Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 23 டிசம்பர், 2022

கிறிஸ்துமஸ் செய்தி




 “அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்று துணிகளால் அவரைச் சுற்றிமுன்னிட்டியில் கிடத்தி வைத்தாள்” (லூக் 2: 7) என்று சுவிசேஷகரான அர்ச். லூக்காஸ் கிறீஸ்துவின் பிறப்பைக் கூறுகிறார்.

முன்னிட்டி என்பது கால்நடைகளுக்கு புல், வைக்கோல் போன்ற தீவனங்களை வைப்பதற்குரிய மரத்தொட்டில் போன்ற ஒன்று.

இந்த முன்னிட்டிக்கு கிடைத்த பேறு நமக்குக் கிடைத்தாலே போதுமே! தேவகுமாரனைத் தாங்கும் பாக்கியம் அதற்கல்லவா கிடைத்தது !.

கடவுளைப் பெற்றுக் கொள்ள இரண்டே வழிகள் !

நம்முடன் வாசஞ் செய்யும்படி மாம்சம் ஆன வார்த்தையான வரை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், அவரை பரம பிதா நம்மிடம் நேரடியாகக் கொண்டு வரவேண்டும். அல்லது பிதா தம் சுதனை யாரிடம் கொடுத்துள்ளாரோ அங்கிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நேரடியாகக் கடவுளைப் பெற்றுக் கொள்ள நம்மால் முடியமா?

"தேவகுமாரனை இறைவனின் கரத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ள உலகம் தகுதி பெற்றிருக்கவில்லை. அதனால் கடவுள் தம் குமாரனை மரியாயிடம் கொடுத்து அவர்கள் வழியாக, உலகம் அவரைப் பெற்றுக் கொள்ளச் செய்தார்” என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

“பிதாப்பிதாக்கள் எத்துணை பெருமூச்சு விட்டுக் கேட்டிருக்கலாம். நாலாயிரம் ஆண்டுகளாக தீர்க்கதரிசிகளும் பழைய ஏற்பாட்டின் புனிதர்களும் அந்தத் திரவியத்தைப் பெற என்னென்ன மன்றாட்டுக்களோ செய்திருக்கலாம். ஆனால், பிதாவாகிய சர்வேசுரன் தன் ஏக திருக்குமாரனை மாமரி வழியாகவே உலகிற்குக் கொடுத்தார்” (மரி. மீது. உண். பக்தி எண் 16) என்று அர்ச். லூயிஸ் மோன்போர்ட் கூறுகிறார்.

இவ்வாறு பரமபிதா தம்திருச்சுதனை கன்னிதாயான மரியாயிடம் நித்தியத்திற்கும் கொடுத்துவிட்டார். அதை அவர் மாற்றமாட்டார். இனி கடவுளை யாரும் நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியாது. மாதாவிடமிருந்தும், மாதாவின் வழியாகவுமே நாம் கடவுளைப் பெறமுடியும்.

ஆகவே, கடவுளை நேரடியாக அடைந்து கொள்ளும் முதல் வழி அடைபட்டுவிட்டது. நமதன்னை கன்னிமரிக்கு மட்டுமே அந்த வழி திறந்துள்ளது. அவர்களிடம் மட்டுமே கடவுள் நேரடியாக வந்தார். அவர்கள் மாத்திரமே கடவுளிடம் நேரடியாக போகவும் முடியும்.


கடவுளைப் பெற்றுக் கொள்ள 2 - ம் வழி

‘ஆத் ஜேசும் பெர் மரியாம் -Ad Jesum per Mariam” என்று லத்தீனில் வாக்கு ஒன்று உண்டு. அதாவது, "மரியாயின் வழியாக சேசுவிடம்” மரியாய் வழியாகத்தான் சேசுவிடம் செல்ல முடியுமென்றால் சேசு நம்மிடம் வருகிற வழியும் அதே மாமரி தானே? இதுவே திருச்சபையின் பாரம்பரிய போதனையுமாயிருக்கிறது.

முன்னிட்டி ஆவோமானால் முழுவதும் பெறுவோம்

...

இனி, மாதாவிடம் கொடுக்கப்பட்டுள்ள தேவகுமாரனை எப்படி முழுவதும் பெற்றுக் கொள்வது? மாட்டுக் கொட்டிலில் பிறந்த சேசு பாலனை வானதூதர்களும் இடையர்களும் கண்டு மகிழ்ந்து ஆராதித்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேறு அங்கிருந்த முன்னிட்டிக்குத் தான் கிடைத்தது ! "அவள் தன் தலைச்சன் பிள்ளையை . . . முன்னிட்டியில் கிடத்தி வைத்தாள்”. அன்னையின் அருகில் அந்த எளிய முன்னிட்டியைப் போல் நாம் நம்மை வைத்துக் கொண்டோமென்றால் அத்தாய் அன்போடு தன் சேசுபாலனை நம் இருதயத்தில் கிடத்துவார்கள். நாமும் கடவுளைப் பெற்றுக் களிப்புறுவோம்” கடைசியில் நம் கதியாகிய அவரையே மோட்சமாகப் பெற்றுக் கொள்வோம்.

முன்னிட்டி ஆவது எப்படி?

மாதாவின் கரத்தால் ஒரு முன்னிட்டியில் கிடத்தப்பட சம்மதித்த கடவுள் நிச்சயமாக நம் இருதயத்தில் கிடத்தப்பட சம்மதிப்பார். கிறீஸ்துமஸ் தினத்தில் நாம் நற்கருணை உட்கொள்ளும் போது இது நடைபெறுகிறது. ஏன்? நாம் அன்போடு திவ்ய நற்கருணை உட்கொள்ளும் போதெல்லாம் இது நடைபெறுகிறது. !! ஆனால் ஒரு காரியம் : மாதா தன் மகனை அசுத்தத்தில் கிடத்தவில்லை. ஒருபோதும் அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். நம் முன்னிட்டியாகிய இருதயமும் அசுத்தமாகிய பாவம் இல்லாதிருக்கும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். சாவான பாவம் இருந்தால் கண்டிப்பாக பாவசங்கீர்த்தனம் செய்து மன்னிப்பும் பெற்ற பிறகே நற்கருணை சேசுவை உட்கொள்ள துணிய வேண்டும். சாவான பாவத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் நற்கருணையில் சேசுவை வாங்குவோமானால் பிறந்த உடனயே அப்பாலனை சிலுவையில் அறைகிறோம் என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

கிறீஸ்துமஸ் அன்றும் மற்ற எந்த தினத்திலும் தகுந்த ஆத்தும, சரீர ஆயத்துடன் சேசுவை வாங்க கவனமாயிருப்போம். அதோடு திவ்ய நற்கருணையில் நமது ஆன்ம போசனமாக உட்கொள்ள போகும்பே பாது விவரிக்கமுடியாத அம்மறை பொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் சங்கை பக்தி மேரையுடன் முழந்தாலிட்டு நாவில் மட்டுமே பெற்றுக் கொள்ளவேண்டும். (கையில் நன்மையை வாங்கும் துர்பழக்கம் மாதாவின் பிள்ளைகளிடம் இல்லாதிருப்பதாக) ஆத்தும ஆயத்தம் என்றால் : ஆத்துமத்தில் சாவான பாவம் இல்லாமலும், அற்பப்பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபமும் பயபக்தியும் தேவசிநேகமும் இருக்கவேண்டும். சரீர ஆயத்தம் என்றால் : நற்கருணை வாங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்து தண்ணீர் தவிர வேறு எதையும் சாப்பிடாமலும் குடியாமலும் உபவாசமாயிருப்பது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக