Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 29 ஏப்ரல், 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 20 - வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர்

ஏப்ரல் 29ம் தேதி


வேதசாட்சியான அர்ச்.வெரோனா நகர் இராயப்பர் திருநாள்




இவர் 1206ம் வருடம் வட இத்தாலியிலுள்ள வெரோனா நகரில் பிறந்தார்; இச்சமயம் இப்பகுதியில் கத்தாரியப் பதிதத் தப்பறை வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது; இவர் கத்தோலிக்கப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார்; பின்னர், பொலோஞா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார்.

1221ம் வருடம், இவர் தனது 15வது வயதில், அர்ச்.சாமிநாதரை சந்தித்தார்; அர்ச்.சாமிநாதரின் துறவற சபையில் சேர்ந்தார்; வட இத்தாலியிலும்  மத்திய இத்தாலியிலும் இவர் புகழ்பெற்ற பிரசங்கி யாராகத் திகழ்ந்தார். பதிதத் தப்பறைகளுக்கு எதிராக, விசேஷமாக வட இத்தாலியில் அநேக மனிதர்களை தன் வசப்படுத்தியிருந்த கத்தாரியப் பததித்தப்பறையை எதிர்த்து கத்தோலிக்க ஞானப் பிரசங்கத்தை நிகழ்த்தினார்; 9ம் கிரகோரி பாப்பரசர்,1234ம் வருடம், இவரை வட இத்தாலியின் பொது தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார். இவர், உரோமாபுரி, ஃபுளாரன்ஸ், பொலோஞா, ஜெனோவா, கோமோ என்ற நகரங்களுக்கும் , இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். 1243ம் வருடம் புதிதாக , துவங்கிய மகா பரிசுத்த தேவமாதாவின் ஊழியர்கள் துறவற சபையை ஏற்படுத்துவதற்கான பாப்பரசரின் அனுமதியைப் பெறுவதற்காக, இவர் பரிந்துரை செய்தார்.

1251ம் வருடம், 4ம் இன்னசென்ட் பாப்பரசர் , இவருடைய புண்ணியங் களுடையவும், கடின தபசினுடையவும் ஜீவியத்தைப்பற்றியும், இவர் கற்றறிந்த வேத இயலின் அறிவைப் பற்றியும், இவருடைய பிரசங்கம் செய்யும் திறனைப் பற்றியும், கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது இவருடைய இருதயத்தில் பற்றியெரிந்த ஆர்வத்தைப் பற்றியும், அறிந்தவராக, இவரை லொம்பார்டியில் நீதி விசாரணையாளராக ஏற்படுத்தினார். இந்த அலுவலில், இவர் ஆறு மாத காலம், அயராமல் ஈடுபட்டிருந்தார்.

இவர் தனது பிரசங்கங்களில், பதிதத் தப்பறைகளையும், வார்த்தையால் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர் களாக, ஆனால், அதே சமயம்,அதற்கு எதிராக பதிதத்தப்பறையில் ஜீவிக்கிற கத்தோலிக்கர்களையும் இவர் மிகக் கடுமையாகக் கண்டித்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவரைச் சந்தித்தனர்; இவரைப் பின்பற்றினர்; ஏராளமான மனந்திரும்புதல்கள் நிகழ்ந்தன! அநேகக் கத்தாரிய பதிதர்களும் மனந்திரும்பி, கத்தோலிக்க வேதத்திற்குத் திரும்பி வந்தனர்.

இவர் அடிக்கடி அர்ச்சிஷ்டவர்களுடன் உரையாடும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்; ஒருநாள், வேதசாட்சிகளாக மரித்த பரிசுத்த கன்னியர் களான அர்ச். கத்தரீனம்மாள், அர்ச். ஆக்னசம்மாள், அர்ச். செசிலியம்மாள் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இச் சமயம், இவருடைய அறையைக் கடந்து சென்ற ஒரு துறவி, மடத்தின் அதிபரிடம், பெண்கள் சிலருடன் இவர் அறையில் பேசிக் கொண்டிருப்பதாக, இவரைப் பற்றி புகார் செய்தார். உடனே, அதிபர் இதைப் பற்றி, இவரிடம் எதுவும் கேட்காமல், எந்த தயக்கமும் இல்லாமல், இவரை ஒரு மடத்திற்கு அனுப்பி, அங்கு எந்த பிரசங்கமும் செய்யக்கூடாது என்று தண்டித்தார்.

அதிபர் இட்ட இக்கட்டளைக்கு, இவர் தாழ்ச்சியுடன் உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், பாடுபட்ட சுரூபத்தில், சிலுவையில் அறையுண்டிருக்கும் நேச ஆண்டவரை நோக்கி ஜெபித்தபோது , தன்னுடைய அவப்பெயரினால், அவரைக் கை நெகிழ்ந்ததாகக் கூறி தன்னைப் பற்றியே, முறையீடு செய்தார். உடனே, பாடுபட்ட சுரூபத்திலிருந்த ஆண்டவர், இவரை நோக்கி, “பீட்டர்! நான் கூட மாசற்றவராக இல்லையா? மாபெரும் துயரங்களை சந்தோஷத்துடன் துன்புற என்னிடமிருந்து கற்றுக் கொள்!” என்று கூறினார். இறுதியாக இவருடைய மாசற்றதனம் அதிபரால் கண்டுபிடிக்கப்பட்டது! இவருடைய பங்கிற்கு, இந்த ஏகாந்தத்தின் காலத்தில், இவர் நிந்தனையையும், தாழ்வாக நடத்தப்படுதலையும், நேசிக்கக் கற்றுக் கொண்டார். மறுபடியும், இவர் பிரசங்கிப்பதில் ஈடுபட்டார்; இவர் அறிவுறுத்திக்கூறிய பிரசங்கங்களுடன் புதுமைகளும் நிகழ்ந்தன! இத்தாலி முழுவதும் பயணத்தை மேற்கொண்ட இவர் நாடெங்கிலும் புகழ்பெற்றார்.

ஒருசமயம் இவர் மிகப் பெரிய கூட்டத்தில் பிரசங்கம் நிகழ்த்தியபோது, வெயில் மிக உக்கிரமமாக இருந்தது;  பதிதர்கள் இவரைநோக்கி நிழலைக் கொண்டு வரும்படி கூக்குரலிட்டனர்; இவர் அதற்காக ஜெபித்தார்; உடனே, இவர் பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் கூட்டத்தின் மீது ஒரு மேகம் புதுமையாக நிழலிட்டது!

ஒவ்வொரு நாளும் நடுப்பூசையின் போது, “ஆண்டவரே! தேவரீர் எனக்காக மரித்ததால், நானும் தேவரீருக்காக இறந்துபோவதற்கான வரத்தை எனக்கு அருளும்” என்று உருக்கமாக ஜெபித்து வேண்டிக்கொண்டு வந்தார். இவருடைய ஜெபம் கேட்கப்பட்டது.

1522ம் வருடம் மிலான் நகரைச் சேர்ந்த கத்தாரிய பதிதத்தைச்சேர்ந்த ஒரு கூட்டத்தினர், அர்ச்.பீட்டரைக் கொல்ல சதித்திட்டமிட்டனர்.  ஒருசமயம், கோமோவிலிருந்து மிலானுக்குத் திரும்புகிற சமயத்தில்,  கொலைகாரர்கள் இவரைப் பின்தொடர்ந்து வந்தனர். பார்லாசினா என்ற இடத்தில் அர்ச்.பீட்டர், சக துறவியான டோமெனிகோவுடன் தனியாக வந்தபோது, ஒரு கோடரியால் இவருடைய தலையில் ஒரு வெட்டு வெட்டினர்! இவருடைய சக துறவியை அடித்து சாவுக்குரிய காயத்தை ஏற்படுத்தினர். கீழே விழுந்த அர்ச்.பீட்டர்,  எழுந்து முழங்காலிலிருந்தபடி, அப்போஸ்தலர் களின் விசுவாசப் பிரமாணத்தை ஜெபித்தபடி, தனது இரத்தத்தை சர்வேசுரனுக்குக் காணிக்கையாக பலி செலுத்தும்விதமாக, தனது விரல்களை தன் இரத்தத்தில் நனைக்கும்படியாக, மூழ்கச் செய்து எடுத்து, அதனால் தரையில் நிசே விசுவாசப்பிரமாணத்தின் “ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன்,” என்கிற முதல்  வாக்கியத்தை "Credo in Unum Deum",  என்று இலத்தீனில் எழுதியபடியே மரித்தார். அந்தகோடரியின் வெட்டு, அர்ச். வெரோனா நகர் இராயப்பரின் தலை உச்சியைத் துண்டித்திருந்தது. இரத்தம் அதிலிருந்து பிரளயமாக தரையில் வழிந்தோடியது.இவருடைய சக துறவி டோமெனிகோ, மேதா என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்; அங்கு இவர் 5 நாட்களுக்குப் பின் மரித்தார்.

கத்தாரியப் பதிதம் என்றால் என்ன?

இத்தப்பறையானது, கெட்ட கடவுளால் உலகம் படைக்கப்பட்டது என்றும்,உலகத்தில் காணப்படுகிற யாவற்றையும், கெட்ட கடவுள் நல்ல கடவுளிடமிருந்து அபகரித்துக் கொண்டு அவற்றை உலகத்தில் விட்டிருக்கிறதாகவும், மனிதர்களுடைய சரீரங்களுக்குள் இருக்கிற ஆவி, நல்ல கடவுளிடம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும், யாராவது மரித்தால், அவர்களுடைய ஆவியை  ஒரு புதிய உடம்பினுள் கெட்ட கடவுள் செலுத்திவிடும் என்றும்,இது அந்த ஆவியின் மறு ஜென்மப் பிறப்பு என்றும்  இத்தொடர் பிறப்புகளிலிருந்து தப்பிக்க துப்புரவுப்படுத்துகிற ஒரு சடங்கு செய்ய வேண்டும் என்றும் அபத்தமான போதனைகளைக் கொண்டிருக்கிறது. மேலும் பாவம்  உண்டு! என்கிற நம் வேத சத்தியத்தை இப்பதிதர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அர்ச்.வெரோனா நகர் இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


To Read about more saints : Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக