Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 27 டிசம்பர், 2022

மறை ஆயர் அல்லாத வேதசாட்சி IV (Laetabitur)

வேதசாட்சி ஒருவர் -பொது

மறை ஆயர் அல்லாத வேதசாட்சி

IV

 (Laetabitur)

வருகைப் பாடல் : சங்.63: 11

நீதிமான் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு அகமகிழ்வான் : நேர் மனத்தோர் அனைவரும் புகழ் அடைவார்கள். (சங். 63:2) சர்வேசுரா, உம்மை நான் வேண்டும்பொழுது, என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்: பகைவனின் அச்சத்திலிருந்து என ஆன்மாவை விடுவித்தருளும் V. பிதாவுக்கும்... நீதிமான்.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, உம்முடைய வேதசாட்சியான அர்ச்.... வேண்டுதலால், தீங்குகள் அனைத்திலுமிருந்து எங்கள் உடல் விடுதலை பெறவும், தீய நினைவுகளிலிருந்து எங்கள் மனம் தூய்மை பெறவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு...

அப்போஸ்தலரான புனித சின்னப்பர் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்

(II தீமோத்.2:8-10; 3:10-12)

மிகவும் பிரியமானவரே : நான் சுவிசேஷத்தின்படியே தாவீதின் சந்ததியில் பிறந்தவராகிய யேசுகிறிஸ்துநாதர் மரித்தோரினின்று உயிர்த்தெழுந்தார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் உழைத்ததற்குப் பொல்லாங்கு செய்தவனைப்போல் விலங்கிடப்படும்படியாயிற்று. ஆனாலும், தேவ வாக்கியம் கட்டப்படவில்லை. ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யேசுகிறிஸ்துவினால் உண்டாகிய இரட்சணியத்தை மோட்ச மகிமையோடு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் அவர்களைப் பற்றிச் சகலத்தையும் சகித்துக்கொள்ளுகிறேன். நீரோ, என் போதகத்தையும் நடபடிக்கைகளையும், என் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் நட்பையும் பொறுமை யையும், அந்தியோக்கியா,இக்கோ னியா, லீஸ்திரா என்னும் இடங்களில் எனக்கு நேரிட்ட துன்ப துரிதங்களையும், பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறீர். எவ்வளவோ துன்ப துரிதங்களைப் பட்டு அநுபவித்தேன் ! இவைகள் எல்லாவற்றிலும் நின்று கர்த்தர் என்னை இரட்சித்தார். யேசுகிறிஸ்துநாதருக்குள் பக்தியாய் நடக்க விரும்புகிற யாவரும் துன்ப துரிதப்படுவார்கள். 

தியானப் பாடல்: சங். 36 : 24

நீதிமான் விழுந்தாலும் தரையில் மோதமாட்டான்: ஏனெனில்   ஆண்டவர் கைகொடுத்து அவனைத் தாங்கிக்  கொள்வார். V. (சங்.36:26) அவன் நாளெல்லாம் மனமிரங்கி, கடன் கொடுக்கின்றான் : ஆகையால், அவன் சந்ததி ஆசிபெறும்.

அல்லேலூயா, அல்லேலூயா, V. (அரு. 8 : 12) என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான். அல்லேலூயா..

(முன் தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல்: சங், 111 : 1-3.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன் : அவர் கட்டளைகளைப் பெரிதும் விரும்புவான்: V. அவன் சந்ததி நாட்டில் வலிமை பெற்றதாயிருக்கும். நேர்மனத்தோரின் தலைமுறை ஆசிபெற்றிருக்கும். V. புகழும் செல்வமும் அவன் வீட்டில் நிறைந்திருக்கும். அவன் நீதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி 

(மத்.10:26-32)

அக்காலத்தில்: யேசு தம் சீடர்களுக்குச் சொன்னதாவது: வெளிப்படாதபடி மறைந்திருப்பது  ஒன்றுமில்லை. அறியப்படாதபடி ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. நான் உங்களுக்கு இருளில் கூறுவதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். நீங்கள் காதோடு காதாய்க் கேட்பதைக் கூரை மீதிருந்து அறிவியுங்கள்.  ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள். உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு குருவி விற்பதில்லையா? எனினும், அவற்றில் ஒன்றுகூட, உங்கள் தந்தையால் அன்றி, நிலத்தில் விழாது. உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. எனவே அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள். மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை நானும் வானகத்திலுள்ள என் தந்தையின்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வேன்.

Post Septuagesimam in fine sequentis antiphone 'அல்லேலூயா' omittitur.

காணிக்கைப் பாடல் : சங்.20:4-5.

ஆண்டவரே, அவரது தலையில் மணிமுடி சூட்டினீர்: அவர் உம்மிடம் வாழ்வு வேண்டினார், அதை நீர் அவருக்கு வழங்கினீர். (அல்லேலூயா.)

காணிக்கை மன்றாட்டு:

ஆண்டவரே, இப்புனிதரின் விழாவிலே நாங்கள் செய்யும் இப்பக்தி முயற்சி உமக்கு உகந்ததாகி, அவருடைய வேண்டுதலால் அது எங்கள்  மீட்புக்குப் பயனளிப்பதாக. உம்மோடு...

திருவிருந்துப் பாடல்: அரு. 12:26

எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்செல்லட்டும். எங்கே நான் இருக்கிறேனோ அங்கே என் பணியாளனும் இருப்பான்.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: எங்கள் தேவனாகிய ஆண்டவரே, இத்திருக் கொடைகளில் பங்குகொண்டு புத்துயிர் பெற்றுள்ளோம். நாங்கள் நிகழ்த்தும் வழிபாட்டின் பயனை உம் வேதசாட்சியான அர்ச்... உடைய வேண்டுதலால் அடையுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக