிய மாதிரி நகலில் தரப்பட்ட கருத்துக்கள், முழுவதுமாக மனிதனை நோக்கியதாக, மனிதனுடைய லொகீக நலனுக்காக, மனித சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் ஆய்வு பொருளை தேடுவதாக அமைந்திருந்தது.
ஆத்துமங்களின் ஞான தேவைகளைப் பற்றியல்லாமல் மனிதனுடைய உலகாதாய தேவைகளை எதற்காக ஒரு சங்கம் கூடி விவாதிக்க வேண்டும்?
உலகியல் தத்துவத்தை ஏற்ற திருச்சபை அதிகாரிகள், உலக தலைவர்கள் போல் உலக அமைதிக்காக மட்டுமே இயங்குவது வருத்தத்திற்குரியது. உலக தலைவர்களுக்கு இவ்வுலகத்திற்கு அடுத்தவைகளை தவிர வேறு எதை பற்றியும் கவலையில்லை; ஆனால் திருச்சபைக்கோ நித்தியத்திற்கும் ஆன்மாக்களை தயார் செய்யும் பணி முதன்மையானதல்லவா?
இதே போன்று வேறு அநேக குழப்பங்களும் அங்கே ஆடம்பர அங்கீகார பீடம் ஏறியது:
20-ம் நூற்றாண்டில் திருச்சபையை பாதித்துவரும் தப்பறைகளை குறிப்பாக, நாஸ்தீக கம்யூனிசத்தை கண்டியாமல் போனது. அதற்கும் மேலாக வந். வில்லி பிரான் ஆண்டகை பாரீஸ் நகரிலும் மாஸ்கோ நகரிலும் செய்த இராஸந்திர முயற்சியினால் கம்யூனிச ரஷ்யாவின் பிடியில் இருக்கிற பிரிவினைவாத ரஷ்யன் ஆர்தடாக்ஸ் மதத்து பார்வையாளர்கள் சங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர். “The Times” பத்திரிகையின் உரோம் நகர செய்தியாளர் Peter Nichols – ன் கூற்றுப்படி, வந். Willebrand தனது மாஸ்கோ பயணத்தின் போது, (Sep 27, – Oct 02, 1962) “சங்கம் ஒருபோதும் கம்யூனிச எதிர்ப்பு சுவாசத்தை அனுமதியாது” என்ற உத்தரவாதத்தை அளித்திருந்தார்!!
கம்யூனிசம் ஏன் கண்டனம் செய்யப்பட வேண்டும் என்று, 10 காரணங்களையும் அது கண்டிக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டால் அது இதுவரைக்கு அதைப் பற்றி சொல்லப்பட்டவைகளை மறுதலிப்பதற்கு சமானம் என்று கூறி சர்வதேச தந்தையரின் கூட்டமைப்பு (Internationalis Patru) 450 சங்க தந்தையர்களின் கையொப்பத்துடன் சமர்ப்பித்த விண்ணப்பம், உரிய காலத்திற்குள் கமிஷனரிடம் வந்து சேரவில்லை என்ற காரணத்தை காட்டி நிராகரிக்கப்பட்டதாக கர்தினால் திஸ்ஸரன் கூறினார். ஆனால், இவ்விண்ணப்பம் சரியான காலத்தில் சமர்ப்பிக்கப் பட்டதை, வந். லெஃபவர் ஆண்டகையும், வந். சீகோ ஆண்டகையும் அதை தாங்களே நேரடியாக அக்டோபர் 9, 1965, மதியம் சமர்ப்பித்ததாக உறுதிபடுத்தியதை தொடர்ந்து, தூலிஸ் நகர அதிமேற்றிராணியார் காரோன், இவ்விண்ணப்பம் வந்து சேர்ந்ததாகவும், தவறுதலாக அது உறுப்பினர்களிடம் வழங்கப்படாமல் விடப்பட்டதாக கூறி மன்னிப்பு கோரினார்.
6000 பக்கங்களை கொண்ட சங்க ஏடுகளில் “நரகம்” என்ற பதம் ஒருதடவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டது! (Lument Gentium No.48)
மேலும், திருவழிபாடு சம்பந்தமான ஏட்டில், பூசையை பற்றி குறிப்பிடும் போது, பொருண்மை மாற்றம் (Transubstantiation) என்ற முக்கியமான வார்த்தையைக் குறிப்பிடவில்லை!
சர்வேசுரனுடைய திருச்சபையின் இயல்பைப் பற்றி கூறுகையில், “Subsistit in” என்ற புதிய வினைச்சொல் பயன்படுத்தப்பட்டு இதுவரைக்கும் வந்தது. அதாவது, “இவ்வுலகில் ஒரு சமூகமாக நிறுப்பெற்றதும் ஒழுங்குமுறையில் அமைந்ததுமான இந்த திருச்சபை…. கத்தோலிக்க மறையில்தான் உள்ளது.”
1964, ஜுலையில் சங்க தந்தையர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நகலில், முன்பு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த “est” என்ற வினைச்சொல்லை அகற்றி, “Subsistit in” என்ற மாற்றம் கொண்டிருந்தது.
இப்படியாக பாரம்பரிய போதனையை விட்டுவிலகி சங்கம், திருச்சபையை உருவமற்ற மேகங்களை போல காண்பித்து, இதில் மேகத்தின் அடர்த்தியான உட்பகுதி கத்.திருச்சபை போலவும், வெளிபகுதியில் உள்ள மேகங்கள் மற்ற அங்காங்கே இருக்கும் தல சபைகள், கிறீஸ்தவ சமூகங்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறது. 12-ம் பத்திநாதர் எழுதிய “Mystici Corporis” “Humani Generis” போன்ற சுற்றுமடல்கள், கிறீஸ்துநாதரின் சபை கத்தோலிக்க திருச்சபைதான் என்று தெளிவாகவே அறிவித்திருந்தனவே!
இப்படி ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு விசுவாச கொள்கைகளும் மறுதலிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆட்டு மந்தைகளின் கூட்டத்தில் ஓநாய்களை சேர்த்தன் விளைவு அதுவல்லவோ!! இதனாலேயே தான் பாப்பு 6-ம் சின்னப்பர், “திறந்த ஜன்னல் வழியே சாத்தான் நுழைந்து கொண்டான்” என்று வருத்தத்துடன் பின்னர் குறிப்பிட்டார். சாத்தானை நுழையவிட்டது யார்? அவனுடைய தத்துவங்களை அரங்கேற்றியது யார்?
திருச்சபையைக் காக்க கடைசி போராட்டம்
பேரழிவு ஏற்படுத்திய வெள்ளத்தில் தெரிந்தோ, தெரியாமலோ பலர் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், அவற்றிலும் விசுவாசத்தில் உறுதியாய் நிலை கொண்டவர்கள் எதிர் நீச்சலுக்கு தயாராகினர். ஆங்காங்கே தங்களது எதிர்ப்பை தெரிவித்த மேற்றிராணிமார்களும், கர்தினால்மார்களும் முதன்முறையாக கூடி விவாதிக்க தொடங்கினர். இப்படி உருவானதுதான் நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள “சர்வதேச தந்தையரின் கூட்டமைப்பு”. (“Coetus Internationalis Patrum)
1963, ஏப்ரல் 13-ம் நாள் மேற்றிராணியார் சிகோ ஆண்டகை, அதிமேற்றிராணியார் லெஃபவர் ஆண்டகையிடம் சங்க நடப்புகளை விவாதிப்பதற்காக ஒரு செயலகம் அமைக்குமாறு ஆலோசனை கூறினார். சில நாட்கள் கழித்து கூடிய முதல் கூட்டத்தில் கர்தினால் ரூஃபினி ஆண்டகை உரையாற்றினார். அக்கூட்டத்திற்கு சில பிரபல முகங்கள் பங்கேற்றிருந்தது. (Dom Nau de Solemnes, Msgr. Castro Mayer)
அதே போன்று நடைபெற்ற இரண்டு கூட்டங்களின் முடிவாக ஒரு ஆய்வுரை (Compendium) வந். சிகோ ஆண்டகை தலைமையில் தயார் ஆனது. அதில் மேற்றிராணிமார்கள் சங்கம் குறித்தான சங்க ஏட்டினில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும், தவறுகளை நிவர்த்தி செய்ய கோரியும் பாப்பு 6-ம் சின்னப்பரிடம் விண்ணப்பித்தது. ஆனால் அவற்றை நிராகரிப்பதாய் பாப்பரசர் பின்னர் தெரிவித்தார்.
முதல் தோல்விகளில் பலர் நம்பிக்கை இழந்தனர். தங்கள் கண் முன்னரே திருச்சபை தவறான பாதையில் செல்கிறதே என்று கண் கலங்கினர்.
எனினும் நம்பிக்கை இழக்காத அதிமேற்றிராணியார் மிக.வந். லெஃபவர் ஆண்டகை மற்றும் சிலர் தொடர்ந்து போராடினர். ஆனால் எதிர்காற்று பலமாக வீசியதால் அவர்களால் நினைத்ததை செயலாற்ற முடியாமல் போனது. எடுத்துக்காட்டாக:
1. கம்யூனிசம் வெளிப்படையாக கண்டனம் செய்யப்பட வேண்டும், என்றும் ரஷ்யா மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஐக்கிய அர்ப்பணமாக ஒப்புக்கொடுக்க இது நல்ல தருணம் என்றும் கோரி சர்வதேச தந்தையர்களைக் கொண்ட குழுவினர் (Coetus) – 510 பேர் ஆதரவாக கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் ஒன்றை தயார் செய்தனர். அக்கடிதம் பாப்பரசரிடம் அளிக்குமாறு அதிமேற்றிராணியார் காரோன் ஆண்டகை அவர்களிடம் தரப்பட்டது. ஆனால் அத்தகைய செயல் எதுவுமே நிகழவில்லை. காரணம் அக்கடிதம் அதிமேற்றிராணியார் அவர்களின் மேசையில் பலநாட்கள் மறதியாய் ஒதுக்கப்பட்டது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் – மாதாவின் வேண்டுகோள் இப்படி அசட்டையாய் புறக்கணிக்கப்பட்டது. பல மேற்றிராணிமார்களை வேதனைப்படுத்தியது.
2. “மாதா சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தி” (Mediatrix gratiae) என்ற உண்மையை விசுவாச சத்தியமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது பற்றிய சங்க குழுவினரின் கோரிக்கை – திருச்சபை நவீன சீர்திருத்தவாதிகளின் வறட்டு வாதங்களுக்குள் அமிழ்ந்து போனது! மாதாவைப் பற்றிய இத்தகைய பிரகடனம் தமது “சமய ஒன்றிப்பு” (எக்குமெனிசம்) முயற்சிக்கு கேடு விளைவிக்கும் என்பது நவீனர்களின் வாதம்! (குறிப்பாக நவீன வேதசாஸ்திரி சங். கார்ல் ரக்னர், சே.ச)
யாரிடம் செல்வோம்?
“ஆண்டவரே, நாங்கள் யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவிய வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறதே” (அரு.6:69) இப்படிப்பட்ட செயல்களால் திருச்சபை இன்று நிலைகுலைந்து காணப்படுகிறது. ஒருகாலத்தில் உலகமெங்கும் சத்திய வேதத்தைப் பரப்பி வந்த திருச்சபை இன்று தன் ஆன்ம இரட்சணிய பாதையை விட்டு அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய கத்தோலிக்கர்கள் திருச்சபையில் இருவேறு போதனைகளை காண்கின்றனர். தவறுகள் சத்தியங்களாகி விட்டன! இதில் எது சரி என்பதை கண்டுபிடிக்க யாரிடம் செல்வோம்?
சத்தியங்களைக் கொண்டுள்ள தாய் திருச்சபையிடம் தான் நாம் அணுக வேண்டும். 2000 ஆண்டுகளாய் வளர்ந்த பாரம்பரிய திருச்சபையே நமது தாய் திருச்சபை! 40 ஆண்டுகால நவீனம் இதை மறுக்க முடியுமே தவிர, மறைக்க முடியாது. அத்திருச்சபையின் போதனையை கடைபிடிப்போம். ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறோம் என்று நெஞ்சார கூற, இதற்கு எதிராக – மாறுதலாக உள்ள எந்த போதனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதி ஏற்போம். புதிய சித்தாந்தத்தை புகுத்த எண்ணிய கலாத்தியரை அர்ச். சின்னப்பர் இவ்வாறு வண்மையாகக் கண்டித்தார். “..உங்களைக் கலங்கப்படுத்திக் கிறீஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிற சிலர் உண்டெயொழிய, வேறே சுவிசேஷம் என்பது இல்லை. ஆகையால், நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லமால், நாங்களாவது பரலோகத்தினின்று வருகிற தேவதூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவான்.” (கலா.1:7-8)
ஏன்? அப்படி புதிய – நவீன சித்தாந்தத்தை ஏற்கும் செயல், விசுவாசத்தையே மறுதலிக்கும் செயலாகும். 1986-ல் அசிசியிலும், 2000 உரோமிலும், தமிழ்நாட்டில் பாளையங்கோட்டையில் 2009ல் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி போன்ற விசுவாச இழப்பை (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) தூண்டும் சமய ஒன்றிப்பு செயல்களில் நாம் பங்கேற்க முடியாது, கூடாது.
எனவே நம் பாரம்பரியத்தைக் காப்பாற்ற – விசுவாசத்தைக் காப்பாற்ற – நம் ஆன்மாவைக் காப்பாற்ற – உண்மையான கத்தோலிக்கத் திருச்சபையில் செல்வோம்.
முடிவுரை :
நேயர்களே!
இக்கட்டுரையின் மூலம் உங்களுக்கு திருச்சபையில் நடக்கும் குழப்பத்திற்கு ஆதிகாரணம் எதுவென்று சிறிதேனும் புலப்பட்டிருக்கும். அவைகள் 2-ம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு நடந்தவைகள் அல்ல. மாறாக வத்திக்கான் சங்கத்தின் மூலமாக நடந்தவைகள். இவற்றை முடிவாக சுருக்கி கூற வேண்டுமானால்,
- கத்தோலிக்க சத்தியங்களை சரியாகப் போதிக்காதது.
- தெளிவில்லா வார்த்தைகளையும், எதிர்மறையான வார்த்தைகளையும் பயன்படுத்தி விசுவாசிகளை குழப்பியது.
- தப்பறை – பதிதத்தை தொடும் சில தவறுகளுக்கு பகிரங்க ஆதரவு.
- தப்பறைகளைக் கண்டிக்காதது.
இவையே 2-ம் வத்திக்கான் சங்கம் சாதித்த சாதனைகள்!
நாம் நம் திருச்சபைக்காக அதிகம் ஜெபிக்க வேண்டும். திருச்சபை மீண்டும் தழைத்தோங்க… சத்தியம் நிலைக்க… பதிதங்கள் அழிய, நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் அரசாட்சி திருச்சபையிலும், சமுதாயத்திலும் மலர நடைமுறைப்படுத்த நாம் ஆசிக்கிறோமா? அப்படியென்றால், அதற்காக ஜெபிப்போம். பரித்தியாகங்கள் பல ஏற்போம். உங்கள் விசுவாசத்தில் உன்றி நில்லுங்கள். எதனாலும் அசைக்க முடியாததாக அது இருக்கட்டும். பாரம்பரிய திருச்சபை ஊன்றி போதித்ததை மட்டும் ஏற்று – புதியதை – நவீனத்தை வெறுத்து தள்ளுவோம். ஒருநாள் சத்திய திருச்சபை மீண்டும் தெளிவுடன், களிப்புடன், வெற்றியுடன் துலங்கும் என்று நம்புவோம். அதனை கொண்டுவர மரியாயின் மாசற்ற இருதய வெற்றியைத் துரிதப்படுத்துவோம்.
திருச்சபையினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விசுவாசம் என்னும் கொடை


விசுவாச ஆண்டு – இந்த நல்லதொரு தருணம் கத்தோலிக்க திருச்சபை முழுவதுமே விசுவாசத்தை தியானிப்பதற்கும், அதனைத் திரும்ப கண்டடைவதற்கும் உகந்ததொரு சந்தர்ப்பமாக இருக்கும்.” – Pope Benedict XVI, Porta Fide §4 (நல்லாயன் பதிப்பகம், சென்னை, 2013 பக்கம். 8)

சர்வ வல்லபரான சர்வேசுரன் பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றிலுள்ள சகல வஸ்துக்களையும் படைத்துக் காத்து ஆண்டு நடத்தி வருகிறார். அவரால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளுள் சம்மனசுக்களுக்குப் பிறகு மனுஷனே மிக்க மேன்மை பெற்ற சிருஷ்டி. இவ்வுலகத்திலுள்ள மற்ற சிருஷ்டிகளெல்லாம் மனுஷனுடைய உபயோகத்திற்காக உண்டாக்கப்பட்டவை. இவையாவும் இவ்வுலகில் தங்களுக்கு சர்வேசுரானல் நியமிக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்தவுடன் உலகத்தோடு அழிந்து போக வேண்டுமென்பது தேவ சித்தம். ஆனால், அனந்த ஞானச் சுரூபியும், அளவில்லாத அன்புள்ளவருமாகிய நல்ல சர்வேசுரன் மனுஷனுக்கு மாத்திரம் புத்தி, மனது என்னும் தத்துவங்களை அளித்து அவனைச் சபாவத்திற்கு மேலான உந்நத அந்தஸ்திற்கு உயர்த்தி அருளினார்.
மனிதன் இவ்வுலகத்தில் தம்மை அறிந்து நேசித்து சேவித்து தம்முடன் மோட்ச பேரின்பப் பாக்கியத்தில் நித்திய காலமும் சந்தோஷமாய் வாழ வேண்டுமென்பதே அவனுக்கு சர்வேசுரனால் குறிக்கப்பட்ட கதி. மனுஷன் இவ்வுலகில் தனக்கு இடப்பட்ட வேலையைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி மேற்கூறிய பரம பாக்கியத்தை அடையும் பொருட்டு சர்வேசுரன் தமது தெய்வீக வரங்களை தாராளமாய் அவனுக்குக் கொடுத்தருளுகிறார். ஆனால் அவன் இந்தத் தேவ உதவியைக் கொண்டு தன் சொந்த முயற்சியினால் இவ்வுந்நத பாக்கியத்திற்குப் பாத்திரவானாக வேண்டுமென்பது நமது பரம பிதாவின் திருச்சித்தம். இதினிமித்தமே மனுஷன் இவ்வுலகில் அறிந்திருக்க வேண்டிய சத்தியங்கள் எவையென்றும், அநுசரிக்க வேண்டிய கடமை இன்னதென்றும் தாமே அவனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
சர்வேசுரன் நமது ஆதித்தாய் தந்தையரோடு நேராகப் பேசினார். அவர்களுக்குப் பின் வந்த பிதாப்பிதாக்களோடும் தேவப் பிரஜைகளாகிய இஸ்ராயேல் ஜனங்களோடும் நேராகவும், சம்மனசுகள், தீர்க்கதரிகள் மூலமாயும் சம்பாஷித்து, அநேக சத்தியங்களை அறிவித்தார். தமது திவ்ய சுதனை இவ்வுலகத்திற்கு அனுப்பி உந்நத வேத சத்தியங்களைப் போதித்தார். தேவ சுதன் மனிதன் விசுவசிக்க வேண்டிய வேத சத்தியங்களைக் கற்பித்து, புதுமைகளினால் உறுதிப்படுத்தி, இவைகளை உலகம் முடியுமட்டும் மனுக்குலம் முழுவதற்கும் போதிக்கும்படி தவறாத வரமுள்ள தமது திருச்சபையை ஸ்தாபித்தார். அவர் மோட்சத்திற்கு ஆரோகணமான பிறகு திவ்விய இஸ்பிரீத்துசாந்துவின் மூலம் அநேக சத்தியங்களைத் தமது அப்போஸ்தலர்களுக்குப் படிப்பித்தருளினார். இப்படியாக உலக சிருஷ்டிப்புமுதல் அப்போஸ்தலர் மரணம் வரையில் சர்வேசுரனால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களின் தொகுதிக்கு விசவாசப் பொக்கிஷம் என்று பெயர். இந்த விசுவாசப் பொக்கிஷம், தேவ நியமகப்படி, நமது இரட்சகரினால் மனுக்குல இரட்சண்யத்திற்கென்று ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் வசம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சபை இந்த வேத சத்தியங்களை யாதொரு தவறின்றி, கலப்பின்றி, சர்வேசுரனால் தன் வசம் அளிக்கப்பட்டவாறே சுத்த சுயமாய்க் காப்பாற்றி, உலகத்திலுள்ள சகல ஜாதி ஜனங்களுக்கும் போதிக்க வேண்டுமென்பது தேவக் கட்டளை. இக்கட்டளையைத் திருச்சபை பிரமாணிக்கமாய் நிறைவேற்றும்படி திவ்விய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அதனோடு எப்போதும் இருக்கிறார். உலகம் முடியுமட்டும் இருப்பார். ஆதலால் நாம் சர்வேசுரனை அறிந்து நேசித்து சேவித்து மோட்சப்பாக்கியம் அடைய வேண்டுமானால் சர்வேசுரனால் வெளிப்படுத்தப்பட்டதும் திருச்சபை சர்வேசுரன் பேரால் போதித்து வருவதுமாகிய சத்தியங்களனைத்தையும் தேவ வரப்பிரசாதத்தின் உதவியால் நாம் விசுவசிக்க வேண்டியது அத்தியாவசியம்.
நாம் ஞானஸ்நானம் பெறும்போது வசுவாசம் என்னும் தெய்வீக நன்கொடையை சர்வேசுரனுடைய அதிமிக இரக்கத்தினால் இலவசமாய்ப் பெற்றுக் கொள்கிறோம். நாம் புத்தி விபரம் அறிந்த பின், ஏவுதலும் ஒத்தாசையும் கொடுக்கிற தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு, சர்வேசுரன் வெளிப்படுத்தி அருளிய சகல வேத சத்தியங்களையும் உண்மையென்று நம்பி பொதுவில் ஏற்றுக் கொள்கிறோம். நமது நம்பிக்கைக்குக் காரணமும் அஸ்திவாரமுமாயிருப்பது சர்வ ஞானமுள்ள சர்வேசுரன் இச்சத்தியங்களையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்னும் நிச்சயமேயொழிய வேறில்லை. சர்வேசுரன் ஏமாந்துப் போகக்கூடியவரல்ல, நம்மை ஏமாற்றக்கூடியவருமல்ல. ஆதலால் அவர் வெளிப்படுத்தியருளிய சகலமும் சத்திய பிரமாணிக்கமாயிருக்க வேண்டுமென்று தேவ உதவியைக் கொண்டு உறுதியான மனதோடு நம்பி, அவர் பெயரால் கத்தோலிக்கத் திருச்சபை போதிக்கும் சத்தியங்கள் யாவையும் யாதொரு அச்சமின்றி சந்தேகமின்றி நாம் ஏற்றுக்கொள்வதே விசுவாசம் என்னும் புண்ணியமாம்.
விசுவாசத்தின் அவசியம்
விசுவாசம், வேதத்தின் அஸ்திவாரம். ஞான ஜீவியத்தின் மூலாதாரம். ஆத்தும இரட்சண்யத்திற்கு இன்றியமையாத சாதனம். விசவாசமின்றி நித்திய பேரின்பப் பாக்கியத்தை அடைய முடியாது. ஏனெனில், மனுஷன் மறுவுலகில் சர்வேசுரனோடு சதாகாலமும் பாக்கியமாய் வாழ வேண்டுமாகில், இவ்வுலகில் அவரை அறிந்து நேசித்து சேவிப்பது அவசியம். ஆனால் சர்வேசுரன் உண்டென்றும், அவருக்கும் மனுஷனுக்குமுள்ள சம்பந்தம் என்னவென்றும், அவர் படிப்பித்தருளிய சத்தியங்கள் இன்னவையென்றும் மனிதன் தெரிந்துகொள்ளாவிடில், அவரை எப்படி அறிந்து நேசிக்கக்கூடும்? அவர் கற்பித்திருக்கும் கற்பனைகள் எவையென்றும் மனுஷன் அறிந்து கொள்ளாவிடில், பாவத்தை விலக்கி புண்ணியக் கிரிகைகளைப் புரிந்து, அவருக்கு ஊழியம் செய்வது எங்ஙனம்?
நமது திவ்விய இரட்சகர் போதித்தருளிய போதகங்களும், செய்தருளிய புதுமைகளும், அப்போஸ்தலர் படிப்பித்த படிப்பினைகளும் விசுவாசம் இரட்சண்யத்திற்கு எவ்வளவு அவசியமென தெளிவாய்க் காண்பிக்கின்றன.
1. ‘எனது வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவசிக்கிறவனுக்கு நித்திய ஜீவியமுண்டு. என்னை விசுவசிப்பவர் தாகமடையார். நான் பிதாதவிலும்;, பிதா என்னிலும் இருக்கிறதாக நீங்கள் விசுவசிக்கமாட்டீர்களோ? இல்லாவிட்டால் நான் செய்யும் கிரிகைகளினிமித்தமாகிலும் விசுவசியுங்கள். விசுவாசத்தோடு ஜெபத்தில் எது கேட்டாலும் பெற்றுக் கொள்வீர்கள்” என்று நமது திவ்விய இரட்சகர் போதித்தருளியிருக்கிறார்.
2. செந்தூரியனின் விசவாசத்i;தப் புகழ்ந்து கொண்டார். பன்னிரண்டு வருடம் வியாதியாயிருந்த ஒரு பெண்ணை நோக்கி, ‘உன் விசுவாசம் உன்னைக் குணப்படுத்தினது” என்கிறார்.
3. இதற்கு விரோதமாய், விசுவாசமின்றி இரட்சண்யமில்லையென்று தெளிவாய்க் கூறுகிறார்: ‘உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை எல்லோருக்கும் போதியுங்கள். விசுவசித்து ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சண்யமடைவான்; விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாவான்” என்று தமது அப்போஸ்தலர்களுக்குத் தெரிவித்தார். விசுவாசக்குறையுள்ளவர்களைக் கண்டித்திருக்கிறார்.
4. கடும் புயலுக்குப் பயந்து நடுங்கிய அப்போஸ்தலர்களை நோக்கி ‘ அற்ப விசுவாசமுள்ளவர்களே, ஏன் பயப்படுகிறீர்கள்? ” என்று கடிந்து கொள்கிறார்.
5. ‘தோமாஸ், நீ என்னைக் கண்டதினாலல்லவா விசுவசித்தாய்; காணாதிருந்தும் விசுவசித்தவர்களே பாக்கியவான்கள்” என்கிறார்.
‘விசுவாசமின்றி சர்வேசுரனுக்குப் பிரியப்படுவது கூடாத காரியம். விசுவாசம் மானிட இரட்சண்யத்தின் அஸ்திவாரம். நீதிமான் விசுவாசத்தினால் ஜீவிக்கிறான். மனுஷனுக்கு விசுவாசம் அவசியம். ஏனெனில் விசுவாசமின்றி இரட்சண்யமில்லை. விசுவாசமுள்ளவர்களுக்கு சகலமும் அநுகூலமாயிருக்கும். உனக்கு விசுவாசமிருந்தால் சர்வேசுரனுடைய மகிமையைக் காண்பாய். நமது விசுவாசமே உலகத்தை வெல்லும் ஜெயவிருது” என்று அப்போஸ்தலர்கள் விசுவாசத்தின் மேன்மையையும் அவசியத்தையும் பற்றி தங்கள் நிருபங்களில் எழுதிப் போதித்தார்கள்.
விசுவாசத்தின் குணாதிசயங்கள்
நமது விசுவாசமானது பூரணமானதாயிருக்க வேண்டும். அதாவது, திருச்சபை சர்வேசுரன் பேரால் போதிக்கும் சகல சத்தியங்களையும் விசுவசிக்க நாம் தயாராயிருக்க வேண்டும். இந்த சத்தியங்களில் எதையாவது ஒன்றைப் பற்றி சந்தேகப்பட்டு, அதை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அளவில்லாத சர்வேசுரனையே நம்பாமல் அவரை அவமதிப்பதற்கு சமமாகும்.
1. நமது விசுவாசம் திடமுள்ள விசுவாசமாயிருக்க வேண்டும். அதாவது நாம் மெய்யான திருச்சபையின் பிள்ளைகளென்று யாதொரு அச்சம் கூச்சமின்றி இதர மதத்தினர்முன் காண்பிக்கத் தயாராயிருக்க வேண்டும். நமது வேதக்கடமைகளைப் பகிரங்கமாய் நிறைவேற்றவும், மத ஆச்சாரங்களைப் பயமின்றி அநுசரிக்கவும் கத்தோலிக்க திருச்சபையை வேத விரோதிகள் எதிர்க்கும்போது அதன் முன்னணியில் நின்று போர்புரிந்து அதைக் காக்கவும் மனோதிடனுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
2. நமது விசுவாசம் உயிருள்ள விசுவாசமாயிருக்க வேண்டும். அதாவது நமது நினைவு, வாக்கு, கிரிகை யாவும் விசுவாசத்தினால் ஏவப்பட்டு விசுவாசத்தின் மீது வேரூன்றியவைகளாயிருக்க வேண்டும். உயிருள்ள விசுவாசம் நாம் செய்யும் புண்ணியங்களினால் வெளிப்படும் தேவ சிநேகம், பிறர்சிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், துன்பத்தில் பொறுமை, ஞானக்கடமைகளை நிறைவேற்றுவதில் பிரமாணிக்கம் முதலிய புண்ணியங்ககை; கொண்டிருக்கும் விசுவாசம் உயிருள்ள விசுவாசமாம்.
- ‘என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்ற சொல்லுகிறவர்கள் எல்லோரும் மோட்ச இராச்சியத்திற்குள் பிரவேசிப்பதில்லை. ஆனால் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவனே மோட்ச இராச்சியத்தில் பிரவேசிப்பான்.” (மத். 7:21)
- ‘ஏனெனில் சேசு கிறீஸ்து நாதரிடத்தில் சிநேகத்தினால் கிரியைகளைச் செய்யும் விசுவாசமேயன்றி, விருத்தசேதமும் விருத்த சேதனமில்லாமையும் பிரயோசனப்படாது” (கலா.5:6)
- ‘ நான் தீர்க்கதரிசன வரத்தைக் கொண்டிருந்தாலும், எல்லா இரகசியங்களையும் எல்லாக் கல்விகளையும் அறிந்தவனாயிருந்தாலும் மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையுமுடையவனாயிருந்தாலும் என்னிடத்திலே தேவ சிநேகமில்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1கொரி.13:2)
- ‘என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதிருந்தால், அவனுக்குப் பிரயோசனம் என்ன? விசுவாசம் அவனை இரட்சிக்கக்கூடுமோ? … அப்படிப்போல விசுவாசமும் கிரியைகளைக் கொண்டிராவிட்டால்ää தன்னிலே செத்த விசுவாசமாயிருக்கின்றது.” (யாக.2:14,17)
3. நமது விசுவாசம் நிலைமையுள்ள விசுவாசமாயிருக்க வேண்டும். அதாவது நமது உடலில் உயிருள்ளளவும்ää எப்போதும் எவ்விடத்திலும் துலங்க வேண்டும்.
4. கடைசியாக விசுவாசம் சுபாவத்திற்கு மேற்பட்டதாயிருக்க வேண்டும். அதாவது, சர்வேசுரனையே ஆதியும் அந்தமும்ää நமது ஏக கதியுமாக உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவரை நேசித்து அவர் நிமித்தம் நமது கிரிகைகள் யாவற்றையும் ஒழுங்குப்படுத்த வேண்டும்.
நமது கடமை
விசுவாசமானது சர்வேசுரன் நமக்குத் தயவாய் அளித்திருக்கும் உந்நத நன்கொடை. அவரது அளவற்ற அன்பின் அடையாளம். அவர் நமக்குக் கிருபையாய் அளித்திருக்கும் இவ்வுத்தம திரவியத்தை உலக செல்வ சம்பத்துக்களைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் மதித்துக் காப்பாற்ற வேண்டும். விசுவாசம் மிக்க அவசியம். கிறீஸ்தவர்களின் இருதயத்தில் வேரூன்றியிருக்கும் விசுவாசத்தை பிடுங்கியெறிய வேத விரோதிகள் பற்பல உபாயங்களை உபயோகித்து வருகிறார்கள். பிள்ளைகளின் விசுவாசத்தை அழிக்கும்படி கடவுள் நாமமே உச்சரியாத பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். விஷம் நிறைந்த நாஸ்தீகப் போதனைகளையும், புத்தகம், பத்திரிகை, சினிமா, முதலிய தற்கால சாதனங்கள் மூலமாய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆதலால் விசுவாசிகளாகிய கிறீஸ்;தவர்கள் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் இந்த ஆபத்துக்களினின்று காப்பாற்றிக் கொளள்க் கடமைப்பட்டிருக்கின்றனர்.
நமது இருதயத்தில் பதிந்திருக்கும் விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொள்வது மாத்திரம் போதாது. அதை விருத்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும். விசுவாசமானது தெய்வீக நன்கொடையாயிருப்பதால், அதைக் காப்பாற்றவும் அபிவிருத்தி செய்யவும் ஜெபம் அவசியம். ‘சர்வேசுரா சுவாமி, எனது விசுவாசத்தை காத்து விருத்தி செய்யும்” என்று நமதாண்டவரை நோக்கி நாம் அடிக்கடி இரந்து மன்றாட வேண்டும். குடும்பங்களில் தினந்தோறும் பொது ஜெபம் செய்வதும், ஞானவாசகம் வாசிப்பதும், பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து கடன்பூசை கண்டு, திவ்விய நன்மை உட்கொண்டு, பிரசங்கம் ஞானோபதேசம் கேட்பதும் விசுவாசத்தை தங்கள் குடும்பத்தில் காப்பாற்றவும் விருத்தி செய்யவும் ஏற்ற வழிகள். பெரியோரும் சிறியோருமாகிய கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் தங்களிடத்திலும் பிறரிடத்திலும் திடமும் உறுதியுமுள்ள விசுவாசத்தை அதிகரிக்கச் செய்தருள வேண்டுமென்று தேவ பாலனின் திவ்விய இருதயத்தை நோக்கி மன்றாட வேண்டும். இறுதியாக நம் விசுவாசத்தை தைரியமாக பிரகடனப்படுத்த வேண்டும். இது நம்முடைய கடமையும் கூட. நம்முடைய விசுவாசத்தை நாம் மறுதலிக்கக்கூடாது. ‘மனிதர் முன்பாக என்னை மறுதலிப்பவன் எவனோ, அவனை நானும் பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (மத்.10:33) இதைத்தான் நாம் ஒவ்வொரு வேதசாட்சியின் வாழ்க்கையிலும் வாசிக்கிறோம். எனவே இந்த விசுவாச ஆண்டில் விசேஷமாக நமது நாட்டில் விசுவாசத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த வேதசாட்சிகளிடம் மன்றாடுவோமாக.
 

திங்கள், 17 ஜூன், 2013

திருச்சபை

சேசு நாதர் இராயப்பரை நோக்கி," நீ இராய் இருக்கிறாய், இந்த கல்லின் மேல் என் திருச்சபையை கட்டுவேன். அதை நரகத்தின் வாசல்கள் அண்டாது." (மத்.16 அதி.18ம் வசனம்.)

சேசுநாதர் தாம் பரலோகத்திற்கு ஆரோகணம் ஆகும் முன்பு ஒரு சபையை உண்டாகி அதற்கு தலைவராக இராயப்பரை வைத்தார். மேலும் அவர்களுக்கான பணியையும் அவர்களுக்கு அறிவித்தார்.
நீங்கள் உலகம் எங்கும் பொய் "சர்வ சிருஷ்டிப்புக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவசித்து  நனஸ்தானம் பெறுகிறவன் இரட்சண்யம் அடைவான்.விசுவசியதவனோ குற்றவாளியாக தீர்வை இட படுவான்.(மார்க்.16ம் அதிகாரம்)

"அன்றியும் இராயப்பரை நோக்கி எதை நீ பூலோகத்தில் கட்டுவாயொ அது பரலோகத்திலும் கட்டப்பட்டு இருக்கும். நீ பூலோகத்தில் எதை கட்டு அவிழ்பாயோ அது பரலோகத்திலும் கட்டு அவிழ்க்கப்பட்டு இருக்கும்."(மத்.16 அதி)
இதன் மூலம் சேசுநாதர் அப்போஸ்தலர்களை தமது சபையின் போதகர்களாகவும் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினார். அவர்களுக்கு மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும்  கொடுத்தார்.
நமது திருச்சபையானது பூக்களால் உருவானது அல்ல, மாறாக வேதசாட்சிகளின் இரத்தத்தால் ஆனது. ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் பல உபத்திரவாதனைகளை அனுபவித்தனர். அவர்களுடைய இரத்ததால் கத்தோலிக்க திருச்சபை வளர்ச்சி அடைந்தது. பல தப்பறைகளும் அவ்வபோது வந்து திருச்சபையை தாக்கின. இருப்பினும் ஆண்டவருடைய உதவியால் அவை அனைத்தையும் கிறிஸ்தவர்கள் முறியடித்தனர்

பக்தி முயற்சிகள் 
திருச்சபை பல்வேறு பக்தி முயற்சிகளை கிறிஸ்தவர்களுக்காக கொண்டு வந்தது. நிறைய பக்தி முயற்சிகள் ஆண்டவர் நேரடியாகவும், தேவ மாதா வெளிப்படையாகவும் கேட்டுகொள்ளப்பட்டது.
சேசுவின் திரு இருதய பக்தி 
திவ்விய நற்கருணை பக்தி 
செபமாலை பக்தி 
உத்தரிய பக்தி
முதல் வெள்ளி பக்தி 
முதல் சனி பக்தி.

சனி, 15 ஜூன், 2013

பெரிய குறிப்பிடம்

நீங்கள் பெரிய குறிப்பிடம் பற்றி இந்த முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

விரைவில் scanned  copy will be uploaded here......
you can read Periya Kuripidam book online for free

http://periyakurippidam.blogspot.in/

பெரிய குறிப்பிடம்

திங்கள், 10 ஜூன், 2013

Download Catholic Songs

அர்ச். மார்கரெட் கோர்டன (St. Margaret of Cortona)





       இவர் ஒரு விவசாயின் மகள். இவருக்கு ஏழு வயது நடக்கும் பொது இவர் தனது அன்னையை இழந்தார். அவருடைய தந்தை இரண்டாவது திருமணம் முடித்தார். அவரது சித்தி அவரை ஒரு தொந்தரவு என்று நினைத்தார்.  மார்கரெட்  ஒரு பணக்கார வாலிபனை திருமணம் செய்து கொண்டார். 1274 அவரது கணவர் கொலை செய்ய பட்டு அவரது உடலை ஒரு கல்லறையில் போட்டனர்.

      இந்த சம்பவதிருக்கு பிறகு அவர் தன் தந்தை வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அனால் அவர் தந்தை அவரை வீட்டில் சேர்த்து கொள்ள வில்லை.அவரும் அவரது மகனும் Cortona என்ற இடத்தில இருந்த துறவிகள் மடத்தில் தங்க அனுமதி அளித்தனர்.அவருக்கு பல வேளைகளில் கெட்ட சிந்தனைகளால் அவதிப்பட்டார். ஒரு சமயம் அவர் அந்த பாவத்தை செய்வதற்கு முடிவு செய்து ஒரு வாலிபனை அணுக சென்றார், ஆனால் அவரை ஒரு துறவி அவரை தடுத்து நிறுத்தினார்.



         1286 மார்கரெட் தன்னை போல் உதவி செய்பவர்களை சேர்த்து ஒரு சபையை உருவாக்கினார். பின்னர் அந்த சபையை ஒரு தனி சபையாக அங்கிகரித்து  அதனை Poverelle (Poor Ones ) என்று அழைக்க பட்டனர். அவர்களுடைய உதவியால் ஒரு மருத்துவனையை கோர்டன  என்ற இடத்தில கட்டினார். அவர் திவ்விய நற்கருணை பேரில் மிகுந்த நம்பிக்கை பக்தி வைத்து இருந்தார்.