Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 30 ஜூன், 2013

இரண்டாம் வத்திக்கான் சங்கம் ~ ஓர் ஆய்வு

திருச்சபையில் நெருக்கடி என்றவுடனே நம்மில் சிலர் தங்களது பங்கு அளவிலோ அல்லது மேற்றிராசன அளவிலோ நிகழும் ஒரு கசப்பான நிகழ்வு என்றும், மற்றபடி திருச்சபை நலமாகவும், குணமாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய இந்த விசுவாசமும், நம்பிக்கையும் பாராட்டத்தக்கது என்றாலும், அது உண்மையான – எதார்த்த நிலைக்கு வெகு தொலைவில் இருப்பதாகும். எப்படி மின்சாரம் இன்றி ஒரு நகரமே ஸ்தம்பித்துப் போய்விடுமோ அப்படியே சத்தியங்கள் போதிக்கப்படாததால் திருச்சபை முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சில திருச்சபை அதிகாரிகளின் அறிக்கைகள், நவீன வேதசாஸ்திர அறிஞர்களின் கருத்துக்கள் நம்மை திகைக்க வைக்கின்றன! இத்தகைய கருத்துக்களைக் கொண்ட இவர்கள், உண்மையில் கத்தோலிக்கர்களா? என்ற கேள்வி எழுகிறது. எடுத்துக்காட்டாக. Hans Von Balthasar என்பவர் நவீன திருச்சபையில் வேத அறிஞராக கருதப்பட்டவர், அவர் தனது புத்தகம் ஒன்றில் நரகம் என்பது உண்மையல்ல!! அப்படியே அது இருந்தாலும் அது காலியாகதான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். நரகத்திற்கு செல்லும் வழி விசாலம் என்றும், அதில் செல்பவர்கள் அநேகர் என்றும் நமதாண்டவர் போதித்ததை இவர் மறந்துவிட்டாரா? இல்லை மறுதலித்துவிட்டாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், இவருக்கு கர்தினால் பட்டம் தயாராக இருந்தது. ஆனால் அதை பெற வேண்டிய தினத்திற்கு முந்தின நாள் மரணமடைந்தார்!
இதையெல்லாம் பார்த்து நாம் நமது தாயாம் திருச்சபையின் மீது நம்பிக்கை இழந்துவிட கூடாது. “நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது” (மத்.16:18) என்று நமதாண்டவரே வாக்கு அளித்துள்ளார். எவ்வளவுதான் புயல் விசினாலும் அலைகள் எழுந்தாலும் சேசுநாதர் நம்முடன் இருக்கிறார். அவர் துங்குவது போல் தோன்றுவது நம் விசுவாசத்தை சோதிக்கும் அடையாளமே தவிர நம்மை மறந்து உறங்குகிறார் என்று அர்த்தமில்லை… திருச்சபையில் இப்பொழுது இருக்கும் நெருக்கடிக்கு அடிப்படை கொள்கைகளில் முறையற்ற போக்கு சுதந்திரவாதம், நவீனம் காரணமாய் இருந்தாலும் 2-ம் வத்திக்கான் சங்க போதனைகளும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அவற்றை விளக்கி நிரூபிக்கும் முயற்சியே இந்த ஆய்வு, நமது இந்த முயற்சியானது ‘ஒரு சமுத்திரத்தை சிற்பிக்குள் அடக்கிவிட செய்வதாகும்’ வத்திக்கான் சங்கத்தின் விளைவுகளை ஓரிரு பக்கங்களுக்குள் விளக்க முடியாது எனினும், விசுவாசிகள் இதனைக் கண்டுணர வேண்டும், ஜெபிக்க வேண்டும் என்ற கருத்துடன் இவ்வாய்வு கட்டுரை வெளியிடப்படுகிறது.
முன்னுரை :
திருச்சபையில் குழப்பநிலை நிலவுகிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருச்சபையில் நெருக்கடி இல்லை என்றும், தெளிவுடன் இயங்கி வருவதாய் எண்ணி வாதாடி வந்தனர் திருச்சபை அதிகாரிகள். இது திருச்சபையின் “வசந்தகாலம்” என்றும் “புதிய வசந்தம் பிறந்ததே இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில்தான்” என்றும் நம்பிக்கையுடன் கொண்டாடி வந்தனர்.
“தவறுகள் சத்தியத்தை முந்த முடியுமே தவிர வெல்ல முடியாது” சமீப நிகழ்வுகள் இவர்களது கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்து நிகழ்ந்த பூகம்பங்கள் போன்ற சம்பவங்கள், இவர்களின் கனவுக்கோட்டையைத் தகர்த்து வருகின்றன. இவற்றிற்குப் பல காரணங்கள் இருப்பினும், மிக முக்கியமாக, ஆயர்களின் துர்மாதிரிகையான நடவடிக்கைகள், பாப்பரசருக்கும் திருச்சபைக்கும் எதிரான வெளிப்படையான எதிர்ப்புகள், திருச்சபையை விட்டு வெளியேறும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, திருச்சபை அதிகாரிகளை பதற வைத்துள்ளன.
“ஏன் திருச்சபை இப்போது வித்தியாசமாய் தெரிகிறது?” என்று முதன் முதலாய் உணர தொடங்கியுள்ளனர். காரணம் என்னவென்று தேட தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் பலர் 2-ம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மாபெரும் ஆக்கப்பூர்வ செயலை நிகழ்த்தியுள்ளது என்று கருதி வந்தனர். உண்மையில் 2-ம் வத்திக்கான் சங்கம் ஆக்கப்பூர்வமானதா? அது திருச்சபையை செதுக்கியதா? அல்லது சிதைத்ததா? என்பதை இக்கட்டுரையில் காண்போம். இதில் மிகப்பெரிய சிக்கல் நிறைந்த விஷயம் என்னவென்றால், 2-ம் வத்திக்கான் சங்க ஏடுகளை எப்படி விளக்குவது என்பதுதான். ஏனெனில், ஒரு வார்த்தைக்கு பல பொருள்படும்படியாய் இருக்கும் தெளிவின்மையே இதற்கு காரணம். தொடக்கத்திலிருந்தே தெளிவில்லாமல் அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகள் சங்க ஏடுகளில் நிறைந்துள்ளன. இதில் சிறந்த விளக்கம் என்ன என்பதற்கு அதை செயல்படுத்திய நடைமுறைகளே விடையளிக்கின்றன. விசுவாசத்திற்கு புறம்பான கொள்கைகளோடு இவை இயற்றப்பட்டதால்தான், இங்கே குழப்பங்களும் விசுவாச இழப்புகளும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன.
தயாரிப்பும் தொடக்கமும்
பொதுச்சங்கம் ஒன்றைக் கூட்ட வேண்டும் என்ற ஆவலை 12ம் பத்திநாதர் பாப்பரசர் கொண்டிருந்தார். பாதியில் நிறுத்தப்பட்ட முதலாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டவும், அவர் காலத்தில் வேகமாய் பரவி வந்த தப்பறைகளைக் கண்டிக்கவும் இது ஓர் நல்ல வாய்ப்பாய் அமையும் என்று அவர் எண்ணினார். ஆனால் அவரது திடீர் மரணம் அவரின் கனவுகளை நனவாக்காமல் செய்துவிட்டது. அவருக்குப்பின் பாப்பரசரான 23-ம் அருளப்பர், தான் பதவியேற்ற 3 மாதங்கள் கழித்து பொதுச்சங்கம் ஒன்றை கூட்டவிரும்புவதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அனைத்து இலாக்காக்களிலும் அதற்கான தயாரிப்பு பணி முழு வீச்சில் நடந்தன. 18 மாதங்களுக்குப் பின் 73 திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்படி தயாரிப்பு குழுவின் கடுமையான உழைப்பால் உருவாகிய திட்டங்களில் பல “பழமைவாத வாடையடிப்பதாக” கூறி நவீனர்களால் நிராகரிக்கப்பட்டது.
1962-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் நாளன்று வரிசைக்கு 6 பேராய் சுமார் 2400 சங்க தந்தையர்கள் (ஆயர்கள்) ஆடம்பர பவனியுடன் அர்ச். இராயப்பர் பேராலயத்தினுள் நுழைந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அன்றைய தினத்தின் நிரலுடன், தொடக்க ஜெபங்கள் அடங்கிய சிறிய புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கடைசியாய் கர்தினால்மார்களுடன் வந்த பாப்பரசர், திவ்விய பீடத்தை அடைந்ததும், “Veni Creator Spiritus” என்ற இஸ்பிரீத்துசாந்து பாடலை தொடங்கி வைக்க, கூடியிருந்த அனைவரும் அதை தொடர்ந்து பாடினார்கள். இவ்வாறு திருச்சபை வரலாற்றின் மிகப்பெரிய பொதுச்சங்கம் தொடங்கியது.
திசை திரும்பிய சங்கம்
கடந்த பொதுச்சங்கங்கள் போல் இல்லாமல், 2-ம் வத்திக்கான் சங்கம் ஒருவிதத்தில் தனித்து தோன்றியது. முன்பு நடந்த 20 பொதுச்சங்கங்களுமே உறுதியுடனும் கண்டிப்புடனும் உண்மையான சத்திய போதகத்தை வெளிப்படுத்துவதிலும், தப்பறைகளை கண்டிப்பதிலும் கவனம் செலுத்தின. சத்தியத்தை அறிக்கையிடுவதும், தப்பறையை கண்டிப்பதுமான இவ்விரண்டும் மிக முக்கியமானவை. ஒன்றைவிட்டு மற்றொன்றை நம்மால் செயலாக்க முடியாது. ஒளி வருவதால் இருள் அகலத்தான் செய்யும். ஆனால் 2-ம் வத்திக்கான் சங்கமோ தொடங்கியதிலிருந்தே உண்மையை மட்டுமே போதிப்பதாகவும் – தப்பறைகளை கண்டிப்பதில் – தனக்கு ஆர்வம் இல்லையென்றும் உணர்த்தியது.
தொடக்கத்தில் பல நல்ல கனவுகளுடன் மலர்ந்த சங்கம் மிக விரைவில் தன் சுய நிறத்தைக்காட்டியது. தேவதாய், “வரப்பிரசாதத்தின் மத்தியஸ்தி” என்ற உண்மை விசுவாச சத்தியமாய் பிரகடனப்படுத்தப்படும் என்று பல ஆயர்கள் நம்பியிருந்தார்கள். மேலும், பாப்பரசர் 12-ம் பத்திநாதர் தொடங்கிய சீர்திருத்தத்திற்கு முழுவடிவம் கொடுக்கப்படும் என்றும், தப்பறைகள் பல கண்டிக்கப்படும் என்றும், முக்கியமாய் “சம உடமை கம்யூனிசம்” வெளிப்படையாய் கண்டனம் செய்யப்படும் என்று சிலர் நம்பியிருந்தனர்.
ஆனால் அவர்களின் கனவு பாப்பானவர் 23-ம் அருளப்பரின் தொடக்கவுரையிலே தகர்ந்துபோனது. “இச்சங்கம் கூட்டப்பெற்றதன் நோக்கம் உலகினை கண்டிப்பதற்கல்ல – பாராட்டுவதற்கே!” என்று கூறி தொடங்கி வைத்தார். ஒரு புதிய பாதை!!
இப்புதிய பாதை திடீரென்று அமைக்கப்பட்டதல்ல; வெகு நேர்த்தியாக, சிறப்பாக முன்பே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். தயாரிப்பு குழுவின் திட்டங்களை நிராகரித்த சபை குழுவினர், புதிதாய் ஒரு குழுவினை நியமித்தனர். அக்குழுவில் இடம் பெற்ற வேதசாஸ்திரிகளின் பெயர்கள், சங்க தந்தையர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை எழுப்பியது. ஏனெனில் அவர்கள் அனைவரும் நவீனர்கள்.
ஆம்! ஏற்கனவே திருச்சபையால் கண்டனம் பெற்று போதிக்கவோ, புதிதாய் புத்தகம் எழுதவோ கூடாது என்று நிலைமையில் உள்ள திருச்சபை விரோதிகளின் பெயர்களே அங்கு இடம் பெற்றிருந்தன. அவை தந்தையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. நவீனர்களால் காரல்ஃரான்னரர், ஹென்றி தெ லுபாக் ஆகியோரின் பெயர்கள் சிறப்பு அந்தஸ்துடன் குறிக்கப்பட்டிருந்தது. எங்கே செல்கிறது இச்சங்கம்? என்று வினவினர் திருச்சபை மேல் அக்கறைக் கொண்டிருந்தோர்.
குழப்பங்களுக்கு அங்கீகாரம்
இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் பல தவறுகளையும், குழப்பங்களையும் தரும் வார்த்தைகளையும் ஏராளமான தப்பறைகளையும் கொண்டுள்ளன என்று ஆதாரத்தோடு சுட்டிக்காட்ட முடியும்.
உதாரணமாக, 1962, அக்டோபர் 20ம் நாள் அன்று வழங்கப்பட்ட 4 பக்கங்கள் அடங்கிய மாதிரி நகலில் தரப்பட்ட கருத்துக்கள், முழுவதுமாக மனிதனை நோக்கியதாக, மனிதனுடைய லொகீக நலனுக்காக, மனித சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் ஆய்வு பொருளை தேடுவதாக அமைந்திருந்தது.
ஆத்துமங்களின் ஞான தேவைகளைப் பற்றியல்லாமல் மனிதனுடைய உலகாதாய தேவைகளை எதற்காக ஒரு சங்கம் கூடி விவாதிக்க வேண்டும்?
உலகியல் தத்துவத்தை ஏற்ற திருச்சபை அதிகாரிகள், உலக தலைவர்கள் போல் உலக அமைதிக்காக மட்டுமே இயங்குவது வருத்தத்திற்குரியது. உலக தலைவர்களுக்கு இவ்வுலகத்திற்கு அடுத்தவைகளை தவிர வேறு எதை பற்றியும் கவலையில்லை; ஆனால் திருச்சபைக்கோ நித்தியத்திற்கும் ஆன்மாக்களை தயார் செய்யும் பணி முதன்மையானதல்லவா?
இதே போன்று வேறு அநேக குழப்பங்களும் அங்கே ஆடம்பர அங்கீகார பீடம் ஏறியது:
20-ம் நூற்றாண்டில் திருச்சபையை பாதித்துவரும் தப்பறைகளை குறிப்பாக, நாஸ்தீக கம்யூனிசத்தை கண்டியாமல் போனது. அதற்கும் மேலாக வந். வில்லி பிரான் ஆண்டகை பாரீஸ் நகரிலும் மாஸ்கோ நகரிலும் செய்த இராஸந்திர முயற்சியினால் கம்யூனிச ரஷ்யாவின் பிடியில் இருக்கிற பிரிவினைவாத ரஷ்யன் ஆர்தடாக்ஸ் மதத்து பார்வையாளர்கள் சங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர். “The Times” பத்திரிகையின் உரோம் நகர செய்தியாளர் Peter Nichols – ன் கூற்றுப்படி, வந். Willebrand தனது மாஸ்கோ பயணத்தின் போது, (Sep 27, – Oct 02, 1962) “சங்கம் ஒருபோதும் கம்யூனிச எதிர்ப்பு சுவாசத்தை அனுமதியாது” என்ற உத்தரவாதத்தை அளித்திருந்தார்!!
கம்யூனிசம் ஏன் கண்டனம் செய்யப்பட வேண்டும் என்று, 10 காரணங்களையும் அது கண்டிக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டால் அது இதுவரைக்கு அதைப் பற்றி சொல்லப்பட்டவைகளை மறுதலிப்பதற்கு சமானம் என்று கூறி சர்வதேச தந்தையரின் கூட்டமைப்பு (Internationalis Patru) 450 சங்க தந்தையர்களின் கையொப்பத்துடன் சமர்ப்பித்த விண்ணப்பம், உரிய காலத்திற்குள் கமிஷனரிடம் வந்து சேரவில்லை என்ற காரணத்தை காட்டி நிராகரிக்கப்பட்டதாக கர்தினால் திஸ்ஸரன் கூறினார். ஆனால், இவ்விண்ணப்பம் சரியான காலத்தில் சமர்ப்பிக்கப் பட்டதை, வந். லெஃபவர் ஆண்டகையும், வந். சீகோ ஆண்டகையும் அதை தாங்களே நேரடியாக அக்டோபர் 9, 1965, மதியம் சமர்ப்பித்ததாக உறுதிபடுத்தியதை தொடர்ந்து, தூலிஸ் நகர அதிமேற்றிராணியார் காரோன், இவ்விண்ணப்பம் வந்து சேர்ந்ததாகவும், தவறுதலாக அது உறுப்பினர்களிடம் வழங்கப்படாமல் விடப்பட்டதாக கூறி மன்னிப்பு கோரினார்.
6000 பக்கங்களை கொண்ட சங்க ஏடுகளில் “நரகம்” என்ற பதம் ஒருதடவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டது! (Lument Gentium No.48)
மேலும், திருவழிபாடு சம்பந்தமான ஏட்டில், பூசையை பற்றி குறிப்பிடும் போது, பொருண்மை மாற்றம் (Transubstantiation) என்ற முக்கியமான வார்த்தையைக் குறிப்பிடவில்லை!
சர்வேசுரனுடைய திருச்சபையின் இயல்பைப் பற்றி கூறுகையில், “Subsistit in” என்ற புதிய வினைச்சொல் பயன்படுத்தப்பட்டு இதுவரைக்கும் வந்தது. அதாவது, “இவ்வுலகில் ஒரு சமூகமாக நிறுப்பெற்றதும் ஒழுங்குமுறையில் அமைந்ததுமான இந்த திருச்சபை…. கத்தோலிக்க மறையில்தான் உள்ளது.”
1964, ஜுலையில் சங்க தந்தையர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நகலில், முன்பு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த “est” என்ற வினைச்சொல்லை அகற்றி, “Subsistit in” என்ற மாற்றம் கொண்டிருந்தது.
இப்படியாக பாரம்பரிய போதனையை விட்டுவிலகி சங்கம், திருச்சபையை உருவமற்ற மேகங்களை போல காண்பித்து, இதில் மேகத்தின் அடர்த்தியான உட்பகுதி கத்.திருச்சபை போலவும், வெளிபகுதியில் உள்ள மேகங்கள் மற்ற அங்காங்கே இருக்கும் தல சபைகள், கிறீஸ்தவ சமூகங்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறது. 12-ம் பத்திநாதர் எழுதிய “Mystici Corporis” “Humani Generis” போன்ற சுற்றுமடல்கள், கிறீஸ்துநாதரின் சபை கத்தோலிக்க திருச்சபைதான் என்று தெளிவாகவே அறிவித்திருந்தனவே!
இப்படி ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு விசுவாச கொள்கைகளும் மறுதலிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆட்டு மந்தைகளின் கூட்டத்தில் ஓநாய்களை சேர்த்தன் விளைவு அதுவல்லவோ!! இதனாலேயே தான் பாப்பு 6-ம் சின்னப்பர், “திறந்த ஜன்னல் வழியே சாத்தான் நுழைந்து கொண்டான்” என்று வருத்தத்துடன் பின்னர் குறிப்பிட்டார். சாத்தானை நுழையவிட்டது யார்? அவனுடைய தத்துவங்களை அரங்கேற்றியது யார்?
திருச்சபையைக் காக்க கடைசி போராட்டம்
பேரழிவு ஏற்படுத்திய வெள்ளத்தில் தெரிந்தோ, தெரியாமலோ பலர் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், அவற்றிலும் விசுவாசத்தில் உறுதியாய் நிலை கொண்டவர்கள் எதிர் நீச்சலுக்கு தயாராகினர். ஆங்காங்கே தங்களது எதிர்ப்பை தெரிவித்த மேற்றிராணிமார்களும், கர்தினால்மார்களும் முதன்முறையாக கூடி விவாதிக்க தொடங்கினர். இப்படி உருவானதுதான் நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள “சர்வதேச தந்தையரின் கூட்டமைப்பு”. (“Coetus Internationalis Patrum)
1963, ஏப்ரல் 13-ம் நாள் மேற்றிராணியார் சிகோ ஆண்டகை, அதிமேற்றிராணியார் லெஃபவர் ஆண்டகையிடம் சங்க நடப்புகளை விவாதிப்பதற்காக ஒரு செயலகம் அமைக்குமாறு ஆலோசனை கூறினார். சில நாட்கள் கழித்து கூடிய முதல் கூட்டத்தில் கர்தினால் ரூஃபினி ஆண்டகை உரையாற்றினார். அக்கூட்டத்திற்கு சில பிரபல முகங்கள் பங்கேற்றிருந்தது. (Dom Nau de Solemnes, Msgr. Castro Mayer)
அதே போன்று நடைபெற்ற இரண்டு கூட்டங்களின் முடிவாக ஒரு ஆய்வுரை (Compendium) வந். சிகோ ஆண்டகை தலைமையில் தயார் ஆனது. அதில் மேற்றிராணிமார்கள் சங்கம் குறித்தான சங்க ஏட்டினில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டியும், தவறுகளை நிவர்த்தி செய்ய கோரியும் பாப்பு 6-ம் சின்னப்பரிடம் விண்ணப்பித்தது. ஆனால் அவற்றை நிராகரிப்பதாய் பாப்பரசர் பின்னர் தெரிவித்தார்.
முதல் தோல்விகளில் பலர் நம்பிக்கை இழந்தனர். தங்கள் கண் முன்னரே திருச்சபை தவறான பாதையில் செல்கிறதே என்று கண் கலங்கினர்.
எனினும் நம்பிக்கை இழக்காத அதிமேற்றிராணியார் மிக.வந். லெஃபவர் ஆண்டகை மற்றும் சிலர் தொடர்ந்து போராடினர். ஆனால் எதிர்காற்று பலமாக வீசியதால் அவர்களால் நினைத்ததை செயலாற்ற முடியாமல் போனது. எடுத்துக்காட்டாக:
1. கம்யூனிசம் வெளிப்படையாக கண்டனம் செய்யப்பட வேண்டும், என்றும் ரஷ்யா மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஐக்கிய அர்ப்பணமாக ஒப்புக்கொடுக்க இது நல்ல தருணம் என்றும் கோரி சர்வதேச தந்தையர்களைக் கொண்ட குழுவினர் (Coetus) – 510 பேர் ஆதரவாக கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் ஒன்றை தயார் செய்தனர். அக்கடிதம் பாப்பரசரிடம் அளிக்குமாறு அதிமேற்றிராணியார் காரோன் ஆண்டகை அவர்களிடம் தரப்பட்டது. ஆனால் அத்தகைய செயல் எதுவுமே நிகழவில்லை. காரணம் அக்கடிதம் அதிமேற்றிராணியார் அவர்களின் மேசையில் பலநாட்கள் மறதியாய் ஒதுக்கப்பட்டது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் – மாதாவின் வேண்டுகோள் இப்படி அசட்டையாய் புறக்கணிக்கப்பட்டது. பல மேற்றிராணிமார்களை வேதனைப்படுத்தியது.
2. “மாதா சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தி” (Mediatrix gratiae) என்ற உண்மையை விசுவாச சத்தியமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது பற்றிய சங்க குழுவினரின் கோரிக்கை – திருச்சபை நவீன சீர்திருத்தவாதிகளின் வறட்டு வாதங்களுக்குள் அமிழ்ந்து போனது! மாதாவைப் பற்றிய இத்தகைய பிரகடனம் தமது “சமய ஒன்றிப்பு” (எக்குமெனிசம்) முயற்சிக்கு கேடு விளைவிக்கும் என்பது நவீனர்களின் வாதம்! (குறிப்பாக நவீன வேதசாஸ்திரி சங். கார்ல் ரக்னர், சே.ச)
யாரிடம் செல்வோம்?
“ஆண்டவரே, நாங்கள் யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவிய வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறதே” (அரு.6:69) இப்படிப்பட்ட செயல்களால் திருச்சபை இன்று நிலைகுலைந்து காணப்படுகிறது. ஒருகாலத்தில் உலகமெங்கும் சத்திய வேதத்தைப் பரப்பி வந்த திருச்சபை இன்று தன் ஆன்ம இரட்சணிய பாதையை விட்டு அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய கத்தோலிக்கர்கள் திருச்சபையில் இருவேறு போதனைகளை காண்கின்றனர். தவறுகள் சத்தியங்களாகி விட்டன! இதில் எது சரி என்பதை கண்டுபிடிக்க யாரிடம் செல்வோம்?
சத்தியங்களைக் கொண்டுள்ள தாய் திருச்சபையிடம் தான் நாம் அணுக வேண்டும். 2000 ஆண்டுகளாய் வளர்ந்த பாரம்பரிய திருச்சபையே நமது தாய் திருச்சபை! 40 ஆண்டுகால நவீனம் இதை மறுக்க முடியுமே தவிர, மறைக்க முடியாது. அத்திருச்சபையின் போதனையை கடைபிடிப்போம். ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறோம் என்று நெஞ்சார கூற, இதற்கு எதிராக – மாறுதலாக உள்ள எந்த போதனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதி ஏற்போம். புதிய சித்தாந்தத்தை புகுத்த எண்ணிய கலாத்தியரை அர்ச். சின்னப்பர் இவ்வாறு வண்மையாகக் கண்டித்தார். “..உங்களைக் கலங்கப்படுத்திக் கிறீஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிற சிலர் உண்டெயொழிய, வேறே சுவிசேஷம் என்பது இல்லை. ஆகையால், நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லமால், நாங்களாவது பரலோகத்தினின்று வருகிற தேவதூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவான்.” (கலா.1:7-8)
ஏன்? அப்படி புதிய – நவீன சித்தாந்தத்தை ஏற்கும் செயல், விசுவாசத்தையே மறுதலிக்கும் செயலாகும். 1986-ல் அசிசியிலும், 2000 உரோமிலும், தமிழ்நாட்டில் பாளையங்கோட்டையில் 2009ல் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி போன்ற விசுவாச இழப்பை (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) தூண்டும் சமய ஒன்றிப்பு செயல்களில் நாம் பங்கேற்க முடியாது, கூடாது.
எனவே நம் பாரம்பரியத்தைக் காப்பாற்ற – விசுவாசத்தைக் காப்பாற்ற – நம் ஆன்மாவைக் காப்பாற்ற – உண்மையான கத்தோலிக்கத் திருச்சபையில் செல்வோம்.
முடிவுரை :
நேயர்களே!
இக்கட்டுரையின் மூலம் உங்களுக்கு திருச்சபையில் நடக்கும் குழப்பத்திற்கு ஆதிகாரணம் எதுவென்று சிறிதேனும் புலப்பட்டிருக்கும். அவைகள் 2-ம் வத்திக்கான் சங்கத்திற்கு பிறகு நடந்தவைகள் அல்ல. மாறாக வத்திக்கான் சங்கத்தின் மூலமாக நடந்தவைகள். இவற்றை முடிவாக சுருக்கி கூற வேண்டுமானால்,
- கத்தோலிக்க சத்தியங்களை சரியாகப் போதிக்காதது.
- தெளிவில்லா வார்த்தைகளையும், எதிர்மறையான வார்த்தைகளையும் பயன்படுத்தி விசுவாசிகளை குழப்பியது.
- தப்பறை – பதிதத்தை தொடும் சில தவறுகளுக்கு பகிரங்க ஆதரவு.
- தப்பறைகளைக் கண்டிக்காதது.
இவையே 2-ம் வத்திக்கான் சங்கம் சாதித்த சாதனைகள்!
நாம் நம் திருச்சபைக்காக அதிகம் ஜெபிக்க வேண்டும். திருச்சபை மீண்டும் தழைத்தோங்க… சத்தியம் நிலைக்க… பதிதங்கள் அழிய, நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் அரசாட்சி திருச்சபையிலும், சமுதாயத்திலும் மலர நடைமுறைப்படுத்த நாம் ஆசிக்கிறோமா? அப்படியென்றால், அதற்காக ஜெபிப்போம். பரித்தியாகங்கள் பல ஏற்போம். உங்கள் விசுவாசத்தில் உன்றி நில்லுங்கள். எதனாலும் அசைக்க முடியாததாக அது இருக்கட்டும். பாரம்பரிய திருச்சபை ஊன்றி போதித்ததை மட்டும் ஏற்று – புதியதை – நவீனத்தை வெறுத்து தள்ளுவோம். ஒருநாள் சத்திய திருச்சபை மீண்டும் தெளிவுடன், களிப்புடன், வெற்றியுடன் துலங்கும் என்று நம்புவோம். அதனை கொண்டுவர மரியாயின் மாசற்ற இருதய வெற்றியைத் துரிதப்படுத்துவோம்.
திருச்சபையினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக