Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 17 ஜனவரி, 2024

பரிசுத்த குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம்

1979 ஆம் ஆண்டில் குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம் மிகக் கடுமையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட திருச்சபையால் அனுமதிக்கப்பட்டது.இந்த ஆய்வைச் செய்தவர் டாக்டர் பிலிப் கல்லதரன் என்பவர் ஆவார். இவர் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் உயிர் இயம்பியல் ஆய்வு வல்லுனர் ஆவார். இவர் ஓர் ஒவியரும். புகைப்பட கலைஞரும், விஞ்ஞான எழுத்தாளரும் கூட. பழைய சித்திரங்களைப் பற்றிய விமர்சன ஆய்வுக்காகப் பரிந்துரைக்கப்படும் செயல்முறைப்படி அகச்சிவப்பு ஒளியில் இவர் முதல் தடவையாக நம் மாதாவின் அற்புதச் சித்திரத்தை மிக விஸ்தாரமாகப் புகைப்படங்கள் எடுத்தார். அப்போது இந்த சித்திரத்தில் சில சிறிய செயற்கை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். அவை மாமரியைச் சுற்றியுள்ள சூரியக் கதிர்கள், அவர்களது நீல நிற மேற்போர்வையின்மீது காணப்படும் பொன்னிற நட்சத்திரங்கள், பொன்னிறத் துணிப்பின்னல் அலங்காரங்கள். இருண்ட நிலவு. அலங்கார நூற்குஞ்சங்கள், நிலவின் காணப்படும் தேவதூதரின் உருவம் போன்றவை ஆகும். இந்தச் செயற்கை அலங்காரங்களில் காணப்பட்ட வண்ணங்கள் காலத்தால் சிதைந்தும், மங்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அநேகமாக 1629-1634-ம் வருடங்களில் மெக்ஸிகோ நகரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளங்களுக்குப் பிறகு மனிதக் கைகளால் வரையப்பட்டிருக்கவோ, அல்லது சேர்க்கப்பட்டிருக்கவோ வேண்டும். இந்தப் பெருவெள்ளங்களால் இந்தப் பரிசுத்த சித்திரத்தைத் தாங்கியிருந்த டில்மா என்னும் சாக்குத் துணி போன்ற மேலாடை சிறிது பாதிக்கப்பட்டது.(மாதாவைச் சுற்றிக் காணப்படும் சூரியக் கதிர்கள் இச்சித்திரத்தின் தொடக்க கால செவ்வித்திய நகல்களில் காணப்படவில்லை என்பது இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என்பதை உறுதி செய்கின்றது.) ஆனால் மாமரியின் முகம் மற்றும் உருவம் ஆகியவை உட்பட சித்திரத்தின் எஞ்சியிருக்கும் பகுதியைப் பொறுத்த வரை, டாக்டர் சுல்லஹனின் முடிவு மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. "மேற்போர்வை ஒருவித இருண்ட பச்சை நீல நிறமுடையதாக உள்ளது. இது விளக்கப் பட முடியாதது. ஏனெனில் இத்தகைய நிறமிகள் எல்லாமே நிரந்தரமற்றவை. காலப்போக்கிலும், குறிப்பாக வெப்பமான காலநிலைகளிலும், மிக வேகமாக மங்கி விடக் கூடியவை. செவ்வித்திய மாயன் நீலநிற சுவர்ச் சித்திரங்கள் ஏற்கனவே மிக மோசமாக மங்கிப்போய் விட்டன. ஆயினும் இந்த நீல நிற மேற்போர்வை மட்டும் ஏதோ போன வாரம்தான் வரையப்பட்டது போல பிரகாசமான நிறத்துடன் காணப்படுகிறது. "மாதாவின் மேலங்கியைப் பொறுத்த வரை, எல்லாவற்றிலும் மேலாகக் குறிப்பிடத் தக்கது வியக்கத்தக்க விதத்தில் அது வீசும் ஒளியாகும். கண்ணால் காணக் கூடிய அதிகமான ஒளிப்


பிரதிபலிப்பு அதில் காணப்படுகிறது. ஆனாலும் அகச் சிவப்புக் கதிர்களில் அது ஊடுருவிக் காணக்கூடியதாக இருக்கிறது... நீல நிற மேற்போர்வையிலிருப்பது போல இளஞ்சிவப்பு ஆடையின் ஒளி-நிழல் வேறுபாடானது (Shade of colour), வர்ணப்பூச்சோடு கலந்து காணப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறமியின் கீழ் எந்த ஒரு செயற்கையான ஓளியமும் காணப்படவில்லை. "இந்த இளஞ்சிவப்பு நிறமி வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததாகத் தோன்றுகிறது.இந்த ஓவியத்தில் நிஜமாகவே விநோதமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று, அந்த டில்மா சரியான அளவுடையது அல்ல என்பதாகும். அது மட்டுமல்ல, அதன் மீது சித்திரங்களைப் பாதுகாக்கக் கூடிய வார்னிஷ் பூச்சுக்கான தடயமேயில்லை. இப்படி எந்த விதமான பாதுகாப்புக்குரிய மேற்பூச்சும் இல்லாதிருந்தும், மாதாவின் உள்ளங்கியும், மேற்போர்வையும், இப்போதுதான் நெய்யப்பட்டவை போலப் பிரகாசமாகவும், நல்ல நிறங்களுடனும் இருக்கின்றன. மேலும் நெய்யப்பட்ட இதன் இழைகள் அவ்வளவு நெருக்கமானவை அல்ல. ஆகவே அதிக இடை வெளிகள் உள்ள சாக்குத் துணி போன்ற இந்தத் துணியில் இவ்வளவு அற்புதமான நுணுக்கங்கள் நிறைந்த சித்திரத்தை வரைவது என்பதற்கு சாத்தியமேயில்லை. "குவாடலூப்பே கன்னிகையின் முகத்தோற்றம் ஒரு கலை அற்புதமாகும். வடிவழகிலும், பாவனையை வெளிப்படுத்தும் எளிமையிலும், திறங்களைப் பயன்படுத்தியுள்ள கலைநுட்பத்திலும் உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்புகளுக்கு இந்தச் சித்திரம் எந்த விதத்திலும் குறையாததாக இருக்கிறது. மேலும் இதே போன்ற முறையில் வரையப்பட்டுள்ள எந்த ஒரு சித்திரத்தையும் நான் ஒருபோதும் கண்டதில்லை."

 "இந்தச் சித்திரத்திற்குத் தத்ரூபமான தோற்றம் தருவதில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் உண்மையாகவே அற்புதமானவை. நம் வார்த்தைகளுக்கு எட்டாதவை. அவற்றில் ஒன்று, சரியான அளவுகளில் இல்லாத அந்த டில்மாவில் இயற்கையாகயே இருக்கும் மடிப்பு களை அல்லது பிசிறுகளை, அல்லது கசங்கல்களைக் கூட, அந்த ஓவியத்திற்கு ஆழமும் உயிரோட்டமும் தரும் விதத்தில் பயன்படுத்தியிருப்பது ஆகும். குறிப்பாக வாயில் இது தெளிவாகத் தெரிகிறது. அங்கு அந்தத் துணியின் ஒரு முரட்டு இழை, துணியின் மற்றப் பகுதிகளின் மட்டத்திற்குச் சற்று மேலாக எழுந்துள்ளது. இது உதட்டின் மேற்பகுதியின் விளிம்போடு மிக மிகச் சரியாகப் பொருந்துகிறது! இதே போன்ற முரட்டுத்தனமான குறைபாடுகள் இடது கன்னத்தின் நிழலூட் டப்பட்ட பகுதியிலும் வலது கண்ணின் மேற்பகுதியிலும், வலப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் இந்த ஓவியத்திற்கு ஒரு விதமான முப்பரிமாணத் தோற்றம் கிடைத்து, அதன் தத்ரூபத் தோற்றம் நுல்லியம் பெறுகிறது. இப்படி தத்ரூபத் தோற்ற விளைவைத் தரும்படி ஏற்கனவே மிகத் துல்லியமான இடங்களில் மடிப்புகளும், பிசிறுகளும் உள்ள ஒரு டில்மாவை எந்த ஒரு மனித ஓவியனும் தேர்ந்தெடுப்பது முற்றிலும் இயலாத காரியம் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.

இது தற்செயலாக நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. கண்கள், மற்றும் தலைமுடியின் கறுப்பு நிறம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இரும்பு ஆக்ஸைடோ அல்லது வேறு ஏதாவது நிறமியோ அல்ல. ஏனெனில் அவை காலப் போக்கில் உடைந்து, பழுப்பு நிறமாகவும் மாறி விடும். மற்றொரு மிக வியப்பான அம்சம் முகத்திலும், கரங்களிலும் காணப்படும் ஒளி-நிழல் வேறுபாடாகும். வர்ணக் கலவையில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் இயற்கை விளையு எப்படியிருக்குமோ, அவ்வாறே அந்த முரட்டு டில்மாவிலிருந்தும் பிரதிபலிக்கிறது!... தூரத்திலிருந்து பார்க்கும் போது, நிறமியும், துணியின் மேல்மட்ட கலைத்திறனும் ஒன்றோடொன்று கலக்கிற இடத்தில், ஒலிவ நிறமான திவ்ய கன்னிகையின் அதியற்புத அழகு ஏதோ மந்திரம் போட்டது போல் வெளிப்படுகிறது. அவர்களது முகபாவனை வணக்கத்துக்கு உரியதாகவும். அதே சமயம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் திடீர் திடீரென மாறி மாறித் தோன்றுகிறது. அவர்கள் செவ்விந்தியப் பெண்ணாகவும், அதே வேளையில் ஐரோப்பியப் பெண்ணாகவும் தோன்றுகிறார்கள். ஒலிவ நிறத் தோலுடனும், ஆனாலும் வெண்ணிறமாகவும் காணப்படுகிறார்கள்!"

"மேலும், மிகப் பெரும் அளவில் பெரிதாக்கப்பட்ட மாமரியின் வலது கண்ணின் புகைப்படங்களில் மூன்று மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவர்களில் ஒருவர் ஹுவான் டியேகோ போலத் தோன்றுகிறார். மற்றொருவர் சுமர்ராகா ஆயர். மூன்றாமவர் ஆயருக்கு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட ஹுவான் கொன்சாலஸ் போலத் தோன்றுகிறார். (பிற்பாடு இவர் குவாடலூப்பே மாதா பக்தியின் ஆர்வமிக்க ஆதரவாளராக மாறினார்.) ஹுவான் டியேகோ, ஹவான் கொன்சாலஸ் ஆகிய இருவரின் ஓவியங்களும் நம்மிடமுள்ளன. இவை, தேவ அன்னையின் கண்ணில் உள்ள இரண்டு உருவங்களோடு ஒத்துப்போகின்றன."

டாக்டர் கல்லஹன் மாதாவின் அற்புதச் சித்திரத்திலுள்ள வலது கண்ணை ஆஃப்தால் மாஸ்கோப் என்னும் கண் பரிசோதனைக் கருவியின் முன் வைத்துப் பரிசோதித்தபோது, ஆச்சரியத்தால் அதிர்ந்து போனார். அது படத்திலுள்ள கண்ணைப் போலவே அவருக்குத் தோன்றவில்லை. ஒரு உண்மையான மனிதக் கண்ணிலுள்ள விழித்திரை, லென்ஸ், கண் ரசங்கள் போன்ற அனைத்து பாகங்களையும் அவரால் துல்லியமாக அதில் காண முடிந்தது மட்டுமின்றி. ஒளி கண்ணில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் அனைத்து அம்சங்களையும் அந்தச் சித்திரக் கண்ணிலும் அவர் கண்டார். மாதாவின் கண்கள் சற்று மூடிய தோற்றமாக இருந்தன என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். எந்த அளவுக்கு டாக்டர் கல்லஹன் இந்த அதிசயத்தால் கவரப்பட்டார் என்றால், ஒரு கணம் அவர் தாம் அற்புதச் சித்திரத்தின் முன் இருப்பதையே அடியோடு மறந்தவ ராக, "கொஞ்சம் தலையை உயர்த்துங்கள் அம்மா!" என்றார்! “இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. இது மனித அறிவுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரியம் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்" என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ, அற்புதங்களின் அன்னையே! பரிசுத்த குவாடலூப்பே மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக