Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பெப்ருவரி மாதம் 19-ம் தேதி



பெப்ருவரி மாதம் 19-ம் தேதி
அர்ச்.கொன்ராத் - துதியர்
                கொன்ராத் என்பவர் இத்தாலியா தேசத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து நல்ல கிறீஸ்தவராய் வாழந்து வந்தார்.  இவர் கலியாணம் செய்து கொண்டபின் தன் மனைவியுடன் அந்நியோன்னியமாய் வாழ்ந்து வந்தார்;.  இவர் வேட்டையாடுவதில் மிதமிஞ்சின ஆசைவைத்து அதில் அதிக நேரத்தை செலவழிப்பார்.  ஒரு நாள் இவர் காட்டில் வேட்டையாடும்போது ஒரு மிருகம் புதரில் நுழைந்து கொண்டதினால், அதை வெளியே துரத்த இவர் பட்ட பிரயாசையெல்லாம் வியர்த்தமானதால் கொன்ராத் கோபங்கொண்டு அந்த புதருக்கு நெருப்பு வைத்தார். நெருப்பு பொறி தற்செயலாய்ப் பறந்து விளைச்சல் நிலத்தி;ல் விழுந்ததினால் விளைச்சலுக்கு மிகுந்த நஷ்டம் உண்டானது.  இதை அவர் கண்டு பயந்து அவ்விடத்தைவிட்டு ஓடிப்போனார்.  இவ்வளவு நஷ்டமுண்டாக் கினவன் யாரென்று அந்த ஊரார் கண்டுபிடியாததினால், காட்டில் திரியும்         ஒரு இருளன்  மேல் சந்தேகப்பட்டு அவன்தான் குற்றவாளியென்று அவன் மேல்  குற்றம் சுமத்தினார்கள்.  அவனைச் சேவகர் மிகவும் உபாதித்தபோது வேதனையைப் பொறுக்கமுடியாமல், தானே காட்டுக்கு நெருப்பு வைத்ததாக ஒத்துக்கொண்டதினால், அவனுக்கு தண்டனை விதிக்கப்படும் சமயத்தில், கொன்ராத் நீதிமன்றத்திற்குச் சென்று தன் தவறை வெளிப்படுத்தி இருளனை விடுதலை செய்வித்து தன் சொத்துக்களையெல்;லாம் விற்று நஷ்டப்பட்டவர் களுக்குக் கொடுத்துவிட்டார்.  தன் மனைவி ஒரு கன்னியர் மடத்தில் சேர சம்மதித்ததினால், கொன்;ராத் அர்ச். பிரான்சீஸ்கு மடத்தில் சேர்ந்து தவஞ்செய்து வெள்ளிக்கிழமைதோறும் அங்கு வணங்கப்பட்ட ஒரு பாடுபட்ட சுரூபத்தைச் சந்தித்து மகா துக்கத்துடன் வேண்டிக்கொள்வார். ஒருநாள் வழக்கம்போல் அவர் ஜெபிக்கும்போது திருப்பாடுகளின் மட்டில் அவருக்குண்டான மனஸ்தாப மிகுதியால் அங்கேயே உயிர் விட்டார்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பெற்றோரும் பிள்ளைகளும்


பெற்றோரும் பிள்ளைகளும்

(குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்குரிய பிரதான கடமைகள் எவை என்பதைப் பற்றிய கட்டுரை)

                பிள்ளைகள் மட்டில் தங்களுக்குள் பிரதான கடமைகளைப் பெற்றோர் சந்தேகமின்றி அறிந்து இருப்பது அத்தியாவசியம். தாய் தந்தையர் இந்த கடமைகளை அறியாதிருப்பதினால் அல்லது அறிந்தும் அலட்சியம் செய்வதினால், அநேக பிள்ளைகள் துஷ்டர்களாய் வளர்ந்து குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கிறார்கள். இது விஷயத்தில் பெற்றோர் தேவ சந்நிதானத்தில் மகா கண்டிப்பான கணக்கு கொடுக்க வேண்டியவர்கள்.  ஆதலால் பிள்ளைகள் மட்டிலுள்ள கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி வருகிறேனோ இல்லையோவென்று அடிக்கடி சோதித்துப் பார்த்துத் தன்னைத் திருத்திக் கொள்வது தாய் தந்தையர் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்ட கடன் ஆகும். அப்படியானால் பிள்ளைகள் மட்டில் பெற்றோருக்கு உள்ள கடமைகள் எவை? பிள்ளைகளின் ஆத்தும சரீர நன்மைகளைக் கவனித்தல், அவர்களுக்கு புத்தி புகட்டல், அவர்கள் குற்றங்குறைகளைத் திருத்துதல், அவர்களுக்கு கல்வி கற்பித்தல் ஆகிய இவைகளே பிள்ளைகளின் மட்டில் பெற்றோருக்குரிய பிரதான கடமைகளாம்.
1.            பிள்ளைகளின் ஆத்தும சரீர நன்மைகளைக் கவனித்தல்:
பிறந்த குழந்தைக்கு கூடிய சீக்கிரம் ஞானஸ்நானம் கொடுத்து அதை சர்வேசுரனுடைய பிள்ளையாக்குதல். பெற்றோரின் முதல் கடமை, முக்கிய கடமை. தான் பெற்ற பிள்ளைக்குத் தாய் அமுதூட்டி வளர்ப்பது சுபாவ ஓழுங்கு. சுபாவ ஒழுங்கு என்றால் கடவுளினால் நியமிக்கப்பட்ட இயற்கைச் சட்டம். ஆடு, மாடு முதலிய அறிவில்லாப் பிராணிகள் கூட இச்சட்டப்படி நடப்பதை நாம் கண்கூடாய் கண்டுவருகிறோம். தாய்மார் தக்க காரணமிருந்தாலன்றி தங்கள் பிள்ளைகளைச் செவிலித்தாயிடம் கொடுத்துப் பால் ஊட்டி வளர்க்கச் செய்வது உசிதமன்று. குழந்தையை வேலைக்காரி வசம் ஒப்படைத்துவிட்டு, நாடகம், சினிமா, ரேடியோ, தொலைக்காட்சி, சங்கீதக் கச்சேரி, குதிரைப் பந்தயம் முதலான வேடிக்கை விநோதங்களில் காலத்தைப் போக்குதல் தாய் தன் பிள்ளைக்குத் துரோகம் செய்வதாகும். அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் பிள்ளைகளுக்கு அன்னவஸ்திரம் அளித்தல் தந்தையின் கடமை. இதனிமித்தம் தகப்பன் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உன் நெற்றியின் வியர்வை நிலத்தில் விழப் பிரயாசைப்பட்டு உழைப்பாய்என்பது மனிதனுக்கு கடவுளிட்ட கட்டளை. குடும்பத் தலைவன் தான் பாடுபட்டுத் தேடிய பணத்ததைக் காதல், கவறாடல், கள்ளுண்டல் ஆகிய அநாச்சாரங்களில் விரயம் ஆக்குவது பெரும் பாதகம். வீண் வழக்குகளில் ஈடுபட்டு காசைக் கரியாக்குவது மதியீனம். தான் தேடிய பொருளைக் குடும்ப வாழக்கைக்குச் சிக்கனமாய்ச் செலவிட்டு, மீதமுள்ள பணத்தை பத்திரமாய்க் காப்பாற்றி விருத்தி செய்து, பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்குப் பாரபட்சமின்றி பகிர்ந்து கொடுக்கும் தந்தையே புத்திமான். தன் பிள்ளைக்கு வீட்டில் இடங்கொடாமல் தெருவில் அலைந்து திரியவிடும் தகப்பன் அன்பில்லாத முரடன். பட்சிகளிடமிருந்து தாய் தந்தையர் ஓர் நல்ல பாடம் கற்றுக்கொள்ளட்டும். பறவைகள், தங்கள் குஞ்சுகளுக்கு ஆகாரம் தேடிக் கொடுத்து அவற்றைப் போஷித்துப் பாதுகாப்பதே தங்கள் முக்கிய கவலையாகக் கருதி நாள் முழுவதும் அயராது உழைக்கின்றன. குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்து அவை நன்றாய் பறக்க சக்தியடையும் வரையில், தாய்ப் பறவையும் அதன் சேவலும் தங்கள் குஞ்சுகளைக் கூட்டை விட்டு வெளியே துரத்திவிடுவதில்லை என்று ஒரு ஞான நூலாசிரியர் எழுதி வைத்திருக்கிறார்.
2.            பிள்ளைகளுக்கு நற்புத்தி புகட்டல் :
உனக்குப் பிள்ளைகள் இருந்தல், சிறுவயதிலிருந்தே அவர்களுக்குப் புத்திமதி சொல்லி வளர்ப்பாயாக…. உன் மகனுக்கு நற்புத்தி புகட்டு, அவன் உன் ஆத்துமத்தை சந்தோஷப்படுத்துவான்உன் மகன் தன் இஷ்டம் போல் நடக்க விட்டுவிட்டால், நீ அவனுக்குப் பயந்து நடுங்க வேண்டியதாயிருக்கும்என்னும் இவை போன்ற வேத வாக்கியங்கள், பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே நற்புத்தி புகட்டி வளர்ப்பது பெற்றோரைச் சார்ந்த முக்கிய கடமை என்று தெளிவாய்க் காட்டுகின்றன. பிள்ளைகளை கிறீஸ்துநாதரிடம் கொண்டுவந்து சேர்த்தலே பிள்ளை வளர்ப்பின் பிரதான நோக்கம்என்கிறார் அர்ச். சார்லஸ் பொரோமியோ. கிறீஸ்தவத் தாய் தன் பிள்ளைகளுக்குப் படம், சுரூபம் முதலிய பரிசுத்தப் பொருட்களைக் காண்பித்து, சமயோஜிதமாய் வேத சத்தியங்களைப் போதிப்பாள் பாடுபட்ட சுரூபத்தைக் காட்டி அன்புடன் முத்தி செய்யப் பழக்குவாள். பிள்ளை தன்னுடன் முழந்தாளிருந்து சிலுவை வரையவும், சேசு மரி என்னும் திருநாமங்களைப் பக்தி விசுவாசத்துடன் உச்சரிக்கவும் கற்றுக் கொடுப்பாள். ஐந்து வயதுக் குழந்தை நேசிக்கவும் சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் உத்தம கத்தோலிக்கராய் வளர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. வாலிபன் சிறுபிராயத்தில் எவ்வழியில் நடந்தானோ அவ்வழியைவிட்டு விருத்தாப்பியத்திலும் விலக மாட்டான்” (பழ.22:6)
                பிரான்ஸ் தேசத்து அரசியாகிய பிளான்ஷ் தே காஸ்தில், தனது மூத்த மகனாகிய லூயிஸ் சிறு பிள்ளையாயிருக்கும் போதே அவனைப் பார்த்து, “ என் அருமைக் குழந்தாய், எவ்வளவு நேச பாசத்தோடு நான் உன்னைச் சிநேகிக்கிறேன் என்று உனக்குத் தெரியும் ஆனால் நீ வளர்ந்து பெரியவனான பின் ஓரே ஒரு சாவானப் பாவத்தைக் கட்டிக்கொள்வதைவிட இப்போதே என் கண் முன் நீ இறந்துபோவது நலம்என்று அடிக்கடி சொல்வாள். இவ்வார்த்தைகள் பசுமரத்தாணி போல் பிள்ளையின் சிறு ஆத்துமத்தில் ஆழமாய்ப் பதிந்தது. லூயிஸ் பிரான்ஸ் தேசத்தை பெரும் புகழுடன் ஆண்டபோது, இந்த வார்த்தைகளைத் தினந்தோறும், முக்கியமாய் சோதனை நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறார். பக்தியுள்ள தாயின் மடியில் ஞானப்பால் உண்டு வளர்ந்த இந்தப் பிள்ளைதான் அரசரான 9-ம் லூயிஸ் என்னும் அர்ச். ஞானப்பிரகாசியார். இவருடைய திருநாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
                பருவத்தே பயிற்செய் என்பது மூத்தோர் சொல். சிறுபிள்ளையின் ஆத்துமம் மெழுகுபோலிருக்கிறது. அதன்மேல் நல்ல முத்திரையைப் பதித்தால் அது ஆழமாய்ப் பதிந்து என்றும் அழியாதிருக்கும். பிள்ளையின் சிறு ஆத்துமத்தில் கிறீஸ்தவப் புண்ணியங்களைச் சிறுகச் சிறுக பதிப்பிப்பது நல்ல தாயின் முக்கிய கடமை. ஏழைகள் மீது இரக்கம், துன்பப்படுகிறவர்கள் மட்டில் அநுதாபம், பெற்றோருக்கு மரியாதை, கீழ்ப்படிதல், பிறர்மட்டில் அன்பு, பொறுமை, சாந்தம் முதலிய கிறீஸ்தவப் புண்ணியங்களை அநுசரிக்க ஞானமுள்ள தாய் தன் பிள்ளைக்குக் கற்றுக் கொடுப்பாள். தாயின் உதவியின்றி குழந்தை நடக்குமா? பிள்ளையினருகில் தாய் நின்றுகொண்டு அதன் சிறு பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கப் பழக்க வேண்டாமா? இவ்வாறே கிறீஸ்தவத் தாய் தன் பிள்ளையின் சிறு மனசாட்சியை சன்மார்க்க நெறியில் நடந்துசெல்லப் பழக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையர் தங்கள் முன்மாதிரிகையினால் பிள்ளைகளைக் கிறீஸ்துநாதரிடம் கொண்டுவந்து சேர்க்கப் பிரயாசைப்பட வேண்டும். வார்த்தையைவிட மாதிரிகையே உத்தமம். பார்த்ததைச் செய்வது பிள்ளைகளின் சுபாவம். பக்தி விசுவாசமுள்ள தாய் தந்தையர் காலை மாலை ஜெபிப்பதையும், தினம் திவ்விய பூசை காண்பதையும், வீட்டில் ஒருவயொருவர் அந்நியோன்னியமாய் நேசித்து சமாதானமாய் வாழ்வதையும் கண்கூடாய் பார்த்துவரும் மனிதருக்கும் உகந்த புண்ணிய சீலரென யாவராலும் புகழப்படுவார்களென்பது நிச்சயம்.
                அர்ச். ஞானப்பிரகாசியார் ஐந்து வயதுப் பிள்ளையாய் இருக்கும்போது தமது மாளிகையில் ஒரு மூலையில் தனியே முழந்தாளிலிருந்து தன் சிறு கரங்களைக் குவித்துக்கொண்டு பக்தியுடன் ஜெபிப்பார். ஏன் இப்படி செய்கிறாய் என்று யாராவது அவரைக் கேட்டால், “ அம்மா அப்படி செய்கிறார்களே அவர்கள் செய்கிறதுபோல நானும் செய்கிறேன்என்று குழந்தைக்குரிய எதார்த்தத்துடன் பதில் அளிப்பார்.
                லயன்ஸ் நகரில் மாதாவின் ஆலயத்தில் வயோதிபரான சேனாதிபதி ஒருவர் ஒரு நாள் கோவிலினுள் பிரவேசித்து தேவதாயின் பீடத்துக்குமுன் முழந்தாளிலிருந்து சற்று நேரம் மகா பக்தி உருக்கத்துடன் ஜெபித்தபிறகு, அங்கிருந்த பங்கு  விசாரணைக் குருவானவரிடம் சென்று, “சுவாமி, நான் சிறு பிள்ளையாயிருக்கும்போது பக்தியுள்ள என் தாய் என்னை இந்த ஆலயத்திற்குத் தினந்தோறும் அழைத்து வந்து மாதா சுரூபத்திற்குமுன் தன்னருகில் முழந்தாளில் இருக்கச் செய்வாள். அந்த நல்ல தாய் செய்ததுபோல் நானும் என் சிறு கரங்களைக் குவித்து, மாதா சுரூபத்தைப் பார்த்து, பக்தியுடன் வேண்டிக் கொள்வேன். அந்த நாட்கள் எனக்கு மிகவும் பாக்கியமுள்ள நாட்கள்  என் ஜீவியம் பரிசுத்த ஜீவியமாயிருந்தது. என் அன்னையின் முன்மாதிரிகையை நான் ஒருபோதும் மறந்ததில்லைஎன்று சொன்னார்.

புதன், 15 ஜனவரி, 2014

Jan-15 அர்ச்.சின்னப்பர் - முதல் வனவாசி (கி.பி.342).

ஜனவரி மாதம் 15-ம் தேதி

அர்ச்.சின்னப்பர் - முதல் வனவாசி (கி.பி.342).

                இவர் எஜிப்து தேசத்தில் பிறந்து, சிறுவராயிருக்கும்போதே இவருடைய தாய் தந்தையர் இறந்துபோனார்கள். 250-ம் வருடத்தில் நடந்த பெரும் வேதக் கலாபனையில் தேவ பக்தரான இவர் நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று ஜெப தபத்தால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார். இவர் தாம் வசித்த குகையின் அருகிலிருந்த ஒரு ஈச்ச மரத்தின் கனியைத் தின்று சுனை ஜலத்தைக் குடித்துவந்தார். மேலும் நாள்தோறும் ஒரு காகம் இவருக்குக் கொண்டுவந்த பாதி ரொட்டியைப் புசித்துவந்தார். அக்காலத்தில் வேறொரு காட்டில் தவஞ்செய்த அந்தோணியார், சின்னப்பருடைய சிறந்த புண்ணியங் களைப்பற்றி சர்வேசுரனால் அறிந்து, அவரைச் சந்திக்கும்படி சில நாட்கள் பிரயாணஞ் செய்து சின்னப்பர் இருந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தவுடனே, இவர்கள் ஒருவர் ஒருவரை அறியாதிருந்தும் ஒருவர் ஒருவரை அவருடைய பெயரால் அழைத்து மினவிக்கொண்டார்கள்.  அன்று இருவரும் மோட்சத்தைப் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், ஒரு காகம் ஒரு முழு ரொட்டியை  தன் அலகினால் கொத்திக்கொண்டு வந்து அங்கே போட்டுவிட்டுப் போயிற்று.  சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, கடந்த 60 வருஷங்களாக சர்வேசுரன் இந்தக் காகம் மூலமாக அரை ரொட்டியை அனுப்பினார். இப்போது நீர் வந்து இருப்பதால் முழு ரொட்டியை அனுப்பச் சித்தமானார் என்று சொல்லி சர்வேசுரனுக்கு நன்றி கூறி, இருவரும் அதைப் புசித்தார்கள்.
                பிறகு சின்னப்பர் அந்தோணியாரைப் பார்த்து, எனக்கு மரணம் கிட்டி யிருக்கிறது. நீர் உமது மடத்துக்குப் போய் உமக்கு அர்ச். அத்தனாசியார் கொடுத்த போர்வையைக் கொண்டுவந்து அதனால் என்;னைப் பொதிந்து அடக்கஞ் செய்வீராக என்றார். அவ்வாறே அந்தோணியார் போர்வையை எடுத்துக்கொண்டு வரும்போது, சின்னப்பருடைய ஆத்துமம் சம்மனசுக்களால் சு10ழப்பட்டு மோட்சத்திற்குப் போவதைக் கண்டு அதிசயித்து, குகைக்குச்சென்று பார்த்தார். அங்கு முழந்தாளிலிருந்து ஜெபஞ் செய்வதுபோல் காணப்பட்ட சின்னப்பருடைய பிரேதத்தை தாம் கொண்டுவந்த போர்வையால் பொதியுந் தருணத்தில், இரு சிங்கங்கள் காட்டிலிருந்து புறப்பட்டு வந்து, ஒரு குழியைத் தோண்டவே, அவர் அக்குழியில் அத்திருச் சடலத்தை அடக்கஞ் செய்தார்.  சின்னப்பர் தரித்திருந்த ஈச்சம் ஓலை ஆடையை தன்னுடன் எடுத்துச் சென்று, பெரும்; திருநாட் காலங்களில் அதைத் தரித்துக்கொண்டு வந்தார்.

யோசனை


                பாவச் சந்தர்ப்பத்திற்கு ஏதுவானவற்றை விட்டு விலகுவாயாக.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

விருத்தசேதனத் திருநாள்



Jan. 1

விருத்தசேதனத் திருநாள்


திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு   நிறைவேற்றப்படுகிறது.

                விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களி னின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோயீசன் பத்துக் கற்பனை யைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச்  சடங்கு சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச்சடங்கை நிறைவேற்றும்போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இந்தச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டு மென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளை யையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் எழும் ஆசாபாச முதலிய ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தஞ் சிந்தப் பழகவேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு  உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.
                இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது ஜீவியத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

யோசனை
                நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்யத் தீர்மானித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.

சனி, 28 டிசம்பர், 2013

மோட்சத்திற்கு ஓர் எளிய வழி!


(சங். ஜேம்ஸ் பீக் சுவாமி, 1985-ல் ஈக்கோனில் அதிமேற்றிராணியார் வந். லெஃபவர் ஆண்டகை அவர்களால் குருப்பட்டம் பெற்றார். சுவாமியவர்கள் சபையின் பல்வேறு குருமடங்களில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அமெரிக்காவின் வினோனாவிலுள்ள அர்ச்.தாமஸ் அக்குவினாஸ் குருமடத்தில் இலத்தீன், தத்துவ சாஸ்திரம் மற்றும் பரிசுத்த சுவிசேஷம் ஆகிய பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். இங்கே, சுவாமியவர்கள் 2004-ம் ஆண்டு தவக்காலத்தின் 2-ம் ஞாயிறன்று மேலே குறிப்பிட்ட குருமடத்தில் நிகழ்த்திய பிரசங்கத்தின் தமிழாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.)
உங்கள் அர்ச்சிப்பே கடவுளின் சித்தமாயிருக்கிறது
                இன்றை நிருபத்திலிருந்தும், (சுவிசேஷத்தின்) வேறு பல பகுதிகளிலிருந்தும், நாம் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார் என்பதை நாம் அறிகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே நம்முடைய சிருஷ்டிப்பின் நோக்கமாக இருக்கிறது. கடவுளை அறிந்து, சிநேகித்து, சேவிப்பதும், அதனால் மோட்சத்தில் என்றென்றும், அவரோடு மகிழ்ந்திருப்பதுமே அந்த நோக்கம். மேலும் பாவத்திற்குப் பிறகு, இதுவே சேசுநாதருடைய மனிதாவதாரம் மற்றும் இரட்சண்யத்தின் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில், தம்முடைய ஏகபேறான திருச்சுதனில் விசுவாசங் கொள்கிறவன் எவனும் அழிந்துபோகாமல், நித்திய ஜீவியத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக, தமது ஏக பேறான திருச்சுதனையே உலகிற்குக் கையளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகத்தை நேசித்தார்.
                நாம் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். நம்முடைய கண்ணோட்டத்தின்படி நாம் செய்ய வேண்டியது என்ன? நாம் அதை விரும்ப வேண்டும். நம்முடைய அர்ச்சிஷ்டதனம் முழுவதும் தேவ சித்தத்தோடு நம் சித்தத்தை ஒன்றிப்பதில்தான் அடங்கியிருக்கிறது. என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்லுபவன் எல்லாம் மோட்ச இராச்சியத்திற்குள் பிரவேசிக்க மாட்டான், பரலோகத்திலுள்ள என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவன் எவனோ அவனே பிரவேசிப்பான்என்கிறார் ஆண்டவர். ஆகவே அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்பட வேண்டும்என்று நாம் ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நம்முடைய அர்ச்சிஷ்டதனம் முழுவதும் இதிலேதான் அடங்கியிருக்கிறது. மகா பரிசுத்த கன்னி மாமரியின் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருந்தது. அடுத்த ஞாயிறன்று மாமரி போற்றி ஸ்துதிக்கப்படுவதை நாம் கேட்போம். உம்மைத் தாங்கிய உதரமும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையேஎன்று ஒரு பெண் சொல்ல, நம் ஆண்டவர் ஆனாலும் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு கடைப்பிடிக்கிறவர்கள் அதினிலும் பாக்கியவான்கள்என்று பதில் சொன்னார். இதுவே மகா பரிசுத்த கன்னிகையின் மனநிலையாக இருந்தது: இதோ, ஆண்டவருடைய அடிமையானவள்@ உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவதுஎன்று மாதா சொன்னார்கள். இதுவே அவர்களுடைய அர்ச்சிஷ்டதனமாக இருந்தது. எண்ணிலடங்காத கொடைகளைக் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அவர்கள், அவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியவர்களாக இருந்தார்கள். அப்படியே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தவும் செய்தார்கள்.
                நம்முடைய அர்ச்சிஷ்டதனம், தேவ சித்தத்தை நாம் நிறைவேற்றுவதில் அடங்கியிருக்கிறது. இந்த தேவ சித்தம் எது? நம்முடைய அர்ச்சிப்புதான். நாம் அதை விரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் மோட்சத்திற்குப் போக விரும்புகிறோமா? நாம் சொல்லும் பதில்: ஆம்! என்பதுதான். ஆனால் மோட்சத்தில் அர்ச்சிஷ்டவர்கள்தான் இருக்கிறார்கள். ஆகவே மோட்சத்திற்குப் போக விரும்புவது என்பதன் அர்த்தம், அர்ச்சிஷ்டவனாக விரும்புவது என்பதுதான். நாம் அதை விரும்ப வேண்டும். இவ்வளவு வெளிப்படையான ஒரு விஷயத்தைப் பற்றி நான் ஏன் இவ்வளவு அதிகமாக வலியுறுத்துகிறேன்? ஏனென்றால் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஓர்  அர்ச்சிஷ்டவனாக வேண்டும் என்று உண்மையாகவே விரும்புவதுதான். கடவுள் இதை விரும்புகிறார். நாம் இதை விரும்புவோமானால், அது அப்படியே ஆகும்.
                இதுவே அர்ச். குழந்தை சேசுவின் திரேசம்மாளின் விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. தன்னை நாம் கண்டுபாவிக்க வேண்டுமென்று அவள் அழைக்கிறாள். ஆகவே இந்த ஞாயிற்றுக்கிழமையில், இந்த மிக எளிமையானதும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை மிகவும் ஊக்கப்படுத்துவதுமான அவளுடைய ஞான படிப்பினையை நமக்கு நாமே நினைவுப்படுத்திக் கொள்வது நமக்கு நன்மையளிப்பதாக இருக்கும். அர்ச். தெரேசம்மாள் தன்னுடைய சுய சரிதையில், இப்படி எழுதுகிறாள்: அன்புள்ள தாயாரே, நீங்கள் அறிந்திருப்பது போல, ஓர் அர்ச்சிஷ்டவள் ஆக வேண்டும் என்று நாம் எப்போதுமே விரும்பி வந்திருக்கிறேன். ஆனால அர்ச்சிஷ்டவர்களோடு என்னை நான் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எல்லாம் இந்தத் துரதிர்ஷ்டமான வித்தியாசம் எப்போதும் இருப்பதை நான் காண்கிறேன். அவர்கள் மேகங்களுக்குள் தங்கள் தலைகளை மறைத்துக் கொள்கிற பெரிய மலைகளாக இருந்தார்கள். நானோ கடந்து போகிறவர்களின் கால்களில் மிதிபடுகிற எந்த முக்கியத்துவமுமில்லாத ஒரு மணற்துகளாக மட்டுமே இருக்கிறேன்.அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரங்களை நாம் வாசிக்கும்போதெல்லாம், இதுதான் நம்முடைய அனுபவமாக இருக்கிறதல்லவா?  அவர்களை மோட்சத்திற்கு கூட்டிச் செல்ல கடவுள் பயன்படுத்திய பாதைகளை நாம் பார்க்கிறோம். இந்தப் பாதைகளை நாம் பார்த்து, என்னால் முடியாது என்று நாம் சொல்கிறோம். அது எனக்கு உரியது அல்ல என்று நாம் நினைக்கிறோம். உதாரணமாக, வட அமெரிக்க வேதசாட்சிகளின் சரித்திரங்களை நாம் வாசிக்கிறோம். அதிலே அவர்களுடைய மிகக் கொடுமையான வேதசாட்சிய மரணத்தைக் காண்கிறோம். அது போக, அவர்களுடைய கடுமையான வேதபோதக உழைப்புகளையும், அஞ்ஞானிகள், புறஜாதிகள், காட்டுமிராண்டிகள் மத்தியில், அந்த சீதோஷ்ண நிலைகளில் அந்த உணவு வகைகளோடு ஜீவித்த அவர்களுடைய வாழ்வின் பெரும் சிரமங்களையும் நாம் பார்க்கிறோம். அந்த அளவுக்கு உயர முடியாது என்று நாம் நினைக்கிறோம். அதுவும் உண்மையாகவே இருக்கிறது. அர்ச்சிஷ்டவர்களுடைய சரித்திரங்களை நாம் வாசிக்கும்போதும், அவர்களுடைய தவ வாழ்வையும், அவர்களுடைய ஜெபங்களையும், அவர்களுடைய பரவச நிலைகளையும், அவர்களுடைய புதுமைகளையும் கூட நாம் காணும்போதும், ஓர் அர்ச்சிஷ்டவனாக இருப்பதற்கு இவையெல்லாம்தான் வேண்டியிருக்கிறது என்றால், இது எனக்கு அப்பாற்பட்டது என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம்.
                இதுவே அர்ச். தெரேசம்மாளின் முடிவாகவும் இருந்தது: அவர்கள் மலைகள்@ நானோ ஒரு சிறு மணல். அவர்களைப் போல் ஒரு அர்ச்சிஷ்டவள் ஆவது சாத்தியமே இல்லை. நான் மிகவும் சிறியவள். மிக அற்பமானவள்”. அவள்  தொடர்ந்து பேசுகிறாள்: ஆனாலும் நான் அதைரியப்படப் போவதில்லை. நிறைவேற முடியாத நோக்கங்கள் எதையும் கடவுள் என்னில் தூண்டி யெழுப்பமாட்டார். கடவுள் இதை விரும்புகிறார். ஆம், கடவுள் நம் அர்ச்சிப்பை விரும்புகிறார். ஆகவே இது சாத்தியம்தான். இந்த சாத்தியம் நமக்குள் இல்லை. இருந்தாலும் இது சாத்தியம்தான். வெளிப்படையாகத் தெரிகிறபடி, பெரிய காரியம் எதுவும் என்னிலிருந்து வர முடியாது. நாமல்ல, நம்மிடமுள்ள மிகக் குறைவான திறமைகளைக் கொண்டு. அர்ச்சிஷ்டவர்கள் என்று நாம் அழைக்கிற அந்த சம்மனசுகளைப் போல, அந்த விசுவாச நாயகர்களைப் போல வளர நம்மால் முடியாது”- அர்ச். தெரேசம்மாள் இப்படியே உணர்ந்தாள்.
                காளை மாடுகளின் பெரிய உருவத்தால் கவரப்பட்ட ஒரு தவளை பற்றிய பழங்கதை ஒன்று எனக்கு நினைவூட்டுகிறது. அது எந்த அளவுக்கு அதிகம் கவரப்பட்டது என்றால், காற்றைத் தொடர்ந்து உள்ளிழுப்பதன் மூலம் அவற்றைப் போல் தான் ஆக வேண்டுமென்று விரும்பியது. இவ்வாறு செய்து அது வீங்கிக் கொண்டே வந்தது. அந்தக் காளைகளைப் போல் ஆக தொடர்ந்து முயற்சி செய்து, கடைசியில் வெடித்துச் சிதறிப்போனது. மாபெரும் அர்ச்சிஷ்டவர்களின் அச்சுக்குள் நம்மை நாமே பொருத்திக் கொள்ள விரும்பினால், நமக்கும் இதுதான் நடக்கும். அவர்களுடைய  தவ ஜீவியமும், மற்ற ஜீவிய முறைகளும் நமக்கு அப்பாற்பட்டவை. அவற்றிற்கு முயற்சித்தால் நாம் வெடித்து விடுவோம். அர்ச்.தெரேசம்மாள் இப்படித்தான் நினைத்தாள்: என்னிடமிருந்து பெரிதான காரியம் எதுவும் வர முடியாதென்று. ஆனாலும் அந்த அர்ச்சிஷ்டதனத்தை என்னில் தூண்டுவது எனக்கு சாத்தியமானதாகவே இருக்க வேண்டும். என் அற்பத் தன்மையையும் மீறி, நான் இருக்கிற விதமாகவே என்னை நான் அர்ச்சிஷ்டதனத்திற்கு எழுப்ப வேண்டியிருக்கிறது. ஆனாலும் மோட்சத்திற்கு ஒரு நேரடியான குறுக்கு வழியாக, என்னுடைய சொந்தப் பாதையாக இருக்கிற ஒரு சிறிய பாதையை நான் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும்.
                ஒரு மணற்துகள் ஒருபோதும் மலையாக முடியாது. இருநதாலும் அதன் அர்ச்சிஷ்டதனத்தை கடவுள் விரும்புகிறார்;. எனவே அது சாத்தியமானதுதான். ஆகவே ஒரு குறுக்கு வழி இருக்க வேண்டும். உத்தமதனத்தின் ஏணியில் ஏறுவதற்குப் பதிலாக, உவமானப்படி ஒரு மின்தூக்கியாக அவளை மேலே தூக்கிச் செல்கிற ஒரு குறுக்கு வழியில் அவள் மேலேறி வருவாள். நேராக மோட்சத்திற்குப் போவதற்கான ஒரு எளிதான வழி இல்லையா? தெரேசம்மாளை சுமந்து செல்கிற மின்தூக்கி இருக்கிறதா, இல்லையா?  இதற்கான பதிலைத் தனக்குள் கண்டுபிடிக்க முடியாமல், அவள் தனக்கு வெளியே அதைத் தேடினாள். கடவுளையும் அவருடைய எழுதப்பட்ட வார்த்தையையும் கலந்தாலோசித்தாள். அதிலே, “சிறியவனாயிருக்கிறவன் எவனோ, அவன் என்னிடம் வருவானாக" என்ற வார்த்தைகளை அவள் வாசித்தாள். ஆக சிறியவனாயிருத்தல் என்பது இந்த அர்ச்சிஷ்டதனத்தை ஆவலோடு நாடுவதற்கு ஒரு தடையாக இல்லை. அது அதற்கான ஒரு நிபந்தனையாகக் கூட இருக்கிறது. சிறியவனாயிருக்கிறவன் எவனும் என்னிடம் வரக்கடவான்”. அவள் தொடர்ந்து வாசித்தாள்: தன் மகனை உற்சாகப்படுத்தும் ஒரு தாயைப்போல நாம் உன்னைத் தேற்றுவோம். நீ அவளுடைய மார்பில் சுமந்து செல்லப்படுகிற குழந்தையைப் போலவும், ஒரு தாயின் மடியில் சீராட்டப்படுகிற குழந்தையைப் போலவும் இருப்பாய்”. “என் இருதயத்தை மகிழ்வித்த இவ்வளவு அதிக கனிவுள்ளதும், அதிக  மதுரமுள்ளதுமான வார்த்தைகளை நான் ஒருபோதும் கேட்டதில்லை. என்னை மோட்சத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான மின்தூக்கி, உமது திருக்கரங்கள்தான், என் சேசுவே!என்பதுதான் இதற்கு அவளுடைய பதிலாக இருந்தது.
                நம்முடைய அர்ச்சிப்பை சர்வேசுரன் விரும்புகிறார். அவரே அதை நிறைவேற்றுவார். நம்மால் அது முடியாது. நம்மையே அர்ச்சிஷ்டவர்கள் ஆக்குவது நம்மால் முடியாத காரியம். அது தெய்வீக வேலை. கடவுளே அதைச் செய்வார். ஒரு சில தாலந்துகளை மட்டுமே அவர் எனக்குத் தருகிறார் என்றால், ஒரு சில தாலந்துகளைத்தான் அவர் என்னிடமிருந்து திருப்பிக் கேட்பார். ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகைக்கு, தாலந்துகளின் மிகப்பெரும் புதையல் ஒன்று கொடுக்கப்பட்டது. பெரும் அர்ச்சிஷ்டவர்களுக்கு, அதாவது மக்கள் கூட்டங்களிடையே மலைகளாக இருந்தவர்களுக்கு மிக அநேக தாலந்துகள் கொடுக்கப்பட்டன. அவர்களும் அவற்றை திருப்பிச் செலுத்தினார்கள். ஒரு சில தாலந்துகள் மட்டுமே கொடுக்கப் பட்டிருக்கிறவர்கள், ஒரு சிலவற்றையே திரும்பச் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடவுள் நம்மை சிருஷ்டித்திருக்கிற விதமாகவே நாம் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டும் என்று விரும்புகிறார். தெய்வீக வேலை என்ற காரியம் எழும்போதெல்லாம், நம்முடைய அர்ச்சிப்பு, அல்லது மற்றவர்களுக்குக் கடவுளைத் தருவதாகிய அப்போஸ்தலிக்க அலுவல் ஒரு தெய்வீகமான அலுவலாக இருக்கிறது. நம்மால் எதுவும் செய்ய முடியாது. தனக்கு ஓர் அப்போஸ்தலிக்க அலுவல் தரப்பட்ட சமயத்திலும் இதுவும் அர்ச். தெரேசம்மாளின் முடிவாக இருந்தது. அப்போஸ்தலர்களாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற நாமும் இதைக் காண்பது நமக்கு நல்லதாக இருக்கிறது.
                அவள் நவ கன்னியர்களின் தலைவியாக நியமிக்கப்பட்டாள். இது எளிதான வேலைதான், தன் சொந்த உணர்வின்படி ஆத்துமங்களுக்கு போதிப்பது மட்டும்தான் என்றே அவள் முதலில் நினைத்தாள். ஆனால் அது தவறு என்று சீக்கிரமே அவள் உணர்ந்துகொண்டாள். இல்லை, ஓர் ஆத்துமத்தை நீங்கள் அசைக்க விரும்பினால், அதற்கு வரப்பிரசாதம் தேவைப்படுகிறது.
                அதைப்போல ஓர் ஆத்துமத்தின் மீது செயல்படுவது நமக்கு சாத்தியமில்லாத காரியம். பிரியமுள்ள தாயாரே, என்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நான் புரிந்து கொண்டவுடன், நீங்கள் எனக்குத் தந்த அலுவல் மேற்கொண்டு கடினமானதாகத் தோன்றவில்லை. அது முடியாத காரியம், ஆகவே அது கடினமாக இல்லை. எனக்குத் தேவையான ஒரே ஒரு காரியம் சேசுவோடு என்னை அதிகமதிகமாக ஒன்றிப்பதுதான், மற்றதெல்லாம் எனக்கு சேர்த்துக் கொடுக்கப்படும் என்று நான் உணர்ந்தேன்”. “முதலில் சர்வேசுரனுடைய இராச்சியத்தையும், அதன் நீதியையும் தேடுங்கள். பிறகு மற்றதெல்லாம் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்”. நம் ஆண்டவர் கடவுளையும், அவருடைய கட்டளைகளையும் அவருடைய சித்தத்தையும் தேடுவது பற்றிப் பேசினார். அஞ்ஞானிகள் தேடுகிற உடை, தங்குமிடம், உணவு, இளைப்பாற்றி போன்ற மற்ற காரியங்கள் எல்லாம் உனக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார். அர்ச். தெரேசம்மாள் மேலும் ஒருபடி மேலே போகிறாள்: கடவுளைத் தேடுங்கள், கடவுளை மட்டும் தேடுங்கள், அப்போது மற்றவையெல்லாம், அதாவது, தனக்கும் மற்றவர்களுக்கும் தேவையான வரப்பிரசாதங்கள், நமக்குக் கொடுக்கப்படும். இதன் கருத்து முழுவதும் கடவுளை மையமாகக் கொண்டது. அவள் கடவுளை நாடினாள், அவரை மட்டுமே நாடினாள், வேறு எதையுமல்ல. மற்ற எல்லாமும், நமக்குத் தேவையான எந்த வரங்களும், தேவைப்படும் எந்த ஒரு புண்ணியமும் நமக்குத் தரப்படப்போகிறது. ஆகவே நான் நல்ல ஆண்டவரின் கரங்களில் ஒரு குழந்தையாக என்னை வைத்துவிடுகிறேன். அவருடைய கரங்களில் சௌகரியமாக அமர்ந்துகொண்டு, நான் அவரிடம் : ஆண்டவரே, உம்முடைய குழந்தையைப் போஷிக்க இயலாத அளவுக்கு நான் மிகவும் சிறியவள் என்று அவள் சொன்னாள். கடவுள்தான் அதைச் செய்ய வேண்டும். அவளே கூறுவது போல, அவள் அவருடைய கரங்களைவிட்டு விலகமாட்டாள். அவருடைய முகத்திலிருந்து தன் கண்களைக் கூட அகற்றமாட்டாள். மேலும் அவள் மகளுக்குரிய நம்பிக்கையோடு தன்னை அர்ப்பணித்த அவளுடைய அர்ப்பண உணர்வுபற்றி நாம் பேசுகிறோம்.
                கடவுள் நம் தந்தை. நாம் அவருடைய பிள்ளைகள். அவர் மெய்யாகவே ஒரு தந்தையாக இருக்கிறார்.  பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவேஎன்ற பெயரால் நாம் அவரை அழைக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஒரு குடும்பத்தில் உள்ள நிலை என்ன என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதில் சிறியவர்கள் தாங்கள் இருக்கிறபடியே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் சிறியவர்களாக இருப்பதற்காக அவர்கள் திட்டப்படுவதில்லை. அவர்கள் அன்போடு ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். பெரிய குழந்தைகள் எந்தக் காரியத்தைச் செய்வதால் கடிந்து கொள்ளப்படுவார்களோ அதே காரியத்தை இவர்கள் செய்தால், அதற்காக இவர்கள் கடிந்து கொள்ளப்படுவதில்லை. நம் மட்டில் கடவுளின் மனநிலையும் இதுதான். நம்முடைய தகுதி என்ன என்பது அவருக்குத் தெரியும். தங்கள் பெற்றோரை நேசித்து, அவர்களை சந்தோஷப்படுத்த விரும்புகிறவர்களும், அவர்களுக்காக சிறு சேவைகள் செய்கிறவர்களும், சிறு பரிசுகளை அவர்களுக்குத் தருகிறவர்களுமாகிய குழந்தைகளாக நாம் இருக்க வேண்டும். கடவுளின் பேரில் இதுவே நமது மனநிலையாக இருக்க வேண்டும். நாம் சிறியவர்கள், அதாவது நாம் வரம்புக்குட்பட்டவர்கள், குறைபாடுள்ளவர்கள், பெரிய காரிங்களைச் செய்ய நமக்கு சக்தியில்லை.
                தனது சுயசரிதையில் அர்ச். தெரேசம்மாள் தன்னுடைய சிறிய தன்மையை, தன்னுடைய குறைபாடுகளை வலியுறுத்துகிறாள். ஜெபத்தின்போது உறக்க மயக்கமாக இருப்பதும், நன்றியறிதலின்போதும், தியானப் பிரசங்கங்களின்போதும் வறட்சியுள்ளவர்களாக இருந்தது போன்ற தன்னுடைய சிறிய தன்மையின் குறைபாடுகளை அர்ச்.தெரேசம்மாள் தன் சுயசரிதையில் எழுதியிருக்கிறாள். மேலும் தான் ஜெபமாலை ஜெபிக்கும் விதம் பற்றிஅவள் என்ன சொல்கிறாள்? இதை ஒப்புக்கொள்வது ஒரு பயங்கரத்திற்குரிய காரியமாக இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மயிராடையையும்விட ஜெபமாலை செய்வது எனக்கு கூடுதல் பரித்தியாக செயலாக இருக்கிறது. நாம் மிக மோசமாக ஜெபமாலை ஜெபிக்கிறேன். சித்தத்தின் மீதான சோதனைகள் என்னை வலுவந்தம் செய்கின்றன. ஜெபமாலையின் பரம இரகசியங்களை என்னால் தியானிக்க முடியவில்லை. அவற்றின் மீது என் மனதை நிலைநிறுத்த என்னால் முடியவில்லை. மிகுந்த சிநேகமுள்ளவளாக இருக்க முயன்றவளாகிய தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான கடைசி வழி ஜெபிப்பதை விட்டுவிட்டு ஓடிப்போவதுதான். எப்போதுமே அதை நன்றாகச் சொல்ல அவளால் முடியவில்லை. அவள் தன்னுடைய குறைபாடுகளை ஏற்றுக்கொண்டாள். அவற்றிற்கு எதிராகப் போராடினாள். அவற்றைக் குறித்து தன்னையே பலவந்தத்திற்கு உட்படுத்தினாள். ஆனாலும், இதைக் குறித்துக்கொள்ளுங்கள்: அவள் தான் இருக்கிறபடியே தன்னை ஏற்றுக்கொண்டாள். அவள் தனக்கெதிராகப் போராடினாள். தன் குறைபாடுகளை எவ்விதமான எரிச்சலோ, மனக்கலக்கமோ, கவலையோ, அதைரியமோ இன்றி கவனித்தாள். இங்கே அவள் தனக்கு அளிக்கப்பட்ட தாலந்துகளை மட்டும் கொண்டிருந்தாள். அவற்றை மட்டுமே அவள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமாக இருந்தது. இதுமட்டுமேதான். அவள் ஒரு போதும் அதைரியப்பட்டிருக்க மாட்டாள். உதாரணமாக, நான் வார்த்தைப்பாடு கொடுப்பதற்கு முன்பாக நான் செய்த தியானப் பயிற்சிகளைப் பற்றிய விஷயத்தை நான் நிஜமாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. அது எந்த ஆறுதலலையும் எனக்குத் தரவில்லை. வெறுமனே முழுமையான வறட்சியையும், கிட்டத்தட்ட ஒரு அலட்சிய உணர்வையும் மட்டுமே அது எனக்குத் தந்தது. நித்தியத்தின் மாபெரும் தியானத்தை நான் தொடங்கும் வரையிலும், கடவுள், தம்முடைய பிரசன்னத்தை நான் உணரச் செய்யவேயில்லை என்று கூட நான் சொல்லத் துணிவேன். நான் அதைப் பற்றி முறையிடவில்லை. அது நிகழ வேண்டுமென்று விரும்பினேன். உண்மையில், என்னில் அர்ச்சிஷ்டவர்களுக்குரிய எதுவும் இருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது! ஜெபத்தில் என்னுடைய இந்த வறட்சிக்கு என் சொந்தத் தவறும், என் சொந்த ஞான வெதுவெதுப்பும், பிரமாணிக்கமின்மையும்தான் காரணமென்று நான் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். ஏழு ஆண்டுகள் துறவற ஜீவியத்திற்குப் பின், நானும் உறங்கி விட்டது போல இயந்திரத்தனமாக என் எல்லா ஜெபங்களும், நன்றியறிதல்களும் செய்வதற்காக நான் என்ன சாக்குப்போக்கு சொல்ல முடியும்? ஆனால் அதைப்பற்றி நான் வருந்தவில்லை. தங்கள் பெற்றோரின் நேசமுள்ள கவனிப்பின் கீழ் படுத்துறங்குகிற சிறு குழந்தைகளைப் பற்றி நான் சிந்திக்கிறேன். நாம் எதைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை, எப்படி கடவுள் அறிந்திருக்கிறார் என்பதை நான் நினைவுகூர்கிறேன். நாம் வெறும் தூசிதான் என்பதை அவரால் மறக்கமுடியாது. நாம் தூசி மட்டும்தான். மனிதா நீ மண்ணாயிருக்கிறாய் என்பதை நினைவில் வைத்துக்கொள். அதாவது இந்தத் தாழ்ச்சி என்கிற புண்ணியம் நம்முடைய தொடக்கப் புள்ளியாக இருக்குமானால், சுபாவ ஒழுங்கில் நாம் சிருஷ்டிகளே தவிர வேறொன்றுமில்லை. ஒன்றுமில்லாமையிலிருந்து, மண்ணிலிருந்து நாம் படைக்கப்பட்டவர்கள், மண்ணுக்கே திரும்ப வேண்டியவர்கள் என்பதை நாம் கண்டுகொள்வோமானால் நல்லது.
                மேலும் வரப்பிரசாத ஒழுங்கில், வரப்பிரசாதத்தை தருவது அல்லது பெறுவது என்னும் காரியத்தில், நம்மால் எதுவும் செய்ய முடியாது. தனக்கோ, மற்றவர்களுக்கோ வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது முற்றிலும் இயலாத காரியமாகும். இந்த அலுவல் மெய்யாகவும், முழுமையாகவும் தெய்வீகமானது. நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கிறோம். நம்முடைய தொடக்கப் புள்ளி தாழச்சியாக இருந்தால், நம்முடைய நம்பிக்கை அளவற்றதாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய நம்பிக்கை முழுவதும், அளவற்றவரும், நேசமுள்ள தந்தையாகிய கடவுள் மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட கடவுளைப் பிரியப்படுத்தத் தேடுவது மட்டுமே அவளுடைய முழு உணர்வுமாக இருந்தது. கடவுள் சகலமுமாக இருக்கிறார். தனக்கென எந்த சுய தேடலுமின்றி கடவுளை மகிழ்விப்பதற்காக ஒரு புனிதையாக அவள் விரும்பினாள். ஏனென்றால், கடவுளே அதை விரும்பினார். கடவுள் விரும்பினார் என்பதற்காகத்தான் அவள் ஒரு புனிதையாக விரும்பினாள். கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக அவள் அர்ச்சிஷ்டவளாக விரும்பினாள். இந்த விஷயத்திற்காக, நாம் ஞாயிறு மதிய ஜெபத்தில் பாடுகிற ப்ரோப்தெர் ரெத்ரிபூத்ஸியோனெம்ஓ ஆண்டவரே, உம்முடைய சம்பாவணைக்காக, உம்முடைய நியாயத்தைச் செய்வதற்கு என் இருதயத்தை என்றென்றும் சார்புள்ளதாக்கிக் கொண்டேன்என்ற சங்கீத அரசரின் வார்த்தைகளைக் கொண்டு சற்று அதிகமாக அவள் தன்னை எப்போதும் தூண்டிக் கொள்ள வேண்டியிருந்தது. நான் சொன்னதுபோல, அந்த ப்ரோப்தெர் ரெத்ரிபூத்ஸியோனெம்ஒரு வெகுமானத்திற்காக அதைச் செய்ய அவள் விரும்பவில்லை, மாறாக தன் தந்தையாகிய சர்வேசுரனைப் பிரியப்படுத்தும்படியாக மட்டுமே அவள் அதைச் செய்ய விரும்பினாள். நிச்சயமாக நம்மைவிட அதிகமான தாலந்துகள் அவளுக்குத் தரப்பட்டிருந்தன.
                இது முற்றிலுமாக நம்முடைய மனநிலையாக இல்லாதிருக்கலாம். ஆனாலும் நாம் அவரைப் பிரியப்படுத்த விரும்ப வேண்டும். நாம் எப்படி அவரைப் பிரியப்படுத்துவது? ஒருவேளை, நம் தபசு காலத்தில் நம்மை ஊக்குவித்துக் கொள்வது மூலமாக, அர்ச். தெரேசம்மாளின் ஒரு சிறிய, கடைசி மேற்கோளோடு நாம் முடிப்போம். அவளுடைய சாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, இறந்த பிறகு பூமியிலுள்ள ஆத்துமங்களுக்கு அவள் எதைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறாள் என்ற அவளிடம் கேட்கப்பட்டது. அவள் இவ்வாறு பதில் கூறினாள்: பிரியமுள்ள தாயாரே, நான் ஞான பாலத்துவத்தையும், முழுமையான அர்ப்பணத்தையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். அவை என் மட்டில் மிக உத்தமமான வகையில் வெற்றியடைந்துள்ளன. மேலும், இங்கே பூமியில் அவர்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்று உள்ளது. அது சிறு பரித்தியாகங்களின் மலர்களைக் கொண்டு சேசுவை மகிழ்விப்பதாகும் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அன்பின் அடையாளங்களைக் கொண்டு அவரை வெற்றிக்கொள்ளுங்கள். நான் இப்படித்தான் அவர் மீது வெற்றிக் கொண்டேன். அதனாலேயே நான் உன்னதத்தில் மிக நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்படுவேன்”.
பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் நாமத்தினாலே, ஆமென்.