Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 31 மார்ச், 2014

வியாகுலப் பிரசங்கங்கள்


(வாசகர்களே! தபசுகாலம்அதிலும் அதன் பரிசுத்த வாரம் என்றாலே தமிழக கத்தோலிக்கர்களாகிய நமக்கு நினைவுக்கு வருவது வியாகுலப் பிரசங்கங்களேகத்தோலிக்க மக்கள் பக்தியார்வத்தோடு ஆலயங்களிலும், அதன் முற்றங்களிலும், தெரு சந்திப்புகளிலும் ஒருவர் உருக்கமாக வாசிக்க மற்றவர்கள் அதை கேட்டு நமதாண்டவரின் கொடிய பாடுகளில் ஒன்றித்து, கண்ணீர் சொரிந்த காட்சிகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்;. 2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு திருச்சபையில் காணாமல் போய்விட்ட அல்லது கைவிடப்பட்ட அநேகப் பொக்கிஷங்களில் வியாகுலப் பிரசங்கங்களும் ஒன்று! அண்மையில் அதனைப் பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம் - ஆ.ர்.)
ஜெரோம் கொன்சாலஸ் சுவாமியார் 1676-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவாவில் பிறந்தார். அவருடைய குடும்பம் இரண்டு அல்லது மூன்று தலைமுறையாகக் கத்தோலிக்கர்களாய் இருந்ததால் நல்லதோர் கத்தோலிக்க சூழ்நிலையில் வளர்ந்தார். வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் சிறுவயதிலே இசை ஞானமும், பாடற் திறனும் கொண்டிருந்தார். பின்னர் கல்லூரியில் பயிலும்போது அக்கல்லூரியின் பாடகர் குழுவில் ஆர்கனிஸ்ட்டாக (ழுசபயnளைவ)இருந்தார். அங்கு தன்னுடைய திறமையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். அச்சமயம் அவர் தற்செயலாய் வாசித்த ஒரு கத்தோலிக்க இதழில், இலங்கையில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க செயல்பாடுகளைப் பற்றி அறிந்தார். பின்னர் அச்செயலுக்காக தன்னையும் அர்ப்பணிக்க எண்ணி குருமடத்தில் சேர்ந்தார். 1700-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ம் நாள் குருப்பட்டம் பெற்றார். ஆனால் இவருடைய பாதை சுமுகமாய் இல்லை. பெற்றோருடைய எதிர்ப்பை மீறி சர்வேசுரனுடைய பணிக்கு தன்னை பலியாக்கினார். பின்னர் சில ஆண்டுகள் மடத்திலே தங்கி மேற்படிப்பை மேற்கொண்டார். மெய்யியலில் இவருடைய திறனையும், ஆர்வத்தையும் கண்டு இவரை அம்மடத்திலே பேராசிரியராய் நியமித்தனர்.
ஒருநாள் குருமடத்திற்கு ஒரு சிறப்பு விருந்தினர் இலங்கையிலிருந்து வருகை தந்தார். அவரே பின்னாளில் முத்திப்பேறு பட்டம் பெற்ற சங். ஜோசப் வாஸ் என்ற குருவானவர். அவர் ஆற்றிய உரையினால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவர் நம் ஜெரோம் கொன்சலஸ் சுவாமியார்.
பின்னர் சில மாதங்களில் இவர் இலங்கைக்கு பயணமானார். கரையேறியதும் அவர் உடனே அந்நாட்டு மொழியை கற்கத் தொடங்கினார். முதலில் தமிழும், பின்னர் சிங்களமும் வெகு விரைவில் கற்றுக்கொண்டார். கண்டி மாகாணத்திற்கு பொறுப்பாயிருந்த அவர், பல வகையில் கத்தோலிக்க மதம் பரவ காரணமாயிருந்தார். தன்னுடைய ஜெபத்தினாலும், தவத்தினாலும், பலருடைய மதமாற்றத்திற்கு காரணமாயிருந்தார். பதிதர்களுடனான வாக்குவாதத்தில் கத்தோலிக்க சத்தியத்தை தெளிவாகக் காண்பித்த அவர், பலருடைய மனதை வென்றார். மிகப்பெரிய மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்மேல் சுமத்தபட்டிருந்தாலும் அதனை மிக நேர்த்தியாக செய்தார்.
இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும் பல நூல்களை அவர் இயற்ற தவறவில்லை. சிங்கள மொழியில் 22 புத்தகங்களையும், தமிழில் 15 புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டார். அவைகள் வேதசாஸ்திரம், தேவ அன்னை, தேவ நற்கருணை, திருச்சபை கட்டளைகள் என பல்வேறு தலைப்புகளோடு பிரசுரமாயின. இவை அனைத்திலும் தலைசிறந்ததாய் புகழப்படுவது வியாகுல பிரசங்கங்கள். தன்னுடைய விசுவாசிகளுக்கு மட்டும் எழுதிய இப்படைப்பின் புகழ் தமிழ் உலகம் முழுவதும் பரவியது. அவருடைய நண்பர்கள் உதவியாய் 300 கையெழுத்து பிரதிகள் தயாரிக்கப்பட்டன. பின்பு 1844-ம் ஆண்டு கொழும்பில் மீண்டும் இப்புத்தகங்கள் அச்சிடப்பட்டது. பின்னர் 1871-ல் சென்னையிலும் அதற்குப்பின்; யாழ்பாணத்திலும் பலமுறை அச்சிடப்பட்டது.
வியாகுல பிரசங்கங்கள் அமைப்பு:
                தான் குருமாணவராக இருந்த காலத்தில் பெரிய வாரத்தில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் பாடப்படும் “Tenebrae” இவரை மிகவும் ஈர்த்தது. இன்றும் இத்தகைய பாடல்கள் பாரம்பரிய குருமடங்களில் பாடப்பட்டு வருகிறது. குருக்களின் கட்டளை ஜெபத்தில் முதல் இரண்டு பாகங்களான ‘Matins & Laudes’ என்னும் ஜெபங்கள் பரிசுத்த வாரத்தில் அதற்குரிய சிறப்பு இராகத்துடன் பாடும்போது கேட்போர் இதயங்களை உருக்கிவிடும்.
                பின்னர் தன்னுடைய பங்கில் லத்தீன் வாசிக்கத் தெரியாத மக்களுக்காக இவர் அந்த பாணியில் இயற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயற்றப்பட்டதே வியாகுலப் பிரசங்கங்கள்”. இதில் கீழ்க்கண்ட 9 பிரசங்கங்கள் அடங்கும் :
1. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து அவதிப்பட்டது.
2. சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்தில் கைது செய்யப்பட்டது.
3. சேசுநாதர் கல்தூணில் கட்டுண்டு அடிப்பட்டது.
4. சேசுநாதர் திருசிரசில் முள்முடி சூட்டப்பட்டது.
5. “இதோ மனிதன்!என்று பிலாத்துவினால் அறிவிக்கப்பட்டது.
6. சேசுநாதர் சிலுவை சுமந்துகொண்டு சென்றது.
7. சேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது.
8. சேசுநாதர் சிலுவையில் மரித்தது.
9. சேசுநாதர் அவரது தாயார்மடியில் வளர்த்தப்பட்டது.
                ஒவ்வொரு பிரசங்கத்தைப் பற்றியும் எழுதுவதாயின் பக்கங்கள் போதாது. ஆயினும் இந்த அழகிய பிரசங்கங்களின் சுவையை வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக ஒரேயொரு பிரசங்கத்தை, அதுவும் கடைசிப் பிரசங்கத்பை; பற்றி மட்டுமே எழுதுகிறேன். காரணம், மாமரி பட்ட வியாகுலங்களையும் இப்பிரசங்கம் அழகாக விவரிக்கிறது.
9-ம் பிரசங்கம் : சேசுநாதர் அவரது தாயார் மடியில் வளர்த்தப்பட்டது.
                இந்தப் பிரசங்கத்தின் தொடக்கப் பகுதியில் சேசுநாதரின் திருவிலா குத்தித் திறக்கப்படுவதும், அதைக் குத்தித் திறந்த போர்வீரனின் குருட்டுத்தன்மைகுணமானதுமாகிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. திறக்கப்பட்ட திருவிலாவிலிருந்து சிந்திய திரு இரத்தம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை விசேஷமாகக் குறிப்பிடுவதில் இந்தப் பிரசங்கத்தின் ஆசிரியர் விசேஷ கவனம் எடுத்துக் கொள்கிறார். இந்தத் திரவத்தின் ஒரு துளி அந்த வீரனைக் குணப்படுத்தப் போதுமானதாயிருந்தது. இந்தக் குணப்படுத்துதல், சேசுநாதரின் திருமரணத்திற்குப் பிறகும் தொடர்ந்த அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடாக அடையாளம் காணப்படுகிறது. இந்த இரக்கம் சரீரமும், ஆத்துமமுமான முழு மனிதனுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இந்தக் குத்தி ஊடுருவப்பட்ட செயலை நன்மைத்தனத்தின் ஆதாரத்தையே திறக்கும் சந்தர்ப்பமாக அவர் காண்கிறார்.
                ஆசிரியர் தேவமாதாவின் நெகிழ்ச்சியூட்டுகிற வியாகுலப் புலம்பலை வெளிக் கொணருகிறார். அவர்கள் சர்வேசுரனை நோக்கித் திரும்பி, தனது கைவிடப்பட்ட நிலையையும், முழுமையான தனிமையையும் பற்றி தைரியமாக மனந்திறந்து பேசுகிறார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த திருச்சுதனை அடக்கம் செய்யக்கூட தனக்கு எந்த வழியும் இல்லாதிருக்கும் பரிதாப நிலையை எடுத்துரைக்கிறார்கள்.
                அன்பினால் அவர்கள் திருச்சிலுவையிடம் தொடர்ந்து பேசுகிறார்கள். அந்தச் சிலுவைதன்னை நோக்கிக் குனிந்து, தன் ஒளியும், தன் பொக்கிஷமும், தன் உடைமையும், தன் சகலமுமாக இருந்த தன் திருவுதரத்தின் கனியைத் தனக்குத் திருப்பித் தரும்படி கேட்கிறார்கள்.
                தன் திருக்குமாரனிடம் பேசுகிற அவர்கள், அவருடைய பிறப்பின்போது, குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்கும்படி குறைந்தது ஒரு சில கந்தைகளாவது தன்னிடம் இருந்த நிலையோடு, இப்பொழுது சிலுவையின் மீது உயிரற்றவராக அவர் இருக்கையில், அவருடைய திருச்சரீரத்தை மூட தன்னிடம் எதுவுமில்லாத தன்னுடைய இயலாத நிர்ப்பாக்கிய நிலையை ஒப்பிட்டுப் பார்த்துப் புலம்பியழுகிறார்கள்.
                பரலோகமோ, அல்லது பூலோகமோ, அல்லது பரலோகத்தில் வாசம் செய்யும் யாருமோ தனக்கு ஆறுதல் தரும்படி வர மாட்டார்களா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவர்கள் தொடர்ந்து புலம்பும்போது, சற்று தூரத்திலிருந்து சிலுவையை நோக்கி வருகிற ஒரு கூட்டத்தைக் காண்கிறார்கள். இதைக் கண்டு, ஏற்கெனவே, இறந்துவிட்ட தன் மகனை இன்னும் அதிகமாக வாதிக்கும்படி வருகிற மனிதர்களாக அவர்கள் இருக்கக்கூடுமோ என்ற தேவமாதா வியக்கிறார்கள்.
                இந்த இடத்தில், அவர்களோடு இருக்கிற அருளப்பர், அந்தக் கூட்டம் தங்களுக்கு உதவி செய்ய வந்து கொண்டிருப்பதைக் கண்டுகொள்கிறார். அந்தக்கூட்டத்தினிடையே, இரகசியமாக என்றாலும் சேசுநாதரில் விசுவாசம் கொண்டிருந்த சூசையையும், நிக்கோதேமுஸையும் அவர் அடையாளம் காண்கிறார். அவர்கள் சேசுநாதரின் திருச்சரீரத்தைச் சிலுவையில் இருந்து இறக்கி, ஒரு கல்லறையில்  அடக்கம் செய்வதற்கு ஆயத்தமாக, ஏணிகள், வாசனைத் திரவியங்கள், அடக்கச் சடங்குகளுக்குரிய துணிகள் ஆகியவை போன்ற பொருட்களோடு வருகிறார்கள்.
                அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு அவர்கள் வியாகுலமாதாவிடம் அனுமதி கேட்டபோது, அவர்கள் நிம்மதிப்பெருமூச்செறிந்து, தன்னை இரக்கத்தோடு கண்ணோக்கிய சர்வேசுரனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
                சூசையும், நிக்கோதேமுஸ_ம் ஏணிகளைப் பயன்படுத்தி திருச்சரீரத்தை இறக்கி, அதை வியாகுல மாமரியின் திருமடிமீது அதை வளர்த்துகிறார்கள். தன் திருக்குமாரனை அனைவரிலும் அதிகப் பிரியத்தோடு நேசித்த மாதாவின் திரு இருதயத்திலிருந்து வெடித்துக் கிளம்புகிற பெரும் வியாகுலமுள்ள கதறலை ஆசிரியர் விவரிக்கிறார். அதன்பின் அவர்கள் அவருடைய ஜீவனற்ற திருச்சரீரத்தை முத்தமிட்டு, அவர் மீது விழுந்து புலம்புகிற விதத்தின் விவரங்களை அவர் தருகிறார். மற்ற காரியங்களுக்கு மத்தியில், சேசுவின் ஜீவிய காலத்தின்போது, அவரால் உதவி பெற்ற எண்ணிலடங்காத மனிதர்களின் நன்மைக்காக பயன்படுத்தப்பட்டு இப்போது உயிரற்றுப் போயிருக்கிற அவருடைய திருக்கரங்களையும், பாதங்களையும், உதடுகளையும் பற்றி அவர்கள் நினைக்கிறார்கள்.
                தன் நேச மகனின் மரணத்தால் உண்டான இத்தகைய தாங்க முடியாத நிர்ப்பாக்கியத்தை எதிர்கொள்ளும்படி தான் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி அவர்கள் வியக்கிறார்கள். அதன் பிறகு, திருச்சரீரத்தை அடக்கத்திற்காக சூசையிடமும், நிக்கோதேமுஸிடமும் தான் தர வேண்டிய நேரம் வரும்போது, தன் மகனோடு தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவர்கள் விரும்புவதை ஆசிரியர் காண்கிறார்.
                அடக்கத்திற்கான தயாரிப்பை விவரிக்கும்போது, வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி திருச்சரீரம் ஆயத்தம் செய்யப்படுவதையும், புது அடக்கத் துணிகளில் திருச்சரீரம் சுற்றப்படுவதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அந்த அடக்கத் துகிலில் சேசுநாதரின் திருச்சரீரத்தின் பதிவு அழிக்கப்பட முடியாத விதத்தில் அதன்மீது பதிக்கப்பட்ட புதுமையை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். அவர் தொடர்ந்து, இந்தப்பரிசுத்த அடக்கத் துகில் இன்று வரை இத்தாலியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அறிவிக்கிறார்.
                அடக்கப் பவனியை விவரிக்கும்போது, சிலுவையில் அறையுண்ட திருச்சரீரத்திலிருந்து அகற்றப்பட்ட ஆணிகள், முண்முடி போன்ற பரிசுத்த பண்டங்களைச் சுமந்து கொண்டிருந்தவர்களை ஆசிரியர் குறித்துக் காட்டுகிறார். பூலோகத்தை சிருஷ்டித்தவராகிய ஆண்டவர், அதே பூலோகத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்ற வார்த்தைகளோடு அவர் இந்த விவரணத்தை முடிக்கிறார். இந்தக் கடைசி தியானத்தில், சேசுநாதரின் மரணத்தினால் ஆகாயவெளியின் வௌவேறு ஐம்பூதங்கள் அனுபவித்ததும் வெளிப்படுத்தியதுமான பெரும் துயரத்தை கிறீஸ்தவர்களாகிய வாசகர்களுக்கு ஆசிரியர் நினைவுபடுத்துகிறார். இப்பொழுது, சேசுநாதரின் அடக்கத்தின்போது ஆசிரியர் சகல கிறீஸ்தவர்களின் கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் துக்கப்படுவதற்கு அவர்களுக்கு முழுமையான காரணம் இருக்கிறது என்று கூறுகிறார். நம்முடைய துக்கம் நம் வாழ்வுகளிலிருந்து பாவத்தின் எல்லாச் சுவடுகளையும் அழித்து விடும் அளவுக்கு நாம் மனஸ்தாபப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
                சுருங்கச் சொல்வதனால், இந்த ஒன்பது பிரசங்கங்களும், சேசுநாதரின் கடைசி நாட்களின் காட்சியை மிக உயிரோட்டமாகவும், மிகக் கவனமாக உருவகிக்கப்பட்ட முறையிலும், நமக்குத் தருகின்றன என்று சொல்லலாம். ஆசிரியர் கிழக்கிந்திய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் குடும்ப உறவுகளைப் பிரதிப்பலிக்கிற தம் சொந்த சிந்தனைகளின் அநேக அம்சங்களைத் தம் விருப்பப்படி சுதந்திரமாக எடுத்துப் பயன்படுத்துகிறார். இவற்றில் தரப்படுகிற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உயிரோட்டம் தரும் வகையிலான ஓர் எழுத்து நடை அவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரசங்கங்களை ஒருவன் கவனிக்கும்போது, இவற்றில் எழுத்து நடையும், சித்தரிக்கப்பட்டுள்ள உருவங்களும் அவனுடைய நினைவில் நீடித்து நிலைத்திருக்கும்.

-           சங். திரேஷியன் சேவியர், அர்ச். பத்தாம் பத்திநாதர் சபை.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பெப்ருவரி மாதம் 19-ம் தேதி



பெப்ருவரி மாதம் 19-ம் தேதி
அர்ச்.கொன்ராத் - துதியர்
                கொன்ராத் என்பவர் இத்தாலியா தேசத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து நல்ல கிறீஸ்தவராய் வாழந்து வந்தார்.  இவர் கலியாணம் செய்து கொண்டபின் தன் மனைவியுடன் அந்நியோன்னியமாய் வாழ்ந்து வந்தார்;.  இவர் வேட்டையாடுவதில் மிதமிஞ்சின ஆசைவைத்து அதில் அதிக நேரத்தை செலவழிப்பார்.  ஒரு நாள் இவர் காட்டில் வேட்டையாடும்போது ஒரு மிருகம் புதரில் நுழைந்து கொண்டதினால், அதை வெளியே துரத்த இவர் பட்ட பிரயாசையெல்லாம் வியர்த்தமானதால் கொன்ராத் கோபங்கொண்டு அந்த புதருக்கு நெருப்பு வைத்தார். நெருப்பு பொறி தற்செயலாய்ப் பறந்து விளைச்சல் நிலத்தி;ல் விழுந்ததினால் விளைச்சலுக்கு மிகுந்த நஷ்டம் உண்டானது.  இதை அவர் கண்டு பயந்து அவ்விடத்தைவிட்டு ஓடிப்போனார்.  இவ்வளவு நஷ்டமுண்டாக் கினவன் யாரென்று அந்த ஊரார் கண்டுபிடியாததினால், காட்டில் திரியும்         ஒரு இருளன்  மேல் சந்தேகப்பட்டு அவன்தான் குற்றவாளியென்று அவன் மேல்  குற்றம் சுமத்தினார்கள்.  அவனைச் சேவகர் மிகவும் உபாதித்தபோது வேதனையைப் பொறுக்கமுடியாமல், தானே காட்டுக்கு நெருப்பு வைத்ததாக ஒத்துக்கொண்டதினால், அவனுக்கு தண்டனை விதிக்கப்படும் சமயத்தில், கொன்ராத் நீதிமன்றத்திற்குச் சென்று தன் தவறை வெளிப்படுத்தி இருளனை விடுதலை செய்வித்து தன் சொத்துக்களையெல்;லாம் விற்று நஷ்டப்பட்டவர் களுக்குக் கொடுத்துவிட்டார்.  தன் மனைவி ஒரு கன்னியர் மடத்தில் சேர சம்மதித்ததினால், கொன்;ராத் அர்ச். பிரான்சீஸ்கு மடத்தில் சேர்ந்து தவஞ்செய்து வெள்ளிக்கிழமைதோறும் அங்கு வணங்கப்பட்ட ஒரு பாடுபட்ட சுரூபத்தைச் சந்தித்து மகா துக்கத்துடன் வேண்டிக்கொள்வார். ஒருநாள் வழக்கம்போல் அவர் ஜெபிக்கும்போது திருப்பாடுகளின் மட்டில் அவருக்குண்டான மனஸ்தாப மிகுதியால் அங்கேயே உயிர் விட்டார்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பெற்றோரும் பிள்ளைகளும்


பெற்றோரும் பிள்ளைகளும்

(குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்குரிய பிரதான கடமைகள் எவை என்பதைப் பற்றிய கட்டுரை)

                பிள்ளைகள் மட்டில் தங்களுக்குள் பிரதான கடமைகளைப் பெற்றோர் சந்தேகமின்றி அறிந்து இருப்பது அத்தியாவசியம். தாய் தந்தையர் இந்த கடமைகளை அறியாதிருப்பதினால் அல்லது அறிந்தும் அலட்சியம் செய்வதினால், அநேக பிள்ளைகள் துஷ்டர்களாய் வளர்ந்து குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கிறார்கள். இது விஷயத்தில் பெற்றோர் தேவ சந்நிதானத்தில் மகா கண்டிப்பான கணக்கு கொடுக்க வேண்டியவர்கள்.  ஆதலால் பிள்ளைகள் மட்டிலுள்ள கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறேனோ இல்லையோவென்று அடிக்கடி சோதித்துப் பார்த்துத் தன்னைத் திருத்திக் கொள்வது தாய் தந்தையர் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்ட கடன் ஆகும். அப்படியானால் பிள்ளைகள் மட்டில் பெற்றோருக்கு உள்ள கடமைகள் எவை? பிள்ளைகளின் ஆத்தும சரீர நன்மைகளைக் கவனித்தல், அவர்களுக்கு புத்தி புகட்டல், அவர்கள் குற்றங்குறைகளைத் திருத்துதல், அவர்களுக்கு கல்வி கற்பித்தல் ஆகிய இவைகளே பிள்ளைகளின் மட்டில் பெற்றோருக்குரிய பிரதான கடமைகளாம்.
1.            பிள்ளைகளின் ஆத்தும சரீர நன்மைகளைக் கவனித்தல்:
பிறந்த குழந்தைக்கு கூடிய சீக்கிரம் ஞானஸ்நானம் கொடுத்து அதை சர்வேசுரனுடைய பிள்ளையாக்குதல். பெற்றோரின் முதல் கடமை, முக்கிய கடமை. தான் பெற்ற பிள்ளைக்குத் தாய் அமுதூட்டி வளர்ப்பது சுபாவ ஓழுங்கு. சுபாவ ஒழுங்கு என்றால் கடவுளினால் நியமிக்கப்பட்ட இயற்கைச் சட்டம். ஆடு, மாடு முதலிய அறிவில்லாப் பிராணிகள் கூட இச்சட்டப்படி நடப்பதை நாம் கண்கூடாய் கண்டுவருகிறோம். தாய்மார் தக்க காரணமிருந்தாலன்றி தங்கள் பிள்ளைகளைச் செவிலித்தாயிடம் கொடுத்துப் பால் ஊட்டி வளர்க்கச் செய்வது உசிதமன்று. குழந்தையை வேலைக்காரி வசம் ஒப்படைத்துவிட்டு, நாடகம், சினிமா, ரேடியோ, தொலைக்காட்சி, சங்கீதக் கச்சேரி, குதிரைப் பந்தயம் முதலான வேடிக்கை விநோதங்களில் காலத்தைப் போக்குதல் தாய் தன் பிள்ளைக்குத் துரோகம் செய்வதாகும். அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் பிள்ளைகளுக்கு அன்னவஸ்திரம் அளித்தல் தந்தையின் கடமை. இதனிமித்தம் தகப்பன் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உன் நெற்றியின் வியர்வை நிலத்தில் விழப் பிரயாசைப்பட்டு உழைப்பாய்என்பது மனிதனுக்கு கடவுளிட்ட கட்டளை. குடும்பத் தலைவன் தான் பாடுபட்டுத் தேடிய பணத்ததைக் காதல், கவறாடல், கள்ளுண்டல் ஆகிய அநாச்சாரங்களில் விரயம் ஆக்குவது பெரும் பாதகம். வீண் வழக்குகளில் ஈடுபட்டு காசைக் கரியாக்குவது மதியீனம். தான் தேடிய பொருளைக் குடும்ப வாழக்கைக்குச் சிக்கனமாய்ச் செலவிட்டு, மீதமுள்ள பணத்தை பத்திரமாய்க் காப்பாற்றி விருத்தி செய்து, பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்குப் பாரபட்சமின்றி பகிர்ந்து கொடுக்கும் தந்தையே புத்திமான். தன் பிள்ளைக்கு வீட்டில் இடங்கொடாமல் தெருவில் அலைந்து திரியவிடும் தகப்பன் அன்பில்லாத முரடன். பட்சிகளிடமிருந்து தாய் தந்தையர் ஓர் நல்ல பாடம் கற்றுக்கொள்ளட்டும். பறவைகள், தங்கள் குஞ்சுகளுக்கு ஆகாரம் தேடிக் கொடுத்து அவற்றைப் போஷித்துப் பாதுகாப்பதே தங்கள் முக்கிய கவலையாகக் கருதி நாள் முழுவதும் அயராது உழைக்கின்றன. குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்து அவை நன்றாய் பறக்க சக்தியடையும் வரையில், தாய்ப் பறவையும் அதன் சேவலும் தங்கள் குஞ்சுகளைக் கூட்டை விட்டு வெளியே துரத்திவிடுவதில்லை என்று ஒரு ஞான நூலாசிரியர் எழுதி வைத்திருக்கிறார்.
2.            பிள்ளைகளுக்கு நற்புத்தி புகட்டல் :
உனக்குப் பிள்ளைகள் இருந்தல், சிறுவயதிலிருந்தே அவர்களுக்குப் புத்திமதி சொல்லி வளர்ப்பாயாக…. உன் மகனுக்கு நற்புத்தி புகட்டு, அவன் உன் ஆத்துமத்தை சந்தோஷப்படுத்துவான்உன் மகன் தன் இஷ்டம் போல் நடக்க விட்டுவிட்டால், நீ அவனுக்குப் பயந்து நடுங்க வேண்டியதாயிருக்கும்என்னும் இவை போன்ற வேத வாக்கியங்கள், பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே நற்புத்தி புகட்டி வளர்ப்பது பெற்றோரைச் சார்ந்த முக்கிய கடமை என்று தெளிவாய்க் காட்டுகின்றன. பிள்ளைகளை கிறீஸ்துநாதரிடம் கொண்டுவந்து சேர்த்தலே பிள்ளை வளர்ப்பின் பிரதான நோக்கம்என்கிறார் அர்ச். சார்லஸ் பொரோமியோ. கிறீஸ்தவத் தாய் தன் பிள்ளைகளுக்குப் படம், சுரூபம் முதலிய பரிசுத்தப் பொருட்களைக் காண்பித்து, சமயோஜிதமாய் வேத சத்தியங்களைப் போதிப்பாள் பாடுபட்ட சுரூபத்தைக் காட்டி அன்புடன் முத்தி செய்யப் பழக்குவாள். பிள்ளை தன்னுடன் முழந்தாளிருந்து சிலுவை வரையவும், சேசு மரி என்னும் திருநாமங்களைப் பக்தி விசுவாசத்துடன் உச்சரிக்கவும் கற்றுக் கொடுப்பாள். ஐந்து வயதுக் குழந்தை நேசிக்கவும் சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் உத்தம கத்தோலிக்கராய் வளர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. வாலிபன் சிறுபிராயத்தில் எவ்வழியில் நடந்தானோ அவ்வழியைவிட்டு விருத்தாப்பியத்திலும் விலக மாட்டான்” (பழ.22:6)
                பிரான்ஸ் தேசத்து அரசியாகிய பிளான்ஷ் தே காஸ்தில், தனது மூத்த மகனாகிய லூயிஸ் சிறு பிள்ளையாயிருக்கும் போதே அவனைப் பார்த்து, “ என் அருமைக் குழந்தாய், எவ்வளவு நேச பாசத்தோடு நான் உன்னைச் சிநேகிக்கிறேன் என்று உனக்குத் தெரியும் ஆனால் நீ வளர்ந்து பெரியவனான பின் ஓரே ஒரு சாவானப் பாவத்தைக் கட்டிக்கொள்வதைவிட இப்போதே என் கண் முன் நீ இறந்துபோவது நலம்என்று அடிக்கடி சொல்வாள். இவ்வார்த்தைகள் பசுமரத்தாணி போல் பிள்ளையின் சிறு ஆத்துமத்தில் ஆழமாய்ப் பதிந்தது. லூயிஸ் பிரான்ஸ் தேசத்தை பெரும் புகழுடன் ஆண்டபோது, இந்த வார்த்தைகளைத் தினந்தோறும், முக்கியமாய் சோதனை நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறார். பக்தியுள்ள தாயின் மடியில் ஞானப்பால் உண்டு வளர்ந்த இந்தப் பிள்ளைதான் அரசரான 9-ம் லூயிஸ் என்னும் அர்ச். ஞானப்பிரகாசியார். இவருடைய திருநாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
                பருவத்தே பயிற்செய் என்பது மூத்தோர் சொல். சிறுபிள்ளையின் ஆத்துமம் மெழுகுபோலிருக்கிறது. அதன்மேல் நல்ல முத்திரையைப் பதித்தால் அது ஆழமாய்ப் பதிந்து என்றும் அழியாதிருக்கும். பிள்ளையின் சிறு ஆத்துமத்தில் கிறீஸ்தவப் புண்ணியங்களைச் சிறுகச் சிறுக பதிப்பிப்பது நல்ல தாயின் முக்கிய கடமை. ஏழைகள் மீது இரக்கம், துன்பப்படுகிறவர்கள் மட்டில் அநுதாபம், பெற்றோருக்கு மரியாதை, கீழ்ப்படிதல், பிறர்மட்டில் அன்பு, பொறுமை, சாந்தம் முதலிய கிறீஸ்தவப் புண்ணியங்களை அநுசரிக்க ஞானமுள்ள தாய் தன் பிள்ளைக்குக் கற்றுக் கொடுப்பாள். தாயின் உதவியின்றி குழந்தை நடக்குமா? பிள்ளையினருகில் தாய் நின்றுகொண்டு அதன் சிறு பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கப் பழக்க வேண்டாமா? இவ்வாறே கிறீஸ்தவத் தாய் தன் பிள்ளையின் சிறு மனசாட்சியை சன்மார்க்க நெறியில் நடந்துசெல்லப் பழக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையர் தங்கள் முன்மாதிரிகையினால் பிள்ளைகளைக் கிறீஸ்துநாதரிடம் கொண்டுவந்து சேர்க்கப் பிரயாசைப்பட வேண்டும். வார்த்தையைவிட மாதிரிகையே உத்தமம். பார்த்ததைச் செய்வது பிள்ளைகளின் சுபாவம். பக்தி விசுவாசமுள்ள தாய் தந்தையர் காலை மாலை ஜெபிப்பதையும், தினம் திவ்விய பூசை காண்பதையும், வீட்டில் ஒருவயொருவர் அந்நியோன்னியமாய் நேசித்து சமாதானமாய் வாழ்வதையும் கண்கூடாய் பார்த்துவரும் மனிதருக்கும் உகந்த புண்ணிய சீலரென யாவராலும் புகழப்படுவார்களென்பது நிச்சயம்.
                அர்ச். ஞானப்பிரகாசியார் ஐந்து வயதுப் பிள்ளையாய் இருக்கும்போது தமது மாளிகையில் ஒரு மூலையில் தனியே முழந்தாளிலிருந்து தன் சிறு கரங்களைக் குவித்துக்கொண்டு பக்தியுடன் ஜெபிப்பார். ஏன் இப்படி செய்கிறாய் என்று யாராவது அவரைக் கேட்டால், “ அம்மா அப்படி செய்கிறார்களே அவர்கள் செய்கிறதுபோல நானும் செய்கிறேன்என்று குழந்தைக்குரிய எதார்த்தத்துடன் பதில் அளிப்பார்.
                லயன்ஸ் நகரில் மாதாவின் ஆலயத்தில் வயோதிபரான சேனாதிபதி ஒருவர் ஒரு நாள் கோவிலினுள் பிரவேசித்து தேவதாயின் பீடத்துக்குமுன் முழந்தாளிலிருந்து சற்று நேரம் மகா பக்தி உருக்கத்துடன் ஜெபித்தபிறகு, அங்கிருந்த பங்கு  விசாரணைக் குருவானவரிடம் சென்று, “சுவாமி, நான் சிறு பிள்ளையாயிருக்கும்போது பக்தியுள்ள என் தாய் என்னை இந்த ஆலயத்திற்குத் தினந்தோறும் அழைத்து வந்து மாதா சுரூபத்திற்குமுன் தன்னருகில் முழந்தாளில் இருக்கச் செய்வாள். அந்த நல்ல தாய் செய்ததுபோல் நானும் என் சிறு கரங்களைக் குவித்து, மாதா சுரூபத்தைப் பார்த்து, பக்தியுடன் வேண்டிக் கொள்வேன். அந்த நாட்கள் எனக்கு மிகவும் பாக்கியமுள்ள நாட்கள்  என் ஜீவியம் பரிசுத்த ஜீவியமாயிருந்தது. என் அன்னையின் முன்மாதிரிகையை நான் ஒருபோதும் மறந்ததில்லைஎன்று சொன்னார்.

புதன், 15 ஜனவரி, 2014

Jan-15 அர்ச்.சின்னப்பர் - முதல் வனவாசி (கி.பி.342).

ஜனவரி மாதம் 15-ம் தேதி

அர்ச்.சின்னப்பர் - முதல் வனவாசி (கி.பி.342).

                இவர் எஜிப்து தேசத்தில் பிறந்து, சிறுவராயிருக்கும்போதே இவருடைய தாய் தந்தையர் இறந்துபோனார்கள். 250-ம் வருடத்தில் நடந்த பெரும் வேதக் கலாபனையில் தேவ பக்தரான இவர் நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். இவர் தாம் வசித்த குகையின் அருகிலிருந்த ஒரு ஈச்ச மரத்தின் கனியைத் தின்று சுனை ஜலத்தைக் குடித்துவந்தார். மேலும் நாள்தோறும் ஒரு காகம் இவருக்குக் கொண்டுவந்த பாதி ரொட்டியைப் புசித்துவந்தார். அக்காலத்தில் வேறொரு காட்டில் தவஞ்செய்த அந்தோணியார், சின்னப்பருடைய சிறந்த புண்ணியங் களைப்பற்றி சர்வேசுரனால் அறிந்து, அவரைச் சந்திக்கும்படி சில நாட்கள் பிரயாணஞ் செய்து சின்னப்பர் இருந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தவுடனே, இவர்கள் ஒருவர் ஒருவரை அறியாதிருந்தும் ஒருவர் ஒருவரை அவருடைய பெயரால் அழைத்து மினவிக்கொண்டார்கள்.  அன்று இருவரும் மோட்சத்தைப் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், ஒரு காகம் ஒரு முழு ரொட்டியை  தன் அலகினால் கொத்திக்கொண்டு வந்து அங்கே போட்டுவிட்டுப் போயிற்று.  சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, கடந்த 60 வருஷங்களாக சர்வேசுரன் இந்தக் காகம் மூலமாக அரை ரொட்டியை அனுப்பினார். இப்போது நீர் வந்து இருப்பதால் முழு ரொட்டியை அனுப்பச் சித்தமானார் என்று சொல்லி சர்வேசுரனுக்கு நன்றி கூறி, இருவரும் அதைப் புசித்தார்கள்.
                பிறகு சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, எனக்கு மரணம் கிட்டி யிருக்கிறது. நீர் உமது மடத்துக்குப் போய் உமக்கு அர்ச். அத்தனாசியார் கொடுத்த போர்வையைக் கொண்டுவந்து அதனால் என்;னைப் பொதிந்து அடக்கஞ் செய்வீராக என்றார். அவ்வாறே அந்தோணியார் போர்வையை எடுத்துக்கொண்டு வரும்போது, சின்னப்பருடைய ஆத்துமம் சம்மனசுக்களால் சு10ழப்பட்டு மோட்சத்திற்குப் போவதைக் கண்டு அதிசயித்து, குகைக்குச்சென்று பார்த்தார். அங்கு முழந்தாளிலிருந்து ஜெபஞ் செய்வதுபோல் காணப்பட்ட சின்னப்பருடைய பிரேதத்தை தாம் கொண்டுவந்த போர்வையால் பொதியுந் தருணத்தில், இரு சிங்கங்கள் காட்டிலிருந்து புறப்பட்டு வந்து, ஒரு குழியைத் தோண்டவே, அவர் அக்குழியில் அத்திருச் சடலத்தை அடக்கஞ் செய்தார்.  சின்னப்பர் தரித்திருந்த ஈச்சம் ஓலை ஆடையை தன்னுடன் எடுத்துச் சென்று, பெரும்; திருநாட் காலங்களில் அதைத் தரித்துக்கொண்டு வந்தார்.

யோசனை


                பாவச் சந்தர்ப்பத்திற்கு ஏதுவானவற்றை விட்டு விலகுவாயாக.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

விருத்தசேதனத் திருநாள்



Jan. 1

விருத்தசேதனத் திருநாள்


திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு   நிறைவேற்றப்படுகிறது.

                விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களி னின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோயீசன் பத்துக் கற்பனை யைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச்  சடங்கு சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச்சடங்கை நிறைவேற்றும்போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இந்தச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டு மென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளை யையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் எழும் ஆசாபாச முதலிய ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தஞ் சிந்தப் பழகவேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு  உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.
                இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது ஜீவியத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

யோசனை
                நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்யத் தீர்மானித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.