Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

St. Dominic Life history in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
St. Dominic Life history in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 பிப்ரவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 46


பார்த்தோ நகர மேற்றிராணியாரைப் பின்பற்றி, மொதேனா நகரின் மேற்றிராணியாரான வந்.வில்லியம் ஆண்டகையும் (பிற்காலத்தில் சபினா நகரின் கர்தினாலாக பொறுப்பேற்றார்) சாமிநாதரை அணுகி, தம்மையும் அவருடைய சபையின் சகோதரராக ஏற்கும்படி விண்ணப்பித்தார். உடனே அர்ச். சாமிநாதர், அவரை தமது சபையில் ஏற்றுக்கொண்டு, தந்தைக்குரிய பொறுப்புகளை அவருக்கு அளித்தார். தமது ஜீவியகாலம் முழுவதும் வந். வில்லியம் ஆண்டகை அர்ச்.சாமிநாத சபைத் துறவியாகவே புண்ணியத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து, நன்மரணம் அடைந்தார். ஒரு சமயம், ஒரு பங்கு குருவானவர் பிரான்சு நாட்டிலிருந்து ரோம் நகரத்துக்கு வந்தார். வரும் வழியில், மொதேனா நகரத்தில், அவர் அர்ச். சாமிநாதர் பிரசங்கித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பிரசங்கம் முடிந்ததும், அவர் சாமிநாதரைத் தனியாக சந்தித்து, தனக்கு வரும் பலவிதமான சோதனைகளைப் பற்றியும், அவற்றில் முக்கியமாக சரீரத்துக்கு அடுத்த பாவசோதனைகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாத நிலைமையைப் பற்றியும் கூறினார். இச்சூழ்நிலையில், தனது ஆத்துமத்தை நித்தியத்திற்கும் இழக்க நேரிடுமோ என்று அஞ்சினார். 

இதனால், மற்ற ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தாம் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறினார். உடனே சர்வேசுரனின் பரிசுத்த மனிதரான அர்ச். சாமிநாதர், அவரிடம், "சர்வேசுரனுடைய அளவற்ற இரக்கத்தின் மேல் முழு நம்பிக்கையுடன் உங்களுடைய பங்குக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுடைய ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தொடர்ந்து நிறைவேற்றி வாருங்கள். நானே உங்களுக்குத் தேவையான இச்சையடக்கம் என்னும் புண்ணியத்தை சர்வேசுரனிடம் மன்றாடிப் பெற்றுத் தருவேன்" என்று கூறினார். அவரும் அர்ச்சிஷ்டவருடைய வார்த்தையை முழுதும் நம்பியவராக, திருப்தியுடன் சென்றார். அர்ச். சாமிநாதர் இரவுபகலாக தேவாலயத்தில் திவ்ய நற்கருணைப் பேழையின் முன்பாக இக்கருத்துக்காக ஜெபத்திலும் தபசிலும் ஈடுபட்டு வந்தார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்தார். அதன்விளைவாக, இதுவரைக்கும், மாமிசத்துக்கு எதிரான பாவசோதனைகளை எதிர்ப்பதில் மிகவும் பலவீனராக இருந்த இக்குருவானவர் சிறிது காலத்திலேயே, இச்சையடக்கம் நிறைந்தவராக , நிறைகற்பு என்னும் புண்ணியத்தை நுட்பமாக அனுசரித்து, தன் சரீரத்தை ஒடுக்கி அநேக நற்புண்ணியங்களை அனுசரிக்கலானார். உத்தம ஞானமேய்ப்பராக ஜீவித்தார்.

லோம்பார்டி என்ற நகரில் ஒரு சமயம் பலருடைய விண்ணப்பத்திற்கு இசைந்து, அர்ச். சாமிநாதர், அநியாய வட்டி வாங்கி அநீத செல்வத்தைப் பெருக்கி வந்த ஒரு சட்ட ஆலோசகனைக் காண வந்தார். அவன் சாகும் தருவாயில் இருந்தான். அவனுக்கு அவஸ்தைக் கொடுப்பதற்காக ஒரு குருவானவர் ஏற்கனவே அங்கு இருந்தார். அவர் முன்னிலையில், அர்ச். சாமிநாதர், அவனிடம், அவன் இதுவரை வசூலித்திருந்த அநியாய வட்டிகளை அவரவரிடம் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். அதற்கு அவன் இணங்கவில்லை. தனது பிள்ளைகள் அதனால் தரித்திரநிலையை அடைந்துவிடுவார்கள் என்று கூறி, அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடனே அங்கிருந்த குருவானவருடன் அர்ச்.சாமிநாதர் அங்கிருந்து சென்று விட்டார். அவனுக்கு திவ்ய நன்மையும் கொடுக்காமல் சென்று விட்டார். அவனுடன் இருந்த மற்றவர்கள், அவன் திவ்ய நன்மை வாங்காமல் இறந்தால் அவனுக்கு கிறிஸ்துவ அடக்கம் கிடையாது என்று கூறினர். உடனே அவன் அங்கு கூடியிருந்தவர்களை ஏமாற்றும்படியாக, இறுதியாக சாகுமுன் உட்கொள்வதற்காக ஒரு குருவானவரை வரவழைத்து திவ்ய நன்மை உட்கொண்டான். உடனே, "ஐயோ, நான் முழுவதும் எரிகிறேனே ! நரகமே எனது வாய்க்குள் இறங்கிவிட்டதே ! இதோ நாம் எல்லாரும் எரிந்து கொண்டிருக்கிறோமே! இதோ , பாருங்கள் ! இங்கு எல்லாம் நெருப்பாக இருக்கிறது!'' என்று அலறினான். இவ்வாறு அலறிக்கொண்டே அவன் அவலமாய் மரித்தான். இதேபோல வேறு ஒருநாள், ஒரு அநீதவட்டிக்காரன், தான் தேவப்பிரசாத அந்தஸ்தில் இருப்பதாக நடித்துக் கொண்டே, அர்ச். சாமிநாதரிடம் வந்து திவ்ய நன்மை உட்கொண்டான். அப்பொழுது, அவனுடைய நாக்கில் ஒரு நெருப்புக்கரி வைத்தது போல துடிதுடித்தான். தனது பாவங்களுக்காக உடனே மனஸ்தாபத்தால் நிறைந்தவனாக அர்ச்சிஷ்டவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதன்பிறகு தான் வாங்கிய அநியாய வட்டித் தொகையை அவரவரிடம் திருப்பித் தந்தான். இறுதிவரை திருந்திய நல்ல கத்தோலிக்கனாக ஜீவித்தான்.

சனி, 18 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2

 அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2: 
இளமையில் ஞானம்


அர்ச்.சாமிநாதருக்கு 14 வயதானதும் அக்காலத்தில் ஸ்பெயினில் பிரசித்தி பெற்ற பலென்சியா பல்கலைகழகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு 10 வருடமாக உயர்கல்வி பயின்றார். அங்கு நிலவிய யாதொரு சுழலும் அவருடைய தேவசிநேக ஜீவியத்தை பாதிக்கவில்லை. அங்கு படிப்பில் அவருடைய அபரமானஅறிவு திறமையும் பழகுவதில் அவர் கொண்டிருந்த சம்மனசைப்போன்ற பரிசுத்ததனமும் பார்ப்பவர் அனைவரையும் அவர்பால் வெகுவாய் கவர்ந்தது. அவர் பிறந்ததிலிருந்தே சர்வேசுரனுடைய காரியங்கள் மட்டுமே அவரைக் கவர்ந்திருந்ததால், தற்பொழுது அவர் இருந்த பல்கலைக் கழகத்தில் நிலவிய உலகக் கவர்ச்சிகள் அவரை சிறிதளவும் பாதிக்கவில்லை. 

அங்கு இவர் பயின்ற உலக அறிவியல் இவருடைய உன்னத ஆவல்களை திருப்திபடுத்தவில்லை. வேதஇயலைப் படிப்பதில் தன்னையே விரைந்து ஈடுபடுத்திக் கொண்டார். அதிலுள்ள உன்னத பரலோக ஜீவசுனையின் நீரானது மேலான பரலோக சத்தியத்தைக் கண்டடையும்படி தன் ஆத்துமத்தில் ஏற்பட்டிருந்த தாகத்தைத் தணிக்கக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார். பரிசுத்த வேதாகமத்தின் நிரூபங்களையும் தத்துவ இயலையும் ஆழ்ந்து பயில்வதில் 4 வருடங்கள் ஈடுபடலானார். வேதகல்வியை தகுதியுடன் கற்பதற்கு ஒருவனுடைய இருதயமானது தன் ஊனியல்பை மேற்கொள்ள கற்றறிந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். எனவே அவர் அங்கு கல்வி கற்ற 10 வருடங்களும் திராட்சை இரசம் அருந்தாமல் தபசுடன் ஜீவித்திருந்தார்.

தியோடொரிக் அப்போல்டா என்பவர் அர்ச்.சாமிநாதரைப்பற்றி,;இவர் ஒரு சிறுவனாக இருந்தபோதிலும் ஞானத்தில் ஒரு அறிவு முதிர்ந்த துறவியாக காணப்பட்டார். அவருடைய வயதிற்குரிய இன்பங்களுக்கு மேம்பட்ட வயதினராக ஜீவித்தார். நீதியின் மேல் தாகமுள்ளவராக இருந்தார். அவர் தன்னைச் சுற்றியிருந்த இலக்கு ஏதுமில்லாத மூடத்தனமான உலகத்தை விட திருச்சபையையே பெரிதும் தன் கண்ணென போற்றி மகிழ்வார்.

திருச்சபையின் பரிசுத்த உறைவிடமான மகாபரிசுத்த தேவநற்கருணை பேழையே அவருக்கும் தங்கி மகிழும் ஓய்விடமாக இருந்தது. அவருடைய அன்றாட நேரமெல்லாம் ஜெபத்திற்கும் படிப்பிற்கும் சமமாக ஒதுக்கப்பட்டிருந்தது. சாமிநாதர் கொண்டிருந்த உன்னதமான பக்தி பற்றுதலுக்கும் அவர் பக்திபற்றுதலுடன் வேதகற்பனைகளை அனுசரித்து வந்த ஜீவியத்துக்கும் சம்பாவனையாக சர்வேசுரன் உன்னத ஞானத்தை அவருக்கு அளித்தார். சாமிநாதர் அந்த ஞானத்தைக் கொண்டு மகா கடினமான கேள்விகளுக்கும் மிக எளிதாக விடைஅளிப்பவராக திகழ்ந்தார்; என்று குறிப்பிடுகின்றார்.

1190ம் ஆண்டு இலையுதிர்காலம். ஸ்பெயின் நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டாயிற்று. பலேன்சியா நகரெங்கும் வறுமை0 அதனால் மக்கள் பசி பட்டினியால் மடிந்தனர். இதைக் கண்ட 20 வயது இளைஞரான சாமிநாதர் தனனிடமிருந்த பணத்தைக் கொடுத்தும் தன் உடைமைகளை விற்றும் அநேக ஏழைகளுடைய வறுமையை நீக்கினார். மேலும் தன்னிடமிருந்த விலையுயர்ந்த புத்தகங்களையும் விற்பதற்கு தீர்மானித்தார்.

அப்போது அவருடைய சக மாணவ நண்பர்கள் அவரிடம், “ இந்த புத்தகங்கள் இல்லாமல் எவ்வாறு உன் கல்வியை தொடரமுடியும்?”; என்று வினவினர். அதற்கு சாமிநாதர், “இவ்வுலகில் வாழ லேண்டிய மனிதரின் சாரங்கள் இறக்கும் தருவாயில் உள்ளபோது, இந்த இறந்த ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட இப்புத்தகங்கள் நமக்கு முக்கியமானவையாகுமோ? நான் இப்புத்தகங்கள் இல்லாமலேயே நான் சமாளித்துக் கொள்வேன்” என்றார். அவருடைய இந்த பிறர்சிநேக சேவை அவருக்கு பரலோகத்திலிருந்து இன்னும் மேலான வெகுமதிகளைப் பெற்றுத் தந்தது. சாமிநாதர் எல்லா பாடங்களிலும் முன்னைவிட இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று, தன் வகுப்பிலேயே முதல் தலைசிறந்த மாணவனாக திகழந்தார். 

இவ்வாறு ஏழைகளின் வறுமையை போக்குவதற்காக சாமிநாதர் தன் விலையுயர்ந்த புத்தகங்களையெல்லாம் விற்றதைப்பற்றி ஓஸ்மா நகர மேற்றிராணியார் கேள்விபட்டதும் தீரமிக்க இந்த மாணவர் பிற்காலத்தில் ஒரு நல்ல குருவாக தனக்கு நல்ல உதவியாளராக பணிபுரியக்கூடும் என்று எண்ணி சாமிநாதர் தன்னிடம் வரும்படி ஆசித்தார். 

(தொடரும்) 

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 1